கருவூர்தேவர் திருவிசைப்பா
திருமுகத்தலை திருப்பதிகம்
சிவதீபன்
📱9595756797
குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் திருத்தருப்பூண்டியிலிருந்து நாகப்பட்டினத்திற்குச் செல்லும் பெருவழியில்,
திருத்தருப்பூண்டியில் இருந்து சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள கொக்காலடி இறங்கி வடக்கே மானாச்சேரி செல்லும் மணல்வழியில் ஒரு கி.மீ தொலைவில் உள்ள பன்னத்தெரு என்னும் ஊரே இம்முகத்தலை என்னும் ஊர்.
இவ்வூர்க்குரிய திருவிசைப்பாவில் மூன்று இடங்களில் “பன்னகாபரணர்” என இறைவர் அழைக்கப்படுகின்றார்.
ஆதலின் இதுவே முகத்தலை என்பர் சைவ அன்பர் திருவாளர் தி.கு. நாராயணசாமி நாயுடு அவர்கள். இத்தலம் மதுரை ஆதீன அருளாட்சியில்
விளங்குவது.
இத்தலம்தான் முகத்தலை என்பது முடிந்த முடிபன்று அது ஆய்வுக்குரியது என்பாரும் உளர்,
ஆனால் இங்குள்ள சுவாமி தலையும் முகமும் காட்டும் வண்ணத்தில் இருப்பதாலேயே இது “முகத்தலை” எனப்பட்டது என்பாரும் உளர்
பண்: பஞ்சமம்
பாடல்
புவன நாயகனே அகவுயிர்க்கு அமுதே
பூரணா ஆரணம் பொழியும்
பவளவாய் மணியே பணிசெய்வார்க் கிரங்கும்
பசுபதீ பன்னகா பரணா
அவனி ஞாயிறு போன்று அருள்புரிந்து அடியேன்
அகத்திலும் முகத்தலை மூதூர்த்
தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்
தனியனேன் தனிமை நீங்குதற்கே.
பொருள்
எல்லா உலகங்களுக்கும் தலைவனே! உன்னை அடைந்த முத்தான்மாக்களுக்கு அமுதம் போன்ற இனியனே! எல்லாப் பண்பு நலன்களாலும் நிறைந்தவனே! வேதத்தை ஓதிக்கொண்டிருக்கும் பவளம் போன்ற சிவந்த வாயினை உடைய மாணிக்கமே! உன்தொண்டுகளைச் செய்யும் அடியவர்பால் இரக்கம் காட்டிஅருளும் உயிர்களுக்குத் தலைவனே! பாம்புகளை அணிகளாக உடையவனே! இவ்வுலகிலே சூரியனைப் போன்று ஞானஒளி பரப்பி அருள்புரிந்து, தன்னுணர்வில்லாத அடியேனுடைய துணைஇல்லாத நிலை நீங்குதற்கு அடியேன் உள்ளத்திலும் திருமுகத்தலை என்ற திருப்பதியில் உள்ள வெண்மையான ஒளியை உடைய மணிகள் பதிக்கப்பட்ட அழகிய கோயிலிலும் விரும்பி உறைகின்றவனே! உன் திருவருள்வாழ்க.
தவறாமல் கேட்டின்புறுங்கள்🙏🏻🙂