புண்ணிய சிவபூமியாய் திகழும் தென்சென்னை 3.75/5 (4)


தென்சென்னை – ஒரு புண்ணிய சிவபூமி

உலகின் மிகப் பெரிய ஞானிகள் எண்ணற்றவர் வாழ்ந்து செழித்தது நம் பாரத பூமி. ஞானத்தின் விளைநிலமாகவும் மனித வாழ்கை இனிதாக அமைவதற்குத் தேவையான ஒழுக்க நெறிகளையும் வகுத்து கோடி கோடி கோடி உயிர்களை இன்பமாக வாழ வைத்தும், வைத்துக் கொண்டிருப்பதுமாகியது நம் புண்ணிய பாதர பூமி. இந்த பூமியில் விளைந்த ஞான முத்துக்ளும் கோவில்களும் உலகெங்கும் பரவி நின்றது என்று வரலாறு தெரிவிக்கிறது.  அத்தகைய புண்ணிய பாரத பூமியில் தமிழ்நாட்டின் தொண்டை மண்டலமும் சிவஞானம் விளைந்த பூமியாக திகழ்கிறது. தற்போதைய சென்னையின் தெற்கு பகுதியாகிய தென்சென்னை சித்தர்களின் இருப்பிடமாகவும், புண்ணிய சிவபூமியாகவும்  தொன்று தொட்டு நீண்ட நெடுங்காலமாகத் திகழ்ந்து வருகிறது. பெரும்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள சித்தர் மலையில் இன்றும் சித்தர்கள் வந்து செல்வதாக நம்பப்படுகிறது. சித்தர்களின் இருப்பிடமாக இருந்தமையாலேயே அருகிலுள்ள ஊர் சித்தார்பாக்கம் என்று பின்னாளில் அழைக்கப்பட்டு இன்று சித்தாலபாக்கமாக மருவி நிற்கிறது. சித்தர்கள் பக்கம் பக்கமாக இருந்தமையால் சித்தர் பக்கம் என்ற ஊர் இன்று சிட்லபாக்கமாக மருவி நிற்கிறது. இந்த சித்தர்களும் ஞானிகளும் சிவபூசை செய்ய பெரிய சோலையாகிய நந்தவனத்திற்குச் சென்று பூக்கள் பறித்து வந்ததால், இந்த ஊர் சோலையூர் என்று அழைக்கப்பெற்று, இன்று சேலையூராக மருவி நிற்கிறது. கபில முனிவர் பூசித்த தேணுபுரீஸ்வரர் அருகிலுள்ள மாடம்பாக்கத்தில் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார். இதனருகிலேயே 18 சித்தர்களுக்கும் சித்தர் கோவில் உள்ளது. மாமுனி அகத்தியர் வழிபட்ட சிவலிங்கமாகிய அங்கம்மாள் உடனுறை அகத்தீஸ்வரர் சித்தாலபாக்கத்தில் இருந்து அருள்புரிகிறார். தென்சென்னை முழுவதும் எண்ணற்ற சிவாலயங்கள் உள்ளன. இந்த மலையைச் சுற்றியுள்ள கோவில்களின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முழுமதி மலைவலம்

இந்த சித்தர் மலையைச் சுற்றி ஒவ்வொரு முழுமதி (பௌர்ணமி) தோறும் மலைவலம் (கிரிவலம்) சில ஆண்டுகளாக பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த பகுதியில் இருக்கும் அனைவரும், மேலும் சென்னையில் உள்ளோரும், சென்னையைச் சுற்றியுள்ளோரும் தவறாமல் இந்த கோவில்களைச் சென்று தரிசனஞ்செய்து, நிறைமதி தோறும் மலைவலம் வந்தும் பிறப்பு இறப்பு அற்றவனாகிய மாபெரும் கருணைக்கடலாம் சிவபெருமானின் பேரருளைப் பெற்று துன்பங்கள் நீங்கி இன்பமாக வாழ்வீர்காள். தென்சென்னையாகிய இந்த புண்ணிய பூமியில் மீண்டும் ஆன்மீக அதிர்வுகள் எழுந்தருளட்டும். அனைத்து மக்களின் ஒற்றுமை சிறந்து ஓங்கட்டும். வறுமை, பஞ்சம் அனைத்தும் நீங்கி செல்வச்செழிப்போடு திகழட்டும்.

