சைவ சமயம் அடிப்படை நுட்பம்

சைவ சமயம் அடிப்படை நுட்பம் 4.9/5 (10)

சைவ சமயம் – அடிப்படை நுட்பம்

1. அடிப்படை நுட்பம்       2. சைவநெறி நூல்கள்

3. சைவ சின்னங்கள்       4. சமயக் குரவர்கள்

5. சைவர்கள் அறிய வேண்டிய பிற செய்திகள்

1. அடிப்படை நுட்பம்

இறைவன் ஒருவனே. தொன்மையான நம் சைவ சமயத்தில் இது மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அந்த இறைவன், மங்கலமானவர், மலங்கள் (குற்றங்கள்) அற்றவர், ஆகையால், செம்மையான பொருளான அவருக்கு நாம் சிவன் என்று பெயர் சூட்டியுள்ளோம். அவர் என்றும் உள்ளவர். அவர் எல்லையற்ற சக்தியாகிய ஆற்றலை உடையவர். அவருடைய சக்தியை ஒரு பெண்ணாக உருவகித்து நாம் சக்தி என்கிறோம். சக்தி என்பது சிவத்திற்குள்ளேயே அடங்கி இருப்பது. இதுவே மாதொருபாகன் திருவுருவ விளக்கம். இறைவன் பிறப்பு, இறப்பு, பந்தம், பாசம், அன்பு, உறவு, நீளம், அகலம், காலம், மொழி என்று எவற்றையும் கடந்தவர். பந்தமும் பாசமும் அற்றவருக்கு குடும்பமும், குழந்தைகளும் ஏது ? அறத்தை நிலைநாட்டும் பொருட்டு, அவரிடமிருந்து தோன்றிய சக்திகளை நாம் அவர் குழந்தைகளாக பாவித்து, விநாயகர், பைரவர், வீரபத்திரர், முருகர் என்று பெயரிட்டு, நமக்கு புரியும் குடும்ப முறையில் பாவித்து வணங்குகிறோம்.

நம் தலைவனாகிய சிவபெருமான் ஐந்து தொழில்களை மேற்கொள்கிறார். முறையே, ஆக்கல், காத்தல், ஒடுக்குதல்(அழித்தல்), மறைத்தல், அருளல். இந்த ஐந்து தொழில்களையும் பல்வேறு கரணங்களை பயன்படுத்தி செய்கிறார். ஆக்கலுக்கு பிரம்மனையும், காத்தலுக்கு விஷ்ணுவையும், ஒடுக்குதலுக்கு உருத்திரனையும், மறைத்தல், அருளலை (சக்தி) தானே முன்னின்றும் செய்கிறார். சிவபெருமானைத் தவிர மற்ற யாவும் அவருக்குக் கருவிகளே.

நாம் வாழும் இந்த அண்டத்தைத் தீர ஆராய்ந்து பார்த்தால், மூன்று பொருட்கள் இருப்பது புரியும். இறைவன், நம் போன்ற உயிர்கள், மற்றும் அண்டப் பொருட்களை உள்ளடக்கிய பாசம். நம் போன்ற உயிர்கள் பிறந்து, இறந்து மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் தன்மையுடையது. இதுவே பிறவிச் சுழல் எனப்படும். இந்தத் துன்பச் சுழலில் இருந்து விடுபட்டு முக்தியடைய வேண்டுமானால், அவை அந்த சிவபெருமானை வணங்குவதால் மட்டுமே கைகூடும். அதுவே முக்தி. ஆனால், உயிர்களை சிவபெருமானோடு அண்ட விடாமல் தடுப்பது, இந்த உலகில் உள்ள சடப்பொருட்களாகிய பாசம். சில உதாரணங்கள்: ஆணவம், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை. சைவ சித்தாந்தத்தம், இறைவனை பதி என்றும், உயிர்களை பசு(ஆன்மா) என்றும், மற்ற பந்த பாசத்தை, பாசம் என்றும் கூறுகிறது. இதுவே முப்பொருள் உண்மையாகும். திருமந்திரத்தில் வரும் இந்த செய்யுளைக் கவனியுங்கள்:

பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி
பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம்
பதி அணுகில் பசு பாசம் நில்லாவே. – திருமந்திரம்

