பண்ணமர் பதிகம் – தேவார பண் இசை ஆதார தொகுப்பு 5/5 (3)

பண்ணமர் பதிகம் – தேவார பண் இசை ஆதார தொகுப்பு

பண்ணமர் பதிகம் – சான்று பாடல்களின் சுட்டியை PDF வடிவில் பதிவிறக்கம் செய்க

தேவார பாடல்களை எவ்வாறு பாட வேண்டும்?

தேவார பாடல்களை முறைப்படி பாட அதன் பண் அமைப்பில் பாட வேண்டும்.

தேவார பண்கள் மொத்தம் எத்தனை?

தற்போது நம்மிடம் இருக்கும் தேவார பண்கள் மொத்தம் 23 (+யாழ்மூரி)

தேவார பண்கள் எவை?

தேவார பதிகங்களை, அதற்குரிய பண்ணில் பாடுவது எப்படி?

பண் என்பது ஒலி அலைகளின் தொடர் அமைப்பாகும். ஒவ்வொரு பண்ணையும் எவ்வாறு பாட வேண்டும் என்று முறைப்படி ஓதுவார்களிடம் பயிற்சி செய்து பாட வேண்டும். ஒவ்வொரு பண்ணுக்கும் ஒரு பாடலை எவ்வாறு பாட வேண்டும் என்று ஒரு சான்று ஆதாரமாக வைத்துக் கொண்டு, அதற்குரிய தாளத்தையும் இணைத்து பாடுவது புதியவர்களுக்கான எளிய வழியாகும். நிறைய பயிற்சி செய்ய செய்ய, அனைவரும் மிகவும் அழகாக பாடலாம்.

எல்லோரும் தேவாரம் பாடலாமா, குரல் வளம் கட்டாயமாக தேவையா?

குரல் என்பது ஒவ்வொருவருக்கும் இறைவனே அருளிச் செய்த வரமாகும். ஒவ்வொருவருடைய குரலும் வித்தியாசமானதாகும். ஸ்ருதியோடு இணைத்து பாடினால், அனைவரின் குரலிலும் தெய்வீக உணர்வு ஊற்றெடுக்கும். ஆகவே, முயற்சி திருவினையாக்கும். அனைவரும் கட்டாயமாக இனிமையாக தேவாரம் பாடலாம்.

ஒவ்வொரு தேவார பண்ணிற்க்கும் நம் பண்ணிசை மரபின் வழியாக ஒவ்வொரு சான்று பாடல் தொகுப்பு இருக்கிறதா?

இருக்கிறது. இதையே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் பண்ணமர் பதிகம் தேவார பண் இசைத் தொகுப்பு. அந்த தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சான்று பாடல் தொகுப்பாகிய பண்ணமர் பதிகங்களை PDF வடிவில் தொகுக்கப்பட்ட கோப்பை பதிவிறக்கம் செய்ய.

பண்ணமர்பதிகம் கைக்கோப்பு வடிவம்

பண்ணமர் பதிகம் – தேவார பண் இசைத் தொகுப்பு

YouTube Play List:  பண்ணமர் பதிகம்

 

YouTube.com/ThiruNandhiTV

 

 

Please rate this

அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலையை பௌர்ணமியில் கிரிவலம் வாருங்கள். No ratings yet.

அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலையை சுற்றி கிரிவலம் வாருங்கள் !!!

அச்சிறுபாக்கம் – அச்சுமுறிப்பாக்கம் – சிவபெருமானின் எட்டு வீரட்ட செயல்களில் முப்புர அசுரர்களை அழிக்க இரதத்தில் செல்லும் போது, விநாயகர் அந்த இரதத்தின் அச்சினை முறித்த இடம் ஆதலால், இது அச்சுமுறிப்பாக்கம் என்று பெயர் பெற்றது என்பது வரலாறு.

சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி நம் தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்கள் யாரும், அவ்வழியில் அச்சிறுப்பாக்கத்தில் வரும் நம் வஜ்ரகிரி மலையை கண்ணால் காணாமல் செல்ல முடியாது. இந்த மலை அச்சிறுப்பாக்கத்தில் மேல்மருவத்தூரை அடுத்து அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில் ௧௫௰௰ (1500) ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சிவாலயம் உள்ளது. இங்கு உறையும் பெருமான் மரகதாம்பிகை உடனுறை பசுபதீசுவரர் என்று அன்போடு காலம் காலமாக அழைக்கப்பட்டு வருபவர்.  அச்சிறுபாக்கத்தில் அமையப் பெற்றுள்ள பாடல் பெற்ற தலமான ஆட்சீசுவரர் கோவிலுக்கு உட்பட்டது தான் மலை உச்சியில் உள்ள பசுபதீசுவரர் கோவிலும் என்கிறார்கள். மலையின் உச்சியில் உள்ள கோவிலை அடைய இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று செங்குத்தான படிக்கட்டு. இன்னொன்று மலையின் பின்புறம் வாகனங்களில் வருவதற்கான பாதை.

இந்த மலையை சுற்றி பல்லாண்டு காலமாக மலைவலம் (கிரிவலம்) நடைபெற்று வருகிறது. சிறிதே தடைபட்ட இந்த மலைவலம், பிறப்பு இறப்பு அற்ற எல்லையில்லாத ஆற்றல் பொருந்திய உலகின் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானின் திருவருளினாலும் அவர் விருப்பத்தினாலும் இப்போது மீண்டும் துவங்கியுள்ளது.  மொத்தம் ௧௪ (14 km) கி.மீ. தூரம் உள்ள இந்த மலையைச் சுற்றி வரும் பாதையில் முழுநிலவு (பௌர்ணமி) அன்று கிரிவலம் வரப்படுகிறது.

மலைவலம் துவங்கும் இடம்:  அச்சிறுபாக்கம் பசுபதீசுவரர் கோவில் மலையடிவாரம்.

எல்லையற்ற கருணையும், ஆற்றலையும் கொண்டு, இந்த பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, ஒடுக்கி, அருள் புரிந்து வரும் சிவபெருமான் உயிர்களுக்குத் தேவையான அனைத்தையும் இந்த உலகில் படைத்து அருளி காத்து வருகிறான். அவ்வாறாக, சிவபெருமானே, மலையின் வடிவில் அமைந்து அருள் பாலிப்பதாக நம் சாத்திரங்கள் கூறுகின்றன. ஒரு நாட்டின் அரசனுக்கு நாம் செய்யும் பணிகள் தான் எத்தனை எத்தனை ? அவனை வரவேற்று உபசரிக்கும் விதம் தான் எத்தனை எத்தனை ? இந்த ௨௨௪ (224) புவனங்களில் ஆயிரக்கணக்கான கோள்களையும் பரவெளியையும் படைத்து அருள் புரிந்து வரும் நம் ராஜாதி ராஜனான சிவபெருமானை நாம் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் ? எப்படி வணங்க வேண்டும் ? அவனை எப்படிக் கொண்டாட வேண்டும் ?

இந்த மலையிலும் அரிய வகை மூலிகைகளும் மரங்களும் உள்ளன. சித்தர்களும் ஞானிகளும் வாழ்ந்திருந்த பூமியாக விளங்கியது இது. பெருமை மிக்க இந்த மலையில் மேவி அருள்பாலிக்கும் பசுபதீசுவரரை வணங்கியும் இந்த மலையை சிவபிரானாகவே எண்ணி மலைவலம் வருவதும் நாம் மிக்க புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும். திருவண்ணாமலைக்கு இணையாக இந்த மலையும் திகழ்வதால், திருவண்ணாமலை கிரிவலம் செய்யும் அதே புண்ணியமும், சிறப்பும், அருளும் இந்த மலையை வலம் வருவதால் கிடைக்கப்பெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்கள், திருவண்ணாலை செல்வதோடு இந்த வஜ்ரகிரி மலையையும் கிரிவலம் வருவது மிகவும் சிறப்பைத் தரும். இந்த மலையை சீர் செய்யவும், வழிபாடுகள் சிறப்பாக அமையவும் பல உதவிகள் தேவைப்படுகிறது. இந்து உதவி அமைப்பினர் பல சிறப்பான முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் அனைத்து இந்து அமைப்புகளும் கூட்டாக ஒன்று சேர்ந்து நம் பாரம்பரிய சொத்தான இந்த மலையை சீரமைத்து, கோவில்களையும் வழிபாடுகளையும் சிறப்பாக நடத்த இணைந்து செயல்பட வேண்டும்.  திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் அன்பர்கள் வஜ்ரகிரி மலைக்கும் கிரிவலம் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

இணையற்ற ஒப்பற்ற பெருமானின் திருவருள் மீண்டும் நம் பூமியில் பட்டு ஆன்மீக ஒளிப்பெருக்கு ஏற்பட வேண்டும்.

திருச்சிற்றம்பலம்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

Please rate this

சென்னையில் ஒரு கிரிவலம் 4.75/5 (4)

சென்னையில் ஒரு கிரிவலம்

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது தமிழ் வழக்கு. ஆற்றல் உள்ள மலைகளை சிவமாகவே வணங்கி வலம் வருவதும் நம் மரபு. அவ்வாறாக இந்தியாவில் பல்வேறு மலைகளை சிவமாக வலம் வந்து வணங்கிக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறான ஒரு மலை சென்னை மாநகரிலும் உள்ளது.

சென்னை மாநகரின் மேடவாக்கத்தை அடுத்த பெரும்பாக்கம், அரசன்கழனி, சித்தாலபாக்கம், நூக்கம்பாளையம் ஆகிய ஊர்களையும், போலினேனி ஹில்சைட் (Bollineni Hillside) போன்ற நவீன குடியமைப்பு நகரங்களின் நடுவில் அமைந்துள்ளது ஔடத சித்தர் மலை. இந்த மலையின் மீது பன்நெடுங்காலமாக சிவபெருமான் இலிங்க வடிவாய் எழுந்தருளி அருள் புரிந்து வருகிறார். நிறைய பக்தர்கள் இம்மலை மீது இருக்கும் சிவபெருமானைத் தரிசித்து அபிஷேக வழிபாடு செய்து வருகிறார்கள். இம்மலை மீது கார்த்திகை தீபத் திருநாள் அன்று, திருக்கார்த்திகை தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த மலையைச் சுற்றி ஒவ்வொரு மாதமும் முழுமதி/நிறைமதி/பௌர்ணமி தினத்தன்று மலைவலம் (கிரிவலம்) நடைபெற்று வருகிறது. சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சுற்றளவு உள்ள இந்த மலையை ஒரு முறை வலம் செய்ய 1 மணி நேரம் 15 நிமிடங்களும் ஆகிறது. மலை மீது ஏற சுமார் 20-30 நிமிடமும், இறங்க சுமார் 15-20 நிமிடங்களும் ஆகிறது.

நீங்களும் முழுநிலவு நாளில் இந்த மலையை மலைவலம் (கிரிவலம்) வந்து பிறப்பு இறப்பு இல்லாத சிவபெருமானின் தரிசனத்தைக் கண்டு அவனருள் பெற வாருங்கள்.

ஒரு பெரும் குழு தற்போது ஒவ்வொரு முழுநிலவு நாளிலும் மலைவலம் செல்கிறது. இந்த குழுவோடு இணைந்து நீங்களும் மலைவலம் செல்ல நீங்கள் அரசன்கழனி கல்யாண பசுபதீசுவரர் கோவிலுக்கு சரியாக மாலை 5 மணிக்கு வந்து விடவும்.

கோவிலை அடையும் வழி

மேடவாக்கத்திலிருந்து ஷேர் ஆட்டோ வசதி உள்ளது. 51B பேரூந்து சைதாப்பேட்டை, மேடவாக்கத்திலிருந்து அரசன்கழனி நிறுத்தத்தில் நிற்கும். இறங்க வேண்டிய இடம் அரசன்கழனி பஸ்டாப். தாம்பரத்திலிருந்து 51K பேரூந்து இந்த நிறுத்தத்தில் நிற்கும்.

ஒவ்வொரு முழுமதி அன்றும் வாருங்கள்.

அரசன்கழனி பசுபதீசுவரர் ஆலயம் அமைந்துள்ள இடம் – இதை சுட்டவும்

மேலும் தகவல்களுக்கு: +91-8122299938, +91-9382664059 அழைக்கவும்.

 

 

 

 

 

 

Please rate this

மார்கழி திருவீதி உலா 2022 பள்ளிக்கரணை 63வர் நடராஜ பெருமானுடன் No ratings yet.

சிவமயம்.

பன்னிரு திருமுறைகளை சிரசில் ஏந்தி, திருமுறை பள்ளிக்கரணை வீதிகள் எங்கும் ஒலிக்க, கயிலாய வாத்தியங்கள் முழங்க, அறுபத்து மூன்று நாயன்மார்களுடன் மாணிக்கவாசகரும் இணைந்து, அருள்மிகு சிவகாமி அம்மை உடனுறை ஆனந்த நடாரஜர் பள்ளிக்கரணையின் வீதிகளில் எங்கும் எழுந்தருளி அருள்பாலித்தார்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம், பள்ளிக்கரணை மற்றும் மல்லிகேசுவரர் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் இணைந்து நடத்திய மார்கழி வீதி உலா நிகழ்விலிருந்து சில காட்சிகள்.

காணொளி:

படக்காட்சிகள்:

 

Please rate this

சைவ சமயக் காணொளி போட்டி !!! No ratings yet.

சைவ சமயக் காணொளி போட்டி !!!

காணொளிகளை அனுப்ப: shivathondu14@gmail.com

வாட்சப்பில் அனுப்ப: 9445769019

 

 

 

 

 

Please rate this

63 பக்தித் திரைப்படங்கள் உங்கள் விரலின் நுனியில்.. 5/5 (6)

திருச்சிற்றம்பலம்.

நோய் தொற்றின் காரணமாக வீட்டிற்க்குள் வாழ்வை அனுபவிக்கும் அன்பர்களுக்கு ஏதுவாகவும், விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு அமர்ந்து பக்தி மணம் கமழ குழந்தைகளுக்கு பக்தி சுவை ஊட்டவும், சைவ சமய திரைப்படங்களின் தொகுப்பை ஒரு கோப்பில் தொகுத்து அளிக்கப்படுகிறது.

அன்பர்கள், குடும்பத்தோடு அமர்ந்து பக்தி திரைப்படங்கள் கண்டு மகிழுங்கள். நம் சமயம் மற்றும் பண்பாட்டை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

கீழே உள்ள சைவ சமய காணொளி தொகுப்பு.pdf கோப்பை பதிவிறக்கம் செய்க.

63 பக்தி திரைப்படங்கள் உங்கள் விரல் நுனியில்

பக்தி திரைப்படங்கள்

திருச்சிற்றம்பலம்.

Please rate this

கயிலாய வாத்திய பயிற்சி குறிப்புகள் வாய்பாடு 4.77/5 (62)

கயிலாய வாத்திய பயிற்சி குறிப்புகள்

கயிலாய வாத்தியம்

பஞ்ச வாத்தியம் எனப்படும் கயிலாய வாத்தியம் சிவவாத்தியம் என்றும் அழைக்கப்படும். ஐந்து வித வாத்திய கருவிகளால் இசைக்கப்படுவதால் பஞ்ச வாத்தியம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானுக்கு மட்டும் வாசிக்கப்படும் இந்த இசை, பூதகணங்களால் வாசிக்கப்படும். இதனால் இதை பூதகணஇசை என்றும் கூறுவர். திருநந்திதேவர் தலைமையில் பூதகணங்கள் வாத்தியம் இசைக்க, சிவபெருமான் நடமாடுவதை விரும்பாதவர் எவருமிலர். அதை நினைப்பதற்க்கும் காண்பதற்க்கும் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

அவ்வாத்தியம் பயிற்சி எடுக்க, சில குறிப்புகள் விரைந்து கற்பதற்க்கு ஏதுவாக இருக்கும். அவை இங்கே பகிரப்படுகிறது. வாத்தியம் தாளத்தின் அடிப்படையில் அமைவதாகும். அந்த தாளத்தை வாய் வழியே சொல்லி முதலில் கற்றுக் கொண்டால், அதை இசை வடிவமாக திருவுடலிலும் தாளத்திலும் எளிதாக கொண்டு வந்து விடலாம். அவ்வாறு வாய் வழியே சொல்லி கற்பது வாய்பாடு எனப்படுகிறது. கயிலாய வாத்தியம் கற்க விரும்பும் மாணவர்கள், இந்த வாய்பாட்டை மீண்டும் மீண்டும் கேட்டு, வாயில் சொல்லி பயிற்சி எடுத்து, அதை தொடையிலும், வீட்டில் நாற்காலியிலும் தட்டி பயிற்சி எடுத்துக் கொண்டு திருவுடலிலும் தாளத்திலும் முயற்சி செய்தால், விரைந்து கற்றுக் கொள்ளலாம்.  அதற்கான வாய்பாடு இங்கே.

வாய்பாடு

 கயிலாய வாத்திய அடிப்படை பயிற்சி – வாத்திய வாய்ப்பாட்டு உரை

 

  1. மகுடம்
  2. முதல் மெட்டு
  3. இரண்டாம் மெட்டு
  4. மூன்றாம் மெட்டு
  5. நான்காம் மெட்டு
  6. காளி நடை 1
  7. காளி நடை 2
  8. நந்தி நடை 1
  9. நந்தி நடை 2
  10. ஐயாரப்பர் மெட்டு
  11. அண்ணாமலையார் மெட்டு
  12. புறப்பாடு மெட்டு
  13. நடராசர் மெட்டு
  14. முதல் மெட்டு மூன்று சுற்று
  15. நான்காம் மெட்டு மூன்று சுற்று

 

 கயிலாய வாத்திய அடிப்படை பயிற்சி – வாத்திய வாய்ப்பாட்டு உரை

மேலும் வளரும்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

சைவ சித்தாந்தம் அடிப்படை வகுப்பு காணொளிகள் 4.78/5 (9)

சைவ சித்தாந்தம் அடிப்படை வகுப்பு காணொளிகள்

சைவ சித்தாந்தம் அடிப்படை வகுப்பு

அனைத்து காணொளிகளின் பட்டியல் தொகுப்பு

அனைத்து வகுப்புகளிலும் பயன்படுத்தப்பட்ட விளக்கத் தகடுகளின் தொகுப்பு புத்தகம் இந்த வலைதளத்தின் பதிவிறக்கம் பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கீழே ஒவ்வொரு வகுப்பின் தனி காணொளி சுட்டி

வகுப்பு 1

நம் கண்களுக்குத் தெரியும் இந்த உலகத்தில் இருக்கும் பொருட்களை ஆராய்ச்சி செய்வோம். கண்களுக்குத் தெரியும் உருவம், கண்களுக்குத் தெரிந்து குறிப்பிட்ட வடிவம் இல்லாத அருவுருவம், கண்களுக்குத் தெரியாத அருவம் ஆகிய பொருட்கள் உள்ளன. பொருட்கள் அன்றி, ஆற்றலும் உள்ளது. பொருட்களுக்கும் ஆற்றலுக்கும் தொடர்பு இருக்கிறது.

வகுப்பு 2

சைவ சமயத்தின் கருப்பொருள் முப்பொருள் உண்மை. இவ்வுலகை பகுத்தறிந்து ஆராய்ந்து அடிப்படையான பொருட்களைக் கருதினால், அவை மூன்று. அவையாவன, பதி, பசு, பாசம் என வடமொழியிலும், இறை, உயிர், தளை என்று தீந்தமிழிலும் அறியப்படும். அந்த மூன்று அடிப்படைப் பொருளை அறிந்து உணர்ந்து அவற்றின் தன்மைகளை அறிந்து, நாம் யார், நமக்கு ஏன் பிறப்பு இருக்கிறது, நாம் எங்கே செல்ல வேண்டும் என்பதை உணர வைப்பதே சைவ சித்தாந்த நெறியின் குறிக்கோளாகும்.

வகுப்பு 3

முப்பொருள் உண்மை பற்றிய சில வேறு கருத்துக்களைக் கொண்ட அகப்புற சமயங்கள் எவை. அடுத்து முப்பொருளில் முதலில் இறைவனைப் பற்றி அறிவோம். பதியின் சொரூப நிலை யாது? தடத்த நிலை யாது? பதியின் குணங்கள் எவை?

வகுப்பு 4

இறைவன் ஏன் உலகை உருவாக்க வேண்டும்? ஆணவம் கன்மம் மாயை என்றால் என்ன? உலகினால், உயிர்கள் பெறும் நன்மை யாது ? இறைவன் எவ்வாறு உலகை உருவாக்குகிறான்?

வகுப்பு 5

36 தத்துவங்களாகிய கருவிகள் எங்கிருந்து பெறப்படுகிறது ? இந்த கருவிகளால் யாருக்கு என்ன பயன்? இந்த கருவிகள் எப்படி வந்தது? இதனால் பிரபஞ்சம் எவ்வாறு உருவானது?

வகுப்பு 6

உயிர்களாகிய நம்முடைய பல்வேறு நிலைகள் என்ன? இறைவன் செய்யும் ஐந்து தொழில்கள் எவை? இந்த தொழில்களால் யாருக்கு என்ன பயன்?

தேர்வு 1

வகுப்பு 7

சிவபெருமான் ஏன் நடனம் ஆட வேண்டும்? சிவபெருமானது திருநடனத்தினால் என்ன பயன் கிடைக்கும்? அவர் எங்கெல்லாம் திருநடனம் செய்வார்?

வகுப்பு 8

திருவைந்தெழுத்து அல்லது பஞ்சாக்கரம் என்று சொல்லக்கூடிய உயரிய மந்திரம் யாது?  இதை ஓதுவதால் நமக்கு என்ன நன்மை? எத்தனை வகையான மந்திரங்கள் உள்ளன?

வகுப்பு 9

சைவ சித்தாந்த சாத்திரங்களாக கருதப்படும் மெய்கண்ட சாத்திரங்களின் மொத்த நூல்கள் எத்தனை? அவை எவை? அவற்றை அருளிய குருமார்கள் யாவர்?

வகுப்பு 10

கன்மம் அல்லது கர்மா என்றால் என்ன? நல்வினை தீவினை செய்தால் கிட்டும் பயன் என்ன? சித்தாந்தம் கூறும் வினைக் கொள்கை யாது?

வகுப்பு 11

சந்தான குரவர்களாகிய குருமரா்கள் மெய்கண்டார் மற்றும் அருள்நந்திசிவம் ஆகியோரது வரலாறு.

வகுப்பு 12

நான் யார்? நான் ஏன் பிறந்தேன்? எனக்கு ஏன் துன்பங்கள் தொடர்ந்து வருகின்றன?

வகுப்பு 13

வாக்குகள் என்றால் என்ன? அவை எங்கிருந்து வருகிறது? சூக்குமை பைசந்தி மத்திமை வைகரி  ஆகிய வாக்குகளால் என்ன பயன்?

 

வகுப்பு 14

வீடுபேறு என்றால் என்ன? முக்தி என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? ஞானம் அடையும் வழி யாது? இருவினை ஒப்பு, மலபரிபாகம், சந்திநிபாதம் என்றால் என்ன?

வகுப்பு 15

சைவ சமய சந்தான குரவர்கள் மறைஞானசம்பந்தர் மற்றும் உமாபதிசிவம் ஆகியோரது வரலாறு.

வகுப்பு 16

நான் ஏன் பிறந்தேன்? தொடர் துன்பங்களிலிருந்து விடுபடுவது எப்படி? முக்தி அடைவது எப்படி? மீண்டும் பிறவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? சைவ நெறிகள் எவை? சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகியவை காட்டும் நெறி யாது?

வகுப்பு 17

இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே முக்தி அடைய முடியுமா? சீவன் முத்தர் என்றால் யார்? அவர்களின் தன்மை என்ன? திருவைந்தெழுத்து அல்லது பஞ்சாக்கரம் என்று சொல்லக்கூடிய மந்திரத்தின் சிறப்பு யாது ? யாரெல்லாம் திருவைந்தெழுத்து ஓதலாம்? திருவைந்தெழுத்து ஓதுவது எப்படி?

வகுப்பு 18

இறந்த பின் தான் முக்தியா? முக்தியடைந்த பின்னர் என்ன செய்வோம்?  வீடுபேறு சிவப்பேறு என்றால் என்ன? அணைந்தோர் தன்மை யாது?

வகுப்பு 19

சிவஞானபோதம் நூல் அமைப்பு மற்றும் நூற்பா 1, 2, 3 ஆகியவற்றின் பதவுரை.

வகுப்பு 20

சிவஞானபோதம் நூல் அமைப்பு மற்றும் நூற்பா 4, 5, 6, 7, 8 ஆகியவற்றின் பதவுரை.

வகுப்பு 21

சிவஞானபோதம் நூல் அமைப்பு மற்றும் நூற்பா 9, 10, 11, 12 ஆகியவற்றின் பதவுரை.

வகுப்பு 22

தாத்துவிகங்கள் என்றால் என்ன? இந்த பிரபஞ்சத்தில் எத்தனை புவனங்கள் இருக்கின்றன? சித்தாந்த தத்துவங்கள் எவற்றைக் கொண்டு நிரூபிக்கப்படுகின்றன?

தேர்வு 2

உலகின் இல்லங்கள் (உள்ளங்கள்) தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

 

Please rate this

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம். அவ்வினைக்கு இவ்வினையாம் Avvinaikku Ivviani 5/5 (2)

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்

இறைவனைக் காட்ட முடியுமோ என்றார். ஒழுக்கம் விலகினார். கண்டதையும் எடுத்துத் தின்றார். செய்யத் தகாதன செய்தார். என்னை விஞ்ச ஆள் இல்லை என்றார்.  நானே கடவுளும் என்று கூட சொல்லிப் பார்த்தார். எத்தனை ஆட்டம் போட்டார் ? இன்று உலக மக்கள் அனைவரையும் ஓட வைத்துக் கொண்டிருக்கிறது கண்களுக்குத் தெரியாத நுண்கிருமி. நிலநடுக்கம் வந்தது. பேரலை வந்தது. புயல் மழை வந்தது. வெள்ளம் வந்தது. இப்போது கிருமி வந்திருக்கிறது. இந்த பிரபஞ்சம் எத்தனை எத்தனை இன்னல்களைப் பார்த்து விட்டது? எத்தனை விலங்குகள் இங்கு காணாமல் போய்விட்டது?

இயற்கையோடு இயைந்து வாழ் என்று நமக்கு இறைவன் மணி அடித்துச் சொல்லிக் கொண்டே இருக்கிறான். நம் அறியாமையை அகற்ற ஒவ்வொரு பொழுதும் பாடு பட்டுக் கொண்டிருக்கிறான். ஆனால், நாமோ, எங்கோ சென்று கொண்டே இருக்கிறோம். எதுவுமே நடவாதது போல சென்று கொண்டே இருக்கிறோம். அவ்வப்போது நம்மை நம் கனவிலிருந்து எழுப்பி உண்மையை உணர வைக்கிறான். இன்பமும் துன்பமும்  கொடுத்து நம்மை வலுவுறச் செய்யவே தருகிறான். நம்மைப் பக்குவப் படுத்துகிறான்.

ஒவ்வொரு துன்பத்திலும் நம் அறிவை செயல்படுத்தி பாதுகாப்பாக இருக்கச் சொல்கிறான். இறைவன் என்னென்ன செய்வான் என்று நம்மால் கூறவே இயலாது. ஆனால், எல்லாமே நமக்கு நன்மை தருவதற்க்கே செய்வான் என்பது மட்டும் திண்ணம்.

கொரானா பரவாமல் தடுக்க அற்புதமான நடவடிக்கைகளை நம் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, அவர்கள் கொடுக்கும் விதிமுறைகளை அப்படியே கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அவ்வப்போது நன்றாக கழுவ வேண்டும். குறிப்பாக வெளியே சென்று வந்த பின் கை கால், முகம் அகியவற்றை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். உடல் நிலை சரியில்லாதது போல இருந்தால், முதலில் பயம் கொள்ளத் தேவையில்லை. மருத்துவரின் துணையை நாட வேண்டும். அரசாங்கம் கேட்கும் தகவல்களைக் கொடுக்க வேண்டும்.  பின்னர், இறைவனை வணங்க வேண்டும். அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது. ஆகவே, இறைவனை வணங்கி விண்ணப்பிப்பது மிகவும் முக்கியமானது. நம் கடமைகளை ஒழுக்கமாக சரியாகச் செய்துவிட்டு இறைவனிடம் விண்ணப்பிக்க வேண்டும். இறையருள் எதையும் செய்ய வல்லது.

நம் நாட்டிலும், உலகம் முழுவதிலும், கொரானா நுண்கிருமியின் பரவுதலைத் தடுக்கவும், அதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவும், மக்கள் இனிதாக தங்கள் வழக்கமான வாழ்விற்க்குத் திரும்பவும், நம் குருமார்கள் அருளிய இந்த பதிகத்தை ஒரு முறையாயினும் வாயார படிப்போம். திருஞானசம்பந்தர் தேவாரம்.

( Avviniakku Ivvinai )

அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் திருஞானசம்பந்தர் தேவாரம்  திருநீலகண்டப் பதிகம் விஷ ஜுரம், விஷக் கடி நீங்க, தொண்டையில் ஏற்பட்ட கோளாறுகள் நீங்க, எடுத்த காரியம் வெற்றி பெற, குரல் வளம் பெருக, செய்வினை பில்லி சூனியம் ஆகியவற்றால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, துணிவுடன் செயலாற்ற ஓத வேண்டிய பதிகம். திருச்சிற்றம்பலம்.

 

திருச்சிற்றம்பலம்.

Please rate this

சனிப் பிரதோஷத்தின் மகிமை. சிவாலயம் சென்று சிவபெருமானைத் தரிசனம் செய்வோம் 5/5 (2)

சனிப் பிரதோஷத்தின் மகிமை. சிவாலயம் சென்று சிவபெருமானைத் தரிசனம் செய்வோம்

தினமும் சிவாலயம் சென்று சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். அத்தகைய வாய்ப்பைப் பெற்றோர்கள், மிகவும் பாக்கியசாலிகள். ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது ஔவையார் வாக்கு. பிரதோஷ காலங்களில் சிவாலயம் சென்று வழிபடுவது இன்னும் சிறப்பாகும். சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் சனிப்பிரதோஷம் எனப்படும். தேய்பிறை சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி மகா பிரதோஷம் எனப்படும்.

*** பிரதோஷ வழிபாடு ***

திரயோதசி திதி என்பது நிறைமதி மற்றும் புதுமதி தினத்திலிருந்து பதிமூன்றாம் நாளாகும். இந்த தினத்தில் மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலமாகும். மிருத சஞ்சீவினி மந்திரத்திற்க்கு இணையான, நீண்ட ஆயுளைத் தர வல்ல, இறந்தவர்களை மீண்டும் உயிருடன் எழுப்ப வல்ல கடலுக்கு அடியில் இருக்கும் அமிர்தத்தை எடுக்க முயன்றனர் தேவர்களும் அசுரர்களும். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறு போல நாணாக்கி, பாற்கடலைக் கடைந்தார்கள். கடலில் இருந்து பல பொருட்கள் வந்தன. பின்னர் ஆலகால விடம் என்று சொல்லக்கூடிய கொடிய விடம் வந்தது. வாசுகி பாம்பும், கடைவதைப் பொறுக்க முடியாமல் விடத்தைக் கக்கியது. எல்லாவற்றையும் அழிக்க வல்ல கொடிய விடத்தைக் கண்டு அனைவரும் ஓடினர். தேவர்கள் அனைவரும் கயிலாயம் சென்று சிவபெருமானிடம் தங்களை ஆலகால விடத்திலிருந்து காக்குமாறு வேண்டிக் கொண்டனர்.

*** திருநீலகண்டம் ***

இந்த ஆலகால விடத்தை எதிர் கொள்ளும் சக்தி இறைவனாகி சிவபெருமான் ஒருவனுக்குத் தான் உண்டு. வேறு எவருக்கும் அந்த சக்தி இல்லை. ஆகையால், சிவபெருமானிடம் அனைவரும் சென்று தங்களைக் காக்குமாறு வேண்டிக் கொண்டனர். சிவபெருமானுக்கு அருகிலேயே இருந்து திருத்தொண்டு செய்து வரும் சுந்தரரை அந்த விடத்தை எடுத்து வரும் படி கட்டளையிட்டார் சிவபெருமான். சுந்தரரோ, அத்தனை விடத்தையும் ஒரு சிறு பந்து போல உருட்டி சிவபெருமானிடம் கொடுத்தார். அந்த விட பந்தை சிவபெருமான் வாங்கி வாயில் போட்டு உண்டார். இதைக் கண்டு பயந்து போன பார்வதி தேவியார், அகில உலகங்களையும் விடத்திடமிருந்து காக்கும் பொருட்டு,  அந்த விடமானது கழுத்திலேயே இருக்கும் வண்ணம், சிவபெருமானின் கழுத்தை சற்றே இறுக்கிப் பிடித்தார். இதனால், சிவபெருமானின் கண்டத்திலேயே அந்த நஞ்சு தங்கி, அகில உலகங்களையும் காத்தது. சிவபெருமானின் கழுத்து நீல நிறத்தில் மாறியதால், திருநீலகண்டம் என்ற பெயரையும் சிவபெருமான் பெற்றார். பின்னர் சிவபெருமான் தாண்டவம் ஆடினார்.

சிவபெருமான் அன்று உலகங்களைக் காத்திராவிடில், இன்று இந்த பூமியும், நாமும் உயிரோடு இல்லை. சிவபெருமானுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்க நாம் அனைவரும் கடமைப் பட்டிருக்கிறோம். அவ்வாறு நன்றி சொல்லவே பிரதோஷ வழிபாடு செய்கிறோம்.

*** சனிப் பிரதோஷ மகிமை ***

சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் சனிப்பிரதோஷம் எனப்படும். இந்த பிரதோஷ காலத்திலே சிவபெருமான் நடனமாடுவதாக ஐதீகம். இதனால், இதைக் காண அனைத்து தேவர்களும் ரிஷிகளும் ஆலயம் வருவார்கள். இந்த பிரதோஷ வேளையிலே, நாமும் சிவாலயம் சென்று சிவபெருமானைத் தரிசித்தால் எண்ணற்ற பலன்களைப் பெறலாம். தேய்பிறையில் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம், சனி மகா பிரதோஷம் எனப்படும்.

ஒவ்வொருவர் ஜாதகத்திலும், அதாவது வாழ்கை அமைப்பிலும் குறைந்தது நான்கு தோஷங்களாவது இருக்கும். இந்த தோஷங்கள் அனைத்தும் சனிப் பிரதோஷ வழிபாடு செய்வதால் நீங்கி விடும்.

சனிப் பிரதோஷம் சர்வ பாவ விமோட்சனம்

என்பது பழமொழி. சிவபெருமானையும் நந்தியம்பெருமானையும் வணங்க, நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும். பிரதோஷ வழிபாட்டால், அனைத்து தோஷங்களும் பாவங்களும் நீங்குவது மட்டுமின்றி, சகல நன்மைகளும் உண்டாகும். பொதுவாக பிரதோஷ காலத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்தால், ஓராண்டு சிவாலயம் சென்று வழிபட்ட பலன்கள் கிடைக்கும். சனிப் பிரதோஷம் அன்று வழிபடுவதால், ஐந்து ஆண்டுகள் வழிபாடு செய்த பலன்கள் கிடைக்கும்.

ஏழரை சனி, கண்ட சனி, அட்டம சனி என்று சனியினால் ஏற்படும் தொல்லைகள் குறைந்து நீங்கும். ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியும், பன்னிரு திருமுறைகளை ஓதியும், சகல வாத்தியங்களுடன் இணைந்து சிவபெருமானை வழிபட்டால், அனைத்து நன்மைகளும் வந்து சேரும். சிவபெருமானிடம் நேரடியாக உபதேசம் பெற்றவர் நந்தியம்பெருமான். இவர் 64 கலைகளுக்கும் குருவாக விளங்குகிறார். வேத ஆகமங்களை நமக்கு அருளிச் செய்வதால், நமக்கு சந்தேகங்கள் நீங்கி, ஞானம் பெருகும். பசும்பால், சங்குப்பூ, வில்வ இலைகள் ஆகியவை கொண்டு வழிபட்டால், எல்லா சாபங்களும் நீங்கும். பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகம் செய்துப் பின்னர், வில்வம், அரளி, தாமரை, மல்லிகை ஆகிய மலர்களால் அருச்சனை செய்து தீபாராதனை நடைபெறும்.

சனிப்பிரதோஷம் அன்று மறவாமல் சிவாலயம் செல்வோம். அபிஷேக பொருட்களை அளித்தும், அபிஷேகம் செய்தும், ஐந்தெழுத்து, திருமுறைகள் ஓதியும் வழிபடுவோம். மிகுந்த திருவருளோடு பாவங்கள் நீங்கப் பெற்று, சகல நன்மைகளைப் பெறுவோம். திருச்சிற்றம்பலம்.

 

 

Please rate this

இந்த கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளுக்கு சமய வகுப்பு பாடங்கள் சொல்லிக்கொடுங்கள் No ratings yet.

இந்த கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளுக்கு சமய வகுப்பு பாடங்கள் சொல்லிக்கொடுங்கள்

நம் பண்பாடு, சமயம், மொழி ஆகியவற்றை நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரின் தலையாய கடமை. கடந்த 60 ஆண்டுகளில், திராவிட அரசுகள், நம் மாண்பு மிக்க வரலாற்றையும், பண்பாடுகளையும், உலகின் மகுடமாக விளங்கும் நம் சமய அடிப்படை செய்திகளையும் நம் பாட நூல்களிலிருந்து அகற்றிவிட்டார்கள். அவற்றை நம் குழந்தைகட்டு சொல்லிக் கொடுக்கும் தலையாய கடமை தற்போது ஒவ்வொரு பெற்றோரிடமும் உள்ளது. நம் குழந்தைகள் ஆங்கிலம் கலவாத அருமையான தமிழ் மொழி பேச வேண்டும். நம் சமயத்தின் அடிப்படை அறிந்து கொண்டு நம் தமிழ் மொழி, சமயம், பண்பாடு ஆகியவற்றைத் தங்கள் வாழ்வில் கடைப்பிடித்து காத்து நிற்கும் வீரர்களாக வளர வேண்டும். தேவாரம் திருவாசகம், வாயார இறைவன் முன் பாட வேண்டும். தினமும் கோவிலுக்குச் செல்ல வேண்டும். குறைந்த பட்சம் வாரம் ஒருமுறையாவது கண்டிப்பாக திருக்கோவில் தரிசனம் செய்ய வேண்டும். நம் திருவிழாக்களையும் பண்டிகைகளையும் நன்றாகக் கொண்டாட வேண்டும். இதற்கெல்லாம் உறுதுணையாக பெற்றோர்களாகிய நீங்களே திகழ வேண்டும்.

உங்கள் வீடுகளுக்கு அருகில் இது போன்ற வகுப்பு நடைபெறவில்லை என்றால், நீங்களும் உங்கள் தெருவில் அல்லது உங்கள் ஊரில், பகுதியில், அடுக்ககத்தில் இருக்கும் பெற்றோர்கள் இணைந்து உங்கள் அருகில் உள்ள கோவிலிலோ, அல்லது ஒருவர் வீட்டிலோ, ஒரு வகுப்பை ஏற்படுத்தி குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்துப் பாருங்கள். அதை ஒவ்வொரு ஆண்டும் விடவே மாட்டீர்கள்.

அவ்வகையிலே, இந்த ஆண்டு வரும் கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளுக்கு திருமந்திரம் உபதேசம் பகுதியில் உள்ள 30 பாடல்களும் சொல்லிக் கொடுங்கள். மனனம் செய்து எழுதச் சொல்லுங்கள். அந்த பாடல்களை இங்கே. கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை இதை படித்து மனனம் செய்து ஒப்புவிக்கலாம், அல்லது எழுதிக் காட்டலாம்.

2020 கோடை விடுமுறை வகுப்பு — திருமந்திரம் உபதேசம் 30

இந்த பிரதியை அச்சிட்டுக் கொடுத்து படித்து மனனம் செய்யச் சொல்லுங்கள். ஐந்து ஐந்து பாடல்களாக மனனம் செய்து எழுதியோ ஒப்புவித்தோ காட்டலாம்.

முந்தைய ஆண்டு கோடை விடுமுறை வகுப்பு பாடத் திட்டம் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

எல்லாக் குழந்தைகளும் படிக்கும் வண்ணம் அடிப்படைப் புத்தகங்கள் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

சைவ சமயம் பற்றிய அடிப்படை செய்திகள் படித்து அறிய இங்கே சொடுக்கவும்.

சிறியவர்களும் பெரியோர்களும் சைவ சமய அடிப்படை நுட்பம் அறிந்து கொள்ள கீழேயுள்ள வீடியோ காணவும்.

 

 

Please rate this

காசி விசுவநாதரின் தரிசனம் நேரலையில் காணுங்கள் 5/5 (1)

காசி விசுவநாதரின் தரிசனம் நேரலையில் காணுங்கள்.

எம்பெருமான் காசி விசுவநாதரின் திருவருளாலும், அக் கோவில் நிர்வாகத்தின் கருணையாலும், எங்கிருந்தும் காசி விசுவநாதரை நேரலையில் காணும் பாக்கியம் கிடைக்கும் அதிசய அற்புதமான காலம் இது. கண்டு மகிழுங்கள். சிவசிவ.




காசி விசுவநாதர் ஆலயத்தின் அதிகாரப்பூர்வ தளம்:

https://shrikashivishwanath.org/

Please rate this

காசி விசுவநாதர் ஆலயத்தைச் சுற்றி 30 க்கும் மேற்பட்ட பழம்பெரும் கோவில்கள் கண்டுபிடிப்பு No ratings yet.

காசி விசுவநாதர் ஆலயத்தைச் சுற்றி 30 க்கும் மேற்பட்ட பழம்பெரும் கோவில்கள் கண்டுபிடிப்பு

மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கனவுத் திட்டமானது, காசி விசுவநாதர் ஆலயத்தில் இருந்து கங்கையின் கரை வரை செல்ல நேரடியாக பாதை அமைக்கும் காசி-விசுவநாதர் சாலை திட்டமாகும்.  சென்ற 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு துவங்கிய இந்த திட்டத்தைச் செயல் படுத்த, கோவிலைச் சுற்றியுள்ள வீடுகளும் நிலங்களும் கையகப்படுத்தும் பணி துவங்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து அதில் இருந்த வீடுகளை இடிக்கும் பணியும் நடைபெறுகிறது.

இடிக்கப்பட்ட வீடுகளுக்கு உள்ளே பழம்பெரும் கோவில்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். ஒன்று இரண்டு அல்ல, மொத்தம் 43 கோவில்களை அடையாளம் கண்டிருப்பதாக தொல்லியல் துறையினர் (ASI) தெரிவித்துள்ளனர். இந்த வீடுகளை இடிக்கும் பணிகளின் போது, இது வரை 30 க்கும் மேற்பட்ட கோவில்கள் வெளி வந்துள்ளன. இந்த கோவில்கள் அனைத்தும் மிகவும் பழமையானதாகவும், கந்த புராணத்தோடு தொடர்புடையதாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.

திட்டமிடப்பட்டுள்ள முதலாவது வாயிலின் அருகே பழம்கோவில் துந்திராஜ் விநாயகர் ஆலயம்  என்ற கோவிலை புதியதாக கண்டுபிடித்திருப்பதாக இந்த காசி-கங்கை கரை சாலை திட்டத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி திரு விஷால் சிங் தெரிவித்துள்ளார். இத்தனை கோவில்களும் இது நாள் வரை, காசி விசுவநாதர் ஆலயத்தைச் சுற்றியுள்ள வீடுகளுக்குள் மறைந்து இருந்துள்ளன. புதியதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ள இந்த 30 க்கும் மேற்பட்ட கோவில்களை அனைத்தும் இந்த திட்டத்தின் கீழ் புணரமைக்கப்படும்.

காளி மாதா கோவில்,  திரு கோனேஷ்வர் மகாதேவர் ஆலயம், திரு ராணி விஜயராஜ் மகோய்பா கோவில், திரு பிரமோத் விநாயகர் கோவில், திரு ருத்ரேஸ்வர் மகாதேவர் ஆலயம், ஷீட்லா மாதா கோவில் ஆகிய கோவில்கள் கண்டெடுக்கப்பட்ட கோவில்களில் மிகவும் முக்கியமானவை. இவை அனைத்தும் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சொந்த தொகுதியான வாரணாசில் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

காசி விசுவநாதர் ஆலயத்தைச் சுற்றிய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அதைச் சுற்றிக் கிடைத்துள்ள பழம்பெரும் கோவில்களை அழகாகப் புணரமைத்தும், விசுவநாதர் ஆலயத்திலிருந்து கங்கையின் கரை வரை அழகான நடைபாதை அமைத்தும் இந்த கோவில் மிக அழகாகவும், புதுப் பொலிவுடனும், புனிதத் தன்மையுடனும் மின்னுவதைக் காணும் நாளை மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Please rate this

எறிபத்தர் நாயனார் வரலாறு நமக்குக் காட்டும் வாழ்கை நெறிகள் சில 4.5/5 (4)

எறிபத்தர் நாயனார் வரலாறு நமக்குக் காட்டும் வாழ்கை நெறிகள் சில

பகுதி 1  எறிபத்தர் நாயனார் வரலாற்றுச் சுருக்கம்

பகுதி 2:

எறிபத்த நாயனார் வரலாறு நமக்குக் காட்டும் வாழ்கை நெறிகள் சில

1. தினமும் அதிகாலையில் குற்றம் இல்லாத, மலரும் தருவாயில் இருக்கும் பூக்களை மாலையாகத் தொடுத்து, இறைவனுக்குச் சாற்றிய பின்னர் தான், தாம் உணவு உண்பதையே வழக்கமாகக் கொண்டவர்கள் நம் சிவனடியார்கள். சிவகாமியாண்டாரும் இந்த வழக்கத்தைக் கொண்டவர் என்பதை இந்த வரலாறு காட்டுகிறது. வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவர் வரலாறு, முருக நாயனார் வரலாறு என்று பல வரலாறுகள் இதை நமக்கு உணர்த்துகின்றன. புறம் மற்றும் அகத்தூய்மையோடு மலர்களைப் பறிக்க வேண்டும் என்பது மிகத் தெளிவு. முகத்தைத் துணியினால் கட்டுவது அசுத்தக் காற்று பூக்களின் மீது படாமல் இருக்கவும், எதேச்சையாக இருமினாலோ, தும்மினாலோ, நம் எச்சில் நீர் இறைவனுக்குச் சாற்றுப்போகும் மலர்களில் பட்டுவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார்கள். மலர் தானே, பறித்து மாலையாக்கி போட்டால் போச்சு என்று எளிதாக எடுத்துக் கொள்ளாமல், தாமே தம் நந்தவனங்களில் பறிந்து மாலை தொடுத்து அதை இறைவனுக்குச் சாற்றும் போது கிடைக்கும் பேரானந்தத்தை அனுபவித்தால் தான் புரியும். புறத்தூய்மை போலவே, அகத்தூய்மையும் முக்கியம். ஐந்தெழுத்து மந்திரம் சொல்லிக் கொண்டு பறித்தல் மிக உன்னதம்.

2. பட்டத்து யானையும் பாகர்களும் இறந்ததைக் கேள்வியுற்று, சிறு படையோடு வந்த மன்னன், அந்த இடத்தில் சிவனடியார் ஒருவர் நிற்பதைக் கண்டு, இவர் இதைச் செய்திருக்க மாட்டார் என்று மிக உறுதியுடன் இருந்தான். அடியார்கள் மீது தான் எத்தனை நம்பிக்கை?

3. எறிபத்தர் தான் இந்த யானையையும் பாகர்களையும் கொன்றார் என்ற செய்தி கேட்டு, அவரிடம் பேசுவதற்க்கு முனைந்த மன்னன், முதலில், தனது படைகளையும் மற்று அனைவரையும் நிறுத்தி விட்டு, தானும் முதலில் வலிமை வாய்ந்த குதிரையிலிருந்து கீழே குதித்தான். ஒரு சிவனடியாரை எவ்வாறு அணுக வேண்டும், அவரிடம் எவ்வாறு பேச வேண்டும் என்று நுட்பம் இதில் நிறைந்துள்ளது. தான் இந்த நாட்டிற்க்கே மன்னன் என்ற போதும், அவன் குதிரையிலேயே அருகில் சென்ற விசாரிக்கவில்லை. சிவ அடியாரைக் கண்டவுடன் முதலில் கீழே குதித்து பணிவோடு எறிபத்தரை நெருங்கி வணங்கினான். எத்தனை உயர்ந்த பண்பு? சிவனடியார்களிடத்து நாம் எவ்வாறு அணுக வேண்டும், அவர்களிடம் எவ்வாறு பணிவுடன் வணக்கம் செய்ய வேண்டும் என்ற மிக உயர்ந்த பண்பை இங்கு நுட்பமாக நோக்க வேண்டும்.

4. எறிபத்தர் தான் யானையையும் பாகர்களையும் கொன்றார் என்று உறுதிபடக் கேட்ட பின்னர், அவர் சிவனடியார் வேடம் தரித்திருந்தமையால், அந்த சிவனடியார் கண்டிப்பாக தவறு செய்திருக்க மாட்டார் என்று ஆயிரம் சதவிகிதம் உறுதி எடுத்துக் கொண்டான் மன்னன். யானை ஏதோ தவறு செய்யப் போய் தான் இந்த அடியார் யானையையும் பாகர்களையும் கொன்றிருக்க வேண்டும் என்று முழுமையாக முடிவு கொண்டான். சிறு சந்தேகம் கூட அவருக்கு வரவில்லை. அது பற்றி எந்தவித விசாரணையும் செய்யவில்லை. எத்தனை பெரிய பண்பு இது ? இதற்கு காரணம் என்ன என்று நாம் இன்னும் சற்று ஆழமாக சிந்தித்தால், சிவனடியார் வேடம் தரிந்திருந்தவர்கள் அத்தகைய உயர்ந்த பண்புகளோடு வாழ்ந்து காட்டியிருந்தனர். அனைத்து சிவனடியார்களும் சிறிது குற்றமும் இல்லாமல் நெறியின் வழிப்படி வாழ்ந்தார்கள். உலகினர் யாவரும் போற்றும் படி பிழையின்றி வாழ்ந்தனர். இதுவே அதற்கான காரணம்.

5. எறிபத்தர் நிகழ்ந்ததைக் கூறக் கேட்ட மன்னர், சிவனடியார் வருந்தும் படி இந்த நிகழ்வு நிகழ்ந்து விட்டதே என்று மனம் வருந்துவது எத்தனை உயரிய புரிதலும், இறைவர் பால் அன்பும் இருக்க வேண்டும்? இப்படி நிகழ்ந்து விட்டதா, சரி, பரவாயில்லை. நீங்கள் கிளம்புங்கள் என்று அதை முடித்துவிடாமல், இந்த நிகழ்வுக்கு, மன்னராகிய தானும் ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருப்பதை நினைந்து, என்னையும் கொல்லுங்கள் என்று எறிபத்த நாயனாரிடம் கேட்பது, சாதாரண மனிதர்களால் நினைத்துக் கூடப் பார்க்க இயலாத சிந்தனையும் செயலும் ஆகும். சிவபெருமான் மீதும், சிவனடியார்கள் மீதும் எத்தனை அன்பு கொண்டிருந்தால், இறைவனின் திருவருள் நம்மை இப்படி சிந்திக்க வைக்கும்? (என் கண்களில் நீர் பெருகி வழிந்தோடுகிறது.) புகழ்த்துணையாரான இவரும் ஒரு நாயன்மார் அன்றோ?

6. தன்னிடம் வாளை நீட்டி தன்னைக் கொல்லச் சொல்லும் மன்னரிடம், தயங்கி, இன்னும் கொஞ்ச நேரம் விட்டால், மன்னர் தானே தம்மை மாய்த்துக் கொள்வார் என்று பயங்கொண்டு, அந்த வாளை வாங்கி, அவருக்கு முன்பு நாம் மாண்டு விட வேண்டும் என்று தன் கழுத்தை அறுப்பது எத்தகைய செயல்? இன்றைய போர்க்களத்தை சற்றே சிந்தித்துப் பாருங்கள். மனிதன் உயிருக்குப் பயந்து எப்படி ஓடி ஒளிகிறான்? நாயன்மார்கள் அனைவருமே தங்கள் உயிரைத் துச்சமென நினைத்தவர்கள். தங்களால் ஒரு துன்பமோ, ஒழுக்கக் கேடோ வரவிருந்தால், தங்கள் உயிரை உடனே மாய்த்துக் கொள்ளத் துணிந்துவிடுவார்கள்.

7. எறிபத்த நாயனார் செய்த சிவ தொண்டு யாது? சிவனடியார்களுக்கு உதவுவதும், அவர்களுக்கு ஆபத்துக் காலத்தில், உதவி செய்து, ஆபத்தை நீக்குவதும், அந்த ஆபத்தை விளைவித்தரை மழுவால் கொல்வதும் ஆகும். ஒருவரைக் கொன்றால், பிரம்மகத்தி தோஷம் வந்துவிடுமே என்றெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. ஆபத்தை விளைவித்தவர் பிராமணராகவோ (இறை தொண்டு செய்பவர்), தபோதனராகவோ (தவம் உடைய முனிவர்கள்) இருந்தால், அவர்களைக் கொல்லாமல், பிற வழிகளால் அவர்களை வெல்ல வேண்டும். சிவதொண்டு செய்வர்களுக்கு தீங்கு செய்பவர்களைத் தடுக்கவில்லை என்றால், தொண்டு செய்பவர்கள் தொடர்ந்து அந்த தொண்டை செய்ய இயலாத நிலை ஏற்படும். இது சிவ தொண்டு செய்வதற்க்கான தடையாகும். இந்த தடையை எவ்வாறாயினும் நீக்க வேண்டும். இதனால் ஒருவரைக் கொல்ல நேரிடும் போது, அவர் செய்யும் கொலை தன்னுடைய சுயநலத்திற்க்கோ, தனக்கோ, தன்னைச் சார்ந்தவர்களின் நலனுக்கோ செய்யப்படவில்லை. அது முழுக்க முழுக்க இறை பணி தடையில்லாமல் நடப்பதற்க்குச் செய்யப்படும் கொலையாகும். இந்த கொலை செய்வதால், சிவ தொண்டு தடைபடாமல் நடக்கும், வளரும். இதனால் இறுதியில் கிடைப்பது சிவபுண்ணியமே. ஆகவே, சிவபுண்ணியத்தின் பொருட்டு செய்யப்படும் கொலைக்கும் சிவபுண்ணியமே கிடைக்கும். இந்த உண்மையை எறிபத்த நாயனார் வரலாறு மட்டுமல்ல, சண்டிகேஸ்வரர் வரலாறு, கோட்புலி நாயனார் வரலாறு என்று பல வரலாறுகள் நமக்கும் உணர்த்துகின்றன. பாதகத்துக்குப் பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே என்பார் சேந்தனார். சிவ புண்ணியம் செய்வதற்க்கு உரிய தடையாக இருப்பவரை நீக்கா விட்டால், இதைப் பார்த்து இன்னும் நிறைய பேர் அந்த தடைகளைச் செய்ய முயல்வர். தடைகள் வளரும். ஆகவே, சிவ புண்ணியத்திற்க்கான தடைகளை நீக்குவதும் சிவ புண்ணியமே. கொலை களவு ஆகியன உலகத்தாரால் நீக்கப்பட்டாலும், அவை நன்மை பயக்கும் இடத்தில் அவை புண்ணியத்தைத் தருகின்றன. இதை நம் சாத்திர நூல்களும் உறுதி படுத்துகின்றன.

ஒலி/ஒளி வடிவத்தில்:

Please rate this

சைவசமயம்.in சைவ சமயத்திற்க்கான சிறப்பு செய்திகள். தினம் வாருங்கள் 5/5 (1)

சைவசமயம்.in சைவ சமயத்திற்க்கான சிறப்பு செய்திகள். தினம் வாருங்கள்

Please rate this

இறைவனுக்கு தீப ஆராதனை காட்டப்படுவதன் தத்துவம் என்ன? ஏன் தீபம் தொட்டு வணங்குகிறோம்? 5/5 (2)

இறைவனுக்கு தீப ஆராதனை காட்டப்படுவதன் தத்துவம் என்ன? ஏன் தீபம் தொட்டு வணங்குகிறோம்?

கோவிலுக்குச் சென்று இறைவனை தரிசனஞ் செய்யும் காலத்தில், சிவாச்சாரியார் மந்திரங்களும் திருமுறைகளும் ஓதி இறுதியில் கற்பூரம் அல்லது விளக்கு தீப வழிபாடு செய்கிறார். அந்த தீபத்தை இறைவனைச் சுற்றிக் காட்டுகிறார். அந்த நேரத்தில் பக்தர்கள் அனைவரின் கவனமும், சிந்தனையும் ஒருங்கே இறைவனை நினைந்து வேண்டிக்கொள்ளும். தேவையில்லாத சத்தங்கள் ஒடுங்க, சங்கொலி, மணி, வாத்திய ஒலிகளும் மிகுந்து ஒலிக்கின்றன. பின்னர், அந்த தீபத்தை நமக்குக் காட்டி, நாமும் அதைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்கிறோம். இந்த தீபத்தின் தத்துவம் என்ன?

இதை உணர்ந்து கொள்ள, ஒரே ஒரு விடயம் நாம் அனைவரும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இறைவன் என்பவன் ஒருவனே. அவன் பிறப்பு இறப்பிற்க்கு அப்பாற்பட்டு, அவனுடைய உண்மையான சொரூப நிலையில் கண்களுக்குத் தெரியாத எந்த நிறமும் உருவமும் இல்லாத நிலையில் இருந்து நாம் இறைவனை அறியும் பொருட்டு, கீழிறங்கி வந்து, அருவம், அருவுரும், உருவம் ஆகிய நிலையை எடுக்கிறான். அவ்வகையில் அவன் சோதியாக இருக்கிறான். கண்களுக்குப் புறத்தே அமையும் தீப சோதியாகவும், உள்ளே உள்ளத்தின் உள்ளே இருளைப் போக்கி ஞாயிறு போன்று எழுகின்ற சோதி உருவாகவும் இறைவன் இருக்கிறான்.

எனவே, நாம் கோவில்களில் நேரடியாக கண்களில் காணும் அருவுருவ நிலையான சிவலிங்க வடிவம் அல்லது உருவ வடிவமான நிலையில், அம்மைய்ப்பராக, தென்முகக் கடவுளாக, நடராசனாக, சந்திரசேகரராக, சோமஸ்கந்தராக என்று பல்வேறு உருக் கொண்டு இருந்தாலும், அவனுடைய உண்மையான நிலையான சோதி வடிவத்தை நாம் உணர்ந்து கொண்டு அதை நம் மனக் கண்களில் கண்டு போற்றித் துதிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே தீப ஆராதனை காட்டப்படுகிறது.

சோதி வடிவாக இருக்கும் இறைவனை நாம் வணங்கி, அவனது அருளை நாம் கண்களில் ஒற்றிக் கொண்டு நன்றி சொல்கிறோம். இன்னும் ஆழமாக இதை சிந்திக்க, இந்த காணொளி உதவும்.

Please rate this

அடியாரா? பக்தரா? வித்தியாசம் என்ன? அடியாருக்கு இலக்கணம் உண்டா? 4.75/5 (4)

அடியாரா? பக்தரா? வித்தியாசம் என்ன? அடியாருக்கு இலக்கணம் உண்டா?

நாம் பிறந்து முதலில் உலகியலை நன்கு பழகுகின்றோம். அது தான் நம் உடம்பை வளர்க்கவும், வயிற்றுப் பசியைப் போக்க நல்ல வேலையையும் கொடுக்கிறது. பின்னர், நம் பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கும் பக்திப் பாடல்களைக் கேட்கிறோம், பாடுகிறோம். நம் தேவைகளை தேவாலயம் சென்று முறையிடுகிறோம். இறைவன் இருக்கிறார் என்பதை நம் பெற்றோரும், நண்பர்களும் கூறுவதால், அதை நம்புகிறோம். அவர்கள் செய்யச் சொல்வதை அப்படியே செய்கிறோம். நமக்கு இறைவன் திருவுருவத்தையும் அவனுக்கு செய்யும் பூசைகளையும் மிகவும் பிடித்து விடுகிறது. இறைவனை நேசிக்க ஆரம்பிக்கிறோம்.

இன்னும் நம் அறிவு முதிர்வு அடையும் போது, இறைவனைப் பற்றியும் இந்த பிரபஞ்சம் பற்றியும் நாமே ஆராய்ச்சி செய்கிறோம். பெரியோர்களும் ஞானிகளும் பேசுவதைக் கேட்டு அறிகிறோம். இறைவன் இல்லாமல் இங்கு ஓர் அசைவும் அசையாது என்ற உண்மையை நாமே நம் ஆய்வின் மூலமாக அனுபவப்பூர்வமாக உணர்கிறோம். அப்போது தான் இறைவன் இருப்பதையும், அவன் எப்படியெல்லாம் இருக்கிறான், எப்படியெல்லாம் பக்தருக்கு அருள் புரிகிறான் என்பதையெல்லாம் நாமே நேரடியாக உணர ஆரம்பிக்கிறோம். நம் மனதிலே அடுக்கடுக்கான கேள்விகள். அனைத்திற்க்கும் பதில் நாடி கிடைத்தும் விடுகிறது. இறைவன் மீது அன்பு பெருகுகிறது. நமக்கும் அவனுக்கு உள்ள தொடர்பே நிரந்தரம், மற்று எல்லாம் சில காலமே என்பதை உணர்ந்து, இறைவனுக்கு அடியவனாக நம்மைக் கருதி, சிவப் பணிகளைச் செய்கிறோம்.

இன்னும் சிலருக்கோ சிறுவயதிலிருந்து அதிதீவிர அன்பும் பக்தியும் வந்து விடுகிறது. ஒவ்வொருவருக்கும் எப்போது பக்தி வரும், அன்பு பெருகும் என்று நாமறியோம். இறைவனே அறிவார். அனைத்திற்க்கும் அடிப்படையாக இருப்பது, இறைவனை உணர்வதும், அவன் மீது அன்பு பெருகுதலும் தான். இறைவனை உணர்ந்து நம்மை முழுமையாக இறைவனிடம் கொடுத்து விடுவதைத் தான் இறைவன் ஆட்கொண்டுவிட்டார் என்கிறோம். நம் குருமார்கள் சொல்லிய நெறிகளின் படி வாழ்கிறோம். அவ்வாறாக, நமக்கும் இறைவனுக்கு நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, அவன்பால் அன்பு செலுத்துகிறோம். நம் அடிப்படை உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றுக்கு நாம் நம் சமுதாயத்தைச் சார்ந்து வாழ்கிறோம். அந்த சமுதாயமே நமக்குக் கோவில் கட்டியுள்ளது, தேர் கட்டமைத்துள்ளது, குளத்தை சீர் படுத்தி வைத்திருக்கிறது. ஆங்கே, இறைவனுக்கு அடியார்கள் எண்ணற்றவர்கள் இருக்கின்றார்கள். நல்ஞானம் அருளும் குருமார்களும் இருக்கிறார்கள்.

அடியார்களின் உள்ளத்தில் இறைவன் உறைகிறான் என்பதை உணர்ந்து அடியார்களை வணங்குகிறோம். நமக்கு வழிகாட்டும் நெறியைக் கடைப்பிடித்து வாழ்கிறோம். அவ்வாறு வாழ்பவர்களின் இலக்கணமாக பத்தைக் குறிப்பிடுகிறார்கள். அதாவது அக இலக்கணம் பத்து. புற இலக்கணம் பத்து. இதைத் திருமுறைகளும் பிற நூல்களும் சொல்கின்றன.

பத்து கொலாம் அடியார் செய்கை தானே – திருமுறை 4:18:10

பத்தாம் அடியார்க்கோர் பாங்கனுமாம் – திருமுறை 6:15:2

அடியார்களின் புற இலக்கணம் பத்து. அதாவது புறத்தே காணுமாறு அமையும் இலக்கணம் பத்து. இவற்றை உபதேச காண்டம் என்ற நூல் தெளிவுபடுத்தியுள்ளது.

1) திருநீறும் கண்டிகையும் அணிதல்
2) பெரியோரை வணங்குதல்
3) சிவனைப் புகழ்ந்து பாடுதல்
4) சிவநாமங்களை உச்சரித்தல்
5) சிவபூசை செய்தல்
6) சிவபுண்ணியங்களை செய்தல்
7) சிவபுராணங்களை கேட்டல்
8) சிவாலய வழிபாடு செய்தல்
9) சிவனடியாரிடத்தன்றி உண்ணாமை
10) சிவனடியார்க்கு வேண்டுவன கொடுத்தல்

அக இலக்கணம் என்பது அடியார்களின் மனத்துள்ளேயும் உணர்வுள்ளும் ஏற்படும் மாற்றங்களாகும். சிவபெருமானது புகழைக் கேட்குங்கால்,

1) மிடறு விம்மல் (மிடறு-கழுத்து)
2) நாத்தழுதழுத்தல்
3) இதழ் துடித்தல்
4) உடல் குலுங்கல்
5) மயிர் சிலிர்த்தல்
6) வியர்த்தல்
7) சொல்லெழாமை
8) கண்ணீர் அரும்புதல்
9) வாய்விட்டழுதல்
10) மெய்மறத்தல்

என்பனவாகும். சிவபெருமானைப் பற்றி நினைக்கும் போதும், கேட்கும் போதும், தரிசனஞ் செய்யும் போதும், இவை தானாக நிகழும்.

அடியார்கள் அனைவரும் பத்தர்களே. பத்தர் என்ற சொல்லும் அடியார் என்ற சொல்லும் மாறி மாறி திருமுறைகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இறைவனை உணரும் தொடக்க நிலையில் இருப்பவரை பக்தர் என்றும் இன்னும் ஆழச் சென்று சிவபெருமான் மீது அன்பு பெருக்கி, நெறியோடு வாழ்பவர் அடியார் என்று தோன்றினாலும், அனைத்தும் சிவன் பால் அன்பே. ஆகவே, நான் பக்தரா, அடியாரா என்ற ஆராய்ச்சியில் ஈடுபடாமல், நாயன்மார்களின் வரலாறுகளைத் தொடர்ந்து படித்தும், திருமுறைகளை தினம் ஓதியும், சிவ புண்ணிய செயல்களில் ஈடுபாடு கொண்டு செய்தும் வந்தால், அதுவே, இறைவன் திருவருளை நமக்கும் காட்டும்.

Please rate this

“சுவாமி பெயருக்கே அர்ச்சனை பண்ணிருங்க” என்று சொல்வது சரி தானா? சொல்லலாமா? 5/5 (3)

“சுவாமி பெயருக்கே அர்ச்சனை பண்ணிருங்க” என்று சொல்வது சரி தானா?

உங்கள் பெயர் குலம் கோத்திரம் சொல்லுங்கோ என்று சிவாச்சாரியார் கேட்டவுடன் தான் சிலருக்கு ஒன்றிரண்டு டக்குனு நியாபகம் வராது. சிலர் மிகச் சரியாக உடனே சொல்லிடுவாங்க. இன்னும் சிலர், இதை அச்சடித்து தங்கள் கைப்பையிலேயே வைத்திருக்கிறார்கள். இன்னும் சிலரோ, நம் பெயரைச் சொல்வதை விட, சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்வது சிறந்தது என்று முடிவுக்கு வந்து, சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்து விடுங்கள் என்கின்றனர்.

அர்ச்சனை என்பது யாது?

மனிதர்களுக்குப் பல குறைகள் உண்டு. பல குறிக்கோள்களும் உண்டு. இவற்றையெல்லாம் அடைவதற்க்கு இறைவனின் திருவருள் வேண்டும். ஆகவே, இறைவனிடம் அந்த எண்ணங்களைச் சொல்லி அதை நிறைவேற்றுமாறு விண்ணப்பம் செய்து கொள்வதே அர்ச்சனையாகும்.  அப்படியானால், இறைவனிடம் யாருக்கு இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்கிறோம் என்று சொல்ல வேண்டாமா? அதற்க்குத் தான் நம் பெயர், குலம் மற்றும் கோத்திரம். ஒவ்வொருவரையும் குறிப்பாக அடையாளப்படுத்துமாறு (Personal Identity) இருப்பது இந்த மூன்றும் தான். தங்களுடைய பெயரோடு ஊரையும் சேர்த்து சொல்வது மரபாக இருந்து வந்தது. இன்றும் பலர் தங்கள் பெயரோடு ஊரையும் சேர்த்துச் சொல்கின்றனர். அப்படி நம்மை அடையாளம் காட்டுவதற்கான பெயர், குலம் மற்றும் கோத்திரம் சொல்லி, இந்த விண்ணப்பத்தை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று நாம் இறைவனிடம் சொல்ல வேண்டும். நமக்கு மந்திரங்கள் தெரியாத காரணத்தினாலே, அந்த அர்ச்சகர் நமக்காக நம் பொருட்டு அந்த மந்திரங்களைச் சொல்லி சமர்ப்பிக்கிறார்.

இன்று தமிழில் அர்ச்சனை செய்யலாம். முறையாக பார்த்தால், நமக்கு நாமே தான் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆனால், அதற்கும் ஒரு ஆள் வைத்து செய்கிறோம், தவறில்லை. நாமே செய்வது சிறப்பு. அர்ச்சனை என்பது பாட்டேயாகும் என்பதை சுந்தரர் பெருமான் வரலாற்றில் உணர்த்துவதாக சேக்கிழார் மொழிகிறார். இறைவனைப் போற்றிப் பாடிவிட்டு நம் விண்ணப்பங்களையும் அதோடு சேர்த்து சொல்லுகிறோம். இதுவே அர்ச்சனையாகும்.

குறைகளும் குறிக்கோளும் உள்ள நாம் இறைவனிடம் விண்ணப்பம் செய்து அர்ச்சனை செய்கிறோம். இறைவன் பெயருக்கே அர்ச்சனை செய்வது என்றால் என்ன? இறைவன் தனக்கு என்று எந்த தேவையும் இல்லாதவன். அவனும் யாரிடமும் போய் எதையும் கேட்கும் அவசியமும் இல்லை. அப்படி என்றால், இறைவன் பெயருக்கு அர்ச்சனை செய்வது என்பது அர்த்தமற்றதாகும். நம்முடைய பெயைரை இறைவன் திருமுன் சொல்லி அவனைப் போற்றி, நம்முடைய விண்ணப்பங்களையும் அவனிடம் வைப்பதே அர்ச்சனையாகும். ஆகவே, அர்ச்சனை நம் பெயரைச் சொல்லியே செய்ய வேண்டும்.

