ஆங்கிலம் கலவாத தமிழில் பேச திருமுறை திருப்புகழ் படிப்போம். திருமுறை பதிகங்களில் வரும் தமிழ் சொற்களை அறிவோம். 5/5 (2)

பொருள் உணர்ந்து பாடல்கள் படிக்க முதலில் தமிழ் சொற்களின் பொருளை அறிவோம். திருமுறை பதிகங்களில் வரும் தமிழ் சொற்களின் பொருள்

ஆங்கில சொற்களைத் தவிர்த்து தமிழ் சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் நம் தமிழ் பேச்சை வலுவடையச் செய்யலாம். திருமுறைகள் திருப்புகழ் படித்தாலே நன்றாக ஆங்கிலம் கலவாத தமிழில் பேசலாம். திருமுறைகளில் உள்ள சில சொற்கள் தற்போது வழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது. அவை எல்லாம் அருமையான சொற்கள். திருமுறை பதிகங்களை நன்றாக புரிந்து பொருள் உணர்ந்து படிக்க, முதலில், அவற்றை சீர் பிரித்து சொற்களுக்கு உரிய பொருளை உணர்ந்து படிக்க வேண்டும். அதற்கு உதவியாக இருக்கும் வண்ணம் சில பதிகங்களில் வரும் சொற்களுக்குரிய பொருளை இங்கே காண்போம். தொடர்ந்து திருமுறை படியுங்கள். தமிழ் புலமையும் திருமுறை திருவருளும் வளரும். ஆங்கிலம் கலவாமலும் பேச இயலும்.

எட்டாம் திருமுறை திருவாசகத்தின் முதல் பதிகம் சிவபுராணத்தில் வரும் சில சொற்களுக்குரிய பொருள்.

சொல் பொருள்
சிவபுராணம்
தாள் திருவடி – இறைவன் திருவடியை குறிக்கும்.
கழல் பாதம், திருவடி – இறைவன் திருவடி
கோகழி திருப்பெருந்துறை
குருமணிதன் குருவாகிய மாணிக்கம்
ஆகமம் 28 ஆகமங்கள்
ஏகன் ஒருவன்
பிஞ்ஞகன் 1. கங்கை, பிறை, மலர்கள், விரிசடை என்று தலைக்கோலம் உடையவன். 2.பிஞ்சாகிய அணுவிலும் உறைபவன். பிஞ்சு + அகன். பிரபஞ்சத்திற்கு மூலமான அணுவிலும் சிறிய பொருளிலும் இருப்பவன். இது சிவனையே குறிக்கும்.
சேயோன் சேய்மையில் (தூரத்தில்) இருப்பவன். குறிஞ்சி கடவுளார் சேயோன். இது சிவனை குறிக்கும்.
கோன் அரசன்
சீரார் பெருந்துறை திருப்பெருந்துறை
தேசன் ஒளிமயமானவன், பெரியோன்
கண்ணுதலான் நெற்றிக் கண்ணை உடையவன். (சிவன்)
நுதல் நெற்றி
மிக்காய் கொண்டுள்ள(வன்)
விருகம் மிருகம்
வீடுபேறு மறுபிறவி இல்லாத மோட்ச நிலை.
விடை காளை சிவனின் வாகனம் நந்தி
விடைப்பாகன் காளை வாகனமுடைய சிவன்
நேயம் அன்பு
நிமலன் அழுக்கற்றவன், குற்றமற்றவன்
சீர் செல்வம், நன்மை, அழகு, பெருமை, புகழ், இயல்பு.
இயமானன் யாகம் செய்விப்பவன்
பெம்மான் பெருமான், சிவன்
கன்னல் கரும்பு
தேற்றனே தெளிவானவனே
குரம்பை உடல்

அடுத்து சொற்றுணை வேதியன் என்ற திருநாவுக்கரசர் பெருமான் பாடலில் வரும் சில சொற்கள்.

சொற்றுணை வேதியன் பதிக பாடல்
அருங்கலம் கலம் – மண்பாண்டம், பொருள். அரிய கலம். அணிகலன். பெருமை மிக்கது, சிறப்பானது.
கோ அரசன்
கோட்டமில்லது குற்றமில்லாது – செங்கோல் வளையாமல் ஆட்சி செலுத்துதல்.
அழல் நெருப்பு, தீக்கொழுந்து
நண்ணி நெருங்கி, அணுகி
இரந்து கெஞ்சி பெறுதல், தயவுடன் வேண்டல்
ஆறங்கம் வேதாங்கம் ஆறு – சிட்சை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோபிசிதம், சோதிடம். அரசர்க்குரிய – படை குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறு உறுப்பு.
சலமிலன் சலம் – குற்றம், கோட்டம். சலமிலன் குற்றமற்றவன்
வீடினார் உலகினில் உலக பற்றை விட்டவர்
விழுமிய செழித்த, வளமான, உயர்ந்த
இல்லக விளக்கது வீட்டில் இருக்கும் புற விளக்கு. இல்+அக விளக்கு – இவ்வுடம்பினுள் இருக்கும் அக விளக்கு நமசிவாய, உள்ளத்து இருளைப் போக்கும்.
மாப்பிணை மான் குட்டியை கையில் ஏந்திய பெருமான்

அடுத்து சுந்தரர் பெருமான் அருளிய பித்தா பிறைசூடி பாடலில் சில சொற்கள்

பித்தா பிறை சூடி பெருமானே பாடல்
எத்தான் என்ன ஆனாலும்
வேயார் மூங்கில் காடு
பெற்றம் விடை, காளை
யாதன் அறிவில்லாதவன்
தாதார் பூக்களின் மகரந்தம்
அழல் நெருப்பு, தீக்கொழுந்து

மறையுடையாய் தோலுடையாய் திருஞானசம்பந்தரின் பதிகம்

மறையுடையாய் தோலுடையாய் பதிகம்
வார்சடை நீண்ட சடை
மேயவனே உறைபவனே
கனைத்தெழுந்த அதிர வைத்து எழுந்த, முழங்கிய
நிமலா குற்றமற்ற, தூயவன்
வவ்வேல் வல் + வேல். வல் – சீக்கிரம். வவ்வேல் – சீக்கிரம் எடுக்காதே
அடல் வலிமையோடு, வீரியமிக்க
மலைபுரிந்த மன்னவன் பார்வதியின் தந்தை பர்வதராஜனாகிய இமயமலை ஆண்ட அரசன்; இமவான்
அவிர்சடை ஒளிவீசும் சடை, மின்னும்
பாங்கினல்லார் நல்ல பாங்கை உடையவர், நல்ல குணமுடையவர்
படிமம் தவவேடம்
தூங்கி மனம் ஒன்றி
விருத்தன் முதியவர்
கருத்தனாகி முழு முதற் கடவுளாகி
அருத்தன் பொருளானவன்
நிருத்தம் நடனம்
நிருத்தர் நடனமாடுபவர், நடிப்பவர்
கீதர் பாடுபவர்
மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெண்கனையால் அரி, எரி, காற்று மூன்றையும் கூட்டிய கொடிய அம்பினால்.
அருவரை மலை
வேழம் யானை
கேழல் ஆண் பன்றி
துஞ்சல் தூக்கம், இறப்பு (தன்னை மறந்த நிலை)
சேடர் சேணியர் என்னும் செட்டி இனத்தவர். பண்புடையோர்
மறுகு குறுந்தெரு
பனுவன் நூல்

மந்திரமாவது நீறு என்று திருநீற்றின் பெருமையினை சொல்லும் ஞானசம்பந்தர் தேவாரம்.

மந்திரமாவது நீறு பதிக பாடல்
போதம் ஞானம், அறிவு.
புனல் ஆறு, நீர்.
புன்மை சிறுமை, இழிவு.
தக்கோர் தகுதி வாய்ந்தவர், அறிஞர்.
கவின் அழகு.
சேணம் பொறுப்பான இடம்.
புகலி சொல், கூறு.
பூசுரன் பிராமணன்.
குண்டிகை கமண்டலம், குடுக்கை.
சாக்கியர் சூரிய குல சத்திரியர் வம்சத்தை சேர்ந்தவர்கள்.

இடரினும் தளரினும் எனத் துவங்கும் திருஞானசம்பந்தர் தேவார பாடல்.