இறைவன் அனாதியாய் இருப்பவர். அவரைப் போலவே, உயிர்களும், பாசமும் அனாதியாய் இருப்பவை. உயிர்களையும், பாசத்தையும் சிவபெருமான் படைக்கவில்லை. சிவபெருமான் என்று உண்டோ, அன்றிலிருந்தே, இந்த உயிர்களும், பாசமும் உள்ளவை. பிறவிச் சுழலில் உழலும் உயிர்கட்கு, சிவபெருமான் ஒருவரே முக்தி அளிக்கும் வல்லமை பெற்றவர். வேறு எவருக்கும் அந்த வல்லமை கிடையாது. ஆகவே, உயிர்களாகிய நாம், நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த உடலாகிய கருவியைக் கொண்டு சிவபெருமானைத் தொழுது அவர் திருவடி சேர வேண்டும். பல பிறவிகளில் சிவ புண்ணியம் செய்தால் மட்டுமே, சிவபெருமானை உணர்ந்து அவரைத் தேடித் தொழுது, அவரின் அருள் பெற்று திருவடிப் பேறு கிட்டும். மற்றவர்கள் சிவ புண்ணியங்கள் செய்யும் வரை பிறவிச் சுழலில் உழன்று கொண்டே இருப்பர். சிவபெருமானின் ஐந்து தொழில்களை செய்ய உதவி கரணமாக இருக்கும் மற்றபிற தேவர்களையும், பிரம்மன், விஷ்ணு, போன்ற தேவர்களை வணங்கினாலும், முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை வணங்கினால் மட்டுமே திருவருளும் முக்தியும் கிட்டும். ஆகவே, சிறுதெய்வ வழிபாட்டில் நம் பொன்னான காலத்தை வீணடிக்காமல், முழுமுதற் கடவுளாகிய பிறப்பும் இறப்பும் ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமானை வணங்குங்கள் என்று நம் சமயாச்சாரியார்கள் அறுதியிட்டுக் கூறுகிறார்கள். ஓம் நமசிவாய.

சிவபெருமான், நம் மீது பெருங்கருணை கொண்டு அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளில் தன்னை உயிர்களுக்கு உணர்த்தி அருள் புரிகிறார். கண்களால் காண முடியாத பொருளாக, உணர மட்டுமே முடியும் நிலையில் அருவமாகவும் (சிதம்பரம்), நீண்ட சடை கொண்டு, பிறை, கங்கையைத் தலையில் தரித்து பல்வேறு மூர்த்தங்களாய் நாம் கண்களால் கண்டு மகிழ்ந்து வணங்கும் உருவமாகவும், சிவலிங்கமாக சதாசிவ மூர்த்தியாக அருவுருவ நிலையில் தன்னை உணர்த்தி உயிர்களுக்கு அருள் புரிகிறார்.

உயிர்கள் தங்களோடு இணைந்தே இருக்கும் மலத்தை நீக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்கு, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று நான்கு படிமுறைகள் உள்ளன. உயிர்களாகிய ஆன்மாக்கள், இறைவனது உருவத் திருமேனிகளைத் தமக்கு புறத்தே வணங்கிச் சிவாலயத்திற்கும் சிவனடியார்களுக்கும் திருத்தொண்டு செய்தல் சரியை வழிபாடு ஆகும். சிவாலயத்தில் திருவலகிடுதல், திருநந்தவனம் அமைத்தல், சிவனடியார்களுக்குரிய பணிகளைச் செய்தல் ஆகியன சரியையாகும். இறைவனது அருவுருவத் திருமேனியை (சதாசிவனை – சிவலிங்கத்தை) அகத்தும் புறத்தும் பூசித்தல் கிரியை வழிபாடு ஆகும். சிவபெருமானை அகத்தே பூசித்தல் யோக வழிபாடாகும். அது மனத்தை விடயங்களின் வழியே போகாவண்ணம் நிறுத்திச் சிவத்தை தியானித்து, பின்பு தியானிப்போனாகிய தானும் தியானமும் தோன்றாமல், தியானப் பொருளாகிய சிவன் ஒன்று மாத்திரமே விளங்கப்பெற்று சமாதி நிலை அடைதலாகும். பதி பசு பாசம் என்னும் முப்பொருள் உண்மையை அறிவிக்கும் ஞான நூல்களைக் கேட்டு சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடுதல் ஞானத்தில் ஞான வழிபாடு எனப்படும். இந்த நான்கு வழிகளும் சிவபெருமானை எளிதாக அடைய நமக்கு வழிகாட்டுபவை.