இறைவனிடம் நமக்கு வேண்டியதைக் கேட்கும் போது நமக்கு சரி என்று தோன்றுவதைக் கேட்கிறோம். நம் ஆசைகளைச் சொல்கிறோம். ஆனால், நிஜ உலகில், அதுவே நமக்கு வேறு பிரச்சனைகளைக் கொண்டு வந்து தந்துவிடும். ஆகவே, நமக்கு என்ன சரியாக வேண்டும் என்பது பெரும்பாலும் நமக்கே தெரிவதில்லை. நம்மைப் பற்றி நமக்குத் தெரிவதை விட முக்காலமும் முழுவதும் அறிந்த இறைவனுக்கு நமக்கு என்ன வேண்டும் என்பதும், நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதும், நன்றாகவே தெரியும். ஆகவே, எனக்கு வேண்டியதை நீயே அறிவாய், அதை எனக்கு கொடுக்க விருப்பம் இருந்தால் அதைக் கொடுப்பா என்று இறைவனிடம் புத்திசாலிகள் வேண்டுவர். இதுவே ஒரு பாடலாக திருவாசகத்தில் இருக்கிறது.

வேண்டத் தக்கது அறிவோய் நீ,
    வேண்ட முழுவதும் தருவோய் நீ,
வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ
    வேண்டி என்னைப் பணிகொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்,
    யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,
    அதுவும் உன் தன் விருப்பு அன்றே!

இறைவா, எனக்கு என்ன கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பதை நீயே அறிவாய். அப்படி நீ எனக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்றால், உன் விருப்பப்படியே அதை கொடுப்பா என்று கேட்பது மிகவும் கெட்டிக்காரத்தனம். இதனால் தான், கோவிலுக்குச் செல்லும் பெரியோர்கள், தனக்கு இதைக் கொடு அதைக் கொடு என்று கேட்பதில்லை. உனக்கா ஏதாவது கொடுக்க வேண்டும் என்று தோன்றினால் கொடுப்பா என்று இறைவனைப் போற்றிப் பாடி மட்டும் வந்துவிடுவார்கள். எனவே, கோவிலுக்குச் சென்று நமக்காக விண்ணப்பம் வைக்கும் போது நம் பெயர் சொல்லியே அர்ச்சனை செய்ய வேண்டும். அதைவிட சிறப்பு, இந்த திருவாசக பாடலை மனனம் செய்து பாடிவிட்டு வருவது மிகவும் சிறப்பாகும்.

இறைவன் திருநாமம் சொல்லி எப்போது அர்ச்சனை செய்யப்படும் ?

பண்டிகை காலங்களிலும், திருவிழா காலங்களிலும், விஷேட நாட்களிலும் இறைவனுடைய திருநாமத்தைக் கூறி அர்ச்சகர்கள் அருச்சனை செய்வார்கள். உதாரணமாக, சுவாமி திருக்கல்யாணம், நன்நீராட்டு, பிரம்மோத்சவம் போன்ற காலங்களில் சுவாமி பெயரைச் சொல்லியே சங்கற்பம் செய்யப்படும்.

அர்ச்சனை சங்கல்பம் என்பதே, வேண்டுதல் உறுதிமொழி விண்ணப்பம் தான். விண்ணப்பத்தில் சுவாமி பெயரா? நம் பெயரா? இரண்டு பெயர்களுமே சொல்லி செய்யலாம். அது தவறல்ல. ஆனால்! நம் பெயரை எப்போது சொல்வது! சுவாமி பெயரை எப்போது சொல்வது என தெரிந்திருக்கவேண்டும். உதாரணமாக முருகனுக்கு அர்ச்சனை செய்கிறீர்கள் என கொள்வோம். உங்கள் பிறந்தநாள்; உங்கள் திருமணநாள்; உங்கள் பரீட்சை நாள்களில் உங்கள் பெயர் கூறி சங்கல்பம் செய்து கொள்ளுங்கள். கிருத்திகை, ஷஷ்டி,  விசாகம், பங்குனி உத்திரம் போன்ற முருகனுக்கு உகந்த விசேஷ நாட்களில் (நமது பெயர்களை க்கூறாமல்) அங்கு முருகன் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள். இதுதான் சரியான வழியாகும்.

திருச்சிற்றம்பலம்.

 

Please rate this

நாயன்மார்களின் நட்சத்திரமும் குருபூசையும் 4.67/5 (9)

நாயன்மார்களின் குருபூசை நட்சத்திரம்

திருச்சிற்றம்பலம்.

தாமாக அறியும் திறன் இன்றி, அறிவிக்க அறியும் திறனை உடைய நமக்கு, ஒவ்வொன்றையும் குருவாக ஒருவர் அறிவிக்க, அதைக் கற்று அறிகிறோம். அவ்வகையிலே, இறைவனை அறியவும் அவனின் திருவருளைப் பெறவும் நமக்கு வழி காட்டுபவர்களாய் இருப்பவர்கள் நம் குருமார்கள். சீடனுடைய அறியாமையை நீக்கி, இறைவனிடம் இட்டுச் செல்ல வல்லவரே குருவாவர். துன்பமின்றி வாழவும் இறைவன் திருவருள் பெற்று பேரின்பவீடு பெறவும் நமக்கு வழிகாட்டியார் இருப்போர் 63 நாயன்மார்கள். அத்தகையோரை நாம் கொண்டாட வேண்டாமா ? பூசை செய்ய வேண்டாமா ?
 
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
 
என்பது தெய்வப் புலவர் வாக்கு. நமக்கு இறைவனையும் அவனை அடையும் வழியையும் காட்டும் குருவிற்கு நாம் நன்றி சொல்ல மிகவும் கடமைப் பட்டிருக்கிறோம்.  இறைவன் திருக்காட்சி கொடுத்து நாயன்மார்கள் முக்தி அடைந்த தினத்தை நாம் நாயன்மார் குருபூசையாக வணங்குகிறோம். நாயன்மார்களின் குருபூசை செய்வது நம் தொன்று தொட்டு செய்து வரும் மரபாகும். இல்லங்களிலும் திருக்கோவில்களிலும் நாயன்மார்களின் குருபூசை நிகழ்ந்து வருகிறது. குருவருளைப் பெற்றால், திருவருளை எளிதில் பெறலாம் என்பது பெரியோர் வாக்கு.

63 நாயன்மார்கள் முக்தியடைந்த நட்சத்திர நாளை நாம் அவர்களது குருபூசையாக வணங்கி வருகிறோம். எத்தனையோ உலகங்கள் காலத்தை துல்லியமாக கணக்கிட முடியாமல் தவித்த காலத்தில் நம் முன்னோர்கள் காலத்தையும் இடத்தையும் மிக மிகத் துல்லியமாக அளக்கும் அளவைகளையும் வைத்து மிகவும் முன்னோடியான நாகரீகமாகத் திகழ்ந்தார்கள். ஆகையாலேயே, நாம் இன்றும் நம் நாயன்மார்களின் துல்லியமான முக்திநாளை கொண்டாடி குருபூசை செய்ய வேண்டும்.

சிவாயநம.

Please rate this

சிவனடியார்களுக்கு ஆபத்து விளைவித்தவர்களை மழுவினால் துணிந்து சிவப்பணி செய்த எறிபத்தநாயனார் No ratings yet.

சிவனடியார்களுக்கு ஆபத்து விளைவித்தவர்களை மழுவினால் துணிந்து சிவப்பணி செய்த எறிபத்தநாயனார்

இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்

… திருத்தொண்டத்தொகை, சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

எறிபத்த நாயனார் குருபூசை:  மாசி அத்தம்

பகுதி 1: எறிபத்த நாயனாரின் வரலாறு

பகுதி 2: எறிபத்த நாயனார் நமக்குக் காட்டும் வாழ்கை நெறிகள்

பகுதி ௧: எறிபத்த நாயனார் வரலாறு

இருளில் மூழ்கிய உயிர்களைக் காத்து உய்விக்க வந்த எம்பெருமான், பிரபஞ்சத்தைப் படைத்து உலகையும் படைத்து, அதில் அவர்கள் வாழும் நெறியையும் படைத்து, அந்த நெறியின் படி வாழ்ந்த அடியார்களின் வரலாறுகளையும் நமக்குக் காட்டியுள்ளார் ஈசன். அவ்வகையிலே அறுபத்து மூவருள் இப்போது எறிபத்த நாயனார் வரலாறு பற்றி இங்கு சுருக்கமாகக் காண்போம்.

பெரியபுராணம் பகுதி 08 – எறிபத்த நாயனார் புராணம்.

கொங்கதேசத்திலே, அழகிய கருவூர் ஊரில் ஆநிலையப்பர் ஆலயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கும் அவருடைய அடியார்களுக்கும் திருத்தொண்டு செய்து வந்தவர் எறிபத்த நாயனார். சிவன் அடியார்களுக்குத் திருத்தொண்டுகள் செய்வதும், அந்த அடியார்களுக்கு ஆபத்து வந்த காலத்திலே அந்த ஆபத்தை ஏற்படுத்தியவர்களை மழுவால் வெட்டியும் சிவதொண்டு புரிந்தார் எறிபத்த நாயனார்.

சிவகாமியாண்டார் என்று ஒரு பெரியவர், தினமும் பூமாலை கட்டிக் கொண்டு கருவூர் ஆநிலையப்பருக்குச் சாற்றி வந்தார். ஒரு நாள் வழக்கம் போல அதிகாலையிலேயே எழுந்து, நீராடி, தன் மூச்சினால் அசுத்தக் காற்றும், முகத்திலிருந்து எச்சியும் விழாத வண்ணம் தன் முகத்தைத் துணியினால் கட்டிக் கொண்டு, திருநந்தவனத்துக்குப் போய், பூவாக மலர்ந்து கொண்டிருக்கும் மொட்டுக்களைக் கொய்து திருப்பூங் கூடையை நிறைத்து, கையிலே தண்டை ஏந்தி, சுவாமிக்குத் திருப்பள்ளித்தாமங்கட்டிச் சாத்தும் பொருட்டு அந்தச் சிவாலயத்தை நோக்கி சீக்கிரம் நடந்தார்.

அவ்வாறு சென்று கொண்டிருக்கும் போது, அந்நாட்டு மன்னருடைய பட்டத்து யானையானது, மகாநவமியின் முதனாளாகிய அந்நாளிலே, காவேரியிலே நீராடி, மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு, குத்துக்கோற்காரர் முன்னே செல்ல, தன்மேல் ஏறி அமர்ந்திருக்கும் பாகர்களோடும் வீதியிலே விரைவாகச் சென்று, தனக்கு முன்னே செல்லும் சிவகாமியாண்டாரைப் பின் தொடர்ந்து சென்று, அவர் கையிலே தாங்கிய தண்டிலே வைத்திருக்கும் திருப்பூங்கூடையைப் பறித்துக் கீழே சிதறியது. அந்த யானையின் மேல் இருக்கின்ற பாகர்கள் அதைக் கண்டு, சீக்கிரம் அதைச் செலுத்திக் கொண்டு போக, சிவகாமியாண்டார் பதைப்பதைத்துக் கோபித்து, அந்த யானையைத் தண்டினால் அடிக்கும்படி அதற்கு பின்னே போனார். யானை வேகமாகச் செல்ல, தன் முதுமை காரணமாக வேகமாகச் செல்ல இயலாமல் விழுந்த சிவகாமியாண்டார், நிலத்திலே கைகளை மோதி எழுந்து நின்று, மனது கலங்கி, மிகுந்த துக்கங் கொண்டு “இறைவனுக்குச் சாத்தும்படி கொண்டுவந்த பூவை யானை சிந்திவிட்டதே. சிவதா சிவதா” என்று சொல்லி ஓலமிட்டார்.

அதை எதிரே வந்த எறிபத்தநாயனார் கேட்டு, மிகக்கோபித்து மழுவை எடுத்துக் கொண்டு ஓடி வந்து, சிவகாமியண்டாரைக் கண்டு வணங்கி “உமக்கு இந்தத் துன்பத்தைச் செய்த யானை எங்கே போய் விட்டது” என்று கேட்க, அவர் “சுவாமிக்குச் சாத்தும்படி நான் கொண்டுவந்த பூவைப் பறித்துச் சிந்திவிட்டு இந்த தெருவழியே தான் போகின்றது” என்றார். உடனே எறிபத்தநாயனார் அதிக கோபங்கொண்டு மிகவும் விரைந்து ஓடிப் போய் யானைக்கு மிக அருகே சென்று, மழுவை வீசி அதன் மேலே பாய்ந்தார். இதைக் கண்ட யானை கோபித்து எறிபத்தநாயனார் மேலே திரும்ப, எறிபத்தநாயனார் சற்றும் அஞ்சாமல் அதைத் தடுத்து, யானையின் துதிக்கையைத் துணிந்தார். அப்பொழுது, யானைக் கதறிக் கீழே விழுந்து புரண்டது. பின்பு எறிபத்த நாயனார் அதற்கு முன்னோடும் குத்துக்கோற்காரர் மூவரும் அதன் மேல் ஏறியிருந்த பாகர்கள் இருவரும் ஆகிய ஐவரைக் கொன்று நின்றார்.

அந்த ஐவரை ஒழிந்த மற்றவர்கள் ஓடிப்போய், மன்னராகிய புகழ்ச்சோழ நாயனாருடைய வாயிற்காவலாளரை நோக்கி, “பட்டத்து யானையையும், பாகர்கள் சிலரையும் சிலர் கொன்று விட்டார்கள்; இதை அரசருக்கு விண்ணப்பஞ்செய்யுங்கள்” என்று சொன்னார்கள். உடனே வாயிற் காவலாளர்கள் அரசரிடத்திலே போய், அவரை வணங்கி, அந்தச் செய்தியைச் சொன்னார்கள். அரசர் அதைக் கேட்ட மாத்திரத்தே அளவிறந்த கோபங்கொண்டு புறப்பட்டு, குதிரையில் ஏறி, சதுரங்க சேனைகளோடும் விரைந்து சென்று, யானையும் பாகரும் இறந்த இடத்தை அடைந்து, அங்கே நின்ற சிவவேடம் தரித்த எறிபத்தநாயனாரை மாத்திரம் கண்டு, யானையைக்கொன்றவர் அவர் என்பதை அறியாமல், “யானையைக் கொன்றவர் யாவர்” என்று கேட்டார்.

பாகர்கள் சமீபத்திலே போய் வணங்கி நின்று, “மழுவைத் தரித்துக்கொண்டு இவ்விடத்தில் நிற்கின்றவரே யானையைக் கொன்றவர்” என்றார்கள். அப்பொழுது புகழ்ச்சோழநாயனார் “இவர் சிவபத்தராக இருப்பதால், அந்த யானை குற்றஞ்செய்தாலன்றி அதைக் கொல்ல மாட்டார். அந்த யானை என்ன குற்றம் செய்தது என்று தெரியவில்லையே” என்று நினைந்து, தம்முடைய சேனைகளை அவ்விடத்துக்கு வரவொட்டாமல் நிறுத்தி, குதிரையினின்றும் இறங்கி, “இந்த அடியவர் யானைக்கு எதிரே சென்ற பொழுது அந்த யானையால் இந்த அடியவருக்கு யாதொரு துன்பமும் நிகழாமல் இருக்கும்படி பூர்வசென்மத்திலே தவஞ்செய்திருக்கிறேன். இந்தப் பெரியவர் இவ்வளவு கோபங்கொள்ளும்படி என்ன பிழை உண்டாயிற்றோ” என்று சொல்லிப் பயந்து, எறிபத்தநாயனார் திருமுன்னே சென்று, அவரை வணங்கி நின்று, “சுவாமீ! தேவரீரே இந்த யானையைக் கொன்றீரென்பதைத் தமியேன் முன்னம் அறிந்திலேன். அது நிற்க. இந்தயானை செய்த குற்றத்தின் பொருட்டு இதனைப் பாகரோடும் கொன்றதுமாத்திரம் போதுமா? சொல்லி யருளும்” என்றார். எறிபத்தநாயனார் புகழ்ச்சோழநாயனாரை நோக்கி, “சிவகாமியாண்டார் சுவாமிக்குச் சாத்தும்படி கொண்டு வந்த பூவை இந்த யானை பறித்துச் சிந்தினதினால், நான் இதைக் கொன்றேன். யானை தீங்குசெய்தபொழுது குத்துக்கோற்காரரும் பாகர்களும் அதத விலக்காதபடியால், அவர்களையும் கொன்றேன். இதுவே இங்கு நிகழ்ந்த சமாசாரம்” என்றார்.


புகழ்ச்சோழனார் அதைக் கேட்டு பயந்து, எறிபத்த நாயனாரை வணங்கி, “சிவனடியார்க்குச் செய்த அபராதத்திற்கு இந்த யானையையும் பாகரையும் குத்துக்கோற்காரரையும் கொன்றது மாத்திரம் போதாது, அடியேனையும் கொல்ல வேண்டும். பெரும்பாவியாகிய சிறியேனைத் தேவரீருடைய திருக்கரத்திலிருக்கின்ற மங்கலம் பொருந்திய மழுவாயுதத்தினாலே கொல்வது நீதியன்று” என்று சொல்லி, உடை வாளை உறையினின்றும் உருவி, ‘இதினாலே கொன்றருளும்” என்று நீட்டினார். எறிபத்தநாயனார் அதைக்கண்டு, அவருடைய அளவிறந்த அன்பைக்குறித்து ஆச்சரியம் அடைந்து, அவர் நீட்டியவாளை வாங்காமல் சிறிதுபொழுது தாழ்த்துநின்று, பின்பு அவர் கையிலே வாள் இருந்தால் தம்மைத் தாமே மாய்த்துக் கொள்வார் என்று நினைந்து அஞ்சி, அதை வாங்கினார். வாங்கிய எறிபத்தநாயனாரைப் புகழ்ச்சோழநாயனார் வணங்கி நின்று. “இந்தச் சிவபத்தர் தமியேனை வாளினாலே கொன்று என்குற்றத்தைத் தீர்க்கும்படி பெற்றேன்” என்றார். எறிபத்த நாயனார் அதைக் கேட்டு, மிக அஞ்சி, “பட்டத்து யானையும் பாகரும் இறந்துபோகவும் அதைக்குறித்துச் சிறிதும் துக்கம் கொள்ளாமல் உடைவாளைத் தந்து தம்மையும் கொல்லும்படி கேட்கின்ற புகழ்ச்சோழராசாவுக்குத் தீங்கு நினைத்தேனே” என்று எண்ணி “முன்னே என்னுயிரைக் கொன்று முடிப்பதே தீர்ப்பு” என்று நினைத்து, அந்த வாளைத் தம்முடைய கழுத்திலே பூட்டி அறுக்கத் தொடங்கினார். அதுகண்ட புகழ்ச்சோழநாயனார் பயந்து நடுநடுங்கி, சீக்கிரம் எதிரே போய், அவருடைய கையையும் வாளையும் பிடித்துக்கொள்ள அவர் தம்முடைய எண்ணம் நிறைவேறாமையால் வருந்தி நின்றார்.

அப்பொழுது, அளவிறந்த அன்பினாலே அவ்விருவருக்கும் உண்டாகிய துக்கத்தை நீக்கும்பொருட்டு, பரமசிவனுடைய திருவருளினாலே, “அடியார்களுடைய தொண்டை உலகத்திலே வெளிப்படுத்தும் பொருட்டு இன்றைக்கு யானை பூக்களைச் சிதறும்படி பரமசிவன் அருள்செய்தார்” என்று ஓர் அசரீரீ வாக்கு ஆகாயத்திலே ஒலித்தது. உடனே யானையும் பாகர்களும் இறவாதது போல எழுந்து நின்றனர். அப்பொழுது எறிபத்த நாயனார் கழுத்திற்பூட்டிய வாளை விட்டுப் புகழ்ச்சோழ நாயனாருடைய பாதத்திலே விழுந்து வணங்கினார். புகழ்ச்சோழநாயனாரும் அந்த வாளை எறிந்துவிட்டு, எறிபத்த நாயனாருடைய பாதத்திலே விழுந்து வணங்கினார். பின் இருவரும் எழுந்து அசரீரி வாக்கைத் துதித்தார்கள். பரமசிவனுடைய திருவருளினாலே திருப்பூக்கூடையிலே முன்போலப் பூக்கள் நிறைந்திருக்க; சிவகாமியாண்டார் அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். பாகர்கள் பட்டத்து யானையை நடத்திக்கொண்டு புகழ்ச்சோழநாயனார் முன் வந்தார்கள். எறிபத்தநாயனார் புகழ்ச்சோழநாயனாரை அஞ்சலிசெய்து, “அடியேன் மகிழும்படி இந்த யானையின்மேல் ஏறிச்செல்லும்” என்று விண்ணப்பஞ்செய்ய; புகழ்ச்சோழ நாயனார் அவரை வணங்கி, யானையின்மேலேறிக் கொண்டு சேனைகளோடும் தமது திருமாளிகையை அடைந்தார். சிவகாமியாண்டார் திருப்பூங்கூடையை எடுத்துக்கொண்டு சுவாமிக்குத் திருமாலை கட்டிச் சாத்தும்படி போனார். எறிபத்த நாயனார் இப்படியே அடியார்களுக்கு இடையூறுகள் வந்த காலங்களிலே முற்பட்டு, அவைகளை நீக்கி, பக்தி வலிமையிற் சிறந்தவராயிருந்து, பின்பு, திருக்கைலாசகிரியில் இருக்கின்ற சிவகணங்களுக்குத் தலைவரானார்.

பகுதி 2: எறிபத்த நாயனார் நமக்குக் காட்டும் வாழ்கை நெறிகள்

திருச்சிற்றம்பலம்.

பகுதி 2: எறிபத்த நாயனார் நமக்குக் காட்டும் வாழ்கை நெறிகள்

Please rate this

திருச்சி திருஆனைக்கா கோவிலில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு No ratings yet.

திருச்சி திருஆனைக்கா கோவிலில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு

திருச்சியில் மிகவும் புகழ்பெற்ற சிவதலம் திருஆனைக்கா. பஞ்ச பூத தலங்களில் நீர் தலமாக விளங்குகிறது இந்த தலம். இங்கு சிவபெருமான் ஜம்புகேசுவரர் என்ற திருநாமத்தோடு அகிலாண்டேசுவரி அம்மையோடு எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார். இது தேவார பாடல் பெற்ற தலங்கள் 276 இல் இதுவும் ஒன்று. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், தாயுமானவர் ஆகியோர் இந்த தலத்து இறைவனைப் போற்றி பதிகம் பாடியுள்ளனர்.

இந்த கோவிலின் அன்னதானக்கூடம் அருகே ஒரு பூங்கா உள்ளது. இந்த பூங்காவைச் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போது, தங்க நாணய புதையலை இவர்கள் கண்டனர். சுமார் 500 க்கும் மேற்பட்ட தங்க நாணயங்கள் கிடைத்தன. இன்றைய மதிப்பில் இது தோராயமாக 61 லட்சமாகும். இருப்பினும் இவை பழங்கால நாணயங்கள் என்பதால், இந்த தங்கத்தின் தரம் ஆகியவற்றைப் பொருத்து இதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.

இதைக் கேள்வியுற்ற ஸ்ரீரங்கம் காவல் துறையினர் விரைந்து வந்து இந்த தங்க நாணயங்களைக் கைப்பற்றி பத்திமாக எடுத்துச் சென்றனர். இந்த தகவல் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் கொடுக்கப்பட்டு அவர்கள் விசாரித்து வருகிறார்கள்.

Please rate this

அச்சரப்பாக்கம் மலைமாதா கோவிலை அகற்றக் கோரிய மனுவில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு 5/5 (2)

அச்சரப்பாக்கம் மலைமாதா கோவிலை அகற்றக் கோரிய மனுவில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னையிலிருந்து தெற்கே உள்ள நகரங்களுக்கு செல்வபர்கள் கண்ணில் படமால் போகாது இந்த அச்சரப்பாக்க மலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கிறிஸ்துவ தேவாலயம். இது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை உள்ள அச்சரப்பாக்கம் ஊரில் உள்ள மலையாகும். இந்த மலையில் பன்நெடுங்காலமாக சிவாலயம் ஒன்று உள்ளது. மேலும் இந்த மலையைச் சுற்றி கிரிவலமும் மக்கள் வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த மலையில் உள்ள அரசுக்குச் சொந்தமான 55 ஏக்கம் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிமித்து மலைமாதா கோவில் என்ற கிறிஸ்தவ தேவாலயம் கட்டப்பட்டது. மலைகளை வெடி வைத்துத் தகர்த்தும், விதிகளை மீறி படிக்கட்டுகளை அமைத்தும், கட்டப்பட்டுள்ளது. மேலும் கடைகளும் பல வைக்கப்பட்டுள்ளது. இது காரணமாக அந்த மலைப் பகுதியில் உள்ள வனவிலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால், அவை ஊருக்குள் வர வாய்ப்பு இருப்பதாகவும், இந்த மலைமாதா கோவிலையும் அதன் அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் அகற்ற உத்தரவிட வேண்டும் என்று சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள் ஆர். கேமலதா மற்றும் எம். சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழக அரசு, தொல்லியல் துறை மற்றும் மலைமாதா தேவாலய நிர்வாகம் ஆகியோர் உரிய பதில் அளிக்குமாறு உத்தரவிட்டது. மேலும் விசாரணையைத் தொடர்ந்து வருகின்ற மார்ச் மாதம் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Please rate this

ஆங்கிலம் கலவாத தமிழில் பேச திருமுறை திருப்புகழ் படிப்போம். திருமுறை பதிகங்களில் வரும் தமிழ் சொற்களை அறிவோம். 5/5 (2)

பொருள் உணர்ந்து பாடல்கள் படிக்க முதலில் தமிழ் சொற்களின் பொருளை அறிவோம். திருமுறை பதிகங்களில் வரும் தமிழ் சொற்களின் பொருள்

ஆங்கில சொற்களைத் தவிர்த்து தமிழ் சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் நம் தமிழ் பேச்சை வலுவடையச் செய்யலாம். திருமுறைகள் திருப்புகழ் படித்தாலே நன்றாக ஆங்கிலம் கலவாத தமிழில் பேசலாம். திருமுறைகளில் உள்ள சில சொற்கள் தற்போது வழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது. அவை எல்லாம் அருமையான சொற்கள். திருமுறை பதிகங்களை நன்றாக புரிந்து பொருள் உணர்ந்து படிக்க, முதலில், அவற்றை சீர் பிரித்து சொற்களுக்கு உரிய பொருளை உணர்ந்து படிக்க வேண்டும். அதற்கு உதவியாக இருக்கும் வண்ணம் சில பதிகங்களில் வரும் சொற்களுக்குரிய பொருளை இங்கே காண்போம். தொடர்ந்து திருமுறை படியுங்கள். தமிழ் புலமையும் திருமுறை திருவருளும் வளரும். ஆங்கிலம் கலவாமலும் பேச இயலும்.

எட்டாம் திருமுறை திருவாசகத்தின் முதல் பதிகம் சிவபுராணத்தில் வரும் சில சொற்களுக்குரிய பொருள்.

சொல் பொருள்
சிவபுராணம்
தாள் திருவடி – இறைவன் திருவடியை குறிக்கும்.
கழல் பாதம், திருவடி – இறைவன் திருவடி
கோகழி திருப்பெருந்துறை
குருமணிதன் குருவாகிய மாணிக்கம்
ஆகமம் 28 ஆகமங்கள்
ஏகன் ஒருவன்
பிஞ்ஞகன் 1. கங்கை, பிறை, மலர்கள், விரிசடை என்று தலைக்கோலம் உடையவன். 2.பிஞ்சாகிய அணுவிலும் உறைபவன். பிஞ்சு + அகன். பிரபஞ்சத்திற்கு மூலமான அணுவிலும் சிறிய பொருளிலும் இருப்பவன். இது சிவனையே குறிக்கும்.
சேயோன் சேய்மையில் (தூரத்தில்) இருப்பவன். குறிஞ்சி கடவுளார் சேயோன். இது சிவனை குறிக்கும்.
கோன் அரசன்
சீரார் பெருந்துறை திருப்பெருந்துறை
தேசன் ஒளிமயமானவன், பெரியோன்
கண்ணுதலான் நெற்றிக் கண்ணை உடையவன். (சிவன்)
நுதல் நெற்றி
மிக்காய் கொண்டுள்ள(வன்)
விருகம் மிருகம்
வீடுபேறு மறுபிறவி இல்லாத மோட்ச நிலை.
விடை காளை சிவனின் வாகனம் நந்தி
விடைப்பாகன் காளை வாகனமுடைய சிவன்
நேயம் அன்பு
நிமலன் அழுக்கற்றவன், குற்றமற்றவன்
சீர் செல்வம், நன்மை, அழகு, பெருமை, புகழ், இயல்பு.
இயமானன் யாகம் செய்விப்பவன்
பெம்மான் பெருமான், சிவன்
கன்னல் கரும்பு
தேற்றனே தெளிவானவனே
குரம்பை உடல்

அடுத்து சொற்றுணை வேதியன் என்ற திருநாவுக்கரசர் பெருமான் பாடலில் வரும் சில சொற்கள்.

சொற்றுணை வேதியன் பதிக பாடல்
அருங்கலம் கலம் – மண்பாண்டம், பொருள். அரிய கலம். அணிகலன். பெருமை மிக்கது, சிறப்பானது.
கோ அரசன்
கோட்டமில்லது குற்றமில்லாது – செங்கோல் வளையாமல் ஆட்சி செலுத்துதல்.
அழல் நெருப்பு, தீக்கொழுந்து
நண்ணி நெருங்கி, அணுகி
இரந்து கெஞ்சி பெறுதல், தயவுடன் வேண்டல்
ஆறங்கம் வேதாங்கம் ஆறு – சிட்சை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோபிசிதம், சோதிடம். அரசர்க்குரிய – படை குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறு உறுப்பு.
சலமிலன் சலம் – குற்றம், கோட்டம். சலமிலன் குற்றமற்றவன்
வீடினார் உலகினில் உலக பற்றை விட்டவர்
விழுமிய செழித்த, வளமான, உயர்ந்த
இல்லக விளக்கது வீட்டில் இருக்கும் புற விளக்கு. இல்+அக விளக்கு – இவ்வுடம்பினுள் இருக்கும் அக விளக்கு நமசிவாய, உள்ளத்து இருளைப் போக்கும்.
மாப்பிணை மான் குட்டியை கையில் ஏந்திய பெருமான்

அடுத்து சுந்தரர் பெருமான் அருளிய பித்தா பிறைசூடி பாடலில் சில சொற்கள்

பித்தா பிறை சூடி பெருமானே பாடல்
எத்தான் என்ன ஆனாலும்
வேயார் மூங்கில் காடு
பெற்றம் விடை, காளை
யாதன் அறிவில்லாதவன்
தாதார் பூக்களின் மகரந்தம்
அழல் நெருப்பு, தீக்கொழுந்து

மறையுடையாய் தோலுடையாய் திருஞானசம்பந்தரின் பதிகம்

மறையுடையாய் தோலுடையாய் பதிகம்
வார்சடை நீண்ட சடை
மேயவனே உறைபவனே
கனைத்தெழுந்த அதிர வைத்து எழுந்த, முழங்கிய
நிமலா குற்றமற்ற, தூயவன்
வவ்வேல் வல் + வேல். வல் – சீக்கிரம். வவ்வேல் – சீக்கிரம் எடுக்காதே
அடல் வலிமையோடு, வீரியமிக்க
மலைபுரிந்த மன்னவன் பார்வதியின் தந்தை பர்வதராஜனாகிய இமயமலை ஆண்ட அரசன்; இமவான்
அவிர்சடை ஒளிவீசும் சடை, மின்னும்
பாங்கினல்லார் நல்ல பாங்கை உடையவர், நல்ல குணமுடையவர்
படிமம் தவவேடம்
தூங்கி மனம் ஒன்றி
விருத்தன் முதியவர்
கருத்தனாகி முழு முதற் கடவுளாகி
அருத்தன் பொருளானவன்
நிருத்தம் நடனம்
நிருத்தர் நடனமாடுபவர், நடிப்பவர்
கீதர் பாடுபவர்
மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெண்கனையால் அரி, எரி, காற்று மூன்றையும் கூட்டிய கொடிய அம்பினால்.
அருவரை மலை
வேழம் யானை
கேழல் ஆண் பன்றி
துஞ்சல் தூக்கம், இறப்பு (தன்னை மறந்த நிலை)
சேடர் சேணியர் என்னும் செட்டி இனத்தவர். பண்புடையோர்
மறுகு குறுந்தெரு
பனுவன் நூல்

மந்திரமாவது நீறு என்று திருநீற்றின் பெருமையினை சொல்லும் ஞானசம்பந்தர் தேவாரம்.

மந்திரமாவது நீறு பதிக பாடல்
போதம் ஞானம், அறிவு.
புனல் ஆறு, நீர்.
புன்மை சிறுமை, இழிவு.
தக்கோர் தகுதி வாய்ந்தவர், அறிஞர்.
கவின் அழகு.
சேணம் பொறுப்பான இடம்.
புகலி சொல், கூறு.
பூசுரன் பிராமணன்.
குண்டிகை கமண்டலம், குடுக்கை.
சாக்கியர் சூரிய குல சத்திரியர் வம்சத்தை சேர்ந்தவர்கள்.

இடரினும் தளரினும் எனத் துவங்கும் திருஞானசம்பந்தர் தேவார பாடல்.

இடரினும் தளரினும் பதிக பாடல் – காந்தார பஞ்சமம்
இடரினும் துன்பம். துன்பம் வந்த போதும்.
தளரினும் தளர்ச்சி. தளர்ந்த போதும், மூப்பு வந்த போதும்
கழல் திருவடி
மிடறு கழுத்து
தாழ் இளம் தடம் புனல் தாழ் – தங்குகின்ற. தடம் புனல் – பரவிய புனல் – கங்கை
சென்னி தலை. தலையின் மேல் பகுதி
போழ் தகடு போன்ற மெலிந்த
இளமதி சடையில் இருக்கும் மெல்லிய பிறை
கனல்எரி அனல்புல்கு கையவனே கனன்று எரியும் அனலை கையில் ஏந்தியவனே
அரற்றுதல் ஒலித்தல், ஓசை எழுப்புதல், – இங்கு தொழுதல் என்ற பொருளில் வருகிறது.
கைம்மல்கு மல்கு – அதிகமாதல், நிறைதல். மேருமலையை கையில் ஏந்தி
வரிசிலை கட்டமைந்த வில்லை உடைய
கணை அம்பு
கையது வீழினும் கையில் இருக்கும் பொருட்கள் யாவும் வீழ்ந்து வருந்தும் காலத்தும்
கழிவுறினும் கழிவுப் பொருள் போன்று ஒதுக்கப்பட்ட காலத்திலும்
கொய்யணி கொய்து அணியப் பெறும் மலர்
மையணி மிடறுடை மை போன்ற கருநிற கழுத்து
வெருவுதல் அஞ்சுதல், பயம் வருதல்
அரவு பாம்பு – அரவு, அரவம்.
சந்த வெண்பொடி நறுமணம் கமழும் திருநீறு
விரவி அணுகி
ஒப்புடை ஒருவனை அழகில் ஒப்பில்லாதவன் – மன்மதன்
அழல் தீக்கொழுந்து, நெருப்பு
ஏருடை சிறப்புடைய
ஆரிடர் அருமை + இடர். பொறுத்துக்கொள்ளக்கூடிய இடர்
கடிகமழ் தாமரை மேல் அண்ணலும் தாமரை மேல் வீற்றிருக்கும் பிரமன்
இலைநுனை வேற்படை இலை போன்ற நுனியுடைய திரிசூலம்

திருச்சாழல் எனப்படும் மாணிக்கவாசகரின் திருவாசகம்.

திருச்சாழல் – தில்லையில் அருளியது
அரவம் பாம்பு
துன்னம்பெய் கோவணம் கீளொடு பொருந்த தைத்த கோவணம். அதாவது கிழியாமல் தைத்த கோவணம்.
மன்னுகலை மன்னுக – நிலைபெற்ற
துன்னுபொருள் பொருந்திய பொருளை உடைய
சரடாத் சரடு – கயிறு
காயில் சினம் கொண்டால்
அயனை பிரமன்
அநங்கனை மன்மதன்
அந்தகனை கூற்றுவன், எமன்
வயனங்கண் வசனம், சொல்
நயனங்கள் கண்கள்
எச்சனையுந் வேள்வித் தேவன்
தக்கன் தக்ஷன்
அலரவன் திருமால்
அழலுருவாய் நெருப்புருவாய், சோதியாய்
பிலமுகத்தே பாதாளத்தில்
குரை ஒலி
சதுர் சாமர்த்தியம்

திருமுறை பயில்வோம். தமிழில் பேசுவோம். திருவருள் பெறுவோம்.

திருச்சிற்றம்பலம்.

 

Please rate this

வாட்சப் நிலை (whatsapp status) ஆக வைப்பதற்க்கு சைவ சமய செய்திகள் கொண்ட சில படங்களின் தொகுப்பு 4.75/5 (4)

வாட்சப் நிலை (whatsapp status) ஆக வைப்பதற்க்கு சைவ சமய செய்திகள் கொண்ட சில படங்களின் தொகுப்பு

வாட்சப்பில் பகிரக்கூடிய நம் சைவ சமயத்தின் அடிப்படை செய்திகளைக் கொண்ட சில படங்கள். இதை பதிவிறக்கம் செய்து வாட்சப்பில் நிலையாக வைத்துக் கொள்ளலாம்.

இறைவன் ஒருவனே என்று சைவ சமயம் அறுதியிட்டுக் கூறுகிறது. முதலும் முடிவும் இல்லாத  பேரொளியாக திகழும் இறைவனுக்கு நாம் இட்ட பெயர் சிவன்.

தமிழர்களின் மரபு வழி அடையாளம் என்ன ? மொழி தமிழ், நாடு பாரதம், சமயம் சைவ சமயம் உள்ளடக்கிய இந்து மதம், தமிழ் வேதம் நான்கு, பன்னிரு திருமுறை, குரு நாயன்மார்கள், தலைவன் ஒருவனே சிவபெருமானே.

தமிழர்களின் புனித நூல் எது? தமிழ் வேதங்கள் நான்கு. 28 சிவ ஆகமங்கள், பன்னிரு திருமுறை, பதினெட்டு புராணங்கள், பதினான்கு சாத்திரங்கள், இன்னும் எண்ணற்ற அருளாளர்களின் நூல்கள்.

தமிழர்களின் குருமார்கள் யாவர்? இறைவனே எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு உபதேசம் செய்தது வேதங்களும் ஆகமங்களும். அதன் வழிப்படி நின்று அந்த நெறிப்படி நமக்கு வாழ்ந்து காட்டி குருவாக திகழ்பவர்கள் நாயன்மார்கள், சமய குரவர்கள், சந்தான குரவர்களும் அவர்கள் ஞானப் பரம்பரையும் வரும் ஆச்சாரியர்களும் ஆவர்.

பன்னிரு திருமுறை நூல்கள் எவை ?

இறைவனை நாம் அடைவதற்க்குத் துணையாக நிற்கும் கருவிகள், திருநீறு, உருத்திராக்கம், ஐந்தெழுத்து நமசிவாய மந்திரம் ஆகும்.

கடவுள் என்று சொல்லக்கூடிய இறைவன் ஒருவனே. ஆனால், தெய்வங்கள் எண்ணற்றவை. தெய்வங்களுக்கும் கடவுளுக்கும் உள்ள வித்தியாசம் அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

நானே கடவுள் என்று நம் நாட்டில் ஊருக்கு ஒருவன் சொல்லி ஏமாற்றி நன்றாக சம்பாதித்து காணாமல் போய் இருக்கிறார்கள். நம் நாட்டில் மட்டுமல்ல, சில நாடுகளில் இருந்து நானே மெய்யான தேவன் என்று உலகம் முழுவதும் சொல்லிப் பிழைக்கும் கூட்டமும் உண்டு. உயிர்கள் ஒரு போதும் இறைவனாகவே முடியாது. இறைவன் வேறு, உயிர்கள் வேறு.

இறைவனுடைய உண்மையான சொரூபம், உருவம், நிறம், பெயர் இல்லாமை. ஆனால், அத்தகைய இறைவனால் மக்களுக்கும் உயிர்களுக்கும் ஒரு நன்மையும் விளையாது. ஆகவே இறைவன் பெரும் கருணை கொண்டு, உயிர்களின் கண்களுக்குத் தெரிவது போல பல உருவங்கள் கொண்டு வருகிறான். எல்லாவற்றிற்க்கும், எல்லா உருவத்திற்க்கும் சொந்தக்காரன் அவனே.

இறைவனால் எந்த உருவமும் எடுக்க இயலும். அவனது உடல் வேறு. நமது உடல் வேறு. நமது உடல் மாயை என்ற அழுக்கிலிருந்து செய்யப்பட்டது. இறைவன் அழுக்கோடு கலவான். எனவே, இறைவனானவன் மனித உருக் கொண்டு வர இயலும். ஆனால், கருவுற்ற அன்னையில் வயிற்றில் மனிதனாக ஒரு போதும் பிறவான். அவனே பிறக்கமாட்டான் என்றால், அவனுக்கு குமாரன் என்ற தேவ குமாரன் எப்படி வருவான் ? விநாயக பெருமானையும், முருகப்பெருமானையும், வீரபத்திரரையும், பைரவரையும், இறைவனின் சக்திகளாகத் தான் நாம் காண்கிறோம். நம்முடைய எளிமையான புரிதலுக்காக, அவர்களை இறைவன் பிள்ளைகளாக பாவித்து சொல்கிறோமே ஒழிய, இறைவனுக்கு காமமும் கிடையாது. குழந்தை குட்டியும் கிடையாது.

திருச்சிற்றம்பலம்.

 

Please rate this

கோவில் சொத்தைத் திருடுபவனும் ஆடு மாடுகளைக் கொலை செய்பவனும் உண்மையில் நன்றாக வாழ்கிறானா? தண்டனை கிடையாதா? அக்னிகுண்டம் காத்திருக்கு. 5/5 (1)

கோவில் சொத்தைத் திருடுபவனும் ஆடு மாடுகளைக் கொலை செய்பவனும் உண்மையில் நன்றாக வாழ்கிறானா? தண்டனை கிடையாதா?

கோவில் சொத்தைத் திருடுதல், பிறர் சொத்தை அபகரித்தல், உயிர்களைக் கொலை செய்தல், அநியாயம் அக்கிரமம் செய்தல் என்று எத்தனையோ தீமைகளைச் செய்பவர்கள் நன்றாக வாழ்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் தண்டனையே கிடைக்காதா? என்று நாம் ஏங்குகிறோம். இன்னொரு பக்கம் பல விபத்துகள், பேரழிவு என்று மனிதன் துன்புறுகிறான். அதைக் கண்டு அவர்கள் மீது மனிதாபிமானத்துடன் இரக்கம் கொண்டு நாம் இறைவனுக்குக் கண் இல்லையா, மனது இல்லையா என்றெல்லாம்  கேட்கிறோம். இன்றைய காலகட்டத்தில் வரும் சில செய்திகளை உன்னிப்பாக கவனியுங்கள்.

1. எதிர்த்த வீட்டுக்காரன் மனைவியைக் கூட்டிக் கொண்டு வாலிபர் ஓட்டம்.

2. நிதானமில்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த வாலிபர் மரத்தில் மோதி முள்வேலியில் சிக்கி உடல் கிழித்து சாவு.

3. வேறு வேறு பெயர்களில் முகநூலில் ஓராண்டாக காதலித்து வந்த இருவர் சந்தித்த போது தான், அவர்கள் கணவன் மனைவி என்று தெரிந்தது.

4. தவறான சிகிச்சையால் தனியார் மருத்துவமனையில் இருவருக்கு கண் பார்வை பறி போனது.

5. நெல்லையில் முன் விரோதம் காரணமாக ஜாமீனில் வெளி வந்தவர், வீடு புகுந்து அனைவரையும் வெட்டிக் கொலை செய்தார்.

6. மலை மீது செல்பி எடுக்க முயன்றவர் தவறி கீழே விழுந்து சூலாயுதம் உடலைக் கிழித்து உயிரிழந்தார்.

7. சீனாவைச் சேர்ந்தவர் புதிய கருவி கண்டுபிடிப்பு. கோழிகளை உள்ளே கொடுத்தால், அதுவே கொன்று, வெட்டி, பதப்படுத்தி, கறியாக திருப்பிக் கொடுக்கும்.

8. தாயின் கவனக் குறைவால் இரண்டு வயது குழந்தை கொதிக்கும் எண்ணெய் சட்டியில் விழுந்து பலி.

9. கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் முதியவர் பாதுகாப்பு இல்லங்கள் இரண்டு மடங்காக உயர்ந்தது.

10. முதியவர் என்றும் பாராமல், சொத்துக்காக மகனே தந்தையை அடித்துக் கொலை.

11. உலகிலேயே எஞ்சியிருக்கும் அரிய வகை மான்களை வேட்டையாடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

12. காட்டில் மிகவும் சிதைந்த நிலையில் வாலிபர் உடல் கண்டுபிடிப்பு. முதல் கட்ட விசாரணையில் மிருகங்கள் கடித்திருக்கலாம் என தகவல். யானை மிதித்து பலி.

13. கோவில் உண்டியல் உடைப்பு. கோவில் சிலைகள் திருட்டு.

14. 50 வயது மதிக்கத்தக்கவர் கொடூர கொலை. மரத்தில் கட்டி வைத்து பெட்ரோல் ஊத்தி எரிப்பு.

15. அமெரிக்காவில் அணு ஆயுத ரகசியத்தைத் திருடிய சீனர் கைது.

16. கொரோனா வைரஸால் சீனாவில் இறந்தவர் எண்ணிக்கை 2000 ஐக் கடந்தது.

மேலே உள்ள செய்திகள் அனைத்தும் ஒரு சிறு துளிகள் தான். ஒரு பக்கம் அநியாயங்களும் அக்கிரமங்களும் நடந்தேறுகின்றன. இன்னொரு பக்கம் விபத்துக்களும் பேரழிவுகளும் நடக்கின்றன. இந்த இரண்டிற்க்கும் ஏதாவது இணைப்பு உண்டா ?

மிகவும் வேகமாகச் சுற்றும் பூமியில் இருந்து, காற்றில் பிராண வாயு அளவு வரை மனிதன் வாழ்வதற்க்குத் தேவையானவற்றை மிகத் துல்லியமாக கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரு விநாடி இந்த பூமி நிலைகுலைந்தால், இங்கிருக்கும் அனைத்து உயிர்களும் மாண்டு போகும். இதுவே இதற்கு சாட்சி. இவ்வளவு துல்லியமாக காரியங்கள் நடக்கும் இந்த பூமியில், அநியாயமும் அக்கிரமும் செய்பவர்களுக்குத் தண்டனை கிடைக்காமலா போய்விடும்? அவர்கள் தப்பி விட முடியுமா?

மேலே உள்ள செய்திகளில் ஒற்றைப்படை எண்களில் இருக்கும் செய்திகளைப் பாருங்கள். அவை அனைத்தும் அநியாயமும் அக்கிரமும் செய்யும் செய்திகளாக இருக்கும். இரட்டைப் படை எண்களில் உள்ள செய்திகளைப் பாருங்கள். அந்த குற்றங்களுக்கு உரிய தண்டனைகளை நிறைவேற்றும் செய்திகளாக இருக்கும்.

மேலோட்டமாகப் பார்த்தால், இரண்டும் வேறு வேறு நிகழ்வுகள் போலத் தான் இருக்கும். ஆனால் இவற்றிற்க்கு தொடர்பு இருக்கிறதா என்றால், நம் சமயங்கள் தொடர்பு இருக்கிறது என்று அறுதியிட்டுச் சொல்கிறது. நாம் செய்யும் ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு நாம் தான் பொறுப்பு. அது நம்மைத் திருப்பி வந்து தாக்கும். இதற்காகத் தான் நாம் ஒவ்வொருவருக்கும் வினை கணக்கு ஒன்று உண்டு. நீங்கள் வங்கியில் கணக்கு வைத்திருப்பது போல, இந்த கணக்குகளை எல்லோருக்கும் வைத்து பராமரிப்பவர் தர்மத்தை நிலைநாட்டும் வேலையைச் செய்யும் எமதர்மராஜன் ஆவார். இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரே விடயம் என்னவென்றால் ஒவ்வொரு வினைக்கான பலன்களை எப்போது திருப்பிக் கொடுப்பது என்பது தான். அது எப்போது திரும்பி வரும்? அது உங்களுக்கு உரிய காலத்தில் தான் திருப்பிக் கொடுக்கப்படும். உங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருக்கிற விதியை நீங்கள் கழித்துக் கொண்டிருக்கும் போது, புதிய வினைகளின் பலனை இதே பிறவில் பின்னரோ அல்லது அடுத்த பிறவியிலோ அல்லது பல பிறவிகள் கழித்தோ தான் கொடுக்கப்படும். அதற்கு என்று உரிய நேரம் காலம் சூழல் வரும் போது தான் கொடுக்கப்படும். இதனால் தான் ஒரு பாவமும் அறியாத பச்சிளம் குழந்தைகளுக்கு கூட தீவினைகள் வந்து தீண்டுகின்றன. இந்த பிறவியில் பல உயிர்களைக் கொலை செய்பவன் இன்னொரு பிறவியில் இரண்டு வயதாகும் போது கொதிக்கும் எண்ணெய் சட்டியில் விழுந்து மாண்டு போகிறான்.

ஆகவே, அநியாயமும் அக்கிரமும் செய்பவன் நன்றாக வாழ்வது போன்ற ஒரு மாயத் தோற்றம் நமக்குத் தெரிந்தாலும், அவன் ஒரு நாள் அதற்குரிய தண்டனைகளை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். அவன் தப்ப இயலாது. அந்த தண்டனைகள் இந்த உலகிலும் கொடுக்கப்படலாம், அல்லது நம் புராணங்கள் சொல்வது போல வேறு ஒரு உலகிலும் கொடுக்கப்படலாம். இதனால் தான், நம் சமயமும் பண்பாடும் பிறரை இம்சித்து வாழ்வதை முற்றிலும் ஒழிக்கச் சொல்கின்றன. அடிப்படை தர்மம் என்பதே பிறரை அதாவது எந்த ஒரு உயிரையும் இம்சிக்காமல் வாழ்வது தான்.

இந்த துன்பங்களிடம் சிக்காமல் தப்பித்து வாழ்வதற்க்காக நம் முன்னோர்கள் வரையறுத்தது தான் அடிப்படை ஒழுக்கம். சுய மரியாதை என்ற பெயரில் ஒழுக்கத்தை மீறினால், அதனால் வரக்கூடிய துன்பங்களை நாம் தான் அனுபவித்தாக வேண்டும். இது திண்ணம். ஒழுக்கம் என்பது நமக்கு நாமே போடும் பாதுகாப்பு வேலி. அதைத் தாண்டிச் சென்றால் துன்பங்கள் தீண்டும்.

பிறரது உழைப்பைச் சுரண்டி திருடிப் பிழைத்தால், பிறவற்றை துளைத்துச் செல்லும் கிருமிகள் மூலமாக பாவிகள் துன்புறுத்தப்படுவர் என்று இதை கிருமிபோஜனமாக கருட புராணம் சொல்கிறது. [மேலே 15,16 குற்றமும் தண்டனையும்]. கருட புராணத்தில் என்னென்ன குற்றங்களுக்கு என்னென்ன தண்டனை என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலே கொடுக்கப்பட்ட இன்றைய நிகழ்வுகள் இதை ஒட்டியே அமைக்கப்பட்டிருக்கிறது. தாமிஸிர நரகம்: [1,2], அநித்தாமிஸ்ர நரகம்: [3,4], ரௌரவ நரகம்: [5,6], கும்பிபாகம்: [7,8], காலகுத்திரம்: [9,10], அந்தகூபம்: [11,12], அக்னிகுண்டம்: [13,14], கிருமிபோஜனம்: [15,16].

இந்த உலகிலும் தண்டனைகள் நிறைவேற்றப்படலாம், அல்லது வேறு பாதாள உலகிலும் நிறைவேற்றப்படலாம். வேறு உலகில் அந்தந்த தண்டனைகளை அனுபவிப்பதற்க்கு ஏற்றார்போல உடல்கள் கொடுக்கப்படும். இவற்றிலிருந்து ஒன்று மட்டும் திண்ணம். தப்பு செய்பவர்கள் தப்பிக்க முடியாது, தண்டனைகளை அனுபவித்தே ஆக வேண்டும். பாவ மன்னிப்பு கிடையாது.

Please rate this

கம்போடியாவில் இராசேந்திர சோழருக்கு திருவுருவச்சிலை அமைத்து, திருக்குறளைப் பள்ளிப்பாடத்தில் இணைக்கவும் திட்டம் No ratings yet.

கம்போடியாவில் இராசேந்திர சோழருக்கு திருவுருவச்சிலை அமைத்து, திருக்குறளைப் பள்ளிப்பாடத்தில் இணைக்கவும் திட்டம்

அங்கோர் தமிழ்ச் சங்கம், பன்னாட்டு தமிழ் நடுவம் ஆகிய இரண்டும் கம்போடிய நாட்டின் கலை மற்றும் பண்பாட்டு அமைச்சகம் மற்றும் சீனு ஞானம் டிராவல்ஸ் ஆகியவை இணைந்து  கம்போடியா நாட்டில் சியம் ரியாப் நகரில், இராசேந்திர சோழர் மற்றும் கமேர் மன்னன் முதலாம் சூரியவர்மன் திருவுருவச் சிலை அமைக்கவும், திருக்குறளை கமேர் மொழியில் மொழி பெயர்த்து பள்ளிப் பாடத்திட்டத்தில் இணைக்கவும் திட்டமிட்டுள்ளது. வரும் மே மாதம் 2022 இல் இந்த இரண்டு மன்னர்களின் நட்புறவைக் கொண்டாடி மகிழும் வண்ணம் இது திருக்குறள் மாநாடாகவும் நிகழவிருக்கிறது.

முதல் முறையாக, தமிழ் மொழியின் சங்க இலக்கியத்தின் முக்கிய நூலான திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை கமேர் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து பள்ளிப் பாடத்திட்டத்தில் அறிமுகம் செய்யவும் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உலகம் எங்கிலும் இருந்து 25,000 தமிழர்கள் கம்போடியா வர உள்ளனர். இந்த நிகழ்வு இந்தியா மற்றும் கம்போடிய நாட்டின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் உதவி செய்யும்.

கம்போடிய நாட்டின் கலை மற்றும் பண்பாடு அமைச்சகத்தில் பணிபுரியும் மோன் சாப்கீப் மற்றும் ப்ரோம் கமேரா ஆகியோர் சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டிற்க்கு வருகை புரிந்து, காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோவில் மற்றும் வைகுண்டநாதர் கோவில், தஞ்சைப் பெரியகோவில், சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் மாமல்லபுரம் குகைக்கோவில் ஆகிய கோவில்களுக்குச் சென்று பார்வையிட்டனர். இந்தியாவில் நடைபெற்ற பல்லவர் ஆட்சிக்கும், கம்போடியாவில் நடைபெற்ற கமேர் ஆட்சிக்கும் இடையே உள்ள வரலாற்றுத் தொடர்புகளுக்கான பல ஆதாரங்களை நேரடியாகக் கண்டனர். இந்த வரலாற்றுச் சின்னங்களைக் கண்ட இவர்கள், ஆறாம் நூற்றாண்டில் கம்போடியாவை ஆண்ட கமேர் அரசன் மகேந்திரவர்மன் இந்தியாவில் உள்ள பல்லவ பேரரசைச் சேர்ந்தவர் என்பதில் உறுதி மேற்கொண்டனர்.

Please rate this

எதிரிகளின் கோட்டைக்குள் புகுந்து, எதிரிகள் சூழ்ந்து நின்று அலற, சிறு பிள்ளையார் திருவருளால் வெற்றி கொண்டார் 4.5/5 (2)

எதிரிகளின் கோட்டைக்குள் புகுந்து, எதிரிகள் சூழ்ந்து நின்று அலற, சிறு பிள்ளையார் திருவருளால் வெற்றி கொண்டார்.

நீங்கள் அமர்நாத் யாத்திரை சென்று கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று சாலையில் தோன்றிய தீவிரவாதிகள் உங்கள் வாகனத்தை வழிமறித்து உங்களையும் உங்களோடு வந்த ஒரு பத்து பேரையும்,  அவர்கள் தாங்கள் கொண்டு வந்த ஒரு வாகனத்தில் அழைத்துச் செல்கிறார்கள். எங்கோ மலையில் ஏறி இறங்கி காடுகளைத் தாண்டி ஏதோ ஒரு பெரிய குகை போன்ற இடத்தில் சுற்றிலும் தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் காவல் இருக்க, உங்களை உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். மிகப் பெரிய அறையில் சுற்றிலும் எங்கும் தீவிரவாதிகள் சூழ்ந்து இருக்க, உங்கள் அனைவரையும் அங்கே, கைகளைக் கட்டி அறையின் ஒரு பகுதியில் நிற்க வைக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு எதிராக கோஷம் இடுகிறார்கள். உங்களை அடிக்க வேண்டும் என்று ஒருவன் கத்த, இன்னொருவன் வெட்டுங்கள் என்று கத்த, இன்னும் ஒருவன் ஆயுதத்தை எடுத்து உங்களை நோக்கி இவர்களைக் கொல்லுங்கள் என்று உங்களை நோக்கிப் பாய்ந்து ஓடி வருகிறான். உங்களுக்கு எப்படி இருக்கும் ?

ஓடி வந்தவனை இருவர் பிடித்துக் கொள்கிறார்கள். சிறிது நேரத்தில் அறையில் முழு அமைதி. இன்னொரு கதவு திறக்கப்பட, அதிலிருந்து கோரமாக ஒருவன் வருகிறான். அவனைப் பின்தொடர்ந்து இன்னும் நாலைந்து கோரமானவர்கள் வருகிறார்கள். அநேகமாக, அவன் தான் இந்த கூட்டத்தின் தலைவனாக இருக்க வேண்டும். அவன் வந்தவுடன் அறையின் நடுவில் இருக்கும் பெரிய இருக்கையில் அமர, அவனைப் போற்றும் வகையில் அனைவரும் ஒன்று போல கோஷமிடுகிறார்கள். அந்த சத்தமே மரண ஓலமாக நமக்குக் கேட்கிறது. அந்த தலைவன் உங்களைப் பார்த்து கோபமாக ஏதேதோ சொல்கிறான். அவன் பேசும் மொழி உங்களுக்குப் புரியவில்லை. ஆனால், உங்களை திட்டுகிறான், கோபமாக கொக்கறிக்கிறான் என்று மட்டும் புரிகிறது. அடுத்து என்ன செய்வார்களோ தெரியவில்லை. இன்று இந்த குகையில் இருந்து நீங்கள் உயிருடன் திரும்பிச் செல்ல வாய்ப்பே இல்லை. மரணத்தின் விளிம்பில் நீங்கள் நிற்கிறீர்கள். உங்களை எப்படிக் கொல்வார்கள் என்றே தெரியவில்லை. மனது உடல் அனைத்தும் நடுங்குகிறது. இறைவா என்று மனம் இறைவனை வேண்டுகிறது. உங்களுக்கு ஏற்படும் உணர்வுகளை அப்படியே பதிவு செய்து கொள்ளுங்கள்.

இது ஒரு கற்பனையான சித்திரம் என்றாலும், இவ்வாறு நிகழக்கூடிய வாய்ப்புகள் இன்று உள்ளது. இதை விட கொடூரமான நிகழ்வுகள் எல்லாம் இன்றைய உலகில் நிகழ்ந்து வருவதை நாம் நம் கண்கூடாகவே செய்திகளில் காண்கிறோம். அமர்நாத் யாத்திரை சென்று இவ்வாறு மாட்டிக் கொள்ளாமல், நீங்களே, இந்த தீவிரவாதிகளை நல்வழியில் திருத்தும் ஒரு நல்ல உயரிய எண்ணம் பொருட்டு, உங்கள் உயிரையும் துச்சம் என நினைந்து நீங்களே தீவிரவாதிகளின் கூடாரத்தைத் தேடிச் செல்வீர்களா ? அவ்வளவு தைரியமும் வலிமையும் உங்களுக்கு இருக்கிறதா ?

நிற்க.

இந்த கற்பனையான நிகழ்வுக்கும் இனி நாம் பார்க்கப் போகும் வரலாற்று நிகழ்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு நிகழ்வானது பிறருக்கு நடக்கும் போது, அது நமக்கெல்லாம் படிக்கக்கூடிய கதையாகவும், அதே நிகழ்வு நமக்கே நடக்கும் போது அந்த உணர்வுகளின் ஊடே நாமே நீந்திச் செல்லும் போது ஏற்படும் உணர்வுகளும் விளைவுகளையும் நாமே அனுபவிப்பது வேறு விதமாக இருக்கும். உணர்வுப்பூர்வமாக நாம் வரலாற்றைப் பார்க்கும் போது தான் அதன் உண்மை நமக்கு நன்றாகப் புரியும். அந்த உணர்வுகளை எடுத்துக் காட்டவே மேலே கற்பனையான ஒரு நிகழ்வை உங்கள் சிந்தனையை தட்டி எழுப்ப, இன்றைய உலகியலில் நடப்பது போன்ற நிகழ்வை எடுத்துக் காட்டியுள்ளேன். மற்ற படி மேலேயுள்ள நிகழ்வுக்கும் நம் வரலாறுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

வளம் மிகுந்திருந்த நம் செல்வங்களைக் கவர்வதற்க்கு வேறு இடங்களில் இருந்த படையெடுத்து வந்தவர்கள் தங்கள் மொழி பண்பாடு சமயம் ஆகியவற்றை நம் மீது திணித்தனர். அவ்வாறு செய்யத் துணிந்தவர்கள் முதலில் நாட்டின் அரசனை அணுகி அவனுக்கு தங்கள் போதனைகளை போதித்து அவனை தமது சமயத்திற்க்கு மாற்றுவர். உலகிலேயே மிக உயரிய பண்பான, வந்தார் யாவரையும் இன் முகத்துடன் வரவேற்று, விருந்தோம்பி, அவர்களை வாழ வைக்கும் உயரிய பண்பை நாம் பெற்றிருந்ததால், அனைவரும் நம் ஊருக்குள் எளிதாக பிரவேசம் செய்தனர். மன்னரைச் சந்தித்தனர், தங்கள் சமயம் மாற்றினர். இவ்வாறு பாண்டிய நாடு சமணர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சிவ வழிபாடு குன்றியது. சிவாலயங்கள் வழிபாடு இன்றி இருளாகக் கிடந்தன.

மன்னன் சமண குருமார்களின் பேச்சைக் கேட்டு யாவும் செய்வார். ஆனால், அவனது மனைவியோ, சோழ நாட்டு இளவரசி. அவளும் அமைச்சர் ஒருவரும் தான் இன்னும் சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள். சமண குருமார்களின் வழிகாட்டுதல் படி, கண்டுமுட்டு கேட்டுமுட்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. திருநீறு பூசியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இத்தகைய சூழலில் தான், அரசியின் விண்ணப்பம் கேட்டு, சைவ சிறுவர் ஒருவர் தன் அடியார் கூட்டத்தோடு மதுரை வந்தார். சிறுவர் என்றால், சாதாரண சிறுவர் அல்ல. மூன்று வயது குழந்தையாக இருக்கும் போதே, உமையவளே நேரில் வந்து தந்த ஞானப்பாலை உண்டு சிவஞானம் பெற்றவர். சமணர்களின் கோட்டையான மதுரைக்கு வந்தார். சமணர்களால் அவர் தங்கியிருந்த மடம் தீ வைத்து சூறையாடப்படுகிறது. அவரது தெய்வ வாக்கால், மன்னருக்கு வெப்பு நோய் ஏற்படுகிறது. அந்நோயை சமணர்களால் தீர்க்க இயலவில்லை. அரசியின் யோசனைப் படி, அந்த சிறுவர் இந்த வெப்பு நோயைத் தீர்க்க அரண்மனை வருகிறார்.

சுற்றிலும் சமணர்கள். அவர்கள் தங்கள் சமய கொள்கைகளை உரக்கச் சொல்கின்றனர். இந்த சிறுவருக்கு எதிராக கூச்சலிடுகின்றனர். இவருக்கு துணையாக இங்கு இருப்பவர் அரசியாரும் ஒரே ஒரு அமைச்சர் மட்டும் தான். மற்று யாவரும் இவரது வருகையை விரும்பாதவர்கள். இவரை எப்படியாவது இங்கிருந்து அகற்றிவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இந்த சூழலை தெய்வச் சேக்கிழார் அவர்கள் பெரியபுராணத்தில் விரித்துரைப்பதைக் காண்போம்.

பாண்டிய மன்னன் சமணனாக இருப்பினும், தன் மனைவியை சைவராக இருந்து தன் சமய கடைமைகளை ஆற்ற அனுமதி தந்த பெரியோன். சிறு பிள்ளை செம்பொன் நிறத்தில் ஒளி வீசும் மணிப் பீடத்தில் எழுந்து அருளினார். பிள்ளையார், அரசியாருடைய அன்பிற்க்குரியவர். வேற்று சமயத்தவர் ஒருவர் சமணர்களின் கோட்டையான தலைநகர் திருஆலவாய் மதுரை மாநகரிலேயே நுழைந்து, அதுவும் மன்னனிம் அரண்மனைக்குள்ளேயே வந்து ஒளிவீசும் பீடத்தில் அமர்ந்திருந்தால், யாருக்குத் தான் பொறாமை வராது? அத்தனை பொறாமையிலே, இந்த காட்சியைக் கண்டு மனம் பொறுக்க முடியாமல், அச்சம் கொண்டு, அந்த அச்சத்தை மறைத்து துள்ளி எழுவது போல வந்து தங்கள் கண்கள் சிவக்க பலவாறு கூறினார்கள்.

காலை எழும் சூரியன் அழகிய கதிர்களோடு மிகவும் ஒளி பொருந்தி இருக்கும். அத்தகைய சூரியனின் ஒளியை கரு முகில்கள் மறைத்து விட முடியுமா ? அவ்வாறு சூரியனை மறைக்க முயலும் கருமுகில் போல பிள்ளையாரைச் சூழ்ந்து மறைக்க முயன்றனர் அமணர்கள். தங்கள் புனித நூலான ஆருகத நூலில் இருக்கும் வசனங்களைப் பிள்ளையார் முன் எடுத்துக் கூறி தங்களை தலைகளை அசைத்துக் குரைத்தார்கள்.

மொத்தமாகத் திரண்டு எழுந்து தன்னை நோக்கிக் குரைத்த சமணர்களை மிகவும் பொறுமையுடன் கேட்ட பிள்ளையார், உங்கள் நூல் கூறும் பொருள்களின் முடிவை உள்ளபடியே கூறுங்கள் என்று சொன்னார். உடனே, பலரும் எழுந்து துள்ளிக் குதித்துக் கொண்டு பிள்ளையாரைச் சுற்றி நின்று கொண்டு தங்கள் நூலின் வசனங்களை ஒவ்வொருவரும் ஒரே நேரத்தில் அலறிக் கதறினர். சிறு பிள்ளையை கருத்த மேனியுடைய கொடிய சமணர்கள் சூழ்ந்து கொண்டு கத்துவதை எந்த தாய் தான் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாள் ? தாயுள்ளம் கொண்டு மங்கையர்க்கு அரசியார், அதைக் கண்டு மனம் பொறுக்க முடியாமல், உடனே எழுந்து மன்னரை நோக்கி, மன்னா, இனிய அருள் பெற்ற இந்த பிள்ளையாரோ சிறுவர். ஆனால், சமணர்களாகிய இவர்கள் எண்ணற்றவர்கள் சூழ்ந்து கொண்டுள்ளனர். முதலில் பிள்ளையார் உங்கள் வெப்பு நோயின் மயக்கம் நீங்குமாறு அருள் செய்வார். பின்னர், இந்த அமணர்கள் வாது செய்ய வல்லவராக இருந்தால், பின்னர் வாது செய்யட்டும் என்று கூறினார். பிள்ளையாராகிய திருஞானசம்பந்தப் பெருமான், பாண்டிய மன்னன் கூன்பாண்டியன் (திருவருள் பெற்று ஆட்கொள்ளப்பட்ட பின்னர் நின்றசீர் நெடுமாற நாயனார்), மங்கையர்க்கரசியார் மற்றும் அமைச்சர் குலச்சிறை நாயனார் ஆகிய நால்வரும் நம் அறுபத்து மூவர்களுள் உள்ளவர்கள் என்பது நமக்குத் தெரிந்த விடயம்.

எத்தகைய காலத்திலும், நம் சமய உண்மைகளை நன்கு அறிந்து குற்றமறக் கற்றும், பழங்குருக்களிடம் உபதேசம் பெற்றும், குருவருளோடு திருவருள் பெற்றும், அந்த உண்மைகளைத் தைரியமாக எவரிடத்திலும் எங்கும் எந்த சூழலிலும் எடுத்துக் கூறும் வல்லமை மற்றும் இறையருள் பெற்றோர் வேண்டும். உலகமயமாக்கல் காரணமாக, உலகம் எங்கும் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட அஞ்ஞான மதங்கள் இன்று நம்மைச் சூழ்ந்துள்ள வேளையில், ஒளி பொருந்திய சூரியனாக திருவருள் பெற்றோரை நமக்கு இறைவன் அருள வேண்டும், அவர்களை நம் காலத்தில் நாமும் காண வேண்டும் என்பதே அன்புடையோர்களின் எண்ணமாக இருக்கிறது.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

தமிழ் மொழி இன்னும் இரண்டு தலைமுறைகளில் சாகும். ஆங்கில கலப்பின் அசுரப் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழ். 5/5 (2)

தமிழ் மொழி இன்னும் இரண்டு தலைமுறைகளில் சாகும். ஆங்கில கலப்பின் அசுரப் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழ்

இது நீங்கள் படிக்கும் இன்னும் ஒரு பதிவு அன்று. தமிழர்கள் ஆழ்ந்து சிந்தித்து மீண்டும் அலட்சியம் செய்து தூக்கத்திற்க்குப் போகாமல் உடனடியாக செயல்பட வேண்டிய தருணம் இது. இது ஒரு அபாய எச்சரிக்கை மணி.