இடரினும் தளரினும் பதிக பாடல் – காந்தார பஞ்சமம்
இடரினும் துன்பம். துன்பம் வந்த போதும்.
தளரினும் தளர்ச்சி. தளர்ந்த போதும், மூப்பு வந்த போதும்
கழல் திருவடி
மிடறு கழுத்து
தாழ் இளம் தடம் புனல் தாழ் – தங்குகின்ற. தடம் புனல் – பரவிய புனல் – கங்கை
சென்னி தலை. தலையின் மேல் பகுதி
போழ் தகடு போன்ற மெலிந்த
இளமதி சடையில் இருக்கும் மெல்லிய பிறை
கனல்எரி அனல்புல்கு கையவனே கனன்று எரியும் அனலை கையில் ஏந்தியவனே
அரற்றுதல் ஒலித்தல், ஓசை எழுப்புதல், – இங்கு தொழுதல் என்ற பொருளில் வருகிறது.
கைம்மல்கு மல்கு – அதிகமாதல், நிறைதல். மேருமலையை கையில் ஏந்தி
வரிசிலை கட்டமைந்த வில்லை உடைய
கணை அம்பு
கையது வீழினும் கையில் இருக்கும் பொருட்கள் யாவும் வீழ்ந்து வருந்தும் காலத்தும்
கழிவுறினும் கழிவுப் பொருள் போன்று ஒதுக்கப்பட்ட காலத்திலும்
கொய்யணி கொய்து அணியப் பெறும் மலர்
மையணி மிடறுடை மை போன்ற கருநிற கழுத்து
வெருவுதல் அஞ்சுதல், பயம் வருதல்
அரவு பாம்பு – அரவு, அரவம்.
சந்த வெண்பொடி நறுமணம் கமழும் திருநீறு
விரவி அணுகி
ஒப்புடை ஒருவனை அழகில் ஒப்பில்லாதவன் – மன்மதன்
அழல் தீக்கொழுந்து, நெருப்பு
ஏருடை சிறப்புடைய
ஆரிடர் அருமை + இடர். பொறுத்துக்கொள்ளக்கூடிய இடர்
கடிகமழ் தாமரை மேல் அண்ணலும் தாமரை மேல் வீற்றிருக்கும் பிரமன்
இலைநுனை வேற்படை இலை போன்ற நுனியுடைய திரிசூலம்

திருச்சாழல் எனப்படும் மாணிக்கவாசகரின் திருவாசகம்.

திருச்சாழல் – தில்லையில் அருளியது
அரவம் பாம்பு
துன்னம்பெய் கோவணம் கீளொடு பொருந்த தைத்த கோவணம். அதாவது கிழியாமல் தைத்த கோவணம்.
மன்னுகலை மன்னுக – நிலைபெற்ற
துன்னுபொருள் பொருந்திய பொருளை உடைய
சரடாத் சரடு – கயிறு
காயில் சினம் கொண்டால்
அயனை பிரமன்
அநங்கனை மன்மதன்
அந்தகனை கூற்றுவன், எமன்
வயனங்கண் வசனம், சொல்
நயனங்கள் கண்கள்
எச்சனையுந் வேள்வித் தேவன்
தக்கன் தக்ஷன்
அலரவன் திருமால்
அழலுருவாய் நெருப்புருவாய், சோதியாய்
பிலமுகத்தே பாதாளத்தில்
குரை ஒலி
சதுர் சாமர்த்தியம்

திருமுறை பயில்வோம். தமிழில் பேசுவோம். திருவருள் பெறுவோம்.

திருச்சிற்றம்பலம்.

 

Please rate this

விதியை வெல்வது எப்படி ? இந்த பிறவியில் இது தான் அனுபவிப்பாய் என்று விதித்த பின், அதை வெல்ல முடியுமா? 4.6/5 (15)

விதியை வெல்வது எப்படி ? விதியை வெல்லும் திருமுறை பதிகங்கள்.

கருவாகி உருவாகி குழந்தையாய் குமரி குமரனாய் வாலிபனாய் இல்லத்து அரசனாய் பக்குமுற்று பெரியோனாய் நாம் திருவாகிச் செல்லும் முன்னர் தான், நாம் சந்திக்கும் இன்னல்கள் எத்தனை எத்தனை ? எத்தனை விதமான பிரச்சனைகளை நாம் வாழ் நாள் முழுவதும் துரத்திச் செல்கிறோம் ? வாழ்நாள் முழுவதும் நாம் பிரச்சனைகளைே துரத்திக் கொண்டிருந்தால், நம்மைப் பற்றியும் இறைவனைப் பற்றியும் சிந்திப்பது எப்போது ?

அற்பமான இவ்வுலக இன்ப துன்பங்களைத் துரத்தவா நாம் பிறந்து வந்துள்ளோம் ? அதிசயமான அற்புதமான மனித பிறவியை நாம் அற்பமான பொருளில் வீணாக்கலாமா ? நம்மையும் இறைவனையும் உணர வேண்டுமானால், நாம் நம் துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும். நாம் நிம்மதியான வாழ்கையும் இன்பமான வாழ்கையும் வாழ ஆரம்பித்தால் தான், நாம் இறைவனைப் பற்றி சிந்திப்போம். வழிபாடுகளில் உழன்று இறையனுபவமான பேரின்பத்தை அனுபவிக்க முடியும்.

அவ்வாறாயின், முதல் படியாக, நாம் இவ்வுலகத் துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும். நம் வினைகள் நம்மைத் துரத்தி வந்து துன்பங்கள் கொடுக்கும். முதலில் புதிய வினைகள் செய்யாமல் இருக்க சபதம் ஏற்க வேண்டும். பின்னர், பழைய வினைகளைக் கழிக்க வேண்டும். பழைய வினைகள் நம்மை வாட்டி வதைக்கும். ஊழ் வந்து நம்மைத் துரத்தும். அதிலிருந்து விடுபட்டால் தான் நாம் இறை சிந்தனையில் திளைத்து சிவ புண்ணியங்களைச் சேர்க்க முடியும்.

அப்படி இவ்வுலத் துன்பங்களிலிருந்து விடுபட ஏதாவது வழி அல்லது கருவி இருக்கிறதா அல்லது மந்திரம் இருக்கிறதா ? இருக்கிறது. அது தான் பன்னிரு திருமுறைப் பதிகங்கள். இவை அனைத்தும் மந்திரங்கள். நாம் திருமுறை ஓதும் ஒலியானது நம் துன்பங்களைப் போக்கும் வலிமையுடையது. அருமருந்தானது. நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் நாம் சந்திக்கும் துன்பங்களுக்கு ஒவ்வொரு மருந்து உள்ளது. அந்த மருந்துகளின் பட்டியல் தான் பலன் தரும் திருமுறைப் பதிகங்களாகும்.

இந்த பதிகங்களை உள்ளன்போடு நம்பிக்கையோடு இறைவனின் திருமுன் பாடி வந்தால், அந்த துன்பங்கள் காணாமல் போகும். இது நம் குருமார்களின் வாக்கு. இது வேத வாக்கு. இது இறைவனின் திருவாக்கு. இவ்வாறு நம் துன்பங்களை எளிதாகக் கடக்கும் வழியைக் கற்றுக் கொண்டு விட்டால், நாம் நம் கணிசமான நேரத்தை இறை வழிபாட்டில் செலுத்தி சிவ புண்ணியங்களைச் சேர்க்கலாம் அல்லவா ? இப்பிறவியில் வரும் துன்பத்தை வெல்லும் ரகசியம் அறிந்தால் தானே, அடுத்து பிறப்பு இறப்பு என்னும் மா துக்கமாகிய பெரும் துன்பக் கடலை கடக்கும் வழியைத் தேடிச் செல்வோம் ?

ஆகவே, இவ்வுலகில் இப்பிறப்பில் நமக்கு வரும் துன்பங்களைப் போக்கவும், எளிதாக கடக்கவும் ஓத வேண்டிய பதிகங்களின் பட்டியல் இங்கே உள்ளன. இதை அனைவரும் அறிந்து படித்து ஓதி துன்பங்களிலிருந்து விடுபட்டு சிவபிரானின் வழிபாடுகளில் உங்கள் காலத்தைச் செலவிடுங்கள்.

இந்த பதிகங்கள் அனைத்தும் YouTube இல் பார்த்து படித்தும் கூடவே பாடியும் ஓதலாம். இந்த பட்டியில் உள்ள அனைத்து பதிகங்களைையும் காண:

விதியை வெல்வது எப்படி ? YouTube Playlist

விதியை வெல்வது எப்படி பதிகங்களின் பட்டியல்

திருச்சிற்றம்பலம்.

 

Please rate this

மங்காமல் திருநீறு பூசி மகிழ்வோம். எங்கும் எப்போதும் திருநீறு பூசியே இருப்போம். No ratings yet.

மங்காமல் திருநீறு பூசி மகிழ்வோம்

திருநீறு இறைவன் திருமேனியில் உறைகின்ற உயர்ந்த பொருள். அதை இறைவனிடமிருந்து நாம் அவனுடைய பிரசாதமாக வாங்கி நாம் அதை அணிந்து கொள்கிறோம். எத்தனை உயர்ந்த பிரசாதம் ? அதனால் தான், அதை கீழே சிந்தி விடாமல் வாங்கி நம் நெற்றியில் முழுதுமாக அணிய வேண்டும் என்று நம் குருமார்கள் கூறுகிறார்கள்.

திருநீற்றின் பெருமையை திருஞானசம்பந்தப் பெருமான் மந்திரமாவது நீறு பாடலில் உரைத்திருப்பதை நாம் அறிவோம். திருநீற்றினால் ஆகாதது என்ன இருக்கிறது ?