2. சைவநெறி நூல்கள்

வேதங்களும், சிவாகமங்களும், புராணங்களும் சைவத்தின் தொன்மையைப் பறைசாற்றுவன. வேதங்கள் நான்கு: ரிக், யசூர், சாமம், அதர்வனம். வேதங்கள் உலகிற்கு பொதுவான அறங்களைச் சொல்வது. இது அருநெறிய மறை எனப்படும். சைவத்திற்கு சிறப்பு சேர்ப்பது சிவ ஆகமங்கள். இவை மொத்தம் 28. சிவ ஆகமம் சத்திநிபாதத்திற்குரிய நுட்பத்தைச் சொல்வது. இது பெருநெறி எனப்படும். இவை வடமொழியில் உள்ளன. இவற்றின் கருத்துக்களையும் சைவ சித்தாந்தத்தையும் தமிழில் பல்வேறு நூல்கள் தாங்கியுள்ளன. தமிழின் தோத்திர நூல்களாக பன்னிரு திருமுறைகளும், சாத்திர நூல்களாக 14 நூல்களும் உள்ளன. திருக்கோவில்களிலும், வீட்டிலும் திருமுறை பதிகங்களை தினமும் ஓத வேண்டும். இவை நமக்கு நன்மையை பெருக்கி, அல்லவற்றை விலகச் செய்யும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். திருமுறையே வாழ்வின் நெறிமுறை. திருமுறை அறிவோம். குழந்தைகளுக்கு திருமுறை பாடல்களும், சைவ சமய நெறியை அறிவிப்பதும் பெற்றோர்களின் மிக முக்கியமான கடமை. நம் நூல்கள் யாவும் காலத்தை வென்றவை. எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும் இன்றும், என்றும் ஒரு சிறு எழுத்து பிறழாமல் உண்மை உரைப்பவை. உலகில் வேறு எதற்கும் இந்த அருள் கிடையாது. இது இறைவனின் அருளால் மட்டும் கூடும்.

3. சைவ சின்னங்கள்

திருநீறும், உருத்திராக்கமும், பஞ்சாக்கர மந்திரமும் (நமசிவாய, சிவாயநம, சிவசிவ மந்திரம்) முக்கியமான சைவ சமய சின்னமாகும். தீமைகளினின்றும் நம்மை பாதுகாத்து இறைவனின் பெரும் கருணையை நினைவூட்டும் சின்னங்கள் இவை. குற்றமற்ற பசுவின் சாணத்தை நெருப்பினாலே சுடுவதனால் உண்டாகும் நீறே தூய திருநீறாகும். வெண்மை நிறத் திருநீறே அணியத்தக்கது. சமய தீட்சை பெற்றோர் மாத்திரமே திருநீற்றை நீரில் கரைத்து திரிபுண்டரமாக அணியும் தகுதியுடையோர். மற்றோர் நீரில் கலவாது பொடியாக அணிதல் வேண்டும். திருநீற்றை மூன்று கோடுகளாக, இரண்டு கடைப்புருவ எல்லை வரை அணிய வேண்டும். ஒவ்வொரு கோட்டிற்கும் இடையே ஒவ்வொரு அங்குல இடைவெளி வேண்டும். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களை நீக்கும் என்ற குறிப்பு தோன்ற தரிப்பதே, மூன்று கோடுகளினால் திருநீறு அணிவதாகும். தலை, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் 16 இடங்களில் அணியலாம். திருநீற்றை வடக்கு முகமாகவோ, கிழக்கு முகமாகவோ தரித்தல் வேண்டும். தரிக்கும் போது, சிவபெருமானை சிந்தையில் வைத்து திருநீறு நிலத்தில் சிந்தாத வண்ணம் நெற்றியை மேலே தூக்கி “சிவசிவ”, “நமசிவாய” என்ற பஞ்சாக்கர மந்திரத்தை ஓதி அணிய வேண்டும். தூங்கி எழுந்த உடனும், தூங்குவதற்கு முன்னும், நீராடியவுடனும், பூசைக்கு முன்னும் பின்னும், உணவுக்கு முன்னும் பின்னும், கடமைகளைச் செய்யும் போதும், சிறப்பு நிகழ்ச்சிகளின் போதும் கட்டாயமாகத் திருநீறு அணிய வேண்டும். திருநீற்றை பட்டுப் பையிலோ, சம்புடத்திலோ மட்டும் வைக்க வேண்டும். குரு, சிவனடியார் திருநீறு கொடுத்தால், அவர்களை வணங்கி, அடக்கத்துடன் இரு கைகளையும் நீட்டி வாங்கிக் கொள்ள வேண்டும். திருநீற்றுக்கு மேலே குங்குமமேனும், சந்தனமேனும் அணியலாகாது. திருநீற்றுக்குக் கீழே, புருவ மத்தியில் குங்குமம் தரிக்கலாம். திருநீற்றை ஊதுவதோ, கோவில் தூண்களிலோ, வேறு இடங்களில் கொட்டுவதோ, கீழே சிந்துவதோ, கூடவே கூடாது.