இந்த சுய பரிசோதனையை இன்றே செய்து பாருங்கள். நீங்கள் ஒரு 5 நிமிடங்கள் பேசி அல்லது பேசுவதை உங்கள் கைபேசியில் ஒலிப்பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் பேசுவதில் எத்தனை ஆங்கில வார்த்தைகள் எத்தனை தமிழ் வார்த்தைகள் இருக்கிறது என்று எண்ணிப்பாருங்கள். 30-40 சதவிகிதத்திற்ககு மேல் தமிழ் வருகிறதா என்று பாருங்கள். மீண்டும் ஒரு முறை ஆங்கிலம் கலக்காமல் பேச முயற்சி செய்து பாருங்கள். இன்னும் 10 சதவிகிதம் மட்டுமே முன்னேறும். பல வார்த்தைகளுக்குத் தமிழில் என்ன வார்த்தை என்றே தெரியாமல் திணறுவீர்கள்.

நாம் தமிழர், நான் திராவிடன், தமிழ் தொன்மையான மொழி, தமிழனா இருந்தா ஷேர் பண்ணு என்றெல்லாம் வீர வசனம் பேசும் நாம் வெட்கித் தலை குனிய வேண்டிய விடயம் இது. கடந்த பல பத்தாண்டுகளில், எத்தனை அரசியல் கட்சிகள் தமிழை வைத்து அரசியல் செய்து விட்டன ? தமிழை வைத்து சம்பாதித்து விட்டன ? அவையெல்லாம் நம் தாய் மொழி தமிழை வளர்க்க ஏதாவது ஒரு சிறு துரும்பாவது முயற்சி செய்தனவா ? ஆங்கில கலப்பை தடுத்து நிறுத்த ஏதாவது முயற்சி செய்தனவா ?

அடுத்த தலைமுறை அல்லது உங்கள் குழந்தைகளின் பேச்சை இதே பரிசோதனைக்கு உட்படுத்துங்கள். அதன் முடிவு இன்னும் அபாயகரமாக இருக்கும். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க என்ன சிரத்தை எடுத்தீர்கள் ? உங்களின் அடுத்த தலைமுறைக்கு எத்தனை தமிழ் போதிக்கப்படுகிறது. தமிழைத் துறந்து பிற முக்கிய பாடங்கள் படிக்க வேண்டும் என்று மருத்துவர், பொறியாளர் என்று படிக்க வைத்தவர்கள் எல்லாம் இன்று மாதம் பத்தாயிரம் சம்பளத்திற்க்கு வேலை செய்யும் நிலை. பொறியாளர்களின் நிலையோ இன்னும் மோசம்.

இன்னொரு பக்கம் தமிழில் பேசுவதை இழிவாகத் தானே கருதுவது. உலகிலேயே யாருக்குமே இல்லாத வியாதி இது. உலகில் இருக்கும் அனைவரும் தங்கள் மொழியில் பேசுவதை மிகவும் பெருமையாக நினைக்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் மட்டும் இதற்குப் புறம்பாக இருக்கிறது. நம் தாழ்வு மனப்பான்மையை நன்றாகத் தூண்டி விட்டு, அதை பயன்படுத்திய பல காலம் அந்நிய ஆட்சி நடைபெற்றது. பல நூறு ஆண்டுகளாக நம்மை சீரழித்த அந்நிய ஆட்சியின் தாழ்வு மனப்பான்மையிலிருந்து நாம் இன்னும் மீளவே இல்லை. முக்கியமாக நம் இளைய தலைமுறையினருக்கு, வெளிநாடு படங்கள், கதை புத்தகங்கள் சிறந்தவை என்றும் நம் நாட்டு பொருட்கள் உப்பில்லாதவை என்று தவறான கண்ணோட்டம் புகுத்தப்படுகிறது. வியாபார நோக்கத்திற்க்காக நம் ஆட்களே இதற்குத் துணை போகிறார்கள். ஆகவே, இளைஞர்கள், தவறான பாதையிலேயே வளர்ந்து நம் சமுதாயத்தைச் சீரழிக்கின்றனர். வயது வந்து முதிர்வு வந்த பின்னர், தமிழில் பேச முயன்றாலும் முடியாத இழிவான நிலை. கேவலம்.

உலகிலேயே உயர்ந்த நூல்கள் இருப்பது தமிழில் தான். நான்கு வேதங்கள் இருந்தது தமிழில் தான். எண்ணற்ற நுண்ணிய அறிவுப் புதையல்கள் இருப்பது தமிழில் தான். இயல் இசை நாடகம் என்று பிரிவுகளில் தமிழ் வளர்ந்தது இங்கே தான். சங்கம் வைத்து தமிழ் வளர்ந்தது உலகிலேயே இங்கு தான். எத்தனை எத்தனை அரிய நூல்கள் ? இத்தனை நூல்கள் இருந்தும், நம் இளையவர்கள் சேக்ஸ்பியர் நாவல் பற்றி பெருமையாக பேசுவது எத்தனை இழிவான நிலை ? கொடுமை. தமிழின் வளர்ச்சிக்கு எல்லாக் காலங்களிலும் ஆட்சி செய்யும் மன்னர்கள் துணை நின்றார்கள். ஆனால், சனநாயக ஆட்சியிலோ, தங்கள் அரியணையைத் தக்க வைப்பதிலேயே மன்னர்கள் காலம் போக்குகிறார்கள். அப்படி நல்ல நிலையில் இருந்தாலும், அலட்சியமாக இதைப் பற்றி எதுவும் செய்வதில்லை.

தெய்வம் பேசிய தமிழ், தெய்வத்தமிழ் என்றெல்லாம் பெருமை பேசுகிறோம். அப்படி தெய்வம் தமிழில் என்ன பேசியது என்று என்றைக்காவது கேட்டதுண்டா ? அலட்சியமே நம்மை அழிக்கும் முதல் எதிரி.

ஆங்கில கலப்பை நீக்கிப் பேச நாம் என்ன முயற்சி செய்யப் போகிறோம் ? நம் மன்னர்களாகிய அமைச்சர்கள் என்ன முயற்சி செய்யப்போகிறார்கள் ? பேசுவதில் பலனில்லை. அவற்றை நடைமுறைப்படுத்தி மேம்படுத்தி சாதித்துக் காட்ட வேண்டும்.

ஒவ்வொருவரும் ஆங்கிலக் கலப்பு நீக்கி பேச முயற்சி செய்ய வேண்டும். பல ஆங்கில வார்தைதகளுக்குத் தமிழ் வார்த்தைகள் தேட வேண்டும். அவற்றைக் குறித்து வைத்துக் கொண்டு பயன்படுத்த வேண்டும். பழக பழக சில மாதங்களில் ஆங்கிலம் நீக்கி கட்டாயமாக நாம் பேச இயலும். சித்தரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பது பழமொழி. நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டிலும், அலுவலகத்திலும், நட்பு வட்டங்களிலும், உறவு வட்டங்களிலும் ஆங்கிலம் கலவாத தமிழ் பேச முயற்சி செய்யுங்கள். உங்கள் அடுத்த தலைமுறைக்கு மறவாமல் நல்ல தமிழ் பேச எழுத பயிற்சி கொடுங்கள். நீங்கள் வீட்டில் அவர்களோடு நல்ல தமிழில் பேசினாலே, அது அவர்களுக்குச் சிறந்த பயிற்சி. அதை விட வேறு பயிற்சி தேவையில்லை.

இதோ அபாய எச்சரிக்கை மணி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Please rate this

மகாசிவராத்திரி முழு இரவு ஜெபம் செய்ய தயாராகியாச்சா ? விடுமுறை கோரிக்கை No ratings yet.

மகாசிவராத்திரி முழு இரவு ஜெபம் செய்ய தயாராகியாச்சா ? விடுமுறை கோரிக்கை

பூமி சுற்றி வருவதில் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் புனிதமான ஒரு இரவு என்றால், அது மகாசிவராத்திரி தான். இந்த மகாசிவராத்திர முழுவதும் சிவனை சிந்தையில் வைத்து சிவனோடு மிக எளிதாக ஐக்கியமாகும் ஒரு ஈடு இணையற்ற அற்புதமான காலமாகும்.  இந்த மகாசிவராத்திரியை கொண்டாட, ஈசா யோகா மையம் சார்பில் முழு இரவு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குருவின் வழிகாட்டுதலோடு தியானம் செய்தல், தெய்வீகம் பரவக்கூடிய இசை, இறைவனை நினைந்தும், இறைவனின் கருணையை நினைந்தும் ஏற்படும் ஆனந்தம் மற்றும் நடனம், குருவின் உபதேசம், பயிற்சி பெற்ற கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் என்று இறைவனின் கருணை மழையில் நனைய நிகழ்ச்சி திட்டங்களோடு காத்திருக்கிறது ஈசா யோகா மையம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் மகாசிவராத்திரிக்கான விழா நிகழ்ச்சிகளை உறுதி செய்து காத்திருக்கிறது. மாலை இரவு முழுவதும் வரும் கூட்டத்தை சமாளிக்க தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெறுகிறது. மகாசிவராத்திரியை வீட்டில் இருந்து முழுவதுமாக கழிப்பதை விட, வீட்டில் சிறிது நேரம் பூசை செய்து விட்டு, சிவாலயங்கள் சென்று முழுநேரமும் அங்கு நம் நண்பர்கள், உறவினர்கள், சிவனடியார்கள், அங்கு நடக்கும் சொற்பொழிவுகள், தோத்திரங்கள், வழிபாடுகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு கழிப்பதே மிகவும் சிறந்ததாகும்.

மகாசிவாத்திரி அன்று விரதம் இருப்பது எப்படி ? சிவ வழிபாடு செய்வது எப்படி ?

இங்கு நேரடியாக செல்ல இயலாதவர்கள் நேரலையில் வெப்கேஸ்ட் (Webcast) இல் கலந்து கொண்டு வீட்டில் இருந்த படியே இணைந்து அவர்களோடு சிவ சிந்தனையில் திளைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகாசிவராத்திரியின் மகிமை சிறப்புகள் என்ன ?

பண்டிகைகளிலேயே சிறப்பான பண்டிகையாக நாம் தீபாவளி கொண்டாடுகிறோம். ஆனால், ஆன்மீகத்தில் சற்று உள்ளே எட்டிப் பார்த்தவர்கள், மகாசிவராத்திரியே மிகவும் முக்கியமான பண்டிகையாக கருதுகின்றனர். எல்லா பண்டிகைகளும் திருவிழாக்களும் நமக்கு சிறப்பு தான் என்றாலும், மகாசிவராத்திரி மிகவும் சிறப்பான ஒன்றாகும். ஏன் என்றால், இது நம் உயிரான ஆன்மாவை இறைவனோடு கலக்க வைக்கத் தரும் ஒரு வாய்ப்பாக அமைகிறது. இதை விட மிகச் சிறந்த வாய்ப்பு வாழ்கையில் வேறு என்ன இருக்கிறது ?

மகாசிவராத்திரி அன்று காலை முதலே விரதம் துவங்கி அன்று சிவாலயங்கள் சென்று வழிபட்டு முழு இரவு தூக்கமின்றி வழிபாடு செய்வதால், அடுத்த நாள் காலையில் நன்றாக தூக்கம் வரும். களைப்பாகவும் இருக்கும். குறிப்பாக அடுத்த நாள் வேலை நாளாக இருந்தால், வேலை கூட சிறிது பாதிக்கும். இந்த மிகச் சிறந்த சிவராத்திரியானதை கொண்டாட நமக்கு விடுமுறை அவசியம். மகாசிவராத்திரிக்கு விடுமுறை வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறுது. மகாசிவராத்திரியின் மகிமையை இன்னும் அனைத்து மக்களும் உணரவில்லை. அதை உணர்ந்துவிட்டால், அனைவரும் விடுமுறை கோருவர். இதை உணர்ந்து தமிழக அரசு மகாசிவராத்திரிக்கு விடுமுறை அளிக்க முன் வர வேண்டும்.

Please rate this

மகாசிவராத்திரி வழிபாடு ஏன் மிகவும் சிறப்பானது ? 5/5 (1)

மகாசிவராத்திரி வழிபாடு ஏன் மிகவும் சிறப்பானது?

சைவ சமயத்தவரின் மிகுந்து போற்றும் திருநாள் மகாசிவராத்தியாகும். அந்த மகாசிவராத்திரி எப்போது வருகிறது, அதன் சிறப்பு யாது என்பதைக் காண்போம்.

மகா சிவராத்திரி எப்போது வருகிறது ?

ஒவ்வொரு தமிழ் மாதத்தின் தேய்பிறை சதுர்த்தசி (அதாவது பௌர்ணமியிலிருந்து 14 ஆவது நாள்) அன்று இரவு சிவராத்திரி ஆகும். அதாவது இதை மாத சிவராத்திரி என்பர். மகா சிவராத்திரி என்பது மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி இரவாகும்.

மகா சிவராத்திரியின் சிறப்பு யாது ?

ஊழிக் காலம் என்பது பல்வேறு உலகங்களும் சிவபெருமானிடத்தே ஒடுங்கும் காலமாகும். பேரூழிக்காலம் என்பது, சிவபிரானைத் தவிர, மற்ற அனைத்துமே எம்பெருமானிடம் ஒடுங்கும் நிலையாகும். அவ்வாறு ஒரு முறை ஒடுங்கியிருந்த போது, மீண்டும் இப்பிரபஞ்சத்தைத் தோற்றுவித்து உயிர்களைக் காத்து அருளுமாறு கருணை கொண்டு, சிவபிரானின் சக்தி வடிவான தேவியானவள் சிவபிரானை நோக்கி இடைவிடாது தவம் செய்தாள். அதனை ஏற்ற சிவபிரான், மீண்டும் உலகங்களை உண்டாகச் செய்து உயிர்களைக் காத்து அருளினார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உமையவள் எம்பெருமானை ஓர் முழு இரவும் மனதில் தியானித்துப் போற்றிய நாளே மகாசிவராத்திரியாகும்.

மகாசிவராத்திரி அன்று பல்வேறு காலங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளதாக பதிவிடப்பட்டிருக்கிறது. மற்றொரு யுகத்தில் அடிமுடி தேடிய வரலாறு நிகழ்ந்த போது, இறைவன் ஒளிப்பிளம்பாய் அண்ணாமலையாராய் தோன்றி அருளியது மகாசிவராத்திரி அன்று தான். பிரம்மனும் திருமாலும் அறியாமையினால், தாமே பெரியவர் என்று கர்வங் கொண்டு தமக்குள் வாதிட்டுக் கொண்டனர். அவர்களின் அறியாமையைப் போக்க எண்ணிய சிவபெருமானார் அவர்கள் முன்பு நெடும் ஒளிப்பிளம்பாகத் தோன்றி, அவர்களில் யார் ஒருவர் தனது கால் அடியையோ அல்லது தலை முடியையோ காண்பவரே வென்றவர் என்று சொல்ல, திருமால் பன்றி உருக்கொண்டு பூமியைத் துளைத்து இறைவனின் திருவடியைத் தேடிச் செல்லலானார். பிரம்மனோ, அன்னப்பறவை உருக்கொண்டு, இறைவனின் திருமுடியைக் காண மேலே பறந்து சென்றார். பல யுகங்கள் கடந்தும் இருவராலும் அடியையோ முடியையோ காண முடியாத நிலை தோன்றவே, சிவபெருமானின் தலையிலிருந்து வந்த தாழம்பூ மலரிடம் தான் இறைவனின் முடியைப் பார்த்ததாக பொய்ச்சாட்சி சொல்லக் கேட்க, அம்மலரும் பொய் சாட்சி சொல்லி, பிரம்மனுக்கும் தாழம்பூ மலருக்கும் இப்பூவுலகில் கோவில் மற்றும் வழிபாடு கிடையாது என்று சாபம் பெற்றனர். இவ்வாறு திருவண்ணாமலையில் அனைவரும் காண, ஒளிப்பிளம்பாய் நின்ற சிவபெருமான் தோன்றியது மகாசிவராத்திரி அன்றாகும்.

மற்றொரு காலத்தில், ஒரு காலத்தில் ஒரு குரங்கானது வில்வ மரத்தின் மீது அமர்ந்து இரவு முழுவதும் வில்வ இலைகளைப் பறித்துக் கீழே எறிந்தது. அம்மரத்தின் அடியின் கீழே சிவலிங்கம் ஒன்று இருந்தது. வில்வ இலைகள் எல்லாம் இலிங்கத்தின் மீது அர்ச்சனையாக விழுந்தது. எதேச்சையாக நிகழ்ந்தாலும், அகமகிழ்ந்த சிவபிரான் அந்த குரங்கிற்கு காட்சி கொடுத்து அடுத்த பிறவியில் சக்கரவர்த்தியாக பிறக்குமாறு அருளிச் செய்தார். இவை அத்தனையும் எதிர்பார்த்திராத அந்த குரங்கானது, இறைவனிடம், தான் சக்கரவர்த்தியாக பிறக்கும் போது, தனது முகத்தை குரங்காகவே இருக்குமாறு அருளிச் செய்யுமாறு கேட்டது. இதைக் கேட்டு, தன் பழைய பிறப்புக்களையும் நிலையையும் மறவாதிருக்க குரங்கு அவ்வாறு கேட்டதையுணர்ந்த சிவபிரான் சிரித்துக் கொண்டு அவ்வாறே அருளிச் செய்தார். அந்தக் குரங்கே அடுத்த பிறவியில் முசுகுந்தச் சக்கரவர்த்தியாகப் பிறந்து சிறப்புற்றது.

இத்தகைய சிறப்பு மிகுந்த மகாசிவராத்திரி அன்று நாமும் சிவ வழிபாடு செய்து பலன் பெறுவோம்.

Please rate this

மகாசிவராத்திரி வழிபாடு செய்வது எப்படி ? விரதம் எப்படி இருப்பது ? No ratings yet.

மகாசிவராத்திரி வழிபாடு செய்வது எப்படி ? விரதம் எப்படி இருப்பது ?

மகா சிவராத்திரி அன்று கோவில்களில் எவ்வாறு வழிபாடு நடக்கிறது ?

மகா சிவராத்திரி இரவை நான்கு காலமாக பிரித்து ஒவ்வொரு காலமும் சிறப்பு வழிபாடு நடைபெறும். ஒவ்வொரு காலமும் எந்த திருவுருவத்திற்க்கு எந்த அபிஷேக அலங்காரப் பொருட்கள் வைத்து வழிபட வேண்டும் என்ற தகவல்கள் இங்கே பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி ?

சிவராத்திரி முதல் நாளன்று விரதத்தைத் துவக்க வேண்டும். அன்று முழுவதும் ஒரு வேளை உணவு உண்ணலாம். அன்று முழுவதும் சுகபோகங்களைத் தவிர்த்தும், சினிமா/டிவி பார்ப்ப்தைத் தவிர்த்தும் நம் சிந்தனையில் சிவத்தை நிறுத்தி சிவனோடு ஒன்றியும் சிவ மந்திரங்கள், தமிழ் வேதங்களான பன்னிரு திருமுறைகளை ஓதியும் வழிபாடு செய்ய வேண்டும். விரதம் மேற்கொள்ளும் போது உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். சில கோவில்களில் தொடர்ந்து அன்னதானம் செய்து கொண்டே இருக்கிறார்கள். நம் உடல் உணவின்றி சிறிது வருந்தும் போது தான் எளிதாக வசப்படும். நாம் சொன்னபடி நம் மனது கேட்கும். அதற்காகத் தான் விரதமே. அவ்வாறு கேட்கும் மனத்தை இறைவனிடத்தில் செலுத்தி, அவனோடு சிந்தையில் இரண்டறக் கலந்து நிற்க வேண்டும். மறுநாள் காலை குளித்து பூசைகள் செய்து, மீண்டும் சிவாலயங்கள் சென்று விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

மகா சிவராத்திரி அன்று நாம் எவ்வாறு வழிபடலாம் ?

சில காலம் முன்பு, சிவராத்திரி அன்று, இரவு முழுவதும் கண் விழித்திருக்க வேண்டும் என்பதற்க்காக வீடுகளிலும் பொது இடங்களிலும் டிவிக்களில் சினிமா பார்ப்பதும், தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளும் அரங்கேறின. இறைவனை சிந்தையில் நினையாது செய்யும் எந்த ஒரு காரியத்தாலும் எந்த ஒரு பலனும் இல்லை. விரதம் இருப்பதே, நாம் தினமும் வழக்கமாக செய்யும் செயல்களைத் தவிர்த்து, உணவின்மையால் உடல் சிறிது தளர்ந்து, அந்தத் தளர்வின் காரணமாக, மனது அங்கும் இங்கும் எங்கும் அலையாமல், ஓரிடத்தே நிலை நிறுத்தப்பெறும் நிலையை எய்துவதால், அம் மனத்தை சிவபெருமானிடத்து சமர்ப்பித்து, அவனோடு இரண்டரக் கலந்து நிற்பதேயாகும்.

ஆகவே, மகா சிவராத்திரி அன்று காலை தொடங்கி, மறுநாள் காலை வரை விரதம் இருந்தும், திருக்கோவில்களிலும், இல்லங்களிலும் வழிபாடு செய்தும், திருமுறைகள் மற்றும் குறிப்பாக திருக்கேதீச்சரப் பதிகங்கள், திருவண்ணாமலைப் பதிகங்கள் ஆகியவற்றைக் கோவில்களிலும் இல்லங்களிலும் ஓதி வழிபாடு செய்ய வேண்டும். இயன்ற வரை, உங்களுக்கு அருகில் உள்ள கோவில்களிலோ, சிவாலயங்களிலோ சென்று அங்கே சிந்தையை இறைவனிடத்தில் செலுத்தி வழிபாடு செய்யுங்கள். சிவராத்திரி அன்று சிவாலய தரிசனம் கண்டிப்பாக செய்ய வேண்டும்.

சிவராத்திரி வழிபாட்டின் பலன்கள் யாது ?

சிவராத்திரி வழிபாட்டின் காரணமாக, உங்களுக்குத் தற்போது இருக்கும் கவலைகளும், வர இருக்கும் கவலைகளும் வலுவிழந்து நீங்கும். நீங்கள் முன்னெடுத்த காரியங்கள் வெற்றி பெறும். சிவாயநம என்று நம் சிந்தனையில் நிலைத்திருந்தால், வேறு அபாயம் நம்மை ஒரு போதும் நெருங்காது. எண்ணும் இடங்கள் எல்லாம் செல்லத்துடிக்கும் மனமானது மிகவும் இலகுவாக நம் கட்டுக்குள் வரும். இதனால், துன்பம் தரும் செயல்களில் வீழ்ந்திடாது, நன்மை தரும் செயல்களில் மட்டுமே நிலைத்திருந்து நமக்கு நன்மையே வந்து சேரும். இப்பிறவியில் நமக்கு வரும் துன்பங்களை வலுவிழக்கச் செய்து, நமக்கு நன்மையே அருளி, நம் தீவினைகளையும் சுட்டெரித்து, நமக்கு முக்தியும் தந்தருள்வார் சிவபெருமான்.

 

Please rate this

சிவபெருமானுக்கு ஓர் இருக்கையோடு காசி மகாகல் எக்ஸ்பிரஸை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி 5/5 (6)

சிவபெருமானுக்கு ஓர் இருக்கையோடு காசி மகாகல் எக்ஸ்பிரஸை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

காசி மகாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதன் முதலில் சிவபெருமானுக்கு ஓர் இருக்கை அமைப்பு

காசி மகாகல் எக்ஸ்பிரஸ் என்ற புதிய ரயிலை நேற்று ஞாயிறன்று பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் காசியிலிருந்து துவக்கி வைத்தார்கள். இந்த ரயிலானது இரண்டு மாநிலங்களில் உள்ள மூன்று ஜோதிர்லிங்க சிவாலயங்களை இணைத்துச் செல்வதாகும்.

இந்த ரயிலில் உயர்தர சைவ உணவு வழங்கும் மிகவும் சுத்தமாகவும் ஆரோக்கியமானதாகவும் உள்ள உணவறை உள்ளது. மேலும் நல்ல படுக்கை வசதி, நல்ல பராமரிப்பு வசதி மற்றும் பயண காப்புத்திட்டம் என்று பயணம் இனிமையாக அமைய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் திரு பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்த ரயிலானது இந்தூர் அருகிலுள்ள ஓம்காரேஸ்வரர் ஜோதிர்லிங்க தலம், உஜ்ஜயினி மாகாளேஸ்வரர் திருக்கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் ஆலயம் ஆகிய மூன்று ஜோதிர்லிங்க தலங்களையும் இணைத்துச் செல்லும்.

இந்த ரயிலில் சிவபெருமானுக்கு என்று தனியாக ஒரு இருக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. உலக வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு ரயிலில் இறைவனான சிவபெருமானுக்கு ஒரு இருக்கை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இருக்கையின் மீது கோவில் படம் வரையப்பட்டுள்ளது. யாரும் அறியாமல் அந்த இருக்கையில் அமர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, என்று வடக்கு ரயில்வே செய்தியாளர் திரு தீபக்குமார் தெரிவித்தார்.

மெல்லிய தெய்வீக பாடல்களுடன், ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு பாதுகாவலர்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சைவ உணவு மட்டும் தான் வழங்கப்படுகிறது. மேலும், ரயில் முழுவதும் 3 ஆம் வகுப்பு ஏசி பெட்டிகளாக அமைக்கப்பட்டுள்ளது. வாரத்திற்க்கும் மூன்று முறை வாரணாசியிலிருந்து இந்தூர் வரை செல்கிறது.

Please rate this

இறைவனை அறியாத கிராமங்களை எப்படி விழிப்படையச் செய்வோம்? No ratings yet.

இறைவனை அறியாத கிராமங்களை எப்படி விழிப்படையச் செய்வோம்?

கடந்த சில பத்தாண்டுகள் நமக்கு மிகவும் சவாலாக இருந்தது. நம் சமய உணர்வு மொழி உணர்வு ஆகியவற்றை மழுங்கச் செய்து நம் மொழி சமயங்களுக்கு நமக்கே தெரியாமல் மிகுந்த பெருந்த சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிப் பாடங்களில் தேவாரமும் திருவாசகமும் படித்து வந்தோம். சமய பாடங்கள் என்றே ஒரு தனி பாட அமைப்பு இருந்தது. அனைவரும் படித்து வந்தோம். பின்னர் மெல்ல மெல்ல நம் சமயங்கள் பற்றிய செய்திகளை பள்ளிப் பாடங்களிலிருந்து நீக்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு சிறு கோவில் இருந்தது. அதில் வெள்ளிக்கிழமை தோறும் அபிஷேகமும் வழிபாடும் நடந்தது. அனைத்து மாணவர்களும் அதில் பங்கு பெற வேண்டும். இவை அத்தனையும் திராவிடர்கள் என்று தங்களை கூறிக் கொண்ட அரசு கொண்டவர்கள் நீக்கி விட்டனர். நம் சமய ஞானத்தை சிறு வயதிலேயே மழுங்கடித்து விட்டனர். சமய உணர்வு இல்லாத பிணமாக நம்மை அலைய விட்டு விட்டனர். இன்று நாம் திருநீறு பூசுவதற்க்கே வெட்கப்படுகிறோம், அஞ்சுகிறோம். நம் நாட்டிலேயே நாம் நம் மொழி, சமய உணர்வின்றி பிணமாக நடமாடுகிறோம். இதை விட ஒரு இழிவான நிலைக்கு யாரும் செல்ல முடியாது. அத்தகைய இழிவான நிலைக்கு நம்மைத் திராவிட அரசுகள் தள்ளி விட்டன. இது அரசியல் பதிவு அல்ல, நமக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சொல்லும் பதிவு.

தமிழகத்தைச் சேர்த்து இன்று இந்தியாவில் எத்தனையோ கிராமங்களில் இதை பிணங்களை நடமாட விட்டு விட்டார்கள். இதனாலேயே, பாதுகாப்பு வேலி இல்லாத நம் கிராமங்களுக்குள் அந்நிய மதத்தினர் மெல்ல மெல்ல ஊடுறுவிச் சென்று, நம் குழந்தைகளுக்குச் சாக்லேட் கொடுத்து அவர்களை முதலில் கவர்ந்தும், அவர்கள் சார்ந்த பள்ளிக்கூடங்களை எழுப்பியும் மெல்ல மெல்ல அவர்களின் மதத்தைப் புகுத்தி இன்று பெருமளவில் நம்மவர்களை மதம் மாற்றம் செய்து பெரிய கூட்டமாக உட்கார்ந்து விட்டார்கள். மேலும் தமிழகம் முழுவதையுமே அவர்கள் மதத்திற்க்கு மாற்றுவோம் என்று சவால் விடுகிறார்கள்.

அந்நியர்கள் நம் நாட்டை விட்டு ஓடிப்போய், நம் பாரதம் சுதந்திரம் பெற்ற பின் 70 ஆண்டுகளில் எத்தனை பெரிய இழப்பை நாம் சந்தித்து விட்டோம் ? அந்நியர்களின் ஆட்சிக் காலத்தில் கூட நாம் இத்தனை பெரிய இழப்புகளைச் சந்திக்கவில்லை. நம் பண்பாடு, மொழி, கோவில்கள், சமயம் என்று நமக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்பின் அளவு அளவிட முடியாதது.

இன்று நம் கிராமங்கள் அனைத்திலும் நம் மொழி மற்றும் சமய விழிப்புணர்வு இல்லாத அப்பாவி மக்கள் இருக்கின்றனர். ஒவ்வொருவர் கையிலும் கைபேசி இருந்தாலும், எத்தனை பொய்ச் செய்திகள் ? அந்த செய்திகளை அனுப்பும் அத்தனை ஊடகங்களும் அந்நியர்கள் விட்டுச் சென்ற மீதமுள்ளவர்களின் பிடியில் இருக்கிறது. இது நம் மொழி, பண்பாடு சமயம் ஆகியவற்றின் பிடிப்பை மேலும் வலுவிழக்கச் செய்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், காலகட்டத்தில் தான் இந்துக்களாகிய நாம் வாழ்ந்து வருகிறோம்.

இனி என்ன செய்யப் போகிறோம் ?

ஒவ்வோரு இந்துவும் உங்கள் ஊரில் இருக்கும் இந்து அமைப்புகளோடு இணைய வேண்டும். அமைப்புகள் இல்லையென்றால், உங்கள் ஊரில் உள்ள கோவில்களுக்கு வரும் அன்பர்கள் இணைந்து ஒரு சபை போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும். உங்கள் குழு மாதம் ஒரு முறை அல்லது இரு முறை, ஞாயிற்றுக் கிழமைகளில் ஏதாவது ஒரு கிராமத்திற்குச் சென்று அங்குள்ள கோவில்களிலும் ஊர் மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தச் செய்ய வேண்டும்.

இன்று நம் சமயங்களுக்கு நிறைய சேனல்கள், செய்திகள், குழுக்கள் வந்துவிட்டன. ஆகவே, நம் சமயத்தை நன்கு நாம் முதலில் அறிவோம். நம் குழுக்களில் இருக்கும் அனைவரும் அறிவோம். பின்னர் நாம் செல்லும் கிராமங்களில் அறிவுறுத்துவோம். ஒவ்வொரு இந்துவும் களத்தில் இறங்கி களப்பணி செய்யாமல் நம் மொழி சமயங்களை நாம் காப்பாற்ற இயலாது.

 

 

Please rate this

மாடக்கோவில்களைக் கட்டி உயர்ந்த கோச்செங்கட்சோழ நாயனார் 5/5 (1)

யானை ஏறா மாடக்கோவில்களைக் கட்டி உயர்ந்த கோச்செங்கட்சோழ நாயனார்

யானை ஏறா மாடக்கோவில்களைக் கட்டி உயர்ந்த கோச்செங்கட்சோழ நாயனார்

கோச்செங்கட்சோழ நாயனார் குருபூசை: மாசி சதயம்

கோவில்களின் அமைப்புகள் ஏழு வகைப்படும். அதில் ஒன்று தான் மாடக்கோவில். பெருங்கோவில் என்றும் அழைக்கப்படும். இது யானைகள் ஏற இயலாத வண்ணம் குறுகிய படிக்கட்டுகளுடன் பூமி மட்டத்திற்க்கு மேலே அமைக்கப்படுவதே மாடக் கோவிலாகும்.

திருஆனைக்கா கோவில் தல வரலாறு அனைவரும் அறிந்திருந்தாலும், அறியாவதவர்களுக்காக ஒரு சிறிய முன்னுரை. சிவபூத கணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபத்தினாலே ஒருவர் சிலந்தியாகவும் மற்றொருவர் யானையாகவும் பிறந்து சிவபெருமானை வழிபட்டு வந்தனர். திருச்சி அருகே திருஆனைக்கா ஊரில், வெண்நாவல் மரத்தின் அடியிலே மறைவிலிருந்து வெளிப்பட்ட சிவலிங்கத்தை இருவரும் பூசை செய்து வந்தனர். யானையானது தினமும் சிவலிங்கத்தையும் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்து நீரால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்து வந்தது. சிலந்தியோ, மரத்தின் சருகுகள் இறைவன் திருமேனி மீது விழாத வண்ணம் இறைவருக்கு மேலே வலை பின்னியது. இதையும் தூசி என்று எண்ணி யானையானது தினமும் அந்த வலையை அகற்றி வழிபட்டது. சிலந்தியும் தளராமல் தினமும் வலை பின்னியது.

பொறுமை இழந்த சிலந்தி ஒரு நாள் யானையின் துதிக்கையின் உள்ளே நுழைந்து தன்னால் இயன்ற அளவு கடித்து வைக்க, இதை எதிர்பாராத யானை, தன் துதிக்கையைக் கீழே அடித்து அடித்து திணறியது. இதன் முடிவில் இரண்டும் உயிரிழந்தன. கயிலாயத்தை அடைந்த இரண்டும் சிவபெருமானை தியானித்து வந்தன.

சுபதேவன் என்ற ஒரு சோழ மன்னன் தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாமையால், தனது மனைவி கமலவதியுடன் சிதம்பரம் சென்று ஆடல்வல்லானை வழிபாடு செய்து வந்தார். இறைவரின் திருவருளால் புத்திர பாக்கியம் பெற, இந்தப் பிள்ளை இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறந்தால் மூன்று உலகையும் அரசாள்வான் என்று சொல்ல, கமலவதியோ, தன்னைத் தலைகீழாகக் கட்டித் தூக்குங்கள் என்று உத்தரவிட ஒரு நாழிகை கழித்துப் பிறந்தார் சிலந்தியாக இருந்த சிவகணம். இதனால், இவருடைய கண்கள் சிவந்து இருக்க, என் கோச்செங்கண்ணானோ என்று சொல்லிக்கொண்டே கமலவதி இறந்துவிட்டாள். சுபதேவன் தன் புதல்வனை வளர்த்து முடிசூட்டிப் பின்னர் சிவபதமும் அடைந்தார்.

கோச்செங்கட்சோழனோ, இறைவனாருடைய திருவருளினாலும், பூர்வ பிறப்பின் வாசனையாலும், சைவ நெறி தழைத்தோங்க பல சிவாலயங்களைக் கட்டுவிக்கத் துவங்கினான். அவை யானை ஏறாத வண்ணம் குறுகிய படிக்கட்டுகளை உடையதான மாடக்கோவில்களாகக் கட்டுவித்தான்.

ஒன்றல்ல இரண்டல்ல, 70க்கும் மேற்பட்ட மாடக்கோவில்களைக் கட்டுவித்தார் கோச்செங்கட்சோழனார். இன்றைய காலகட்டத்தில் நம்மால் கற்பனையிலும் காண இயலாத இத்தகைய உயர்ந்த சிறப்பு மிக்க மாடக்கோவில்கள் சிவபெருமானின் கருணையினாலே கட்டப்பட்டு இன்றும் நம் கைகளில் தொட்டு வணங்கக் கூடிய விலைமதிப்பற்ற புதையலாக நம்மிடையே உள்ளது. சிவபெருமானின் கருணையையும், கோட்செங்கட்சோழ நாயனாரின் கருணையையும் என்னவென்று சொல்வது ? எத்தனை பெரிய பேறு பெற்றோம் நாம் ? விலைமதிப்பற்ற திருவருளால் நமக்குக் கிட்டிய இந்தக் கோவில்களைக் கட்டிக் காப்பதே நமது தலையாய கடமையன்றோ ?

பின்னர் தில்லையை அடைந்து ஆடல்நாயகனைத் தரிசித்து, அங்கு தில்லைவாழ் அந்தணர்களுக்கு மாளிகைகள் கட்டுவித்துக் கொடுத்தும், பல்வேறு சிவதொண்டுகள் செய்தும், சிவபெருமான் திருவடியை அடைந்தார்.

மாடக் கோவில்கள் இரண்டு, மூன்று, ஐந்து அல்லது ஒன்பது நிலைகளாக கட்டப்படுகின்றன. இரண்டு நிலை கோவில் அமைப்பானது, முதலில் தரைத்தளமும், பின்னர் தூண்களும் சுவர்களும் எழுப்பப்பட்டு, முதல் தளம் அமைக்கப்படுகிறது. பின்னர், சுவரும் இரண்டாவது தளமும் அமைக்கப்பட்டு அதன் மேலே கழுத்து, கூரை, கலசம் ஆகியன நிறுவப்படுகின்றன. அதிக எண்ணிக்கையில் உள்ள நிலைகளுக்கு, அத்தகைய சுவரும் தளங்களும் அமைக்கப்படுகிறது.

திருச்சி அருகில் திருவானைக்கா கோவில், திருப்பெருவேளூர் அபிமுக்தீஸ்வரர் கோவில், திருக்குடவாயில் திருக்கோனேசுவரர் திருக்கோவில், திருவைகல் மாடக்கோவில், திருவலிவலம் மனத்துணைநாதர் திருக்கோவில், திருக்கைச்சினம் திருக்கைச்சினநாதேசுவரர் திருக்கோவில், அம்பர் மாகாளேஸ்வரர் திருக்கோவில், ஆவூர் பசுபதீசுவரர் திருக்கோவில் என்று எழுபதுக்கும் மேற்பட்ட கோவில்களில் சிவபிரானார் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். வாழ்க்கையில் ஒரு முறையானும் இந்த கோவில்களுக்குச் சென்று அதன் கட்டமைப்புகளைக் கண்டும், இறைவனை முறையாக வழிபட்டும் திருவருள் பெற்றுத் திரும்புவோம். இப்போது இல்லையேல், எப்போதும் இல்லை. ஆகவே உடனே திட்டமிட்டு இக்கோவில்களுக்குச் சென்று வருவோம். 

 

Please rate this

தெப்பல் திருவிழா சென்னையில் ஓர் கிரிவலம் அரசன்கழனியில் 5/5 (1)

தெப்பல் திருவிழா சென்னையில் ஓர் கிரிவலம் அரசன்கழனியில்

சென்னையில் ஓர் கிரிவலம் என்றாலே அரசன்கழனி ஔடதசித்தர் மலை அருகில் அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரர் ஆலயம் தான் நினைவுக்கு வரும். இத் திருக்கோவிலில் இருந்து ஒவ்வொரு மாதமும் நிறைமதி நாள் தோறும் மாலை 5 மணிக்கு சில ஆயிரக்கணக்கானோர் இணைந்து தமிழ் வேதமாம் பன்னிரு திருமுறைகளைத் தலையில் ஏந்தியும், சிவ வாத்தியம் இசைக்க ஔடதசித்தர் மலையைக் கிரிவலம் வரும் நிகழ்வு நடைெபற்று வருகிறது.

மலைவலம்

கடந்த தை மாதம் நடைபெற்ற நிறைமதி மலைவலத்தின் போது மாலை 5 மணிக்கே திரளான மக்கள் அரசன்கழனியில் குடி கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு கல்யாணபசுபதீஸ்வரரை வணங்கி வலம் வந்து மலைவலம் செல்வதற்க்காக காத்திருந்தனர்.  மலைவலம் துவங்கிய பின்னர், கயிலாய வாத்தியங்கள் முழங்க, சிவ பக்தர்கள் மிகவும் பக்தியுடனும் ஆர்வத்துடனும் வலம் வந்தனர். மலைவலத்தின் போது கிரிவலப் பாதையில் உள்ள விநாயகர் மற்றும் முருகர் ஆலயங்களிலும் தரிசனம் செய்து தங்கள் மலைவலத்தைத் தொடர்ந்தனர். மலையின் கிழக்குத் திசைக்கு வந்த போது தீபம் ஏற்றப்பட்டு, மலையின் மேலே குடிகொண்டிருக்கும் ஈசுவரனுக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது.

தெப்பல் திருவிழா

மலைவலம் முடிந்த பின்னர், முதன் முறையாகத் தெப்பல் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த தெப்பல் திருவிழாவைக் காண, மலைவலம் வந்த பக்தர்களும், ஊர் மக்களும் திரளாக குளத்தைச் சுற்றித் திரண்டிருந்தனர். கல்யாணபசுபதீஸ்வரருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னர்,  தெப்பலில் எழுந்தருளிய இறைவருக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அப்போது தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சிவ பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளந்தது.

ஏக இறைவனாம் பிறப்பு இறப்பு அற்ற சிவபெருமான் விடைக் கொடிகள் பறக்க, பக்தர்கள் படை சூழ, வாத்தியங்க முழங்க, திருமுறைகள் ஓத, திருக்குளத்தில் எழுந்தருளி குளத்தைச் சுற்றி வலம் வந்தார். இந்த கண்கொள்ளாக் காட்சியை  பல்லாயிரக் கணக்கானோர் கண்டு களித்து ஆனந்தம் அடைந்தனர். குளங்களின் அனைத்து பக்கங்களிலும் பக்தர்கள் குழுமியிருந்து இந்த விழாவினைக் கண்டு களித்தனர். பின்னர், பெண்கள் திரளாக வந்து குளத்தில் நீரில் விளக்கை ஏற்றினர். நூற்றுக்கணக்கான விளக்குகள் மிகவும் அழகான தீப ஒளியை ஒளிர்ந்து கொண்டு நீரில் ஆடிக் கொண்டே சென்றது காண்போருக்கு மிகவும் பேரானந்தத்தைக் கொடுத்து சொல்ல இயலாத புதிய அனுபவத்தைக் கொடுத்தது.

சிவபெருமானின் கொடையும் நன்றி உரைத்தலும்

சிவபெருமானின் திருக்கருணையினாலே, அவனது அருளே இயற்கை வளங்களாக நமக்குக் கொடையளித்துள்ளான். ஆகவே, அவற்றைப் பாதுகாப்பது மட்டுமின்றி அவற்றை இறைவன் திருவுவமாகவே பாவித்து பூசை செய்வது இறைவனே நமக்குக் காட்டிய மிக உயர்ந்த தத்துவமாகும். இத்தகைய வழிபாட்டு முறையினை நம் முன்னோர்கள் இடையராது கடைப்பிடித்தமையால் எவ்வித குறையுமின்றி நல்ல உணவு, நீர், காற்று என்று அத்தனை வளங்களும் வாய்க்கப் பெற்று சிறப்பாக வாழ்ந்தனர். நாம் மீண்டும் சிறப்பான வாழ்வு வாழ இறைவனின் கொடையை மறவாது, அவனுக்கு நன்றி சொல்லும் விதமாக திருவிழாக்களை இடையறாது கொண்டாடிக் கொண்டே இருக்க வேண்டும்.

மலைவலம் மற்றும் தெப்பல் திருவிழா ஏற்பாட்டுக் குழு

இந்த மலைவலத்தையும் தெப்பல் திருவிழாவையும் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர், மலைவல ஏற்பாட்டுக் குழுவினர். கோவில் பணிகளில் துவங்கி, சாலைகளில் பக்தர்களை மிகவும் பத்திரமாக அழைத்துச் சென்று திருப்பி அழைத்து வரும் வரை, குழுவினர் மிகுந்த சிரத்தையோடும் ஆர்வத்தோடும், ஆத்மார்த்த பங்களிப்பு செய்கின்றனர். அக்குழுவினருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

அந்த திருவிழாவில் இருந்து இங்கே சில காட்சிகள்.

தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!

திருச்சிற்றம்பலம்.

 

 

 

Please rate this

காரி நாயனார் வரலாறு உணர்த்தும் வாழ்வியல் குறிப்புகள் 4.67/5 (3)

காரி நாயனார் வரலாறு உணர்த்தும் வாழ்வியல் குறிப்புகள்

காரி நாயனார் குருபூசை: மாசி பூராடம்

திருக்கடவூரிலே அந்தணர் குலத்தில் அவதரித்து சிவனின் பால் அன்பு பூண்டு திருத்தொண்டு புரிந்தவர் காரி நாயனர். காரி நாயனாரின் வரலாறு மிக சில வரிகளிலேயே படித்து விடலாம். சுருக்கமாகக் கூறினால், காரி நாயனார் தமிழின் மீது மிகுந்த அன்பு பூண்டு நல்ல தமிழ் வளமை பெற்று, வண் தமிழில் துறைகளின் பயன் தெரிந்து, நன்றாகச் சொல் விளங்கிப் பொருள் மறைய காரிகோவை என்ற நூலை இயற்றினார். இது ஒரு கோவைப் பாட்டாகும். வண் தமிழ் என்பது தமிழின் பல வளமையான பகுதிகளை நன்றாக அறிந்துணர்ந்து பயன்படுத்துவதாகும்.

காரிகோவை நூலை மூவேந்தர்களிடமும் சென்று அவர்கள் மகிழும்படி எடுத்துக் கூறி, அம்மன்னர்களிடம் இருந்து பல்வேறு திரவியங்களைப் பரிசாகப் பெற்றுக் கொண்டு, அவற்றை வைத்து பல சிவாலயங்களைக் கட்டுவித்தும், பிற சிவனடியார்களுக்கு உதவி செய்தும் வாழ்ந்து வந்தார். இறுதியில், இறைவனுடைய திருவருளினாலே, இந்த உடலோடு வடகயிலை அடையும் பாக்கியமும் பெற்றார்.

உலகியலில் உழன்று கொண்டு இறைவனை நினையாது சுற்றித் திரியும் ஆன்மாக்களை மிக வன்மையாகவே சாடுபவர் நம் திருநாவுக்கரசர் பெருமான். இறைவன் தன்னை இவ்வுலகில் விரும்புவோர்க்கு உணர்த்த, பல்வேறு வடிவங்களாகவும், திருவுருவங்களாகவும் வந்தும், விடைக்கொடி, திருநீறு, உருத்திராக்கம் என்று பல்வேறு கருவிகளை அருளியும், கோவில்களையும், இந்த உலகில் எவ்வாறு வாழ வேண்டும் என்ற சரியை, கிரியை, யோகம் ஞானம் என்ற நெறிகளை உபதேசஞ் செய்தும்,  அந்த நெறிகளில் நின்று உணர்த்தியும், பல வேதங்கள் ஆகமங்கள் உபதேசஞ் செய்தாலும், எவற்றையுமே கவனிக்காமல், தம் ஞானப் பொறிகளை முடக்கித் திரிபவர்களை, உங்கள் மனம் ஏன் இறைவனிடத்தில் ஈடுபடவில்லை என்று வினவுவார் நாவுக்கரசர்.

அறம் பொருள் இன்பம் வீடு என்று நான்கு வேதங்களும் ஆகமங்கள் அருளியும், அந்த நெறிகளின் படி வாழ்ந்த எண்ணற்றவர்களில் ஒரு சிலரை நமக்கா நாயன்மார்களாகத் தொகுத்துக் கொடுத்து, வாழ்கை என்றால் இவ்வாறு தான் வாழ வேண்டும் என்றும் இறைவனார் காட்டிக் கொடுத்துள்ளார். ஒவ்வொரு நாயன்மார் வரலாறும் நாம் நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியவற்றை அப்படியே எடுத்துக் காட்டுகின்றன.

கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்

திருத்தொண்டத்தொகை – சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

தெய்வம் பேசிய மொழியாம் தெய்வத் தமிழை நாம் அனைவரும் குற்றமற கற்க வேண்டும். ஆங்கிலத்தோடும் பிற மொழி கலப்போடும் பேசுவதையும் பயன்படுத்துவதையும் விட வேண்டும். அதற்கான முயற்சியை ஆரம்பித்து விட்டால், அதுவே தானாக நிறைவடைந்து விடும். இன்றைய சூழலில் காரிகோவை போன்ற நூலை எல்லோரும் எழுத இயலாது. ஆனால், அதற்கு முதல்படியாக நாம் அனைவரும் தூய தமிழில் எழுதவும் பேசவும் கற்பது இன்றியமையாதது. அதன் பின், தமிழின் மிக ஆழமான வளங்களையும் நம் செய்யுள்களையும் படித்துணர்ந்து அனுபவிக்கலாம். அந்த அனுபவத்தைப் பிறருக்கு பகிர்வதன் மூலம் அவர்களையும் தமிழ் கற்கத் தூண்டலாம்.

திருக்கோவில் அமைக்கும் பணி, மதிப்பு மிக்க பழங்கால சிவாலயங்களை சீர் திருத்தவும், உழவாரப் பணி செய்யவும், அவற்றை உரிய முறையில் பராமரிப்பதும் நம் தலையாய கடமைகளில் ஒன்றாகும். இன்றைய சூழலில் பழைய கோவில்களைப் போல ஒளி பொருந்திய ஆற்றல் பொருந்திய கோவில்களைக் கட்டுவிப்பது மிகவும் கடினமானதாகும். ஆனால், நாமோ, அளவற்ற பொக்கிஷமான பழந்திருக்கோவில்களைக் கண்டும் காணாததுமாகச் செல்கிறோம். பெருஞ் செல்வர்களும் அடியார் திருக்கூட்டங்களும் அவரவர் ஊரிலும் அருகிலுள்ள கோவில்களையும் உரிமை எடுத்து அவற்றைப் பராமரிக்கும் செயல்களில் இறங்க வேண்டும். உழவாரப் பணியின் மகிமையும், சிவாலயப் பணிகளின் மகிமையும் வார்த்தைகளால் சொல்ல இயலாது. இனி எத்தனை பிறவி எடுப்போம், எப்போது நமக்கு சிவாலய பணி செய்யும் பாக்கியம் கிட்டும் என்றெல்லாம் தெரியாது. இந்த பிறவியில் எத்தனை பணி செய்ய முடியுமோ, அத்தனையும் செய்து விட வேண்டும்.

சிவனடியார்களின் கஷ்டத்தைத் தனது கஷ்டமாக எண்ணி அவர்கட்கு உதவி செய்திடல் வேண்டும்.  வெறும் பொருள் உதவி மட்டுமன்று, பல வகைகளில் ஒவ்வொருவருக்கும் உதவி செய்யலாம். நீங்கள் வேலை கொடுப்பவராயின் சிவனடியார்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். ஆலயங்களில் சிவனடியார்களின் பசிப்பிணியைப் போக்கலாம். இவ்வாறு எண்ணற்ற வகைகளில் அடியார்களுக்கு உதவலாம்.

இவையெல்லாம் செய்வதற்க்கு முன்னர் வாழ்வியல் நெறியை கடைப்பிடிக்க வேண்டும். வாழ்வியல் நெறி உரைக்கும் ஒழுக்கம் அறிய வேண்டும். எத்தனை புண்ணியங்கள் செய்தும் அடிப்படை ஒழுக்கம் இல்லையேல், கிணற்று நீரை இறைத்து இறைத்து ஓட்டைப் பானையில் ஊற்றியவாறு வீணாகிப் போகும்.

சிவபிரானை எப்பொழுதுஞ் சிந்தையில் வைத்து சிவப் பணிகளை செய்பவர்கள் உயர்ந்த நிலையை எய்துவர். உலகியல் வாழ்வில் எப்படி இருந்தாலும், சிவன் பால் அன்பு பூண்டு சிவப்பணிகளைச் செய்யும் போது உயர் நிலையை அடைகிறோம். சிவபிரானின் கருணைக்கும் அன்பிற்க்கும் ஆட்படுகிறோம். அவ்வகையிலே, மனம் போல உடலோடு கயிலை செல்ல வேண்டுமாயின் எத்தனை தவம் செய்திருக்க வேண்டும் ?

காரி நாயனாரின் வரலாறு உணர்த்தும் எண்ணற்ற உயர் செயல்களில் ஒரு சில குறிப்புகளை அறிந்தோம்.  காரி நாயனாரின் திருவடித் தாமரைகளை வணங்கி மகிழ்ந்து அவர் வழியில் செல்வோம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

மாபாதகத்தீரே.. புண்ணியங்கள் எப்போது செய்வீர் ? 5/5 (1)

மாபாதகத்தீரே.. புண்ணியங்கள் எப்போது செய்வீர் ?

இன்றைய உலகியலில் நாம் அறிந்தோ அறியாமலோ மகா பாதகங்கள் செய்வது மிக எளிதாகிப் போய்விட்டது. மனிதன் தன் அறிவு என்னும் பேரொளி விளங்கும் கோவிலை விட்டு எங்கோ சென்று கொண்டிருக்கிறான். இது விஞ்ஞான உலகம் என்கிறார்கள். விஞ்ஞானம் இத்தகைய மனிதர்களைக் கொடுக்கவா பிறந்தது ?

மரத்தை வெட்டுகிறான். ஆடு மாடுகளின் தோலை உரித்து எடுக்கிறான். விலங்குகளின் சதைகளைப் பிய்த்துத் தின்பதற்க்காகவே பண்ணை பண்ணையாய் உயிர்களின் சுதந்திரத்தைப் பறித்து அத்தனை பாதகங்களைச் செய்கிறான். சிறிய கூண்டுகளில் பல கோழிகளை அடைத்து அவற்றிற்க்கு ஊசி போட்டு உடலைப் பெருக்கச் செய்கிறான். மகா பாதகனும் செய்ய அஞ்சும் செயல்களை மனிதன் இன்று சர்வ சாதாரணமாகச் செய்து வருகிறான். இவனுக்குப் பெயர் பண்ணைக்காரன் அல்லது விவசாயியாம்.

கடலையாவது விட்டு வைத்தானா ? மீன்களின் மெலிதான நாக்குகளில் கூர்மையான ஊசியைக் குத்தியதும் அல்லாமல், அவற்றைத் தரதர வென்று அதோடு இழுத்தும் வருகிறான். கொதிக்கும் எண்ணையில் உயிரோடு போட்டு வடை சுடுகிறான். விலங்குகளைக் கொன்று பதமிடுவதற்க்காகவே பல்வேறு விஞ்ஞான கொலைகாரக் கருவிகளைப் படைத்துள்ளான். ஒரு விலங்கைக் கூட விட்டு வைக்க வில்லை. பல விலங்கினங்கள் இந்த உலகில் இருந்து நிரந்தரமாக அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன.

பொய் சொல்வதற்க்குப் பயப்படுவதில்லை. கேட்டால், நான் அரிச்சந்திரனாக இருக்க முடியாது என்று ஒரு காரணம் வேறு. இன்று எந்த ஊடகங்கள் உண்மை சொல்கின்றன, எது பொய் சொல்கிறது என்று கணிக்கவே முடியாத நிலைக்குச் சென்று விட்டன. அரசியலில் மட்டுமல்ல, எல்லா இடத்திலும் பொய்கள் ஊடுருவிவிட்டன.

போதை வஸ்துக்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சுய மரியாதை என்ற பெயரில் பள்ளிக் குழந்தைகள் மது அருந்தி வலம் வரும் வீடியோக்களும் வந்து விட்டன. சுய மரியாதை இயக்கம் என்ற பெயரில் ஒழுக்கத்தைக் கொலை செய்யும் இயக்கங்கள் இன்று தைரியமாக பல பாதகச் செயல்களை அரங்கேற்றி வருகின்றன. ஒழுக்கம் என்பது நாம் அனைவரும் நல்ல சமுதாயமாக இன்பமாக வாழ வகுத்த கட்டுப்பாடுகள் என்பதை யாரும் இக்காலக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதேயில்லை. கல்வியின் நோக்கம் எங்கோ திசை மாறிச் சென்று விட்டது. கல்வி என்ற பெயரில் கலன்களில் அச்சடிக்கப்படும் களிமண்ணாக குழந்தைகளை அமுக்கப்படுகின்றனர்.

சிந்தித்துப் பார்க்க இயலாத உறவுகள் எல்லாம் இங்கு நடக்கிறது. ஊடகங்களைத் திறந்தால், இதன் பட்டியலை வாசிக்கவே இவர்களுக்கு நேரம் போதவில்லை. இயற்கை வளங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆறுகள், மலைகள், காடுகள் ஆகியவற்றின் சீவன்கள் அறுக்கப்படுகன்றன. அநியாயம், அட்டூழியம், எல்லாவற்றிலும் ஊழல் என்று அனைத்தும் தாண்டவமாடுகின்றன. இவர்களுக்கும் ஓர் அரசன் இருக்கிறான். பல மந்திரிகள் இருக்கிறார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பாதகங்கள் வெகு சில. இங்கே நடந்து கொண்டிருக்கும், சொல்லவே வாய் கூசும் பாதகங்கள் இன்னும் பலப்பல. கள் அருந்துதல், பொய் சொல்லுதல், களவு செய்தல், கொலை செய்தல், குரு நிந்தனை செய்தல் ஆகிய ஐந்தும் மகா பாவங்களாக நம் சாத்திரங்கள் சொல்கின்றன. மேலும், பிற மாதர்களை இச்சித்தல், கோபம், கடுஞ்சொல் உயபோகித்தல், பொறாமை, பிறர் பொருளை அபகரித்தலும், அபகரிக்க எண்ணுதலும், மூர்க்கம், வஞ்சகம் செய்தல், ஒருவர் நமக்குச் செய்த உதவியை நன்றி மறத்தல், உயிர்களின் மேல் இரக்கம் இல்லாமை, நட்பைப் பிரித்தல் ஆகியவையும் மகா பாதகங்களாகும்.

இத்தனை பாதகங்களுக்கு மத்தியிலும் இவை அத்தனையிலும் சிக்காமல், இல்லற தர்மத்தோடும், பய பக்தியோடும் இறைவனை நோக்கிப் பயணிப்போரும் பலர் உளர். இந்த பாதகச் செயல்களை முதலில் பாவம் என்று உணர்ந்து அவற்றைச் செய்யாது தவிர்ப்பது தான் முதலில் செய்ய வேண்டிய ஒன்றாகும். பின்னர், முன்னர் செய்த பாதகங்களுக்கு வினை அறுக்க வேண்டும். நாம் செய்த அத்தனை பாதகங்களுக்கும் வினை அறுத்தே தீர வேண்டும். மேலும் பாதகங்கள் செய்யாமல் தடுக்கவும், செய்த பாதகங்களுக்கு வினைகளைக் குறைத்துக் கொடுக்கவும் இறைவன் அருளியது தான் உருத்திராக்கம், திருநீறு மற்றும் ஐந்தெழுத்து மந்திரங்களும். இந்த கருவிகளைப் பயன்படுத்தி, இனிமேல் மகா பாதகங்கள் செய்யாமல் தப்பித்து, செய்த பாவங்களையும் அறுத்து நாம் உய்வடைவோம். அபாயம் அகல நாம் சிவாயநம என்று சொல்லுவோம்.

பிற உயிர்களை மதிக்க வேண்டும். பிற உயிர்களின் துன்பத்தைத் தன்னுடைய துன்பம் போல் கருத வேண்டும். ஞானிகள் அனைவருமே, பிற உயிர்களை நேசித்து அவர்களின் துன்பத்தைத் தன்னுடையதாக கருதுபவர்கள்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
.

ஒழுக்கம் எல்லோருக்கும் சிறப்பைத் தருவதால், ஒழுக்கம் உயிரை விட மேலானதாகக் கருதப்படும்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

பிற உயிர்களைக் கொன்று அதன் சதையைப் பிய்த்துத் தின்னமால் புலால் மறுப்பவனை, அனைத்து உயிர்களும் தொழும்.

மகாபாதகங்களைச் செய்யாமல் அடிப்படை ஒழுக்கத்தோடு வாழ்வதை நம் சமய நூல்களும் வேத நூல்களும் வலியுறுத்திக் கூறுகின்றன. இவற்றின் அடிப்படையை நம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது நம் தலையாய கடமையாகும்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

தமிழும் ஆரியமும் 5/5 (2)

தமிழும் ஆரியமும் – ஐயா, திரு கோமல் கா. சேகர் அவர்கள்

ஓம்
சிவ சிவ !
===
தமிழும் ஆரியமும் .
=======
முதலில் சிவத்தை அடைய வேண்டும்; அல்லது அவரது அன்பைப் பெற்றுத் தீதகன்று நல் வாழ்வினை இப் பிறவியிலேயே பெற வேண்டும் என விழைவோர்  சாதி, குல, இன, மொழி, ஏழை, செல்வந்தன், வலியவன் எளியவன் என்ற பாகுபாட்டு மனப்பாங்குகளில் இருந்து, உடைத்துக் கொண்டு வெளி வரவேண்டும் !

ஒரு அன்பர் தமிழின் தொன்மை பற்றிக் கடுமையாக உழைத்துக் கால ஆராய்ச்சியெல்லாம் செய்து,  நேரத்தை வீணடித்து பதிவிட்டிருந்தார் . அந்தக் கால எல்லைகள்நம்பகத் தன்மையுடையன அல்ல !  இறைவன் எப்போது உலகத்தைப் படைத்தாரோ,  அன்றே நம் செந்தமிழும், ஆரியமும் தோற்றிவிக்கப்பட்டுவிட்டன என அறிக ! எல்லா மொழிகளும் இறைவனன்றிப் படைக்கப்பட்டன அல்ல ! இறைவன் விரும்பி செவி சாய்க்கும் மொழிகள் செந்தமிழும்  ஆரியமும் ! ஆரியம் எந்தப் பகுதிக்கோ ,எந்த இனத்துக்கோ சொந்தம் என ஒதுக்கி , அதன் மேல் சைவர்களுக்கு உள்ள உரிமையை விட்டுக் கொடுத்தல் அறிவுடைமையல்ல ! எனக்கு ஆரியம் தெரியாது ! திருமுறைகள் , சாத்திரங்களைக் கற்ற அளவில் சுமார் ஆயிரத்துக்கும் கீழ் ஆரியக் கலைச் சொற் பதங்களுக்கு மட்டுமே பொருள் அறிவேன் ! திருமுறைகளையும் , தமிழ் வழியில் சைவ சாத்திரங்களையும் கற்று ,சிந்தித்துத் தெளிந்து, உணர்ந்து ,இறைவன் மீது அன்பு பூண்டாலே போதும் என்ற கொள்கையே என் கொள்கை !

ஆரியமும் வழிபடும் மொழியே ! அதை வெறுக்கக் காரணம் என்ன ?

அதை ஏன் சில குறிப்பிட்டக் குல சாதியினரிடம் சேர்த்து அடையாளப் படுத்தி ,நம் உரிமையை இழக்க வேண்டும் ? இத்தகைய நிலை நம் ஆச்சாரியர்கள் கொண்ட கொள்கைக்கு , மாறானது ! இப்படிப் பட்டப் பொருந்தா எண்ணத்தை உருவாக்குவதன் மூலம் பலர் இறையருளை இழக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டு விடுவர் ! திருமுறைகளிலும் சிறிதளவு , ஆரிய சொற்பதங்கள் கலந்தே உள்ளன ! சைவ சாத்திரங்களிலும் பெருமளவு ஆரியம் கலந்தே உள்ளது ! நம் ஆச்சாரியார்கள் எவரும் ஆரியம் கற்றால் தான் இறைவனை அடைய முடியும் என நம்மை ஆற்றுப் படுத்த வில்லையே ! ஏனெனில் அது இறைவனது உள்ளக் கிடைக்கை இல்லை ! அவர்கள் தம்மைத் தமிழோடு அடையாளப் படுத்தி அக மகிழ்பவர்கள் ! ஆனால் வட சொல்லையும் மதிப்பவர்கள்.! ஏனெனில் அதுவும் இறைவனுக்கு ஏற்புடைய
மொழி என்பதால் !

இதுதான் உண்மை நிலை !
இதை மறைத்து அறியா மக்களை இருளில் தள்ளி ஒருக் கூட்டம் தம் வாழ்வை வளப்படுத்தி வருவதே உண்மை !  இதைப் படிக்கும் எவரும் அறியாக் கருத்தை நான் இங்குக் கூறவில்லை ! நமது ஞானாசிரியர்கள் செந்தமிழும், வட மொழியும் சம அளவில் இறைவனுக்கு ஏற்புடைய மொழியே என அருளிய மெய்த் திரு வாக்குகளை இங்குப் பதிவிடுகிறேன் !

படித்து மனத்திருத்தி , சிந்தித்துத் தெளிக !
திருஞான சம்பந்தப் பெருமான் அருளியவை ~
‘” தமிழ் சொலும் வட சொலும்
தாள் நிழல் சேர “~ 01.77.04

‘”தென் சொல் விஞ்சமர் வட சொல் திசை மொழி எழில் நரம்பு எடுத்துத் துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல் புகலூர்””
~02.73.05

“ஆரியத்தொடு செந்தமிழ்ப்
பயன் அறிகிலா அந்தகர் “”
03.39.04

திருநாவுக்கரசு பெருமான் அருளியவை !
“”ஆரியம் தமிழோடு இசையானவன்” ”~05.18-03

‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் “‘~ 06-23.05

“முத் தமிழும் நான் மறையும் ஆனான் கண்டாய் “~06-23-09

“”செந்தமிழோடு ஆரியனைச் சீரியானை ‘”~06-46-10

“வட மொழியும் தென்தமிழும்
மறைகள் நான்கும் ஆனவன் காண் “”~06-87-01

சுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளியது
“அர ஒலி ஆகமங்கள் அறிவார் அறி தோத்திரங்கள் விரவிய வேத ஒலி விண்ணெலாம் வந்து எதிர்ந்து இசைப்ப ”( கயிலைக்கு ஏகும் போது
கேட்ட மொழிகள் )07-100-08

திருமூலர் அருளியவை

“ஆரியமும் தமிழும் உடனே
சொலிக் காரிகையார்க்குக்
கருணை செய்தானே ” திருமந்திரம் / ஆகமச் சிறப்பு -08

“தமிழ்ச் சொல் வட சொல் எனும் இவ் விரண்டும் உணர்த்தும் அவனை உணரலுமாமே ‘” ௸ ஆகமச் சிறப்பு -09
“”என்னை நன்றாக இறைவன்
படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே ”
~௸ பாயிரம் 20
சிவ பெருமானே தமிழ் ; தமிழன் / சிவ பெருமானே
ஆரியம் ; ஆரியன் / சிவ பெருமானே நான் மறைகளும்
ஆகமங்களும் / சிவ பெருமானே சைவத் திருமுறைகளும் ,
சைவத் தமிழ்
சாத்திரங்களும் / ஆரியமும்
தமிழும் சிவ பெருமானின் இரு கண்களுக்கு ஒப்பானவை ! இரு மொழிகளுமே சிவ பரம் பொருளை உணர்த்த வல்லவைகளே ! இது நம் அருளானர்கள் வாக்குகள் ! மாதவம் செய்த தென் திசையில் பிறந்த நாம் ,சைவத் திருமுறைகளையும் ,சாத்திர புராண நூல்களையும் ஐயம் திரிபுஅறக் கற்றாலே போதும் ! நம் பெருமானை எளிதில் எய்தி விடலாம்.  பிற மொழியைத் தாழ்த்தி நம் செந்தமிழை உயர்த்த வேண்டிய அவசியமில்லை ! மக்களே ஆலய பூசைக்கு வட மொழியை ஏற்கும் போது நமக்கு என்ன ?  எத்தனை பேர் தமிழில் அருச்சனை செய்யக் கோருகிறோம் ?  தமிழ் மொழியின் தொன்மைக்கு ஏன் நம்பத் தகா ஆதாரங்களை எல்லாம் நாட வேண்டும். ? சேக்கிழார் வழி இறைவனார் அருளிய இப் பாடலை உற்று நோக்குக !

~ஊன் உடம்பில் பிறவி விடம் தீர்ந்து உலகத்தோர் உய்ய /
ஞான முதல் நான்கும் அலர் நல் திருமந்திர மாலை / பான்மை முறை ஓர் ஆண்டுக்கு ஒன்று ஆகப் பரம் பொருளாம் / ஏன எயிறு அணிந்தாரை “ஒன்றவன்தான் ” என எடுத்து ~~திருத் தொண்டர் புராணம் / திரு மூலநாயனார் புராணம் |~ பாடல் எண் 26

இப் புவியில் 3000 ஆண்டுகள் வாழ்ந்து ,ஆண்டுக்கு ஒன்றாக
ஒரு பாடல் வீதம் திருமூலர் அருளியதாக உறுதி செய்யப் பட்டுள்ளது. திருமூலர் இப் புவியில் இறுதியாக 1700 ஆண்டுகளூக்கு முன் வாழ்ந்ததாக் கணிக்கிறோம் !

“சிவ சிவ என்கிலர் தீவினையாளர்” என்பது போன்ற மிக எளிமையானப் பாடல்களை இலக்கணத்தோடு ஒத்து  இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன் பாடியிருக்கிறார் எனின் ,அந்த அளவுக்கு செம்மை மொழியாக ஆக ,அதற்கு முன் எத்தனை காலத்துக்கு முன் நம் மொழி தோன்றி இருக்க முடியும் ! கால எல்லையை எவரும் அறுதியிட்டுச் சிந்தித்தனரா ? சேரமான் பெருமாள் நாயனார் தமிழ் மொழியில் தம் முன் பாடியத் திருக்கயிலை ஞான உலாவைப் பெருமான் செவி மடுத்து இன்புற வில்லையா ?
திருக்கயிலையே தமிழும் ஆரியமும் வழங்கும் புனிதத் தலம் எனபதை சிந்திக்க வேண்டாமா ?  திருமூலர், தான் , தம் வரலாறு/ பாயிரம் பாடல் 15 -ல் “சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம் “, என தாம் இவற்றை உணர்ந்ததைக் குறிப்பிடுகிறார் !  இவர் நந்தியிடம் கற்ற காலம் என்ன ? நந்திக்குத் தமிழை கற்பித்தது எப்போது ? ஆகவே உலகத் தோற்றத்தின் போதே ,சுத்த மாயைத் தலங்களில் வாக்குகள் எழுந்த போதே தமிழும் , ஆரியமும் இறைவனால் வகுக்கப் பட்டது என அறிக ! இறைவனால் அருளப் பட்டதாலேயே தமிழ் திருமுறைகளாக வெளிப்பட்டு இவற்றிலேயே இறைவன் அட்ட மூர்த்தியாக விளங்கி நிற்றல் என்றப் பயனால் ,உணர்க !