காலம் காலமாக சைவ சமயத்தோடு இணைந்து வாழ்ந்து வந்த நம் நாடு, தற்போது, உலகமய தாக்கலின் காரணமாகவும் அந்நிய மதங்களின் ஊடுருவல் காரணமாகவும், உலகில் எங்கும் இல்லாத ஒரு புதிய மதசார்பின்மை என்ற வழியில் தடம் மாறிச் செல்கிறது. திருநீறு பூசுவதை பழமையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அவர்கள் யாருக்கும் திருநீற்றின் பெருமையும், சிவபெருமானின் கருணையும் எள்ளளவு கூட தெரியாது. அவற்றில் சிலவற்றைத் தெரிந்த நாம் தான் அவர்கட்கும் புரியுமாறு எடுத்துச் செல்ல வேண்டும். ஆகையால், திருநீறு இறைவன் பிரசாதம் என்பது மட்டுமின்றி அதை அனைவருக்கும் எடுத்துச் செல்லும் நோக்கில் நாம் எப்போதும் திருநீறு அணிந்தே இருப்பது மிக அவசியம். திருநீற்றினை அலுவலகங்களிலும், பள்ளி கல்விக்கூடங்களிலும் அணியுங்கள். இது நம் அடிப்படை உரிமை மட்டுமின்றி அது நிறைந்த நன்மைகளை நமக்கு அளிக்கும். ஆகவே, மங்காமல் திருநீறு எப்போதும் பூசி மகிழ்வோம்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

ஐம்பெரும் புராணம் எனும் பஞ்சபுராணம் நம் திருக்கோவில்களில் தினமும் ஓதுவது மரபாகும். எவை ஐந்து? 4.46/5 (24)

ஐம்பெரும் புராணம் எனும் பஞ்சபுராணம் நம் திருக்கோவில்களில் தினமும் ஓதுவது மரபாகும். எவை ஐந்து?

குரு வணக்கம், விநாயகர் துதி, முருகர் துதி, அம்பாள் துதி, பன்னிரு திருமுறைகள், வாழ்த்து என்று வரிசையாக இறைவன் முன்னர் பாடுவது மரபு. இருப்பினும் நேரம் சுருக்கமாக இருக்கும் காலத்தில், ஐம்பெரும் புராணம் எனும் பஞ்ச புராணத்தில் இருந்து ஒவ்வொரு பாடல் பாடுவது சைவ மரபு. அவ்வாறாக, இறைவன் திருமுன் நின்று கொண்டு பஞ்ச புராண பாடல்களைப் பாடுங்கள். நீங்கள் உங்கள் சொந்த குரலிலே பாடுவதை இறைவன் ஒரு குழந்தை பாடுவதைப் போல ரசித்துக் கேட்பான். அதற்கான இரு தொகுப்புகள் இங்கே.

அச்சிட்டு, கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கும் வகையில் ஒரு பக்க பதிவாக PDF பதிவு இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்:

பஞ்ச புராணம் தொகுப்பு ௧

பஞ்ச புராணம் தொகுப்பு ௨

பஞ்ச புராணம் தொகுதி ௧

நால்வர் துதி

பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி
ஊழி மலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி

விநாயகர் துதி

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்துஅடி போற்று கின்றேனே

தேவராம்

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

திருவாசகம்

வேண்டத் தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுவதும் தருவோய் நீ,

வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்!

வேண்டி நீ யாது அருள் செய்தாய், யானும் அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும் உன் தன் விருப்பு அன்றே!

திருவிசைப்பா

கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை

மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச்

செற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனைத் திருவீழி மிழலைவீற் றிருந்த

கொற்றவன் தன்னைக் கண்டுகண்(டு) உள்ளம் குளிரஎன் கண்குளிர்ந் தனவே

திருப்பல்லாண்டு

ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்
நாரா யணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.

பெரியபுராணம்

வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்

பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத

சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்

பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.

உலகின் உள்ளங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம். http://www.saivasamayam.in

பஞ்ச புராணம் தொகுதி ௨

குரு மரபு வாழ்த்து

கயிலாய பரம்பரையில் சிவஞான போதநெறி காட்டும் வெண்ணை
பயில்வாய்மை மெய்கண்டான் சந்ததிக்கோர் மெய்ஞ்ஞான பானு வாகிக்
குயிலாரும் பொழில்திருவா வடுதுறைவாழ் குருநமச்சி வாய தேவன்
சயிலாதி மரபுடையோன் திருமரபு நீடூழி தழைக மாதோ.

விநாயகர் துதி

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.

தேவராம்

திருக்கோயில் இல்லாத திருஇல் ஊரும் திருவெண்நீறு அணியாத திரு இல் ஊரும்
பருக்கோடிப் பத்திமையால் பாடா ஊரும் பாங்கினோடு பலதளிகள் இல்லா ஊரும்
விருப்போடு வெண்சங்கர் ஊதா ஊரும் விதானமும் வெண்கொடியும் இல்லா ஊரும்
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும் அவைஎல்லாம் ஊர் அல்ல அடவி காடே.

திருவாசகம்

பாட வேண்டும்நான் போற்றி நின்னையே பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக்கு
ஆட வேண்டும்நான் போற்றி அம்பலத்து ஆடும் நின்கழற் போது நாயினேன்
கூட வேண்டும்நான் போற்றி இப்புழுக் கூடு நீக்கிஎனைப் போற்றி பொய்யெலாம்
வீட வேண்டும்நான் போற்றி வீடுதந்து அருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே

திருவிசைப்பா

அற்புதத் தெய்வம் இதனின் மற்றுண்டே அன்பொடு தன்னை அஞ்செழுத்தின்
சொற்பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூறும் தொண்டருக்கு எண்டிசைக் கனகம்

பற்பதக் குவையும் பைம்பொன் மாளிகையும் பவளவாயவர் பணைமுலையும்
கற்பகப் பொழிலும் முழுதுமாம் கங்கை கொண்ட சோளேச்சரத்தானே.

திருப்பல்லாண்டு

குழல்ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம் பெருகி
விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி மிகுதிரு வாரூரின்
மழவிடை யாற்கு வழிவழி ஆளாய் மணஞ்செய் குடிப்பிறந்த
பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.

பெரியபுராணம்

திருநாவுக் கரசுவளர் திருத்தொண்டின் நெறிவாழ
வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ்
பெருநாமச் சீர்பரவல் உறுகின்றேன் பேருலகில்
ஒருநாவுக் குரைசெய்ய ஒண்ணாமை உணராதேன்

உலகின் உள்ளங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம். http://www.saivasamayam.in

Please rate this

காலத்தை வென்ற நூல்கள் என்பது எத்தனை காலமானாலும் என்றும் பொருந்தி இருப்பதாகும். பன்னிரு திருமுறைகளின் பெருமை 4/5 (2)

காலத்தை வென்ற நூல்கள் – பன்னிரு திருமுறைகளின் பெருமை

காலத்தை வென்ற நூல்கள் என்றால் என்ன ?

நூல் செய்து பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் ஒரே ஒரு எழுத்தைக் கூட மாற்றாமல் அப்படியே அந்த நூலின் பொருள் எக்காலத்தும் பொருந்துமாறு இருப்பது தான் காலத்தை வென்ற நூல்களாகும். இது போல காலத்தை வென்ற நூல்களை செய்வது எப்படி சாத்தியம் ? விஞ்ஞானம் நேற்று செய்த பொருள் இன்று புதிய வடிவம் (version) கொண்டு புதுப்பிக்கப்பட்டு (update) இவ்வுலகில் இருந்தே காணாமல் போய்விடுகிறது. ஆனால், பல ஆயிரம் காலங்கள் கடந்தும் ஒரு நூல் நிலைத்து நின்று, தற்காலத்திற்கும் இனி வரும் காலத்திற்கும் பொருந்துமாறு இருப்பது எத்தனை பெரிய அதிசயம், ஆச்சரியம் என்று எண்ணிப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே புரியும்.
 
இன்றைய உலகில் இத்தனை பெரிய நூல்கள் செய்வது சாத்தியமா என்றால், என்ன பதில் கொடுப்போம் என்று எண்ணிப் பாருங்கள். ஆனால், பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நூல்கள் நிற்கிறது என்றால், அவை உண்மைப் பொருளைச் சொன்னால் மட்டுமே நிற்பது சாத்தியம். உண்மையல்லாதவை அழிந்து போகும். அத்தகைய நூலையோ பொருளையோ மனிதர்கள் செய்வது சாத்தியமா என்ற கேள்விக்கும் நாம் என்ன பதில் கூறுவோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அத்தகைய நூல்கள் இறைவன் திருவருளினால் மட்டுமே செய்ய இயலும் என்பது இப்போது தெளிவாகும்.
 