உருத்திராக்கம் என்பது உருத்திரனது கண் எனப் பொருள்படும். திரிபுரத்து அசுரர்களாலே தமக்கு ஏற்பட்ட துன்பங்களை தேவர்கள் சிவபெருமானிடம் எடுத்துரைத்த போது, சிவபிரானது மூன்று கண்களில் இருந்தும் சிந்திய மணியே உருத்திராக்கமாகும். பத்தினிப் பெண்களுக்கு திருமாங்கல்யம் எத்தனை முக்கியமோ, அது போல சைவர்களுக்கு உருத்திராக்கம் அணிவது மிக முக்கியம். முறையாக உருத்திராக்கம் அணிந்து இறைவனிடம் அன்பு பூண்டார்க்கு உடல் நலமும், செல்வ வளமும், நெடு வாழ்வும், இன்ப வாழ்வும் இப்பிறப்பில் பெருகும். மறு உலகில் இறைவன் திருவடியினை எய்தி மாறா இன்பம் துய்த்து மகிழ்வர். உருத்திராக்கத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்து இருக்கலாம். தூங்கும் போதும், உண்ணும் போதும் எப்போதும் அணிந்திருக்கலாம். குழந்தைகள் முதல் பெண்கள், பெரியவர்கள் வரை, ஒரே ஒரு மணியாக, சிவப்பு கயிற்றில் கட்டி, கழுத்தில் தெரியும் படியாக எப்போதும் அணிந்திருக்க வேண்டும். கழற்றவே கூடாது. பெண்கள் எல்லா நேரங்களிலும் அணிந்திருக்கலாம். நீத்தார் கடன், பெண்கள் தீட்டு, கணவன்-மனைவி தாம்பத்ய நேரங்களிலும் கண்டிப்பாக அணியலாம். சிறுவர் சிறுமியர் அணியும் போது அவர்களின் படிப்புத்திறன் மேலோங்கும். பெண்கள் அணிந்திருக்கும் போது, தீர்க்க சுமங்கலியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியும், இல்லத்தில் லட்சுமி கடாச்சமும் நிறைந்திருக்கும். ஆகையால், எல்லோரும் கண்டிப்பாக உருத்திராக்கம் அணிய வேண்டும். உருத்திராக்கம் அணிந்தால் தான் உடலும் உள்ளமும் தூய்மை அடையும். மருந்துக்குப் பத்தியம் எவ்வளவு அவசியமோ அது போல, உருத்திராக்கம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் ஆகியவற்றைப் படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு பன்றி மாமிசத்தை எப்போதும் சாப்பிடக்கூடாது.) உருத்திராக்க மாலையாக அணியும் போது, சந்தியாவந்தனம், சிவபூசை, செபம், தேவார திருவாசக பாராயணம், புராண படனம், சிவாலய தரிசனம் போன்ற நேரங்களில் மட்டும் தரிக்க வேண்டும். இது இல்வாழ்வில் இருப்பவர்களுக்கு பொருந்தும்.

சைவர்கள், நமசிவாய, சிவசிவ, சிவாயநம ஆகிய பஞ்சாக்கர மந்திரத்தை எப்போதும் உச்சரிக்க வேண்டும்.