சித்தர்மலை மலைவல பாதையில் உள்ள கோவில்கள்

1. கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில், அரசன்கழனி
2. வரசக்தி விநாயகர் கோவில், இந்திராநகர், பெரும்பாக்கம்.
3. அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வைத்தீஸ்வரர் திருக்கோவில், நூக்கம்பாளையம்
4. பெரியபாளையத்தம்மன் கோவில், போலினேனி

சித்தர்மலை அருகில் உள்ள சில சிவன் கோவில்கள்

1. அங்கம்மாள் உடனுறை அகத்தீஸ்வரர் – அகத்தியர் வழிபட்ட தலம் – சித்தாலபாக்கம். – சித்தாலபாக்கம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ளது.

2. ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை ஒட்டீஸ்வரர் திருக்கோவில், ஒட்டியம்பாக்கம்

3. தேனுகாம்பாள் உடனுறை தேனுபுரீஸ்வரர், மாடம்பாக்கம். கபில முனிவர் பசுவாக சிவபெருமானை வழிபட்ட தலம். அருணகிரிநாதர் திருப்புகழில் பாடல்பெற்ற தலம்.

4. ஸ்ரீ சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீசுவரர் திருக்கோவில், பள்ளிக்கரணை – பதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்கள் வழிபட்ட தலம்.

5. கற்பகாம்பாள் உடனுறை கற்பகேஸ்வரர் திருக்கோவில் (கங்கையம்மன் கோவில்), காரப்பாக்கம்.

6. சுவாமிநாத சுவாமி திருக்கோவில், கந்தாஸ்ரமம், கிழக்கு தாம்பரம்.

7. சந்திரசூடேசுவரர் திருக்கோவில், கோவிலஞ்சேரி

8. கைலாசநாதர் திருக்கோவில், அகரம்தென்

9. ஸ்ரீ முருகநாதேஸ்வரர் திருக்கோவில், மாம்பாக்கம்

10. சக்திபுரீஸ்வரர் கோவில், பொன்மார்-நாவலூர் சாலை

11. ஸ்ரீ ஆனந்தவல்லி உடனுறை பொழிச்சலீசுவரர் திருக்கோவில், அகரம்தென்

12. திருநீலகண்டேஸ்வரர் திருக்கோவில், கீழ்க்கட்டளை

13. ஆழிகண்டேஸ்வரர் திருக்கோவில், ஒக்கியம் துரைப்பாக்கம்.

14. திருநீலகண்டேஸ்வரர் திருக்கோவில், நீலாங்கரை

15. வேதபுரீஸ்வரர் கோவில், பெருங்குடி

16. மரகதஈஸ்வரர் திருக்கோவில், சுண்ணாம்புகுளத்தூர்.

17. அமிர்தகடேஸ்வரர், அக்னீஸ்வரர், அகத்தீஸ்வரர் – மூன்று கோவில்கள், வேங்கடமங்கலம்.

18. நாவலூர் சிவாலயம், நாவலூர், OMR

சென்னையில் உள்ள சிவாலயங்களை கூகுள் வரைபடத்தில் குறிக்கப் பெற்ற சுட்டி.

சிவாலயம் செல்லுங்கள். திருமுறை ஓதுங்கள். சங்கநாதம் முழங்கிடுங்கள். எல்லாத் துன்பங்களும் விலகி இனிமையான வாழ்வு பெற்று சிவகதி பெறுவோம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

திருச்சிற்றம்பலம்.

Please rate this