ஆகவே தமிழ் இறை மொழி என ஓர்க !
ஆரியமும் இறைவனே பொருளாக நிற்கும் வேத ,ஆகமங்களைத் தாங்கி நிற்றலால் நம் ஆச்சாரியார்கள் அதனை சமமான இறை மொழியாக  மதித்தமையை ஓர்க ! ஆகவே மொழி பேதச் சிறுமையிலிருந்து வெளி வருக ! முதலில் தற்கால சமுதாயம் இறை மொழியான  நம் செந்தமிழை முற்றும் கற்றிருக்கிறோமா எனத் தன் ஆய்வு செய்வோம் !
“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி” என்பது தற்பெருமை பேசியதல்ல !

அசுத்த மாயையிலிருந்து பிரபஞ்சம் தோன்றும் முன் சுத்த மாயையிலிருந்து இறைவனால் தோற்றிவிக்கப் பட்ட இனிய மொழி நம் தமிழ் மொழி ! அதைப் பயின்று வாழ்ந்த தொன்மை உடையோர் நம் முன்னோர் !
உலகில் அனுபவிக்கும் இன்பங்களில் , தமிழ் மொழியை முற்றும் உணர்ந்து அனுபவிப்பதை விட ஒப்பது ஏதும் இல்லை ! இப் பெரும் பேற்றை இழந்து நிற்கும் , இக் காலத்தவர் உணர வேண்டும் !
~ கோமல் கா சேகர் / 9791232555 /25.02 17/மீள் பதிவு 23-01-20

Please rate this

இறந்தவர் இல்லத்தில் தேவாரம் திருவாசகம் பாடலாமா ? 5/5 (6)

இறந்தவர் இல்லத்தில் தேவாரம் திருவாசகம் பாடலாமா ?

ஓம்
சிவசிவ
========
புனித நூல் !
=============
சிவமே விளங்கும் புனித நூல் ; பொருள் சிவமே !
ஐயா, இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்கவேண்டும் என பதிவு செய்திருக்கிறீர்களே ? தயவு செய்து இது எதனால் என்றும் எந்த அருளாளர் இப்படி தெரிவித்துள்ளார் என தகவல் தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறேன்..
ௐௐௐௐௐ
சிவ சிவ :
===== =====

தவறு ! தவறு ! தவறு !
===== ===== =====

இறந்தவர்கள் இல்லத்தில் அடியார்கள் சென்று திருவாசகம் தேவாரப் பதிகங்கள் பாடுகின்றனர். இது சரியா ? தவறா ?
××××× ××××× ×××××
இது அன்பர் ஒருவர் தனிப்பட்ட முறையில் படிக்கலாம் எனக் கருத்திட்டவரிடம் வினவிய வினா !  இதை விடத் திருமுறைகளை இழிவு படுத்த எவராலும் இயலாது !

இந்தக் கொடிய வழக்கம் தென் மாவட்டச் சைவர்கள் இல்லங்களில் எப்படியோ , எப்போதோ தொடங்கி , பரவலாக நடை முறைக்கு வந்து விட்டது ! திருமுறைகளில் பற்றும் பயிற்சியும் உள்ள ஒரு சிவனடியார் , இறப்புக்கு முன் நினைவு தவறும் முன்பாக , அவர் செவியில் ஏறுமாறு திரு முறைகளைப் பாடுதல் தவறில்லை !
அதைக் கேட்பவர் சிவ சிந்தையே நிறைவாகிட , இறை நினைவுடன் மட்டும் உடலை நீங்குதல் , உயர் பதம் அடைவதை விளைவிக்கும் .

பல ஆலயங்களுக்குத் தல புராணங்களை வகுத்தளித்து அருந் தொண்டாற்றிய ,
சிவ. மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் நினைவாற்றல் நீங்கு முன் ,அவரது சீடர்
சிவ. உ. வே . சுவாமி நாத ஐயர் அவர்கள் திருவாசகம் ஓதிக் கொண்டிருக்க , கேட்டுக் கொண்டே , கண்களின் இருபுறமும் நீர் வழிய ,அவர் உயிர் நீத்தது வரலாறு ! உயிர் நீங்கிய பிறகு ,தொடர்ந்து பாடவில்லை ! உயிர் நீங்கிய பின் பாடுதல் வேதத்தை அவமதிப்பதாகும் !
திருமுறைகளின் பெருமைகளை அறியாதார் இந்தத் தவறைச் செய்து வருகிறார்கள் ! ஆலய வழிபாடே அறியாத , திருமுறைகளையே அறியாத , பெரிய தனவந்தர்கள் இறந்த வீடுகளிலும் , பொருள் பேசி திருவாசகம் ஓதுவதில் போய் நின்றுள்ளது இன்றைய அவல நிலை !

இதற்காக ,
இறைவனாரால் அருளாளர்கள் மீது மேலோங்கி நின்று , அருளப் படவில்லை இந்த மெய்ஞ் ஞானப் பாடல்கள் ! பல்வேறு படி நிலைகளில் உள்ள மக்களும் பயின்று பயன் கொள்ளும் நோக்குடனும் , உயிர்களைப் படி முறையில் வளர்த்தெடுத்து, சிவத்தை நோக்கிச் செலுத்திடவும் வகை செய்யும் பனுவல்கள் இவை ! ; ஞான பாதம் !
வாழ்வியல் சுப ,அசுப காரியங்களுக்காகப் படைக்கப் பட்டவை அல்ல !

ஏன் படிக்கக் கூடாது ?
தீட்டாவது ஒன்றாவது ? என்பர் பிழைப்பாளர்கள் !எப்படித் தெளிவிப்பீர்கள் ?
நல்ல வினா !

இறந்தவர் வாரிசு ஒருவர் ,உடனே திருவாசகத்தை எடுத்துக் கொண்டு ,
சிவாலயத்துக்குள் புகுந்து ,இறைவன் திருமுன் , இறந்தவர் சிவ பதம் அடைய வேண்டும் என்று திருவாசகம் படிக்கத் துணிவாரா ? எது தடுக்கும் ? கடுமையான வினாக்களாக உளவே ? பித்தம் உறைந்து போன சித்தத்தவரை தெளிவிக்க , இது போன்றக் கடுங் கசப்பு மருந்து கொடுத்தால்தான் தெளியும் ! திருமுறைகளின் ஒவ்வொரு பாடலிலும் சிவமே வரி வடிவாக உறைந்திருக்கிறார் ! ஓதும் போது ஒலி வடிவில் வெளிப்படுகிறார் ! பொருளறிந்து உருகி ஓதின் , இறையாற்றல் ஓதுபவரின் ஆன்மாவைப் பக்குவப் படுத்தும் ! துன்ப நீக்கத்துக்கும் ,இன்ப ஆக்கத்துக்கும் வகை செய்யும் !

திங்களூர் , திருமருகல் ஆகிய தலங்களில் இறந்தவரை எழுப்பப் பாடப் பட்ட நிகழ்வுகள் நடந்ததே ?

அந்த சூழல்கள் வேறு !
அவர்கள் இறந்திருப்பினும் , விதிப்படி , இவர்களைக் கருவியாக வைத்து ,உயிர்பிக்கப் பட முன்னை விதியுடையோர்.  எழுப்பிய அருளாளர்கள் வழி இறைவனாரே நிகழ்த்திய அருள் திருவிளையாடல்கள் அவை ! எழுப்பிடக் கருவியாக நின்றோர் ,நாம் பொறி புலன்களைப் பயன்படுத்துதல் போல் செயல் படத்தாமல் , பதி கரணமாக நின்று , அதாவது அவர்கள் உயிரறிவு இறையறிவில் அடங்கிட , சிவம் ஒன்றே அவர்களது உருவில் மேலோங்கி நின்று நிகழ்த்திய நிகழ்வுகள் அவை ! பொருள் விழைவாளர்களுக்கு இது விளங்காது ! இது சிவ ஞானப் புகலுடையோருக்கே விளங்கும் !  இறந்த உடலாக அங்கு எஞ்சி இருப்பது பஞ்ச பூதக் கலவையான சட நிலையில் உள்ள உடல் மட்டுமே என அறிக ! சுவர் பயன் பெறட்டும் என அதன் முன் நின்று ஓதுவதை ஒப்பதே இது ! இறந்தவருக்கு எந்தப் பயனும் விளையாது என அறிக !
தூய்மையற்ற இடம் என்பதையும் அன்பர்கள் கருத்தில் கொள்க !

25000 / = கட்டணம் பேசி ,திருமுறைகள் ஓதி ,கரும காரியம் செய்யப் பட்ட நிகழ்வு ஒன்றை , திரு நெல் வேலிப் பயணத்தின் போது அறிவிக்கப் பட்டு அதிர்ந்தேன் !
திரு முறைகளில் பெருமைகளை உள்ளவாறு உணர்ந்தோர் இவ்வாறு செய்யத் துணியார் ! இது வரை எவரும் இதைப் பற்றி எல்லாம் எவரும் வாய் திறக்கக் கூட இல்லையே !
துணிவு இல்லாததே ஒரே காரணம் ! தாங்கள் ?
இறைவனையே உள்ளத்தில் தாங்கி ,திருவருளே உணர்த்தக் கருவியாக நின்று பதிவு செய்கிறேன் !
~சிவோஹம் ~
~கோமல் கா சேகர் /9791232555/ 060418.
சிவ சிவ :
திருச்சிற்றம்பலம்.
கோமல் /260120-(74/20)

Please rate this

விதியை வெல்வது எப்படி ? இந்த பிறவியில் இது தான் அனுபவிப்பாய் என்று விதித்த பின், அதை வெல்ல முடியுமா? 4.6/5 (15)

விதியை வெல்வது எப்படி ? விதியை வெல்லும் திருமுறை பதிகங்கள்.

கருவாகி உருவாகி குழந்தையாய் குமரி குமரனாய் வாலிபனாய் இல்லத்து அரசனாய் பக்குமுற்று பெரியோனாய் நாம் திருவாகிச் செல்லும் முன்னர் தான், நாம் சந்திக்கும் இன்னல்கள் எத்தனை எத்தனை ? எத்தனை விதமான பிரச்சனைகளை நாம் வாழ் நாள் முழுவதும் துரத்திச் செல்கிறோம் ? வாழ்நாள் முழுவதும் நாம் பிரச்சனைகளைே துரத்திக் கொண்டிருந்தால், நம்மைப் பற்றியும் இறைவனைப் பற்றியும் சிந்திப்பது எப்போது ?

அற்பமான இவ்வுலக இன்ப துன்பங்களைத் துரத்தவா நாம் பிறந்து வந்துள்ளோம் ? அதிசயமான அற்புதமான மனித பிறவியை நாம் அற்பமான பொருளில் வீணாக்கலாமா ? நம்மையும் இறைவனையும் உணர வேண்டுமானால், நாம் நம் துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும். நாம் நிம்மதியான வாழ்கையும் இன்பமான வாழ்கையும் வாழ ஆரம்பித்தால் தான், நாம் இறைவனைப் பற்றி சிந்திப்போம். வழிபாடுகளில் உழன்று இறையனுபவமான பேரின்பத்தை அனுபவிக்க முடியும்.

அவ்வாறாயின், முதல் படியாக, நாம் இவ்வுலகத் துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும். நம் வினைகள் நம்மைத் துரத்தி வந்து துன்பங்கள் கொடுக்கும். முதலில் புதிய வினைகள் செய்யாமல் இருக்க சபதம் ஏற்க வேண்டும். பின்னர், பழைய வினைகளைக் கழிக்க வேண்டும். பழைய வினைகள் நம்மை வாட்டி வதைக்கும். ஊழ் வந்து நம்மைத் துரத்தும். அதிலிருந்து விடுபட்டால் தான் நாம் இறை சிந்தனையில் திளைத்து சிவ புண்ணியங்களைச் சேர்க்க முடியும்.

அப்படி இவ்வுலத் துன்பங்களிலிருந்து விடுபட ஏதாவது வழி அல்லது கருவி இருக்கிறதா அல்லது மந்திரம் இருக்கிறதா ? இருக்கிறது. அது தான் பன்னிரு திருமுறைப் பதிகங்கள். இவை அனைத்தும் மந்திரங்கள். நாம் திருமுறை ஓதும் ஒலியானது நம் துன்பங்களைப் போக்கும் வலிமையுடையது. அருமருந்தானது. நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் நாம் சந்திக்கும் துன்பங்களுக்கு ஒவ்வொரு மருந்து உள்ளது. அந்த மருந்துகளின் பட்டியல் தான் பலன் தரும் திருமுறைப் பதிகங்களாகும்.

இந்த பதிகங்களை உள்ளன்போடு நம்பிக்கையோடு இறைவனின் திருமுன் பாடி வந்தால், அந்த துன்பங்கள் காணாமல் போகும். இது நம் குருமார்களின் வாக்கு. இது வேத வாக்கு. இது இறைவனின் திருவாக்கு. இவ்வாறு நம் துன்பங்களை எளிதாகக் கடக்கும் வழியைக் கற்றுக் கொண்டு விட்டால், நாம் நம் கணிசமான நேரத்தை இறை வழிபாட்டில் செலுத்தி சிவ புண்ணியங்களைச் சேர்க்கலாம் அல்லவா ? இப்பிறவியில் வரும் துன்பத்தை வெல்லும் ரகசியம் அறிந்தால் தானே, அடுத்து பிறப்பு இறப்பு என்னும் மா துக்கமாகிய பெரும் துன்பக் கடலை கடக்கும் வழியைத் தேடிச் செல்வோம் ?

ஆகவே, இவ்வுலகில் இப்பிறப்பில் நமக்கு வரும் துன்பங்களைப் போக்கவும், எளிதாக கடக்கவும் ஓத வேண்டிய பதிகங்களின் பட்டியல் இங்கே உள்ளன. இதை அனைவரும் அறிந்து படித்து ஓதி துன்பங்களிலிருந்து விடுபட்டு சிவபிரானின் வழிபாடுகளில் உங்கள் காலத்தைச் செலவிடுங்கள்.

இந்த பதிகங்கள் அனைத்தும் YouTube இல் பார்த்து படித்தும் கூடவே பாடியும் ஓதலாம். இந்த பட்டியில் உள்ள அனைத்து பதிகங்களைையும் காண:

விதியை வெல்வது எப்படி ? YouTube Playlist

விதியை வெல்வது எப்படி பதிகங்களின் பட்டியல்

திருச்சிற்றம்பலம்.

 

Please rate this

மார்கழி வீதிஉலா – உயிர்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டல் No ratings yet.

மார்கழி வீதிஉலா – உயிர்களுக்கு விழிப்புணர்ச்சியூட்டல்

தேவர் உலகில் மார்கழி மாதம் ஒரு பிரம்ம முகூர்த்த காலம் என்பார் பெரியோர். உயிர்களுக்கு மிகவும் உன்னதமான மாதமாகத் திகழ்கிறது மார்கழி மாதம். அதிகாலை எழுந்து  சுத்தமான பிராணவாயு நிரம்பியுள்ள காற்றை சுவாசிப்பதால் நம் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறி, நம் ஆரோக்கியம் வலுப்பெற்று, நம் ஆயுளும் கூடும் என்பது இதன் பின்னால் இருக்கும் விஞ்ஞானமாக பெரியோர் கூறுவர். இந்த உன்னதமான மாதத்தை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து இவ்வுலகையும் நம்மையும் படைத்த இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக பெருமை மிகுந்த மார்கழியாக கொண்டாடுவது மரபு. இந்த மாதம் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதால், அது மிகுந்த பெருமை மிகுந்த பீடுடைய மார்கழியானது. இதனால், இந்த மாதத்தில் நம் இல்லங்களில் வரும் நிகழ்வுகளை தை மாதத்திற்க்கு தள்ளி வைத்து இம்மாதம் முழுவதுமாக இறை உணர்வில் திளைத்திருப்பது நம் மரபாகும்.

போர்வையை இழுத்துப் போர்த்தித் தூங்கத் தூண்டும் சூழல் போலவே, உயிர்களை இந்த உலகியலில் இருக்கும் சிற்றின்பத்தில் ஆழ்த்தி திளைத்திருக்கச் செய்யும், ஆணவம் என்ற மலம். அதிலிருந்து விடுபட்டால் தான், நாம் நம்மை உணர்ந்து இறைவனை உணர்ந்து அவனை வழிபட்டு கொண்டாடி ஆடிப்பாடி மகிழ்ந்து பேரின்பத்தை அடைய இயலும்.

இரவு பகல் என்பது பூமிக்கும் மற்ற கோள்களுக்கு மட்டும் தானே. எல்லா நொடிப்பொழுதும் ஓயாமல் ஆடிக்கொண்டிருக்கின்ற சிவபெருமானுக்கு ஏது ஓய்வு ? அவன் சலிப்படையாதவன், சோர்வடையாதவன். ஆகவே, திருப்பள்ளியெழுச்சி என்பது ஆணவ மலத்தில் ஆழ்ந்து தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருக்கும் உயிர்களைத் தட்டி எழுப்பி, ஆணவத்திலிருந்து விடுதலை கொடுத்து இறைவனை நோக்கி நெறிப்படுத்துவதேயாகும். ஆகவே,

மார்கழி என்றாலே இறை விழிப்புணர்ச்சி மாதம்.

திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடி இறைவனை தூக்கத்திலிருந்து எழுப்புவது போல, நம் உயிர்களை தூக்கத்திலிருந்து எழுப்புவதே பள்ளி எழுச்சியாகும். எனவே, சிவபெருமானின் பெருமைகளை உணராத மக்கள் எண்ணற்றோர். அவனை அறியாமலும், அவனுடைய தன்மைகளை உணராமலும், அவன் நமக்குச் செய்யும் உதவிகளைக் காணாமலும் ஆழ்ந்து கிடக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நம் கடமையாகும்.

அவ்வகையிலே, சென்னை பள்ளிக்கரணையிலே, மார்கழி 20 ஞாயிறன்று, காலை 5 மணிக்கு மல்லிகேசுவரர் நகர் அருள்மிகு மல்லிகேசுவரி உடனமர் மல்லிகேசுவரர் திருக்கோவிலில் இருந்து அருள்மிகு சாந்தநாயகி உடனமர் ஆதிபுரீசுவரர் திருக்கோவில் வரை, அருள்மிகு சிவகாமியம்மை உடனாய ஆனந்த நடராசர் உடன், மணிவாசகரும் இணைந்து, கயிலாய வாத்தியங்கள் முழங்க, திருமுறைகள் ஏந்தி முன்னூறுக்கும் மேற்பட்ட சிவ அன்பர்களுடன் வீதிவலம் நடைபெற்றது. அதிலிருந்து சில காட்சிகள் இங்கே.

உலகின் உள்ளங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

Please rate this

சிவாலயங்கள் அறிவோம். சிவாலயங்கள் செல்வோம். No ratings yet.

சிவாலயங்கள் அறிவோம். சிவாலயங்கள் செல்வோம்.

ஆறுகளையும் நீர் நிலைகளையும் மையமாகக் கொண்டே அன்றைய ஊர்கள் அமைந்தன. ஊர்களின் மைய பகுதியில் சிவாலயம் இருக்கும். அதாவது, சிவாலயத்தைச் சுற்றித் தான் ஊரே வடிவமைக்கப் பட்டிருக்கும். ஊரின் பெயரே அவ்வூரின் சிறப்பு மிக்க பெயரான சிவபெருமானின் திருநாமமாகத் தான் இருக்கும்.  ஆகையாலே, ஊரின் பெயரைச் சொன்னாலே, சிவபெருமானின் மந்திரத்தை ஓதியதற்க்கும் சமம். சமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் பெருமானின் பாடல்களில் ஊர்களின் பெயர்களைத் தொகுத்தே பாடல்களைக் காணலாம். ஆறாம் திருமுறையில், முழுப் பாடலுமே திருத்தலங்களின் பெயர்களைத் தொடுத்தே திருத்தல தாண்டகம் என்று பதிகமாக பாடியுள்ளார். அந்த பாடல் இங்கே:

ஆறாம் திருமுறை. திருநாவுக்கரசர் அருளிய திருத்தல திருத்தாண்டகம்

தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி தேவன்குடி சிராப்பள்ளி தெங்கூர்
கொல்லிக் குளிருறைப் பள்ளி கோவல் வீரட்டங் கோகரணங் கோடிகாவும்
முல்லைப் புறவம் முருகன் பூண்டி முழையூர் பழையாறை சத்தி முற்றம்
கல்லில் திகழ் சீரார் காளத்தியும் கயிலாய நாதனையே காணலாமே.

ஆரூர் மூலட்டானம் ஆனைக்காவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்
பேரூர் பிரமபுரம் பேராவூரும் பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்
கூரார் குறுக்கை வீரட்டானமும் கோட்டூர் குடமூக்குக் கோழம்பமும்
காரார் கழுக்குன்றும் கானப் பேருங் கயிலாய நாதனையே காணலாமே.

இடைமருது ஈங்கோ இராமேச்சுரம் இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேரூர்
சடைமுடி சாலைக்குடி தக்கரூர் தலையாலங்காடு தலைச்சங்காடு
கொடுமுடி குற்றாலம் கொள்ளம்பூதூர் கோத்திட்டைகோட்டாறு கோட்டுக்காடு
கடைமுடி கானூர் கடம்பந்துறை கயிலாய நாதனையே காணலாமே.

எச்சில் இளமர் ஏமநல்லூர் இலம்பை யங்கோட்டூர் இறையாய் சேரி
அச்சிறு பாக்கம் அளப்பூர் அம்பர் ஆவடு தண்டுரை அழுந்தூர் ஆறை
கச்சினங் கற்குடி கச்சூர் ஆலக் கோயில் கரவீரம் காட்டுப்பள்ளி
கச்சிப் பலதளியும் ஏகம்பத்துங் கயிலாய நாதனையே காணலாமே.

கொடுங்கோளூர் அஞ்சைக்களம் செங்குன்றூர் கொங்கணம் குன்றியூர் குரக்குக்காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவும் நின்றியூர் நீடூர் நியமநல்லூர்
இடும்பாவனம் எழுமூர் ஏழூர் தோழூர் எறும்பியூர் ஏராரும் ஏமகூடம்
கடம்பை இளங்கோயில் தன்னின் உள்ளுங் கயிலாய நாதனையே காணலாமே.

மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர் வக்கரை மந்தாரம் வாரணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி விளமர் விராடபுரம் வேட்களத்தும்
வெண்ணை அருட்டுரை தண்பெண்ணாடகம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூருங்
கண்ணை களர்க்காறை கழிப்பாலையுங் கயிலாய நாதனையே காணலாமே.

வீழிமிழலை வெண்காடு வேங்கூர் வேதிகுடி விசயமங்கை வியலூர்
ஆழி அகத்தியான்பள்ளி அண்ணாமலை ஆலங்காடும் அரதைப் பெரும்
பாழி பழனம் பனந்தாள் பாதாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட்டூர் தண்
காழி கடல் நாகைக் காரோணத்துங் கயிலாய நாதனையே காணலாமே.

உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உருத்திர கோடி மறைகாட்டுள்ளும்
மஞ்சார் பொதியின் மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானம் கேதாரத்தும்
வெஞ்சமாக் கூடல் மீயச்சூர் வைகா வேதீச்சுரம் விவீசுரம் வெற்றியூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையுங் கயிலாய நாதனையே காணலாமே.

திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை
கொண்டீச்சரம் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழும் அதிகை வீரட்டானம் ஐயாறசோகந்தி ஆமாத்தூரும்
கண்டியூர் வீரட்டங் கருகாவூருங் கயிலாய நாதனையே காணலாமே.

நறையூரிற் சித்தீச்சரம் நள்ளாறு நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரம் துருத்தி சோமீச்சரம்
உறையூர் கடல் ஒற்றியூர் உற்றத்தூர் ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்துங்
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூருங் கயிலாய நாதனையே காணலாமே.

புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர் புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல் வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி
நிலமலி நெய்த்தானத்தோ டெத்தானத்தும் நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர்
கலிவலி மிக்கோனைக் கால்விரலால் செற்ற கயிலாய நாதனையே காணலாமே.

திருச்சிற்றம்பலம்.

ஆகவே, சிவபெருமான் குடிகொண்டு அருள் புரியும் தலங்களின் பெயரைச் சொல்லிக் கொண்டிருந்தாலே, சிவபுண்ணியம் நமக்குக் கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

திருத்தலங்கள் சென்று வழிபடுவீர்

தேவார பாடல் பெற்ற தலங்கள், இன்று வரை நமக்குத் தெரிந்த 276 தலங்களில் சிவபெருமான் பல்வேறு திருநாமங்களோடு, அடியவர்களுக்கு அருள் புரிந்து கொண்டிருக்கிறார். திருவாசகத் தலங்கள், மலைகளின் மேலே உள்ள தலங்கள் என்று எண்ணற்ற தலங்களில் பெருமான் குடிகொண்டு அருள் பாலித்து வருகிறார். நாம் செய்திருக்கும் புண்ணியங்களைப் பொறுத்து நாம் இந்த தலங்களுக்கெல்லாம் சென்று வழிபட பெருமான் அருள் புரிவார். இந்த தலங்களை அறிந்து, இந்த தலங்களைப் பற்றி தகவல்களை எண்ணியும், சிவபெருமானையும் எண்ணிக் கொண்டிருந்தால், அவர் நிச்சயம் அந்தந்த கோவிலுக்கு உங்களை அழைப்பார். அருள் தருவார்.

தேவார பாடல் பெற்ற தலங்களை அறிந்து கொள்ள கீழேயுள்ள வலைதளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

http://www.shivatemples.com

இந்த தலங்களையெல்லாம் கூகுள் வரைபடத்திலேயே காண:

https://shaivam.org/temples-special/thevara-paadal-petra-thiruthalangal

இந்த திருத்தலங்களை இணைத்து மிக இனிமையான கேட்க கேட்க திகட்டாமல், நம்முள் உள்ளே சென்று திருத்தலங்களை விதைக்கும் பாடல் ஒன்று இருக்கிறது. இதைக் கேட்க கேட்க, மனனமாகி, நமக்கு பல்வேறு தலங்களை நம் மனதில் நிற்கச் செய்து அங்கே இருக்கும் பெருமானிடம் விண்ணப்பம் கேட்டு அங்கே சென்று அவரைத் தரிசிக்கும் பாக்கியமும் சித்திக்கும். ஆகவே, இந்த பாடலை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருங்கள்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

மங்காமல் திருநீறு பூசி மகிழ்வோம். எங்கும் எப்போதும் திருநீறு பூசியே இருப்போம். No ratings yet.

மங்காமல் திருநீறு பூசி மகிழ்வோம்

திருநீறு இறைவன் திருமேனியில் உறைகின்ற உயர்ந்த பொருள். அதை இறைவனிடமிருந்து நாம் அவனுடைய பிரசாதமாக வாங்கி நாம் அதை அணிந்து கொள்கிறோம். எத்தனை உயர்ந்த பிரசாதம் ? அதனால் தான், அதை கீழே சிந்தி விடாமல் வாங்கி நம் நெற்றியில் முழுதுமாக அணிய வேண்டும் என்று நம் குருமார்கள் கூறுகிறார்கள்.

திருநீற்றின் பெருமையை திருஞானசம்பந்தப் பெருமான் மந்திரமாவது நீறு பாடலில் உரைத்திருப்பதை நாம் அறிவோம். திருநீற்றினால் ஆகாதது என்ன இருக்கிறது ?

காலம் காலமாக சைவ சமயத்தோடு இணைந்து வாழ்ந்து வந்த நம் நாடு, தற்போது, உலகமய தாக்கலின் காரணமாகவும் அந்நிய மதங்களின் ஊடுருவல் காரணமாகவும், உலகில் எங்கும் இல்லாத ஒரு புதிய மதசார்பின்மை என்ற வழியில் தடம் மாறிச் செல்கிறது. திருநீறு பூசுவதை பழமையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அவர்கள் யாருக்கும் திருநீற்றின் பெருமையும், சிவபெருமானின் கருணையும் எள்ளளவு கூட தெரியாது. அவற்றில் சிலவற்றைத் தெரிந்த நாம் தான் அவர்கட்கும் புரியுமாறு எடுத்துச் செல்ல வேண்டும். ஆகையால், திருநீறு இறைவன் பிரசாதம் என்பது மட்டுமின்றி அதை அனைவருக்கும் எடுத்துச் செல்லும் நோக்கில் நாம் எப்போதும் திருநீறு அணிந்தே இருப்பது மிக அவசியம். திருநீற்றினை அலுவலகங்களிலும், பள்ளி கல்விக்கூடங்களிலும் அணியுங்கள். இது நம் அடிப்படை உரிமை மட்டுமின்றி அது நிறைந்த நன்மைகளை நமக்கு அளிக்கும். ஆகவே, மங்காமல் திருநீறு எப்போதும் பூசி மகிழ்வோம்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

ஐம்பெரும் புராணம் எனும் பஞ்சபுராணம் நம் திருக்கோவில்களில் தினமும் ஓதுவது மரபாகும். எவை ஐந்து? 4.46/5 (24)

ஐம்பெரும் புராணம் எனும் பஞ்சபுராணம் நம் திருக்கோவில்களில் தினமும் ஓதுவது மரபாகும். எவை ஐந்து?

குரு வணக்கம், விநாயகர் துதி, முருகர் துதி, அம்பாள் துதி, பன்னிரு திருமுறைகள், வாழ்த்து என்று வரிசையாக இறைவன் முன்னர் பாடுவது மரபு. இருப்பினும் நேரம் சுருக்கமாக இருக்கும் காலத்தில், ஐம்பெரும் புராணம் எனும் பஞ்ச புராணத்தில் இருந்து ஒவ்வொரு பாடல் பாடுவது சைவ மரபு. அவ்வாறாக, இறைவன் திருமுன் நின்று கொண்டு பஞ்ச புராண பாடல்களைப் பாடுங்கள். நீங்கள் உங்கள் சொந்த குரலிலே பாடுவதை இறைவன் ஒரு குழந்தை பாடுவதைப் போல ரசித்துக் கேட்பான். அதற்கான இரு தொகுப்புகள் இங்கே.

அச்சிட்டு, கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கும் வகையில் ஒரு பக்க பதிவாக PDF பதிவு இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்:

பஞ்ச புராணம் தொகுப்பு ௧

பஞ்ச புராணம் தொகுப்பு ௨

பஞ்ச புராணம் தொகுதி ௧

நால்வர் துதி

பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி
ஊழி மலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி

விநாயகர் துதி

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே

தேவராம்

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

திருவாசகம்

வேண்டத் தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுவதும் தருவோய் நீ,

வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்!

வேண்டி நீ யாது அருள் செய்தாய், யானும் அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும் உன் தன் விருப்பு அன்றே!

திருவிசைப்பா

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை

மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச்

செற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனைத் திருவீழி மிழலைவீற் றிருந்த

கொற்றவன் தன்னைக் கண்டுகண்(டு) உள்ளம் குளிரஎன் கண்குளிர்ந் தனவே

திருப்பல்லாண்டு

ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்
நாரா யணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.

பெரியபுராணம்

வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்

பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத

சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்

பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.

உலகின் உள்ளங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம். http://www.saivasamayam.in

பஞ்ச புராணம் தொகுதி ௨

குரு மரபு வாழ்த்து

கயிலாய பரம்பரையில் சிவஞான போதநெறி காட்டும் வெண்ணை
பயில்வாய்மை மெய்கண்டான் சந்ததிக்கோர் மெய்ஞ்ஞான பானு வாகிக்
குயிலாரும் பொழில்திருவா வடுதுறைவாழ் குருநமச்சி வாய தேவன்
சயிலாதி மரபுடையோன் திருமரபு நீடூழி தழைக மாதோ.

விநாயகர் துதி

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

தேவராம்

திருக்கோயில் இல்லாத திருஇல் ஊரும் திருவெண்நீறு அணியாத திரு இல் ஊரும்
பருக்கோடிப் பத்திமையால் பாடா ஊரும் பாங்கினோடு பலதளிகள் இல்லா ஊரும்
விருப்போடு வெண்சங்கர் ஊதா ஊரும் விதானமும் வெண்கொடியும் இல்லா ஊரும்
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும் அவைஎல்லாம் ஊர் அல்ல அடவி காடே.

திருவாசகம்

பாட வேண்டும்நான் போற்றி நின்னையே பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக்கு
ஆட வேண்டும்நான் போற்றி அம்பலத்து ஆடும் நின்கழற் போது நாயினேன்
கூட வேண்டும்நான் போற்றி இப்புழுக் கூடு நீக்கிஎனைப் போற்றி பொய்யெலாம்
வீட வேண்டும்நான் போற்றி வீடுதந்து அருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே

திருவிசைப்பா

அற்புதத் தெய்வம் இதனின் மற்றுண்டே அன்பொடு தன்னை அஞ்செழுத்தின்
சொற்பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூறும் தொண்டருக்கு எண்டிசைக் கனகம்

பற்பதக் குவையும் பைம்பொன் மாளிகையும் பவளவாயவர் பணைமுலையும்
கற்பகப் பொழிலும் முழுதுமாம் கங்கை கொண்ட சோளேச்சரத்தானே.

திருப்பல்லாண்டு

குழல்ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம் பெருகி
விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி மிகுதிரு வாரூரின்
மழவிடை யாற்கு வழிவழி ஆளாய் மணஞ்செய் குடிப்பிறந்த
பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.

பெரியபுராணம்

திருநாவுக் கரசுவளர் திருத்தொண்டின் நெறிவாழ
வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ்
பெருநாமச் சீர்பரவல் உறுகின்றேன் பேருலகில்
ஒருநாவுக் குரைசெய்ய ஒண்ணாமை உணராதேன்

உலகின் உள்ளங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம். http://www.saivasamayam.in

Please rate this

பணத்தின் பின்னே ஒரு பயணம்… 4.67/5 (3)

பணத்தின் பின்னே ஒரு பயணம்…

பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை

என்பது வள்ளுவர் பெருமான் வாக்கு. பொருள் இல்லாமல் இன்று வாழ இயலாது. குடிக்கும் தண்ணீர் கூட பணம் கொடுத்து பெறும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். ஆனால், எவ்வளவு பணம் தேவை ? இங்கு தான் யாருக்கும் தெளிவு ஏற்படுவதில்லை. பணத்தை ஈட்ட முயற்சி செய்யும் போது, பணம் வர வர, நமக்கு குஷியாகவும் இன்பமாகவும் இருக்கும். அவ்வாறு பணத்தின் மீது ஆசை வைத்து அதன் பின்னால் செல்ல ஆரம்பித்து விட்டால், மெல்ல மெல்ல அது நம்முடைய எசமானனாகவும், நாம் அதற்கு அடிமையாகவும் மாறி விடுவோம்.

மனமானது ஆசைப் பட்டுக் கொண்டே இருக்கும். அதனின் ஆசையை அளவுகோலால் அளக்க இயலாது. பணம் வர வர ஆசையும் அதிகரித்துக் கொண்டே போகும். ஒரு கட்டத்தில், நாம் ஆசைப் படும் பணம் கிடைக்காது. அப்போது தான், நாம் வித்தியாசமாக நடந்து கொள்வோம். கோபம், இயலாமை, போன்ற உணர்வுகள் நம்மை ஆட்கொள்ளும். எப்படியாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அறம், நியாயம், மனிதாபிமானம் ஆகியவற்றை இழக்கத் தயாராகிவிடுவோம். காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்ற நிலைக்கு அது நம்மைத் தள்ளி விடும். பலர் இந்த ஆரம்ப நிலையிலேயே அதை உணர்ந்து கொண்டு திருந்தி வாழ்வர். ஆனால், தொடர்ந்து பணத்தின் பின்னால் செல்பவர்கள், பல ஆண்டுகள் பாடுபட்டு கட்டிய தவம், புகழ், நற்பெயர் எனும் கோட்டைகள் அனைத்தும் ஒரே விநாடியில் நிலை குலைந்து, தகர்ந்து சுக்கு நூறாகிப் போகும். அதள பாதாளத்தில் விழுந்து விட்டதை உணர்வார்கள். நற்பெயரும் தவமும் ஒரு முறை இழந்து விட்டால், மீண்டும் இந்த பிறவியிலேயே அதை மீண்டும் சம்பாதிப்பது என்பது மிகவும் கடினம்.

 

ஆகவே, பணத்தின் பின்னால் சென்றால், அது நம்மைப் பாழுங்குழியில் தள்ளி விடும் என்பது கண்கூடாக காணும் உண்மை. மனிதனுக்கு 3 வேளை நல்ல உணவும், நல்ல தண்ணீரும், தூங்க நல்ல இடமும், உடுக்க நல் உடையும் இருந்தாலே போதும். அதற்கு மேல் அவனுக்குத் தேவையானது அனைத்தும் ஆடம்பரம் தான். ஆகவே, பணத்தை எது வரை பின்தொடர வேண்டும் என்பதை அறிந்து அது வரை மட்டுமே செல்ல வேண்டும். அதுவே உங்கள் வாழ்வை இனிதாக வைக்கும். அதிக பணம், நம் சிந்தனைகளை சிதறச் செய்வது மட்டுமின்றி, நம் செயல்பாடுகளையும் நம் வாழ்வின் நேரத்தையும் வீண் அலைச்சல்களில் அலைக்கழிக்கும். இப்பிறவியில் இவ்வுலகிலிருந்து பாவ புண்ணியங்களை மட்டுமே நாம் எடுத்துச் செல்ல முடியும். வேறு எதையும் எடுத்துச் செல்ல முடியாது.

தேவைக்கு அதிமாக இருக்கும் பணத்தை வைத்து புண்ணிய காரியங்கள் செய்யுங்கள். அன்னதானம், சிவாலய பணிக்கு உதவுதல், கோவில்களில் விளக்கிடுதல், பூசைக்கு வழியில்லாத கோவில்களுக்கு உதவுதல், கோ சாலைக்கு உதவுதல் போன்ற நற்பணிகள் செய்யுங்கள்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

காதலால் உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே 5/5 (1)

காதலால் உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே

எளிமையான சொற்களை மாலையாகக் கோர்த்து, உணர்வுகளை அப்படியே மிகுந்த வாசனையோடு கூடிய மணம் கமழ வைத்து, ஆழ்ந்த ஞானத்தையும் இடையே பொதித்து, படிப்பவரின் உணர்வுகளைத் தூண்டி சிவத்தை நோக்கி பாட, ஆட வைக்கும் திறமை தேனினும் இனிய திருவாசகத்திற்கு உரித்தாகும். அத்தகைய சுவையோடு ஞானமும் கலந்த திருவாசகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டுமானால் அதற்கு ஈடு இணையாக எதுவுமே இல்லை.

திருக்கழுக்குன்றத்திலே அடியார்களின் முன்னிலையிலேயே மாணிக்கவாசகருக்கு காட்சி கொடுத்தார் சிவபெருமானார். அந்த திருக்கழுக்குன்ற பதிகத்தை சற்றே சிந்தித்து பார்த்தால், உள்ளம் உருகும், சிவபெருமானிடம் இலயிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

 

 

திருச்சிற்றம்பலம்.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

 

Please rate this

சைவ சமயம் அடிப்படை தெரியுமா? அப்படின்னா இந்த கேள்விகளை முயன்று பாருங்கள். 5/5 (2)

சைவ சமயம் அடிப்படை தெரியுமா? அப்படின்னா இந்த கேள்விகளை முயன்று பாருங்கள்.

சைவ சமயம் என்பது பெருங்கடல் என்பது யாவரும் அறிந்த ஒன்று. அவற்றில் அடிப்படை செய்திகளையாவது நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவ்வப்போது நமக்கு நாமே சுயபரிசோதனை செய்வது மிக நன்று. அவ்வகையிலே, சுயபரிசோதனை செய்து கொள்ள ஒரு முப்பது கேள்விகள் கொண்ட தேர்வு இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முயன்று பாருங்கள்.

மொத்தம் மூன்று தேர்வுகள். முதல் தேர்வு 30 மதிப்பெண்கள். இரண்டாவது 30 மதிப்பெண்கள். மூன்றாவது 40 மதிப்பெண்கள். மொத்தம் 100 மதிப்பெண்கள். சில கேள்விகள் கடினமாகவே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விடைகளை நீங்கள் தேடுவதன் மூலம் அப்பகுதி சமயத்தையும் அறிய வேண்டும் என்ற நோக்கோடு சில கடினமான கேள்விகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

சைவ சமயம் அடிப்படை அறிதல் தேர்வு  (50 கேள்விகள்)

தேர்வு ௧ ஒன்றுக்குச் செல்க  (30 கேள்விகள்)

தேர்வு ௨ இரண்டுக்குச் செல்க  (30 கேள்விகள்)

தேர்வு ௩ மூன்றுக்குச் செல்க   (எளிமையான 40 கேள்விகள்)

சைவ சமய அடிப்படை என்ற தேர்வில் பெரும்பாலான கேள்விகளுக்கு கீழ்காணும் காணொளியில் பதில் இருக்கிறது. சைவ சமய அடிப்படையை அனைவரும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஒரு ஒன்றரை மணி நேரம் செலவு செய்து இந்த அடிப்படையை அனைவரும் குற்றமில்லாமல் தெரிந்து கொள்ளுவோம்.

உலகின் உள்ளங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

நம் தமிழ் எண்கள் அறிவோம், பயன்படுத்துவோம் 4.33/5 (3)

நம் தமிழ் எண்கள் அறிவோம், பயன்படுத்துவோம்

எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்

என்பார் ஔவையார்.

குறள் 392:.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
என்பது தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெருமான் வாக்கு. அத்தகைய கண்கள் போன்ற நம்முடைய தமிழ் எண்களை நாம் இன்று பயன்படுத்துகிறோமா ? முதலில் அந்த எண் வடிவங்களைத் தெரிந்து வைத்திருக்கிறோமா ?  உலகின் மூத்த மொழி என்ற பெருமை உடைய நம் தமிழ் மொழியின் எண்களை நாமே பயன்படுத்தாவிட்டால், அமெரிக்கர்களும் உருஷ்யர்களுமா பயன்படுத்துவார்கள் ?  இந்த கேள்வியை நாம் ஒவ்வொருவரும் நமக்கே கேட்டுக் கொண்டு, அதற்கான நம் கடமைகளை உணர்ந்து செய்ய வேண்டும். ஆகவே, தமிழ் எண்களின் உருவங்களை அறிந்து கொண்டு, அதை எளிதாக மனனம் செய்வதற்குரிய வழிகளைப் பின்பற்றி பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால், நம் எண்களுக்கு உயிர் வந்து விடும். இந்த முயற்சியை நம்மிலிருந்தே தொடங்குவோம். அதற்கான கருவி தான் இந்த காணொளியும், படங்களும்.

இந்த காணொளியில் பயன்படுத்தப்பட்ட படங்கள். எளிதாக கற்பதற்க்கும், பயிற்சி பெற்று பயன்படுத்துவதற்க்கும்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

காலத்தை வென்ற நூல்கள் என்பது எத்தனை காலமானாலும் என்றும் பொருந்தி இருப்பதாகும். பன்னிரு திருமுறைகளின் பெருமை 4/5 (2)

காலத்தை வென்ற நூல்கள் – பன்னிரு திருமுறைகளின் பெருமை

காலத்தை வென்ற நூல்கள் என்றால் என்ன ?

நூல் செய்து பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் ஒரே ஒரு எழுத்தைக் கூட மாற்றாமல் அப்படியே அந்த நூலின் பொருள் எக்காலத்தும் பொருந்துமாறு இருப்பது தான் காலத்தை வென்ற நூல்களாகும். இது போல காலத்தை வென்ற நூல்களை செய்வது எப்படி சாத்தியம் ? விஞ்ஞானம் நேற்று செய்த பொருள் இன்று புதிய வடிவம் (version) கொண்டு புதுப்பிக்கப்பட்டு (update) இவ்வுலகில் இருந்தே காணாமல் போய்விடுகிறது. ஆனால், பல ஆயிரம் காலங்கள் கடந்தும் ஒரு நூல் நிலைத்து நின்று, தற்காலத்திற்கும் இனி வரும் காலத்திற்கும் பொருந்துமாறு இருப்பது எத்தனை பெரிய அதிசயம், ஆச்சரியம் என்று எண்ணிப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே புரியும்.
 
இன்றைய உலகில் இத்தனை பெரிய நூல்கள் செய்வது சாத்தியமா என்றால், என்ன பதில் கொடுப்போம் என்று எண்ணிப் பாருங்கள். ஆனால், பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நூல்கள் நிற்கிறது என்றால், அவை உண்மைப் பொருளைச் சொன்னால் மட்டுமே நிற்பது சாத்தியம். உண்மையல்லாதவை அழிந்து போகும். அத்தகைய நூலையோ பொருளையோ மனிதர்கள் செய்வது சாத்தியமா என்ற கேள்விக்கும் நாம் என்ன பதில் கூறுவோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அத்தகைய நூல்கள் இறைவன் திருவருளினால் மட்டுமே செய்ய இயலும் என்பது இப்போது தெளிவாகும்.
 
வேகமாக மாறி வரும் இந்த விஞ்ஞான உலகிலும் காலத்தை வென்ற நூல்கள் இங்கு இருக்கிறதா என்று நாம் ஆராய்ந்தால் நமக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்ட நூல்கள் இன்றும் அதன் தன்மை மாறால், உண்மைப் பொருள் மாறாமல் நிலைத்து நின்றால், அது அதிசயம் அல்லவோ ? அப்படி பல நூல்கள் உலகிலேயே இந்தியா என்னும் நாட்டின் தென்கோடியில் தமிழகம் என்ற பகுதியிலே உலகின் முதன்மொழியாக இன்றும் வழக்கில் இருக்கும் தமிழ் என்ற மொழியிலே உள்ளது என்றால் நமக்கு இன்ப அதிர்ச்சி தானே. உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் எந்த மொழியிலும் பல காலத்தை வென்ற நூல்கள் இல்லவே இல்லை. உலகிலேயே தமிழ் நாட்டிலே, தமிழ் மொழியிலே மட்டும் தான் இருக்கிறது.  எனக்கு அந்த நூல்களைக் காண மிகவும் இப்போது ஆவலாக இருக்கிறது.
 
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வள்ளுவநாயனாரால் செய்யப்பட்ட திருக்குறள், பன்னிரு திருமுறை நூல்கள், இலக்கிய நூல்கள் என்று பல காலத்தை வென்ற நூல்கள் தமிழ் மொழியிலே உள்ளது. அத்தகைய நூற்களில் தலை சிறந்தது திருக்குறளும் பன்னிரு திருமுறை மற்றும் சித்தாந்த சாத்திர நூல்களும், இன்னும் பிற சைவ மரபு நூல்களுமாகும். நம் நூல்களின் பெருமை நமக்கே ஏனோ தெரிவதில்லை. அதை பாராட்டும் எண்ணமும் ஏனோ நமக்கே இருப்பதில்லை. அத்தகைய காலத்தை வென்ற நூல்களை நாம் எவ்வாறு போற்ற வேண்டும் ? எவ்வாறு பாதுகாக்க வேண்டும் ? அதை முதலில் நன்கு படித்து உள்வாங்கி உணர வேண்டும்.  அதற்கு சிறந்த ஞானாசிரியர்களின் துணையைப் பெற வேண்டும். திருவாவடுதுறை ஆதீனம் நடத்தும் சைவத் திருமுறை நேர்முக வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். இத்தகைய பெரிய சிவபெருமானின் அருளைப் பெற்றவர் இவ்வுலகில் எத்தனை பேர் ?
 
இந்த நூல்கள் சில ஆயிரம் ஆண்டு காலத்தின் முன்னர் தான் தோன்றியதா என்ற கேள்வியை எழுப்பினால்… நூல் வடிவமாக சில ஆயிரம் ஆண்டுகள் முன்னர் தான் தோன்றியது. ஆனால், சொல் வடிவில் குருவின் உபதேசமாக எத்தனை ஆயிரம் ஆண்டுகள் அதற்கு முன்னரும் இருந்துள்ளன ? இதை ஆராய்ந்து துல்லியமான பதிலைக் கூறத்தக்கவர் இங்கு எவரேனும் உளரோ ?
 
இந்த நூல்களில் உள்ள பதிகங்கள் செய்த அற்புதங்கள் எத்தனை எத்தனை ?  இந்த அற்புதங்கள் எல்லாம் நிகழ்ந்தனவா என்று வியந்து கேட்பவர்கள் ஏனோ, சாவின் விளிம்பில் இருக்கும் ஒரு நோயாளி பிழைத்துக் கொண்டதை இக்கால மருத்துவர்கள் Its a medical miracle என்பதை மட்டும் அதே வினாவை எழுப்பாமல் ஏற்றுக் கொள்கிறார்கள்.  நமக்குத் தெரியவில்லை என்ற காரணத்தினால் மட்டும், அந்த அற்புதங்கள் இன்றும் நடக்கவில்லை என்று அர்த்தமில்லை. இந்த அற்புதங்கள் நடந்ததற்க்கு சான்றுகளும் ஆதாரங்களும் உள்ளன.  இந்த உலகைச் சுற்றி இன்னும் நிறைய சூக்குமங்கள் இருக்கின்றன, அதுவும் மனிதனின் அறிவிற்கும் கவனத்திற்க்கும் எட்டாமல் இன்னும் நிறைய இருக்கிறன்றன என்பதை உணர இயலும்.
 
முதலை உண்ட பாலகனை மூன்று ஆண்டுகள் கழித்து அதே வளர்ச்சியோடு மீண்டும் பெற்றது எத்தனை பெரிய அதிசயம் ?  ஆற்றில் விட்டதை குளத்தில் பெற்றது, செங்கல் தங்கக் கட்டியாக மாறியது, காவிரி ஆறு பிரிந்து வழிவிட்டது, இந்த பூத உடலோடு திருக்கயிலாயத்திற்கு வெள்ளை யானையின் மீது ஏறிச் சென்றது, கொலை செய்ய ஏவப்பட்ட மதம் பிடித்த யானை வணங்கி வலம் வந்தது, கல்லைக் கட்டி கடலில் போட்டும் கல் தெப்பமாக மிதந்து கரையேறி அதற்கு சான்றாக இன்றும் இருக்கும் கரையேரவிட்ட குப்பம் என்ற பகுதியும், கொடிய நஞ்சை பாலில் கலந்து உண்டும் எந்த வித பாதிப்பும் இன்றி உயிரோடு இருந்ததும், பாடல் பாடி இறைவனிடம் படிக்காசு பெற்றதும், கயிலையில் உள்ள ஏரியில் மூழ்கி, திருவையாற்றின் குளத்தில் எழுவதும், இறந்து போன இளைஞரையும், பூம்பாவையையும் உயிருடன் எழுப்பியதும் (மாண்டவரை மீட்டது), பதிகம் பாடி நோய்களை நீக்கி மனித குலத்தை மீட்பதும், அடேங்கப்பா எத்தனை எத்தனை அற்புதங்கள்.  எல்லாம் இறைவன் திருவருளினால் நம் அருளாளர்கள் செய்த அற்புதங்கள்.
 
எத்தனை பெரிய சிறப்புகள் இந்த நூல்களுக்கு இருக்கின்றன ? அவற்றையெல்லாம் அறிவதற்கு நமக்கு ஏனோ இன்று நேரமே இருப்பதில்லை. சுதந்திரம் பெற்ற பின் சில பத்தாண்டுகளில் விஞ்ஞானத்தைத் தூக்கிப் பிடிக்கிறேன் என்று நம் பல்லாயிரம் ஆண்டு கால சிறப்புகளை இழிவுபடுத்தி நம்மிடம் உள்ள மாணிக்கத்தை நாமே தூக்கி எறிய வைத்த இழி செயல்கள் எத்தனை எத்தனை ? இன்னும் நாம் விழித்துக் கொண்டு, நம் பெருமைகளை உணர்ந்து, அவற்றை மற்றவர்களுக்கும் உலகிற்கும் அறிய செய்யும் செயல்களை நாம் செய்யவில்லை என்றால், இந்த ஞான பூமி நம்மை மன்னிக்காது.
உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

கூடுவாஞ்சேரி ஆதனூர் அருகே சமய விழிப்புணர்வு திருமுறை வீதி உலா No ratings yet.

கூடுவாஞ்சேரி ஆதனூர் அருகே சமய விழிப்புணர்வு திருமுறை வீதி உலா

நாம் வாழும் வாழ்வை இன்பமாக வாழுமாறு செதுக்குவது நெறிகள்.  உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பொதுவான இன்பமான வாழ்வைத் தரக் கூடியது ஒப்பற்ற நெறியாகும். அந்த ஒப்பற்ற நெறியை குற்றமில்லாமல் பெற வேண்டுமானால், அது இறைவன் ஒருவனால் மட்டுமே அருள முடியும். அவ்வாறாக குற்றமற்ற உயர்ந்த ஒப்பற்ற நெறியை இறைவனாகிய சிவபெருமான் நமக்கு உபதேசங்கள் மூலம் அருளப் பட்டது தான் சைவ சமய நெறி. அத்தகைய நெறியை ஒவ்வொருவரும் முதலில் அறிந்துணர வேண்டும். பின்னர், அதைத் தத்தம் வாழ்வில் முயற்சி செய்ய வேண்டும். பின்னர், அந்த நெறியே நம் வழி என்று தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அந்த ஒப்பற்ற நெறியை அனைத்து மக்களுக்கும் அறியச் செய்வது நம் தலையாய கடமையாகும்.

அவ்வண்ணமே, வீதிகள் தோறும் சென்று நம் தமிழ் வேத நூலாம் பின்னிரு திருமுறை என்பதை அறிவிக்கும் வண்ணமும், அந்த திருமுறையே நாம் வாழ பின்பற்ற தகுதியுடைய நெறியாகும் என்று எடுத்து உரைக்கும் வண்ணமும், திருமுறை வீதிஉலா உதவுகிறது. அத்தகைய திருமுறை வீதி உலா, நம் சென்னையின் தெற்கு கூடுவாஞ்சேரி ஆதனூர் அருகே அமைந்துள்ள திருநீலகண்டேசுவரர் திருக்கோவிலில் விகாரி ஆனி 15 (௧௫) ஞாயிறன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், சென்னை பள்ளிக்கரணை திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தினரும் கலந்து கொண்டனர். அதிலிருந்து சில காட்சிகள்.

திருச்சிற்றம்பலம்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலமெல்லாம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

 

Please rate this

திருமுறை மற்றும் சைவ விழிப்புணர்வு வீதிஉலா சென்னை வேளச்சேரியில் No ratings yet.

திருமுறை மற்றும் சைவ விழிப்புணர்வு வீதிஉலா சென்னை வேளச்சேரியில்

இறைவனால் நமக்கு அருளப்பட்ட ஞான ரத்தினமாகிய திருமுறை மற்றும் சைவ சமயத்தை உலகெங்கும் மக்களின் நன்மைக்காக எடுத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது நாட்டில் அறத்தை நிலை நாட்டி மாமழை பெய்து மக்களை இன்பமாக வாழச் செய்யும் வழியாகும். அவ்வழியே, சென்னை வேளச்சேரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் (TNHB) அமைந்துள்ள அண்ணாமலையார் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்திலும் அதை ஒட்டியுள்ள விநாயகர் ஆலத்தில் குடமுழுக்கு 48 நாள் நிறைவு விழாவிலும் ஆனி 1 முழுமதி நாளன்று, சைவ சமயம் மற்றும் திருமுறை விழிப்புணர்வு வீதிஉலா நடத்தப்பெற்றது.

கயிலாய வாத்தியம் முழங்க திருமுறை வீதிஉலாவும், சைவ சமயம் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கைகளும் அந்த கோவிலைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் அறிவோம் சைவ சமயம் என்று நூலும் அந்த கோவிலுக்கு வருபவர்களுக்கு கொடுக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் இருந்து சில காட்சிகள்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம், பள்ளிக்கரணை, சென்னை.

 

Please rate this

சண்டிகேசுவரர் நாடகமும் சைவ சமய விழிப்புணர்வு வில்லுப்பாட்டும் No ratings yet.

சண்டிகேசுவரர் நாடகமும் சைவ சமய விழிப்புணர்வு வில்லுப்பாட்டும்

கோடை விடுமுறையை நல்ல முறையில் பயன்படுத்த வந்த குழந்தைகள், தீந்தமிழ் மற்றும் தெய்வீக திருமுறைகளைக் கற்றதுடன், சண்டிகேசுவரர் மேடை நாடகமும், சைவ சமய விழிப்புணர்வு வில்லுப்பாட்டும் குறுகிய காலத்தில் பயிற்சி செய்து நிறைவு விழா அன்று நிகழ்த்தினர்.

சண்டிகேசுவரர் நாயனார் மேடை நாடகம்

இந்த நாடகத்தின் காட்சி வசனம், நம் வலைதளத்தின் பதிவிறக்கம் பகுதியில் உள்ளது.

வில்லுப்பாட்டில் சைவ சமய விழிப்புணர்வு எவ்வாறு கொண்டு வரலாம் என்ற கேள்விக்கு விடையாக உருவாகியது இந்த சைவ சமய விழிப்புணர்வு வில்லுப்பாட்டு. குழந்தைகளின் அருமையான முயற்சி பாராட்டத்தக்கது.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம், பள்ளிக்கரணை, சென்னை.

Please rate this

ஐந்தே நிமிடத்தில் சைவ சமயத்தின் அறிமுகம் 4.67/5 (3)

ஐந்தே நிமிடத்தில் சைவ சமயத்தின் அறிமுகம்

இன்றைய விஞ்ஞான காலம் மிகவும் விரைந்து செல்லும் தன்மையுடையது. பல்வேறு ஊடகங்களின் வாயிலாக கற்பதிலிருந்து, செயல்களைச் செய்து முடிக்கும் வரை பல்வேறு கருவிகளின் துணைகளோடு விரைந்து செய்கிறான் மனிதன். அத்தகைய மனப்போக்கு கொண்ட நம் புதிய தலைமுறையினருக்கு ஏற்ற வகையிலே, ஐந்தே நிமிடத்தில் பல்வேறு சைவ சமயக் கருத்துக்களை எடுத்துரைக்கும் காணொளிகளும் ஒலிப்பேழைகளும் நிறைய வர வேண்டும். சிறிது சிறிதாக நம் சமயத்தை ஒவ்வொருவரும் அறிந்துணர்ந்து, போற்றத்தக்க நம் சிவபிரானின் பெருமைகளை உணர்ந்து அவனை எப்போதும் துதித்து ஏத்த வேண்டும். அந்த வகையிலே, சைவ சமயத்தின் அடிப்படை செய்திகளை ஐந்தே நிமிடத்தில் எடுத்துரைக்கும் ஒரு முயற்சியே இந்த காணொளி.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

Please rate this

கோடை சிறப்பு தமிழ் வகுப்பு நிறைவு விழா மற்றும் 7 ஆம் ஆண்டு துவக்க விழா No ratings yet.

கோடை சிறப்பு தமிழ் வகுப்பு நிறைவு விழா மற்றும் 7 ஆம் ஆண்டு துவக்க விழா

சென்ற மே 26 ஆம் தேதி, திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம் நடத்திய சிறுவர்களுக்கான கோடை விடுமுறை சிறப்பு வகுப்பு நிறைவு விழா மற்றும் திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தின் 7 ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக பள்ளிக்கரணை MTK மகாலில் நடைபெற்றது.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தை சேர்ந்த அனைத்து அடியார்களும் மிகுந்த ஆர்வத்தோடும் ஊக்கத்தோடும் மிகவும் பரபரப்பாக நிகழ்ச்சிக்கு தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சி முதலில் அம்மையப்பர் வழிபாட்டுடன் துவங்கியது.

சிவதிரு கோதண்டராமன் ஐயா அவர்கள் விழாவிற்கு வருகை தந்திருந்த சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீசுவரர் மற்றும், தேவர்கள், பூதகணங்கள் என்று அனைவரையும் வரவேற்றும், கோடை விடுமுறை வகுப்பு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள், பட்டம் பெறும் சாதனையாளர்கள் என்று அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தார்கள்.

பின்னர், கோடை விடுமுறை சிறப்பு தமிழ் வகுப்பு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. சண்டிகேசுவரர் நாடகமும், சைவ சமய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வில்லுப்பாட்டும் நடைபெற்றது.

மேலே, சிவபிரான் சண்டிகேசுவரருக்கு கொன்றை மாலை அணிவித்து தொண்டர்களின் தலைவன் என்றும் சண்டிகேசுவர பட்டமும் அருளும் காட்சி.

பின்னர் சிறப்பு சொற்பொழிவாக, மயிலாடுதுறை சிவதிரு தீபன்ராஜ் அவர்கள் ஆளாவது எப்படியோ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சிவதிரு சரவணன் ஐயா, தொண்டை மண்டல அடியார்கள் பற்றி சிறு உரை நிகழ்த்தினார்கள்.

பின்னர், திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தின் செயல்பாடுகளை விளக்கி கூறினார் சிவதிரு மீனாகுமார் அவர்கள். பின்னர், தென் சென்னை பகுதியிலும் மற்ற பிற பகுதிகளிலும் தன்னலமற்ற சிறப்பாக சிவபணி செய்த பல ஆயிரக்கணக்கானவர்களில் 28 பேரை தேர்ந்தெடுத்து சிறப்பு பட்டமளிப்பு வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது. அவர்கள் மேன் மேலும் சிறந்த சிவப்பணியாற்ற பெருமான் திருவடிக்கு விண்ணப்பம் வைக்கப்பட்டது.

பின்னர் கோடை சிறப்பு தமிழ் வகுப்பில் கலந்து கொண்ட அத்தனை குழந்தைகளுக்கும் பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டது. பின்னர் இரவு உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

பஞ்சபுராணம் மற்றும் வாழ்த்து பாடலோடு விழா இனிதே நிறைவுற்றது.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம், பள்ளிக்கரணை, சென்னை.

Please rate this

ஆளாவது எப்படியோ (திருக்காளத்தி அப்பனுக்கு) சிவதீபன்ராஜ் மயிலாடுதுறை No ratings yet.

ஆளாவது எப்படியோ (திருக்காளத்தி அப்பனுக்கு)

சிவதீபன்ராஜ் மயிலாடுதுறை

எண் குணங்களை உடைய சிவபெருமானுக்கு உயிர்களாகிய நாம் எப்படி ஆளாவது ? அடிமையாவது ? அவனுக்கு என்ன பணி செய்வது ?

திருநீறு அணிந்தால் போதுமா ?

உருத்திராக்கம் அணிந்தால் போதுமா ?

பஞ்சாக்கர மந்திரம் சொன்னால் போதுமா ?

கோவில் சென்று வழிபட்டால் போதுமா ?

இவையெல்லாம் செய்து கொண்டு, பொய் பேசுதல், உயிர்க்கொலை செய்தல்,  ஒழுக்கமற்ற வாழ்வு வாழ்தல் போன்ற செயல்களில் ஈடுபடலாமா ?

என்ன செய்தால் சிவபிரான் திருவடிகளை நாம் அடைய முடியும் ?

ஆளாவது எப்படியோ ?

மயிலாடுதுறை சிவதீபன்ராஜ் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தின் 7 ஆம் ஆண்டு துவக்கவிழா மற்றும் கோடை சிறப்பு தமிழ் பயிற்சியின் நிறைவு விழா ஆகியவற்றின் போது.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

பள்ளிக்கரணை, சென்னை.

Please rate this

அறிவோம் சைவ சமயம் – புத்தகம் pdf 5/5 (4)

அறிவோம் சைவ சமயம் – புத்தகம் pdf

நம்முடைய குழந்தைப் பருவத்தில் நம் பெற்றோர்கள் நமக்கு எவ்வளவு தூரம் நம் சமயத்தை நமக்குக் காட்டுகின்றனரோ, அத்தனை தூரத்திலிருந்து நம் ஆன்மீக பயணமானது துவங்குகிறது. அவ்வகையிலே, நாம் நம் வாழ்வில் பயணித்த தூரத்தையும் அனுபவத்தையும் நம் குழந்தைகளுக்குக் காட்டி வளர்ப்பது மிகவும் இன்றியமையாத ஒன்று.  அவ்வகையிலே, சைவ சமயம் பற்றிய அடிப்படை நுட்பம் அனைவரும் கட்டாயம் அறிய வேண்டும் என்ற வகையிலே அந்த அடிப்படை நுட்பத்தை அனைவருக்கும் சென்றடையும் வண்ணம் சிறு சிறு துளிகளாக சேர்க்கும் முயற்சியில் இந்த அறிவோம் சைவ சமயம் என்ற புத்தகமும் ஒரு அங்கமாக சேர்த்துள்ளோம்.

நாம் யார், நம் இறைவன் யார், நம் கடமைகள் என்ன என்பதை அறியாமலேயே நம் சமுதாயத்தில் பெரும்பாலானோர் கோவிலுக்கு சென்று தங்களுக்கு வேண்டியவற்றை இறைவனிடம் விண்ணப்பித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் சைவத்தின் ஞான ஒளி பெற்று நம் பிறப்பு இறப்பில்லாத சிவபிரானை என்னென்றும் ஏத்தும் வண்ணம் ஆகும் முயற்சியில் இந்த புத்தகமும் ஓர் அங்கமாகத் திகழ எண்ணம் கொண்டு இங்கு அதன் அச்சிடக்கூடிய PDF வடிவம் பகிரப்படுகிறது. இது அனைவருக்கும் பயன் பெறும் வகையில் அமையும் என்று நம்புகிறோம். இது நம் வலைதளத்தினஅ பதிவிறக்கம் பகுதியிலும் சுட்டப்பட்டுள்ளது.

அறிவோம் சைவ சமயம்  –  PDF

https://drive.google.com/open?id=1IRzrkHEyYMoXsOutU_MSoGLr82LmCw4g

குழந்தைகளுக்கான சிறுவர் நாடம் – சண்டிகேசுவரர் நாடகத்தின் வசனத்தினையும் இங்கே பதிவேற்றியுள்ளோம்.

சண்டிகேசுவரர் சிறுவர் நாடகம் – PDF

https://drive.google.com/open?id=10nddS3thvI81X7za-rUYBbyTDkq6i1fu

உலகின் வீதிகள் தோறும் சைவ பாட சாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

கோடை விடுமுறைல தமிழ் திருமுறை சொல்லிக்கொடுங்க No ratings yet.

கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு தமிழ் திருமுறை சொல்லிக் கொடுங்க

உலகின் ஆன்மீக ஒளியாக, பல்லாயிரம் ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது நம் பாரத பூமி. இந்த பூமியில் தடுக்கி விழுந்தால் ஞானப் புதையலைப் பெறலாம். ஒவ்வொரு கோவிலும் ஞானப்புதையல். ஒவ்வொரு இல்லமும் ஞானப் புதையல். ஒவ்வொரு மலையும், நதியும், காற்றும் ஆகாயமும் ஞானப் புதையலாக நமக்கு பாடம் சொல்லித் தரும் குருவாக அமைந்துள்ளது. அத்தகைய புண்ணிய பூமியில் நாம் பிறந்து வாழ்ந்து கொண்டிருப்பது எத்தனை பெரிய பாக்கியம்?

கடந்த பல நூற்றாண்டுகளால் நாம் இழக்கப் பெற்ற ஞானத்தையும், இறை உணர்வையும் தற்போது மீட்டு பேரின்பமாக இவ்வுலகில் வாழும் முறையை அறிந்து கொண்டு, நம் தலைவனாகிய ஈசனை உணர்ந்து தொழுது ஏத்தி வணங்கி வாழ வேண்டும். தனி மனித ஒழுக்கம், குடும்ப ஒழுக்கும், பொது ஒழுக்கம் என்று எங்கும் ஒழுக்கம் நிறைந்த பூமியை நாம்  மீண்டும் படைத்திட வேண்டும். ஒழுக்கம் இன்பமான வாழ்விற்கு மிகவும் உறுதுணையாக நிற்பது. ஒழுக்கம் இல்லாத வாழ்வும், ஒழுக்கமில்லாத எந்த அமைப்பும், வெளியிலிருந்து யாரும் கெடுக்காமலேயே கெட்டுப் போகும்.

தனிமனித சுதந்திரத்திற்கும் ஒழுக்கத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. தனி மனித சுதந்திரம் முழுக்க முழுக்க இருக்கும் ஒருவனே, தான் இன்பமாக வாழும் பொருட்டும், தன் குடும்பம் இன்பமாக வாழும் பொருட்டும், தன் தெரு, ஊர், நாட்டு மக்களும் இன்பமாக வாழும் பொருட்டும் தனக்குத் தானே சில விதிகளை விரும்பி கடைப்பிடிப்பதே ஒழுக்கமாகும். இந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க சிறிது சிரமம் தேவைப்பட்டாலும், அதனால் வரக்கூடிய நன்மைகள் பலப்பல. அந்த ஒழுக்கம் இல்லாவிட்டால், தனி மனிதனின் வாழ்வும், ஊரும், நாடும் கெட்டுப்போகும் என்பது வரலாற்றில் பல்லாயிரம் முறை நாம் கண்ட உண்மையாகும்.  இதை வலியுறுத்தவே,  தெய்வப்புலவர் வள்ளுவர் பெருமானும்,

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

என்றார். அத்தகைய இன்றியமையாத வாழ்வின் இருதயமாக இருக்கக்கூடிய ஒழுக்கத்தையும், வாழ்வில் நன்றாக இன்பமாக வாழும் முறையையும் ஏனோ இன்றைய கல்வி முறை புறக்கணித்துவிட்டு விஞ்ஞானம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து வருகிறது. இந்த நிலையிலிருந்து விலகி, நம் கல்வி, இன்பமாக வாழவும், எத்தகைய சூழலை கையாளவும், புதிய புதிய கருவிகள் கண்டுபிடிப்பதையும், விஞ்ஞானத்தோடு சேர்த்து மெய்ஞானத்தையும் புகட்ட வேண்டும். அன்று தான் அதற்கு அடுத்த தலைமுறைகள் இன்பமாக இனிமையாக வாழ இயலும்.