வேகமாக மாறி வரும் இந்த விஞ்ஞான உலகிலும் காலத்தை வென்ற நூல்கள் இங்கு இருக்கிறதா என்று நாம் ஆராய்ந்தால் நமக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்ட நூல்கள் இன்றும் அதன் தன்மை மாறால், உண்மைப் பொருள் மாறாமல் நிலைத்து நின்றால், அது அதிசயம் அல்லவோ ? அப்படி பல நூல்கள் உலகிலேயே இந்தியா என்னும் நாட்டின் தென்கோடியில் தமிழகம் என்ற பகுதியிலே உலகின் முதன்மொழியாக இன்றும் வழக்கில் இருக்கும் தமிழ் என்ற மொழியிலே உள்ளது என்றால் நமக்கு இன்ப அதிர்ச்சி தானே. உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் எந்த மொழியிலும் பல காலத்தை வென்ற நூல்கள் இல்லவே இல்லை. உலகிலேயே தமிழ் நாட்டிலே, தமிழ் மொழியிலே மட்டும் தான் இருக்கிறது.  எனக்கு அந்த நூல்களைக் காண மிகவும் இப்போது ஆவலாக இருக்கிறது.
 
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வள்ளுவநாயனாரால் செய்யப்பட்ட திருக்குறள், பன்னிரு திருமுறை நூல்கள், இலக்கிய நூல்கள் என்று பல காலத்தை வென்ற நூல்கள் தமிழ் மொழியிலே உள்ளது. அத்தகைய நூற்களில் தலை சிறந்தது திருக்குறளும் பன்னிரு திருமுறை மற்றும் சித்தாந்த சாத்திர நூல்களும், இன்னும் பிற சைவ மரபு நூல்களுமாகும். நம் நூல்களின் பெருமை நமக்கே ஏனோ தெரிவதில்லை. அதை பாராட்டும் எண்ணமும் ஏனோ நமக்கே இருப்பதில்லை. அத்தகைய காலத்தை வென்ற நூல்களை நாம் எவ்வாறு போற்ற வேண்டும் ? எவ்வாறு பாதுகாக்க வேண்டும் ? அதை முதலில் நன்கு படித்து உள்வாங்கி உணர வேண்டும்.  அதற்கு சிறந்த ஞானாசிரியர்களின் துணையைப் பெற வேண்டும். திருவாவடுதுறை ஆதீனம் நடத்தும் சைவத் திருமுறை நேர்முக வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். இத்தகைய பெரிய சிவபெருமானின் அருளைப் பெற்றவர் இவ்வுலகில் எத்தனை பேர் ?
 
இந்த நூல்கள் சில ஆயிரம் ஆண்டு காலத்தின் முன்னர் தான் தோன்றியதா என்ற கேள்வியை எழுப்பினால்… நூல் வடிவமாக சில ஆயிரம் ஆண்டுகள் முன்னர் தான் தோன்றியது. ஆனால், சொல் வடிவில் குருவின் உபதேசமாக எத்தனை ஆயிரம் ஆண்டுகள் அதற்கு முன்னரும் இருந்துள்ளன ? இதை ஆராய்ந்து துல்லியமான பதிலைக் கூறத்தக்கவர் இங்கு எவரேனும் உளரோ ?
 
இந்த நூல்களில் உள்ள பதிகங்கள் செய்த அற்புதங்கள் எத்தனை எத்தனை ?  இந்த அற்புதங்கள் எல்லாம் நிகழ்ந்தனவா என்று வியந்து கேட்பவர்கள் ஏனோ, சாவின் விளிம்பில் இருக்கும் ஒரு நோயாளி பிழைத்துக் கொண்டதை இக்கால மருத்துவர்கள் Its a medical miracle என்பதை மட்டும் அதே வினாவை எழுப்பாமல் ஏற்றுக் கொள்கிறார்கள்.  நமக்குத் தெரியவில்லை என்ற காரணத்தினால் மட்டும், அந்த அற்புதங்கள் இன்றும் நடக்கவில்லை என்று அர்த்தமில்லை. இந்த அற்புதங்கள் நடந்ததற்க்கு சான்றுகளும் ஆதாரங்களும் உள்ளன.  இந்த உலகைச் சுற்றி இன்னும் நிறைய சூக்குமங்கள் இருக்கின்றன, அதுவும் மனிதனின் அறிவிற்கும் கவனத்திற்க்கும் எட்டாமல் இன்னும் நிறைய இருக்கிறன்றன என்பதை உணர இயலும்.
 
முதலை உண்ட பாலகனை மூன்று ஆண்டுகள் கழித்து அதே வளர்ச்சியோடு மீண்டும் பெற்றது எத்தனை பெரிய அதிசயம் ?  ஆற்றில் விட்டதை குளத்தில் பெற்றது, செங்கல் தங்கக் கட்டியாக மாறியது, காவிரி ஆறு பிரிந்து வழிவிட்டது, இந்த பூத உடலோடு திருக்கயிலாயத்திற்கு வெள்ளை யானையின் மீது ஏறிச் சென்றது, கொலை செய்ய ஏவப்பட்ட மதம் பிடித்த யானை வணங்கி வலம் வந்தது, கல்லைக் கட்டி கடலில் போட்டும் கல் தெப்பமாக மிதந்து கரையேறி அதற்கு சான்றாக இன்றும் இருக்கும் கரையேரவிட்ட குப்பம் என்ற பகுதியும், கொடிய நஞ்சை பாலில் கலந்து உண்டும் எந்த வித பாதிப்பும் இன்றி உயிரோடு இருந்ததும், பாடல் பாடி இறைவனிடம் படிக்காசு பெற்றதும், கயிலையில் உள்ள ஏரியில் மூழ்கி, திருவையாற்றின் குளத்தில் எழுவதும், இறந்து போன இளைஞரையும், பூம்பாவையையும் உயிருடன் எழுப்பியதும் (மாண்டவரை மீட்டது), பதிகம் பாடி நோய்களை நீக்கி மனித குலத்தை மீட்பதும், அடேங்கப்பா எத்தனை எத்தனை அற்புதங்கள்.  எல்லாம் இறைவன் திருவருளினால் நம் அருளாளர்கள் செய்த அற்புதங்கள்.
 
எத்தனை பெரிய சிறப்புகள் இந்த நூல்களுக்கு இருக்கின்றன ? அவற்றையெல்லாம் அறிவதற்கு நமக்கு ஏனோ இன்று நேரமே இருப்பதில்லை. சுதந்திரம் பெற்ற பின் சில பத்தாண்டுகளில் விஞ்ஞானத்தைத் தூக்கிப் பிடிக்கிறேன் என்று நம் பல்லாயிரம் ஆண்டு கால சிறப்புகளை இழிவுபடுத்தி நம்மிடம் உள்ள மாணிக்கத்தை நாமே தூக்கி எறிய வைத்த இழி செயல்கள் எத்தனை எத்தனை ? இன்னும் நாம் விழித்துக் கொண்டு, நம் பெருமைகளை உணர்ந்து, அவற்றை மற்றவர்களுக்கும் உலகிற்கும் அறிய செய்யும் செயல்களை நாம் செய்யவில்லை என்றால், இந்த ஞான பூமி நம்மை மன்னிக்காது.
உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

ஐந்தே நிமிடத்தில் சைவ சமயத்தின் அறிமுகம் 4.67/5 (3)

ஐந்தே நிமிடத்தில் சைவ சமயத்தின் அறிமுகம்

இன்றைய விஞ்ஞான காலம் மிகவும் விரைந்து செல்லும் தன்மையுடையது. பல்வேறு ஊடகங்களின் வாயிலாக கற்பதிலிருந்து, செயல்களைச் செய்து முடிக்கும் வரை பல்வேறு கருவிகளின் துணைகளோடு விரைந்து செய்கிறான் மனிதன். அத்தகைய மனப்போக்கு கொண்ட நம் புதிய தலைமுறையினருக்கு ஏற்ற வகையிலே, ஐந்தே நிமிடத்தில் பல்வேறு சைவ சமயக் கருத்துக்களை எடுத்துரைக்கும் காணொளிகளும் ஒலிப்பேழைகளும் நிறைய வர வேண்டும். சிறிது சிறிதாக நம் சமயத்தை ஒவ்வொருவரும் அறிந்துணர்ந்து, போற்றத்தக்க நம் சிவபிரானின் பெருமைகளை உணர்ந்து அவனை எப்போதும் துதித்து ஏத்த வேண்டும். அந்த வகையிலே, சைவ சமயத்தின் அடிப்படை செய்திகளை ஐந்தே நிமிடத்தில் எடுத்துரைக்கும் ஒரு முயற்சியே இந்த காணொளி.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

Please rate this

கொங்கு நாட்டு தலங்கள் திருமுறை மற்றும் திருப்புகழ் பதிகங்கள் 4/5 (2)

கொங்கு நாட்டு தலங்கள் திருமுறை மற்றும் திருப்புகழ் பதிகங்கள்

கோவை சகோதரர்களாகிய சிவதிரு சுப்ரமணியம் ஓதுவார் மற்றும் சிவதிரு தண்டபாணி ஓதுவார் ஆகியோரது இனிமையான குரலில் கொங்கு நாட்டு திருத்தலங்களில் பாடப் பெற்ற திருமுறை மற்றும் திருப்புகழ் ஆகிய பதிகங்களுக்கு புதிய நிழல்அசைவு படத்தோடு கேட்டும், உணர்ந்தும் உருகி மகிழ இந்த காணொளி தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் கண்டு கேட்டு உணர்ந்து உருகி மகிழுங்கள். திருச்சிற்றம்பலம்.

அனைத்து பாடல்களின் தொகுப்பு பட்டியல்

 

குறிப்பிட்ட சில பாடல்கள்

சுந்தரர் தேவாரம் மற்றுப் பற்றெனக்கின்றி

கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர் சுந்தரர் தேவாரம்

திருநாவுக்கரசர் தேவாரம் சிட்டனை சிவனை செழுஞ் சோதியை

அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும்  திருஞானசம்பந்தர் தேவாரம்

தொண்டெலாம் மலர் தூவி திருஞானசம்பந்தர் தேவாரம்

பெண்ணமர் மேனியானாரும் பிறைபுல்கு செஞ்சடையாரும் திருஞானசம்பந்தர் தேவாரம்

எரிக்குங் கதிர்வேய் சுந்தரமூர்த்தி தேவாரம்

எற்றான் மறக்கேன் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்

பந்தார் விரன்மடவாள் திருஞானசம்பந்தர் தேவாரம்

அருணகிரிநாதர் திருப்புகழ்

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை கந்தன் உண்டு கவலையில்லை

கொங்குநாடு திருவிசைப்பா திருப்பல்லாண்டு பெரியபுராணம்

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

சைவ சமயமே சமயம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

திருச்சிற்றம்பலம்.

Please rate this

திருநீற்று இயல் – திருநீறு பற்றிய அனைத்து முக்கிய தகவல்கள். திருநீறு நிலத்தில் சிந்திவிட்டால் என்ன செய்ய வேண்டும்? 5/5 (1)

திருநீற்று இயல் – திருநீற்றின் மகிமை

திருநீற்றின் பெருமை வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், திருமுறைகள் என்று எங்கும் குறிப்பிடப்படுகிறது. அவையெல்லாம் பல ஆண்டுகள் பேசிக் கொண்டே இருக்கலாம். அவற்றிலிருந்து சில பெருமைகளையாவது நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

சிவ தொண்டு செய்ய விரும்புபவர்கள் இந்த திருநீற்றின் பெருமை சொல்லும் இரண்டு பக்க கோப்பினை அச்சிட்டு, அவர்கள் பொருளாதார வசதிக்கு ஏற்ப 50, 1000, ஒரு லட்சம் என்று பிரதிகள் அச்சிட்டு கோவிலுக்கு வருபவர்களுக்கும், உங்கள் தெருவில் மற்றும் அடுக்ககத்தில் இருக்கும் அன்பர்களுக்கும் வழங்கலாம்.

https://drive.google.com/open?id=1EiYg8mskN0Q8BFsiwudRl31iUfSkvSlD

பொதுவான பதிப்பு:

https://drive.google.com/open?id=1jwymrjxhpx6Ez580zpeWVpB63o4co41E

திருநீற்றின் சில பெருமைகளை எடுத்துரைக்கும் சொற்பொழிவு:

சிவமயம்

திருநீற்று இயல்

சைவ சமயத்தோர் உடம்பில் அணிய வேண்டிய அடையாளம் யாது?

        திருநீறு

திருநீறாவது யாது?

        பசுவின் சாணத்தை நெருப்பில் சுடுதலால் உண்டாகிய திருநீறு.

எந்த நிறத் திருநீறு பூசத்தக்கது?

        வெள்ளை நிறத் திருநீறு.

திருநீற்றினை எதில் வைத்துக் கொண்டு அணிய வேண்டும்?

        பட்டுப் பையிலோ, சம்புடத்திலோ வைத்துக் கொண்டு அணிய வேண்டும்.

திருநீற்றினை எத்திக்கு முகமாக இருந்து அணிதல் வேண்டும்?

        வடக்கு முகமாகவே, கிழக்கு முகமாகவே இருந்து அணியலாம்.

திருநீற்றினை எப்படி அணிய வேண்டும்?

        நிலத்தில் சிந்தாத வண்ணம் அண்ணாந்து ‘சிவசிவ / நமசிவாய / சிவாயநமஎன்று சொல்லி, வலக்கையின் நடு மூன்று விரலினாலும் நெற்றியில் அணிதல் வேண்டும்.

திருநீறு நிலத்தில் சிந்திவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

    சிந்திய திருநீற்றினை உடனே எடுத்து விட்டு, மேலும் அந்த இடத்தில் துடைத்தெடுக்க வேண்டும்.

திருநீற்றினை நடந்து கொண்டோ, படுத்துக்கொண்டோ பூசலாமா?

        கூடாது.

திருநீற்றினைக் கட்டாயமாக அணிய வேண்டிய நேரங்கள் யாவை?

  தூங்கப் போகும் போதும், தூங்கி எழுந்த போதும், பல் துளக்கிய உடனும், குளித்த உடனும், உணவு உண்ணும் முன்னும், உண்ட பின்னும், சூரியன் தோன்றி மறையும் போதும் திருநீறு அணிய வேண்டும்.

ஆசாரியார், சிவனடியார் திருநீறு தந்தால் எப்படி வாங்குதல் வேண்டும்?

        விழுந்து வணங்கி எழுந்து கும்பிட்டு இரண்டு கைகளையும் நீட்டி வாங்குதல் வேண்டும்.

கடவுள் முன்னும், குரு முன்னும், அடியார் முன்னும் எப்படி நின்று திருநீறு அணிய வேண்டும்?

        முகத்தை திருப்பி நின்று அணிய வேண்டும்.

திருநீறு அணிதல் எத்தனை வகைப்படும்?

        இரண்டு வகைப்படும், அவை : 1. நீர் கலவாது பொடியாக (உத்தூளனம்) அணிதல், 2. நீர் கலந்து முக்குறியாக ( திரி புண்டரம் ) அணிதல். (ஹோமம் செய்த நீற்றினை நெய்யில் குழைத்து அணிதல் ரக்ஷை எனப் பெயர் பெறும்.)

திரிபுண்டரமாகத் தரிப்பதன் அறிகுறி யென்ன?

        ஆணவம், கன்மம், மாயை யென்னும் மூன்று மலங்களையும் நீக்குமென்கிற குறிப்புத்தோன்றத் தரிப்பதாம்.

முக்குறியாக அணியத்தக்க இடங்கள் யாவை?

   தலை, நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறு இடங்களாம்.

முக்குறியாக அணியும் போது நெற்றியில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

        இரண்டு கடைப் புருவ எல்லை வரை அணிய வேண்டும். அதற்குக் கூடாமலும் குறையாமலும் அணிய வேண்டும்.

மார்பிலும், புயங்களிலும் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

        அவ்வாறங்குல நீளம் அணிய வேண்டும்.

மற்றைய இடங்களில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

        ஒவ்வோர் அங்குல நீளம் அணிய வேண்டும்.

முக்குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?

        ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டலாகாது.

சைவ சமயத்துக்கு விபூதி ருத்திராக்ஷம் முக்கியமானதற்குக் காரணமென்ன?

        பரமசிவனுடைய திருமேனியிலும் திருநேத்திரத்திலும் உண்டானமையால் முக்கியமாயின.

அவைக ளுண்டான வகை எப்படி?

        பரமசிவனுடைய அக்கினிபோன்ற திருமேனிமேல் இயல்பாகப் பூத்ததுவே அனாதியான விபூதி. பின்பு தேவர் முதலிய சராசரங்களையெல்லாம் இறுதிக்காலத்தில் நீறாக்கித் தம்முடைய திருமேனியில் தரித்தருளினாரே அது ஆதி விபூதி. நெருப்பின்மேல் நீறுபூத்திருப்பதை இப்போதும் திருஷ்டாந்தமாகக் காணலாம்.

அதனை அணிவதனால் பயன் என்ன?

        மாபாதகங்களெல்லாம் நீங்குமென்றும் அப்படிக்கொண்ட விபூதியை பசுவின் சாணத்தினால் விளைக்க வேண்டுமென்றும் அப்படி விளைப்பதில் கற்பம், அநுகற்பம், உபகற்பமென மூன்று விதியுண்டென்றும் அவற்றுள் ஒரு விதிப்படி விளைவித்துத் தரித்துகொள்ள வேண்டுமென்றும் ஆகமங்கள் சொல்லுகின்றன.

கற்பவிதி யாவ தெப்படிக்கொத்தது?

        நோயற்ற நல்லபசுக்களைப் பரிசுத்தமுள்ள தொழுவத்திற் சேர்த்து அவைகளிடுகிற சாணத்தைப் பூமியில் விழவிடாமல் தாமரையிலையில் சத்தியோசாத மந்திரத்தால் எடுத்துக் கொண்டு மேலுள்ள வழுவை நீக்கிவிட்டு, வாமதேவத்தாற் பஞ்சகவ்வியம் விட்டு, அகோரத்தால் பிசைந்து, தற்புருடத்தால் உருண்டையாக்கி சிவ மந்திர ஓமத்தால் உண்டான சிவாக்கினியில் சிவபெருமான் திருவடிகளை நினைந்து இட்டுப் பக்குவமாக வெந்த பிற்பாடு எடுத்துப் புதுப்பானையிலிட்டு வேண்டியமட்டில் விபூதிக் கோவிலில் வைத்துக் கொண்டு பூமியில் சிந்தாமல் தரித்துக்கொண்டால் செனன மரணதுக்கம் நீங்கி மோக்ஷமடையலாம். இவ்வாறு விளைவிப்பதுதான் கற்பவிதி. சாணத்தை யேந்தும்போதும் அக்கினியி விடும் போதும் வெந்தபின்பு எடுக்கும்போதும் புதுப்பானையில் வைக்கும்போதும் மந்திரஞ் சொல்லவேண்டும்.

அனுகற்பவிதி எப்படி விளைவிப்பது?

        காட்டிலுலர்ந்த பசுவின் சாணத்தை யுதிர்த்துக்கோசலம் விட்டுப் பிசைந்து சிவாக்கினியி லிட்டுப் பக்குவப்படுத்துவதாம்.

உபகற்ப விபூதியாவது யாது?

        இயல்பாக வெந்த காட்டுச்சாம்பல் சிவாலய மடைப்பள்ளிச் சாம்பல் இவைகளையெடுத்துக் கோசலம்விட்டுப் பிசைந்து உண்டாக்கி சிவாக்கினியிலிட்டுப் பக்குவப்படுத்தி முன்போல் எடுத்து வைத்துக்கொண்டு தரித்துக்கொள்ளுவதாம்.

விபூதிக்கோவில் எதனாலமைக்கப்பட்டது?

    வஸ்திரம், புலித்தோல், மான்தோல் இவைகளால் அமைக்கவேண்டும். இவையேயன்றி வேறுமுண்டு.

எல்லாச் செந்துக்களிலும் பசு சிரேஷ்டமான தென்னை?

        புண்ணியநதி, தீர்த்தங்கள், முனிவர்கள், மேலானதேவர்கள், வாசமாகும்படியான அங்கங்களுடன் உற்பவமானதினாலும் தெய்வலோகத்திலிருக்கின்ற காமதேனுவின் குலமானதாலும் சிரேஷ்டமானது. அன்றி, பசு மலநீக்கத்துக்குக் சூரணமான திருநீற்றினுக்கு முதற்காரணமான கோமயத்தை விளைவித்தலாலுமென வுணர்க.

திருநீற்றின் பெருமை சொல்லும் திருஞானசம்பந்தர் பதிகம் யாது ?

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருல வாயான் திருநீறே.

இந்த பாடல் மிகவும் மந்திர ஆற்றல் வாய்ந்தது. சிவபெருமான் மீது மிகுந்த அன்பு செலுத்தி, இந்த பதிகத்தை ஓதி, நெற்றி நிறைய திருநீறு இட்டால், எல்லா நோய்களும் உடனே குணமாகும். திருநீறு எல்லா செல்வங்களையும் விட மிகப் பெரிய செல்வமாதலால், பணம் பொருள் வந்து குவியும். எல்லா கவலைகளும் நீக்கிப் போகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.  திருச்சிற்றம்பலம்.

 

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

Please rate this

ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் – கொடிக்கவி 1 No ratings yet.

ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் – கொடிக்கவி 1

உமாபதிசிவம்.

சைவ சித்தாந்த சாத்திர நூல்களுல் உமாபதிசிவாச்சாரியார் அருளிய கொடிக்கவி என்ற நூலிலிருந்து முதல் பாடலின் விளக்கத்தை இங்கு காண்போம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

தேவாரத் திருத்தலங்கள் No ratings yet.

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

தேவாரத்தை பிடி! கயிறை பதி!!
தேவாரம் பாடல் நாட்டில் அமைந்துள்ளது பெண்ணாகடம் என்னும் ஒரு ஊர்.

இவ்வூரில் எழுநூறு ஆண்டுளுக்கும் முன்னால் அச்சுதக் களப்பாளர் என்ற வேளாளர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.

இவர்  சைவசமயத்தைத் தழுவி வந்தவர். ஈசனிடம் மிகவும் பக்தி பூண்டவர். இவருக்கு நெடுநாட்களாக மக்கட் பேறு இல்லாமலிருந்ததால், வருத்தமுற்று மிகவும் மனம் கணத்திருந்தார்.

யார் யாரோரெல்லாம் குழந்தை பேறு வாய்க்க பரிகாரங்களைக் கூறினர். சொன்னவர்களின் யோசனைகளின்படி அத்தனை வகையான பரிகாரங்களைச் செய்ய நினைத்தார்.

ஆனால், பரிகாரங்களை செய்வதற்கு முன் தனது குருவைச் சந்தித்து தன் எண்ணங்களைப்  பகிர்ந்து கொண்டு அவர் ஆசியைப் பெற்று அதன்பிறகே பரிகாரங்களை மேற்கொள்ளலாம் என எண்ணியிருந்தார்.

அதன்படியே தம்முடைய குலகுருவாகிய  சகலாகம பண்டிதரிடம் போய் தம் குறை  நீங்க வழிகாட்டுமாறு கேட்டு நின்றார்.

குருவானர் அவர் உடனே தம்முடைய திருமுறைப் பாராயண கட்டுகளில் உள்ள தேவாரத்தை எடுத்து கயிறு சாத்திப் பார்த்தார்.

அந்தக் காலத்தில் நிலவி வந்த ஒரு ஜோதிட சாஸ்திர முறை இது. (கிளி ஜோசியம்போல) கயிறு சாத்திப் பார்த்தல் என்றும் இதைக் கூறுவர்.

அதாவது, தேவாரம் போன்ற நூலை எடுத்துக்கொண்டு, கண்களை  மூடிக்கொண்டு, ஒரு கயிறை எடுத்து ஏதாவது ஒரு பக்கத்தில் கயிறை பதிக்க வேண்டும்.

கயிறு எந்தப் பக்கத்தில் இருக்கிறதோ அந்தப் பக்கத்தைப் பிரித்துப் படித்தால் இறைவன் அருளால், அந்தப் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் பாட்டின் மூலம்  தீர்வு காணப்பெறுவர்.

பொதுவாக இந்தவகை சாஸ்திரம் அனைவருக்குமே தெரியும் என்றாலும், இப்படி குரு ஸ்தானத்தில் உள்ளவர் மூலமாகத் தீர்வு காண்பது  அப்போதைய வழக்கமாக இருந்து வந்தது.

அவ்வாறு கயிறு பதித்து பார்த்ததில், ‘பேயடையா பிரிவெய்தும்’ என்ற தேவாரப் பதிக பார்வைக்கு கிடைத்தது.

அதில் ‘பிள்ளையினோடு உள்ள நினைவாயினவே வரம் பெறுவர்’ என்று இருப்பதைக் கண்டு ஆச்சரியமுற்றார்.

அச்சுதக் களப்பாளருடைய குறையும் பிள்ளை  இல்லை என்பதுதானே! அவர் குறைக்கு இறைவனே பரிகாரம் கொடுத்தது போல அந்தப் பாட்டு அமைந்திருந்தது.

அதைக் கண்ட பண்டிதரும் இறைவன்  திருவருளை நினைத்து அதிசயித்து, மகிழ்ந்து சொல்லொணாத ஆனந்தம் அடைந்தார்.

பின், நீ திருவெண்காட்டுத் தலத்திற்குச் சென்று அங்குள்ள முக்குள நீரில் மூழ்கி, இறைவனை வழிபட்டுக் கொண்டு அங்கு சிலகாலம் தங்கும்படி களப்பாளரைப்  பணித்தார் சகலாகம பண்டிதகுரு.

தன் குருவின் கட்டளைபடி திருவெண்காடு சென்றார். யாவையும் செய்தார் களப்பாளர், தன் மனைவியுடன் ஊர் திரும்பினார்.

அந்நிகழ்ச்சிக்குப் பிறகு களப்பாளரின் மனைவி கருவுற்று, ஓர் ஆண் குழந்தையை ஈன்றாள்.

திருவெண்காட்டு  மூர்த்தியை வழிபட்டதன் பயனாகப் பிறந்த  குழந்தையாதலால் இதற்குச் ‘சுவேதனப் பெருமாள்’ என்று நாமத்தைச் சூட்டி பெற்றோர்கள் குழந்தையை சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தனர்.

இந்தக் குழந்தையே  பிற்காலத்தில் சிவஞானபோதம் என்னும் சைவ சாஸ்திர நூலை இயற்றியது.
சந்தானாசாரியர்களில் முதல்வராகத் திகழ்ந்த மெய்கண்டார் இவர் ஆவார்.

சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் யாவற்றிற்கும் மூலம், சிவஞானபோதம். அது பிறக்கக் காரணமூர்த்தியாக இருந்தவர் மெய்கண்டார்.

அவர் திருஅவதாரம் செய்ய  உறுதுணையாக இருந்தது, ‘பேய் அடையா பிரிவு எய்தும்’ என்று தொடங்கும் ஒரு தேவாரப்பாடல் ஆகும்.

இந்த தேவாரப் பாடலை சம்பந்தர் பெருமான் பாட உருவாக்கமானது எப்படி? என்பதை வாசியுங்கள்.

திருவெண்காடு தலத்திற்குச் சென்றாலே, ஆன்மிகச் சூழலான இங்கு, தீய எண்ணங்களெல்லாம் நம்மைத் தீண்டாது ஒழிந்து, நாம் இறைவனைச் சார்ந்த எண்ணங்களிலேயே லயிப்பதை உணர முடியும்.

ஒவ்வொரு தலத்தின் பயன்கள் கருதியே நம் நாட்டில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஆன்மிக வழிகாட்டல்கள் யாவையும் அமைந்திருக்கின்றன.

மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த்  தொடங்கினர்க்கு வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே என்கிறார்.
-தாயுமானவர்.

சோழ நாட்டில் காவிரிப்பூம்பட்டினத்தை அடுத்து விளங்கும் திருவெண்காடு, பழமையான தலங்களில் ஒன்று.

இங்கே சோம தீர்த்தம், சூரிய தீர்த்தம், அக்கினி  தீர்த்தம் ஆகிய மூன்று தீர்த்தங்கள் இருக்கின்றன.

இந்த மூன்று தீர்த்தங்களே முக்குளத் தீர்த்தம் எனவாகும்.

புனிதமான இந்தத் தீர்த்தங்களில் மூழ்கி எழுவோர்க்கு, தாம் நினைத்த பல  பயன்களைப் பெறுவர் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருந்து வருகிறது.

ஒரு சமயம், திருவெண்காட்டிற்கு ஒருமுறை  திருஞான சம்பந்தப் பெருமான் எழுந்தருளினார்.

சம்பந்தரைப் பார்க்க பல ஊர்களிலிருந்தும் வந்தனர் பக்தர்கள். தங்கள் மனதிலுள்ள குறைகளை சம்பந்தரிடம்  சொல்லி, தங்கள் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்தனர் ஒவ்வொருவரும்.

ஒரு பக்தர் சம்பந்தரிடம், என்னுடைய மனைவியை நெடுநாட்களாகப் பேய்  பிடித்து அழைக்கலைத்தது.

இதைப் பார்த்த ஒரு பெரியவர் எங்களிடம், நீ வெண்காட்டு முக்குளத்தில் ஒரு மண்டலம் நீராடு. சுவேதாரண்யேஸ்வரரையும்பிரும்மவித்தியா நாயகியையும் வழிபடு சரியாகிவிடும் என்று  சொன்னார்.

அவர் கூறியதை நம்பி நானும், இங்கே வந்து முக்குள நீரில் நீராடி இறைவனை வழிபட்டோம்.

பீடித்திருந்த பழைய தொல்லையிலிருந்து நீங்கி, இப்போது என் மனைவிக்கு யாதொரு குறையும் இன்றி, நாங்கள் நிம்மதியாக வாழ்கிறோம். எல்லாம் இந்த ஈசன் செயல் என்றார்.

இதனால், நாற்பத்தெட்டு நாட்கள் எங்கள் சங்கல்பத்தை முடித்துக்கொள்ள எண்ணி இங்கு தங்கியிருக்கிறோம் என்றார்.

மற்றொருவரோ,…சம்பந்தரைப் பார்த்து, தங்களை தரிசிக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது, என்று கூறி அவரும் அவர் மனைவியும், சம்பந்தப் பெருமான் காலில் விழுந்து வணங்கினர்.

திருஞானசம்பந்தர் சுற்று முற்றும் பார்த்தார். அங்கு வேறு சில மகளிர்களும் பேயாடுவதைக் கண்டு மனம் போக கண்டார்.

மேலும் ஒருவரைப் பார்த்த சம்பந்தர்,….. உங்கள் குறை என்ன? அது நிறைவேறி விட்டதா? அல்லது நிறைவேற்ற வந்திருக்கிறீர்களா? என்று அன்புடன் கேட்டார் ஞானசம்பந்தர்.

அதற்கு அவர், நான் ஒரு பெரும் செல்வந்தன். எனக்கு பங்களா, நிலம் என ஏகப்பட்ட சொத்துக்கள் வைத்திருக்கிறேன்.

ஆனால், இதனால் எனக்கு பயன் என்ன? எனக்குப் பின் இதை அனுபவிப்பதற்குத்  எனக்கு ஒரு வாரிசு இல்லையே என்ற ஏக்கம் எண்ணைத் தூங்கவிடாமல் செய்தது.

தானங்கள் பல செய்தேன். ஊர் ஊராகச் சென்று பல கோயில்களைத் தரிசித்துத்  தவம் புரிந்தேன்.

கடைசியாக இங்கும் அங்கும் அலைந்து இறுதியில் இந்த திருவெண்காட்டுக்கு, என் மனைவியுடன் வந்து முக்குள நீரில் மூழ்கி சிலகாலம்  இருந்து இறைவன் இறைவியைத் தரிசித்து ஊர் திரும்பினோம்.

நாங்கள் ஊர் திரும்பிய ஓராண்டிலேயே என் மனைவி கருவுற்று, எங்களுக்கு ஓர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.

அந்தப் பிள்ளைக்கு ‘வெண்காடன்’ என்று பெயரிட்டோம். அந்தக்  குழந்தைக்கு இப்போது ஓராண்டு நிரம்பிவிட்டது.

இதனால் இறைவனுக்கு நன்றி சொல்லும் வகையில்  இக்குழந்தையையும் அழைத்துக் கொண்டு இப்போது இங்கு ஈசனைத் தரிசிப்பதற்க்காக இங்கு வந்திருக்கிறோம்.

குழந்தை செய்த பாக்கியம், தங்களையும்  இன்று வணங்குவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது என்று மகிழ்ந்து சொன்னார்.

இந்தச் செய்தியைக் கேட்டு தம்பதிகளையும், குழந்தையையும் வாழ்த்தி ஆசி கூறினார்  திருஞான சம்பந்தர்.

அடுத்து நிற்பவரிடம் குறைகளைக் கேட்டார்.

எனக்கு வெகு நாட்களாக, தீராத நோய் ஒன்று ஆட்டி வைத்தது. நம்பிக்கையுடன் நாமும் முக்குளம் சென்று நீராடி, இறைவனைத் தொழலாமே என்று  எண்ணினேன். இங்கு வந்து சிலகாலம் தங்கி நீராடினேன். என்ன ஆச்சரியம்! எனக்கு இருந்த நோய் முற்றிலும் மறைந்துவிட்டது, என்று வியப்பு மிக கூறினார்.

யாவற்றையும் கேட்டு அக மகிழ்ந்தார் சம்பந்தர்.

அன்பர்களைச் சந்தித்து  இவ்வளவு நேரம் அவர்களுடைய ஆனந்தமான அனுபவங்களைக் கேட்ட திருஞானசம்பந்தர், அவர்கள் பாவம் போக்கி  நினைத்தவற்றையெல்லாம் அருளும் முக்குளத்தையும், திருவெண்காட்டு அப்பனையும் கண்டு உருகி நின்றார்.

தாம் கண்டவற்றையும், கேட்டவற்றையும்மனதில் எழுப்பி ஈசனை அகத்தால் உணர்ந்து பாட முனைந்தார்.

அதனால் பிறந்தது ஒரு பதிகமே இது. இந்த பதிகமே அச்சுதகாப்பாளரின் குருவானவர், தேவார ஏட்டில் கயிறு பதித்து வழிகாட்டலை வாசித்துக் கூறினார்.

🔔 பேயடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு ஆயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாஒன்றும் வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையார் தோயாவாம் அவர்தம்மைத் தீவினையே! என்று.

🙏மூங்கிலைப்போல வழுவழுப்பும், பசுமை நிறமும் கொண்ட தோள்களைப் பெற்ற உமாதேவியைத் தன் பங்கிலே வைத்தருளும் இறைவனுக்குரிய  திருத்தலமாகிய திருவெண்காட்டில் உள்ள முக்குள நீரில் தோய்ந்து ஆடும் செயலுடையாரைத் தீய செயல்கள் சாராது. அவர்களைப் பேய்கள் அண்டாது. முன்பே  அடைந்திருந்தாலும், அவை பிரிந்து நீங்கி விடும். பிள்ளை வேண்டுமென்றால் அதனையும், அதனோடு மனத்தில் வேறு எவற்றை நினைத்தார்களோ   அவற்றையும் பெறுவர். இவற்றை அடைவது பற்றி சிறிதும் ஐயுற வேண்டாம்.

திருச்சிற்றம்பலம்.

_____________
அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.

Please rate this

வீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமா ? சிவபெருமானை வணங்குங்கள் 4.5/5 (2)

வீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமா ? சிவபெருமானை வணங்குங்கள்

சகல அண்ட புவனங்களையும் தன்னுள் கொண்டு காத்தருளும், தனக்கு நிகரற்ற தெய்வம் சிவபெருமானின் ஆணையின் கீழ், அனைத்துலகும் இயங்கி வருகிறது. எல்லா உயிர்க்குத் தேவையானவற்றையும், பொருளையும், இன்பத்தையும் தன் அளப்பரிய கருணையினால் தக்க சமயத்தில் கொடுத்து அருள எல்லா ஆலயங்களிலும் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் சிவம் நம்மை உய்விக்கும் தெய்வம். ஆணவத்தை வேற்றுத்து நிகரற்ற பேரின்பத்தை எப்போதும் வழங்கும் தன்மையுடைய ஒரே கருணை தெய்வம் சிவபெருமான். திக்குத் தெரியாமல் தவித்துப் புலம்பும் எல்லா உயிர்களுக்கும் தெப்பமாக தானே வந்து காத்தருளி நம்மை உய்விக்கிறான். அவ்வாறு இவ்வுலக உயிர்களுக்கு வாழ்விற்க்குத் தேவையான செல்வங்கள் அனைத்தையும் மகாலட்சுமிக்கு அருளி, செல்வத்திற்கெல்லாம் தெய்வமாக அவளை நியமித்தருளினார். மகாலட்சுமி சிவபெருமானின் திருவருளால் எட்டு சக்திகளைப் பெற்றார். தனம், தான்யம், சந்தானம் உள்ளடக்கிய எட்டு சக்திகளையும் சங்கநிதி பதுமநிதி என இருவரிடம் ஒப்படைத்தார். இந்த செல்வங்கள் யாவையும் கணக்கு பார்த்து தேவையான செல்வத்தை தேவையானவர்களுக்கு வழங்க ஒருவர் வந்து சேர்ந்தார். அவரே குபேரன்.

குபேரன் யார் ?

திருப்பதி ஏழுமலையானின் திருமணத்திற்க்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் சொல்கிறது. சிவபிரானுக்கு இரண்டு நெருங்கிய தோழர்கள். ஒன்று சுந்தரமூர்த்தி நாயனார். இன்னொருவர் குபேரன். பிரம்மாவின் மனதில் தோன்றியவர் புலஸ்தியர். இவருடைய பிள்ளைகள் இராவணன், கும்பகர்ணன், சூர்ப்பநகை, வீபீஷணன் மற்றும் குபேரன். குபேரனும் இராவணனும் சிறந்த சிவபக்தர்கள். குபேரன் சிவபிரானிடம் தவம் செய்து அருள் பெற்றார். மேலும் வடக்கு திசைக்கு உரிய அதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். இந்த குபேரனிடம் தான் மகாலட்சுமி தான் சிவபெருமானிடம் பெற்ற செல்வங்கள் அனைத்தையும் ஒப்படைத்தார். குபேரன் அரசாட்சி செய்ய அழகாபுரி என்ற பட்டணத்தை தேவசிற்பி விஸ்வகர்மா உருவாக்கி கொடுத்தார். அதில் ஓர் அதிசய அரண்மனை கட்டப்பட்டது. இந்த அரண்மனையின் அத்தாணி மண்டபத்தில் தாமரை மலர் ஏந்தி மீன் ஆசனத்தில் போடப்பட்ட மெத்தை மீது அமர்ந்து ஆட்சி செலுத்தினார். கிரீடம், தங்க ஆபரணங்கள் அணிந்து முத்துக் குடையின் கீழ் அமர்ந்து கையில் அபய முத்திரை காட்டுகிறார். யார் யாருக்கு என்ன செல்வம் போய்ச் சேர வேண்டுமோ, அவற்றை சரியாக சமர்பிப்பதே இவர் வேலை. மேலும் பாவங்கள் செய்யாதிருப்பவர்களை கோடீஸ்வரானாக்குவதும் இவரது பணியாகும். இவரது வலதுபுறத்தில் சங்கநிதியும் இடதுபுறத்தில் பதுமநிதியும் அமர்ந்து உதவிபுரிவார்கள்.

சங்கநிதி கையில் சங்கு வைத்திருப்பார். இவர் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பவர். இவரது கை வர முத்திரை தாங்கி இருக்கும், பதுமநிதியின் கையில், தாமரை இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்களாகும்.

குபேரனின் சிறப்புகள்

குபேரனின் உருவ அமைப்பு

குபேரன், சிறுத்த சிவந்த உருவமும் பருத்த வடிவமும் கொண்டவர். இவரது துணைவி சித்ரலேகா. தலையில் கிரீடம் ஆபரணங்கள் அணிந்து முத்துக்குடையின் கீழ் சிம்மாசனத்தில் குபேரன் அமர்ந்திருக்கிறார். அந்தச் சிம்மாசனம் தாமரை மலர் மீது மீனாசனம் அமைத்து அதன் மேல் மெத்தை விரிக்கப்பட்டிருக்கும்.அவர் காலின் கீழ் அவரது வாகனமான குதிரை இருக்கும்.

குபேரனின் ஒரு கை அபயமுத்திரையைக் காட்டும். இன்னொரு கை பாம்புக்குப் பகைவனான கீரியைத் தொட்டுக் கொண்டிருக்கும். சில சித்திரங்களில் கீரிக்குப் பதிலாக கைக்குடை ஒன்றை வைத்திருப்பார். இது இறைத்தன்மைக்குரிய, அதாவது அரசனுக்குரிய அடையாளம். குபேரன் எங்கு பறந்து சென்றாலும் தங்கம், முத்து ஆகியவை வழி நெடுக சிதறிக் கொண்டே போகும் என்பார்கள்.

அவர் தன் வாய் வழியே ரத்தினங்களை உமிழ்ந்து செல்வதாலேயே இது நடைபெறுகிறது. குபேரனின் வலப்புறத்தில் சங்கநிதியும் இடப்புறத்தில் பது மநிதியும் வீற்றிருக்கிறார்கள். கீழே உள்ள பாத்திரங்களில் நவரத்தினக் குவியல்கள் காணப்படும். அதோடு குபேர யந்திரத்துடன் குபேரன் காட்சியளிக்கிறார்.

குபேரனுக்கு மொத்தம் ஒன்பது பொருளாளர்கள் உள்ளனர். குபேரன் ஒரு சமயம் எல்லா சிவாலயங்களுக்கும் தன் புஷ்பக விமானத்தில் சென்று வழிபட்டுச் சென்று கொண்டிருந்தான். ஒரு முறை காவேரி நதிக்கரையில் மான், புலி, பசு, யானை, பாம்பு மற்றும் எலி ஆகியவை ஒரே இடத்தில் தங்கள் பகைமை கணங்களைக் காட்டாமல் நீர் அருந்திக் கொண்டிருந்தன.

ஆகா, இந்த ஊர் எவ்வளவு அழகாக இருக்கிறது. இங்கு வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று ஒரு கணம் சிந்தித்தான். அவ்வளவு தான், அந்த விருப்பத்தை நிறைவேற்ற சிவபெருமானார் அவருக்கு ஒரு பிறவி கொடுத்து விட்டார். அந்த நதிக்கரையருகே ஓர் இலந்தை மரமும் இருந்தது. இலந்தை மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அதை வெளியே எடுத்து முறையாக நீ என்னை வழி பட்டா யானால், உனக்கு அளவிலாத நன்மைகள் கிடைக்கும். என்னை வழிபடுபவர்களுக்கு உன் அருள் கடாட்சமும் கிட்டும் என்றவாறே சிவபெருமான் திடீரென குபேரன் முன் தோன்றினார்.

ஈசன் கூறியவாறே குபேரனும் அவரை வெளியே எடுத்து வழிபாடு செய்தான். தன் பெயர் அளகேசன் என்ற நாமம் கொண்டு விளங்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டான். சிவனும் சம்மதித்தார். குபேரன் வழிபட்ட அந்தச் சிவன் கோவில் பவானியில் உள்ளது. அது பவானி சங்கமேஸ்வரர் கோவில். எனவே தீபாவளியன்று இத்தலத்தில் வழிபட்டால் அளவற்ற செல்வமும் அருளும் பெறலாம்.

ஆகவே, குபேரனை எண்ணத்தில் கொண்டு சிவபெருமானை தினம் வணங்கி வந்தால் உங்கள் இல்லத்தில் செல்வம் கொழிக்கும். புதிய வீடு, வாகனம் பெறுவீர்கள். உங்கள் தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். வறுமையும் தரித்திரியமும் தெறித்து காணாமல் ஓடி விடும். கேட்டதெல்லாம் கொடுக்கும் தெய்வம் சிவபிரான். இந்த பிறவியில் செழித்து வாழ நல்ல செல்வமும் மறுபிறவி வேண்டாதவர்க்கு பிறவிப் பிணியை நீக்கி பேரின்ப முக்தியும் கொடுத்து அருளுவார். சிவபிரான் மீது அன்பு கொண்டு அவர் திருவடியை இறுக பற்றிக் கொள்ளுங்கள். ஓம் நமசிவாய.

 

Please rate this