சைவ பெற்றோர்கள் செய்ய வேண்டியது யாது ?
சைவ பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இளம் பருவத்திலிருந்தே இறைவனை அடையாளம் காட்டி, அவன் மீது அன்பு வைத்திருக்கும் அவசியத்தையும், நம் சமயத்தின் ஆணி வேரை விதைக்கும் முக்கிய கடமையையும் செய்ய வேண்டும்.
1. குழந்தைகளை வாரம் ஒரு முறை தவறாமல் கோவிலுக்கு கூட்டிச் செல்ல வேண்டும். முடிந்தவர்கள் தினமும் கூட்டிச் செல்லலாம். கோவிலில் நாம் கும்பிடும் முறைகள், ஏன் எதற்கு செய்கிறோம் என்பதை அவர்கட்கு புரியும் வகையில் கட்டாயம் சொல்லித் தர வேண்டும். அவர்களின் வினாக்களுக்கு தகுந்த விடையளிக்க வேண்டும். (அதற்கு முன்னர், அந்த கேள்விகளுக்கு நமக்கு சரியான விடை தெரிந்திருக்க வேண்டும் !!!)
2. குழந்தைகள் எளிதில் பாடல்களை மனனம் செய்து விடுகிறார்கள். ஆகையால், அவர்களுக்கு சிவபுராணம் முதலிய திருமுறை பாடல்களை, புத்தகங்களை படிக்க கொடுத்து, தினமும் காலையில் சில பதிகங்கள் ஓதி, தோப்புக்கரணம் போட்டு பூசை செய்ய சொல்ல வேண்டும். இதற்கு 10 நிமிடங்கள் முதல் 30 நிமிடம் வரை தான் ஆகும். ஆனால், இது மிக முக்கியமானது.
3. சமயகல்வி மிகவும் இன்றியமையாதது. சைவப் பாடம் என்ற பாடம் முன்பு நம் பாடசாலைகளில் கற்பிக்கப் பட்டு வந்தது. தற்போது பெற்றோர்கள் தாம் தம் குழந்தைகளுக்கு போதிய சமயகல்வி கொடுப்பது இன்றியமையாததாகிறது. பன்னிரு திருமுறை, சமய குரவர்கள், நம் சின்னங்கள், 63 நாயன்மார்கள் வரலாறு, நம் சமய நூல்கள் எவை, சமய சின்னங்கள் எவை போன்ற அடிப்படை கல்வி அனைவருக்கும் அவசியம். ஒவ்வொரு வாரமும் குறைந்தது 2-4 மணி நேரம் சமயகல்வி வகுப்புக்கு அனுப்புவது மிக மிக அவசியம்.
4. திருவிளையாடல், திருவருட்செல்வர், அகத்தியர், ராஜராஜ சோழன், பட்டினத்தார், ஔவையார், காரைக்கால் அம்மையார், நந்தனார், கந்தன் கருணை, சரஸ்வதி சபதம், சம்பூர்ண ராமாயணம் போன்ற எண்ணற்ற அருமையான சினிமா படங்கள் உள்ளன. அவ்வப்போது குழந்தைகளோடு சேர்ந்து நீங்களும் அவர்களுக்கு அந்த கதைகளை பற்றி உரையாடிக் கொண்டே பாருங்கள்.