அதுவரை, அந்த பொறுப்பு பெற்றோர்களின் கைகளில் தஞ்சம் புகுந்துள்ளது. ஒவ்வொரு பெற்றோரும், தன் பிள்ளைக்கு இனிமையாக வாழும் வழிகளையும், நாம் யார், நம் மொழி என்ன, நம் சமயம் என்ன, நம் வரலாறு என்ன, நம் புராணங்கள் என்ன, நம் குருமார்களும் நமக்கு வழிகாட்டிகளும் யார் என்ற இன்றியமையாத செய்திகளையும் ஊட்டும் பொறுப்பு உடையவர்களாக இருக்கின்றனர்.

அவ்வகையிலே, கோடை விடுமுறையில், குழந்தைகளுக்கு இனிய விளையாட்டுகளோடு சேர்த்து, இந்த முக்கியமான கடமையை நிறைவேற்றுவது சிறப்பானதாகும். அதற்கு ஏற்றவாறு, அந்தந்த ஊரிலிருக்கும் சிறு அமைப்புகளும், சிவனடியார், முருகன் அடியார் திருக்கூட்டங்களும், அடுக்கக கூட்டமைப்புகளும் சேர்ந்து சிறப்பு வகுப்புகளை நடத்தலாம்.

தமிழ் மொழியின் அடிப்படை, இலக்கணம், ஆத்திசூடி, திருக்குறள் போன்ற அற நூல்கள், பன்னிரு திருமுறை, பதினெட்டு புராணங்கள், நாயன்மார்கள் வரலாறு, பக்திப் பாடல்கள், விளையாட்டு, நம் பழங்கால இசைக்கருவிகளை இயக்குவது, விடுகதைகள் என்று பல்சுவையோடு சேர்த்து அவர்களுக்கு நம் சமயம் மற்றும் தமிழ் மொழியின் அடிப்படைகளை ஊட்டினால், அவை அவர்களிடம் ஆழமாக பதிந்துவிடும். நீங்களும் இத்தகைய வகுப்புகளை உங்கள் ஊரில் நடத்தலாமே ?

 

பள்ளிக்கரணையில் இத்தகைய வகுப்பு வரும் ஏப்ரல் 15 லிருந்து மே 25 வரை நடைபெறும்.

திருச்சிற்றம்பலம்.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்,

பள்ளிக்கரணை, சென்னை.

Please rate this

தமிழ் ஞானப்பரவல் – தமிழ் வேதம் திருமுறைகளை இல்லங்களுக்கு கொடுப்போம் No ratings yet.

தமிழ் ஞானப்பரவல் 

தமிழ் வேதமாம் பன்னிரு திருமுறைகளை இல்லங்கள் தோறும் ஓதுவதற்கு ஊக்குவிக்கும் வண்ணமும், சைவ நெறிமுறைகளை அழுந்தி கடைப்பிடிக்கவும், திருமுறை தொகுப்பு புத்தகங்கள், நாயன்மார்கள் வரலாறு போன்ற புத்தகங்களை, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து கொடுக்கும் ஒரு சிறு முயற்சி.

அவ்வகையிலே, விளம்பி ஆண்டு மாசி மாத முழுநிலவு நன்நாளிலே, சென்னையில் ஒரு கிரிவலம்  அரசன்கழனி அருள்மிகு பெரியநாயகி உடனுறை பசுபதீசுவரர் ஆலயத்தில் ஔடதசித்தர் மலையை மலைவலம் (கிரிவலம்) வந்த அன்பர்களுக்கு குலுக்கல் முறையில் கரு முதல் திரு வரை திருமுறை தொகுப்பு புத்தகம் பரிசளிக்கப்பட்டது.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

இந்த நிகழ்விலிருந்து சில காட்சிகள்

 

Please rate this

கொங்கு நாட்டு தலங்கள் திருமுறை மற்றும் திருப்புகழ் பதிகங்கள் 4/5 (2)

கொங்கு நாட்டு தலங்கள் திருமுறை மற்றும் திருப்புகழ் பதிகங்கள்

கோவை சகோதரர்களாகிய சிவதிரு சுப்ரமணியம் ஓதுவார் மற்றும் சிவதிரு தண்டபாணி ஓதுவார் ஆகியோரது இனிமையான குரலில் கொங்கு நாட்டு திருத்தலங்களில் பாடப் பெற்ற திருமுறை மற்றும் திருப்புகழ் ஆகிய பதிகங்களுக்கு புதிய நிழல்அசைவு படத்தோடு கேட்டும், உணர்ந்தும் உருகி மகிழ இந்த காணொளி தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் கண்டு கேட்டு உணர்ந்து உருகி மகிழுங்கள். திருச்சிற்றம்பலம்.

அனைத்து பாடல்களின் தொகுப்பு பட்டியல்

 

குறிப்பிட்ட சில பாடல்கள்

சுந்தரர் தேவாரம் மற்றுப் பற்றெனக்கின்றி

கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர் சுந்தரர் தேவாரம்

திருநாவுக்கரசர் தேவாரம் சிட்டனை சிவனை செழுஞ் சோதியை

அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும்  திருஞானசம்பந்தர் தேவாரம்

தொண்டெலாம் மலர் தூவி திருஞானசம்பந்தர் தேவாரம்

பெண்ணமர் மேனியானாரும் பிறைபுல்கு செஞ்சடையாரும் திருஞானசம்பந்தர் தேவாரம்

எரிக்குங் கதிர்வேய் சுந்தரமூர்த்தி தேவாரம்

எற்றான் மறக்கேன் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்

பந்தார் விரன்மடவாள் திருஞானசம்பந்தர் தேவாரம்

அருணகிரிநாதர் திருப்புகழ்

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை கந்தன் உண்டு கவலையில்லை

கொங்குநாடு திருவிசைப்பா திருப்பல்லாண்டு பெரியபுராணம்

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

சைவ சமயமே சமயம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

திருச்சிற்றம்பலம்.

Please rate this

பீடுடைய மார்கழி போற்றி – மாணவர்களுக்கான திருமுறை ஒப்புவித்தல் போட்டி 5/5 (1)

பீடுடைய மார்கழி போற்றி – மாணவர்களுக்கான திருமுறை ஒப்புவித்தல் போட்டி

திருச்சிற்றம்பலம்.

தமிழ் வேதமாம் பன்னிரு திருமுறைகளை நம் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கிலும் மார்கழி மாதத்தில் அனைவரும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி மற்றும் சிவபுராணம் ஆகிய பதிகங்களை முழுமையாக படித்து மனனமாக சொல்ல வேண்டும் என்ற நோக்கிலும் மாணவர்களுக்காக இந்த மூன்று பதிகங்களையும் படித்து ஒப்புவிக்கும் போட்டி கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.

மிகவும் உன்னதமான மார்கழி மாதத்தை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து, இறைவனை அறியாமல் உலகியலில் உழன்று கொண்டிருக்கும் மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்து எழுப்புவதே திருப்பள்ளியெழுச்சியாகும். அத்தகைய பெருமைமிகு மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடி சிவாலயங்களில் இறைவனை வழிபாடு செய்வது பல்லாயிரமாண்டு மரபு. அந்த திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியோடு சேர்த்து சிவபுராணமும் குழந்தைகள் இளவயதிலேயே கற்க வேண்டும் என்று நோக்கம் கொண்டு, *பீடுடைய மார்கழி போற்றி* என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான பதிகம் ஒப்புவித்தல் போட்டி, பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் திருக்கோவிலில் 26-01-2019 அன்று மாலை 5 மணிக்கு திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டது. இதில் 5 வயது குழந்தைகள் முதல் பதினோராம் வகுப்பு மாணவர் வரை பலர் பங்கு பெற்று பரிசு பெற்றனர். இந்த போட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளிக்கரணை மாணவர்களும் பங்கு கொண்டு, கலைநிகழ்ச்சிகளும் நடத்தி சிறப்பித்தனர். நம் இயற்கையோடு இயைந்த பண்டைய கால சிறப்பான வாழ்க்கை முறையை நாமும் கடைப்பிடித்தால் நோயின்றி நலமாக நீண்ட ஆயுளோடு வாழலாம் என்பது திண்ணம்.

இது போன்ற நிகழ்ச்சிகளை அனைத்து சிவனடியார்களும் தங்களது சிவாலயங்களிலும் மடங்களிலும் நடத்தி நம் குழந்தைகளுக்கு பன்னிரு திருமுறையையும் அதன் பெருமைகளையும் நிலைநிறுத்துவது மிக மிக அவசரமான அவசியமானதாகும். ஆகவே, இது போன்ற போட்டிகளும், நிகழ்ச்சிகளும் தொடர்ந்து இடைவிடாது அடிக்கடி நடத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த நிகழ்ச்சியிலிருந்து சில காட்சிகள்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

திருவாவடுதுறை ஆதீனம் சைவ திருமுறை நேர்முக பயிற்சி மையம் சென்னை பள்ளிக்கரணையில் 4/5 (2)

திருவாவடுதுறை ஆதீனம் சைவ திருமுறை நேர்முக பயிற்சி மையம் சென்னை பள்ளிக்கரணையில் ஆரம்பம்.

சிவமயம்

அருள்மிகு சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீசுவரர் மலரடிகள் போற்றி!

நம் பள்ளிக்கரணையில் திருவாவடுதுறை ஆதீனம் சைவ திருமுறை நேர்முக பயிற்சி மையம் ஆரம்பம் 2019-2020

நமது நீண்ட கால விண்ணப்பத்திற்கு அருள் கொடுக்கும் வண்ணம் அருள்மிகு ஆதிபுரீசுவரர் நமக்கெல்லாம் அருள் செய்து கரும்பினும் இனிய தித்திப்பான செய்தியை வழங்குகிறார். நம் பள்ளிக்கரணையில் 2019-2020 தொகுப்பிற்கான திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் சைவ திருமுறை நேர்முக பயிற்சி மையம் துவங்க திருவருள் கூட்டியுள்ளது.

திருக்கயிலாய பரம்பரை குருமரபில் தழைத்தோங்கி வருகின்ற இவ்வாதீனம் சித்தர் சிவப்பிரகாசரிடம் ஞானோபதேசம் பெற்ற அருள்திரு நமசிவாய மூர்த்திகள் அவர்களால் கிபி பதினான்காம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பெற்றது. சித்தர் சிவப்பிரகாசர் அருள் நமச்சிவாயரிடம் தீட்சை பெற்றவர். அருள் நமச்சிவாயர், சந்தான குரவராகிய உமாபதி சிவாச்சாரியாரிடம் உபதேசம் பெற்றவர்.

பிறப்பு இறப்பில்லாத சிவபெருமானார் நம் முன்னோர்கள் அருளாளர்கள் வழியாக, நமக்கெல்லாம் தானே வந்து அருள் செய்த தமிழ் வேதமாம் சைவ பன்னிரு திருமுறைகளை ஒவ்வொருவருக்கும் எடுத்துச் செல்லும் நோக்கில் திருவாவடுதுறை ஆதீனம் உலகமெங்கும் நூற்றுக்கணக்கான சைவ திருமுறை நேர்முக பயிற்சி மையங்களை நடத்தி வருகிறது. அதிலொரு புதிய மையமாக நம் பள்ளிக்கரணையில் நம் ஆதிபுரீசுவரர் திருவருளோடு, நம் திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்ட அடியார்களால் அமைக்கப்பெற்று நடத்தப்படும்.

ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் (முதல் ஞாயிறு காலை 9:30 முதல் 1 மணி வரை, மதிய உணவுடன்) இந்த வகுப்பு நம் பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் கோவிலில் நடைபெறும். திருமுறை பற்றிய வரலாறு, பதிகங்களை எப்படி பண்ணோடு பாட வேண்டும், பதிகங்களின் வரலாறு என்று இசை ஆசிரியர் ஒருவராலும், விளக்கவுரை ஆசிரியர் ஒருவராலும் விளக்கப்பெறும். 2019-2020 வகுப்புக்கான பாடத்திட்டம் (syllabus) வகுக்கப்பட்டு, அதற்குரிய பதிகங்களும், விளக்கவுரையும் புத்தகங்களாக இதில் இணையும் மாணவர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். இசை ஆசிரியரும், விளக்கவுரை ஆசிரியர் அவர்களும், சைவ இசை மற்றும் சாத்திர தோத்திரங்களில் மிகுந்த அனுபவம் பெற்றவர்கள். கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் என குடும்பமாகவும் இவ்வகுப்பில் சேரலாம்.

நம் சமயங்களின் அடிப்படை செய்திகளை அறிய, ஆழ்ந்த சமய நுட்பங்களை உணர, ஆராய்ச்சிகள் செய்ய, இறைவனை அறிந்து உணர்ந்து போற்றியும் ஏத்தியும், சிவ புண்ணிய செயல்களிலும் ஈடுபடுவதை விட நமக்கு வேறு என்ன இறைவனால் அருளப்பெற முடியும் ? ஆகவே, இந்த அரிய வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்தி இந்த வகுப்பில் இணையுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த வகுப்பிற்கு அமைப்பாளராக, நம் திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தின் சிவதிரு கோதண்டராமன் ஐயா அவர்கள் இருந்து நடத்தி கொடுக்க இசைந்துள்ளார்கள். இந்த வகுப்பில் இணையவும், இந்த வகுப்பு பற்றிய மேலும் விபரங்களுக்கு அவரை அணுக 9840194190 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

இந்த இனிய செய்தியை குடும்பத்தார் நண்பர்கள் உறவினர்கள் ஆகியோரோடு உடனே பகிர்ந்து கொண்டு நீங்கள் குடும்பமாக இந்த வகுப்பில் இணையுங்கள்.

சென்னை பள்ளிக்கரணை, மேடவாக்கம், சித்தாலபாக்கம், சந்தோசபுரம், வேளச்சேரி, பெரும்பாக்கம், அரசன்கழனி, சோழிங்கநல்லூர், சு.குளத்தூர் இவற்றை சுற்றியுள்ள பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள அன்பர்கள் இணையுங்கள்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவபாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.
பள்ளிக்கரணை, சென்னை.

 

Please rate this

108 நாட்கள் தொடர் திருவாசகம் முற்றோதல் திருக்கழுக்குன்றம் No ratings yet.

108 நாட்கள் தொடர் திருவாசகம் முற்றோதல் திருக்கழுக்குன்றம்

108 நாட்கள் தொடர் திருவாசகம் முற்றோதல் என்பது என் வாழ்விலேயே அடியேன் சிந்தித்துக் கூட பார்த்திராத ஒரு மாபெரும் நிகழ்வாகும். தன்னிறைவற்ற விஞ்ஞான அறிவும், மேற்கத்திய மோகமும் நம் தேசத்தை மெல்ல மெல்ல கடந்த அறுபது எழுபது ஆண்டுகளில்பற்றிக் கொள்ள, நம் பல்லாயிரம் ஆண்டுகளின் திரட்சியான மெய்ஞானமும், அந்த ஞானம் வழிகாட்டிய நம் வாழ்வு முறையும், சமயமும், சாத்திரங்களும், மாபெரும் ஒளி பொருந்திய சூரியனை மேகங்கள் சற்றே மறைப்பது போல மறைத்துவிட்டன. அந்த நிழலை சாதகமாக பயன்படுத்தியும், நம் பாரத தேச மக்களின் அறியாமையையும் பயன்படுத்திக் கொண்டும், அந்நிய பரசமயங்கள் தங்களின் சிறகுகளை வேகமாக பரப்பி வருகின்றன. இறைவன் திருவருளால், நம் குருமார்கள் நமக்கு அருளிச் சென்ற நம் சமய ஞானத்தையும், இறைவனை அடையும் வழிகளையும் நாம் வேகமாக நம் மக்களுக்கும் உலக மக்களுக்கும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக பணியாற்றி பரவும் சூழலில் இருக்கின்றோம்.

இத்தகு சூழலில், நம் பன்னிரு திருமுறைகளில் ஒன்றான திருவாசகம் திருமுறைகளுக்கே உரிய ஆழ்ந்த ஞானம், மெய்யுணர்வு, எளிமையாக பாடும் தன்மை என்று பல சிறப்புகளுடன் கூடியதை, நம் மக்களுக்கு பரவச் செய்வது என்பது மிகப்பெரிய திருவருள் கூடிய செயலாகும்.  அதுவும் எளிய தொடர்பு வசதியில்லாத நம் கிராமங்கள் அத்தனையும் சிந்தித்து பாருங்கள். அத்தகு மேம்பட்ட திருப்பணியில் முக்கிய பெரும் பங்களிப்பு செய்தவர் நம் திருக்கழுக்குன்றம் சிவதாமோதரன் ஐயா என்றால், அது மிகையாகாது. அவர்கள் முற்றோதல் செய்தலைத் தொடர்ந்து, அவர்களது திருக்கழுக்குன்ற இல்லத்தில் தொடர்ந்து 108 நாட்கள் திருவாசகம் முற்றோதல் நிகழச் செய்யும் நிகழ்வு தற்போது நிறைவு பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறது. ஒரு பெரும் சைவ மடம், மடாதிபதிகள் பல்வேறு துணையோடு செய்யும் செயற்கரிய செயலை ஐயா நம் சமய மேம்பாட்டிற்காக செய்கிறார்கள் என்றால், அது சிவபிரானின் சித்தமே ஆகும்.

அந்த 108 நாட்கள் திருவாசகம் முற்றோதலில் ஒரு நாளாக, சென்னை பள்ளிக்கரணை அடியார்கள் இணைந்து 97 ஆவது நாளில் ஐயாவின் திருக்கழுக்குன்றம் சிவசிவ இல்லத்தில் ஓதினர். திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தினர் கைலாய வாத்திய இசையோடு மிகவும் சிறப்பாக முற்றோதல் இறைவன் திருவருளால் நிகழ்த்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கோமல் கா. சேகர் ஐயாவும் இணைந்தது மிகவும் சிறப்பானது.

இந்த முற்றோதல் நிகழ்வு முழுமையடைந்து அதன் குறிக்கோளை அடையும் என்பது பிறப்பு இறப்பற்ற பெருங்கருணையாளின் திருவருள்.

திருச்சிற்றம்பலம்.

இந்த நிகழ்வு பற்றி கோமல் கா சேகர் ஐயாவின் பதிவு:

ஓம்
சிவ சிவ:
=====
மீண்டும் திருவாசக உலா !
=====. =====
19-12-18 திருக் கழுக் குன்றம் ஐயா இல்லத்தில் பள்ளிக் கரணை முற்றோதல் குழுவினரால் திரு வாசகம் ஓதப்பட்டது !
ஐயா அவர்கள் சுமார் 15- திருப் பதிகங்களை இறையாற்றல் வெளிப்படும் வண்ணம் உணர்ச்சி பொங்கப் பாடி , எல்லோரையும் மறந்தும் அயல் நினைவிற்கு இடமின்றி ஈர்த்து மகிழ்வித்தார் !
குழு அன்பர்கள் கிட்டத்தட்ட திருவாசகத்தையே மனப் பாடம் செய்திருந்தது அவர்கள் இசைத்து ஓதும் முறையில் உணர முடிந்தது!
குழுவில் உள்ள மகளிர்கள் சிற்ப்பாக ஆடிப் பாடியும் மகிழ்வித்தனர்.
108- நாள் முற்றோதல் 01-01-19 அன்று நிறைவெய்துகிறது !
திருவாசகத்தை மேலும் பட்டி தொட்டியெல்லாம் எடுத்துச் சென்று அனைத்து இன் மக்களையெல்லாம்
சிவத்துக்கே ஆட்படுத்திட சிவ. தாமோதரன் ஐயா அவர்கள் ,எதிர் நிற்கும் தொடர் 10-ஆண்டுகளுக்குச் ஆற்ற வேண்டியப் பணிகள் குறித்து விவாதித்தோம்.
இனி ஆங்காங்கே முற்றோதல் செய்ய விழைவோர் ஐயா அவர்களைத் தொடர்பு கொள்க !
படங்கள் :~~ 19-12-18 முற்றோதல் நிகழ்வின் போது சிவ தாமோதரன் ஐயா அவர்களுடன் ,சிவ பழனி இராஜம்மாள் அம்மா மற்றும் கோமல் கா சேகர்.
திருச்சிற்றம்பலம்.

அந்த நிகழ்விலிருந்து சில காட்சிகள்.

Please rate this

திருமுறை வீதிஉலா மற்றும் உருத்திராக்க வழிபாடு No ratings yet.

திருமுறை வீதிஉலா மற்றும் உருத்திராக்க வழிபாடு

சென்னை, மேடவாக்கம் அருகில் உள்ள ஊர் பெரும்பாக்கம். அங்கே, சைவத்தின் மேன்மைகளை எடுத்து இயம்பும் பொருட்டும், ஆதியும் அந்தமும் இல்லாத சைவ சமயத்தினை அனைவரும் தெரிந்து, வாழ்வில் கடைப்பிடித்து போற்றி உய்வடையும் பொருட்டும் பெரும்பாக்கம் இந்திரா நகரில் குடி கொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் அவர்களின் திருவடிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது. இது கார்த்திகை மாதம் 9 ஆம் நாள், நவம்பர் 25 ஞாயிறன்று நடைபெற்றது.

கயிலாய வாத்தியங்கள் முழங்க, சுவாமிக்கு அபிடேகம் செய்யப்பட்டது. பின்னர் பன்னிரு திருமுறை ஓதப்பட்டது. பன்னிரு திருமுறை நூல்களை சென்னியில் வைத்து வீதிஉலாவாக அடியார்கள் புடை சூழ, வாத்தியங்கள் முழங்க எடுத்து வரப்பட்டது.  அடியார்களுக்கு காலை அன்னம்பாலிப்பு செய்யப்பட்டது. அதிலிருந்து சில காட்சிகள் கீழே.

 

Please rate this

30 ஆண்டுகளுக்குப் பின் பள்ளிக்கரணையில் கார்த்திகை தீபம் ஏற்றல் No ratings yet.

30 ஆண்டுகளுக்குப் பின்னர் பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் கோவிலில் கார்த்திகை தீப விழா

இறைவன் ஒளியாக இருப்பதை நாம் தீபமாக ஏற்றி உணர்கிறோம். அடிமுடி தேடிய வரலாற்றில், பிறப்பு இறப்பு, ஆதி அந்தம் இல்லாத சிவபெருமான், சோதி உருவாக நெடும் பிளம்பாக எல்லையில்லா வண்ணமாக திரு அண்ணாமலையில் தோன்றினான்.  அந்த நாள் கார்த்திகை முழுமதி நாள். இந்த நிகழ்வை குறிக்கும் வண்ணம் இன்றும் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுகிறது. தீப ஒளியாக இறைவன் எழுந்தருளி பக்தகோடிகள் அனைவருக்கும் அருள் புரிகிறான்.

இதே நேரத்தில் உலகில் எல்லா இடங்களிலும், கோவில்களிலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இது தொன்று தொட்டு வரும் ஒரு பழக்கமாகும். அவ்வாறாக, சென்னை பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் கோவிலிலும் அதன் எதிரில் உள்ள குளத்திலும் தீப வரிசைகள் பல்லாண்டு காலமாக ஏற்றப்பட்டு வந்தது.

இடையில் நுழைந்த மேற்கத்திய பண்பாட்டு தாக்கத்தினால், இந்த பழக்கம் பள்ளிக்கரணையில் நின்று போனது. சென்ற ஆண்டு இதை மீட்டெடுக்க திட்டமிட்டாலும், இந்த ஆண்டு தான் இது நிகழ வேண்டும் என எம்பெருமான் திருவருள் கூட்டியது. பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் கோவிலின் தொண்டர்கள், பக்தர்கள், திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம் ஆகியோர் இணைந்து இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான அகல் விளக்குகளை மாலை 4 மணிக்கு ஆரம்பித்து 6 மணிக்கு விளக்கேற்றினர்.

கோவிலின் மதிற்சுவற்றிலும், குளத்தின் நான்கு திசைகளிலும் உள்ள படிக்கரையிலும், சாலையை ஒட்டியுள்ள குளக்கரையில் முழுவதுமாக விளக்குகள் அடுக்கப்பட்டு ஒளியேற்றப் பட்டன.  மீண்டும் இந்த புண்ணிய பூமி பிறந்துவிட்டது போன்ற ஒரு எல்லையில்லாத இனம் புரியாத இன்ப உணர்வு அத்தனை பக்தர்களுக்கும் ஏற்பட்டது.

இனி வரும் காலங்களில், இந்த தீபமேற்றும் விழா எவ்வித தடையின்றி நடைபெற பேரருளாளன் சிவபிரானின் திருவடிக்கு விண்ணப்பம் வைக்கப்பட்டது.

அதிலிருந்து சில காட்சிகள் இங்கே:

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

தமிழ் அன்னையைக் காப்போம் – கோமல் கா சேகர் No ratings yet.

தமிழ் அன்னையைக் காப்போம். கோமல் கா சேகர்:
ஓம்
சிவ சிவ :


தமிழ் அன்னையைக் காப்போம் !


அன்பர்கள் இந்தப் பதிவினை முழுவதும்
படிக்க வேண்டுகிறேன்.
சிவமே படைத்து மதுரையில் சங்கத் தலைவராகவும் அமர்ந்து புலவர் குழாத்துக்குப் போதித்தப் பெருமை உடையது நம் தாய் மொழி !
நுணுகி ஆய்ந்தால் இறைவனாரைத் தவிர எவரும் இந்தச் சீர் மிகு மந்திர ஆற்றல் உடைய மொழியைப் படைத்திருக்க முடியாது என்றக் கருத்தே எஞ்சும் ! தமிழன் என்ற நம் பண்பாட்டையும் , நாகரீக வாழ்வையும் காக்க ஆதாரம் நம் தாய் நமக்கு ஊட்டி வளர்த்த நம் தமிழன்னையே !
இப்படியே விட்டால் 20 ஆண்டுகளில் 50 சதவீதம் வரை பேச்சு வழக்கில் ஆங்கிலச் சொற்களின் கலப்பு மொழியாகி நம் அழிவுக்கு ஏதுவாகி விடும் ! இது சிவத் துரோகமாகிவிடும் !
தமிழையே அறியாத நம் வழிமுறையினருக்கு எப்படி நம் திருமுறைகளையும் சங்க காலம் தொடங்கி நம் பெருமைகளைப் பறை சாற்றும் நூல்களையும் கற்பிக்க முடியும் ? நம் சிவ மொழிக்கும், சைவத்துக்கும் ஏதாவது செய்தேன் என்ற மன நிறைவு அடைய விழைவோர் ,இதனைப் படி எடுத்து ,தம் கருத்துக்ளையும் தனித் தாளில் பதிவு செய்து முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன் !
தனி நபராக நான் மட்டும் முயன்றால் பயன் கிடைக்காது என்பதை கருத்தில் கொள்க ! பங்காற்றுவோர் சிவத்தின் அருளுக்கு ஆளாவர் !

ஓம்

சிவ சிவ :


தமிழக முதல்வர் அவர்களுக்குத் தமிழ் மொழியைக் காக்க வேண்டும் என எழுதியத் திறந்த மடல்.


அனுப்புபவர் :

கோமல் கா. சேகர்.

103 , பெருமாள் கோயில் வீதி ,கோமல் அஞ்சல். ~609805 ,

நாகப்பட்டினம் மாவட்டம்./9791232555.

பெறுநர்:

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , தமிழ்நாடு அரசு ,கோட்டை , சென்னை.

நாள்:18-11-2018

~~~~~~~~~~

ஐயா ,

பொருள் : தமிழ் மொழி – ஆங்கில மொழியால் 35 சதம் வரைக் கலப்படம் ஆகியுள்ள இழி நிலை – உடன் மீட்டெடுக்க வேண்டிய நிலை – கருத்துரு சமர்ப்பித்தல்- தொடர்பாக .

பார்வை : தமிழக முதல்வருக்கு என்னால் சமர்ப்பிக்கப்பட்ட 27-01-2010– நாளிட்ட அறிக்கை.

பார்வையில் கண்ட எனது கடிதத்தில் தமிழ் மொழியினை , 35 சத வீதம் வரை ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசும் அளவுக்கு மக்கள் தள்ளப் பட்டு விட்ட அவல நிலையைச் சுட்டி , இந்த அவல நிலையிலிருந்து , தமிழை மீட்டெடுக்க ,அரசுத் தரப்பிலிருந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒரு விரிவான அறிக்கை சமர்ப்பித்து இருந்தேன்.

ஆனால் எந்த விதப் பயனுள்ள நடவடிக்கைகளும் அரசால் எடுக்கப் படவில்லை !

இந்த நிலைக்கு எவர் காரணம் என்பதையெல்லாம் ஆய்வு செய்வதற்கான நேரம் இதுவல்ல !

என்ன காரணம் என்பதை மட்டும் ஆய்ந்து , குறைகளைக் களைந்து தனித் தமிழை மீண்டும் நிலை நிறுத்துவதே தமிழர்களாகிய நம் கடமையாகும் .

தமிழை மீட்டெடுத்துத் தூய்மை செய்யும் அதிகாரம் முழுதும் இறைவன் திருவருளால் ,

தங்கள் கைகளில் இன்று குவிந்திருக்கிறது !

அதனால் அரசுக்கு தனி நிதிச் சுமையின்றி பல நற் பயன் விளைவிக்கும் சட்டங்களை இயற்ற எனது இந்த விரிவான அறிக்கையை தங்கள் கவனத்துக்குச் சமர்ப்பிக்கிறேன்.

இயற்ற வேண்டிய சட்டங்கள் !

01) தமிழ்நாடு தொலைக் காட்சி தமிழ் பயன் பாட்டுச் சட்டம் .

இன்று தொலைக் காட்சிகள் கிட்டத்தட்ட 90 சத வீத மக்களைச் சென்றடைகிறன.

அனைத்து வகை நிகழ்ச்சிகள் தயாரிப்பாளர்களும்,

35 சதம் வரை ஆங்கில மொழியைக் கலந்தே நிகழ்ச்சிகளைத் தயாரித்து அளிக்கிறார்கள் என்பதை தமிழுலகம் அறியும்.

இதனால் கிராமப் புற மக்கள் வரை ,தாம் பேசுவதில் உள்ளப் பல சொற்கள் ஆங்கிலமா என்று கூட அறியாமல் கலப்பு மொழியில் பேசும் இழி நிலை உருவாகி விட்டது.

இன்று ஆண் பெண் இரு பாலருக்கும் ,

ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசினால்தான் சமூகத்தில் மரியாதை என்ற ஒரு தவறான எண்ணம் ஆழமாகப் பதிந்துள்ளதும் இதன் விளைவே ஆகும்.

ஆகவே தனித் தமிழைப் பயன் படுத்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஏதுவாக உரிய சட்டத்தினை உருவாக்கி நடைமுறைப் படுத்த வேண்டும்.

இதனால் மக்கள் தொலைக் காட்சியைப் பார்க்க மாட்டோம் என்று நிறுத்தி விடப் போவதில்லை !

எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை !

செய்தி ஒலியை எழுத்து வடிவில் ,தொடராகக் கீழே எழுதும் போது நிறைய எழுத்துப் பிழைகளும் ,

இலக்கணப் பிழைகளும் மலிந்துள்ளன.

செய்திகளைப் படிப்போரும் ஒருமை ,பன்மை முதலான இலக்கணப் பிழைகளைகளையும் செய்கிறார்கள்.

இதனைத் தவிர்க்க , தமிழை முதன்மைப் பாடமாகப் பயின்றோரையே ,செய்தித் தயாரிப்பாளராகவும் ,படிப்போராகவும் ஒவ்வொரு தொலைக் காட்சியிலும் நியமனம் செய்ய வகை செய்ய வேண்டும். தனித் தமிழில் இயக்கப் படும் மக்கள் தொலைக் காட்சியைக் கருத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

02) தமிழ்நாடு திரைப் படத்துறை தமிழ் பயன் பாட்டுச் சட்டம் ‌.

கிட்டத்தட்ட 1970 வரை

தமிழ்த் திரைப் படங்கள் தூயத் தமிழ் சொற் பதங்களைப் பயன் படுத்தியே தயாரிக்கப் பட்டன.

இதனால் தமிழ் நாட்டில் ஆங்காங்கே வழங்கி வந்த கொச்சைத் தமிழ் பேச்சு வழக்கம் பெருமளவு நீங்கி ,பேச்சு வழக்கில் தமிழகம் முழுதும் சம நிலை ஏற்பட்டது. இது தூயத் தமிழுக்கு ஏற்றம் தந்து பேருதவியாகவும் அமைந்தது !

இன்று பெருமளவு ஆங்கிலக் கலப்பும் ,கொச்சைத் தமிழ் உரையாடல்களுமே திரைப் படத்தில் துறையினரால் வலிந்துப் புகுத்தப்பட்டு ,இம் முறையானது பயன்பாட்டுக்கு வந்து ,தமிழ் சீரழிக்கப் பட்டு வருகிறது.

ஆகவே இந்த இழி நிலையை அறவே போக்க உரிய சட்டம் இயற்றப் பட வேண்டும்

முன்னாள் முதல்வர்கள் மாண்புமிகு ,திரு . எம்‌ ஜி.ஆர் , செல்வி. ஜெயலலிதா ,மற்றும்சிவாஜி , ஜெமினி ,எஸ் எஸ் இராஜேந்திரன் ,

திருமதி கண்ணாம்பாள்

திருமதி விஜயகுமாரி , திருமதி பத்மினி,சாவித்திரி

போன்றோர் பேசியத் தூயத் தமிழ் வசனங்கள் இன்றும் மக்களால் விரும்பப் படுகின்றன என்பதையும் அறிவீர்கள் !

தூய தமிழை மட்டும் பயன்படுத்தி திரைப் படங்கள் எடுத்தால் ,திரைப் படமே பார்க்க மாட்டேன் என எவரும் தவிர்க்கவும் போவதில்லை!

ஆகவே தக்கவாறு ஆய்வு செய்து தூய்மையான தமிழ் உரையாடல்களைப் பயன் படுத்தியே ,திரைப் படங்கள் எடுக்க ஏதுவாகக் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

03) நாளிதழ் ,வார ,மாத இதழ்கள் தமிழ் பயன்பாட்டுச் சட்டம்.

இன்று

நாளிதழ்களிலும் , வார ,மாத இதழ்களிலும் ,

விளம்பரங்களிலும் , மிகவும் அதிக அளவு ஆங்கில மொழிக் கலப்பு இருப்பதையும் ,

இலக்கணப் பிழைகள் மலிந்துள்ளதையும் ,கருத்தில் கொண்டு,தூய தமிழில் அவை வெளியிடப் பட வகை செய்திட உரிய சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

06) தமிழ் மொழிப் பட்ட வகுப்புப் படித்து , இன்று ஆயிரக் கணக்கானவர்கள் , அரசு மற்றும் தனியார் பணிகளின்றி உள்ளனர்.

தமிழக அரசுப் பணிகளான இள நிலை உதவியாளர் , உதவியாளர் பணியிடங்களுக்கு இவர்கள் தேர்வு செய்யப் பட ஏதுவாக உடனடியாக 50 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்க வேண்டும் !

எவ்விதத் தகுதியும் நோக்காமல் ,இப் பதவிகள் இவர்கள் எய்தியுள்ளத் தகுதிக்குக் குறைவான தகுதித் தேவை உடையனவாக இருப்பதால் முதுமை அடிப்படையில் உடன் நியமன ஆணைகள் வழங்க வேண்டும்.

07) பல அச்சகங்களில் அச்சிடப்படும் சிறு அறிவிப்புகள் , விளம்பரங்கள்

,பத்திரிகைகளில் எண்ணற்றப் பிழைகள் மலிந்துள்ளன !

அரசுத் துறை ,தனியார் துறை சார்ந்த வெளியீடுகளிலும் பிழைகள் மலிந்துள்ளன ! தனியார் வர்த்தக நிறுவன விளம்பரப் பலகைகளிலும் பிழைகள் மலிந்துள்ளன.

வட்ட அளவில் தமிழாசிரியர் குழுமம் அமைத்து உரிய கட்டணம் பெற்று பிழை நீக்கித்தான் வெளியீடுகள் செய்யப் பட வேண்டும் என்று கட்டுப் படுத்தலாம் !

இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டே ஊதியம் வழங்கலாம்.

அரசாணை , அறிவிப்பு இதர வெளியீடுகளில் பிழைகள் தவிர்க்க வட்டாட்சியர் ,

கோட்டாட்சியர் முதலான அலுவலகங்களுக்கு ஒவ்வொரு தமிழ்ப் புலவரை நியமனம் செய்யலாம் .

08) இன்று தனித் தமிழ் இளங்கலை ,முது கலைப் பாடத்திட்டங்கள் முழுமையான தமிழ் வல்லுனாராக்கும் வகையில் இல்லை !

வேலை வாய்ப்பின்மையைக் கருதி ,அதிக மதிப்பெண்கள் பெறும் நினைவாற்றல் உள்ள மாணவர்கள் ,வேறு உயர் கல்விப் பட்டங்களைப் பெற முனைவதால் ,

குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களே தமிழ் இளங்கலை முதுகலை வகுப்புகளில் சேர்ந்து படிக்கிறார்கள் !

வேலை வாய்ப்பின்மையே முதன்மைக் காரணம்.

1100 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் நினைவாற்றல் உள்ள மாணவர்கள் தமிழ் படிக்க முன் வருவதில்லை .

மேல் நிலைக் கல்வி முடிந்த உடனேயே பேராசிரியர் ,மேல் நிலைப் பள்ளி ஆசிரியர் ,உயர் நிலைப் பள்ளிப் பணிகளுக்கு

மதிப்பெண் அடிப்படையில் , இவர்கள் படித்து வெளி வரும்போது ஏற்பட உள்ள பணியிடங்கள் கணக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்து, ஒருங்கிணைந்த எட்டாண்டு தமிழ்க் கல்வி பாடத் திட்டம் அமைத்து ,முழுப்

புலவராக்கி முனைவர் பட்டத்துடன் வெளிவரும்படி பயிற்றுவிக்க , முயற்சி மேற்கொண்டால் , மீண்டும்

நுண்மாண் நுழைபுலம் மிக்கப் புலவர்கள் தமிழகத்துக்குச் சொத்தாகக்

கிடைப்பார்கள்.

வேலை உறுதி இருந்தால் 95 சத வீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுக்கும் ஆற்றல் மிக்க மாணவர்கள் விரும்பிக் தமிழ் படிக்க முன் வருவர் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு குழு அமைத்து இந்த இனம் ஆய்வு செய்யப் பட வேண்டும்.

09) இன்றைய நிலையில் இரண்டு தலைமுறை மாணவர்கள் , தமிழ் மொழியைப் பிழையின்றி எழுதவோ ,

படிக்கவோ ,தனித்

தமிழில் பேசவோ இயலா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் !

முற்றிலும் முதல் வகுப்பிலிருந்து 12- ஆம் வகுப்பு வரையாது , கட்டாயத் தமிழ் வழி பயின்று முறையே இந்தச் சீர்கேட்டினை அகற்ற வல்லதாகும்.

இன்று ஆங்கில வழிப் பயிற்றுப் பள்ளிகளை மக்கள் நாடும் ஒரே காரணம் ,மேல் நிலைப் பள்ளிக் கல்வியை நிறைவு செய்யும் போது தம் பிள்ளைகள் தங்கு தடையின்றி ஆங்கிலத்தில் பேசவும் ,எழுதவும் வல்லவனாக வேண்டும் என்பது ஒன்றே அன்றி வேறு காரணம் எதுவும் இல்லை.

உயர் நிலைத் தொழிற் கல்வி பயின்ற மாணவர்களில் தங்கு தடையின்றி ஆங்கிலத்தைப் பேசும் மாணவர்களே பணிகளுக்கு விரும்பித் தனியார் நிறுவனங்களால் தேர்வு செய்யப் படுவதே , இதன் அடிப்படை .

பள்ளி இறுதி வகுப்பு நிறைவு செய்யும் 12 ஆண்டு காலத்துக்குள் மாணவர்களை ஒரு மொழியில் நன்கு பேசவும் ,எழுதவும் தயார் செய்ய முடியாது என்பது ஏற்புடையதன்று !

ஆங்கிலப் பாடத் திட்டத்தை மாற்றி அமைத்துப் பேச்சுப் பயிற்சிக்கு தேவையான அளவு கால ஒதுக்கீடு செய்து பயிற்சி கொடுத்தால் இந்தக் குறைபாடு தீர்ந்துவிடும் !

மக்கள் தனியார் பள்ளிகளை நாடும் தேவையும் குறையும் .

இந்த கருத்துருவை ஆழ்ந்து ஆய்வு செய்யின் தமிழும் ஏற்றம் பெறும் ‌; ஆங்கிலத் தேவையும் மக்களுக்கு நிறைவேறும் !

அரசன் இறைவனால் நியமிக்கப் படுகிறான் ; முன்னைத் தவமின்றி ஒருவர் உயர் பதவியை எய்த முடியாது!

வரலாற்றிலேயே இல்லா அளவுக்கு ,இற்றை நாளில் நம் உயிரினும் மேலானத் தாய் மொழி கீழ்படுத்தப் பட்டுள்ளது.

இப்போதே முயன்றாலும் , இந்தச் சீர்குலைவில் இருந்து மீண்டும் தமிழ் தன் இயல்பு நிலையை அடைய முப்பது ஆண்டுகளாவது ஆகும்.

ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இறைவனாரால் குவித்து வைக்கப் பட்டுள்ளது.

இந

்தத் திட்டங்களைச் செயல் படுத்துவதால் எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை !

மாறாக மக்களுக்குப் பெரும் பயன்களே விளையும் .

இறைவனாரால் சங்கத் தலைமை தாங்கி வளர்த்தெடுக்கப் பட்டது நம் தமிழ் மொழி !

இதனை மீட்டெடுக்கும் செயல் திட்டங்களைத் தாங்கள் தக்க ஆணைகளிட்டுச் செயலாக்கத்துக்குக் கொண்டு வந்தால் ,2000 ஆண்டு கால தமிழக வரலாற்றில் தங்கள் பெயர் பொன்

எழுத்துக்களால் பொறிக்கப் பெறும்.

“தமிழ்த் தாயை மீட்டெடுத்தத் தலைவன்” என்ற அழியாப் புகழுக்கு ஆளாவீர்கள்.

தங்கள் ஆட்சியும் புகழுக்குரியதாகும்‌ .

ஆகவே தமிழ் மற்றும் தமிழர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு ஒரு வரலாற்றில் போற்றத்தக்க நல்ல முடிவை எடுத்து செயலாக்கம் செய்திடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள ,

( கோமல் கா சேகர்/ 18.11. 2018)

இணைப்பு:

தமிழக அரசுக்கு அனுப்பிய எனது 27-01-2010 நாளிட்டக் கடித நகல் :

நகல்கள் : —

01)மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள்.

02) மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர்./03)பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.

04)கல்வித் துறைச் செயலர் ,சென்னை. 05)இயக்குநர் ,தமிழ் வளர்ச்சித்துறை சென்னை,

06) துணை வேந்தர் தமிழ்ப் பல்கலைக்கழகம்.

தஞ்சாவூர்

07) தமிழ்த் துறைத் தலைவர்கள் ,

அனைத்துப் பல் கலைக் கழகங்கள்.

Please rate this

திருமுறை அறிவோம் திருமுறைகளின் பெருமை துண்டறிக்கை 4.6/5 (5)

திருமுறை அறிவோம். வாழ்வில் திருப்பத்தைக் காண்போம்.

கோவிலுக்கு வருபவர்களுக்கும், வீடு வீடாக சென்று திருமுறையின் பெருமைகளை துண்டறிக்கையாக கொடுப்பதற்கும் ஒரு பக்க அறிக்கை இங்கே உள்ளது. இதை பதிவிறக்கம் செய்து, பத்தோ, ஐம்பதோ, நூறோ, ஆயிரமோ, லட்சமோ, உங்கள் வசதிக்கேற்ப அச்சிட்டு அனைவருக்கும் கொடுக்கலாம். திருச்சிற்றம்பலம்.

திருமுறை அறிவோம் – ஒரு பக்க துண்டறிக்கை பதிவிறக்கம் செய்ய https://drive.google.com/open?id=1IsGc106rkSFMYekel1trMGpshA5jzU7r

திருமுறை அறிவோம். வாழ்வில் திருப்பத்தைக் காண்போம்.

        கலியுகத்தில் நமக்கு ஊழ்வினையால் ஏற்படும் துன்பங்களுக்கும், வாழ்வில் நாம் சந்திக்கும் அனைத்து துன்பங்களுக்கும், பிறவி என்னும் மிகப்பெரிய பிணிக்கும், மருந்தாக அமைந்து நம்மைக் காத்து அருள்வது பன்னிரு திருமுறைகள் எனப்படும் சிவ ஆகமங்களாகும். மிகவும் பெருமைமிக்கது, அளப்பரியது, ஆற்றல்மிக்கது. வேத ஆகமங்கள் மற்றும் சைவ சித்தாந்தத்தின் பிழிந்த சாறாக, நமக்கு இன்பம் தரும் நமது தமிழ் மொழியில், அருளாளர்கள் வழியாக இறைவனால் நமக்கு அருளப்பட்டது, பன்னிரு திருமுறை என்னும் தமிழ் வேதம். நம்முடைய துன்பங்கள் அனைத்திற்க்கும் மூல காரணமாக விளங்குவது நம் அறியாமை. அந்த அறியாமையிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு திருமுறை வாக்குகள் பெரிதும் உதவுகின்றன. வினை வயப்பட்டுத் துன்புறும் நாம் திருந்தி உய்யும் பொருட்டு, இறைவன் அருளாளர்களை இப்பூமிக்கு அனுப்பி அவர்கள் வாயிலாக நமக்கு இந்த திருமுறைகளை அருளிச் செய்துள்ளான். திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மிகுந்த மந்திர ஆற்றல் உடையவை. திருமுறைகளை நாம் பாராயணம் செய்து ஓதுவித்தால், அதில் உள்ள மந்திர ஆற்றல், நம் உயிரில் கலந்து நமது அறியாமையைப் போக்கும். யாராலும் மாற்றியமைக்க முடியாத நம் விதியை, இறைவனின் கருணையினால் மட்டுமே மாற்றியமைக்க முடியும். விதியை மதியால் வெல்வது என்பது திருமுறைகளை ஓதுவித்து, இறைவன் அருள்பெற்று, நம் விதியை மாற்றுவதேயாகும்.

       பன்னிரு திருமுறைகளால் நம் ஆன்மீக பூமியில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் சில: பாண்டிய மன்னன் வெப்பு நோய் தீர்ந்து, கூன் நிமிர்ந்தது. வேதங்களால் பூட்டப்பட்ட திருக்கதவு திறந்து, பின் தாளிட்டது. பாலை நிலம் நெய்தல் ஆனது. தேவார ஏடுகள் தீயில் கருகாமல் பச்சையாக இருந்தது, வைகை ஆற்று வெள்ளத்தில் எதிரே நீந்தியது. ஆண் பனை பெண் பனையாயிற்று. எலும்பு பெண்ணாகியது. விடத்தினால் இறந்த செட்டி உயிர் பெற்றார். ஆற்றில் போட்டது குளத்தில் கிடைத்தது. சுண்ணாம்பு காளவாயில் 7 நாட்கள் உயிரோடு இருந்தது. மதயானையை வணங்கச் செய்தது. கல்லில் கட்டி கடலில் வீசியவர் தெப்பமாக மிதந்து கரை சேர்ந்தது. நரி குதிரையாகியது. முதலை விழுங்கிய பிள்ளை 3 ஆண்டுகள் கழித்து மீண்டது. பிறவி ஊமை பேசியது. சிவபெருமானே தம் கைப்பட எழுதியது நூலானது. இன்னும் பல எண்ணற்ற அற்புதங்களை செய்துள்ளது பன்னிரு திருமுறை. திருமுறையே சைவநெறிக் கருவூலம், செந்தமிழ் வேதம்.

       பன்னிரு திருமுறைகள், 27 ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டது. திருஞானசம்பந்தரால் பாடிய திருக்கடைக்காப்பு 1,2,3 ஆம் திருமுறை. திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் 4,5,6 ஆம் திருமுறை. சுந்தரர் பாடிய திருப்பாட்டு 7 ஆம் திருமுறை. மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், திருக்கோவையார் 8 ஆம் திருமுறை. 9 ஆசிரியர்கள் பாடிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு 9 ஆம் திருமுறை. திருமூலர் அருளிய திருமந்திரம் 10 ஆம் திருமுறை. காரைக்கால் அம்மையார் முதலிய 11 ஆசிரியர்கள் அருளிய பிரபந்தம் 11 ஆம் திருமுறை. திருத்தொண்டர் 63 நாயன்மார்கள் வரலாறு பாடும் சேக்கிழார் அருளிய பெரியபுராணம் 12 ஆம் திருமுறையாகும். மொத்தம் 18,326 பாடல்களைக் கொண்டது பன்னிரு திருமுறை.

       பிறப்பு இறப்பு, ஆதி அந்தம் இல்லாத சிவபெருமான் ஒருவரே முழுமுதற்கடவுள். பன்னிரு திருமுறை சிவபெருமானின் மந்திர வடிவமாகும். திருமுறை சிவாலயங்களில் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பெற்று சிவபெருமானாகவே வழிபடப் பெற்று வருவது. பன்னிரு திருமுறைகளை ஓதினாலும், ஓதுவதைக் கேட்டாலும், அத்தனை தீய சக்திகளும் அவ்விடத்திலிருந்து விலகி நல்ல மந்திர சக்தியால் அந்த இடம் சூழ்ந்து நல்லதே நடக்கும். ஆகையால் திருமுறை அறிவோம். தினமும் திருமுறை ஓதுவோம். திருச்சிற்றம்பலம்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

சைவ சமய சாத்திர நூல்கள்

Please rate this

திருநீற்று இயல் – திருநீறு பற்றிய அனைத்து முக்கிய தகவல்கள். திருநீறு நிலத்தில் சிந்திவிட்டால் என்ன செய்ய வேண்டும்? 5/5 (1)

திருநீற்று இயல் – திருநீற்றின் மகிமை

திருநீற்றின் பெருமை வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், திருமுறைகள் என்று எங்கும் குறிப்பிடப்படுகிறது. அவையெல்லாம் பல ஆண்டுகள் பேசிக் கொண்டே இருக்கலாம். அவற்றிலிருந்து சில பெருமைகளையாவது நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

சிவ தொண்டு செய்ய விரும்புபவர்கள் இந்த திருநீற்றின் பெருமை சொல்லும் இரண்டு பக்க கோப்பினை அச்சிட்டு, அவர்கள் பொருளாதார வசதிக்கு ஏற்ப 50, 1000, ஒரு லட்சம் என்று பிரதிகள் அச்சிட்டு கோவிலுக்கு வருபவர்களுக்கும், உங்கள் தெருவில் மற்றும் அடுக்ககத்தில் இருக்கும் அன்பர்களுக்கும் வழங்கலாம்.

https://drive.google.com/open?id=1EiYg8mskN0Q8BFsiwudRl31iUfSkvSlD

பொதுவான பதிப்பு:

https://drive.google.com/open?id=1jwymrjxhpx6Ez580zpeWVpB63o4co41E

திருநீற்றின் சில பெருமைகளை எடுத்துரைக்கும் சொற்பொழிவு:

சிவமயம்

திருநீற்று இயல்

சைவ சமயத்தோர் உடம்பில் அணிய வேண்டிய அடையாளம் யாது?

        திருநீறு

திருநீறாவது யாது?

        பசுவின் சாணத்தை நெருப்பில் சுடுதலால் உண்டாகிய திருநீறு.

எந்த நிறத் திருநீறு பூசத்தக்கது?

        வெள்ளை நிறத் திருநீறு.

திருநீற்றினை எதில் வைத்துக் கொண்டு அணிய வேண்டும்?

        பட்டுப் பையிலோ, சம்புடத்திலோ வைத்துக் கொண்டு அணிய வேண்டும்.

திருநீற்றினை எத்திக்கு முகமாக இருந்து அணிதல் வேண்டும்?

        வடக்கு முகமாகவே, கிழக்கு முகமாகவே இருந்து அணியலாம்.

திருநீற்றினை எப்படி அணிய வேண்டும்?

        நிலத்தில் சிந்தாத வண்ணம் அண்ணாந்து ‘சிவசிவ / நமசிவாய / சிவாயநமஎன்று சொல்லி, வலக்கையின் நடு மூன்று விரலினாலும் நெற்றியில் அணிதல் வேண்டும்.

திருநீறு நிலத்தில் சிந்திவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

    சிந்திய திருநீற்றினை உடனே எடுத்து விட்டு, மேலும் அந்த இடத்தில் துடைத்தெடுக்க வேண்டும்.

திருநீற்றினை நடந்து கொண்டோ, படுத்துக்கொண்டோ பூசலாமா?

        கூடாது.

திருநீற்றினைக் கட்டாயமாக அணிய வேண்டிய நேரங்கள் யாவை?

  தூங்கப் போகும் போதும், தூங்கி எழுந்த போதும், பல் துளக்கிய உடனும், குளித்த உடனும், உணவு உண்ணும் முன்னும், உண்ட பின்னும், சூரியன் தோன்றி மறையும் போதும் திருநீறு அணிய வேண்டும்.

ஆசாரியார், சிவனடியார் திருநீறு தந்தால் எப்படி வாங்குதல் வேண்டும்?

        விழுந்து வணங்கி எழுந்து கும்பிட்டு இரண்டு கைகளையும் நீட்டி வாங்குதல் வேண்டும்.

கடவுள் முன்னும், குரு முன்னும், அடியார் முன்னும் எப்படி நின்று திருநீறு அணிய வேண்டும்?

        முகத்தை திருப்பி நின்று அணிய வேண்டும்.

திருநீறு அணிதல் எத்தனை வகைப்படும்?

        இரண்டு வகைப்படும், அவை : 1. நீர் கலவாது பொடியாக (உத்தூளனம்) அணிதல், 2. நீர் கலந்து முக்குறியாக ( திரி புண்டரம் ) அணிதல். (ஹோமம் செய்த நீற்றினை நெய்யில் குழைத்து அணிதல் ரக்ஷை எனப் பெயர் பெறும்.)

திரிபுண்டரமாகத் தரிப்பதன் அறிகுறி யென்ன?

        ஆணவம், கன்மம், மாயை யென்னும் மூன்று மலங்களையும் நீக்குமென்கிற குறிப்புத்தோன்றத் தரிப்பதாம்.

முக்குறியாக அணியத்தக்க இடங்கள் யாவை?

   தலை, நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறு இடங்களாம்.

முக்குறியாக அணியும் போது நெற்றியில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

        இரண்டு கடைப் புருவ எல்லை வரை அணிய வேண்டும். அதற்குக் கூடாமலும் குறையாமலும் அணிய வேண்டும்.

மார்பிலும், புயங்களிலும் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

        அவ்வாறங்குல நீளம் அணிய வேண்டும்.

மற்றைய இடங்களில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

        ஒவ்வோர் அங்குல நீளம் அணிய வேண்டும்.

முக்குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?

        ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டலாகாது.

சைவ சமயத்துக்கு விபூதி ருத்திராக்ஷம் முக்கியமானதற்குக் காரணமென்ன?

        பரமசிவனுடைய திருமேனியிலும் திருநேத்திரத்திலும் உண்டானமையால் முக்கியமாயின.

அவைக ளுண்டான வகை எப்படி?

        பரமசிவனுடைய அக்கினிபோன்ற திருமேனிமேல் இயல்பாகப் பூத்ததுவே அனாதியான விபூதி. பின்பு தேவர் முதலிய சராசரங்களையெல்லாம் இறுதிக்காலத்தில் நீறாக்கித் தம்முடைய திருமேனியில் தரித்தருளினாரே அது ஆதி விபூதி. நெருப்பின்மேல் நீறுபூத்திருப்பதை இப்போதும் திருஷ்டாந்தமாகக் காணலாம்.

அதனை அணிவதனால் பயன் என்ன?

        மாபாதகங்களெல்லாம் நீங்குமென்றும் அப்படிக்கொண்ட விபூதியை பசுவின் சாணத்தினால் விளைக்க வேண்டுமென்றும் அப்படி விளைப்பதில் கற்பம், அநுகற்பம், உபகற்பமென மூன்று விதியுண்டென்றும் அவற்றுள் ஒரு விதிப்படி விளைவித்துத் தரித்துகொள்ள வேண்டுமென்றும் ஆகமங்கள் சொல்லுகின்றன.

கற்பவிதி யாவ தெப்படிக்கொத்தது?

        நோயற்ற நல்லபசுக்களைப் பரிசுத்தமுள்ள தொழுவத்திற் சேர்த்து அவைகளிடுகிற சாணத்தைப் பூமியில் விழவிடாமல் தாமரையிலையில் சத்தியோசாத மந்திரத்தால் எடுத்துக் கொண்டு மேலுள்ள வழுவை நீக்கிவிட்டு, வாமதேவத்தாற் பஞ்சகவ்வியம் விட்டு, அகோரத்தால் பிசைந்து, தற்புருடத்தால் உருண்டையாக்கி சிவ மந்திர ஓமத்தால் உண்டான சிவாக்கினியில் சிவபெருமான் திருவடிகளை நினைந்து இட்டுப் பக்குவமாக வெந்த பிற்பாடு எடுத்துப் புதுப்பானையிலிட்டு வேண்டியமட்டில் விபூதிக் கோவிலில் வைத்துக் கொண்டு பூமியில் சிந்தாமல் தரித்துக்கொண்டால் செனன மரணதுக்கம் நீங்கி மோக்ஷமடையலாம். இவ்வாறு விளைவிப்பதுதான் கற்பவிதி. சாணத்தை யேந்தும்போதும் அக்கினியி விடும் போதும் வெந்தபின்பு எடுக்கும்போதும் புதுப்பானையில் வைக்கும்போதும் மந்திரஞ் சொல்லவேண்டும்.

அனுகற்பவிதி எப்படி விளைவிப்பது?

        காட்டிலுலர்ந்த பசுவின் சாணத்தை யுதிர்த்துக்கோசலம் விட்டுப் பிசைந்து சிவாக்கினியி லிட்டுப் பக்குவப்படுத்துவதாம்.

உபகற்ப விபூதியாவது யாது?

        இயல்பாக வெந்த காட்டுச்சாம்பல் சிவாலய மடைப்பள்ளிச் சாம்பல் இவைகளையெடுத்துக் கோசலம்விட்டுப் பிசைந்து உண்டாக்கி சிவாக்கினியிலிட்டுப் பக்குவப்படுத்தி முன்போல் எடுத்து வைத்துக்கொண்டு தரித்துக்கொள்ளுவதாம்.

விபூதிக்கோவில் எதனாலமைக்கப்பட்டது?

    வஸ்திரம், புலித்தோல், மான்தோல் இவைகளால் அமைக்கவேண்டும். இவையேயன்றி வேறுமுண்டு.

எல்லாச் செந்துக்களிலும் பசு சிரேஷ்டமான தென்னை?

        புண்ணியநதி, தீர்த்தங்கள், முனிவர்கள், மேலானதேவர்கள், வாசமாகும்படியான அங்கங்களுடன் உற்பவமானதினாலும் தெய்வலோகத்திலிருக்கின்ற காமதேனுவின் குலமானதாலும் சிரேஷ்டமானது. அன்றி, பசு மலநீக்கத்துக்குக் சூரணமான திருநீற்றினுக்கு முதற்காரணமான கோமயத்தை விளைவித்தலாலுமென வுணர்க.

திருநீற்றின் பெருமை சொல்லும் திருஞானசம்பந்தர் பதிகம் யாது ?

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருல வாயான் திருநீறே.

இந்த பாடல் மிகவும் மந்திர ஆற்றல் வாய்ந்தது. சிவபெருமான் மீது மிகுந்த அன்பு செலுத்தி, இந்த பதிகத்தை ஓதி, நெற்றி நிறைய திருநீறு இட்டால், எல்லா நோய்களும் உடனே குணமாகும். திருநீறு எல்லா செல்வங்களையும் விட மிகப் பெரிய செல்வமாதலால், பணம் பொருள் வந்து குவியும். எல்லா கவலைகளும் நீக்கிப் போகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.  திருச்சிற்றம்பலம்.

 

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

Please rate this

யார் சைவர்கள் ? – சிவசித்ரா அம்மையார் 5/5 (1)

யார் சைவர்கள் ?

சிவசித்ரா அம்மையார், இசைஞானியார் திருக்கூட்டம்.

யார் சைவர்கள் ?

சைவர்கள் அல்லாதவர்கள் யாவர் ?

சைவத்திற்கு வெளியே ஏதாவது பொருட்கள் உண்டா ?

அத்தனைக்கும் கதாநாயகன் யார் ?

உலகின் வீதிகள் தோறும் சைவபாடசாலைகள் அமைப்போம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

நெஞ்சுவிடுதூது – சிவசித்ரா, இசைஞானியார் திருக்கூட்டம் No ratings yet.

நெஞ்சுவிடுதூது – சிவசித்ரா அம்மையார், இசைஞானியார் திருக்கூட்டம்

நெஞ்சுவிடுதூது – பாகம் 1

நெஞ்சுவிடுதூது – பாகம் 2

நெஞ்சுவிடுதூது – பாகம் 3

நெஞ்சுவிடுதூது – பாகம் 4

நெஞ்சுவிடுதூது – பாகம் 5

நெஞ்சுவிடுதூது – பாகம் 6

நெஞ்சுவிடுதூது – பாகம் 7

 

உலகின் வீதிகள் தோறும் சைவபாடசாலைகள் அமைப்போம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

முப்புரிநூல் – (பூணூல்) ஞான விளக்கம் 5/5 (1)

முப்புரிநூல் – (பூணூல்) ஞான விளக்கம்

ௐௐௐௐௐௐௐௐௐ
சிவ சிவ !
********************
முப்புரி நூல் ( பூணூல் )ஞான விளக்கம் !
**************
பூணூல் அணிவது சிவாச்சாரியார்கள் & பிராமணர்களுக்கு மட்டுமே உரியதா ஐயா !
~ எல்லா இனத்தவருக்கும் பொதுவான , நம் இறைவனாரே அணிந்து இருக்கும் போது ஏன் இந்த மயக்கம் ?

முக நூலில் பல அன்பர்கள் வினா தொடுத்திருக்கிறார்
களே !
~ ஆம் ! ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டியது நம் கடமை !
~ விளக்கம் செய்யுங்கள் ஐயா !
~ முப்புரி நூல் அந்தணர் , சத்திரியர் , வைசியர் ,சூத்திரர் என்ற நான்கு குலத்தவருக்குமே உரியது ! அது எல்லோருக்கும் தனி உரிமை !
~ சூத்திரர் என்பது இழிவான குலமா ஐயா ?
~ இவ்வளவு கற்றும் உனக்கு ஏன் இந்த ஐயப்பாடு ?
~ இல்லை , என ஓரளவு அறிவேன் ! ஐயா !
ஆயினும் தெளிய உணர்வதற்கும் , பிறர் அறிந்து தெளிந்து உணர்வதற்கும் , உணர்த்துங்கள் ஐயா !
~ இப் பெரும் பிரிவுகள் ,அவரவர் செய் தொழிலால் அமைந்தவை அல்லால் , சாதி குல ஏற்ற தாழ்வால் அல்ல !
~ விளக்கம் வேண்டும் ஐயா !
~ சிவாச்சாரியார்களும் ,அந்தணர்களும் எவர் உழைப்பால் உண்டு உடுத்து ,உறைந்து சுகித்து வாழ்கிறார்கள் ?
~ உணர்ந்தேன் ஐயா !
பிற குலத்தவர்கள் தான் தம் உடல் உழைப்பாலும் , அரிய செயல்களாலும் அவர்களைத் தாங்குகிறார்கள் !
~சிவாச்சாரியார்களுக்கு விதிக்கப் பட்டக் கடமைகள் என்ன ?
~ அகத் தூய்மை புறத் தூய்மைகளுடன் வாழ்ந்து ,வேத ,
ஆகமங்களை ஐயம் திரிபு அற ,அவர்கள் ஆச்சாரியார்களிடம் கற்று , சமய ,விசேட , நிர்வாண தீட்சைகள் ஏற்று ,நித்திய அக்னி வளர்த்து , சுவார்த்த பூசை எனப் படும் தனக்கு உரிய பூசைகள் இயற்றி , பின் ஆச்சாரிய அபிடேகம் செய்யப் பட்ட பிறகே , சிவாலயத்தில் கருவறையில் புகுந்து ,இறைவனை பூசை செய்யத் தகுதி உடையோராவர் !
~ சிவ சிவ !
~ அது மட்டுமல்ல ! ஒரு கன்னியை திருமணம் செய்த பிறகே பூசை செய்ய தகுதி பெறுவர் !
உடல் ஊனங்களும் ,தொடர் நோய் உடையோரும் , நல் ஒழுக்கங்கள் இல்லாதோரும் பூசிக்கத் தகுதி உடையோரல்ல !
~ திருமணம் இதர சுப ,அசுப காரியங்களும் இவர்கள் செய்யலாமா ?
~அவை அந்தணர்களுக்கு
*உள்ளேயே , சில உட்பிரிவினர்களுக்கே உரியவை !
~ சிவாச்சாரியார்கள் குலம் ,இறைவனாரின் ஐந்து முகங்களில் தோன்றிய முனிவர்கள் வழி வந்த மரபினர் என்பது சிவாகம முடிவு !
சிவத்தை மட்டுமே இறைவனாகக் கொண்ட கொள்கையால் அந்தணரினும் மேம்பட்டப் பெருமைகள் உடையோர் !
~ அவர்கள் இல்லற வருவாய்க்கு அரசு , தனியார் பணிகளுக்குச் செல்கிறார்களே ! ஐயா ?
~வகுக்கப் பட்ட நியதிகளை மீறுதல் ,சிவாச்சாரியார் என்ற குலப் பெருமைக்கு உகந்ததல்ல !
உடன் தகுதி இழப்பு ஏற்பட்டு விடும் !
~ போதும் ஐயா !*
அந்தணர்களின் குலப் பெருமைகளை அறிய அவா ஐயா !
அந்தணர்கள் வேதங்களில் வகுக்கப்பட்ட அறநெறிகளை வழுவாது கடைபிடித்துஏனைய குலத்தவருக்கெல்லாம் உதாரணமாக ,ஒரு தவ வாழ்க்கையை வாழக் கடமைப் பட்டோர் !
இவர்களுக்கு வகுக்கப் பட்ட வாழ்வியல் கடமைகள் என்ன ?
இறைவனார் அருளிச் செய்த நான்கு வேதங்களையும் ,ஐயம் திரிபு அறக் கற்க வேண்டும் !
அன்றாடம் முத்தீ வளர்த்து , சிவ பூசை இயற்றக் கடவர் !
~ வேதத்தின் ஞான பாத்த்தை ஆராய்ந்து வழிவழியாக வரும் வம்சத்தாருக்கு கற்பிக்கக் கடமை உடையோர் !
அவர்களில் சிலர் ஆச்சாரியர்களாக அவ் வினத்தவர்களுக்கு உரிய சுப , அசுப கடமைகளையும் , கரும காண்ட விதிப்படி ஆற்றுதற்கு உரியோர் ஆவர் !
ஞான பாதத்தை உணர்த்த ,அக் குலத்தவரில் தக்க ஆச்சாரியார்கள் இல்லா நிலை ஏற்படும் போது , பிற மூன்று குலத்தில் தோன்றிய வேத விற்பன்னர்களிடம் பயில அனுமதி உண்டு !

~ உதாரணம் வேண்டும் ஐயா ?
~ வேத வியாசர் யார் ?
~ பராசர முனிவர் வழி , சத்தியவதி என்ற
மீனவ குலப் பெண்ணுக்குப் பிறந்தவர் என்பது வரலாறு !
~ மகா பாரதத்தை அருளியவர் யார் ?
~ வியாச மா முனிவர்! பராசர முனிவருக்கும் , சத்திய வதிக்கும் பிறந்தவர் !
இராமாயணத்தை யாத்த வான்மீகி முனிவர் யார் ?
~ சூத்திர குலத்தவர் என்பர் !
~18 புராணங்களையும் அருளிய சூத முனிவர் யார் ?
வியாச முனிவரின் சீடர் ! அவர் எக் குலத்தவர் ?
பிராமணருக்கும் , பிராமணல்லாருக்கும் பிறந்தவர் என்பதாலேயே , சூத முனிவர் எனப் படுவார் !
~ அவர் எவருக்கு 18 புராணங்களையும் போதித்தார் ?
~ நௌமி சாரண்ய பிராமண குலத்தவர் உள்ளிட்ட , முனிவர்கள் அவரை எதிர் கொண்டு ,வணங்கி வரவேற்று ,உபசரித்து ,உயர்ந்த ஆசனத்தில் இருத்தி ,தாங்கள் கீழே அமர்ந்து 18 புராணங்களையும் விரும்பி மீண்டும் மீண்டும் கேட்க ,அவர் , தன் ஆச்சாரியார் வியாசர் , தனக்கு உணர்த்தியவாறு எடுத்து உரைத்தது வரலாறு !
இப்படியாகப் பல வரலாறுகள் உள்ளன ! விரிப்பின் பெருகும் !
~ இறைவனார் சாதி குலப் ஏற்ற இரக்க சிந்தனைகளை , திருமுறை சாத்திரங்களிலும் , திருமுறை , சாத்திர குரு சீடர் உறவு முறையிலும் வைத்து , எல்லா இனத்தவரும் சம நிலையினரே என உணர்த்தியதை உய்த்து உணர்க !
~ பிராமணர்கள் வேறு தொழில் செய்யக் கூடாதா ? ஐயா !
செய்யக் கூடாது !
அவ்வாறு பிற குலத்தவருக்கு வகுக்கப்பட்டத் தொழில்களைச் செய்யின் , நெறிகள் கெடும் ; உலகிற்கே கேடு சூழும் !
இன்றைய நிலை முற்றிலும் மாற்றம் அடைந்திருக்கிறதே ?ஐயா !
அதனால்தான் பஞ்ச பூதங்கள் தம் செயல்களில் வழுவுவதால் வாழ்வியல் கேடுகள் சூழ்ந்து விட்டன !*இதற்கு யாரைக் குறை கூறுவது ஐயா ?
அரசு ,சமுதாயம் இரண்டுமே
குற்றவாளிகள் !
என்ன செய்தால் தீரும் ?
~ எல்லையைத் தாண்டி விட்டது !
இருப்பினும் ஓரளவு முன்னோர் வகுத்த நெறிக்குத் திரும்ப முயலலாம் !
முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் !
~ சொல்லுங்கள் ஐயா !
~வேதாகம , தேவாரப் பாட சாலைகள் ஆங்காங்கே தொடங்க வேண்டும் !
சிவாச் சாரியார்களையும்*,
அந்தணர்களையும் ,
அனைத்து ஊர்களிலும் வீடுகள் கட்டிக் கொடுத்துக் குடி அமர்த்த வேண்டும் !
யோக நிலையில் நின்று ,ஞான காரியங்களை நிறைவேற்ற வேண்டிய அவர்களுக்கு இல்லத் தேவைகளைப் பற்றிய எந்த சிந்தையும் இல்லா அளவுக்கு ,தேவையான செல்வ வளங்களை அளித்துக் கண்ணின் மணிபோல் காக்க வேண்டும் !
பயன் என்ன விளையும் !
வானம் சுரக்கும் !
பஞ்ச பூதங்களுக்கான அதி தேவர்களும் , வேதங்களும் , திருமுறைகளும்* *சிவாலய பூசைகளும்,
விழாக்களும் போற்றுதல் செய்யப் படுவது கண்டு ,மகிந்து ஆசி வழங்குவர் !
மக்கள் பூமியிலேயே
துன்பமிலா வாழ்வு வாழ்ந்து நற்கதி அடைவர் !
~முன் உதாரணம் ஐயா ?
~சிவாலயத் திருப் பணிகளுக்காக கோவை வசந்த குமார் ஐயா அவர்களுடன் பட்டி தொட்டிகளெல்லாம் 12 ~ஆண்டுகள் அலைந்தவன் நான் !
~அதில் நாங்கள் உணர்ந்தது சோழர்கள் ஆலயங்களை எடுத்து ஆகம விதிகளின்படி
முறைமயாகப் பராமரித்ததும், இறைவனாரே நாட்டை அவர்கள் மேலோங்கி நின்று ,சுவர்க்க போகங்களை மக்களுக்கும் ,அருளிய தூய வரலாற்று நிலைதான் !
இது நடக்கக் கூடிய காரியமா ?
~ ஏன் முடியாது ?
அரசு அற நிலையங்களின் நிர்வாகத்தை பொது மக்களிடையே விட்டு , கண்காணிப்பாளர் என்ற முறையில் காத்தால் போதும் !
அரசு நிதி உதவியே ,மேற் கண்டவாறு மீண்ட சுவர்க்கம் காண்பதற்குத் தேவையில்லை ! ஆனால் சிவாச்சாரியார்களும் ,அந்தணர்களும் ,வேத ,உப நிடத ,சிவாகம சாத்திரங்களின் பிழிவே ,சைவத் திருமுறைகளும் , சாத்திரங்களும் என அறிந்தும் , அவற்றைப் போற்றிக் கொண்டாடததும் , இன்றைய நாளில் அருட் செல்வத்தை அவர்கள் இழந்ததற்குக் காரணம் என்பதை உணர்ந்து , இறைவனிடம் மன்னித்தருள வேண்டி இறைஞ்ச வேண்டும் !
அவைகளை உய்த்து உணர்ந்து , கற்று இறைவனாரைப் போற்றி பயன் பெற வேண்டும் !

ஐயா ! அந்தப் பூணூல் ?
~என்ன ஐயம் ? சாதி ஏற்ற தாழ்வுகளை இறைவனாரே உடைத்து எறிந்த வரலாறுகளைச் சொல்லியும் திருந்த மாட்டாயா ?
ஆதாரங்கள் கேட்பார்களே ஐயா ?*
* அதுவும் சரிதான் !*
*சிறுத் தொண்ட நாயனார் என்ன குலத்தவர் ?*
*~மாமாத்திரர் குலத்தவர் !*
*சூத்திர குலத்தவர் ; மருத்துவத் தொழிலினர் என்பது சிவக் கவி மணி ஐயா அவர்கள் முடிவு ;*
*வன்னிய குலத்தவர் என்பது தவத்திரு ஊரன் அடிகளார் முடிவு !*
*~ *இவர் முப்புரி நூல்*
*அணிந்திருந்த *வரலாறு* *சேக்கிழார் பெருமானால் குறிக்கப் பட்டுள்ளது !*
*சிறுத் தொண்டர் வரலாறு / பாடல் எண் 23 ~ ” முந் நூல் சேர் பொன் மார்பில் சிறுத் தொண்டர் ” ~*
*மகிழ்ச்சி ஐயா !*
*ஆனாலும் ஆகமச் சான்று காட்டினால் ,எல்லா குலத்தவருமான அடியார்களும் , மேலும் , தெளிந்து , முப்புரி நூல் அணிவோம் ஐயா !*
*~ சரி ! மறை ஞான சம்பந்தர் என்ற ஆகம விற்பன்னர் , சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் !*
*சிவாகமக் கருத்துக்களைத் தொகுத்து 727 குறட்பாக்களாக அருளியுள்ளார் !*
*இதனைப் பதிப்பித்து உரையும் கண்டவர் , எல்லையில்லாப் பெருமைக்குரிய , யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் ஐயா அவர்கள் !*
*நூல் பெயர் ~சைவ சமய நெறி ~ உட் தலைப்பு ~ஆசாரியார் இலக்கணம் ~ பாடல் எண் -49 -ல் அந்தணர் ஏழு நூல் தரிக்கக் கடவர் என உணர்த்துகிறார் !*
*பாடல் எண் ~50 =*
*~ மன்னர்க்கு மூன்று அருகமாம் வசியருக்கு இரண்டாம் அன்னியருக்கே ஏகம்* *அருகம் ~ ; அருகம் = பூணூல் /*
*மன்னர்கள் மூன்று , வைசியர்கள் இரண்டும் ஏனைய சூத்திர குலத்தவர் முதலானோர்க்கு ஒரு பூணூலும் தரிக்கக் கடவர் என ஆகம விதியை உணர்த்துகிறார் !*
*சூத்திரர்கள் தரித்தற்குரிய காலம்* *வரையறை செய்தல் .: ~*
*~பாடல் எண் : ~52 -*
*~ தர்ப்பணத்தில் அர்ச்சனையில் ஆகுதியிலும் தரிக்க / விற் பயிலும் சூத்திரர் இந் நூல் ~*
*தர்ப்பண காலத்திலும்* ,
*அர்ச்சனை செய்யும் போதும் , அக்னி காரிய காலத்திலும் இப் பூணூலைத் தரிக்கக் கடவர் !*
*ஆகவே இவர்கள் பூசை செய்வதற்கும் , வேள்வி செய்வதற்கும் உரியர் என அறிக !*
*சூத்திரர்களுள் எக் காலத்திலும் ,பூணூல் தரிக்க உரிமை உடையோர் : ~~*
*~பாடல் எண் 53 ~*
*~இவருள் நைட்டிகன் எப்போதும் தரிக்க /* *அவனியிலும் ஆசை அறுத்தால் ~*
*சூத்திரருள் நைட்டிக பிரமாச்சாரியானவன்* , *மண்ணாசை* ,
*பொன்னாசை* ,
*பெண்ணாசை , ஆகிய மூவகை* *ஆசைகளையும் நீக்கி*
*இருப்பானாகில் எக் காலத்தும் தரிக்கக் கடவன்*.
*ஆக ,ஆகமங்களில் விதிக்கப் பட்டவாறு நால் வகை வருணத்தாரும் , முப்புரி நூல் தரித்தற்கு உரியர் என சிவ பெருமான் வகுத்த ,ஆகம நூல் அனுமதித்துள்ளது காண்க !*
*53 -ஆம் பாடலில் வகுத்த விதி , ஏனைய குலத்தவருக்கும் விலக்கு அன்று என ஊகித்து அறிக !*
*சிறுத் தொண்டர் இல்லறத்தவர் !*
*அவர் முப்புரி நூலணிந்தவர் !*
*ஆகவே , நம் பெருமான் அணியும் முப்புரி நூல் அடியார்களாகிய நாம் எக் குலத்தவராயினும் அணிய உரிமை உடையோம் எனத் தெளிக !*
*ஐயா !*
*குல ஏற்ற தாழ்வு இல்லை எனத் தெளிந்தோம் !* *ஆயினும் மேலும் சில உதாரணங்கள் வேண்டும் !*
*சாதி குல ,ஏற்ற தாழ்வு பார்க்கின்றவர்களுக்கு , சிவத்தின் முன் நிற்கத் தகுதி இல்லை என உணர்த்துவதே பெரிய புராணம் !*
*01 ~ மானக்கஞ்சாறர் புராணம் பாடல் எண் 01 ~ ” நம்பு வாய்மையில் நீடு சூத்திர நற் குலம் செய் தவத்தினால் இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான்குடிப் பதி மாறனார் ! ~'”*
*02 ~ ஈழக் குலச் சான்றார் ஏனாதி நாயனார் ~பாடல் – 02 ~*
*~03 ~மூர்த்தி நாயனார் / ” அப் பொன் பதி வாழ் வணிக குலத்து ஆன்ற தொன்மைச் / செப்பத் தகு சீர்க் குடி செய் தவம் செய்ய வந்தார் ” ~பாடல் 08 ~*
*~04 ~ திரு நாவுக் கரசு நாயனார் ~*
” *அனைத்து வித / நலத்தின் கண் வழுவாத நடை முறையில் குடி நாப் பண் / விலக்கில் மனை* *ஒழுக்கத்தின் மேதக்க நிலை வேளாண் / குலத்தின் கண் வரும் பெருமைக் குறுக்கையர் தம் குடி விளங்கும் ~* *பாடல் 15* ~*
*~05 ~ ” மலர் புகழ் மா மாத்திரர் தம் குலம் பெருக வந்துள்ளார் ” ~ சிறுத் தொண்ட நாயனார் புராணம் . பாடல் ~02 ~*
*06 ~ ” தொன்மை நீடிய சூத்திரத் தொல் குலம் / நன்மை சான்ற நலம் பெறத் தோன்றினார் ~ வாயிலார் நாயனார் புராணம் பாடல் 10~*
*இவை போதுமா ?*
*அந்தணராகிய *அப்பூதி *அடிகள் ,வேளாண் *குடியினரான* ,
*நாவுக்கரசர் பெருமான் திருவடியில் வீழ்ந்து* *வணங்கியதும் ,ஆதி சைவர் ஆகிய நம்பி ஆரூரர் , ஏயர் கோனார் திருவடியில் வீழ்ந்து வணங்கியமையும் நினைவில் கொள்க !*
*ஆக , சைவர்களுக்குள் குல ஏற்ற தாழ்ச்சியே இல்லை என்பது பெருமானே வகுத்த விதி என்பதையும் , முப்புரி நூல் எக்குல சைவருக்கும் உரியது எனவும் அறிக !*
*அடியார்கள் , திரு நீறு உருத்திராக்கத்துடன் முப்புரி நூலும் அணியாகக் கொள்க !*
~கோமல் கா சேகர் / 9791232555 /110817

Please rate this

சிவ காப்பு – சமய சின்னங்களை அணிவீர் No ratings yet.

சிவ காப்பு !

ௐௐௐ
சிவ சிவ :
========
சிவக் காப்பு !
============


சைவக் குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகள் கூட முழு நீறு அணிவதில்லை என்பது வியப்பளிக்கக் கூடியதாக உள்ளது .!


எழுத்து வடிவிலோ ,உரையாகச் சொன்னாலோ ,அணிந்து நற் பயன் கொள்ளார் என்பதாலேயே , உலகோருக்கு அது தோன்றாத் துணையாக நின்று காக்கும் சிவக் காப்பு என்பதை உணர்த்தும் முனைப்புடனும் , கருணையுடனும் , நம் ஞானாசிரியர் திருஞான சம்பந்தர் ஆலவாயான் திரு நீற்றைப் பாண்டியன் மீது தடவி ,அவர் வெப்பு நோயைத் தீர்த்ததும் , புறச் சமயத்தாரை வெற்றி கொண்டதும் அவர் நிகழ்திக் காட்டிய வரலாறு !


வேயுறு தோளி பங்கன் என எடுத்துப் படைத்த பத்தாவது பாடலில் ,அத் திருப் பதிகக் கட்டமைப்புக்கு மாறாகப் ,பத்தாவது பாடலில் தொடர்பின்றி ,(திருப் பதிகத்தை ஊன்றிக் கவனிக்கவும் )
“” புத்தரோடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே ” எனப் பின் நடக்கப் போகும் வரலாற்று நிகழ்வை , முக்காலம் உணர்ந்தவர் என்ற நிலையில் பதிவு செய்திருப்பதை ஊன்றி கவனித்தால் இந்த உண்மை விளங்கும். 


திரு மறைக்காட்டில் அருளிய இந்த மெய்த் திரு வாக்கு , பின் மதுரையில் வரலாற்று நிகழ்வானதை அன்பர்கள் சிந்திக்க வேண்டும் .
~ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன் தேற்றித் தென்னன் உடலுற்ற தீப் பிணியாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே ” என பாண்டியனின் வெப்பு நோயை உலகோர் காண , நிறைவு செய்கிறார் . 


தென்னன் = பாண்டியன் ; தேற்றி = தெளிவித்து / பாண்டியனைத் தெளிவித்தது மட்டுமல்லாது உலகோரையும் தெளிவித்து என்பது பொருள் !
இதைவிட ஒரு ஞானாசிரியர் என்னதான் செய்ய இயலும் ?
முதலில் தன் குடும்பத்தின் நலனை நாடின் பெற்றோர்கள் அணிய வேண்டும் !


குழந்தைப் பருவம் தொடங்கி , பிள்ளைகளைப் பழக்கி வளர்த்தெடுக்க வேண்டும் !


கலவியுடன் ஆன்மீக உணர்வையும் தேச பக்தியையும் , ஊட்டி வளர்த்தால் தான் ,நல்ல மகனாக , நல்லொழுக்கம் உள்ளவனாக வளர்ந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நற் பயன் விளைவித்துத் தானும் துன்பமிலா வாழ்வு வாழ்வான் என்பதைச் சிந்தித்து செயல்பட வேண்டியது பெற்றோர்களது கடமை !


மிருக உடலில் புகப் பெய்த உயிரை உலகியல் கல்வி மட்டும் கற்ற மிருகமாக மட்டும் வளர்த்தெடுத்தல் தகுமா ?
சிந்தித்துத் தெளிந்துணர்வீர் !


அக மாற்றம் முதலில் பெற்றோருக்கு வேண்டும் !


~கோமல் கா சேகர் /9791232555/070618

Please rate this

வலிய வந்து ஆட்கொண்ட வள்ளல் No ratings yet.

வலிய வந்து ஆட்கொண்ட வள்ளல்

– ௐௐௐௐௐ-
– சிவ சிவ :
========
‘” வலிய வந்து ஆட்கொண்ட வள்ளல் ” –
===== ===== =====
மாதொரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும் / வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனாருக்கு / ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார் பால் / தீதகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார் . ( தடுத் – 03 )
அவதாரம் செய்தார் என்றக் குறிப்பு : ~
01 ) திருஞானசம்பந்தர் 02 )திரு நாவுக்கரசர்
03 ) வன் தொண்டர்
04) விறன் மிண்டர்
05)மானக்கஞ்சாறர்
06 )ஏயர் கோன் கலிக்காமர்.
07)கலிய நாயனார்.
+ 01)பரவையார். 02 ) சங்கிலியார் 03 )சீராளத் தேவர்.
×××× ×××× ××××
ஆரூரர் அறிமுகம்.
===== =====
காட்சி ~01 =
இடம் : ~கயிலை வரை .
உபமன்னிய முனிவர் தன் சீடர்களுடன் வீற்றிருக்கிறார் !
யார் இந்த உப மன்னிய முனிவர் ?
×××××××××
~பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான் / மாலுக்குச் சக்கரம் அன்று அருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள் / ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப் / பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே ~எனத் திருப் பல்லாண்டில்(09) சேந்தனாரால் குறிப்பிடப்பட்டவர்.
==============
திருமலைச் சிறப்பு :~
÷÷÷÷÷÷÷÷÷÷
– திருச் சிற்றம்பலம்
××××××××××
~ பொன்னின் வெண் திரு நீறு புனைந்தெனப் / பன்னு நீள் பனி மால் வரைப் பாலது / தன்னை யார்க்கும் அறிவரியான் என்றும் / மன்னி வாழ் கயிலைத் திரு மாமலை ~ (01)
~ அண்ணல் வீற்றிருக்கப் பெற்றதாதலின் / நண்ணும் மூன்றுலகும் நான் மறைகளும் / எண்ணில் மா தவம் செய்ய வந்தெய்திய / புண்ணியம் திரண்டுள்ளது போல்வது – ( 02 )
~ நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளி / இலகு தண் தளிராக எழுந்ததோர் / உலகம் என்னும் ஒளி மணி வல்லி மேல் / மலரும் வெண்மலர் போல்வது அம் மால் வரை ~ ( 03 )
×××××××××
அன்னதன் திருத் தாழ்வரையின் இடத்து / இன்ன தன்மையன் என்று அறியாச் சிவன் / தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான் / உன்னருஞ் சீர் உபமன்னிய முனி ~ (13- )
இவர் பெருமைகள் :
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
யாதவன் துவரைக்கு இறை ஆகிய /மாதவன் முடிமேல் அடி வைத்தவன் / பூத நாதன் பொருவருந் தொண்டினுக்கு / ஆதி அந்தம் இலாமை அடைந்தவன் ~(14 )
+++++++++++
அத்தர் தந்த அருட்பால் கடல் உண்டு /சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன் / பத்தராய முனிவர் பல் ஆயிரர் / சுத்த யோகிகள் சூழ இருந்துழி ~ (15)
×××××××××××
~ அங்கண் ஓரொலி ஆயிர ஞாயிறு /பொங்கு பேரொளி போன்று முன் தோன்றிடத் / துங்க மாதவர் சூழ்ந்திருந்தார் எலாம் / ” இங்கிது என் கொல் அதிசயம் ?” ,என்றலும் .~ (16)
===========
அந்தி வான்மதி சூடிய அண்ணல் தாள் / சிந்தியா உணர்ந்து அம்முனி ” தென் திசை /வந்த நாவலர் கோன் புகழ் வன்தொண்டன் / எந்தையார் அருளால் அணைவான் ” என ~ (17 ) ×××××××××
~ கைகள் கூப்பித் தொழுது எழுந்து அத்திசை / மெய்யில் ஆனந்த வாரி விரவிடச் / செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி / ஐயம் நீங்க வினவுவோர் அந்தணர் ~ (18 )
~~~~~~~~~~~~~
“”சம்புவின் அடித் தாமரைப் போதலால் / எம்பிரான் இறைஞ்சாய் இஃது என் ? “எனத் /
“”தம்பிரானைத் தன் உள்ளம் தழீஇயவன் / நம்பி ஆரூரன் நாம் தொழும் தன்மையான் “” ~ (19 )
×××××××××××
~என்று கூற இறைஞ்சி இயம்புவார் : / ” வென்ற பேரொளியார் செய் விழுத்தவம் / நன்று கேட்க விரும்பும் நசையினோம் / இன்று எமக்கு உரை செய்தருள் ” ,என்றலும் – ( 20 )
~ உள்ள வண்ணம் முனிவன் உரை செய்வான் / ” வெள்ள நீர்ச்சடை மெய்ப் பொருளாகிய / வள்ளல் சாத்தும் மது மலர் மாலையும் / அள்ளும் நீறும் எடுத்து அணைவானுளன் “- (21)
××××××××××××
– அன்னவன் பெயர் ஆலால சுந்தரன் / முன்னம் ஆங்கு ஒருநாள் முதல்வன் தனக்கு / இன்னவாம் என நாள் மலர் கொய்திடத் / துன்னினான் நந்தனவனச் சூழலில் ~(22)
~அங்கு முன்னரே ஆளுடை நாயகி / கொங்கு சேர் குழற்கா மலர் கொய்திடத் / திங்கள் வாள் முகச் சேடியர் எய்தினார் / பொங்குகின்ற கவினுடைப் பூவைமார் “‘ – (23)
~ ” அந்தமில் சீர் அனிந்திதை ஆய்குழல் / கந்த மாலைக் கமலினி என்பவர் /கொந்து கொண்ட திருமலர் கொய்வுழி / வந்து வானவர் ஈசர் அருள் என ~ ” (24 )
~ ” மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத் / தீதிலாத் திருத் தொண்டத் தொகை தரப் / போதுவார் அவர் மேல் மனம் போக்கிடக் / காதல் மாதரும் காட்சியில் கண்ணினார் ~ (25 ) ~
( அவரவர் மலர் பறித்துக் கொண்டு தம் இடம் ஏகினர் )
~ ” ஆதி மூர்த்தி அவன் திறம் நோக்கியே/” மாதர் மேல் மனம் வைத்தனை ; தென் புவி/ மீது தோன்றி அம் மெல்லியலாருடன் / காதல் இன்பம் கலந்து அணைவாய் ” என – (27 )
~ ” கைகள் அஞ்சலிக் கூப்பிக் கலங்கினான் / ” செய்ய சேவடி நீங்கும் சிறுமையேன் / மையல் மானுடமாய் மயங்கும் வழி / ஐயனே தடுத்து ஆண்டு அருள் செய் ” என ”
( இறைவனார் அதற்கு இசைய ,முனிவர் வன் தொண்டர் அம் மகளிருடன் புவியில் பிறந்து இயற்றிய செயல்களை அவர்களுக்கு விரித்துரைத்தார் )
யோகியர் : ~ ” பந்த மானுடப் பாற்படு தென் திசை / இந்த வான் திசை எட்டினும் மேற்பட / வந்த புண்ணியம் யாது ? ”
முனிவர் : ~01 ) திரு ஆரூர் ( இதயக் கமலம் )
02 ) காஞ்சி ( அம்பிகை இறைவனைத் தவத்தால் எய்தியது )
03 ) ஐயாறு ( நந்தி தேவர் தவம் செய்து அருள் எய்தியது )
04 ) தோணிபுரம்
××××××××××××××
~ தேசம் எல்லாம் விளக்கிய தென் திசை / ஈசர் தோணிபுரத்துடன் எங்ஙணும் / பூசனைக்குப் பொருந்தும் இடம் பல / பேசில் அத் திசை ஒவ்வா பிற திசை ~ ( 36 )
~மற்று இதற்குப் பதிகம் வன் தொண்டர் தாம் / புற்றிடத்து எம் புராணர் அருளினால் / சொற்ற மெய்த் திருத் தொண்டத் தொகை எனப்/ பெற்ற நல் பதிகம் தொழப் பெற்றதால் ~ (38)
~ அந்த மெய்ப் பதிகத்து அடியார்களை / நந்தம் நாதனாம் நம்பியாண்டார் நம்பி /புந்தி ஆரப் புகன்ற வகையினால் / வந்தவாறு வழாமல் இயம்புவாம் ~
~ திரு சிற்றம்பலம்.
ௐௐௐௐௐ
~ தடுத்தாட் கொண்ட புராணம் ~
=== ==== ===
~ திரு முனைப் பாடி நாடு ~
~ வாய்மை குன்றாத் திரு மறையவர்கள் நீடும் திரு நாவலூர் ~
~ மாதொரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும்/ வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனாருக்கு / ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார் பால் / தீதகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார். ( 03)
சடையனார் / இசை ஞானியார் : ” ~ “~தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும் நம்பி ஆரூரர் என்றே நாமமும் சாற்றி ” ~ ( 04 )
***************
~ நரசிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு மகன்மை கொண்டார் ~(05)
**********
வைதிக முறையிலும் வைகி , அருமறை முந்நூல் சாத்தி , அளவில் தொல் கலைகள் ஆய்ந்து ,சீர் மணப் பருவம் சார்ந்தார் . (06)
=============
புத்தூர் சடங்கவி மறையோன் மகளை , வேண்டி பெரியோர்களை அனுப்புதல் / அவர் மகிழ்ந்து உடன் படல் /
மண ஓலை இடல் / பெண் வீட்டில் திரு மணம் / அலங்கரித்தல் / திரு மண முதல் நாள் சுந்தரருக்குக் காப்பு நாண் இடல் ~ / மணக் கோலம் செய்வித்தல் ~
××××× ××××× ×××××
~ மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க / நன்னகர் விழவு கொள்ள நம்பி ஆரூரர் நாதன் / தன்னடி மனத்துள் கொண்டு தகுந் திரு நீறு சாத்திப் / பொன்னணி மணியார் யோகப் புரவி மேல் கொண்டு போந்தார் ~ (19 ) ××××××××××××××
~ ” அருங்கடி மணம் வந்தெய்த அன்று தொட்டு என்றும் அன்பில் / வருங் குல மறையோர் புத்தூர் மணம் வந்தப் புத்தூராமால் “” ~(23)
+++++++++++
( இறைவனார் வேதியர் வடிவில் வருதல் )
~ மொய்த்து வளர் பேரழகு மூத்த வடிவேயோ / அத்தகைய மூப்பு எனும் அதன் படிவமேயோ / மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதலேயோ / இத்தகைய வேடம் என ஐயமுற எய்தி ~ (32 )
×××××××
( சபை முன் நின்று ) ~
இறை : ~ ” இந்த மொழி கேண்மின் யாவர்களும் ” (33)
ஆரூரரும் மறையோர்களும் : ~
“” நன்று உமது நல் வரவு நங்கள் தவம் “” ~~
“” நின்றது இவண் நீர் மொழிமின் நீர் மொழிவது “‘- (34)
~ இறை : ~ ( ஆரூரரை நோக்கி ) ~ ” என்னிடையும் நின்னிடையும் நின்ற இசைவால் யான் / முன்னுடையதோர் பெரு வழக்கினை முடித்தே / நின்னுடைய வேள்வியினை நீ முயல்தி “” ( 35 )
ஆரூரர் : ~ ” “உற்றதோர் வழக்கு எனிடை நீ உடையது உண்டேல் / மற்றது முடித்தலது யான் வதுவை செய்யேன் ; / முற்ற இது சொல்லுக “” (36)
இறை : ~ ” ஆவது இது கேண்மின் மறையோர் என் அடியான் இந் / நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது “”
சபையோர் ஏனையோர் : ~ ” இவன் என நினைந்தான் கொல் ” ( என்று சென்றார் ,வெகுண்டார் ,சிரித்தார் ; )
ஆரூரர் : ~ ” நன்றால் மறையோன் மொழி ‘” எனச் சிரித்தார் .
~ நக்கான் முகம் நோக்கி நடுங்கி ,நுடங்கி யார்க்கும்/ மிக்கான் மிசை உத்தரியத் துகில் தாங்கி மேற் சென்று : ~
இறை : ~ “அக்காலம் உன் தந்தைதன் தந்தை ஆள் ஓலை ஈதால் / இக் காரியத்தை நீ இன்று சிரித்தது என் ஏட ” ( 39)
ஆரூரர் :~ ( சிரிப்பு நீங்கி ) ‘” ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமை ஆதல் / பேச இன்று உன்னைக் கேட்டோம் ; பித்தனோ மறையோன் “” – ( 40)
இறை : ~ “” பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக நீ இன்று / எத்தனை தீங்கு சொன்னால் யாது மற்று அவற்றால் நாணேன் / அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று / வித்தகம் பேச வேண்டா பணி செய்ய வேண்டும் “” ~ (41 )
ஆரூரர் : ~ ” ஓலை காட்டுக ”
இறை : ~ ” நீ ஓலை காணற் பாலையோ ? அவை முன் காட்டப் பணி செயற் பாலை ‘”
( நாவல் ஆரூரர் விரைந்து சென்று ஓலையைப் பறிக்க முயலுதல் ; பந்தரின் கீழ் இறைவன் ஓடவும் பின் தொடர்ந்து ஓடி ஓலையைப் பற்றிப் பறித்தார் ஆரூரர் ;
“ஆரூரர் : ~ ” ஆளாய் அந்தணர் செய்தல் என்ன முறை ‘” , ( என்று கூறி ஓலையைக் கிழித்திட்டார் ; இறை முறையிட்டார் .(45 )
இறை : ~
“” முறையோ “” ?
அவையோர் : ~ ” இந்தப் பெருமுறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்குகின்ற திரு மறை முனிவரே ! நீர் எங்குளீர் செப்பும் ?
====+++ ====
இறை :~ இங்குளேன் ; இருப்பும் சேயதன்று ; இந்த வெண்ணெய் நல்லூர் ; அது நிற்க ; அறத்தாறின்றி / வன் திறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி / நின்றிவன் கிழித்துத் தானே நிரப்பினான் அடிமை “” ~ (47)
ஆரூரர் : ~ ” பழைய மன்றாடி போலும் ! ” , “” வெண்ணெய் நல்லூராயேல் உன் / பிழை நெறி வழக்கை ஆங்கே பேச நீ போதாய் ” – (48)-
இறை : ~ “” வெண்ணெய் நல்லூரிலே நீ / போதினும் நன்று ; மற்றப் புனித நான் மறையோர் முன்னர் / ஆதியில் மூல ஓலை காட்டி நீ அடிமையாதல் சாதிப்பன் “”
( என்று தண்டு முன் தாங்கிச் சென்றான் )- (49)
( காந்தம் ஈர்ப்பது போல ஈர்க்கப்பட ஆரூரரும் , அவர் பின் விரைந்து சென்றார் ; ஏனையோரும் “இது என்னாம் ” ,என வியந்து வெண்ணை நல்லூர் அவையை அடைந்தனர் )
×××××× ××××××
திரு வெண்ணெய் நல்லூர் பேரவை ÷
+++++++++++++
இறை : ~ “” சொல்லும் நாவலூர் ஆரூரன்தான் / காதல் என் அடியான் என்னக் காட்டிய ஓலை கீறி / மூதறிவீர் முன் போந்தான் இது மற்று என் முறைப்பாடு “” (51)
அவையோர் : ~ “மறையவர் அடிமையாதல் / இந்த மாநிலத்தில் இல்லை ; என் சொன்னாய் ஐயர் ? ”
இறை : ~ ” வந்தவாறு இசைவே அன்றோ வழக்கு ; இவன் கிழித்த ஓலை / தந்தை தன் தந்தை நேர்ந்தது “” -(52)
அவையோர் : ~ ( ஆரூரரிடம் )
” இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்று / விசையினால் வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றியாமோ ? , தசையெலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினைச் சாரச் சொன்னான் ; / அசைவில் ஆரூரர் எண்ணம் என் ? -(53)
ஆரூரர் : ~ ” 🎂அனைத்து நூல் உணர்ந்தீர் ! ஆதி சைவன் என்று அறிவீர் !என்னைத் / தனக்கு வேறடிமை என்று இவ் வந்தணன் சாதித்தானேல் /மனத்தினால்
உணர்தற்கு எட்டா மாயை !என் சொல்லுகேன் யான் ? எனக்கு இது தெளிய ஒண்ணாது “”- (54)
அவையோர் : ~( இறையை நோக்கி )
“” இவ் வுலகின் கண் நீ இன்று இவரை உன் அடிமை என்ற / வெவ்வுரை எம் முன்பு ஏற்ற வேண்டும் “‘- (55)
& “” ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள் / காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் “”
இறை : ~ “” முன்னே மூட்சியில் கிழித்த ஓலை படி ஓலை ; மூல ஓலை / மாட்சியில் காட்ட வைத்தேன் “” – (56)
அவையோர் : ~ “வல்லையேல் காட்டு இங்கு “”
இறை :~ ” மறையவன் வலி செய்யாமல் சொல்ல நீர் வல்லீராகில்↑+±+ காட்டுவேன். “” அவையோர் : ~ “”நாங்கள் தீங்குற ஒட்டோம். “” (57)
( ஆரூரர் தொழுது ஓலையை தொழுது வாங்கி சபையோர் முன் படிக்கிறார் )-(58)
~ ” அருமறை நாவல் ஆதி சைவன் ஆரூரன் செய்கை / பெரு முனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கு யானும் என்பால் / வரு முறை மரபுளோரும் வழித் தொண்டு செய்தற்கு ஓலை / இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து ” ~ (59)
( அவையோர் சாட்சியமிட்டோர் எழுத்தை நோக்கி அவை சரி என ஏற்றனர் )
அவையோர் : ~ (ஆரூரரிடம் ) “ஐயா மற்று உங்கள் பேரனார் தம் / தேசுடை எழுத்தேயாகில் தெளியப் பார்த்து அறிமின் ”
இறை : ~ “இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான் ; / தந்தை தன் தந்தை தான் வேறு எழுது கை சாத்துண்டாகில் / இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி / வந்தது மொழிமின் “” ~ (61)
( அவையோர் காப்பிலிருந்து ஒரு ஓலை அழைத்துடன் ஒப்பு நோக்கி )
அவையோர் : ~ (ஆரூரர் முன் ) ” இரணடும் ஒத்திருந்தது என்னே ! இனிச் செயல் இல்லை ” -(62)
‘” நான்மறை முனிவனார்க்கு நம்பி ஆரூரர் தோற்றீர் !/ பான்மையின் ஏவல் செய்தல் கடன் ”
ஆரூரர் : ~ “” விதி முறை இதுவேயாகில் / யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ ? ” -(63)
அவையோர் : ~ ( இறையை நோக்கி )
“‘ அருமுனி ! நீ முன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள் / பெருமை சேர் பதியே ஆகப் பேசியது உமக்கு இவ்வூரில் / வருமுறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக “(64)
இறை : ~ “என்னை ஒருவரும் அறியீராகில் போதும் ”
( பெருமறையவர் குழாமும் , நம்பியும் பின்னே செல்லத் / திருவருட் துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார். (66)
ஆரூரர் : ~ ” இலங்கு நூல் மார்பர் எங்கள் / நம்பர் தம் கோயில் புக்கது என் கொலோ ” -(66)
(அம்பிகையுடன் விடைமேல் தோன்றுதல் )
இறைவனார் : ~
” முன்பு நீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப் / பின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது / துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத் தொடர்ந்து வந்து / நன் புல மறையோர் முன்னர் நாம் தடுத்தாண்டோம் ” (67)
~ ஆரூரர் : ~ “மன்றுளீர் செயலோ வந்து வலிய ஆட் கொண்டது ” ~ (68)
இறைவனார் : ~
~ ” மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம் / பெற்றனை ; நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க / அற்சனை பாட்டே ஆகும் :; ஆதலால் மண் மேல் நம்மைச் / சொற்றமிழ் பாடுக ” ~(70)
ஆரூரர் : ~ ‘” வேதியனாகி என்னை வழக்கினால் வெல்ல வந்த / ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்யக் கொண்ட / கோதிலா அமுதே இன்றுன் குணப் பெருங் கடலை நாயேன் / யாதினை அறிந்து என் சொல்லிப் பாடுகேன் ? ” ~(72)
இறைவனார் : ~ ” முன்பெனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே / என் பெயர் பித்தன் என்றே பாடுவாய் “” ~ (73)
~ கொத்தாரா மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால் / மெய்த் தாயினும் இனியானை அவ் வியன் நாவலூர் பெருமான் / ” பித்தா பிறைசூடி ” ,எனப் பெரிதாந் திருப் பதிகம் / இத் தாரணி முதலாம் உலகெல்லாம் உய்ய எடுத்தார் ~ (74)
***** *****
07-01-01 / இந்தளம் ~
~ பித்தா பிறை சூடீ பெருமானே அருளாளா / எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை / வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட் டுறையுள் / அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே ~
***** ***** *****
~ நாயேன் பல நாளும் நினைப்பின்றி மனத்துன்னை /
பேயாய்த் திரிந்தெய்த்தேன் பெறலாகா அருள் பெற்றேன் / வேயார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் / ஆயா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே ~ (02) ××××× ×××××
~ ஊனாய் உயிரானாய் உடலானாய் உலகானாய் / வானாய் நிலனானாய் கடலானாய் மலையானாய் / தேனார் பெண்ணைத் தென்பால்
வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள் / ஆனாய் உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே ~(07)
××××× ×××××
இறைவனார் : ~ ” இன்னும் பல்லாறு உலகினில் நம் புகழ் பாடு “”-(76)
==========
~ அயலோர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும் / செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும் / உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில் / பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள் ~ (77)
××××× ××××× ×××××
பிற அகச் சான்றுகள் .
÷÷÷÷÷÷÷÷÷÷
~ கற்பகத்தினைக் கனக மால் வரையைக் காம கோபனைக் கண்ணுதலானைச் / சொற்பதப் பொருள் இருளறுத்தருளும் தூய சோதியை வெண்ணெய் நல்லூரில் / அற்புதப் பழ ஆவணங் காட்டி அடியனா என்னை ஆளது கொண்ட/ நற் பதத்தை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே ~
07- 68-06 / தக்கேசி ~
~ ××××× ×××××
~ அன்று வந்து எனை அகலிடத்தவர் முன் ஆளதாக என்று ஆவணங் காட்டி / நின்று வெண்ணெய் நல்லூர் மிசை ஒளித்த நித்திலத் திரள் தொத்தினை முத்திக்கு /ஒன்றினான் தனை உம்பர் பிரானை உயரும் வல் அரணம் கெடச் சீறும் / குன்ற வில்லியை மெல்லியயலுடனே கோலக்காவினில் கண்டு கொண்டேனே .
– 07-62-05/ தக்கேசி
×××××× ××××××
~ “வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்ட “” – 07-17-08
++++-++++
“” ஆவணம் செய்து ஆளுங் கொண்ட வரை ” – 07-05-10 ( ஓணகாந்தன் தளி )
=============
“” நேசத்தினால் என்னை ஆளுங் கொண்டார் “” -07-19-02( திரு நின்றியூர் )
÷÷÷÷÷ ÷÷÷÷÷
“” ஒட்டி ஆட் கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப் போதனை “”
~07-59-10( திருவாரூர் )
~~~~~ ~~~~~ ~~~~
” மண்ணின் மேல் மயங்கிக் கிடப்பேனை வலிய வந்து எனை ஆண்டு கொண்டானே “”
~ 07- 70-02( திருவா வடுதுறை )
×××××××××××××××
திரு நாவலூர் திருத்தலம் ஏகுதல் / வழி படல் ~ அகச் சான்றுகள் உடைய பாடல்கள் ! /நட்டராகம் .
===== ===== =====
~ கோவலன் நான்முகன் வானவர் கோனும் குற்றேவல் செய்ய / மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர் ஓர் அம்பினால் / ஏவலனார் வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்ட / நாவலனார்க்கிடமாவது நந்திரு நாவலூரே “”-(07-17-01)
==========
~ தன்மையினால் அடியேனைத் தாம் ஆட் கொண்ட நாட் சபை முன் /வன்மைகள் பேசிட வன் தொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார் / புன்மைகள் பேசவும் பொன்னைத் தந்து என்னை போகம் புணர்த்த / நன்மையினார்க் கிடமாவது நந் திரு நாவலூரே ~07- 17-02
××××××××××
” வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்டு / நஞ்சம் கொண்டார்க்கிட மாவது
நந் திரு நாவலூரே ” ~ 07-17-04 –
============
“” ஓர் ஆவணத்தால் / எம்பிரானார் வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்ட /நம் பிரானார்க்கிடமாவது நந் திரு நாவலூரே “”
~07-17-03 ~××××××× ×××××× ×××××
திருத் துறையூர் ஏகி தவ நெறி வேண்டுதல் ~
~ சிவன் உறையும் திருத் துறையூர் சென்றணைந்து ” தீ வினையால் / அவ நெறியில் செல்லாமே தடுத்தாண்டாய் அடியேற்குத் / தவ நெறி தந்தருள் ” ,என்று தம்பிரான் முன் நின்று / பவ நெறிக்கு விலக்காகும் திருப் பதிகம் பாடினார் . ~(79)
××××× ××××××
07-13 / தக்க ராகம் ~
~ மலையார் அருவித் திரள் மா மணியுந்திக் / குலையாரக் கொணர்தெற்றி யோர் பெண்ணை வடபால் / கலையார் அல்குல் கன்னியராடும் துறையூர் / தலைவா உனை வேண்டிக் கொள்வேன் தவ நெறியே ~01
+++++
~ செய்யார் கமலம் மலர் நாவலூர் மன்னன் / கையால் தொழுதேத்தப்படும் துறையூர் மேல் / பொய்யாத் தமிழ் ஊரன் உரைத்தன வல்லார் / மெய்யே பெறுவார்கள் தவநெறிதானே ~ 11-
————————–

~ புலன் ஒன்றும்படி தவத்தில் புரிந்த நெறி கொடுத்தருளப் பெற்றார் ~(80)
தில்லையில் நிருத்தனார் திருக் கூத்துத் தொழுவதற்கு எண்ணினார் ~
பெண்ணை நதியைக் கடந்து ,மாலையில் திருவதிகைப் புறத் தணைந்தார் .(82)-
~ உடைய அரசு உலகேத்தும் உழவாரப் படையாளி / விடையவர்க்குக் கைத் தொண்டு விரும்பு பெரும் பதியை மிதித்து /அடையுமதற் கஞ்சுவன் ” ,எனறந் நகரில் புகுதாதே /மடை வளர் தம் புறம்பணையில் சித்தவட மடம் புகுந்தார் (83)
அங்கு அடியவர்களுடன், வீரட்டானத்து இறைவர் தாள் விருப்புடன் நினைந்து , இரவில் பள்ளி கொண்டார் ~ (84)
*************
~ அது கண்டு வீரட்டத்து
அமர்ந்தருளும் அங்கணரும் /முது வடிவின் மறையவராய் முன்பொருவர் அறியாமே/ பொது மடத்தின் உட் புகுந்து பூந்தாரான் திரு முடிமேல் / பதும மலர்த் தாள் வைத்துப் பள்ளி கொள்வார் போல் பயின்றார் ~ (85)
ஆரூரர் :~ ((உணர்ந்து கண்டு ) ” அரு மறையோய் உன் அடி என் சென்னியில் வைத்தனை ”
இறை : ~ “” திசை அறியா வகை செய்தது என்னுடைய மூப்புக் காண் ”
~ஆரூரர் அப்பால் சென்று துயிலல் ~(86)
அங்கும் அவர் திரு முடிமேல் மீண்டும் இறைவனார் தாள் நீட்டினார் ~
ஆரூரர் : ~ ( வெகுண்டு ) ” இங்கு என்னைப் பல காலும் மிதித்தனை நீ யார் ? ”
இறை : ~ “அறிந்திலையோ ”
(- என மறைந்தார் )(87)
~ ×××××× ××××××
~ ” செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் ” எனத் தெளிந்து / தம்மானை அறியாத சாதியார் உளரே ” ,என்று / அம்மானைத் திரு வதிகை வீரட்டானத்து அமர்ந்த / கைம்மாவின் உரியானைக் கழல் பணிந்து பாடினார் .(88)
×××××××××××
07/38 ~ கொல்லிக் கௌவாணம் ~
~ தம்மானை யறியாத சாதியா ருளரே சடை மேற்கொள் பிறையானை விடை மேற்கொள் விகிர்தன் / கைம்மாவின் உரியானைக் கரிகாட்டில் ஆடல் உடையானை விடையானைக் கறை கொண்ட கண்டத் தெம்மான்றன் அடி கொண்டென் முடிமேல் வைத்திடுமென்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் / எம்மானை எறி கெடில வட வீரட்டானத் துறைவானை இறை போதும் இகழ்வன் போல் யானே (01)
**************
தென் திசையில் கங்கை எனும் திருக் கெடில நதியில் திளைத்தாடி திரு மாணிக்குழி அடைந்தார்.
திருமாணிக்குழி இறைவனாரை வழிபட்டு , திருத்தினை நகரை அடைந்து பணிந்தவருக்கு வரந் தருவானைப் போற்றி வணங்கி வண் தமிழ் பாடினார் !
×××××× ×××××××
~ பிணி கொளாக்கை பிறப் பிறப் பென்னும் இதனை நீக்கி ஈசன் திருவடி இணக்காள் / துணிய வேண்டிடிற் சொல்லுவன் கேள் நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர் வாழ் மதில் மூன்று / அணி கொள் வெஞ்சிலையாலுகச் சீறும் ஐயன் வையகம் பரவி நின்றேத்துந் / திணியும் வார் பொழில் திருத் தினை நகருட் சிவக் கொழுந்தினைச் சென்றடை மனனே -( 02)
××××× ××××× ×××××
*** தில்லை மருங்கணைதல் *****
“‘ தன் மருங்கு தொழுவார் தம் மும்மை / மா மலங்கள் அற வீடு அருள் தில்லை மல்லல் அம் பதியின் எல்லை வணங்கி . – (92)
=====
“” பன் மலர்ப் புனித நந்தன வனங்கள் பணிந்து சென்றனன் மணங் கமழ் தாரான். ” -(94)
“” மிகு சேண் செல ஓங்கும் தட மருங்கு வளர் மஞ்சிவர் இஞ்சித் தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார் (95)
“” தில்லை ஊர் விளங்கு திரு வாயில்கள் நான்கின் உத்தரத் திசை வாயில் முன் எய்தி . ( 97)
×××××××
அன்பின் வந்து எதிர் கொண்ட சீர் அடியார் அவர்களோ நம்பி ஆரூரர் தாமோ / முன் பிறைஞ்சினர் யாவர் என்றறியா முறைமையால் எதிர் வணங்கி மகிழ்ந்து /”
~ திரு வீதி புகுந்தார்.( 98) ~
+++++++++++
~எண்ணில் பேருலகு அனைத்திலும் உள்ள எல்லையில் அழகு சொல்லிய எல்லாம் / மண்ணில் இப் பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தனவாகிப் / புண்ணியப் புனித அன்பர்கள் முன்பு புகழ்ந்து பாடல் புரி பொற்பில் விளங்கும் /
அண்ணல் ஆடு திருவம்பலம் சூழ்ந்த அம் பொன் வீதியினை நம்பி வணங்கி (102)
÷÷÷÷÷÷÷÷÷÷
~ பெரு மதில் சிறந்த செம்பொன் மாளிகை மின் பிறங்கு பேரம்பலம் மேரு / வருமுறை வலங் கொண்டு இறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார் / அருமறை முதலில் நடுவினில் கடையில் அன்பர்தம் சிந்தையில் அலர்ந்த / திரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் திரு அணுக்கன் திரு வாயில் . (104)
=====+++ =====
~ வையகம் பொலிய மறைச் சிலம்பார்ப்ப மன்றுளே மாலயன் தேட / ஐயர் தாம் வெளியே ஆடுகின்றாரை அஞ்சலி மலர்த்தி முன் குவித்த / கைகளோ திளைத்தக் கண்களோ அந்தக் கரணமோ கலந்த அன்புந்தச் / செய்தவப் பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான் திருக் களிற்றுப்படி மருங்கு . (105) ~
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
~ ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள , அளப்பரும் கரணங்கள் நான்கும் / சிந்தையே ஆகக் , குணமொரு மூன்றும் திருந்து சாத்துவிகமேயாக , / இந்து வாழ் சடையானாடும் ஆனந்த எல்லையில் தனிப் பெருங் கூத்தின் / வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார் .- (106)
××××××××××××
~ ” தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் திரு நடங் கும்பிடப் பெற்று / மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம் “” ,என்று / கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரியக் கைம் மலர் உச்சி மேல் குவித்துப் / பண்ணினால் நீடி அறிவரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார் . -( 107 )
+++++++++++++
இறைவனார் :~ ( வான் வாக்கு ) ” தரளம் எறி புனல் மறி திரைப் பொன்னி / மடுத்த நீள் வண்ணப் பண்ணை ஆரூரில் வருக நம்பால் “”- (108)
÷÷÷÷÷÷÷÷
இறைவனாரிடம் விடை கொண்டு , அம்பலத்தை வலங் கொண்டு வணங்கி ,எழு நிலை கோபுரம் கடந்தார்.
நின்று கோபுரத்தை நிலமுறப் பணிந்து நெடுந் திரு வீதியை வணங்கி , அப் பதியின் தென் திசை வாயிலை வணங்கிப் பின் கொள்ளிடத் திரு நதியைக் கடந்தார் . ( 110 )
– திருச் சிற்றம்பலம் –
-ௐௐௐௐௐௐௐௐ-
கோமல் / 220618

Please rate this

குற்றம் ஒன்றும் செய்ததில்லை – சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலை மீண்ட நாள் No ratings yet.

குற்றம் ஒன்றும் செய்ததில்லை – சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலை மீண்ட நாள்

ௐௐௐௐௐ
சிவ சிவ :


~ குற்றம் ஒன்றும் செய்ததில்ல.! ~


சுந்தர மூர்த்தி சுவாமிகள்கள் திருக் கயிலை மீண்ட நாள் / சிறப்புப் பதிவு
======+======
~ விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன் விரும்பி ஆட்பட்டேன் / குற்றம் ஒன்றுஞ் செய்த தில்லை கொத்தை யாக்கினீர் / எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் / மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே ~
~ 07-95-02 / திருவாரூர் / செந்துருத்தி ~
××××× ×××××
திருத் தரும புர ஆதீன உரையும் குறிப்புகளும். ~~
உரை : ~ அடிகளே ,நீர் என்னைப் பிறருக்கு விற்கவும் உரிமையுடையீர் ; ஏனெனில் ,யான் ஒற்றிக் கலம் அல்லேன் ; உம்மை விரும்பி உமக்கு என்றும் ஆளாதற்றன்மையுட் பட்டேன் ; பின்னர் யான் குற்றம் ஒன்றும் செய்ததில்லை ; இவ்வாறாகவும் என்னை நீர் குருடனாக்கி விட்டீர் ; எதன் பொருட்டு என் கண்ணைப் பறித்துக் கொண்டீர் ? அதனால் நீர்தாம் பழியுட்பட்டீர் ; எனக்குப் பழியொன்றில்லை ; பன் முறை வேண்டியபின் ஒரு கண்ணைத் தந்தீர் ; மற்றொரு கண்ணைத் தர உடன்படாவிடின் , நீரே இனிது வாழ்ந்து போமின் !
~குறிப்புரை ; நம்பி ஆரூரர் செய்தது குற்றமாகாமை ,
“” பிழையுளன பொறுத்திடுவீர் என்றடியேன் பிழைத்தக்கால் ” (07-89-01)என்ற விடத்து விளக்கப்பட்டது .
அதனானே இங்கு ,””குற்றம் ஒன்றும் செய்ததில்லை “” என்று அருளினார்.
” நீரே பழிப் பட்டீர் ” என்றதன் காரணமும் ,
அவ்விடத்தே , ” பழியதனைப் பாராதே ” என்றதன் விளக்கத்துட் காண்க .

ஐயா !
சுந்தர மூர்த்தி சுவாமிகள் எவ்வளவோ பாடி இருக்கும் போது , மேலும் இன்று வெள்ளானை மீது சிவலோகும் ஏகும் போது ,இந்தப் பாடலை சிறப்பாக எடுத்தக் காரணம் அறிய விரும்புகிறேன் !
இப் பாடல் எழுந்த சூழல் அறிவாயா ?
வலக் கண் அருளும் படி ஆரூர் பெருமானிடம் மனம் நொந்து வேண்டி பாடி அருளியது ஐயா !
ஆம் !
இந்தப் பாடலில் , தான் “” குற்றம் ஒன்றும் செய்ததில்லை “” என இறைவன் முன் உறுதியாகச் சாற்றுவதும் , அவ்வாறு இருக்க , “எற்றுக்கு அடிகேள் என் கண் கொண்டீர் “” என வினவியதன் மூலம்
நமக்கு சிவ ஞானத்தின் எல்லையே உணர்த்தப் படுகிறது என அறிக !
புரிய வில்லை ஐயா ! பொழிப்புரை , குறிப்புரைகளிலும் விளக்கம் இல்லையே ;-நீங்கள் என்ன இல்லாததை விளக்கப் போகிறீர்கள் ?
இதை உரையளவில் புரிய வைப்பதைவிட , உரையாடல் மூலம் விளக்கலாம் என எண்ணுகிறேன்.
திருவருள் ; விளக்குங்கள் ஐயா !
****** ******
காட்சி :
சுவாமிகள் இறைவனாருக்கு , வலக் கண்ணின்றி அவர் படும் மனக் குமுறலையும் , அல்லல்களையும் ,
ஆரூரருக்கு உணர்த்துமாறு அகத் துறை உணர்வுடன் பறவைகளை நோக்கி விளித்து உருகிப் பாடி , பூங்கோயிலை அணைகிறார் ; ( ஒற்றைக் கண் இல்லாது எப்படி பரவையார் முன் தோன்ற முடியும் ;? அவர் வினவினால் என்ன விளக்கம் அளிக்க இயலும் ?) பூங்கோயிலார் முன் வீழ்ந்து , எழுந்து , கை தொழுது முன் நின்றே விம்முகிறார் ; “”ஆழ்ந்த துயர்க் கடலிடை நின்று அடியேனை எடுத்தருளித் தாழ்ந்த கருத்தினை நிரப்பிக் கண் தாரும்””எனத் தாழ்கிறார் .
தியாகேசர் : ~ சுந்தரா ! வா ! என்ன பறவைகள் வழியெல்லாம் தூது விடுகிறாய் ! ஒரே துன்பப் புலம்பலாக இருக்கிறதே ?
ஆரூரன் : ~ “மீளா அடிமை ”
தியா : ~ ” ஆம் ! மீளா அடிமைதான் ; அதற்கென்ன ?
ஆரூரர் : ~ “”உமக்கே ஆளாய் “”
தியா : ~ ஆமாம் ! எனக்கு மட்டுமேதான் ஆள் !
ஆரூரர் : ~ ” பிறரை வேண்டாதே ” !
தியா : ~ ” எனக்கு ஆட்பட்ட பின்னும் , மதியிலாதவன் தான் பிறரை வேண்டுவான் ! ; அவன் கனவிலும் என்னை உணர முடியாது ” உனக்கென்ன ?
ஆரூரர் : ~ ” தெரியவில்லையா என் முக வாட்டம் ; உணர வில்லையா என் நெஞ்சகத்தே எழும் கனலை ?
உனக்கு அடிமைப் பட்ட நான் இது வரை எடுத்துரைத்த அல்லல்கள் எல்லாம் தங்கள் செவியில் ஏறவில்லையா ?
தியா : ~ ” என்ன எதிர்பார்கிறாய் ”
ஆரூரர் : ~ ” இவ்வளவு எடுத்துச் சொல்லியும் ,ஏதும் அருளாது இருப்பின் நீரே நன்றாக வாழ்வீராக !
தியா :~ ” சரி ! உன் விருப்பம் !
மேலே சொல் !
ஆரூரர் : ~ ( என்னை ) ” விற்றுக் கொள்வீர் ; ஒற்றி அல்லேன் !
தியா : ~ ஆம் ! நீ என் மீளா அடிமைதான் !
ஆரூரர் : ~
“” விரும்பி ஆட்பட்டேன்””
தியா : ~ ” நிறுத்து !
“”நான் உன்னை ஈர்த்து ஆட் கொண்டதால் அல்லவா விரும்பினாய் “”
ஆரூரர் : ~ ” ஆமாம் சாமி ! தானே வந்து என் உளம் புகுந்து அடியேற்கு அருள் செய்தீர்கள் ; உண்மைதான் ! அருள் பெற்ற நான் ,வேறு சிந்தை இன்றி உங்களையே விரும்பி ஆட் பட்டேன் ! ”
தியா : ~ ” சரி மேலே சொல் ”
ஆரூரர் : ~
” குற்றம் ஒன்றும் செய்ததில்லை ; கொத்தை ஆக்கினீர்”
தியா : ~ என்ன ! குற்றம் ஒன்றும் செய்ததில்லையா ?
ஆரூரர் : ~ ” “ஆமாம் ; செய்ததில்லை ! – எற்றுக்கடிகேள் என் கண் கொண்டீர் ; நீரே பழி பட்டீர் ! “”
தியா : ~;” நன்றாக இருக்கிறதே ! இதுதான் திருவாரூர் நியாயமா ? ”
” சங்கிலியைப் பிரிய மாட்டேன் என மகிழ மரத்திலிருந்த என் முன் , அவளுடன் வந்து சத்தியம் செய்தவன் நீ !
சூளுறவு செய்ததை மீறி ,அவளை வஞ்சித்து , ஏமாற்றி , திரு வொற்றியூர் எல்லையைத் தாண்டியதும் நீ “”
ஆரூரர் : ~ ‘”அடியாருக்கு சத்தியம் செய்து , நம்பும் படி வாக்குக் கொடுத்து மீறினால் கண் இரண்டும் போகும் என்ற ஞானத்தை உலகுக்கு உணர்த்த நான் தான் உங்களுக்குக் கிடைத்தேனா ?
தியா : ~ ;” “பிழையுளனப் பொறுத்திடுவீர் என்று அடியேன் பிழைத்தக்கால் பழியதனைப் பாராமல் படலம் என் கண் மறைப்பித்தாய் “” என்று உன் பிழையை வெண்பாக்கத்தில் என் முன்பு ஒப்புக் கொண்டாய் அல்லவா ? ”
ஆரூரர் : ~”” ஆம் ஐயனே ! ”
தியா : ~ ” உன் கண்கள் போனதற்கு என் அடியாளிடம் ,என் முன் சூளுறவு செய்து ஏமாற்றிய தண்டனையிலிருந்து தப்ப முடியாத பாவமே காரணமாக இருக்க ,நான்தான் உன் கண்களை மறைத்ததாகப் பழி சுமத்துகிறாயே இது தகுமா ? “”
ஆரூரர் : ” அடியேன் பிழை செய்தேன் என ஒப்புக் கொண்டது தவறுதான் தலைவ !”‘
தியா ;~ ” மீண்டும் பொய்யா ? ”
ஆரூரர் : ~ “” அது என் செய்கை என நான் நினைத்தது தான் பொய் ஈசனே !”
தியா : ~ “” எங்கே விளக்கு ! உண்மையாயின் உறுதிப் படுத்து ! ”
ஆரூரர் : ~ “கயிலையில் நான் தங்கள் அடிமையாகத்தானே இருந்தேன் ? ”
தியா : ~ ” மலர் மாலை சாத்துவதும் , அள்ளும் நீறு ஏந்துவதும் உன் தொழில் ! ”
ஆரூரர் : ~ ” திருமண போக ஆசை உள்ள பெண்ணோ ஆணோ கயிலை புக முடியுமா ? சிவமே ! “”
தியா : ~ “கயிலையின் எல்லையைக் கூட எட்ட முடியாது “‘
ஆரூரர் : ~ ” ஆக எனக்கும் , கமலினி ,
அநிந்திதைக்கும் அந்த ஆசை இல்லைதானே ! ”
தியா : ~ ” ஆமாம் ; இல்லை தான் ! ‘”
ஆரூரர் : ~ ” ” “”நந்தவனச் சூழலில் நாங்கள் ,
பார்வையால் கவரப் பட்டு மயங்கியது எங்கள் செயல் அல்லதானே ! ”
தியா : ~ ” ஆம் ! அதற்கென்ன இப்போது ? ”
ஆரூரர் : ~ ” “உங்களுக்கு எண்ணில் கோடி உயிர்கள் மீது அளவற்ற இரக்கம் !
அவர்கள் எளிதில் தங்களைப் பற்றி உய்ய ,திருத் தொண்டத் தொகையைக் கொடுக்க வேண்டும் ;
அதற்கு ஒரு திரு விளையாடல் “‘
தியா : ~ ” என்ன சொல்ல வருகிறாய் ? விரிவாகச் சொல் ! ”
ஆரூரர் : ~ “”கயிலையில் அந்தப் பெண்கள் மீது எனக்கு மையல் ஏற்படுத்தியவர் நீரே !
பூமியில் பிறக்கச் செய்ததும் நீரே !
ஆரூரில் பரவையாரையும் என்னையும் எதிரெதிரே சந்திக்கச் செய்ததும் நீரே ”
‘”ஒருவரை ஒருவர் விரும்பச் செய்ததும் நீரே ! அடியார்கள் மூலம் மணம் செய்வித்ததும் நீரே !
திருவொற்றியூர் வரச் செய்ததும் நீரே !
அஞ்செழுத்து மனம் தொடுக்க , அலர் தொடுத்த அடியார்கள் தொண்டினை பார்த்து நான் அக மகிழும் போது ,நிலவு போல் சங்கிலியை தோன்றி மறையச் செய்ததும் நீரே !
உன்னிடம் இருந்து எனது நீங்கா சிந்தையின் இடை புகுந்து ,மலர் தொடுத்து என் உள்ளத் தொடை அவிழ்த்த அவளை , அது இடையீடின்றி உன்னை நினைப்பதற்கு இடையூறு எனினும் , அதையும் மீறி என் மனத்தை அலைத்து உன்னிடம் அவளை வேண்டி அருளுமாறு வினவும் அடங்கா வேட்கையை ஏற்படுத்தியதும் நீரே !””
தியா : ~ “”மேலும் தொடர்க !””
ஆரூரர் : ~ ” அது போதாதென்று சங்கிலியை விட்டுப் பிரியேன் என சூளுறவு செய்ய வைத்தத் திரு
விளையாடலுக்கு ஒப்புண்டா ? ”
” சங்கிலியோடு உன் முன் சத்தியம் செய்ய வரும் போது ஆலயத்தில் இருக்காதீர் ; போய் மகிழ்க் கீழ் இரும் என்று சொன்ன என்னை , அப்படிச் செய்வதாக ஒப்புக் கொண்டு ,
விளையாட்டு பொம்மை போல ஆட்டிச் சுழலவிட்டு , செயவதறியாமல் என்னை விழிக்க வைத்து மகிழ்க் கீழேயே சத்தியம் செய்ய வைத்தீரே !””
தியா : ~” ஆம் ! இதெல்லாம் எமக்கு சாதாரண விளையாட்டுகள் ; உயிர்களுக்கு விளையும் பயன் கருதி !”‘
ஆரூரர் : ~ “அத்தோடு விடாது அவளுடன் அடியார்கள் மூலம் திருமணம் செய்து வைத்ததும் நீரே ! ”
“ஆரூர் வசந்த விழாவை நினைப்பித்து என்னை ஏங்க வைத்ததும் நீரே ! ” “உன் மீது எனக்குள்ள ஆரா வேட்கையை மேன் மேலும் பெருக்கி மிக வைத்ததும் நீரே ! ”
” சத்தியத்தை மீறி ஒற்றியூர் எல்லையைத் தாண்ட வைத்ததும் நீரே ! ”
“இரு கண் பார்வையையும் மறைப்பித்ததும் நீரே ? “”
தியா : ~ “” ஆமாம் ! அதற்கென்ன இப்போது ? ”
ஆரூரர் ; ~ “அதற்கெனானவா ?””அவன் அன்றி அணுவும் அசையாது ” என்பது ஆன்றோர் வாக்கு !
“உயிருக்கென்று எச் செயலும் இல்லை ; எல்லாம் ஈசன் செயல் என்பதே ஞானம் ! ‘
தியா : ~ ” எனக்கே ஞான போதனையா ? ”
ஆரூரர் : ~ ” “மன்னியுங்கள் ஐயா !
ஆனால் அது தானே உயர் சிவ ஞானம் ”
நீ ஆட்டி வைத்தாய் ; நான் ஆடினேன் !
” நான் செய்த புண்ணியமோ பாவமோ எல்லாம் உன் செயலே ! ”
“என்னைக்
கருவியாக வைத்து உன் திருவுளப் படி செயலை எல்லாம் செய்து விட்டு , எதற்காக ஐயா என் கண்ணை மறைப்பித்தீர் ? “”
“” உலகியல் மனிதர் அறியாராயினும் ஞானிகள் உம் மீது பழியாக எண்ணாரோ ? “”
தியா : ~ ” “”உண்மைதான் சுந்தரா ! கயிலை தொடங்கி ,இதுவரை உன் இச்சைப்படி நீ செய்த செயல் ஏதுமில்லை ; எல்லாம் என் செயல் தான் ! எல்லா உயிர்களையும் ஆட்டிப் பக்குவப் படுத்தும் என் திரு விளையாடல்களுக்கு நீ என் கருவி ; அவ்வளவே ! ”
“” சங்கிலியை சத்தியத்தை மீறிப் பிரிகிறோமே என அதை உன் செயலாக எண்ணிப் பாவம் பழிகளை உன் மேல் ஏற்றிக் கொண்டாய் ; கண் பார்வை போயிற்று !
“” இப்போது எனதன்றி எவருக்கும் எச்செயலும் இல்லை என்று உயர் சிவ ஞானத்தை உணர்ந்தாய் ; அதனால் நீ குற்றம் ஒன்றும் செய்ததில்லை என ஞானமாக உரைத்தாய் ! குற்றம் அகன்றது ! ”
“இனி வலக் கண் பார்வையையும் அடைவாய் ! ”
” உலோகோரை செயல்களில் ஈடு படுத்தி , பக்குவம் அடையும் வரை இன்ப துன்பங்களில் உழலச் செய்து நானே கடைந்து செம்மைப் படுத்துகிறேன் என்று அறியாமல் , அவனவனும் , தானே எதையும் செய்வதாகக் கருதி புண்ணிய பாவங்களுக்குத் தாமே மூலமாக/ கர்த்தாவாகத் தம்மை எண்ணும் வரை பிறவிக் கடலில் தத்தளிக்கவே வேண்டும் ! “”
××××××××××××××
” ~ இவ்வளவு சிவ ஞான விளக்கங்கள் இந்தப் பாடலில் பொதிந்துள்ளன என எண்ணும் போது அச்சமாக இருக்கிறது ஐயா ! ”
” என்னவென்று ? சொல் ! ”
” ஏதோ கொஞ்சம் படித்துவிட்டு , தாம் திருமுறைகளைக் கரைத்துக் குடித்துவிட்டோம் என , மேலோட்டமான பொருள் கூட அறியாமல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போவோரைப் பார்த்து ! “‘
இவ்வளவு நேரம் இந்த ஞான வரலாற்றைக் கேட்டும் ,எல்லாம் இறைவனார் செயல் என அறியாமல் மீண்டும் பிதற்றத் தொடங்கி விட்டாயே ! “”
“””மன்னியுங்கள் ஐயா !
அந்த உயர் ஞானம் கேட்கும் போது புரிகிறது ; ஆனால் மனத்தில் நிலைப் படுத்த முடிய வில்லையே ஐயா ! “‘
உரிய பக்குவம் வரும் வரை ஆட்டி அலைக் கழிக்கப் படுவாய் ! பின் தெளிந்த நிலையில் இந்த உயர் ஞானம் நிலை பெறும் !””
” எல்லாம் அவன் செயல் !”
– திருச் சிற்றம்பலம் –
கோமல் கா சேகர் / 9791232555/200718

Please rate this

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருஅவதாரக் குறிப்பு No ratings yet.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருஅவதாரக் குறிப்பு

ௐௐௐ
சிவ சிவ :


சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருஅவதாரக் குறிப்பு


( சுந்தர மூர்த்தி சுவாமிகள் திரு அவதாரம் தொடங்கி ,
இறைவனால் தடுத்தாட் கொள்ளப் பட்ட வரலாற்றினை
உள்ளடக்கி , தில்லையை கண்டு களித்து ,வணங்கிப் போந்தது வரை / இரண்டு மணி நேரம் தொடர் விளக்கமளிக்க நான் வைத்துள்ளக் குறிப்பு / அன்பர்கள் பயின்று மகிழ்க / ஆடி சுவாதி 21-07-18 சிறப்பு வெளியீடு / கோமல் கா சேகர் 9791232555 )

========

‘” வலிய வந்து ஆட்கொண்ட வள்ளல் ” –

===== ===== =====

மாதொரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும் / வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனாருக்கு / ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார் பால் / தீதகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார் . ( தடுத் – 03 )

அவதாரம் செய்தார் என்றக் குறிப்பு : ~

01 ) திருஞானசம்பந்தர் 02 )திரு நாவுக்கரசர்

03 ) வன் தொண்டர்

04) விறன் மிண்டர்

05)மானக்கஞ்சாறர்

06 )ஏயர் கோன் கலிக்காமர்.

07)கலிய நாயனார்.

+ 01)பரவையார். 02 ) சங்கிலியார் 03 )சீராளத் தேவர்.

×××× ×××× ××××

ஆரூரர் அறிமுகம்.

===== =====

காட்சி ~01 =

இடம் : ~கயிலை வரை .

உபமன்னிய முனிவர் தன் சீடர்களுடன் வீற்றிருக்கிறார் !

யார் இந்த உப மன்னிய முனிவர் ?

×××××××××

~பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான் / மாலுக்குச் சக்கரம் அன்று அருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள் / ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப் / பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே ~எனத் திருப் பல்லாண்டில்(09) சேந்தனாரால் குறிப்பிடப்பட்டவர்.

==============

திருமலைச் சிறப்பு :~

÷÷÷÷÷÷÷÷÷÷

– திருச் சிற்றம்பலம்

××××××××××

~ பொன்னின் வெண் திரு நீறு புனைந்தெனப் / பன்னு நீள் பனி மால் வரைப் பாலது / தன்னை யார்க்கும் அறிவரியான் என்றும் / மன்னி வாழ் கயிலைத் திரு மாமலை ~ (01)

~ அண்ணல் வீற்றிருக்கப் பெற்றதாதலின் / நண்ணும் மூன்றுலகும் நான் மறைகளும் / எண்ணில் மா தவம் செய்ய வந்தெய்திய / புண்ணியம் திரண்டுள்ளது போல்வது – ( 02 )

~ நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளி / இலகு தண் தளிராக எழுந்ததோர் / உலகம் என்னும் ஒளி மணி வல்லி மேல் / மலரும் வெண்மலர் போல்வது அம் மால் வரை ~ ( 03 )

×××××××××

அன்னதன் திருத் தாழ்வரையின் இடத்து / இன்ன தன்மையன் என்று அறியாச் சிவன் / தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான் / உன்னருஞ் சீர் உபமன்னிய முனி ~ (13- )

இவர் பெருமைகள் :

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

யாதவன் துவரைக்கு இறை ஆகிய /மாதவன் முடிமேல் அடி வைத்தவன் / பூத நாதன் பொருவருந் தொண்டினுக்கு / ஆதி அந்தம் இலாமை அடைந்தவன் ~(14 )

+++++++++++

அத்தர் தந்த அருட்பால் கடல் உண்டு /சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன் / பத்தராய முனிவர் பல் ஆயிரர் / சுத்த யோகிகள் சூழ இருந்துழி ~ (15)

×××××××××××

~ அங்கண் ஓரொலி ஆயிர ஞாயிறு /பொங்கு பேரொளி போன்று முன் தோன்றிடத் / துங்க மாதவர் சூழ்ந்திருந்தார் எலாம் / ” இங்கிது என் கொல் அதிசயம் ?” ,என்றலும் .~ (16)

===========

அந்தி வான்மதி சூடிய அண்ணல் தாள் / சிந்தியா உணர்ந்து அம்முனி ” தென் திசை /வந்த நாவலர் கோன் புகழ் வன்தொண்டன் / எந்தையார் அருளால் அணைவான் ” என ~ (17 ) ×××××××××

~ கைகள் கூப்பித் தொழுது எழுந்து அத்திசை / மெய்யில் ஆனந்த வாரி விரவிடச் / செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி / ஐயம் நீங்க வினவுவோர் அந்தணர் ~ (18 )

~~~~~~~~~~~~~

“”சம்புவின் அடித் தாமரைப் போதலால் / எம்பிரான் இறைஞ்சாய் இஃது என் ? “எனத் /

“”தம்பிரானைத் தன் உள்ளம் தழீஇயவன் / நம்பி ஆரூரன் நாம் தொழும் தன்மையான் “” ~ (19 )

×××××××××××

~என்று கூற இறைஞ்சி இயம்புவார் : / ” வென்ற பேரொளியார் செய் விழுத்தவம் / நன்று கேட்க விரும்பும் நசையினோம் / இன்று எமக்கு உரை செய்தருள் ” ,என்றலும் – ( 20 )

~ உள்ள வண்ணம் முனிவன் உரை செய்வான் / ” வெள்ள நீர்ச்சடை மெய்ப் பொருளாகிய / வள்ளல் சாத்தும் மது மலர் மாலையும் / அள்ளும் நீறும் எடுத்து அணைவானுளன் “- (21)

××××××××××××

– அன்னவன் பெயர் ஆலால சுந்தரன் / முன்னம் ஆங்கு ஒருநாள் முதல்வன் தனக்கு / இன்னவாம் என நாள் மலர் கொய்திடத் / துன்னினான் நந்தனவனச் சூழலில் ~(22)

~அங்கு முன்னரே ஆளுடை நாயகி / கொங்கு சேர் குழற்கா மலர் கொய்திடத் / திங்கள் வாள் முகச் சேடியர் எய்தினார் / பொங்குகின்ற கவினுடைப் பூவைமார் “‘ – (23)

~ ” அந்தமில் சீர் அனிந்திதை ஆய்குழல் / கந்த மாலைக் கமலினி என்பவர் /கொந்து கொண்ட திருமலர் கொய்வுழி / வந்து வானவர் ஈசர் அருள் என ~ ” (24 )

~ ” மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத் / தீதிலாத் திருத் தொண்டத் தொகை தரப் / போதுவார் அவர் மேல் மனம் போக்கிடக் / காதல் மாதரும் காட்சியில் கண்ணினார் ~ (25 ) ~

( அவரவர் மலர் பறித்துக் கொண்டு தம் இடம் ஏகினர் )

~ ” ஆதி மூர்த்தி அவன் திறம் நோக்கியே/” மாதர் மேல் மனம் வைத்தனை ; தென் புவி/ மீது தோன்றி அம் மெல்லியலாருடன் / காதல் இன்பம் கலந்து அணைவாய் ” என – (27 )

~ ” கைகள் அஞ்சலிக் கூப்பிக் கலங்கினான் / ” செய்ய சேவடி நீங்கும் சிறுமையேன் / மையல் மானுடமாய் மயங்கும் வழி / ஐயனே தடுத்து ஆண்டு அருள் செய் ” என ”

( இறைவனார் அதற்கு இசைய ,முனிவர் வன் தொண்டர் அம் மகளிருடன் புவியில் பிறந்து இயற்றிய செயல்களை அவர்களுக்கு விரித்துரைத்தார் )

யோகியர் : ~ ” பந்த மானுடப் பாற்படு தென் திசை / இந்த வான் திசை எட்டினும் மேற்பட / வந்த புண்ணியம் யாது ? ”

முனிவர் : ~01 ) திரு ஆரூர் ( இதயக் கமலம் )

02 ) காஞ்சி ( அம்பிகை இறைவனைத் தவத்தால் எய்தியது )

03 ) ஐயாறு ( நந்தி தேவர் தவம் செய்து அருள் எய்தியது )

04 ) தோணிபுரம்

××××××××××××××

~ தேசம் எல்லாம் விளக்கிய தென் திசை / ஈசர் தோணிபுரத்துடன் எங்ஙணும் / பூசனைக்குப் பொருந்தும் இடம் பல / பேசில் அத் திசை ஒவ்வா பிற திசை ~ ( 36 )

~மற்று இதற்குப் பதிகம் வன் தொண்டர் தாம் / புற்றிடத்து எம் புராணர் அருளினால் / சொற்ற மெய்த் திருத் தொண்டத் தொகை எனப்/ பெற்ற நல் பதிகம் தொழப் பெற்றதால் ~ (38)

~ அந்த மெய்ப் பதிகத்து அடியார்களை / நந்தம் நாதனாம் நம்பியாண்டார் நம்பி /புந்தி ஆரப் புகன்ற வகையினால் / வந்தவாறு வழாமல் இயம்புவாம் ~

~ திரு சிற்றம்பலம்.

ௐௐௐௐௐ

~ தடுத்தாட் கொண்ட புராணம் ~

=== ==== ===

~ திரு முனைப் பாடி நாடு ~

~ வாய்மை குன்றாத் திரு மறையவர்கள் நீடும் திரு நாவலூர் ~

~ மாதொரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும்/ வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனாருக்கு / ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார் பால் / தீதகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார். ( 03)

சடையனார் / இசை ஞானியார் : ” ~ “~தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும் நம்பி ஆரூரர் என்றே நாமமும் சாற்றி ” ~ ( 04 )

***************

~ நரசிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு மகன்மை கொண்டார் ~(05)

**********

வைதிக முறையிலும் வைகி , அருமறை முந்நூல் சாத்தி , அளவில் தொல் கலைகள் ஆய்ந்து ,சீர் மணப் பருவம் சார்ந்தார் . (06)

=============

புத்தூர் சடங்கவி மறையோன் மகளை , வேண்டி பெரியோர்களை அனுப்புதல் / அவர் மகிழ்ந்து உடன் படல் /

மண ஓலை இடல் / பெண் வீட்டில் திரு மணம் / அலங்கரித்தல் / திரு மண முதல் நாள் சுந்தரருக்குக் காப்பு நாண் இடல் ~ / மணக் கோலம் செய்வித்தல் ~

××××× ××××× ×××××

~ மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க / நன்னகர் விழவு கொள்ள நம்பி ஆரூரர் நாதன் / தன்னடி மனத்துள் கொண்டு தகுந் திரு நீறு சாத்திப் / பொன்னணி மணியார் யோகப் புரவி மேல் கொண்டு போந்தார் ~ (19 ) ××××××××××××××

~ ” அருங்கடி மணம் வந்தெய்த அன்று தொட்டு என்றும் அன்பில் / வருங் குல மறையோர் புத்தூர் மணம் வந்தப் புத்தூராமால் “” ~(23)

+++++++++++

( இறைவனார் வேதியர் வடிவில் வருதல் )

~ மொய்த்து வளர் பேரழகு மூத்த வடிவேயோ / அத்தகைய மூப்பு எனும் அதன் படிவமேயோ / மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதலேயோ / இத்தகைய வேடம் என ஐயமுற எய்தி ~ (32 )

×××××××

( சபை முன் நின்று ) ~

இறை : ~ ” இந்த மொழி கேண்மின் யாவர்களும் ” (33)

ஆரூரரும் மறையோர்களும் : ~

“” நன்று உமது நல் வரவு நங்கள் தவம் “” ~~

“” நின்றது இவண் நீர் மொழிமின் நீர் மொழிவது “‘- (34)

~ இறை : ~ ( ஆரூரரை நோக்கி ) ~ ” என்னிடையும் நின்னிடையும் நின்ற இசைவால் யான் / முன்னுடையதோர் பெரு வழக்கினை முடித்தே / நின்னுடைய வேள்வியினை நீ முயல்தி “” ( 35 )

ஆரூரர் : ~ ” “உற்றதோர் வழக்கு எனிடை நீ உடையது உண்டேல் / மற்றது முடித்தலது யான் வதுவை செய்யேன் ; / முற்ற இது சொல்லுக “” (36)

இறை : ~ ” ஆவது இது கேண்மின் மறையோர் என் அடியான் இந் / நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது “”

சபையோர் ஏனையோர் : ~ ” இவன் என நினைந்தான் கொல் ” ( என்று சென்றார் ,வெகுண்டார் ,சிரித்தார் ; )

ஆரூரர் : ~ ” நன்றால் மறையோன் மொழி ‘” எனச் சிரித்தார் .

~ நக்கான் முகம் நோக்கி நடுங்கி ,நுடங்கி யார்க்கும்/ மிக்கான் மிசை உத்தரியத் துகில் தாங்கி மேற் சென்று : ~

இறை : ~ “அக்காலம் உன் தந்தைதன் தந்தை ஆள் ஓலை ஈதால் / இக் காரியத்தை நீ இன்று சிரித்தது என் ஏட ” ( 39)

ஆரூரர் :~ ( சிரிப்பு நீங்கி ) ‘” ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமை ஆதல் / பேச இன்று உன்னைக் கேட்டோம் ; பித்தனோ மறையோன் “” – ( 40)

இறை : ~ “” பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக நீ இன்று / எத்தனை தீங்கு சொன்னால் யாது மற்று அவற்றால் நாணேன் / அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று / வித்தகம் பேச வேண்டா பணி செய்ய வேண்டும் “” ~ (41 )

ஆரூரர் : ~ ” ஓலை காட்டுக ”

இறை : ~ ” நீ ஓலை காணற் பாலையோ ? அவை முன் காட்டப் பணி செயற் பாலை ‘”

( நாவல் ஆரூரர் விரைந்து சென்று ஓலையைப் பறிக்க முயலுதல் ; பந்தரின் கீழ் இறைவன் ஓடவும் பின் தொடர்ந்து ஓடி ஓலையைப் பற்றிப் பறித்தார் ஆரூரர் ;

“ஆரூரர் : ~ ” ஆளாய் அந்தணர் செய்தல் என்ன முறை ‘” , ( என்று கூறி ஓலையைக் கிழித்திட்டார் ; இறை முறையிட்டார் .(45 )

இறை : ~

“” முறையோ “” ?

அவையோர் : ~ ” இந்தப் பெருமுறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்குகின்ற திரு மறை முனிவரே ! நீர் எங்குளீர் செப்பும் ?

====+++ ====

இறை :~ இங்குளேன் ; இருப்பும் சேயதன்று ; இந்த வெண்ணெய் நல்லூர் ; அது நிற்க ; அறத்தாறின்றி / வன் திறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி / நின்றிவன் கிழித்துத் தானே நிரப்பினான் அடிமை “” ~ (47)

ஆரூரர் : ~ ” பழைய மன்றாடி போலும் ! ” , “” வெண்ணெய் நல்லூராயேல் உன் / பிழை நெறி வழக்கை ஆங்கே பேச நீ போதாய் ” – (48)-

இறை : ~ “” வெண்ணெய் நல்லூரிலே நீ / போதினும் நன்று ; மற்றப் புனித நான் மறையோர் முன்னர் / ஆதியில் மூல ஓலை காட்டி நீ அடிமையாதல் சாதிப்பன் “”

( என்று தண்டு முன் தாங்கிச் சென்றான் )- (49)

( காந்தம் ஈர்ப்பது போல ஈர்க்கப்பட ஆரூரரும் , அவர் பின் விரைந்து சென்றார் ; ஏனையோரும் “இது என்னாம் ” ,என வியந்து வெண்ணை நல்லூர் அவையை அடைந்தனர் )

×××××× ××××××

திரு வெண்ணெய் நல்லூர் பேரவை ÷

+++++++++++++

இறை : ~ “” சொல்லும் நாவலூர் ஆரூரன்தான் / காதல் என் அடியான் என்னக் காட்டிய ஓலை கீறி / மூதறிவீர் முன் போந்தான் இது மற்று என் முறைப்பாடு “” (51)

அவையோர் : ~ “மறையவர் அடிமையாதல் / இந்த மாநிலத்தில் இல்லை ; என் சொன்னாய் ஐயர் ? ”

இறை : ~ ” வந்தவாறு இசைவே அன்றோ வழக்கு ; இவன் கிழித்த ஓலை / தந்தை தன் தந்தை நேர்ந்தது “” -(52)

அவையோர் : ~ ( ஆரூரரிடம் )

” இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்று / விசையினால் வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றியாமோ ? , தசையெலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினைச் சாரச் சொன்னான் ; / அசைவில் ஆரூரர் எண்ணம் என் ? -(53)

ஆரூரர் : ~ ” 🎂அனைத்து நூல் உணர்ந்தீர் ! ஆதி சைவன் என்று அறிவீர் !என்னைத் / தனக்கு வேறடிமை என்று இவ் வந்தணன் சாதித்தானேல் /மனத்தினால்

உணர்தற்கு எட்டா மாயை !என் சொல்லுகேன் யான் ? எனக்கு இது தெளிய ஒண்ணாது “”- (54)

அவையோர் : ~( இறையை நோக்கி )

“” இவ் வுலகின் கண் நீ இன்று இவரை உன் அடிமை என்ற / வெவ்வுரை எம் முன்பு ஏற்ற வேண்டும் “‘- (55)

& “” ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள் / காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் “”

இறை : ~ “” முன்னே மூட்சியில் கிழித்த ஓலை படி ஓலை ; மூல ஓலை / மாட்சியில் காட்ட வைத்தேன் “” – (56)

அவையோர் : ~ “வல்லையேல் காட்டு இங்கு “”

இறை :~ ” மறையவன் வலி செய்யாமல் சொல்ல நீர் வல்லீராகில்↑+±+ காட்டுவேன். “” அவையோர் : ~ “”நாங்கள் தீங்குற ஒட்டோம். “” (57)

( ஆரூரர் தொழுது ஓலையை தொழுது வாங்கி சபையோர் முன் படிக்கிறார் )-(58)

~ ” அருமறை நாவல் ஆதி சைவன் ஆரூரன் செய்கை / பெரு முனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கு யானும் என்பால் / வரு முறை மரபுளோரும் வழித் தொண்டு செய்தற்கு ஓலை / இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து ” ~ (59)

( அவையோர் சாட்சியமிட்டோர் எழுத்தை நோக்கி அவை சரி என ஏற்றனர் )

அவையோர் : ~ (ஆரூரரிடம் ) “ஐயா மற்று உங்கள் பேரனார் தம் / தேசுடை எழுத்தேயாகில் தெளியப் பார்த்து அறிமின் ”

இறை : ~ “இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான் ; / தந்தை தன் தந்தை தான் வேறு எழுது கை சாத்துண்டாகில் / இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி / வந்தது மொழிமின் “” ~ (61)

( அவையோர் காப்பிலிருந்து ஒரு ஓலை அழைத்துடன் ஒப்பு நோக்கி )

அவையோர் : ~ (ஆரூரர் முன் ) ” இரணடும் ஒத்திருந்தது என்னே ! இனிச் செயல் இல்லை ” -(62)

‘” நான்மறை முனிவனார்க்கு நம்பி ஆரூரர் தோற்றீர் !/ பான்மையின் ஏவல் செய்தல் கடன் ”

ஆரூரர் : ~ “” விதி முறை இதுவேயாகில் / யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ ? ” -(63)

அவையோர் : ~ ( இறையை நோக்கி )

“‘ அருமுனி ! நீ முன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள் / பெருமை சேர் பதியே ஆகப் பேசியது உமக்கு இவ்வூரில் / வருமுறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக “(64)

இறை : ~ “என்னை ஒருவரும் அறியீராகில் போதும் ”

( பெருமறையவர் குழாமும் , நம்பியும் பின்னே செல்லத் / திருவருட் துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார். (66)

ஆரூரர் : ~ ” இலங்கு நூல் மார்பர் எங்கள் / நம்பர் தம் கோயில் புக்கது என் கொலோ ” -(66)

(அம்பிகையுடன் விடைமேல் தோன்றுதல் )

இறைவனார் : ~

” முன்பு நீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப் / பின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது / துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத் தொடர்ந்து வந்து / நன் புல மறையோர் முன்னர் நாம் தடுத்தாண்டோம் ” (67)

~ ஆரூரர் : ~ “மன்றுளீர் செயலோ வந்து வலிய ஆட் கொண்டது ” ~ (68)

இறைவனார் : ~

~ ” மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம் / பெற்றனை ; நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க / அற்சனை பாட்டே ஆகும் :; ஆதலால் மண் மேல் நம்மைச் / சொற்றமிழ் பாடுக ” ~(70)

ஆரூரர் : ~ ‘” வேதியனாகி என்னை வழக்கினால் வெல்ல வந்த / ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்யக் கொண்ட / கோதிலா அமுதே இன்றுன் குணப் பெருங் கடலை நாயேன் / யாதினை அறிந்து என் சொல்லிப் பாடுகேன் ? ” ~(72)

இறைவனார் : ~ ” முன்பெனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே / என் பெயர் பித்தன் என்றே பாடுவாய் “” ~ (73)

~ கொத்தாரா மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால் / மெய்த் தாயினும் இனியானை அவ் வியன் நாவலூர் பெருமான் / ” பித்தா பிறைசூடி ” ,எனப் பெரிதாந் திருப் பதிகம் / இத் தாரணி முதலாம் உலகெல்லாம் உய்ய எடுத்தார் ~ (74)

***** *****

07-01-01 / இந்தளம் ~

~ பித்தா பிறை சூடீ பெருமானே அருளாளா / எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை / வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட் டுறையுள் / அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே ~

***** ***** *****

~ நாயேன் பல நாளும் நினைப்பின்றி மனத்துன்னை /

பேயாய்த் திரிந்தெய்த்தேன் பெறலாகா அருள் பெற்றேன் / வேயார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் / ஆயா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே ~ (02) ××××× ×××××

~ ஊனாய் உயிரானாய் உடலானாய் உலகானாய் / வானாய் நிலனானாய் கடலானாய் மலையானாய் / தேனார் பெண்ணைத் தென்பால்

வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள் / ஆனாய் உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே ~(07)

××××× ×××××

இறைவனார் : ~ ” இன்னும் பல்லாறு உலகினில் நம் புகழ் பாடு “”-(76)

==========

~ அயலோர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும் / செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும் / உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில் / பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள் ~ (77)

××××× ××××× ×××××

பிற அகச் சான்றுகள் .

÷÷÷÷÷÷÷÷÷÷

~ கற்பகத்தினைக் கனக மால் வரையைக் காம கோபனைக் கண்ணுதலானைச் / சொற்பதப் பொருள் இருளறுத்தருளும் தூய சோதியை வெண்ணெய் நல்லூரில் / அற்புதப் பழ ஆவணங் காட்டி அடியனா என்னை ஆளது கொண்ட/ நற் பதத்தை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே ~

07- 68-06 / தக்கேசி ~

~ ××××× ×××××

~ அன்று வந்து எனை அகலிடத்தவர் முன் ஆளதாக என்று ஆவணங் காட்டி / நின்று வெண்ணெய் நல்லூர் மிசை ஒளித்த நித்திலத் திரள் தொத்தினை முத்திக்கு /ஒன்றினான் தனை உம்பர் பிரானை உயரும் வல் அரணம் கெடச் சீறும் / குன்ற வில்லியை மெல்லியயலுடனே கோலக்காவினில் கண்டு கொண்டேனே .

– 07-62-05/ தக்கேசி

×××××× ××××××

~ “வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்ட “” – 07-17-08

++++-++++

“” ஆவணம் செய்து ஆளுங் கொண்ட வரை ” – 07-05-10 ( ஓணகாந்தன் தளி )

=============

“” நேசத்தினால் என்னை ஆளுங் கொண்டார் “” -07-19-02( திரு நின்றியூர் )

÷÷÷÷÷ ÷÷÷÷÷

“” ஒட்டி ஆட் கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப் போதனை “”

~07-59-10( திருவாரூர் )

~~~~~ ~~~~~ ~~~~

” மண்ணின் மேல் மயங்கிக் கிடப்பேனை வலிய வந்து எனை ஆண்டு கொண்டானே “”

~ 07- 70-02( திருவா வடுதுறை )

×××××××××××××××

திரு நாவலூர் திருத்தலம் ஏகுதல் / வழி படல் ~ அகச் சான்றுகள் உடைய பாடல்கள் ! /நட்டராகம் .

===== ===== =====

~ கோவலன் நான்முகன் வானவர் கோனும் குற்றேவல் செய்ய / மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர் ஓர் அம்பினால் / ஏவலனார் வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்ட / நாவலனார்க்கிடமாவது நந்திரு நாவலூரே “”-(07-17-01)

==========

~ தன்மையினால் அடியேனைத் தாம் ஆட் கொண்ட நாட் சபை முன் /வன்மைகள் பேசிட வன் தொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார் / புன்மைகள் பேசவும் பொன்னைத் தந்து என்னை போகம் புணர்த்த / நன்மையினார்க் கிடமாவது நந் திரு நாவலூரே ~07- 17-02

××××××××××

” வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்டு / நஞ்சம் கொண்டார்க்கிட மாவது

நந் திரு நாவலூரே ” ~ 07-17-04 –

============

“” ஓர் ஆவணத்தால் / எம்பிரானார் வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்ட /நம் பிரானார்க்கிடமாவது நந் திரு நாவலூரே “”

~07-17-03 ~××××××× ×××××× ×××××

திருத் துறையூர் ஏகி தவ நெறி வேண்டுதல் ~

~ சிவன் உறையும் திருத் துறையூர் சென்றணைந்து ” தீ வினையால் / அவ நெறியில் செல்லாமே தடுத்தாண்டாய் அடியேற்குத் / தவ நெறி தந்தருள் ” ,என்று தம்பிரான் முன் நின்று / பவ நெறிக்கு விலக்காகும் திருப் பதிகம் பாடினார் . ~(79)

××××× ××××××

07-13 / தக்க ராகம் ~

~ மலையார் அருவித் திரள் மா மணியுந்திக் / குலையாரக் கொணர்தெற்றி யோர் பெண்ணை வடபால் / கலையார் அல்குல் கன்னியராடும் துறையூர் / தலைவா உனை வேண்டிக் கொள்வேன் தவ நெறியே ~01

+++++

~ செய்யார் கமலம் மலர் நாவலூர் மன்னன் / கையால் தொழுதேத்தப்படும் துறையூர் மேல் / பொய்யாத் தமிழ் ஊரன் உரைத்தன வல்லார் / மெய்யே பெறுவார்கள் தவநெறிதானே ~ 11-

————————–

~ புலன் ஒன்றும்படி தவத்தில் புரிந்த நெறி கொடுத்தருளப் பெற்றார் ~(80)

தில்லையில் நிருத்தனார் திருக் கூத்துத் தொழுவதற்கு எண்ணினார் ~

பெண்ணை நதியைக் கடந்து ,மாலையில் திருவதிகைப் புறத் தணைந்தார் .(82)-

~ உடைய அரசு உலகேத்தும் உழவாரப் படையாளி / விடையவர்க்குக் கைத் தொண்டு விரும்பு பெரும் பதியை மிதித்து /அடையுமதற் கஞ்சுவன் ” ,எனறந் நகரில் புகுதாதே /மடை வளர் தம் புறம்பணையில் சித்தவட மடம் புகுந்தார் (83)

அங்கு அடியவர்களுடன், வீரட்டானத்து இறைவர் தாள் விருப்புடன் நினைந்து , இரவில் பள்ளி கொண்டார் ~ (84)

*************

~ அது கண்டு வீரட்டத்து

அமர்ந்தருளும் அங்கணரும் /முது வடிவின் மறையவராய் முன்பொருவர் அறியாமே/ பொது மடத்தின் உட் புகுந்து பூந்தாரான் திரு முடிமேல் / பதும மலர்த் தாள் வைத்துப் பள்ளி கொள்வார் போல் பயின்றார் ~ (85)

ஆரூரர் :~ ((உணர்ந்து கண்டு ) ” அரு மறையோய் உன் அடி என் சென்னியில் வைத்தனை ”

இறை : ~ “” திசை அறியா வகை செய்தது என்னுடைய மூப்புக் காண் ”

~ஆரூரர் அப்பால் சென்று துயிலல் ~(86)

அங்கும் அவர் திரு முடிமேல் மீண்டும் இறைவனார் தாள் நீட்டினார் ~

ஆரூரர் : ~ ( வெகுண்டு ) ” இங்கு என்னைப் பல காலும் மிதித்தனை நீ யார் ? ”

இறை : ~ “அறிந்திலையோ ”

(- என மறைந்தார் )(87)

~ ×××××× ××××××

~ ” செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் ” எனத் தெளிந்து / தம்மானை அறியாத சாதியார் உளரே ” ,என்று / அம்மானைத் திரு வதிகை வீரட்டானத்து அமர்ந்த / கைம்மாவின் உரியானைக் கழல் பணிந்து பாடினார் .(88)

×××××××××××

07/38 ~ கொல்லிக் கௌவாணம் ~

~ தம்மானை யறியாத சாதியா ருளரே சடை மேற்கொள் பிறையானை விடை மேற்கொள் விகிர்தன் / கைம்மாவின் உரியானைக் கரிகாட்டில் ஆடல் உடையானை விடையானைக் கறை கொண்ட கண்டத் தெம்மான்றன் அடி கொண்டென் முடிமேல் வைத்திடுமென்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் / எம்மானை எறி கெடில வட வீரட்டானத் துறைவானை இறை போதும் இகழ்வன் போல் யானே (01)

**************

தென் திசையில் கங்கை எனும் திருக் கெடில நதியில் திளைத்தாடி திரு மாணிக்குழி அடைந்தார்.

திருமாணிக்குழி இறைவனாரை வழிபட்டு , திருத்தினை நகரை அடைந்து பணிந்தவருக்கு வரந் தருவானைப் போற்றி வணங்கி வண் தமிழ் பாடினார் !

×××××× ×××××××

~ பிணி கொளாக்கை பிறப் பிறப் பென்னும் இதனை நீக்கி ஈசன் திருவடி இணக்காள் / துணிய வேண்டிடிற் சொல்லுவன் கேள் நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர் வாழ் மதில் மூன்று / அணி கொள் வெஞ்சிலையாலுகச் சீறும் ஐயன் வையகம் பரவி நின்றேத்துந் / திணியும் வார் பொழில் திருத் தினை நகருட் சிவக் கொழுந்தினைச் சென்றடை மனனே -( 02)

××××× ××××× ×××××

*** தில்லை மருங்கணைதல் *****

“‘ தன் மருங்கு தொழுவார் தம் மும்மை / மா மலங்கள் அற வீடு அருள் தில்லை மல்லல் அம் பதியின் எல்லை வணங்கி . – (92)

=====

“” பன் மலர்ப் புனித நந்தன வனங்கள் பணிந்து சென்றனன் மணங் கமழ் தாரான். ” -(94)

“” மிகு சேண் செல ஓங்கும் தட மருங்கு வளர் மஞ்சிவர் இஞ்சித் தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார் (95)

“” தில்லை ஊர் விளங்கு திரு வாயில்கள் நான்கின் உத்தரத் திசை வாயில் முன் எய்தி . ( 97)

×××××××

அன்பின் வந்து எதிர் கொண்ட சீர் அடியார் அவர்களோ நம்பி ஆரூரர் தாமோ / முன் பிறைஞ்சினர் யாவர் என்றறியா முறைமையால் எதிர் வணங்கி மகிழ்ந்து /”

~ திரு வீதி புகுந்தார்.( 98) ~

+++++++++++

~எண்ணில் பேருலகு அனைத்திலும் உள்ள எல்லையில் அழகு சொல்லிய எல்லாம் / மண்ணில் இப் பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தனவாகிப் / புண்ணியப் புனித அன்பர்கள் முன்பு புகழ்ந்து பாடல் புரி பொற்பில் விளங்கும் /

அண்ணல் ஆடு திருவம்பலம் சூழ்ந்த அம் பொன் வீதியினை நம்பி வணங்கி (102)

÷÷÷÷÷÷÷÷÷÷

~ பெரு மதில் சிறந்த செம்பொன் மாளிகை மின் பிறங்கு பேரம்பலம் மேரு / வருமுறை வலங் கொண்டு இறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார் / அருமறை முதலில் நடுவினில் கடையில் அன்பர்தம் சிந்தையில் அலர்ந்த / திரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் திரு அணுக்கன் திரு வாயில் . (104)

=====+++ =====

~ வையகம் பொலிய மறைச் சிலம்பார்ப்ப மன்றுளே மாலயன் தேட / ஐயர் தாம் வெளியே ஆடுகின்றாரை அஞ்சலி மலர்த்தி முன் குவித்த / கைகளோ திளைத்தக் கண்களோ அந்தக் கரணமோ கலந்த அன்புந்தச் / செய்தவப் பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான் திருக் களிற்றுப்படி மருங்கு . (105) ~

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

~ ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள , அளப்பரும் கரணங்கள் நான்கும் / சிந்தையே ஆகக் , குணமொரு மூன்றும் திருந்து சாத்துவிகமேயாக , / இந்து வாழ் சடையானாடும் ஆனந்த எல்லையில் தனிப் பெருங் கூத்தின் / வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார் .- (106)

××××××××××××

~ ” தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் திரு நடங் கும்பிடப் பெற்று / மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம் “” ,என்று / கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரியக் கைம் மலர் உச்சி மேல் குவித்துப் / பண்ணினால் நீடி அறிவரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார் . -( 107 )

+++++++++++++

இறைவனார் :~ ( வான் வாக்கு ) ” தரளம் எறி புனல் மறி திரைப் பொன்னி / மடுத்த நீள் வண்ணப் பண்ணை ஆரூரில் வருக நம்பால் “”- (108)

÷÷÷÷÷÷÷÷

இறைவனாரிடம் விடை கொண்டு , அம்பலத்தை வலங் கொண்டு வணங்கி ,எழு நிலை கோபுரம் கடந்தார்.

நின்று கோபுரத்தை நிலமுறப் பணிந்து நெடுந் திரு வீதியை வணங்கி , அப் பதியின் தென் திசை வாயிலை வணங்கிப் பின் கொள்ளிடத் திரு நதியைக் கடந்தார் . ( 110 )

– திருச் சிற்றம்பலம் –

-ௐௐௐௐௐௐௐௐ-

கோமல் / 220618

Please rate this

உயிரின் நீள் பயணம் 4/5 (1)

உயிரின் நீள் பயணம்

ௐௐௐ
சிவ சிவ :


உயிரின் நீள் பயணம்


ஒவ்வொரு உயிரையும் , புல் பூண்டு ,விலங்குகள் எனப் பல்வேறு உடல்களில் புகுத்தி ,பல பிறவிகளை அளித்து ,மனிதப் பிறவியை அளிக்கப் பக்குவம் பெற்ற நிலையில் மனிதப் பிறவியை அளிக்கிறார் சிவனார் !


தொடர்ந்து மெல்ல மெல்லப் பக்குவப் படுத்தப் பல மனிதப் பிறவிகளையும் அளித்து ,அந்தந்த உயிர்களில் ஒன்றாய் ,உடனாய் ,
வேறாய் நின்று செயலாக்கம் செய்து வருகிறார்.
இந்தப் பிறவிகளில் உயிர்கள் ஈட்டும் நல் வினை தீ வினைகள் அவற்றின் தனித் தனி கணக்குகளில் ஏற்றப் படுகின்றன .
இந்த செயற் பாட்டின் தொடர்ச்சியாக , ஒரு உயிருக்கு மீண்டும் பிறப்பளிக்கும் முன் அது தன்னை நோக்கி எந்த அளவுக்குப் பயணப் பட்டிருக்கிறது என்றக் கணக்கீட்டின் அடிப்படையில் , மேலும் இன்பத் துன்பங்களில் உழலச் செய்து ,தன்னை நோக்கி வரச் செய்யும் கருணையோடு , அதற்கு ஆயுட் காலத்தை நிர்ணயம் செய்து ,அந்த ஆயுட் காலத்துக்குள் அது பண்பட வேண்டிய அளவுக்கு ,அந்த உயிர் ஈட்டியுள்ளப் புண்ணிய பாவங்களுக்கானக் கணக்கிலிருந்து ,
தேவையான அளவு மட்டும் நல் வினை தீ வினைகளை ஏற்றி , அந்த உயிரின் பக்குவ நிலைக்கு ஒத்த வினைகளுடைய இல்லத்தில் பிறக்கச் செய்கிறார். 


இது சொந்தம் எனும் உறவு முறை நூலினாலே அருட் சோதியான இறைவன் செய்யும் பின்னல் வேலையாகும்.
அதனாலேயே ஒரு சாதகப் படி ஒரு குடும்பத்தில் உள்ள ஏனையோர் விதிகளோடு தொடர்பு படுத்தி உயிர் வினைகளை ஊட்டி ஆட்டி வைக்கப் படுகிறது !


பல பிறவிகளில் உழலும் உயிர் உலகியல் நிலையாமையை உணர்ந்து ,சிவம் மட்டுமே இறை எனத் தெளிந்து ,அவரை நோக்கி உறுதியாகப் பயணிக்கத் தொடங்கி விட்டால் இப் பிறவியில் அதைப் பக்குவப் படுத்தி ஈர்க்க ஏற்றி அனுப் பட்ட தீ வினைகள் பயன் விளைவிக்காது அகலும்.
இதுவே உயிரின் பயண முறை . 


ஆராய்ச்சிகள் ஒரு புறமிருக்கட்டும் .


முழு நீறணிக ; அஞ்செழுத்து ஓதுக ; ஆலய வழிபாடுகள் செய்க ; அடியார் திருக் கூடடங்களோடு இணைக ! ஆலயம் தொடர்புடையத் திருத் தொண்டுகள் செய்க ; பூசைகள் இயற்றுக !
ஞான நூல்களை ஓதுக ; கற்க ; விளக்கம் செய்யும் பெரியோர் சொல் கேட்க ; சிந்திக்க; தெளிக !
திருவுருவத்தை மனத்தில் கொணர்க ; திருவடியை மனத்தால் சிக்கென உரிமையுடன் பற்றுக !
சிவனார் கை கொடுத்துத் தூக்கி அணைத்துக் கொள்வார் !
சைவத் திருமுறைகள் ,சாத்திர புராணங்களைக் கற்ற அளவு நான் தெளிந்த நிலை இதுவே !


ஒருவரே இறை !
அவர் சிவ பரம் பொருளே !


-திருச் சிற்றம்பலம் –
~கோமல் கா சேகர் /9791232555/020818

Please rate this

உங்கள் சிவ நிகழ்ச்சிகளை இங்கே பதிவிட No ratings yet.

உங்கள் சிவ நிகழ்வுகளை இங்கே பதிவிடுங்கள்.

உங்கள் திருக்கூட்டத்தின் இனி வரும் நிகழ்வுகளை எனக்கு வாட்சேப்பிலோ மின்னஞ்சலிலோ அனுப்பி வைத்தால் நம் saivasamayam.in வலைதளத்தில் வெளியிடுவோம். தொடர்ந்து உங்கள் நிகழ்வுகளை அனுப்ப, மின்னஞ்சல்: saivasamayam.in@gmail.com

அழைப்பிதழ் இருப்பின் இணைத்து அனுப்பவும்.

உங்கள் நிகழ்வுகளை saivasamayam.in வலைதளத்தில் வெளியிட கீழ்கண்ட தகவல்களை நிரப்பி அனுப்பவும்:

திருக்கூட்டம் (அ) நிர்வாகத்தின் பெயர்:

நிகழ்ச்சி பெயர்:

எங்கு ?

எப்போது ?

அமைப்பாளர்:

தொடர்பு எண்:

தங்கும் வசதி:

வழித்தடம்:

பிற தகவல்கள் ஏதேனும்:

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

மணலூர்பேட்டை காக்கனேசுவரர் திருக்கோவில் திருப்பணி No ratings yet.

மணலூர்பேட்டை காக்கனேசுவரர் திருக்கோவில் திருப்பணிக்கு உதவுங்கள்

சிவாயநம…. ஆருரா தியாகேசா…

தங்களிடம் நம் அப்பன் திருப்பணிக்காக கையேந்தி நிற்கின்றோம் உதவி செய்யுங்கள்….

ஈசனுக்காக கையேந்தி நிற்கின்றோம் உதவி செய்யுங்கள்

எந்தை காக்கனேஸ்வரர் திருவருளால் இன்று அம்பாள் சன்னதியின் மேல் தளம் மூடப்பட்டது…. உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி….
மேலும் பெருமானின் ஆலய விமானப்பணிகளும் மஹா மண்டப திருப்பணி … 32 கால் கொண்ட கருங்கல் வசந்த மண்டப திருப்பணி மட்டுமே மீதம் உள்ளது .

ஆனால் திருப்பணி தொடர்ந்து நடத்திட போதுமான அளவு வசதி இல்லாத காரணத்தால் திருப்பணி தடைபட்டு விடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம் ..

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேல் திருப்பணி செய்து கொண்டு இருக்கிறோம்.. ஆனாலும் இன்னும் 50 சதவிகிதம் கூட நிறைவடைய வில்லை…

உதவும் உள்ளம் கொண்டவர்கள் ஏதேனும் ஒரு திருப்பணி முன்னின்று நடத்தி தரலாம் அல்லது ஒரு மூட்டை சிமென்ட்…. ஒரு செங்கல் … ஒரு நாள் கூலி என எப்படி வேண்டுமானாலும் உதவலாம்… உதவி செய்யுங்கள் தங்களின் காலில் விழுந்து கேட்கிறேன்.. உதவி செய்யுங்கள் உலகினை ஆளும் ஈசன் அமர நிழல் இல்லாமல் வெளியில் இருக்கிறார்… நம் அப்பன் ஆலயம் இல்லாமல் இருக்கிறார்….

பல ஆயிரம் காலத்திற்கு முன் முனிவர்களாலும் சித்தர்களாலும் ரிஷிகளாலும் மன்னர்களாலும் நம் முன்னோர்களாலும் பூஜித்து வழிபாடு செய்யப்பட்ட ஆலயம்… காலத்தின் கோலத்தால் சிதலமடைந்தது.. அந்த சிதலமடைந்த ஆலயத்தை திருப்பணி செய்து மீட்டெடுத்து மீண்டும் ஆலயம் வழிபாட்டிற்கு கொண்டுவருவதற்கு உதவி செய்யுங்கள்….

தங்களிடம் நம் அப்பன் திருப்பணிக்காக கை ஏந்தி நிற்கின்றோம்🙏🙏 உதவி செய்யுங்கள்….

ஈசனுக்காக கையேந்தி நிற்கின்றோம் உதவி செய்யுங்கள் ..

தொடர்புக்கு

சிவ.எழில்
9080432395

விக்னேஸ்வரன்
9940037776
மணலுர்பேட்டை…

🙏மேன்மைக் கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்🙏 சிவாயநம திருச்சிற்றம்பலம்….

Please rate this

சமுதாய தொண்டு ஒருவர் செய்ய வேண்டுமா ? No ratings yet.

இறைவனை மட்டும் வழிபட்டால் போதாதா ? ஒருவர் சமுதாய தொண்டும் செய்ய வேண்டுமா ?

ஒவ்வொரு உயிரும், தானே ‘தான் யார்’ என்று உணரவும், இறைவனை உணர்ந்து வழிபடவும் விழைந்தால், அந்த உண்மையினை உணர பல காலம், பிறவிகளாகும். அதற்காகக் தான் இறைவன், குருவாக உபதேசம் செய்கிறான், இன்னொருவர் மூலமாக நமக்கு தன்னை உணர்த்துகிறான், அருளாளர்களை நமக்கு அனுப்பி வைக்கிறான். அருளாளர்கள் நமக்கு வாழ்வின் வழிகாட்டியாக இருந்து நமக்கு முன்னோடிகளாக இருக்கிறார்கள். இவையனைத்தும் இறையனார் அருளினால் ஆனது. அப்படியானால், இந்த சமுதாயமே நமக்கு இறைவனைக் காட்டுகிறது. இந்த சமுதாயமே பல கோவில்களைக் கட்டிக் கொடுத்துள்ளது. இன்று நாம் அதன் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்.

சற்றே சிந்தித்துப் பாருங்கள். மயிலாப்பூரில் இருக்கும் கபாலீசுவரர் கோவிலை எத்தனை கைகள் இணைந்து உருவாக்கியிருக்கும் ? எந்தக் காலத்தில் இவை உழைத்து உருவாக்கியது ? இன்று நாம் அந்த கோவிலில் அமர்ந்து அதன் இறையனுபவத்தை உட்கிரகித்து உய்வடைகிறோம். அந்த தூண்களை செதுக்கிய கைகள் இப்போது நமக்கு முன்னர் வந்தால், அந்த கைகளை நாம் கும்பிட மாட்டோமா ? அந்த கோவில்களை கட்டிக் கொடுத்தவர்களின் திருவடியை வணங்க மாட்டோமா ? என்றோ எவரோ செய்த சமுதாய தொண்டினால் நாம் இன்று சிவானுபவத்தை அனுபவிக்கிறோம். உலகில் இருக்கும் ஒவ்வொரு கோவிலையும் சற்றே சிந்தித்துப் பாருங்கள். எத்தனை கைகள், எத்தனை கால்கள், எத்தனை மூளை எப்படி வேலை செய்து நமக்காக உருவாக்கிக் கொடுத்துச் சென்றுள்ளது ? நாம் பதிலுக்குக் கைமாறாக என்ன செய்யப் போகிறோம் ?

யான் பெற்ற இன்பமே போதும் என்று கருதி, மிக சுயநலவாதியாக திருமூலர் பெருமான் அன்று சிவானந்தத்தை அவர் மட்டுமே அனுபவித்துச் சென்றிருக்கலாம். ஆனால், அவர் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று தன்னுடைய சிவ அனுபவங்களையும், சிவாகமத்தையும் நமக்கு மெனக்கிட்டு செய்யுள்களாக, மந்திரமாக உருவாக்கிக் கொடுத்து சென்றுள்ளார். அவர் சுயநலவாதியாக அன்று இருந்திருந்தால், இத்தனை காலம் எத்தனை உயிர்கள் அதே சிவத்தை உணர்ந்து சிவானந்தத்தை அனுபவித்திருக்க முடியும் ?

நாம் ஒவ்வொருவரும் இறைவனை உணர்ந்து நம் உயிரை மேம்படுத்த வேண்டும். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்த இறைவனையும், கோவில்களையும் மற்றும் பலவாறு நன்மைகள் நமக்குப் புரிந்த இந்த சமுதாயத்திற்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் ?

தன்னமில்லாமல் இந்த சமுதாயத்திற்கு தொண்டு செய்ய நாம் ஒவ்வொருவரும் கடமைப் பட்டிருக்கிறோம். வாழ்வில் சில காலமாவது நாம் அனைவரும் சமுதாயம் மேம்பட நாம் எதையும் எதிர்பார்க்காமல் தொண்டு செய்ய வேண்டும். இது நம்மை இறைவனுக்கு மிக அருகில் நம்மைக் கொண்டு சேர்க்கும் வல்லமை பெற்றது.

சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய வழிகளில் நாம் பயணித்தாலும், நம் சக உயிர்களுக்கு அதே வழியில் பயணிக்க ஊக்குவிப்பது, உதவி செய்வதும், நம் கடமையாகும். ஒவ்வொரு உயிரின் உள்ளும் சிவம் குடி கொண்டிருக்கிறது. நம் உணர்வுகளையும் எண்ணங்களையும் அது எப்போதும் அறிந்து கொண்டே இருக்கிறது. ஆகேவ, தன்னலமற்ற சமய தொண்டினை நம் சமுதாயத்திற்கு நாம் முழு மனத்தோடு செய்ய வேண்டும். நிச்சயம் திருவருள் கைகூடும். திருநாவுக்கரசு பெருமானின் உழவாரப்பணியை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

திருச்சிற்றம்பலம்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

Jpeg
Jpeg

Jpeg

Please rate this

புங்கம்பாடி மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் No ratings yet.

புங்கம்பாடி மீனாட்சி சொக்கநாதர் ஆலயம்

அன்புடையீர் வணக்கம்,

நம் தமிழ் கலாச்சாரம், பண்பாட்டு சின்னங்களை போற்றி பாதுகாக்க வேண்டிய கடமை தமிழனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. நமது முன்னோர்களின் கைவண்ணங்கள் நமது மண்ணிலே தெரிந்தும், தெரியாமலும் புதைந்து , சிதைந்து கிடக்கின்றன, அப்படி சிதைந்து கிடக்ககூடிய ஆலயம்தான் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் புங்கம்பாடி கிராமம். குடகனாற்றின் கீழ் கரையில் அமர்ந்துள்ள கம்பீரமான கோட்டை சுவருடன் காணப்படும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம். இவ்வாலயம் கிபி. 1702 ஆம் வருடம் கடைசியாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது  என்று அங்குள்ள கல்வேட்டின் மூலம் அறியப்படுகிறது. இப்பகுதி மக்கள் இதை கோட்டை என்றே அழைக்கிறார்கள்.

1000 வருடம் பழமையான சிவாலயம் கேட்பாரற்று சிதைந்து சுற்று சுவர்கள் இடிந்து,பாழடைந்து கிடக்கிறது. பூசைகளும் நடைபெறுவதும் இல்லை.

தற்பொழுது கிராமத்தினரால் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பிரதோஷம்,தேய்பிறை அஷ்டமி மற்றும் முக்கிய நாட்களில் பூஜை நடைபெறுகிறது. 

ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அதிகாரி திரு. இராமச்சந்திரன் ஐயா அவர்கள் தலைமையில் கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆராய்ச்சி நடைபெற்றது .ஆய்வு முழுவதும் நிறைவு பெற்றதும் புங்கம்பாடி கிராமம் மற்றும் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தின் முழு வரலாறு கிடைக்கப்பெறும்

கரூரில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் 13 கி.மீ., தூரத்தில் ஆறு ரோடு பிரிவிற்கு சென்று, அங்கிருந்து 14 கி.மீ., சென்றால் புங்கம்பாடி கோயிலை அடையலாம். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கரூரில் இருந்து ஆத்துமேடு செல்லும் நகர பேருந்து செல்கின்றது.
அல்லது

அரவக்குறிச்சியிலிருந்து பாளையம் செல்லும் சாலையில் 7 கிமீ தொலைவில் உள்ளது.

https://www.facebook.com/karurphotographer/posts/1028360567176671

இக் கோவில் பற்றி மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள:
சுகுமார்பூமாலை,
புங்கம்பாடி கிராமம்  
9962222962
திருச்சிற்றம்பலம்.

Please rate this

சண்டிகேசுவரர் யார் ? அவர் முன் ஏன் கைதட்ட கூடாது ? 5/5 (1)

சண்டிகேசுவரர் என்பது ஒரு பதவி. சிவனுக்கும் சிவன் கோவிலுக்கும் உரிய சொத்துக்களை கணக்கு வழக்கு பார்ப்பதும் முக்கிய பணி. இந்த பணியை விசாரசருமர் என்பவருக்கு சிவபெருமானே அவர் தலையில் கொன்றை மாலை சூடி அணிவித்து அளித்தார். சண்டிகேசுவரர் ஆழ்ந்த தியானத்தில் சிவசிந்தனையில் இருந்தாலும், அந்த சிந்தனையிலேயே அவருடைய பணியை செம்மையாகச் செய்ய வல்லவர். அவரின் ஞானத்திலேயே கணக்கு வழக்குகளை முடிப்பவர். இருப்பினும் சிவனை விட்டு ஒரு நொடிப்பொழுது கூட பிரியாது இருக்க வேண்டும் என்று தியானத்தில் இருப்பவர்.

அவ்வாறு ஆழ்ந்த தியானத்தில் இருப்பவரை நாம் கை தட்டி அவரின் தியானத்தை கலைக்கலாமா ? ஒரு போதும் கூடாது. நாம் சிவாலயத்தை விட்டு செல்லும் முன்னர், இந்த ஆலயத்திலிருந்து நாம் எதையும் எடுத்துச் செல்லவில்லை என்பதை நாமே உணர்வுபூர்வமாக அறிந்து செல்லவே சண்டிகேசுவரர் ஆங்கே எழுந்தருளியுள்ளார். ஒரு நொடிப்பொழுது நம்மை நாமே சரி பார்த்துக் கொண்டு, சிவாலயத்திலிருந்து நாம் எதையும் எடுத்துச் செல்லவில்லை என்பதை உணர்ந்து அதை அவருக்கு அறிவிக்கும் வண்ணம், ஓசை வராமல், கைகளை தடவிச் சென்றாலே போதுமானாது. ஆகவே, சண்டிகேசுவரர் ஆலயத்தின் முன் கை தட்டாதீர்கள். ஓசை எழுப்பாதீர்கள். திருச்சிற்றம்பலம்.

Please rate this

அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலையை கிரிவலம் வாருங்கள் No ratings yet.

அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலையை சுற்றி கிரிவலம் வாருங்கள் !!!

அச்சிறுபாக்கம் – அச்சுமுறிப்பாக்கம் – சிவபெருமானின் எட்டு வீரட்ட செயல்களில் முப்புர அசுரர்களை அழிக்க இரதத்தில் செல்லும் போது, விநாயகர் அந்த இரதத்தின் அச்சினை முறித்த இடம் ஆதலால், இது அச்சுமுறிப்பாக்கம் என்று பெயர் பெற்றது என்பது வரலாறு.

சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி நம் தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்கள் யாரும், அவ்வழியில் அச்சிறுப்பாக்கத்தில் வரும் நம் வஜ்ரகிரி மலையை கண்ணால் காணாமல் செல்ல முடியாது. இந்த மலை அச்சிறுப்பாக்கத்தில் மேல்மருவத்தூரை அடுத்து அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில் ௧௫௰௰ (1500) ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சிவாலயம் உள்ளது. இங்கு உறையும் பெருமான் மரகதாம்பிகை உடனுறை பசுபதீசுவரர் என்று அன்போடு காலம் காலமாக அழைக்கப்பட்டு வருபவர்.  அச்சிறுபாக்கத்தில் அமையப் பெற்றுள்ள பாடல் பெற்ற தலமான ஆட்சீசுவரர் கோவிலுக்கு உட்பட்டது தான் மலை உச்சியில் உள்ள பசுபதீசுவரர் கோவிலும் என்கிறார்கள். மலையின் உச்சியில் உள்ள கோவிலை அடைய இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று செங்குத்தான படிக்கட்டு. இன்னொன்று மலையின் பின்புறம் வாகனங்களில் வருவதற்கான பாதை.

இந்த மலையை சுற்றி பல்லாண்டு காலமாக மலைவலம் (கிரிவலம்) நடைபெற்று வருகிறது. சிறிதே தடைபட்ட இந்த மலைவலம், பிறப்பு இறப்பு அற்ற எல்லையில்லாத ஆற்றல் பொருந்திய உலகின் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானின் திருவருளினாலும் அவர் விருப்பத்தினாலும் இப்போது மீண்டும் துவங்கியுள்ளது.  மொத்தம் ௧௪ (14 km) கி.மீ. தூரம் உள்ள இந்த மலையைச் சுற்றி வரும் பாதையில் முழுநிலவு (பௌர்ணமி) அன்று கிரிவலம் வரப்படுகிறது.

மலைவலம் துவங்கும் இடம்:  அச்சிறுபாக்கம் பசுபதீசுவரர் கோவில் மலையடிவாரம்.

எல்லையற்ற கருணையும், ஆற்றலையும் கொண்டு, இந்த பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, ஒடுக்கி, அருள் புரிந்து வரும் சிவபெருமான் உயிர்களுக்குத் தேவையான அனைத்தையும் இந்த உலகில் படைத்து அருளி காத்து வருகிறான். அவ்வாறாக, சிவபெருமானே, மலையின் வடிவில் அமைந்து அருள் பாலிப்பதாக நம் சாத்திரங்கள் கூறுகின்றன. ஒரு நாட்டின் அரசனுக்கு நாம் செய்யும் பணிகள் தான் எத்தனை எத்தனை ? அவனை வரவேற்று உபசரிக்கும் விதம் தான் எத்தனை எத்தனை ? இந்த ௨௨௪ (224) புவனங்களில் ஆயிரக்கணக்கான கோள்களையும் பரவெளியையும் படைத்து அருள் புரிந்து வரும் நம் ராஜாதி ராஜனான சிவபெருமானை நாம் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் ? எப்படி வணங்க வேண்டும் ? அவனை எப்படிக் கொண்டாட வேண்டும் ?

இந்த மலையிலும் அரிய வகை மூலிகைகளும் மரங்களும் உள்ளன. சித்தர்களும் ஞானிகளும் வாழ்ந்திருந்த பூமியாக விளங்கியது இது. பெருமை மிக்க இந்த மலையில் மேவி அருள்பாலிக்கும் பசுபதீசுவரரை வணங்கியும் இந்த மலையை சிவபிரானாகவே எண்ணி மலைவலம் வருவதும் நாம் மிக்க புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும். திருவண்ணாமலைக்கு இணையாக இந்த மலையும் திகழ்வதால், திருவண்ணாமலை கிரிவலம் செய்யும் அதே புண்ணியமும், சிறப்பும், அருளும் இந்த மலையை வலம் வருவதால் கிடைக்கப்பெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்கள், திருவண்ணாலை செல்வதோடு இந்த வஜ்ரகிரி மலையையும் கிரிவலம் வருவது மிகவும் சிறப்பைத் தரும். இந்த மலையை சீர் செய்யவும், வழிபாடுகள் சிறப்பாக அமையவும் பல உதவிகள் தேவைப்படுகிறது. இந்து உதவி அமைப்பினர் பல சிறப்பான முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் அனைத்து இந்து அமைப்புகளும் கூட்டாக ஒன்று சேர்ந்து நம் பாரம்பரிய சொத்தான இந்த மலையை சீரமைத்து, கோவில்களையும் வழிபாடுகளையும் சிறப்பாக நடத்த இணைந்து செயல்பட வேண்டும்.  திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் அன்பர்கள் வஜ்ரகிரி மலைக்கும் கிரிவலம் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

இணையற்ற ஒப்பற்ற பெருமானின் திருவருள் மீண்டும் நம் பூமியில் பட்டு ஆன்மீக ஒளிப்பெருக்கு ஏற்பட வேண்டும்.

திருச்சிற்றம்பலம்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

Please rate this

சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு திருவாவடுதுறை ஆதீனம் 4.2/5 (5)

சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு திருவாவடுதுறை ஆதீனம்

12 ஆம் தொகுப்பு வகுப்பு   2018 – 2019

திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதின 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்களின் அருளாணையின் வண்ணம் ஆதினத்தின் சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பின் 12 ஆவது தொகுப்பு 2018 சனவரியில் தொடங்கப் பெற உள்ளது. இரண்டு ஆண்டுத் தொகுப்பான இந்தப் பயிற்சி வகுப்பு தமிழ்நாட்டில் சுமார் 85 ஊர்களிலும், ஆந்திர மாநிலம் ஐதராபாத்திலும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலும், மலேசியா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய அயல் நாடுகளிலும் நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சியில் ஏன் சேர வேண்டும் ? இந்த வகுப்பு நமக்கு என்ன நன்மை தரும் ? இந்தப் பயிற்சியில் யார் சேரலாம் ? பயிற்சி காலம், பயிற்சி கட்டணம், தேர்வு மற்றும் சான்றிதழ் பற்றிய மேலும் பல செய்திகளுக்கு இணைக்கப்பட்டுள்ள அறிக்கையைப் படிக்கவும்.

அனைத்து மையங்களின் அமைப்பாளரும் அவர்களின் தொடர்பு எண்ணும் இணைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு அருகில் இருக்கும் ஊர்களில் உள்ள மையங்களுக்கு சென்று இன்றே உங்கள் பெயரைப் பதிவிடுங்கள்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

திருச்சிற்றம்பலம்.

வகுப்பு நடைபெறும் அனைத்து மையங்களின் அமைப்பாளரும் அவர்களின் தொடர்பு எண்ணும்.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் – கொடிக்கவி 1 No ratings yet.

ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் – கொடிக்கவி 1

உமாபதிசிவம்.

சைவ சித்தாந்த சாத்திர நூல்களுல் உமாபதிசிவாச்சாரியார் அருளிய கொடிக்கவி என்ற நூலிலிருந்து முதல் பாடலின் விளக்கத்தை இங்கு காண்போம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

மதுரை சித்திரைத் திருவிழா No ratings yet.

மதுரை சித்திரைத் திருவிழா

        உ
சிவமயம்

மதுரை சித்திரை திருவிழா 2018

18/04/18 புதன்கிழமை
மீனாட்சி அம்மன் கோவில் கொடி ஏற்றம்.
கற்பகவிருட்ஷ சிம்ம வாகனம்

19/04/18 வியாழக்கிழமை
பூத அன்ன வாகனம்

20/04/18 வெள்ளிக்கிழமை
கயிலாச பர்வதம் –
காமதேணு வாகனம்

21/04/18 சனிக்கிழமை
தங்க பல்லாக்கு

22/04/18 ஞாயிற்றுக்கிழமை
வேடர் பரி லீலை

23/04/18 திங்கட்கிழமை
சைவ சமயம் ஸ்தாபித்த வரலாற்று லீலை –
ரிஷப வாகனம்

24/04/18 செவ்வாய்க்கிழமை
நந்திகேஷ்வரர் –
யாழி வாகனம்

25/04/18 புதன்கிழமை
பட்டாபிஷேகம் –
வெள்ளி சிம்ம வாகனம்

26/04/18 வியாழக்கிழமை
திக்விஜயம் –
இந்திர விமான உலா

27/04/18 வெள்ளிக்கிழமை
காலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
மாலை பூ (புஷ்ப) பல்லாக்கு

28/04/18 சனிக்கிழமை
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேர் உலா

வாருங்கள். சிவனை நினைந்திருங்கள்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

சமயகுரவர் துதி சைவ சமயத்தை மீட்டெடுத்த நால்வர் துதி 5/5 (3)

சமயகுரவர் துதி

சந்தான குரவர்களில் ஒருவரான உமாபதி சிவாச்சாரியார் இயற்றிய சமய குரவர் துதி. இது நால்வர் துதி என்றும் அழைக்கப்படும்.

சைவ சமயம் மற்றும் தமிழ் மொழியின் தொன்மையைப் பறை சாற்றும் எண்ணற்ற சான்றுகள் குமரிக் கண்டத்தில் இன்றும் இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது. முதல் தமிழ் சங்கம், மற்றும் இரண்டாம் தமிழ் சங்கம் நடைபெற்றது குமரிக் கண்டத்தில். மூன்றாம் தமிழ் சங்கம் நடைபெற்றது இன்றைய திருஆலவாய் (மதுரை) இல். சங்க காலம் சைவ சமயத்தின் பொற்காலம். சங்க காலத்திற்குப் பிறகு களப்பிரர்கள் ஆட்சி நடைபெற்றது. இது  2 முதல் 5 ஆம் நூற்றாண்டு காலமாகும். இந்த சமயத்தில் சைவம் மருவி, சிவ வழிபாடு குன்றியது. இது இருண்ட காலம் எனப்படும்.

அப்போதிருந்த மன்னர்கள் சமண சமயம் பௌத்த சமயம் ஆகியவற்றைத் தழுவியதால், மக்களும் அவர்களை பின்தொடர்ந்தனர். சமணர்களின் துறவறம் மக்களைக் கவர்ந்தது. சிவ ஆலயங்கள் வழிபாடுகள் இல்லாமல் குன்றியது. சமணர்கள் திருநீறு அணிபவர்களைக் கேவலமாக நடத்தினர். திருநீறு அணிந்த பூச்சாண்டிகளைப் பார்த்தாலே சிறைவாசம். இதற்கு கண்டுமுட்டு என்று பெயர்.  திருநீற்றை அணிந்தவரைப் பார்த்தேன் என்று ஒருவர் கூறியதை கேட்டவருக்கும் சிறை. இது கேட்டுமுட்டு என்று பெயர். இவ்வளவு கொடூரமான சமயத்தில், சைவ சமயத்தை மீட்டெடுக்க சிவபெருமானார் பெருங்கருணை கொண்டு அருளாளர்களை இங்கு அனுப்பி அருளிச் செய்தான். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் மற்றும் பல நாயன்மார்கள் தோன்றி சைவ சமயத்தை மீட்டெடுத்து சிவ வழிபாட்டை இடையூறின்றி நடத்தினர். இவர்கள் நம் சமயத்தை மீட்டெடுத்ததால் இவர்களை சமயகுரவர் என்கிறோம்.

இந்த சமயகுரவர்களை துதித்து பின்னாளில் வந்த சந்தான குரவர்களில் ஒருவரான உமாபதி சிவம் எழுதிய பாடலை பண்ணிசை பாவலர் திரு தண்டபாணி அவர்களின் குரலில் கேட்டு மகிழுங்கள்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

Please rate this

திருநாவுக்கரசர் தேவார துளிகள் – கோயில் திருக்குறுந்தொகை 5/5 (1)

திருநாவுக்கரசர் தேவார துளிகள் – கோயில் திருக்குறுந்தொகை

பதிவாசிரியர்: சிவதீபன்.
 
திருநாகைக்காரோணம் திருவிருத்தம்
 
குறிப்பு: நாகராசன் வழிபட்டமையால் “நாகை” என்றும் புண்டரீக முனிவரின் காயத்தை தம்மேல் ஆரோகணித்த பெருமான் உறைவதால் காயாரோகணம் என்றும் அழைக்கபபெற்று “நாகைக்காரோணம் எனப்படுகிறது
 
பரதவர்களும் வியாபாரிகளும் நிறைந்து வாழ்ந்த நெய்தல் நகரமாம் இது “பட்டினம்” ஆதலின் “நாகைப்பட்டினம்” என்று தற்காலத்தே வழங்கப்பெறுகிறது, “காரோணம்” என்ற பெயரில் ஆலயம் அழைக்கப்பெறுகிறது
 
“விரிதிரை சூழ் கடல்நாகை அதிபத்த நாயனார் வாழ்ந்திருந்த பதியாம்” இதற்கு மூவர் தேவாரப்பாடல்களும் உண்டு
 
சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லற வாழ்வியலுக்கு தேவையான பொருட்கள் யாவையும் இத்தலத்தில் இறைவனிடம் வேண்டிப்பெறுகிறார்
 
ஒன்பது பாடல்களால் நிறைவடைந்துள்ள அப்பரடிகளது விருத்த செய்யுள்கள் இவை
 
பாடல்
 
வடிவுடை மாமலை மங்கை பங்கா கங்கை வார்சடையாய்
கடிகமழ்சோலை சுலவு கடனாகைக் காரோணனே
பிடிமதவாரணம் பேணுந் துரகநிற்கப் பெரிய இடிகுரல் வெள்ளெருது ஏறும் இதென்னைகொல் எம்மிறையே.
 
கருந்தடங் கண்ணியுந் தானுங் கடனாகைக் காரோணத்தான்
இருந்த திருமலை யென்றிறைஞ் சாதன்று எடுக்கலுற்றான்
பெருந்தலை பத்து மிருபது தோளும் பிதிர்ந்தலற
இருந்தரு ளிச்செய்த தேமற்றுச் செய்திலன் எம்மிறையே.
 
பொருள்
 
அழகிய பார்வதி பாகனே ! நீண்ட சடையில் கங்கையைத் தரித்தவனே ! நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த , கடலையடுத்த நாகைக் காரோணனே ! எம்தலைவனே ! பெண்யானை , மதமுடைய ஆண்யானை , விரும்பும் குதிரை இவைகள் இருப்பவும் பெரிய , இடிபோன்ற குரலையுடைய வெள்ளிய காளையை நீ இவர் வதன் காரணம் என்ன ?
 
கரிய நீண்ட கண்களை உடைய பார்வதியும் தானுமாகக் கடல் நாகைக் காரோணத்தான் உகந்தருளியிருக்கும் திருமலை என்று அதனை வழிபடக் கருதாது , அன்று , அதனைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய தலைகள் பத்தும் தோள்கள் இருபதும் சிதற அதனால் அவன் உரக்கக் கதறக் கயிலை மலையில் இருந்தவாறே அவனுக்கு வாள் முதலியவற்றை நாகைக் காரோணத்தார் அருளிச் செய்தாரே அல்லாமல் அவன் உயிருக்கு இறுதியைச் செய்யவில்லை .
 
 
கோயில் திருக்குறுந்தொகை
 
குறிப்பு: அப்பர் பெருமான் பாடியருளிய திருப்பதிகங்களில் “குறுந்தொகை” என்ற செய்யுளமைப்பில் அமைந்துள்ள பதிகங்கள் யாவும் ஐந்தாம் திருமுறையாக தொகுக்கப் பெற்றுள்ளது
 
அற்புதமான அறக்கருத்துக்களை எளிமையாக எடுத்தோதும் இத்திருமுறையில் சரியாக நூறு திருப்பதிகங்கள் உள்ளன
 
வேண்டினவெல்லாம் வழங்கு தில்லை மூதூரின் எல்லை பணிந்த எழுந்து மேனிலை மாடம் கைதொழுத அப்பர்பெருமான் கனகப்பொது எதிர் கண்ணுற்று கூடிய மகிழ்ச்சி பொங்க கும்பிட்டு இருந்த காலத்தில் “அருட்பெரு மகிழ்ச்சி பொங்க அன்னம்பாலிக்கும் என்னும் திருக்குறுந்தொகைகள் பாடி திருவுழவாரம் செய்து பெருகுபேர் இன்பம் உற்றனர்
 
அன்னம் – சோறு – முத்தி, முத்திவழங்கும் தில்லை சிற்றம்பலம் என்பது நுதலிய பொருள் என்றாலும், “மண்ணுயிர்கள் யாவும் பசிநோயில் வாடாது நாளும் படியளக்கும் தில்லை சிற்றம்பலம்” என்றும் பொருள் கொள்வர் சான்றோர் இதனைக்காட்டவே “தென்பால் உகந்தாடும் தில்லை சிற்றம்பலத்து தெற்கு கோபுரத்தில் அன்னக்கொடியாம் காவிக்கொடி எப்போதும் பட்டொளி வீசிப்பறக்கிறது”
 
மகேசுர பூசையின் போது சீரடியார் பெருமக்கள் பாடிப்பரவும் பைந்தமிழ் மாலையும் இதுவேயாம்
 
பாடல்
 
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.
 
அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ
கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே.
 
அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர்
சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே.
 
பொருள்
 
பேரின்பவீடு நல்கும் தில்லைத் திருச்சிற்றம்பலம் பொன்னுலக வாழ்வையும் தரும் . இத்தகைய திருச்சிற்றம்பலத்தை , மேலும் இந்நிலவுலகில் என் அன்பு பெருகும் வகையில் கண்டு , பரமுத்திப் பேரின்ப நிலையை எளிதின் எய்துதற்கு இந்த நல்ல மனிதப் பிறவியை இன்னு
 
அரும்புகள் நீக்கமுற ஆராய்ந்த போதுகளைக் கொண்டு வண்டுகள் நீக்கமுறத்தூவி , கரும்பாகிய வில்லை ஏந்திய கருவேளை எரித்தவனாகிய பெரும்பற்றப்புலியூர் எம்பிரானை நீர் தொழுமின்
 
அரித்தல் மிக்க இருவினையால் தாக்குண்டு எரிசூழ ( இடுகாட்டில் ) கிடந்தார் என்று அயலோர் சிரிப்புற்றுப் பலபல பேசுதலை அடையுமுன்னரே நீவிர்போய்த் திருச்சிற்றம்பலத்தை அடைந்து உய்மின்
 
 
கோயில் திருக்குறுந்தொகை
 
குறிப்பு: திருவேட்களம், திரக்கழிப்பாலை விரும்பித் தொழுத கலைவாய்மை காவலராம் “அப்பர் தம்பிரானார்” நீடு திருப்புியூரை நினைந்து வழிகொண்டு விரைந்தனர்
 
“நினைப்பவர் மனம் கோயில் கொள்ளும் அம்பலத்து நிருத்தனாரை திணைத்தனை போதும் மறந்துய்வனோ!?” என்று மனக்கோயில் வழிபாட்டை சிறப்பித்து பாடிய பதிகம் இது
 
பாடல்
 
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்தனைப் பொழுதும் மறந்துய்வனோ.
 
தீர்த்தனைச் சிவனைச் சிவலோகனை
மூர்த்தியை முதலாய ஒருவனைப்
பார்த்தனுக்கருள் செய்த சிற்றம்பலக்
கூத்தனைக் கொடியேன் மறந்து உய்வனோ.
 
கட்டும் பாம்புங் கபாலங்கை மான்மறி
இட்டமாயிடு காட்டெரி யாடுவான்
சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனை
எட்டனைப் பொழுதும் மறந்துய்வனோ.
 
பொருள்
 
பனைபோன்ற கையையும் , மும்மதங்களையும் உடைய யானைத்தோலை உரித்துப் போர்த்தவன் ; தன்னை நினைப்பவர் மனத்தைக் கோயிலாக் கொண்டவன் ; வேடம் அனைத்துமாம் அம்பலக்கூத்தன் . இத்தகைய சிற்றம்பலக் கூத்தனைத் தினையளவுப் பொழுதும் மறந்து வாழ்வேனோ !
 
அநாதியே பாசங்களின் நீங்கி நின்று தன்னை அடைந்தார்க்கு அவற்றை நீக்கியருளும் தூயனை , பேரின்ப வடிவினனை , சிவலோக நாயகனை , ஞான உருவினனை , உலகத்தோற்றத்தின் முன் அதற்கு மூலமாய் முன்னின்ற ஒருவனை , அருச்சுனனுக்கு வேடனாய்த்தோன்றியும் , பாசுபதமீந்தும் அருள்செய்த சிற்றம்பலத்துக் கூத்தப்பிரானைக் கொடியேனாகிய யான் மறந்து வாழ்வேனோ ? மறவேன்
 
தன்னைச் சுற்றிக் கட்டிக்கொண்டிருக்கும் பாம்பையும் , கையின்கண் பிரமகபாலத்தையும் மான்கன்றையும் உடையவனும் , சர்வசங்கார நிலையில் விரும்பி எரிவீசி ஆடுவோனும் ஆய சிட்டர்கள் வாழும் தில்லைச் சிற்றம்பலத்துக் கூத்தனை எள்ளளவுப் பொழுதேனும் மறந்து வாழ்வேனோ ?
 
 
திருநெல்வாயில் அரத்துறை திருக்குறுந்தொகை
 
குறிப்பு: பெண்ணாகடத்திற்குத் தென்மேற்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ளது. விருத்தாசலத்திலிருந்து தொழுதூர் செல்லும் பேருந்துகளில் ஏறிக் கொடிகளம் என்னும் இடத்தில் இறங்கித் தெற்கே 1 கி.மீ. தூரம் சென்றால் இத்தலத்தை அடையலாம். இது நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று. அரத்துறை என்பது ஆலயத்தின் பெயர், நெல்வாயில் என்பது ஊர்பெயராம்
 
திருஞானசம்பந்தப் பெருந்தகையார்க்கு முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச்சின்னம் இவைகளை அருளிய தலம் மூவர் பாடலும் பெற்றதாம்
 
 சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருக்குறள் கருத்துக்களையும், அடிகளையும் இவ்வூர் ஏழாம் திருப்பாடலில் எடுத்து ஆளுகின்றார். இத்தலத்துக்குத் திருஞான சம்பந்தப் பெருமான் பதிகம் ஒன்று, அப்பரடிகள் பதிகம் ஒன்று, நம்பியார் பதிகம் ஒன்று ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன.
 
இது அப்பர்பெருமான் பாடிய குறுந்தொகையாம்
 
பாடல்
 
கடவுளைக் கடலுள்ளெழு நஞ்சுண்ட
உடலுளானை ஒப்பார் இலாதவெம்
அடலுளானை அரத்துறை மேவிய
சுடருளானைக் கண்டீர்நாந் தொழுவதே.
 
கலையொப்பானைக் கற்றார்க்கோர் அமுதினை
மலையொப்பானை மணிமுடி ஊன்றிய
அலையொப்பானை அரத்துறை மேவிய
நிலை ஒப்பானைக் கண்டீர்நாந் தொழுவதே.
 
பொருள்
 
நாம் தொழுவது கடவுளும், பாற்கடலுள் எழுந்த நஞ்சு உண்டு தரித்த, அருட்டிருமேனியுடையவனும், ஒப்புமை சொல்லத் தக்கார் இல்லாத ஆற்றல் உள்ளவனும், அரத்துறைத் தலத்தை விரும்பிய ஒளியானவனும் ஆகிய பெருமானையே.
 
நாம் தொழுவது கலையும், கற்றார்க்கமுதும், மலையும் போல்வானும், மலையெடுக்கலுற்ற இராவணனை மணிமுடியின்கண் ஊன்றி அலைக்கலுற்றானும், அரத்துறை மேவிநிலை பெற்றிருப்பானுமாகிய பெருமானையே.
 
 
திருப்பாசூர் குறுந்தொகை
 
குறிப்பு: பாசு என்றால் மூங்கில், மூங்கில் காடுகள் நிறைந்து இருந்தமையால் பாசூர் எனப்பட்டது, தொண்டைநாட்டு நலங்களுள் ஒன்றான இது திருவள்ளூரில் இருந்து திருவாலங்காடு செல்லும் வழியில் கடம்பத்தூர் அருகே 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது
 
இத்தல இறைவர் மூங்கில் காட்டிலிருந்து முளைத்த சுயம்பு மூர்த்தி, தீண்டாதிருமேனியர், அம்பிகையால் வழிபாடு செய்யப்பெற்றவர்
 
இத்தலத்தை பிள்ளை பெருமானாரும் அப்பர் பெருமானாரும் பாடிப்பரவியுள்ளனர், ஆனைக்காவில் வழிபட்ட சிலந்தி யானை பற்றிய செய்திகள் இவ்வூர் தாண்டகத்தில் வருவது எண்ணி மகிழத்தக்கது
 
இங்கு அப்பர் பெருமான் பாடிய குறுந்தொகையில் இருந்து ஒரு அழகிய பாடல் இது
 
பாடல்
 
வேதம் ஓதிவந்து இல்புகுந்தார் அவர்
காதில் வெண்குழை வைத்த கபாலியார்
நீதி ஒன்றறியார் நிறை கொண்டனர்
பாதி வெண்பிறைப் பாசூர் அடிகளே.
 
பொருள்
 
பாதி வெண்பிறை அணிந்த திருப்பாசூர்த் தலத்து இறைவர், வேதங்களை ஓதிவந்து இல்லத்துட் புகுந்தார் ; காதில் வெண்குழை வைத்த கபாலியார் ; நீதியொன்றறியாது என்னுடைய கற்பினைக் கொண்டார்.
 
சற்குருநாத ஓதுவார் குரலில் கேட்டின்புறுங்கள்
 
 
திருவானைக்கா குறுந்தொகை0
 
குறிப்பு: “அப்பர் சுவாமிகள், மண்ணுயிர்கள் உய்யும் பொருட்டு சிவஞானபோதத்தை தேவாரத்தமிழாக விரித்தனர்”
 
அப்படி வேதம் தமிழாக விரிக்கையில் “மெய்யறிவு சிவமே” என்று உணராமல் உலகியலில் ஈடுபட்டுவரும் மக்களை கடுமையாக சாடி அழைத்து உபதேசம் செய்தல் அப்பரடிகளின் பண்பு
 
அவ்வகையில் உலகியலில் கண்ணெதிரே தோன்றுபவை நிகழ்பவை மட்டுமே உண்மை என்று கருதி, வினைக்கொள்கையையும் கடவுளையும் மறுத்து பொய்யறிவு பேசும் “நாத்திகக் கூட்டத்திற்கு சரியான உதாரணம் தந்து இடித்துரைக்கிறார்” சுவாமிகள் இப்பாடலில்
 
பாடல்
 
நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
தடையொன்று இன்றியே தன்னடைந்தார்க்கு எலாம் அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே.
 
பொருள்
 
உலகியலையே மெய்யென்று கருதும் பொய்யாகிய நாத்திகம் பேசாமல், படைகள் போல் வருகின்ற ஐந்து பெரும் பூதங்களால் வரும் தடைகள் ஒன்றும் இன்றித் தன்னை யடைந்த அன்பர் களுக்கெல்லாம் அடையும் பொருளாக நிற்பவன் ஆனைக் காவின் அண்ணலே ஆவன்.
 
மயிலை ஓதுவார் பாடுகிறார் கேட்டின்புறுங்கள்
 
 
 
திருக்கோழம்பம் திருக்குறுந்தொகை
 
குறிப்பு: மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ள மங்கைநல்லூர் என்னும் ஊரில் இருந்து மேற்கே செல்லும் “கோமல் ரோடு” என்னும் சாலையில் 15கிமீ சென்றால் எஸ்புதூர் என்ற ஊர் வரும் அங்கிருந்து “திருக்கொழம்பியூர்” என்று கேட்டால் 1கிமீ தொலைவில் கிராமத்திற்குள் இருக்கும் கோயிலை அடையலாம்
 
திருவாவடுதுறை தலத்தில் இருந்தும் எளிதாக இத்தலத்தை அடையலாம், இங்கிருந்து தெற்கே 4 கிமீ செல்லவேண்டும், மயிலாடுதுறையில் இருந்து தனிவாகனம் அமைத்து கொண்டு செல்வது உத்தமம்
 
அம்பிகை பசுஉருவில் வழிபட்ட தலம் இது, பசுவின் குளம்படிபட்டு இறைத்திருமேனி வெளிப்பட்டமையால் *கோழம்பம்* எனப்பட்டதாம்
 
திருமால், அயன் உள்ளிட்டோருடன் சந்தன் என்ற வித்யாதரன் குயிலுருவில் வழிபட்ட தலமாகும்
 
அப்பரடிகளும் பிள்ளைப் பெருமானாரும்  பதிகம்பாடியுள்ளனர்
 
பாடல்
 
கயிலை நன்மலை ஆளுங் கபாலியை
மயிலி யல்மலை மாதின் மணாளனைக்
குயில் பயில்பொழிற் கோழம்பம் மேயவென்
உயிரினை நினைந்து உள்ளம் உருகுமே
 
பொருள்
 
திருக்கயிலாயத் திருமலையினை ஆள்கின்ற கபாலியும், மயிலியலை உடைய மலைமங்கையின் மணவாளனும் ஆகிய, குயில் பயில்கின்ற பொழில்கள் உடைய கோழம்பத்தைப் பொருந்திய என் உயிர்போல்வானாகிய இறைவனை நினைந்து உள்ளம் உருகுகின்றது.
 
கேட்டின்புறுங்கள்
 
திருநீலக்குடி திருக்குறுந்தொகை
 
குறிப்பு: தென்னலக்குடி என்று தற்காலத்தே அழைக்கப்பெறும் இத்தலம், மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் உள்ள “ஆடுதுறை” என்னும் இடத்தில் இருந்து தெற்கே 3கிமீ தொலைவில் அமைந்துள்ளது
 
வசிட்டர், காமதேனு, தேவமாதர், மார்க்கண்டேயர் உள்ளிட்டோர் வழிபட்ட பதியாம் இதற்கு *தேவி தீர்த்தம், பாரத்வாஜ தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம்,பிரம தீர்த்தம், க்ஷீரகுண்டம்* என்னும் ஐந்து தீர்த்தங்கள் உள்ளன
 
இத்தலத்தில் உள்ள பலாமரம் காய்க்கும் வேளையில் சுவாமிக்கு பலாச்சுளைகள் நிவேதனம் ஆகும், இது தீராநோய்களை தீர்க்கும் மருந்தாம், ஒருவேளை பலாப்பழத்தை சுவாமிக்கு நிவேதனம் செய்யாமல் வெளியில் எடுத்து வந்துவிட்டால் பழம் எந்தநிலையில் இருந்தாலும் உள்ளே வண்டரித்து உண்ணத்தகாத ஒன்றாகிவிடும் அதிசயம் இன்றும் நிகழ்கிறது
 
இத்தல இறைவர் சுயம்பு வடிவில் எழுந்தருளியுள்ள அதிசய மூர்த்தியாவார், திலதைலம் என்னும் நல்லெண்ணெய் கொண்டு அபிசேகித்தால் எத்தனை குடம் தைலமாயினும் இலிங்க பாணத்தால் உறிஞ்சப்பட்டு விடுவது எங்கும் காணாத அதிசயமாம்
 
இத்தலத்து பதிகத்தில் நீலக்குடி அரனார் நாமம் நவிற்றுவோர் பெறும் பயன்கள் யாவை என்று விளக்கும் அப்பரடிகள், “அமணர்கள் தம்மை கல்லினோடு பூட்டி கடலில் இட்டபோது உதவியது நீலக்குடியரன் நாமம் என்று பதிவு செய்யும் பாடல் இது
 
பாடல்
 
கல்லி னோடெனைப் பூட்டி யமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக் குடியரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந் தேனன்றே.
 
பொருள்
 
கல்லினோடு என்னைச் சேர்த்துக்கட்டி அமண் ஒழுக்கமுடையவர்கள் விரைந்து கடல் நீரிற் புக – நூக்கிவிட , என் வாக்கினால் நெல்வளம் உடைய நீண்ட வயல் சூழ்ந்த நீலக்குடி அரனுடைய நல்ல நாமத்தைச் சொல்லி நன்றே உய்ந்தேன் .
 
தவறாமல் கேட்டின்புறுங்கள்
 
 
சிவதீபன்
📱9585756797
 

Please rate this

சைவத்தின் மேல் சமயம் வேறு இல்லை 4.8/5 (5)

சைவத்தின் மேல் சமயம் வேறு இல்லை

சைவ எல்லப்ப நாவலர் அருளிய சைவ சமயத்தின் பெருமையை எடுத்துரைக்கும் பாடல் இது. தேவாரம் நம் உயிர். திருவாசகம் நம் உயிர்.  சைவ சமயத்தின் கருப்பொருளை இனிய பாடல்களாகக் கொண்டிருக்கும் பன்னிரு திருமுறைகளை ஓத, அது இனி வரும் நம் வாழ்வை இனிமையாக வழி நடத்திச் சென்று, ஆணவத்தை அறுத்து, இன்பமே உருவாகிய பிறப்பு இறப்பு அற்ற சிவபிரானின் திருவடிகளை நம்மை அடையச் செய்யும் என்பது திண்ணம்.

கோவை சகோதரர்கள் அவர்களின் வெண்கலக் குரலில்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் திருக்கூட்டம்.

Please rate this

விழி கிடைக்குமா அபயக்கரம் கிடைக்குமா ? 5/5 (1)

விழி கிடைக்குமா அபயக்கரம் கிடைக்குமா ?

இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்கள் யாவும் உயிர்கள் என்றும், அவை தம்மைப் பிணித்துள்ள ஆணவ மலத்தை உதறிவிட்டு, எப்போதும் பேரின்பம் தந்து கொண்டிருக்கும் இறைவனை அடைய வேண்டும் என்று வேண்டி, சரியை, கிரியை, யோகம் மற்றும் ஞானம் ஆகிய படிநிலையில் இறைவனை வழிபடுகின்றன. அவ்வாறு வழிபடும் போது, தக்க முதிர்வு நிலையில், இறைவனே ஞான குருவாக வந்து ஞான உபதேசம் அருளி முக்தியாகிய பேரின்பத்தை வழங்குவன். அவ்வாறு சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய படிநிலைகளில் விளங்கும் ஒருவர், தன் தலைவனாகிய சிவபிரானின் கருணை மிகு கடைக்கண் பார்வைக்காக ஏங்கும் போது, தன் உள்ளம் உருகி பாடுகிறார். இந்த பாடலைக் கேட்டால் உருகாதவர் யாருளர் ?

 

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

சென்னையில் அருள்பாலிக்கும் பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் 5/5 (5)

சென்னையில் அருள்பாலிக்கும் பள்ளிக்கரணை சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீசுவரர் திருக்கோயில்

சென்னையில் உள்ள சிவாலயங்களில் பார்க்க வேண்டிய கோவில்.
காஞ்சீபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் தாலுகாவில் உள்ளது பள்ளிக்கரணை என்ற ஊர். இங்கு கிழக்கு நோக்கி அமைந்துள்ளது ஆதிபுரீஸ்வரர் கோவில். இது வேளச்சேரி – தாம்பரம் நெடுஞ்சாலையில் பள்ளிக்கரணை குளம் எதிரில் அமைந்துள்ளது. பல சிறப்புகளை உள்ளடக்கியதாக இருக்கிறது இந்த திருத்தலம்.
மத்யந்தனர் என்ற முனிவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மழன் என்று பெயரிட்டு வளர்த்தார் முனிவர். வேதங்களை நன்கு கற்றுணர்ந்த மழன், ‘தந்தையே! இறைவனை அடைய தவத்தினால் தானே முடியும்’ என்று கேட்டான். அதற்கு முனிவர், ‘தவம் செய்தால் மனிதனுக்கு சொர்க்கம் மட்டுமே கிடைக்கும். ஆனால் சிவ பூஜையை பக்தியுடன் செய்பவர்களுக்கு மறுபிறவி என்பதே கிடையாது’ என்றார்.
அது முதல் சிவபூஜை செய்ய தொடங்கினான் மழன். அதன் பயனாக மழன் முனிவர் என்று பெயர் பெற்றார். ஒரு முறை அவர் சிவபெருமானிடம் வேண்டினார். *‘என் வாழ்வில் எந்த சுகமும் வேண்டாம். உன்னைக் காலம் முழுவதும் அர்ச்சிக்கும் பாக்கியம் மட்டும் போதும். ஆகையால், சிவபூஜை செய்ய வில்வ இலைகளை பறிப்பதற்காக, வில்வ மரங்களில் ஏறும்போது வழுக்காமல் இருப்பதற்காக என் கால்களை புலிக்கால்களாகவும், கைவிரல்கள் புலி நகமாகவும் மாற அருள் செய்ய வேண்டும்’* என்று வேண்டினார். வேண்டியது போலவே மழன் முனிவரின் கால்கள் புலிக்கால்களாகவும், கைவிரல்கள் புலியின் நகங்களாகவும் மாறிவிட்டன. புலியை, சமஸ்கிருதத்தில் வியாக்ரம் என்று அழைப்பார்கள்.
எனவே சிவதரிசனம் மூலம் அரிய வரம் பெற்ற மழன் அன்று முன் வியாக்ரபாதர் என்று அழைக்கப்பட்டார். பின்னர் வியாக்ரபாதர், வில்வ மரங்கள் அடர்ந்த சோலையை தேடிச் சென்றார். அப்படி அவர் வந்த இடம் வில்வ மரங்கள் நிறைந்து மனதிற்கு பிடித்த இடமாக இருந்தது. அந்த இடம்தான் பள்ளிக்கரணை.
வியாக்ரபாதர் இந்த பகுதியில் வில்வ இலைகளை பறித்து அர்ச்சனை செய்து செண்பக மலர் சூட்டி மகிழ்ந்தார்.
பிற்காலத்தில் சோழ மண்டலத்தில் உள்ள சுரது நாட்டு மன்னர் இந்த பகுதிக்கு வந்தபோது, வியாக்ர பாதர் பற்றி கேள்விப்பட்டு, இந்த பகுதியை புலியூர் கோட்டம் என்று அறிவித்ததுடன், பள்ளிக்கரணையில் சிவபெருமானுக்கு கோவில் எழுப்பினார்.
இக்கோவில் ராஜகோபுரம் 39 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது.
ஆதிபுரீஸ்வரர் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். அம்பாள் சாந்தநாயகி தெற்கு நோக்கி தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்.
ஆஞ்சநேயர் மேற்கு பார்த்தும், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை கிழக்கு பார்த்தும் அருள்பாலிக்கின்றனர்.
ஆதிபுரீஸ்வரர் ஏகலிங்க பாண வடிவமாக உள்ளார். மேலும் இவர் நவக்கிரக நாயகராகவும் இருக்கிறார். எனவே ஆதிபுரீஸ்வரரை வணங்கினால் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
கருவறையில் இறைவனோடு, அம்பாளும் உடனிருப்பது தனிச்சிறப்பாகும். இறைவனும் இறைவியும் சேர்ந்திருப்பதால் இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு ஆனந்த வாழ்வு கிடைக்கும்.
சாந்தநாயகி என்ற பெயரில் அம்மன் தெற்கு நோக்கி தனிச் சன்னிதி கொண்டுள்ளார். நின்ற கோலத்தில் அருள்புரியும் அம்மனை வணங்கும் பக்தர்களுக்கு எம பயம் நீங்கி நல்ல ஆரோக்கியத்துடன், செல்வ செழிப்பும் நிம்மதியும் வந்தடையும்.
அம்பாள் சன்னிதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் யானை மாலையுடன் உள்ள தோற்றம் இருக்கிறது.
இந்த ஆலயத்தில் முருகப்பெருமான் குடும்ப சகிதமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அறுபடை வீடுகளில் பழமுதிர்சோலையில் மட்டும் தான் குடும்ப சகிதமாக முருகப்பெருமான் உள்ளார். இந்த தலத்திலும் பழமுதிர்சோலையின் அம்சம் அப்படியே இருக்கிறது.
கருவறை மண்டப விதானத்தில் சூரியனை நாகம் விழுங்கும் காட்சி புடைப்பு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
மேலும் மண்டபத்தை சுற்றிலும் கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண் கொடுக்கும் காட்சி, மயில் சிவபெருமானுக்கு பூஜை செய்வது, நாகம் பூஜை செய்வது போன்றவை காட்சியளிக்கின்றன.
பஞ்ச வில்வம் என்று சொல்லப்படும் வில்வமரம், விளாமரம், நொச்சி, கிளுவை, மாவிலங்கம் ஆகிய மரங்கள் இத்தலத்தில் உள்ளன. மேலும் செண்பகம், பன்னீர், மந்தாரை, சென்றை மலர், செம்மரம், ருத்ராட்ச மரம், வெள்ளெருக்கு, அரசு, இலுப்பை, வேங்கை, மூங்கில், பாராய், அரளி, பாரிஜாதம், வன்னிமரம், வேம்பு, நாகலிங்கம், முல்லை, மகிழமரம் போன்றவை இங்கு தல விருட்சங்களாக இருக்கின்றன. இந்த கோவிலில் மற்றொரு சிறப்பும் இருக்கிறது.
தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்.
உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.
 

 

Please rate this

திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி பாடல் விளக்கம் 5/5 (2)

மாணிக்கவாசகரின் திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் விளக்கம்

சேரும் பொருளின் தன்மையைப் பெறுவது உயிர்களின் குணமாகும். ஆணவ மலத்தின் பிடியில் சிக்குண்டு கிடக்கும் உயிர்கள், அறிவின் மயக்கத்தால் இறைவனை மறந்து மாறிக் கொண்டே இருக்கும் சடப்பொருளின் மீது இலயித்துக் கிடக்கும். அவ்வாறு கிடக்கும் உயிர்களைத் தட்டி எழுப்பி, அவத்தை விட்டு சிவத்தைப் பிடிப்பதற்காக பாடும் பாடல் திருப்பள்ளியெழுச்சி.

இந்த பதிகத்தின் விளக்கங்களை அளிக்கிறார், சிவதீபன் அவர்கள்.

முதல் பாடல்

இரண்டாவது பாடல்

மூன்றாவது பாடல்

நான்காவது பாடல்

ஐந்தாவது பாடல்

ஆறாவது பாடல்

ஏழாவது பாடல்

எட்டாவது பாடல்

ஒன்பதாம் பாடல்

பத்தாம் பாடல்

அனைத்து பாடல்களையும் பார்க்க

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

 

Please rate this

சென்னை புத்தகத் திருவிழா 2018 தற்போது நடைபெறுகிறது 10-22 No ratings yet.

சென்னை புத்தகத் திருவிழா 2018 இப்போது நடைபெற்று வருகிறது.

41 ஆவது புத்தகத் திருவிழா சென்னை புனித ஜார்ஜ் ஆங்லோ இண்டியன் மேல் நிலைப் பள்ளியில் (பச்சையப்பா கல்லூரி எதிரில்) தற்போது நடைபெற்று வருகிறது. சனவரி 10 முதல் 22 ஆம் தேதி வரை.

இரண்டாம் நாளான இன்று (11-01-2018, வியாழக்கிழமை), தெய்வப்புலவர் திருவள்ளுவர் அவர்களின் சிலை திறந்து வைக்கப்பட்டது. மேலும், சென்னை கோசை நகரான் குழுவினரின் கயிலாய வாத்தியமும் இசைக்கப்பட்டது.

எல்லா வகையான புத்தகங்களும் இந்த புத்தக கடலில் இருக்கிறது. அள்ளுபவர்கள் வந்து அள்ளுங்கள். குறிப்பாக, சைவ சமய நூல்கள் எண்ணற்றவை உள்ளன. குறிப்பான சில பதிப்பகங்களில் நம் சைவ சமய நூல்கள் கிடைக்கின்றன. சித்தர திருவிளையாடல், சித்திர பெரியபுராணம் புத்தகங்கள் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் பதிப்பகத்திலும், அதை அடுத்து உள்ள கிரி டிரேடர்ஸ் கடைகளிலும் கிடைக்கிறது. உமா பதிப்பகம், சைவ சிந்தாந்த நூற்புக்கழகம், கிரி டிரேடர்ஸ், மணிவாசகர் பத போன்றவை சில. சைவ சமய புத்தகங்கள் கிடைக்கும் கடைகள் கீழே புகைப்படங்களில் கடை எண்ணோடு பதிவிடப்பட்டுள்ளது. அனைவரும் தங்கள் விருப்பம் போல வாங்கி அள்ளி எடுத்துச் சென்று படித்து பயன்பெறுங்கள்.  எல்லா கடைகளிலும் 10%. சாரதா பதிப்பகம் 50%.

வலைதளம்: https://bapasi.com/

 

Please rate this

திருமுறை என்னும் தேன் – துளி 1 4.75/5 (4)

திருமுறை என்னும் தேன் – துளி 1 

பதிவு ஆசிரியர்: சிவதீபன்

திருமூலர் திருமந்திரம்

பத்தாம் திருமுறை – தூல பஞ்சாக்கரம்

குறிப்பு: அப்பரடிகள் இறைவனை கனியினும் இனியன் என்பார், இங்கு திருமூலர் இறைவனது நாமத்தின் சுவை கனி போன்றது என்று பாடுகிறார்

இறை இன்பம் என்பது ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அனுபவித்து தெரிந்து கொள்ளத்தான் முடியும் என்பதனை விளக்கும் மந்திரம் இது

பாடல்

ஒன்று கண்டீர் உலகுக்கொரு தெய்வமும்
ஒன்று கண் டீர் உலகுக்குயிராவது
நன்றுகண்டீர் இனி நமச்சிவாயப்பழம்
தின்றுகண்டேற்கு இது தித்தித்தவாறே .

பொருள்

அனைத்துலகங்களுக்கும் முதற்பொருளாய் நிற்கும் கடவுட் பொருள் ஒன்றே. அனைத்து உயிர்கட்கும் உயிராய் உள்ளதும் அதுவே. அதனை உணர்த்தும் `நமச்சிவாய` என்னும் ஐந்தெழுத்து மறைமொழியே ஞானத்தைத் தரும் மறைமொழியாம். அம்மறைமொழியாகிய பழத்தை நான் தின்றே பார்த்தேன். அது தித்தித்த முறையை உலகில் எந்தத் தித்திப்போடு நான் உங்கட்கு உவமித்து உணர்த்துவேன்.?

சற்குருநார் குரலில் கேட்டின்புறுங்கள்🙏🏻😊

ஒன்று கண்டீர்


தில்லை வாழ்அந்தணர்கள்

(சிவதீபன்)

எனக்கும் நம் “அன்பு” அன்பு தம்பிக்கும் நண்பர் சிவக்குமார் அவர்களுக்கும் *தில்லைகூத்த பிரான் மீது எத்தனை ஈடுபாடோ அதே போலவே பெருமானுக்கு ஸ்ரீகாரியம் செய்யும் “தில்லைவாழ் அந்தணர்கள்” மீதும் ஈடுபாடு உண்டு*


இந்த படத்தில் நீங்கள் பார்க்கும் காட்சி கடந்த திருவாதிரை விழாவில் தேரோட்டத்தின் போது வடக்கு வீதியில் நாங்கள் கண்ட காட்சி!!

*கூட்டத்தின் இடையில் சைக்கிளை தீட்சிதர் ஒருவர் செலுத்த, பின்னால் கேரியரில் அவரது இல்லத்தரசி அமர்ந்திருந்தார்* மற்றவர்களுக்கு எப்படியோ எங்களை பொறுத்த வரை அது *சாட்சாத் நடராஜ பெருமானும் சிவகாமசுந்தரியும் சைக்கிள் ரைடு செய்ததை போல இருந்தது*

காட்சியை கண்டதும் நாங்கள் *இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டோம்* இன்றைக்கு அது அன்பின் கரம் வழியே கூத்தனருளால் ஓவியமாக வெளிப்பட்டுள்ளது

நாங்கள் தில்லைக்கு சென்றால் நிருத்த தரிசனம் ஆனதும் எங்கள் கவனம் தீட்சிதர்கள் என்னென்ன செய்கிறார்கள், எப்படி பேசுகிறார்கள் என்றெல்லாம் கவனிப்பதுதான் வேலை!!

*கூத்தனை தொட்டு தடவி பூசிப்பவர்களாயிற்றே!! “பேற்றினார் பெருமைக்கு எல்லை ஆயினார்” என்று பெரியபுராணமே பாடுகினன்ற வாழும் நாயன்மார்களான இவர்கள் மீது எங்களுக்கு இருக்கும் ஆர்வம் ஆச்சர்யப் படத்தக்கது அன்று*

“வழி!! வழி!!” என்று அதிகாரக்குரல் எடுத்து அவர்கள் வருங்காட்சியும், கூத்தபிரான் முன்பு குழந்தை போல உருகுங்காட்சியும், ஆச்சர்யமாக ஐந்தாம் நாள் தெருவடைச்சான் முன்பு அவர்கள் உலகை மறந்து ஆடிவருங் காட்சியும் சீரினால் வழிபாடுகளை ஒழியாமல் செய்யும் அர்ப்பணிப்பும் தமிழ் மொழிக்கும் திருமுறைகளுக்கும் தக்க வகையில் செய்யும் மரியாதைகளும் வெளியில் கண்டு வணங்கினால் எதிர்வணங்கும் பாங்கும் என இவர்களிடம் ஆச்சர்யப்பட ஏராளமான விஷயம் இருக்கிறது எங்களுக்கு

நாங்கள் *தீட்சிதர்களை பற்றி பேசி மகிழும் நேரங்களில் கண்டு பிடித்த விஷயம் ஒன்று உள்ளது!! அதுதான் “வயர்கூடை”, சபைக்கு அவர்கள் வரும்போது பெரும்பாலும் நைவேத்யங்கள் பூசைப்பொருட்களுடன் வருவார்கள், இப்படியெதுவும் இல்லாத தீட்சிதர் நிச்சயமாக ஒரு வயர்கூடயை வைத்திருப்பார்*

போகும்போது அதில் எதும் கொண்டு செல்வதையும் நாங்கள் கண்டிலோம் ஆயினும அவர்கள் கையில் வயர்கூடை வைத்திருப்பதை நாங்கள் பார்த்து இரசிப்போம் சிரிப்போம்

இந்த ஓவியத்தில் சைக்கிளில் அந்த வயர்கூடை மாட்டியிருப்பதை கண்டின்புறலாம்!!
மேலும் தீட்சிதர் வீட்டு பெண்களின் மங்கலகரமான அணியலங்காரங்கள் சாட்சாத் சிவகாமசுந்தரியை நினைவூட்டும், தமிழ் நாட்டில் பெண்களிடையை நிலவி வந்த மஞ்சள் பூசுதல் குஞ்சம் வைத்து சடை பின்னுதல் நெற்றி நிறைய குங்குமம் வைத்தல்  போன்ற வழக்கங்கள் எல்லாம் ஒருகாலத்தில் இருந்தது ஆனால் தற்போதும் இதனை தவறாமல் கடைபிடிக்கும் தெய்வீகமான பெண்களான இவர்கள் நிச்சயம் சந்தேகத்திற்கு இடமின்றி வணங்கத்தக்கவர்கள்,

அந்த குஞ்சம் வைத்த சடையினை இங்கு முன்னிட்டு காட்டியுள்ளார் அன்பு தம்பி

பின்னால் உள்ள நடராஜா பூக்கடை ஆலய கோபுரத்தின் வேலைபாடுகள் எல்லாம் அற்புதம்

தமிழக கோயில் கோபுரங்கள் அனைத்திலும் இல்லாத சிறப்பு தில்லை கோபுரங்கள் நான்கிலும் உண்டு கீழிருந்து எழும்பியுள்ள கோபுரத்தின் உச்சி கூடு ஓராள் இடைவெளிக்கு உள்வாங்கியது போல இருந்து அதற்கு மேல் குடை போல விரிந்திருக்கும்  இதனை படத்தில் அன்பு அழகாகக் காட்டியுள்ளார்

கண்டும் சிந்தித்தும் இன்புற இந்த ஓவியத்தில் ஏராளமான செய்திகள் பொதிந்துள்ளன.
ஏன்  கூத்தபிரானே பொதிந்துள்ளார் என்றாலும் மிகையில்லை

திருச்சிற்றம்பலம்.


கருவூர் திருவிசைப்பா

ஒன்பதாம் திருமுறை

குறிப்பு: ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள அதிகமான பதிகங்கள் கருவூர் தேவர் அருளியதாம்

பத்து திருவிசைப்பா பாடல்பெற்ற தலங்கள் இவர்தம் இசைப்பாக்களை பெற்றுள்ளன, *சித்தபுருசரான இவர் கயகல்பம் உண்டவராக தன்னை தம் பாடல்களில் குறிக்கிறார்*

தில்லை கோயில் மீது இவர் பாடிய பதிகத்தின் முதல் பாடல் இது

பண்: புறநீர்மை

பாடல்கள்

கணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக்கு அறையணற் கட்செவிப் பகுவாய் பணம்விரி துத்திப்பொறி கொள்வெள் எயிற்றுப்
பாம்பணி பரமர்தங் கோயில் மணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பின் மழைதவழ் வளரிளங் கமுகந்திணர் நிரை அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம்பலமே.

பொருள்

கூட்டமாக விரிந்த தலைகளையும் அத்தலைகளின் கண் சிவந்த இரத்தினங்களையும் பிளவுபட்ட நாக்குக்களையும் விடக்கறை பொருந்திய வாயினையும், கண்ணொடு பொருந்தி நிற்கும் காதினையும், பிளந்த வாய்களையும் படத்தின்கண் பொருந்திய புள்ளிகளையும், வெள்ளிய பற்களையும் உடைய பாம்புகளை அணி கலன்களாக அணிந்த மேம்பட்ட சிவபெருமானுடைய கோயில், நறுமணம் கமழும் ஒட்டுமாமரச் சோலைகளையும், தம் உச்சியில் மேகங்கள் தவழுமாறு உயர்ந்த பாக்கு மரங்களின் உச்சியில் வரிசை யாகத் தோன்றும் பூங்கொத்துக்களையும் உடைய பெரும்பற்றப் புலியூர் என்ற திருப்பதிக்கண் அமைந்த திருச்சிற்றம்பலமாகும்.

சற்குருநாதர் குரலில் தவறாமல் கேட்டின்புறுங்கள்🙏🏻😊

திருச்சிற்றம்பலம்.

Please rate this

16 ஆவது சிவபூசை மாநாடு தமிழகச் சைவநெறிக் கழகம் No ratings yet.

தமிழகச் சைவ நெறிக் கழகத்தின் 16 ஆவது ஆண்டு மாபெரும் சிவபூசை மாநாடு

இடம்: சென்னை பள்ளிக்கரணை, எஸ். எஸ். மகால் திருமண மண்டபம்.

நாள்: சனவரி 27 மற்றும் 28

தீக்கை பெற்ற சிவனடியார்கள் செய்யும் சிவபூசையைக் காணுங்கள்.

புதிய நூல்கள் வெளியீடு

சொற்பொழிவுகள்

28 ஞாயிறு காலை 7:00 மணிக்கு திருமுறைகள், சாத்திரங்கள் உடன், 108 அடியார்கள் சங்கநாதம் மற்றும் கயிலாய வாத்தியங்கள் முழங்க, கோலாட்டத்துடன் சிவனடியார்கள் புடைசூழ மாபெரும் சைவ எழுச்சி வீதி உலா நடைபெறும்.

தமிழகம் எங்குமிருந்து சிவனடியார்கள், சிவதொண்டர்கள், சிவநேசர்கள், ஆன்மீகப் பெரியோர்கள், சைவ பெருமக்கள் வருக தர இருக்கிறார்கள்.

அனைவரும் வருக வருக !!!

நிகழ்வுகள்:

அழைப்பிதழ்:

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

 

Please rate this

இறைவன் யார் ? நாம் யாரை வழிபட வேண்டும் ? 4.38/5 (8)

திருச்சிற்றம்பலம்.

 

இறைவன் யார் ? நாம் யாரை வழிபாடு செய்யவேண்டும் ?

சமூக ஊடகங்களில் திகழும் பல்வேறு குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியும், உள்ளதை உள்ளவாறு தெளிவுபடுத்தவும் முயலும் பதிவு இது.

ஆளுடையபிள்ளை திருஞானசம்பந்தர் பாதமலரை என் சென்னியின் மேல் வைத்து வணங்குகிறேன்.

அறுபத்து மூன்று நாயன்மார்களின் பாதமலர்களை என் சென்னியின் மேல் வைத்து வணங்குகிறேன்.

மெய்கண்ட சாத்திரங்கள் கொடுத்தருளிய மெய்கண்டார் திருவடித் தாமரைகளை என் சென்னியின் மேல் வைத்து வணங்குகிறேன்.

நாம் யார், இறைவன் யார், நமக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு என்ன, நாம் யாரை வணங்க வேண்டும் என்பதை தெளிவுற அறிவதற்கு முன்னர், சில வார்த்தைகளை தெளிவு பெற அறிந்து கொள்வது அவசியம்.

 

வணங்குதல் என்றால் என்ன ?

வணக்கம் என்ற சொல் தமிழில் பல பொருளைத் தரும் சொல்லாக விளங்குகிறது. பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்றார் போல் அது வேறு வேறு பொருளைத் தரும். இது வணங்குதல், தொழுதல், போற்றுதல், வாழ்த்துதல், வரவேற்றல், அன்பொழுகல், நன்றி உரைத்தல் என்று பல்வேறு பொருளைத் தருகிறது. ஒரு விருந்தினர் நம் வீட்டிற்கு வரும் போது, அவருக்கு வணக்கம் சொல்கிறோம். அது அவரை வரவேற்பதற்கு. இங்கு வணக்கம் வரவேற்பைக் குறிக்கிறது. ஒருவர் வீட்டில் விருந்து சாப்பிட்டு கிளம்பும் போது வணக்கம் சொல்கிறோம். அது நன்றியைத் தெரிவிக்கிறது. கோவிலில் கடவுளை வணங்குகிறோம். அது தொழுதலைக் குறிக்கிது. தெருவில் செல்லும் போது நண்பரைப் பார்க்கும் போது வணக்கம் சொல்கிறோம். அது வாழ்த்துதலைக் குறிக்கிறது. ஆகவே, வணங்குகிறோம் என்ற சொல் எந்த இடத்தில் எந்த அர்த்தம் கொடுக்கிறது என்பதை தெளிவாக உணர வேண்டும்.

 

வழிபாடு செய்தல் என்றால் என்ன ?

வழிபாடு என்பது இறைவனைத் தொழுவதாகும். இறைவனைப் பூசிப்பதாகும். இறைவனை எப்படித் தொழ வேண்டும் என்றும் திருக்கோவில் வழிபாடு எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் நம் ஆகமங்கங்கள் உரைக்கின்றன. இறைவனை வழிபடுவதற்குப் பல்வேறு நியம நியதிகள் வகுக்கப்பட்டுள்ளது. பல்வேறு குலத்தினர் பல்வேறு வகையான வழிபாடுகளைச் செய்து வருகிறார்கள். வழிபாடு இறைவனுக்கு மட்டுமே செய்யப்படுகிறது. செய்யப்பட வேண்டும்.

 

இறைவன் எத்தனை பேர் ? யாரெல்லாம் அவர்கள் ?

இறைவன் ஒருவனே என்று சைவ சமயம் தெளிவாக விளக்குகிறது. அவன் பாலுக்கு அப்பாற்பட்டவனாதலால், அவனைப் பரம்பொருள் எனக் காட்டப்படுகிறது. ஓர் உருவும், ஓர் நாமம் இல்லாத அந்த பரம்பொருளுக்கு நாம் பல்வேறு பெயர்களையும் உருவங்களையும் நாமே கொடுத்து வழிபடுகிறோம். பொதுவான அந்த பரம்பொருளை நாம் சிவபெருமான் என்ற பெயரைக் கொடுத்து நாம் மனதில் எண்ணுவதற்கு எளிதாக அதற்கு ஒரு இயல்பான உருவத்தையும் கொடுத்துக் கொண்டுள்ளோம். உருவமில்லாத அந்த பரம்பொருள் உயிர்களுக்கு உதவுவதற்கு வேண்டி, உயிர்களின் பக்குவ நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு உருவத்தைத் தானே எடுத்து தன்னை உயிர்களுக்கு அடையாளப்படுத்திக் காட்டுகிறது. பிறப்பு இறப்பு இல்லாத அந்த பரம்பொருள் எல்லையற்ற சக்தியைக் கொண்டது. அந்த சக்தியைக் கொண்டு தான் பல்வேறு செயல்களைச் செய்கிறது. நாம் எளிதாக புரிவதற்கு வேண்டி, அந்த சக்திக்கு மனித பெண் உருவம் கொடுத்து பார்வதி, மீனாட்சி, காமாட்சி என்றெல்லாம் பல்வேறு பெயர்கள் சூட்டி மகிழ்ந்து கொள்கிறோம். சில காரணங்களுக்காக சிவபெருமானிடமிருந்து வெளிப்பட்ட சக்தியை விநாயகர் என்றும், முருகப் பெருமான் என்றும், இவர்கள் சிவசக்திக்கு குழந்தைகள் போன்றும் கற்பனையான வடிவம் கொடுத்தும் வைத்துள்ளோம். இதனால், நாம் எளிதாக மனதில் இந்த உருவங்களைக் கொண்டு வழிபாடு செய்ய முடியும். ஆகவே, சிவபிரான், பராசக்தி, முருகன், விநாயகர் என்பது ஒரே பரம்பொருளைக் குறிக்கிறது. இந்த பரம்பொருளைத் தான் பதி என்று சைவ சிந்தாந்தம் குறிப்பிடுகிறது. இது அநாதியானது. அதாவது, பிறப்பு, இறப்பு, அழிவு என்று எதுவும் இல்லாதது.

 

நாமெல்லாம் யார் ?

அநாதியான இறைவனைப் போல, அநாதியாக இன்னும் இரண்டு பொருட்கள் உள்ளது. அது தான் எண்ணற்ற உருவமில்லாத உயிர்களும், தளை அல்லது பாசம் எனப்படும் அருவப் பொருளும் ஆகும். உயிர்களின் இயல்பு, அறிவு, இச்சை (விருப்பப்படுதல்), செயல் இந்த மூன்றும். உயிர்களுக்கு அறிவு உண்டு. அந்த அறிவு செயல்படாத வண்ணம், தளையாகிய ஆணவ மலம் மூடியிருக்கிறது. (ட்யூப் டேப்லட்டுக்குள் மருந்து இருப்பது போல்). உயிர்களின் அறிவை செயல்பட வைக்கவே, இறைவன் கருணை கொண்டு, அதற்கு தன்னுடைய மாயை என்ற சக்தியிலிருந்து இந்து உலகையும் பிரபஞ்சத்தையும் படைக்கிறான். (ஒரு நுண்ணிய விதைக்குள்ளிருந்து பெரிய ஆலமரம் முளைத்து வருவது போல், மாயை என்று அருவ நுண்பொருளில் இருந்து இந்த பிரபஞ்சம் விரிந்து வளர்ந்து வருகிறது.) நம்மை பிறப்பு இறப்புக்கு உட்படுத்தி நம் அறிவை விளங்கச் செய்து நம்மைப் பக்குவப்படுத்துகிறான் இறைவன். பக்குவப்பட்ட உயிர்களுக்கு வீடுபேறு (முக்தி) அளித்து தடையற்ற பேரின்பத்தை வழங்குகிறான். இந்த அறிவு விளங்க விளங்க, நாம் இறைவனை அடையாளங் கொண்டு அவனுக்கு நன்றி உரைத்து, அவனைப் போற்றி வழிபட வேண்டும்.

 

திருமால், பிரம்மன், இந்திரன், அக்னி இவர்கள் எல்லாம் யார் ?

படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களை இறைவன் செய்து, இந்த பிரபஞ்சத்தை இயக்கி, உயிர்களை பிறப்பு இறப்புக்கு உட்படுத்தி அறிவை விளங்க வைக்கிறான். இந்த தொழில்கள் அனைத்தையும் அவனே செய்ய வல்லவனாயினும், உயிர்களுக்கு அறிவு விளங்குதற் பொருட்டு மேன்மை பெற்ற உயிர்களுக்கு இந்த தொழிலைச் செய்யும் தகுதியை வழங்கி அவற்றை உய்வடையச் செய்கிறான். திருமால், பிரம்மன் போன்ற அனைத்தும் இறைவன் கொடுத்துள்ள பதவியாகும். மேன்மை பெற்ற உயிர்கள் குறிப்பிட்ட காலம் வரை இந்த பதவி வகிக்கும்.

 

நாம் யாரை வணங்க வேண்டும் ?  யாரை வழிபாடு செய்ய வேண்டும் ?

வணங்குதல் என்பது நாம் பயன்படுத்தும் இடத்தைப் பொறுத்து அதன் பொருள் மாறுபடும் என்பதை முன்னமே பார்த்தோம். வழிபாடு என்பது இறைவனைப் போற்றித் துதிப்பது. நாம் அனைவரும் வழிபாடு செய்ய வேண்டியது அந்த ஒரேயொரு பரம்பொருளை மட்டும் தான். வேறு எவருக்கும் வழிபாடு செய்யப்படும் தகுதி கிடையாது. யாரை வேண்டுமானாலும் வணங்கலாம். அதாவது மரியாதை நிமித்தமாக, வரவேற்கும் நிமித்தமாக, நன்றி சொல்லும் நிமித்தமாக, வாழ்த்தும் நிமித்தமாக என்று இத்தனை பொருளிலும் நாம் யாரையும் வணங்கலாம். ஆனால் தொழுதல் மற்றும் வழிபாடு இறைவனாகிய பரம்பொருள் ஒருவனுக்கு மட்டுமே. நம் தாய் தந்தையர், நம் குலதெய்வம், நம் ஊரைக் காக்கும் சாமி, நம் ஆசிரியர், குரு என்று எவரையும் வணங்கிக் கொள்ளலாம்.

 

இதில் இன்னுமொரு பக்குவ நிலை உள்ளது. இது மிகவும் அளப்பரியது, நுட்பமானது. உயிர்களாகிய நமக்கு சிற்றறிவு சொந்தமாக இருந்தாலும், இறைவனாகிய பரம்பொருளின் உதவியினாலேயே நமக்கு உடல் கொடுக்கப்பட்டு, அதற்கு இயக்கமும் கொடுக்கப்பட்டு, அதனால் வரும் அறிவையும் நமக்கு இறைவனே உணர்த்தி நம்மை இயக்குகிறான். அதாவது, அந்த பரம்பொருள், நம்மோடு ஒன்றாகவும், உடனாகவும் நம் உயிரில் கலந்து இருக்கிறான். நம் உயிரில் ஒட்டிக்கொண்டிருக்கும் உடலனாது இறைவன் நமக்கு அளித்த கொடை. அல்லது அருள். ஒரு பெண் அழகாக இருக்கிறாள் என்றால், அது அந்த உயிர் செய்த வினைகளின் காரணமாக, இறைவன் அந்த உயிருக்கு அளித்த அருள். இதனாலேயே இறந்து போன எலும்பிலிருந்து பூம்பாவையை எழுப்பிய திருஞானசம்பந்தருக்கு பூம்பாவை இறைவனின் அருளாகத் தோன்றினாள். ஆகையாலே, அவளை மணக்கவும் மறுத்தார். இறைவனாகிய பரம்பொருள் எங்கும் வியாபித்திருப்பதால், வைகை ஆற்றில் கிடந்த உருண்டைக் கற்கள் அனைத்தும் திருஞானசம்பந்தருக்கு சிவலிங்கத் திருமேனியாய்த் தோன்றியது. அவர் ஆற்றைக் கடக்காமலேயே நின்று பதிகம் பாடினார். மரத்தை மறைத்தது மாமத யானை, பரத்தின் மறைந்தது பார்முதல் பூதம் என்கிறார் திருமூலர்பிரான். அருவமான உயிர்களும், மூன்று மலங்களை உள்ளடக்கிய பாசமும் தவிர, மற்ற யாவும் சிவபிரானின் திருவருளால் உருவானது. அவை யாவும் சிவனின் திருவருள். அந்த ஞானிகளில் பக்குவ கண்களுக்கு அவை அனைத்தும் சிவபிரானின் அருளாகவும் சிவபிரானாகவுமே தோன்றும். அவர்கள் எங்கும் வியாபித்திருக்கும் சிவபிரானையே வணங்கித் தொழுவார்கள். சிவனடியார்களின் திருவேடத்தையே சிவனாக எண்ணி வணங்குவர்.

 

இனி வரும் நாட்களில் நாம் செய்ய வேண்டியது யாது ?

  1. இல்லறவாசிகள் இல்லற கடமைகள் அனைத்தும் சரியாக செய்ய வேண்டும்.
  2. தினமும் திருமுறை அறிந்துணர்ந்து ஓத வேண்டும்.
  3. திருமுறை மற்றும் சாத்திர நூற்களைக் கற்க வேண்டும்.
  4. சிவஞானத்தைத் தேட வேண்டும். தேடத் தேடஅது பிடிபடும். தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே என்பது திருமூலர் வாக்கு. சிவ சொற்பொழிவுகள் கேட்க வேண்டும். திருவிழாக்கள் பார்க்க வேண்டும்.
  5. சிவன் மீதும் சிவனடியார்கள் மீதும் மிகுந்த அன்பு கொள்ள வேண்டும். சிவனடியார்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு, அவர்கள் கூட்டத்திலேயே இருக்க வேண்டும்.
  6. திருக்கோவில்களை சிவனாகவே எண்ணி தினமும் வழிபட வேண்டும்.
  7. சிவனடியார்களின் திருவேடத்தையே சிவனாக எண்ணி வணங்க வேண்டும். நம்மால் இயன்ற தொண்டுகளை, சிவன் கோவிலுக்கும் சிவனடியார்களுக்கும் செய்ய வேண்டும்.
  8. நாம் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு வாழ்ந்து காட்டியவர்கள் நாயன்மார்கள். அவ்வாறு தமது வாழ்கையையே வழிபாடாக இறைவனுக்கு சமர்ப்பித்தவர்கள் நாயன்மார்கள். அவர்களின் வரலாற்றை படித்து அவர்களைப் போலவும் வாழ முயற்சி செய்ய வேண்டும். நம் சமயத்தைப் பாதுகாத்திட வேண்டும்.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

சிறுவர் சமய பாடம் புத்தகம் No ratings yet.

சிறுவர் சமயம் பாடம் புத்தகம்

செய்தி ஆசிரியர்: சிவதிரு சத்தியகுமார்.

கிட்டத்தட்ட 700-800 ஆண்டுகள் அந்நியர்களின் அடாவடித்தனமான போர் மற்றும் ஆளுமைப் பிடியிலிருந்து மீண்டு, நாம் தற்போது தான் 70 ஆண்டுகள் ஆகியுள்ளன. நம்மை நாமே யார் என்று தற்போது தான் உணர்ந்து வரும் தருணம் இது. நம் சமயங்கள் புத்துணர்ச்சி பெற்று ஓங்கி மீண்டும் மலரும் காலம். நாம் நம் சமயங்களை முழுவதுமாக உணர்வது ஒரு புறம் இருந்தாலும், நம் சமய புதையலை அடுத்த தலைமுறைக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே எடுத்துச் செல்ல வைப்பது நம் தலையாய கடமையிலும் முதல் கடமையாகும். ஆகவே, அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக, அவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டி அவர்களுக்குள் நம் சமயத்தை ஆழமாக விதைப்பது இன்றியமையாதது. அந்த வழியில், அவர்களுக்கான சமய பாடம் புத்தகம் (இலங்கை வெளியீடு) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் குழந்தைகளுக்குக் கொடுத்து, நீங்களும் கூடவே உட்கார்ந்து அவர்களோடு சேர்ந்து இன்பமாக படித்தும் ஆழ பதியுமாறு செய்யுங்கள்.

சிறுவர் சைவ பாடம் – புத்தகம்

ஒன்றாம் வகுப்பு

இரண்டாம் வகுப்பு

மூன்றாம் வகுப்பு

நான்காம் வகுப்பு

ஐந்தாம் வகுப்பு

ஆறாம் வகுப்பு

எட்டாம் வகுப்பு

ஒன்பதாம் வகுப்பு

பத்தாம் வகுப்பு

பதினோறாம் வகுப்பு

இந்த சிறுவர் பாட புத்தகங்கள் நம் வலைதளத்தின் பாடசாலை பகுதியில் சேமிக்கப் பட்டுள்ளது.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

Please rate this

சைவ முழக்கம் எவை ? உலகெங்கும் எடுத்துச் செல்லுங்கள் 5/5 (2)

சைவ முழக்கங்கள் எவை ?

உலகின் உயர்ந்த சமயமாம் சைவ சமயத்தை அனைவருக்கும் எடுத்துச் செல்வது நம் ஒவ்வொருவர் கடமையாகும். நம் எண்ணங்களே செயல்களாக உருவெடுக்கும். ஆகையால், தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களையே சிந்தித்து மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்வது மிக அவசியம்.

சிவம் என்றாலே பேரானந்தம். அந்த சிவனையே சிந்தித்து இருக்கும் போது நாமும் சிவத்தோடு ஒன்றி பேரானந்தம் காண்போம். அவ்வாறாக, நாம் காணும் இடமெல்லாம் சிவம் தெரிந்தால், நம்மை விட பாக்கியசாலி யார் உளர் ? சைவ முழக்கங்களையும், சைவ சிந்தனைகளையும் நாம் காணும் இடம் எங்கும் வியாபித்திருந்தால், நம் சிந்தனைகளை அது நெறிப்படுத்திக் கொண்டே இருக்கும் அல்லவா ?

நம் இல்லங்கள், பொது இடங்கள், கோவில்கள், கார், மோட்டார் வாகனங்களின் முன் பின் பக்கங்கள் என்று சைவ முழக்கங்களை நாம் எழுதி வைக்க, அது நம்மைத் தொடர்ந்து நெறிப்படுத்திக் கொண்டே இருக்கும். மேலும், நமக்கு மட்டுமின்றி காண்போர் யாவருக்கும் அது அதே சிந்தனை அனுபவத்தைத் தந்து பல்கிப் பெருகும். அவ்வாறாக எழுதி வைக்க சில வாசகங்கள் இங்கே. எழுதுங்கள், ஒட்டுங்கள், படியுங்கள், சிந்தியுங்கள், அனுபவியுங்கள், இன்பமாய் இருங்கள். திருச்சிற்றம்பலம்.

சிவனொடு ஒப்ப தெய்வம் தேடினும் இல்லை.

திருமுறை அறிவோம். வாழ்வில் திருப்பத்தைக் காண்போம்.

திருமுறையே வாழ்வியல் வெளிச்சம்.

திருமுறையே வாழ்வின் நெறிமுறை.

திருமுறையே சைவ நெறிக் கருவூலம்.

63 நாயன்மார்களே நமது வாழ்வின் வழிகாட்டி

நால்வர் நெறியே நமது கொள்கை.

இறைவன் ஒருவன் ஒருவனே. அவனே சிவபெருமான்.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியே சிவம்.

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்.

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.

அரன் நாமமே சூழ்க, வையகமும் துயர் தீர்கவே.

சிவசிவ என்றிட தீவினை மாளும்

நாதன் நாமம் நமசிவாயவே.

ஆளாவது எந்நாளோ திருக்காளத்தி அப்பனுக்கே

63 நாயன்மார்கள் மலரடிகள் போற்றி போற்றி

நால்வர் மலரடிகள் போற்றி போற்றி

சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீசுவரர் மலரடிகள் போற்றி போற்றி

திருக்கோவில் தூய்மை செய்வோம். அகக்கோவில் தூய்மை அடையும்.

சைவ சமயமே உலகின் சமயம்.

தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

கங்காளன் பூசும் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வீரே.

மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்.

பன்னிரு திருமுறையே தமிழ் வேதம்.

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே.

பிறப்பு இறப்பு முதலும் முடிவும் இல்லாத சிவபெருமான் ஒருவனே இறைவன்.

சிவாயநம என்பாரை அபாயம் என்றும் நெருங்காது.

இறைவன் உயிர்களோடு ஒன்றாய் உடனாய் வேறாய் இருக்கிறான்.

மானுடப் பிறவி சிவபெருமானைத் தொழுவதற்கே.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் சிவபெருமான்

சிவாலயங்களை சேவிப்போம். செல்வம் வளரும் குறையாது.

அரகர நமப் பார்வதி பதையே 

    அரகர மகாதேவ நமக

தென்னாடுடைய சிவனே போற்றி!

    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி!     

    பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி!

பராய்த்துறை மேவிய பரனே போற்றி!

    சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி!

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!    

    சீரார் திருவையாறா போற்றி!

தென்தில்லை மன்றினுள் ஆடிபோற்றி!  

    இன்றெனக்கு ஆரமுது ஆனாய் போற்றி!

குவளைக் கண்ணி கூறன் காண்க!

    அவளுந் தானும் உடனே காண்க!

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

    கண்ணாரமுதக் கடலே போற்றி!

காவாய் கனகத் திரளே போற்றி

    கயிலை மலையானே போற்றி போற்றி!

சிவசிவ சிவசிவ சிவசிவ

படிப்போம் – தேவாரம் திருவாசகம் திருமந்திரம் திருக்குறள் திருமுறை

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் திருக்கூட்டம்.

Please rate this

சிவபெருமானைக் கொண்டாடுவது எப்படி ? 4.33/5 (3)

சிவபெருமானைக் கொண்டாடுவது எப்படி ?

சைவ சமயத்தின் அடிப்படை செய்திகளை யாவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், அதிலிருந்து சில செய்திகளை எடுத்துரைத்து அதை ஆழமாக படிக்க செய்வதற்காக சில காணொளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அனைவரும் கண்டு களித்து, உற்றார் உறவினர், நண்பர்கள் சுற்றத்தார் என அனைவருக்கும் பகிர்ந்து உரையாடுங்கள். திருச்சிற்றம்பலம்.

அளப்பரிய ஞான பெட்டகமாம் சைவ சமயத்தை யாவரும் அறிவோம்.

சிவபெருமானைக் கொண்டாடுவது எப்படி ?

சிவனைக் கொண்டாடுவோம்.  #2

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

அமைதியாகவும் இன்பமாகவும் வாழ்வது எப்படி ? அச்சிட்டு வழங்க துண்டறிக்கை 4.83/5 (6)

அமைதியாகவும் இன்பமாகவும் வாழ்வது எப்படி ? அனைவருக்கும் அச்சிட்டு வழங்க ஏதுவான ஒரு பக்க துண்டறிக்கை

இங்கு பதிவிறக்கம் செய்க => சைவ சமயம் அடிப்படை துண்டறிக்கை

அமைதியாகவும் இன்பமாகவும் வாழ்வது எப்படி ?

 இறைவன் ஒருவன் ஒருவனே என்று மிகத் தெளிவாக சைவ சமயம் எடுத்துரைக்கிறது. அந்த ஒருவனுக்கு நாம் சூட்டிய பெயர் மங்களம் பொருந்தும் சிவம். பிறப்பு, இறப்பு, ஆதி, அந்தம், விகாரம், ஆண், பெண் என்று ஏதும் இல்லாத இறைவன், சிவபெருமான் ஒருவன் ஒருவனே. மற்ற யாவரும் பிறப்பர், இறப்பர், விகாரமடைவர். அந்த சிவன் 8 குணங்களை உடையவர். யாரையும் சாராமல் தனித்து இயங்குதல், தூய உடம்பினனாதல், மலங்களின் (குற்றங்கள்) நீங்கி நிற்றல், தானே அறியும் அறிவைப் பெற்றிருத்தல், எல்லா இடமும், எல்லா காலமும் ஒருங்கே அறியும் பேரறிவுடைமை, எல்லையற்ற ஆற்றல், கருணை, இன்பம் ஆகிய 8 குணங்களும் உடையவன். தனக்கென்று எந்த தேவையும் இல்லாத சிவம், உயிர்கள் படும் துன்பத்தை அறிந்து தன் நிலையிலிருந்து கீழிறங்கி வந்து அருவம், அருவுருவம் (லிங்கம்), உருவம் ஆகிய உருவங்களை எடுத்து உயிர்களுக்காக அருள் புரிகிறான். சிவபிரானுடைய ஆற்றலாகிய சக்தியை நாம் பராசக்தியாக பெண் உருவம் கொடுத்து வழிபடுகிறோம். சிவபெருமானின் சக்தியை விநாயகர், முருகராகவும் உருவகித்து சிவகுடும்பமாக வழிபடுகிறோம். விநாயகர், முருகர், பராசக்தி இவர்கள் வேறு சிவபெருமான் வேறு அல்ல. அனைவரும் சிவபெருமானின் வடிவமே. ஆணவ மலம் என்பது அறிவை மறைக்கக்கூடிய கண்ணுக்குத் தெரியாத ஒரு அருவப் பொருள். இந்த ஆணவம் உயிர்களின் அறிவை மறைத்து, உயிர்களுக்கு அறியாமையைக் கொடுத்து உயிர்களைத் துன்புறச் செய்கிறது. உயிர்களின் அத்தனை துன்பங்களுக்கும் இந்த அறியாமை தான் காரணம். இதை நீக்கவே இறைவன், மாயை என்ற தன் சக்தியிலிருந்து இந்த உலகத்தை தோற்றுவித்து படைத்தல், காத்தல், ஒடுக்குதல் (அழித்தல்), மறைத்தல், அருளல் ஆகிய 5 தொழில்களைச் செய்கிறான். இதனால் உயிர்கள் அறிவு பெற்று, ஆணவ மலத்திடமிருந்து விலகி, இறைவனை உணர்ந்து முக்தி பெற்று பேரின்பம் அடைகின்றன. இறைவன்(பதி), உயிர்கள் (பசு), சடப்பொருட்களாகிய தளை (பாசம்), இந்த மூன்றும் அழிக்கமுடியாத என்றும் உள்ள நித்தியப் பொருட்கள். சிவனும் சைவ சமயமும் அநாதியானது. அதாவது, தோற்றமும் முடிவும் இல்லாதது. சிவவழிபாடு எக்காலத்தும் இருந்தது, இருக்கிறது, இருக்கும். சிவனை வழிபடும் அடியார்கள் எக்காலத்தும் இருப்பர். சிவவழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதை வேதங்களும் ஆகமங்களுமாக இறைவனே நமக்கு அருளியுள்ளான். ரிக், யசூர், சாமம், அதர்வணமாக, வடமொழி வேதங்கள் 4, தற்போது நம்மிடம் உள்ளது. அதற்கும் முன்னால், அறம், பொருள், இன்பம், வீடு என்று 4 தமிழ்மொழி வேதங்கள் நம்மிடம் இந்ததாக குறிப்புகள் உள்ளன. சிவ ஆகமங்கள் 28. வேத, சிவஆகமங்களில் உள்ள அதே கருத்தை நம் முன்னோர்கள் தமிழில் பன்னிரு திருமுறைகளில் பதிவிட்டுள்ளனர். தோத்திர நூல்களாகிய பன்னிரு திருமுறைகளிலும் வேத ஆகமங்களிலும் உள்ள கருத்துக்களைப் பின்னர் 14 சாத்திர நூல்களில் மெய்கண்ட சாத்திரமாக தொகுத்தனர். பன்னிரு திருமுறையும், 14 சாத்திரமும் நாம் யாவரும் தினமும் படித்து ஓதி வழிபடக்கூடிய நூல்களாகும். இந்த நூல்களையும் அருளி சைவ சமயத்தை மீட்டெடுத்த சமய குரவர்களாகிய (குருமார்கள்) திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோரும், சந்தான குரவர்களான மெய்கண்டார், அருநந்திசிவம், மறைஞானசம்பந்தர் மற்றும் உமாபதிசிவம் ஆகியோரும் நம் சமயத்திற்கு பங்களித்திருப்பது சிவபெருமானுடைய திருவருள். சைவநெறிப்படி வாழ்ந்து காட்டி 63 நாயன்மார்களும் நமக்கு வாழ்வின் முன்னோடிகளாக உள்ளனர். நாம் அனைவரும், 63 நாயன்மார்களின் வரலாற்றைப் படித்து, நம் குழந்தைகளுக்கும் அதை எடுத்துக்கூறி, திருமுறைகளை தினமும் ஓதி அந்த பிறப்பு இறப்பில்லாத சிவபெருமானைத் தினமும் விளக்கேற்றி வீட்டிலும், திருக்கோவில் வழிபாடு செய்தும் போற்றுவோம். யாவரும் இறைவனே காட்டிய இந்த நன்னெறியில் நிற்க, வான்மழை வளாது பெய்தலும், அனைத்து தீவினைகள் அகன்றும், எல்லா நன்மைகளும் பெற்று, நாமும், நாடும், மக்கள் அனைவரும் இன்பமாகவும் அமைதியாகவும் வாழ்வர்.

http://www.saivasamayam.in வலைதளத்தில் சைவ சமயம் பற்றிய அடிப்படை செய்திகளும், படங்களும், காணொளிகளும் யாவரும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு பகிரப் பட்டுள்ளது. அனைவரும் பயன்பெற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள், முகநூல், வாட்சப் குழுக்கள் ஆகியவற்றில் பகிர்ந்தும் நம் பாரத பூமியில் மீண்டும் ஆன்மீகம் தழைத்தோங்க பங்களிக்குமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

திருச்சிற்றம்பலம்.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் திருக்கூட்டம், சென்னை.

இங்கு பதிவிறக்கம் செய்க =>  சைவ சமயம் அடிப்படை துண்டறிக்கை

Please rate this

சைவ வணிகர்கள் இன்று செய்ய வேண்டியது யாது ? 5/5 (3)

சைவ வணிகர்கள் இன்று செய்ய வேண்டியது யாது ?

1. உங்கள் கடைகளிலும் அலுவலகங்களிலும் திருநீறும் குங்குமமும் எப்போதும் ஒரு பெரிய சம்புடத்தில் கல்லா பெட்டி அருகேயோ, வரவேற்பறை மேசை மீதோ (Reception Table) வைத்திருங்கள். 7, 5 நட்சத்திர ஓட்டல்களிலேயே வைத்திருக்கிறார்கள். நீறு பூசும் வாடிக்கையாளர்களை நீறு எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். இன்று பல்வேறு ஓட்டல்களில் இந்த முறை ஏற்கனவே உள்ளது. இது போல் உங்கள் அலுவலகங்களிலும் வைத்துவிடுங்கள். வைக்க முயற்சி மேற்கொள்ளுங்கள். நீங்கள் அமர்ந்து தொழில் செய்யும் மேசையிலும் திருநீறும் குங்குமும் வைத்துக் கொள்ளுங்கள். பலரை அவ்வப்போது அணிய அன்போடு கூறுங்கள்.

2. உங்கள் கடைகளின் பெயரைக் கட்டாயமாக தமிழில் மிகப் பெரியதாகவும், ஆங்கிலத்தை தவிர்க்க முடியாவிட்டால், ஆங்கிலத்தில் சிறியதாகவும் எழுதி வையுங்கள்.

3. கடைகளுக்குப் பெயர் சூட்டும் போது, நம் பாரம்பரிய பெயர்களைத் தேர்ந்தெடுத்து பெயர் சூட்டுங்கள். திருநாவுக்கரசு, மங்கையற்கரசி, திலகவதியார், மணிவாசகர் போன்று 63 நாயன்மார்கள் பெயர்களை எங்கும் எதற்கும் பயன்படுத்துங்கள். என் hard disk பெயர் முதல் பாஸ்வேர்டுகள் வரை நாயன்மார் பெயர்களைப் பயன்படுத்துகிறேன்.
சைவ வணிகர்கள் செய்ய வேண்டியது

4. உங்கள் நிறுவனம் வெளியிடும் பொருட்களில் (products) தெய்வத் தமிழில் பெயரை எழுதியும், திருக்குறள் அல்லது சைவ வாசகங்கள் பொறித்தும் வெளியிடுங்கள். வெளியிட முயற்சி மேற்கொள்ளுங்கள். இன்று இல்லாவிடில் இன்னொரு நாள் அது கட்டாயம் நிறைவேறும்.

5. சைவ சமய அடிப்படை புத்தகங்கள், பஞ்சபுராண பாடல்கள் அடங்கிய சிறு சிறு புத்தகங்களை உங்கள் கடைகளில் வைத்திருந்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுங்கள். ஒரு மாதத்திற்கு 100 புத்தகம் இலவசமாக கொடுக்கலாம். நிறைய பொருட்கள் வாங்குபவர்களுக்கு இந்த புத்தகத்தை இலவசமாக கொடுக்கலாம்.

6. கடைகளில் நால்வர் படமும், சைவ வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளும் ஆங்காங்கே ஒட்டி வையுங்கள். கருப்பு பலகை ஒன்று வாங்கி, அதில் தினமும் திருக்குறளும், திருமந்திரம் போன்ற செய்யுள்களும் எழுதி வைக்கலாம். வரும் நாட்கள் வாரங்களில் உங்கள் ஊரில் நடைபெற உள்ள ஆன்மீக நிகழ்வுகள் பற்றிய செய்திகளையும் தவறாமல் எழுதி வையுங்கள். இதைப் பற்றி வாடிக்கையாளர்களிடமும் பேசுங்கள். நீங்கள் பேசுவதை நான்கு பேர் கவனித்து அவர்களுக்கும் போய்ச் சேரும்.

7. கணிணி, கைபேசி போன்ற பொருட்களின் கடைகளில் பணி புரிபவர்கள், கைபேசியை முழுவதுமாக தமிழில் எப்படி பயன்படுத்துவது (Choosing operating language as TAMIL) என்பதை வரும் வாசகர்கள் அனைவரிடமும் விளக்கிக் கூறுங்கள். சைவ சம்பந்த இணைய முகவரிகள், செயலிகள் (app) போன்றவற்றையும் அறிமுகம் செய்து வையுங்கள். வரும் காலங்களில் தமிழும் சைவமும் வாழ, சந்தைக்கு புதிதாக வரும் அனைத்து பொருட்களிலும் தமிழும் சைவமும் இடம்பெற வேண்டும். இது மிகவும் முக்கியமானது. இதற்கான ஒவ்வொரு முயற்சியையும் நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். தூங்கியது போதும். தயங்கியதும் போதும். கேள்வி கேளுங்கள். கேட்டு வாங்குங்கள். தமிழையும் சைவத்திற்கும் உயர்ந்த இடத்தை அளியுங்கள். கேட்காவிட்டால் கிடைக்கவே கிடைக்காது.

8. இன்னும் பல வழிமுறைகளை உங்கள் கடை / அலுவலக அமைப்பிற்கு ஏற்ப, உங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நீங்களே சிந்தித்து, திட்டமிட்டு நடைமுறைப்படுத்துங்கள். அடியவர்களின் குறைகளைப் போக்க சிவபெருமான் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதால், உங்களுக்கு அவரின் திருவருள் எப்போதும் கண்டிப்பாக உண்டு.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

திருமுறை ஓதுவோம். திருமுறை ஓதுவிப்போம்.

Please rate this