4. சமய குரவர்கள், சந்தான குரவர்கள்

7 ஆம் நூற்றாண்டில் சமண பௌத்த சமயங்கள் அரசர்களின் துணையோடு பரவிய போது, சைவ சமயத்தை இறைவன் திருவருளால் நிலை நிறுத்தியவர்களில் நால்வருக்கு முக்கிய பங்குண்டு. தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும் திருவாசகம், திருக்கோவையார் பாடிய மாணிக்கவாசகர் நால்வர்களே சமயக் குரவர் (குரு) எனப்படுவர். 3 வயதிலே சிவபெருமானின் திருவருளால் உமையம்மையின் திருமுலைப்பாலை உண்டு சிவஞானம் பெற்று பல அற்புதங்கள் செய்து 16 வயது வரை வாழ்ந்து சைவத்தை நிலைநாட்டியவர் திருஞானசம்பந்தர். சமண சமயத்தில் உழன்று, இறைவன் திருவருளால் சைவ சமயம் தழுவி, தேவாரம் பாடி 81 வயது வரை வாழ்ந்து முக்தியடைந்தவர் திருநாவுக்கரசர். இறைவனின் திருவுருவமே சுந்தரராக அவதரிக்கப் பெற்று 18 வயது வரை வாழ்ந்து பல்வேறு செயற்கரிய அற்புதங்களை செய்தவர் சுந்தரர். பாண்டிய நாட்டிலே சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டு திருவாசகம், திருக்கோவையார் பாடி தேனமுதத்தைத் தந்து 32 வயது வாழ்ந்தவர் மாணிக்கவாசகர். பின்னர் வந்த சந்தான குரவர்களான மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார் ஆகியவர்கள் நமக்கு சைவ சாத்திர நூல்களை அருளிய குருமார்கள். 63 நாயன்மார்களும் செயற்கரிய சிவதொண்டு புரிந்து நமக்கு வழிகாட்டியாக இருக்கும் குருமார்கள். இவர்களின் வரலாற்றை முழுவதுமாக படித்து, கேட்டு அறிந்து நம குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுப்பது நம் தலையாய கடமையாகும்.

5. சைவர்கள் அறிய வேண்டிய பிற செய்திகள்

சைவத்தின் சிவஞானம் கடலை விட ஆழமானது. பின்வரும் கேள்விகளுக்கு பதிலைத் தேடுங்கள். வாழ்வு நல்திசையில் செல்லும். திருக்கோவிலின் கருவறை ஏன் இருட்டாக உள்ளது? சண்டிகேசுவரர் யார் ? அவர் முன் கை தட்டலாமா ? சிவனை எத்தனை முறை வலம் வரவேண்டும் ? கோவிலில் செய்யக்கூடியது எது, செய்யக்கூடாதவை எவை? சமய சந்தான குரவர்களின் வாழ்கை வரலாறு என்ன? பாடல் பெற்ற தலங்கள் 274, அவற்றின் தலவராறும் எவை? சிவபெருமானின் அட்டவீரட்ட செயல்களும் தலங்களும் எவை? உழவாரப்பணி ஏன் அனைவரும் செய்ய வேண்டும்? 63 நாயன்மார்கள் செய்த சிவ தொண்டுகள் எவை? மலபரிபாகம் என்றால் என்ன? தெய்வச் சேக்கிழார் பிறந்த ஊர் எது? அசபா நடனம் என்றால் என்ன? மாடக் கோவில் என்றால் என்ன? பஞ்சமம், புறநீர்மை என்றால் என்ன? வீரபத்திரர் யார்? பஞ்சகவ்யம், கேட்டுமுட்டு என்றால் என்ன? தீக்ஷை யார் பெறலாம்? குளத்து நீரை ஊற்றி விளக்கு எரித்த நாயன்மார் யார் ? திருமால் தவமிருந்து, சிவபெருமானிடம் சக்கராயுதம் பெற்ற திருத்தலம் எது ?

உங்கள் ஆன்மீக சைவ பயணத்தை இன்றே துவங்குங்கள். வாழ்வில் எல்லையில்லாத பேரின்பம் பெற்றிடுங்கள்.

சைவ சமயம் அடிப்படை நுட்பம்

திருச்சிற்றம்பலம்.

Please rate this

One thought on “சைவ சமயம் அடிப்படை நுட்பம்”

  1. அட்சரம் என்றால் எழுத்துக்கள். பஞ்சாட்சரம் என்றால் ஐந்து எழுத்து எழுத்து மந்திரம். நமசிவாய, சிவாயநம இரண்டும் பஞ்சாட்சரம். சிவசிவ இதில் சேராது. நன்றி. ஹர ஹர ஹர ஹர மகாதேவ்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *