அடியாரா? பக்தரா? வித்தியாசம் என்ன? அடியாருக்கு இலக்கணம் உண்டா? 4.75/5 (4)

அடியாரா? பக்தரா? வித்தியாசம் என்ன? அடியாருக்கு இலக்கணம் உண்டா?

நாம் பிறந்து முதலில் உலகியலை நன்கு பழகுகின்றோம். அது தான் நம் உடம்பை வளர்க்கவும், வயிற்றுப் பசியைப் போக்க நல்ல வேலையையும் கொடுக்கிறது. பின்னர், நம் பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்கும் பக்திப் பாடல்களைக் கேட்கிறோம், பாடுகிறோம். நம் தேவைகளை தேவாலயம் சென்று முறையிடுகிறோம். இறைவன் இருக்கிறார் என்பதை நம் பெற்றோரும், நண்பர்களும் கூறுவதால், அதை நம்புகிறோம். அவர்கள் செய்யச் சொல்வதை அப்படியே செய்கிறோம். நமக்கு இறைவன் திருவுருவத்தையும் அவனுக்கு செய்யும் பூசைகளையும் மிகவும் பிடித்து விடுகிறது. இறைவனை நேசிக்க ஆரம்பிக்கிறோம்.

இன்னும் நம் அறிவு முதிர்வு அடையும் போது, இறைவனைப் பற்றியும் இந்த பிரபஞ்சம் பற்றியும் நாமே ஆராய்ச்சி செய்கிறோம். பெரியோர்களும் ஞானிகளும் பேசுவதைக் கேட்டு அறிகிறோம். இறைவன் இல்லாமல் இங்கு ஓர் அசைவும் அசையாது என்ற உண்மையை நாமே நம் ஆய்வின் மூலமாக அனுபவப்பூர்வமாக உணர்கிறோம். அப்போது தான் இறைவன் இருப்பதையும், அவன் எப்படியெல்லாம் இருக்கிறான், எப்படியெல்லாம் பக்தருக்கு அருள் புரிகிறான் என்பதையெல்லாம் நாமே நேரடியாக உணர ஆரம்பிக்கிறோம். நம் மனதிலே அடுக்கடுக்கான கேள்விகள். அனைத்திற்க்கும் பதில் நாடி கிடைத்தும் விடுகிறது. இறைவன் மீது அன்பு பெருகுகிறது. நமக்கும் அவனுக்கு உள்ள தொடர்பே நிரந்தரம், மற்று எல்லாம் சில காலமே என்பதை உணர்ந்து, இறைவனுக்கு அடியவனாக நம்மைக் கருதி, சிவப் பணிகளைச் செய்கிறோம்.

இன்னும் சிலருக்கோ சிறுவயதிலிருந்து அதிதீவிர அன்பும் பக்தியும் வந்து விடுகிறது. ஒவ்வொருவருக்கும் எப்போது பக்தி வரும், அன்பு பெருகும் என்று நாமறியோம். இறைவனே அறிவார். அனைத்திற்க்கும் அடிப்படையாக இருப்பது, இறைவனை உணர்வதும், அவன் மீது அன்பு பெருகுதலும் தான். இறைவனை உணர்ந்து நம்மை முழுமையாக இறைவனிடம் கொடுத்து விடுவதைத் தான் இறைவன் ஆட்கொண்டுவிட்டார் என்கிறோம். நம் குருமார்கள் சொல்லிய நெறிகளின் படி வாழ்கிறோம். அவ்வாறாக, நமக்கும் இறைவனுக்கு நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, அவன்பால் அன்பு செலுத்துகிறோம். நம் அடிப்படை உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றுக்கு நாம் நம் சமுதாயத்தைச் சார்ந்து வாழ்கிறோம். அந்த சமுதாயமே நமக்குக் கோவில் கட்டியுள்ளது, தேர் கட்டமைத்துள்ளது, குளத்தை சீர் படுத்தி வைத்திருக்கிறது. ஆங்கே, இறைவனுக்கு அடியார்கள் எண்ணற்றவர்கள் இருக்கின்றார்கள். நல்ஞானம் அருளும் குருமார்களும் இருக்கிறார்கள்.

அடியார்களின் உள்ளத்தில் இறைவன் உறைகிறான் என்பதை உணர்ந்து அடியார்களை வணங்குகிறோம். நமக்கு வழிகாட்டும் நெறியைக் கடைப்பிடித்து வாழ்கிறோம். அவ்வாறு வாழ்பவர்களின் இலக்கணமாக பத்தைக் குறிப்பிடுகிறார்கள். அதாவது அக இலக்கணம் பத்து. புற இலக்கணம் பத்து. இதைத் திருமுறைகளும் பிற நூல்களும் சொல்கின்றன.

பத்து கொலாம் அடியார் செய்கை தானே – திருமுறை 4:18:10

பத்தாம் அடியார்க்கோர் பாங்கனுமாம் – திருமுறை 6:15:2

அடியார்களின் புற இலக்கணம் பத்து. அதாவது புறத்தே காணுமாறு அமையும் இலக்கணம் பத்து. இவற்றை உபதேச காண்டம் என்ற நூல் தெளிவுபடுத்தியுள்ளது.

1) திருநீறும் கண்டிகையும் அணிதல்
2) பெரியோரை வணங்குதல்
3) சிவனைப் புகழ்ந்து பாடுதல்
4) சிவநாமங்களை உச்சரித்தல்
5) சிவபூசை செய்தல்
6) சிவபுண்ணியங்களை செய்தல்
7) சிவபுராணங்களை கேட்டல்
8) சிவாலய வழிபாடு செய்தல்
9) சிவனடியாரிடத்தன்றி உண்ணாமை
10) சிவனடியார்க்கு வேண்டுவன கொடுத்தல்

அக இலக்கணம் என்பது அடியார்களின் மனத்துள்ளேயும் உணர்வுள்ளும் ஏற்படும் மாற்றங்களாகும். சிவபெருமானது புகழைக் கேட்குங்கால்,

1) மிடறு விம்மல் (மிடறு-கழுத்து)
2) நாத்தழுதழுத்தல்
3) இதழ் துடித்தல்
4) உடல் குலுங்கல்
5) மயிர் சிலிர்த்தல்
6) வியர்த்தல்
7) சொல்லெழாமை
8) கண்ணீர் அரும்புதல்
9) வாய்விட்டழுதல்
10) மெய்மறத்தல்

என்பனவாகும். சிவபெருமானைப் பற்றி நினைக்கும் போதும், கேட்கும் போதும், தரிசனஞ் செய்யும் போதும், இவை தானாக நிகழும்.

அடியார்கள் அனைவரும் பத்தர்களே. பத்தர் என்ற சொல்லும் அடியார் என்ற சொல்லும் மாறி மாறி திருமுறைகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இறைவனை உணரும் தொடக்க நிலையில் இருப்பவரை பக்தர் என்றும் இன்னும் ஆழச் சென்று சிவபெருமான் மீது அன்பு பெருக்கி, நெறியோடு வாழ்பவர் அடியார் என்று தோன்றினாலும், அனைத்தும் சிவன் பால் அன்பே. ஆகவே, நான் பக்தரா, அடியாரா என்ற ஆராய்ச்சியில் ஈடுபடாமல், நாயன்மார்களின் வரலாறுகளைத் தொடர்ந்து படித்தும், திருமுறைகளை தினம் ஓதியும், சிவ புண்ணிய செயல்களில் ஈடுபாடு கொண்டு செய்தும் வந்தால், அதுவே, இறைவன் திருவருளை நமக்கும் காட்டும்.

Please rate this

“சுவாமி பெயருக்கே அர்ச்சனை பண்ணிருங்க” என்று சொல்வது சரி தானா? சொல்லலாமா? 5/5 (2)

“சுவாமி பெயருக்கே அர்ச்சனை பண்ணிருங்க” என்று சொல்வது சரி தானா?

உங்கள் பெயர் குலம் கோத்திரம் சொல்லுங்கோ என்று சிவாச்சாரியார் கேட்டவுடன் தான் சிலருக்கு ஒன்றிரண்டு டக்குனு நியாபகம் வராது. சிலர் மிகச் சரியாக உடனே சொல்லிடுவாங்க. இன்னும் சிலர், இதை அச்சடித்து தங்கள் கைப்பையிலேயே வைத்திருக்கிறார்கள். இன்னும் சிலரோ, நம் பெயரைச் சொல்வதை விட, சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்வது சிறந்தது என்று முடிவுக்கு வந்து, சுவாமி பெயருக்கே அர்ச்சனை செய்து விடுங்கள் என்கின்றனர்.

அர்ச்சனை என்பது யாது?

மனிதர்களுக்குப் பல குறைகள் உண்டு. பல குறிக்கோள்களும் உண்டு. இவற்றையெல்லாம் அடைவதற்க்கு இறைவனின் திருவருள் வேண்டும். ஆகவே, இறைவனிடம் அந்த எண்ணங்களைச் சொல்லி அதை நிறைவேற்றுமாறு விண்ணப்பம் செய்து கொள்வதே அர்ச்சனையாகும்.  அப்படியானால், இறைவனிடம் யாருக்கு இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்கிறோம் என்று சொல்ல வேண்டாமா? அதற்க்குத் தான் நம் பெயர், குலம் மற்றும் கோத்திரம். ஒவ்வொருவரையும் குறிப்பாக அடையாளப்படுத்துமாறு (Personal Identity) இருப்பது இந்த மூன்றும் தான். தங்களுடைய பெயரோடு ஊரையும் சேர்த்து சொல்வது மரபாக இருந்து வந்தது. இன்றும் பலர் தங்கள் பெயரோடு ஊரையும் சேர்த்துச் சொல்கின்றனர். அப்படி நம்மை அடையாளம் காட்டுவதற்கான பெயர், குலம் மற்றும் கோத்திரம் சொல்லி, இந்த விண்ணப்பத்தை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று நாம் இறைவனிடம் சொல்ல வேண்டும். நமக்கு மந்திரங்கள் தெரியாத காரணத்தினாலே, அந்த அர்ச்சகர் நமக்காக நம் பொருட்டு அந்த மந்திரங்களைச் சொல்லி சமர்ப்பிக்கிறார்.

இன்று தமிழில் அர்ச்சனை செய்யலாம். முறையாக பார்த்தால், நமக்கு நாமே தான் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆனால், அதற்கும் ஒரு ஆள் வைத்து செய்கிறோம், தவறில்லை. நாமே செய்வது சிறப்பு. அர்ச்சனை என்பது பாட்டேயாகும் என்பதை சுந்தரர் பெருமான் வரலாற்றில் உணர்த்துவதாக சேக்கிழார் மொழிகிறார். இறைவனைப் போற்றிப் பாடிவிட்டு நம் விண்ணப்பங்களையும் அதோடு சேர்த்து சொல்லுகிறோம். இதுவே அர்ச்சனையாகும்.

குறைகளும் குறிக்கோளும் உள்ள நாம் இறைவனிடம் விண்ணப்பம் செய்து அர்ச்சனை செய்கிறோம். இறைவன் பெயருக்கே அர்ச்சனை செய்வது என்றால் என்ன? இறைவன் தனக்கு என்று எந்த தேவையும் இல்லாதவன். அவனும் யாரிடமும் போய் எதையும் கேட்கும் அவசியமும் இல்லை. அப்படி என்றால், இறைவன் பெயருக்கு அர்ச்சனை செய்வது என்பது அர்த்தமற்றதாகும். நம்முடைய பெயைரை இறைவன் திருமுன் சொல்லி அவனைப் போற்றி, நம்முடைய விண்ணப்பங்களையும் அவனிடம் வைப்பதே அர்ச்சனையாகும். ஆகவே, அர்ச்சனை நம் பெயரைச் சொல்லியே செய்ய வேண்டும்.

இறைவனிடம் நமக்கு வேண்டியதைக் கேட்கும் போது நமக்கு சரி என்று தோன்றுவதைக் கேட்கிறோம். நம் ஆசைகளைச் சொல்கிறோம். ஆனால், நிஜ உலகில், அதுவே நமக்கு வேறு பிரச்சனைகளைக் கொண்டு வந்து தந்துவிடும். ஆகவே, நமக்கு என்ன சரியாக வேண்டும் என்பது பெரும்பாலும் நமக்கே தெரிவதில்லை. நம்மைப் பற்றி நமக்குத் தெரிவதை விட முக்காலமும் முழுவதும் அறிந்த இறைவனுக்கு நமக்கு என்ன வேண்டும் என்பதும், நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதும், நன்றாகவே தெரியும். ஆகவே, எனக்கு வேண்டியதை நீயே அறிவாய், அதை எனக்கு கொடுக்க விருப்பம் இருந்தால் அதைக் கொடுப்பா என்று இறைவனிடம் புத்திசாலிகள் வேண்டுவர். இதுவே ஒரு பாடலாக திருவாசகத்தில் இருக்கிறது.

வேண்டத் தக்கது அறிவோய் நீ,
    வேண்ட முழுவதும் தருவோய் நீ,
வேண்டும் அயன், மால்க்கு அரியோய் நீ
    வேண்டி என்னைப் பணிகொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்,
    யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,
    அதுவும் உன் தன் விருப்பு அன்றே!

இறைவா, எனக்கு என்ன கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பதை நீயே அறிவாய். அப்படி நீ எனக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்றால், உன் விருப்பப்படியே அதை கொடுப்பா என்று கேட்பது மிகவும் கெட்டிக்காரத்தனம். இதனால் தான், கோவிலுக்குச் செல்லும் பெரியோர்கள், தனக்கு இதைக் கொடு அதைக் கொடு என்று கேட்பதில்லை. உனக்கா ஏதாவது கொடுக்க வேண்டும் என்று தோன்றினால் கொடுப்பா என்று இறைவனைப் போற்றிப் பாடி மட்டும் வந்துவிடுவார்கள். எனவே, கோவிலுக்குச் சென்று நமக்காக விண்ணப்பம் வைக்கும் போது நம் பெயர் சொல்லியே அர்ச்சனை செய்ய வேண்டும். அதைவிட சிறப்பு, இந்த திருவாசக பாடலை மனனம் செய்து பாடிவிட்டு வருவது மிகவும் சிறப்பாகும்.

இறைவன் திருநாமம் சொல்லி எப்போது அர்ச்சனை செய்யப்படும் ?

பண்டிகை காலங்களிலும், திருவிழா காலங்களிலும், விஷேட நாட்களிலும் இறைவனுடைய திருநாமத்தைக் கூறி அர்ச்சகர்கள் அருச்சனை செய்வார்கள். உதாரணமாக, சுவாமி திருக்கல்யாணம், நன்நீராட்டு, பிரம்மோத்சவம் போன்ற காலங்களில் சுவாமி பெயரைச் சொல்லியே சங்கற்பம் செய்யப்படும்.

அர்ச்சனை சங்கல்பம் என்பதே, வேண்டுதல் உறுதிமொழி விண்ணப்பம் தான். விண்ணப்பத்தில் சுவாமி பெயரா? நம் பெயரா? இரண்டு பெயர்களுமே சொல்லி செய்யலாம். அது தவறல்ல. ஆனால்! நம் பெயரை எப்போது சொல்வது! சுவாமி பெயரை எப்போது சொல்வது என தெரிந்திருக்கவேண்டும். உதாரணமாக முருகனுக்கு அர்ச்சனை செய்கிறீர்கள் என கொள்வோம். உங்கள் பிறந்தநாள்; உங்கள் திருமணநாள்; உங்கள் பரீட்சை நாள்களில் உங்கள் பெயர் கூறி சங்கல்பம் செய்து கொள்ளுங்கள். கிருத்திகை, ஷஷ்டி,  விசாகம், பங்குனி உத்திரம் போன்ற முருகனுக்கு உகந்த விசேஷ நாட்களில் (நமது பெயர்களை க்கூறாமல்) அங்கு முருகன் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள். இதுதான் சரியான வழியாகும்.

திருச்சிற்றம்பலம்.

 

Please rate this

சிவனடியார்களுக்கு ஆபத்து விளைவித்தவர்களை மழுவினால் துணிந்து சிவப்பணி செய்த எறிபத்தநாயனார் No ratings yet.

சிவனடியார்களுக்கு ஆபத்து விளைவித்தவர்களை மழுவினால் துணிந்து சிவப்பணி செய்த எறிபத்தநாயனார்

இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்

… திருத்தொண்டத்தொகை, சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

எறிபத்த நாயனார் குருபூசை:  மாசி அத்தம்

பகுதி 1: எறிபத்த நாயனாரின் வரலாறு

பகுதி 2: எறிபத்த நாயனார் நமக்குக் காட்டும் வாழ்கை நெறிகள்

பகுதி ௧: எறிபத்த நாயனார் வரலாறு

இருளில் மூழ்கிய உயிர்களைக் காத்து உய்விக்க வந்த எம்பெருமான், பிரபஞ்சத்தைப் படைத்து உலகையும் படைத்து, அதில் அவர்கள் வாழும் நெறியையும் படைத்து, அந்த நெறியின் படி வாழ்ந்த அடியார்களின் வரலாறுகளையும் நமக்குக் காட்டியுள்ளார் ஈசன். அவ்வகையிலே அறுபத்து மூவருள் இப்போது எறிபத்த நாயனார் வரலாறு பற்றி இங்கு சுருக்கமாகக் காண்போம்.

பெரியபுராணம் பகுதி 08 – எறிபத்த நாயனார் புராணம்.

கொங்கதேசத்திலே, அழகிய கருவூர் ஊரில் ஆநிலையப்பர் ஆலயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கும் அவருடைய அடியார்களுக்கும் திருத்தொண்டு செய்து வந்தவர் எறிபத்த நாயனார். சிவன் அடியார்களுக்குத் திருத்தொண்டுகள் செய்வதும், அந்த அடியார்களுக்கு ஆபத்து வந்த காலத்திலே அந்த ஆபத்தை ஏற்படுத்தியவர்களை மழுவால் வெட்டியும் சிவதொண்டு புரிந்தார் எறிபத்த நாயனார்.

சிவகாமியாண்டார் என்று ஒரு பெரியவர், தினமும் பூமாலை கட்டிக் கொண்டு கருவூர் ஆநிலையப்பருக்குச் சாற்றி வந்தார். ஒரு நாள் வழக்கம் போல அதிகாலையிலேயே எழுந்து, நீராடி, தன் மூச்சினால் அசுத்தக் காற்றும், முகத்திலிருந்து எச்சியும் விழாத வண்ணம் தன் முகத்தைத் துணியினால் கட்டிக் கொண்டு, திருநந்தவனத்துக்குப் போய், பூவாக மலர்ந்து கொண்டிருக்கும் மொட்டுக்களைக் கொய்து திருப்பூங் கூடையை நிறைத்து, கையிலே தண்டை ஏந்தி, சுவாமிக்குத் திருப்பள்ளித்தாமங்கட்டிச் சாத்தும் பொருட்டு அந்தச் சிவாலயத்தை நோக்கி சீக்கிரம் நடந்தார்.

அவ்வாறு சென்று கொண்டிருக்கும் போது, அந்நாட்டு மன்னருடைய பட்டத்து யானையானது, மகாநவமியின் முதனாளாகிய அந்நாளிலே, காவேரியிலே நீராடி, மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு, குத்துக்கோற்காரர் முன்னே செல்ல, தன்மேல் ஏறி அமர்ந்திருக்கும் பாகர்களோடும் வீதியிலே விரைவாகச் சென்று, தனக்கு முன்னே செல்லும் சிவகாமியாண்டாரைப் பின் தொடர்ந்து சென்று, அவர் கையிலே தாங்கிய தண்டிலே வைத்திருக்கும் திருப்பூங்கூடையைப் பறித்துக் கீழே சிதறியது. அந்த யானையின் மேல் இருக்கின்ற பாகர்கள் அதைக் கண்டு, சீக்கிரம் அதைச் செலுத்திக் கொண்டு போக, சிவகாமியாண்டார் பதைப்பதைத்துக் கோபித்து, அந்த யானையைத் தண்டினால் அடிக்கும்படி அதற்கு பின்னே போனார். யானை வேகமாகச் செல்ல, தன் முதுமை காரணமாக வேகமாகச் செல்ல இயலாமல் விழுந்த சிவகாமியாண்டார், நிலத்திலே கைகளை மோதி எழுந்து நின்று, மனது கலங்கி, மிகுந்த துக்கங் கொண்டு “இறைவனுக்குச் சாத்தும்படி கொண்டுவந்த பூவை யானை சிந்திவிட்டதே. சிவதா சிவதா” என்று சொல்லி ஓலமிட்டார்.

அதை எதிரே வந்த எறிபத்தநாயனார் கேட்டு, மிகக்கோபித்து மழுவை எடுத்துக் கொண்டு ஓடி வந்து, சிவகாமியண்டாரைக் கண்டு வணங்கி “உமக்கு இந்தத் துன்பத்தைச் செய்த யானை எங்கே போய் விட்டது” என்று கேட்க, அவர் “சுவாமிக்குச் சாத்தும்படி நான் கொண்டுவந்த பூவைப் பறித்துச் சிந்திவிட்டு இந்த தெருவழியே தான் போகின்றது” என்றார். உடனே எறிபத்தநாயனார் அதிக கோபங்கொண்டு மிகவும் விரைந்து ஓடிப் போய் யானைக்கு மிக அருகே சென்று, மழுவை வீசி அதன் மேலே பாய்ந்தார். இதைக் கண்ட யானை கோபித்து எறிபத்தநாயனார் மேலே திரும்ப, எறிபத்தநாயனார் சற்றும் அஞ்சாமல் அதைத் தடுத்து, யானையின் துதிக்கையைத் துணிந்தார். அப்பொழுது, யானைக் கதறிக் கீழே விழுந்து புரண்டது. பின்பு எறிபத்த நாயனார் அதற்கு முன்னோடும் குத்துக்கோற்காரர் மூவரும் அதன் மேல் ஏறியிருந்த பாகர்கள் இருவரும் ஆகிய ஐவரைக் கொன்று நின்றார்.

அந்த ஐவரை ஒழிந்த மற்றவர்கள் ஓடிப்போய், மன்னராகிய புகழ்ச்சோழ நாயனாருடைய வாயிற்காவலாளரை நோக்கி, “பட்டத்து யானையையும், பாகர்கள் சிலரையும் சிலர் கொன்று விட்டார்கள்; இதை அரசருக்கு விண்ணப்பஞ்செய்யுங்கள்” என்று சொன்னார்கள். உடனே வாயிற் காவலாளர்கள் அரசரிடத்திலே போய், அவரை வணங்கி, அந்தச் செய்தியைச் சொன்னார்கள். அரசர் அதைக் கேட்ட மாத்திரத்தே அளவிறந்த கோபங்கொண்டு புறப்பட்டு, குதிரையில் ஏறி, சதுரங்க சேனைகளோடும் விரைந்து சென்று, யானையும் பாகரும் இறந்த இடத்தை அடைந்து, அங்கே நின்ற சிவவேடம் தரித்த எறிபத்தநாயனாரை மாத்திரம் கண்டு, யானையைக்கொன்றவர் அவர் என்பதை அறியாமல், “யானையைக் கொன்றவர் யாவர்” என்று கேட்டார்.

பாகர்கள் சமீபத்திலே போய் வணங்கி நின்று, “மழுவைத் தரித்துக்கொண்டு இவ்விடத்தில் நிற்கின்றவரே யானையைக் கொன்றவர்” என்றார்கள். அப்பொழுது புகழ்ச்சோழநாயனார் “இவர் சிவபத்தராக இருப்பதால், அந்த யானை குற்றஞ்செய்தாலன்றி அதைக் கொல்ல மாட்டார். அந்த யானை என்ன குற்றம் செய்தது என்று தெரியவில்லையே” என்று நினைந்து, தம்முடைய சேனைகளை அவ்விடத்துக்கு வரவொட்டாமல் நிறுத்தி, குதிரையினின்றும் இறங்கி, “இந்த அடியவர் யானைக்கு எதிரே சென்ற பொழுது அந்த யானையால் இந்த அடியவருக்கு யாதொரு துன்பமும் நிகழாமல் இருக்கும்படி பூர்வசென்மத்திலே தவஞ்செய்திருக்கிறேன். இந்தப் பெரியவர் இவ்வளவு கோபங்கொள்ளும்படி என்ன பிழை உண்டாயிற்றோ” என்று சொல்லிப் பயந்து, எறிபத்தநாயனார் திருமுன்னே சென்று, அவரை வணங்கி நின்று, “சுவாமீ! தேவரீரே இந்த யானையைக் கொன்றீரென்பதைத் தமியேன் முன்னம் அறிந்திலேன். அது நிற்க. இந்தயானை செய்த குற்றத்தின் பொருட்டு இதனைப் பாகரோடும் கொன்றதுமாத்திரம் போதுமா? சொல்லி யருளும்” என்றார். எறிபத்தநாயனார் புகழ்ச்சோழநாயனாரை நோக்கி, “சிவகாமியாண்டார் சுவாமிக்குச் சாத்தும்படி கொண்டு வந்த பூவை இந்த யானை பறித்துச் சிந்தினதினால், நான் இதைக் கொன்றேன். யானை தீங்குசெய்தபொழுது குத்துக்கோற்காரரும் பாகர்களும் அதத விலக்காதபடியால், அவர்களையும் கொன்றேன். இதுவே இங்கு நிகழ்ந்த சமாசாரம்” என்றார்.


புகழ்ச்சோழனார் அதைக் கேட்டு பயந்து, எறிபத்த நாயனாரை வணங்கி, “சிவனடியார்க்குச் செய்த அபராதத்திற்கு இந்த யானையையும் பாகரையும் குத்துக்கோற்காரரையும் கொன்றது மாத்திரம் போதாது, அடியேனையும் கொல்ல வேண்டும். பெரும்பாவியாகிய சிறியேனைத் தேவரீருடைய திருக்கரத்திலிருக்கின்ற மங்கலம் பொருந்திய மழுவாயுதத்தினாலே கொல்வது நீதியன்று” என்று சொல்லி, உடை வாளை உறையினின்றும் உருவி, ‘இதினாலே கொன்றருளும்” என்று நீட்டினார். எறிபத்தநாயனார் அதைக்கண்டு, அவருடைய அளவிறந்த அன்பைக்குறித்து ஆச்சரியம் அடைந்து, அவர் நீட்டியவாளை வாங்காமல் சிறிதுபொழுது தாழ்த்துநின்று, பின்பு அவர் கையிலே வாள் இருந்தால் தம்மைத் தாமே மாய்த்துக் கொள்வார் என்று நினைந்து அஞ்சி, அதை வாங்கினார். வாங்கிய எறிபத்தநாயனாரைப் புகழ்ச்சோழநாயனார் வணங்கி நின்று. “இந்தச் சிவபத்தர் தமியேனை வாளினாலே கொன்று என்குற்றத்தைத் தீர்க்கும்படி பெற்றேன்” என்றார். எறிபத்த நாயனார் அதைக் கேட்டு, மிக அஞ்சி, “பட்டத்து யானையும் பாகரும் இறந்துபோகவும் அதைக்குறித்துச் சிறிதும் துக்கம் கொள்ளாமல் உடைவாளைத் தந்து தம்மையும் கொல்லும்படி கேட்கின்ற புகழ்ச்சோழராசாவுக்குத் தீங்கு நினைத்தேனே” என்று எண்ணி “முன்னே என்னுயிரைக் கொன்று முடிப்பதே தீர்ப்பு” என்று நினைத்து, அந்த வாளைத் தம்முடைய கழுத்திலே பூட்டி அறுக்கத் தொடங்கினார். அதுகண்ட புகழ்ச்சோழநாயனார் பயந்து நடுநடுங்கி, சீக்கிரம் எதிரே போய், அவருடைய கையையும் வாளையும் பிடித்துக்கொள்ள அவர் தம்முடைய எண்ணம் நிறைவேறாமையால் வருந்தி நின்றார்.

அப்பொழுது, அளவிறந்த அன்பினாலே அவ்விருவருக்கும் உண்டாகிய துக்கத்தை நீக்கும்பொருட்டு, பரமசிவனுடைய திருவருளினாலே, “அடியார்களுடைய தொண்டை உலகத்திலே வெளிப்படுத்தும் பொருட்டு இன்றைக்கு யானை பூக்களைச் சிதறும்படி பரமசிவன் அருள்செய்தார்” என்று ஓர் அசரீரீ வாக்கு ஆகாயத்திலே ஒலித்தது. உடனே யானையும் பாகர்களும் இறவாதது போல எழுந்து நின்றனர். அப்பொழுது எறிபத்த நாயனார் கழுத்திற்பூட்டிய வாளை விட்டுப் புகழ்ச்சோழ நாயனாருடைய பாதத்திலே விழுந்து வணங்கினார். புகழ்ச்சோழநாயனாரும் அந்த வாளை எறிந்துவிட்டு, எறிபத்த நாயனாருடைய பாதத்திலே விழுந்து வணங்கினார். பின் இருவரும் எழுந்து அசரீரி வாக்கைத் துதித்தார்கள். பரமசிவனுடைய திருவருளினாலே திருப்பூக்கூடையிலே முன்போலப் பூக்கள் நிறைந்திருக்க; சிவகாமியாண்டார் அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். பாகர்கள் பட்டத்து யானையை நடத்திக்கொண்டு புகழ்ச்சோழநாயனார் முன் வந்தார்கள். எறிபத்தநாயனார் புகழ்ச்சோழநாயனாரை அஞ்சலிசெய்து, “அடியேன் மகிழும்படி இந்த யானையின்மேல் ஏறிச்செல்லும்” என்று விண்ணப்பஞ்செய்ய; புகழ்ச்சோழ நாயனார் அவரை வணங்கி, யானையின்மேலேறிக் கொண்டு சேனைகளோடும் தமது திருமாளிகையை அடைந்தார். சிவகாமியாண்டார் திருப்பூங்கூடையை எடுத்துக்கொண்டு சுவாமிக்குத் திருமாலை கட்டிச் சாத்தும்படி போனார். எறிபத்த நாயனார் இப்படியே அடியார்களுக்கு இடையூறுகள் வந்த காலங்களிலே முற்பட்டு, அவைகளை நீக்கி, பக்தி வலிமையிற் சிறந்தவராயிருந்து, பின்பு, திருக்கைலாசகிரியில் இருக்கின்ற சிவகணங்களுக்குத் தலைவரானார்.

பகுதி 2: எறிபத்த நாயனார் நமக்குக் காட்டும் வாழ்கை நெறிகள்

திருச்சிற்றம்பலம்.

பகுதி 2: எறிபத்த நாயனார் நமக்குக் காட்டும் வாழ்கை நெறிகள்

Please rate this

கோவில் சொத்தைத் திருடுபவனும் ஆடு மாடுகளைக் கொலை செய்பவனும் உண்மையில் நன்றாக வாழ்கிறானா? தண்டனை கிடையாதா? அக்னிகுண்டம் காத்திருக்கு. 5/5 (1)

கோவில் சொத்தைத் திருடுபவனும் ஆடு மாடுகளைக் கொலை செய்பவனும் உண்மையில் நன்றாக வாழ்கிறானா? தண்டனை கிடையாதா?

கோவில் சொத்தைத் திருடுதல், பிறர் சொத்தை அபகரித்தல், உயிர்களைக் கொலை செய்தல், அநியாயம் அக்கிரமம் செய்தல் என்று எத்தனையோ தீமைகளைச் செய்பவர்கள் நன்றாக வாழ்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் தண்டனையே கிடைக்காதா? என்று நாம் ஏங்குகிறோம். இன்னொரு பக்கம் பல விபத்துகள், பேரழிவு என்று மனிதன் துன்புறுகிறான். அதைக் கண்டு அவர்கள் மீது மனிதாபிமானத்துடன் இரக்கம் கொண்டு நாம் இறைவனுக்குக் கண் இல்லையா, மனது இல்லையா என்றெல்லாம்  கேட்கிறோம். இன்றைய காலகட்டத்தில் வரும் சில செய்திகளை உன்னிப்பாக கவனியுங்கள்.

1. எதிர்த்த வீட்டுக்காரன் மனைவியைக் கூட்டிக் கொண்டு வாலிபர் ஓட்டம்.

2. நிதானமில்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த வாலிபர் மரத்தில் மோதி முள்வேலியில் சிக்கி உடல் கிழித்து சாவு.

3. வேறு வேறு பெயர்களில் முகநூலில் ஓராண்டாக காதலித்து வந்த இருவர் சந்தித்த போது தான், அவர்கள் கணவன் மனைவி என்று தெரிந்தது.

4. தவறான சிகிச்சையால் தனியார் மருத்துவமனையில் இருவருக்கு கண் பார்வை பறி போனது.

5. நெல்லையில் முன் விரோதம் காரணமாக ஜாமீனில் வெளி வந்தவர், வீடு புகுந்து அனைவரையும் வெட்டிக் கொலை செய்தார்.

6. மலை மீது செல்பி எடுக்க முயன்றவர் தவறி கீழே விழுந்து சூலாயுதம் உடலைக் கிழித்து உயிரிழந்தார்.

7. சீனாவைச் சேர்ந்தவர் புதிய கருவி கண்டுபிடிப்பு. கோழிகளை உள்ளே கொடுத்தால், அதுவே கொன்று, வெட்டி, பதப்படுத்தி, கறியாக திருப்பிக் கொடுக்கும்.

8. தாயின் கவனக் குறைவால் இரண்டு வயது குழந்தை கொதிக்கும் எண்ணெய் சட்டியில் விழுந்து பலி.

9. கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் முதியவர் பாதுகாப்பு இல்லங்கள் இரண்டு மடங்காக உயர்ந்தது.

10. முதியவர் என்றும் பாராமல், சொத்துக்காக மகனே தந்தையை அடித்துக் கொலை.

11. உலகிலேயே எஞ்சியிருக்கும் அரிய வகை மான்களை வேட்டையாடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

12. காட்டில் மிகவும் சிதைந்த நிலையில் வாலிபர் உடல் கண்டுபிடிப்பு. முதல் கட்ட விசாரணையில் மிருகங்கள் கடித்திருக்கலாம் என தகவல். யானை மிதித்து பலி.

13. கோவில் உண்டியல் உடைப்பு. கோவில் சிலைகள் திருட்டு.

14. 50 வயது மதிக்கத்தக்கவர் கொடூர கொலை. மரத்தில் கட்டி வைத்து பெட்ரோல் ஊத்தி எரிப்பு.

15. அமெரிக்காவில் அணு ஆயுத ரகசியத்தைத் திருடிய சீனர் கைது.

16. கொரோனா வைரஸால் சீனாவில் இறந்தவர் எண்ணிக்கை 2000 ஐக் கடந்தது.

மேலே உள்ள செய்திகள் அனைத்தும் ஒரு சிறு துளிகள் தான். ஒரு பக்கம் அநியாயங்களும் அக்கிரமங்களும் நடந்தேறுகின்றன. இன்னொரு பக்கம் விபத்துக்களும் பேரழிவுகளும் நடக்கின்றன. இந்த இரண்டிற்க்கும் ஏதாவது இணைப்பு உண்டா ?

மிகவும் வேகமாகச் சுற்றும் பூமியில் இருந்து, காற்றில் பிராண வாயு அளவு வரை மனிதன் வாழ்வதற்க்குத் தேவையானவற்றை மிகத் துல்லியமாக கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரு விநாடி இந்த பூமி நிலைகுலைந்தால், இங்கிருக்கும் அனைத்து உயிர்களும் மாண்டு போகும். இதுவே இதற்கு சாட்சி. இவ்வளவு துல்லியமாக காரியங்கள் நடக்கும் இந்த பூமியில், அநியாயமும் அக்கிரமும் செய்பவர்களுக்குத் தண்டனை கிடைக்காமலா போய்விடும்? அவர்கள் தப்பி விட முடியுமா?

மேலே உள்ள செய்திகளில் ஒற்றைப்படை எண்களில் இருக்கும் செய்திகளைப் பாருங்கள். அவை அனைத்தும் அநியாயமும் அக்கிரமும் செய்யும் செய்திகளாக இருக்கும். இரட்டைப் படை எண்களில் உள்ள செய்திகளைப் பாருங்கள். அந்த குற்றங்களுக்கு உரிய தண்டனைகளை நிறைவேற்றும் செய்திகளாக இருக்கும்.

மேலோட்டமாகப் பார்த்தால், இரண்டும் வேறு வேறு நிகழ்வுகள் போலத் தான் இருக்கும். ஆனால் இவற்றிற்க்கு தொடர்பு இருக்கிறதா என்றால், நம் சமயங்கள் தொடர்பு இருக்கிறது என்று அறுதியிட்டுச் சொல்கிறது. நாம் செய்யும் ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு. அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு நாம் தான் பொறுப்பு. அது நம்மைத் திருப்பி வந்து தாக்கும். இதற்காகத் தான் நாம் ஒவ்வொருவருக்கும் வினை கணக்கு ஒன்று உண்டு. நீங்கள் வங்கியில் கணக்கு வைத்திருப்பது போல, இந்த கணக்குகளை எல்லோருக்கும் வைத்து பராமரிப்பவர் தர்மத்தை நிலைநாட்டும் வேலையைச் செய்யும் எமதர்மராஜன் ஆவார். இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரே விடயம் என்னவென்றால் ஒவ்வொரு வினைக்கான பலன்களை எப்போது திருப்பிக் கொடுப்பது என்பது தான். அது எப்போது திரும்பி வரும்? அது உங்களுக்கு உரிய காலத்தில் தான் திருப்பிக் கொடுக்கப்படும். உங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருக்கிற விதியை நீங்கள் கழித்துக் கொண்டிருக்கும் போது, புதிய வினைகளின் பலனை இதே பிறவில் பின்னரோ அல்லது அடுத்த பிறவியிலோ அல்லது பல பிறவிகள் கழித்தோ தான் கொடுக்கப்படும். அதற்கு என்று உரிய நேரம் காலம் சூழல் வரும் போது தான் கொடுக்கப்படும். இதனால் தான் ஒரு பாவமும் அறியாத பச்சிளம் குழந்தைகளுக்கு கூட தீவினைகள் வந்து தீண்டுகின்றன. இந்த பிறவியில் பல உயிர்களைக் கொலை செய்பவன் இன்னொரு பிறவியில் இரண்டு வயதாகும் போது கொதிக்கும் எண்ணெய் சட்டியில் விழுந்து மாண்டு போகிறான்.

ஆகவே, அநியாயமும் அக்கிரமும் செய்பவன் நன்றாக வாழ்வது போன்ற ஒரு மாயத் தோற்றம் நமக்குத் தெரிந்தாலும், அவன் ஒரு நாள் அதற்குரிய தண்டனைகளை அனுபவித்துத் தான் ஆக வேண்டும். அவன் தப்ப இயலாது. அந்த தண்டனைகள் இந்த உலகிலும் கொடுக்கப்படலாம், அல்லது நம் புராணங்கள் சொல்வது போல வேறு ஒரு உலகிலும் கொடுக்கப்படலாம். இதனால் தான், நம் சமயமும் பண்பாடும் பிறரை இம்சித்து வாழ்வதை முற்றிலும் ஒழிக்கச் சொல்கின்றன. அடிப்படை தர்மம் என்பதே பிறரை அதாவது எந்த ஒரு உயிரையும் இம்சிக்காமல் வாழ்வது தான்.

இந்த துன்பங்களிடம் சிக்காமல் தப்பித்து வாழ்வதற்க்காக நம் முன்னோர்கள் வரையறுத்தது தான் அடிப்படை ஒழுக்கம். சுய மரியாதை என்ற பெயரில் ஒழுக்கத்தை மீறினால், அதனால் வரக்கூடிய துன்பங்களை நாம் தான் அனுபவித்தாக வேண்டும். இது திண்ணம். ஒழுக்கம் என்பது நமக்கு நாமே போடும் பாதுகாப்பு வேலி. அதைத் தாண்டிச் சென்றால் துன்பங்கள் தீண்டும்.

பிறரது உழைப்பைச் சுரண்டி திருடிப் பிழைத்தால், பிறவற்றை துளைத்துச் செல்லும் கிருமிகள் மூலமாக பாவிகள் துன்புறுத்தப்படுவர் என்று இதை கிருமிபோஜனமாக கருட புராணம் சொல்கிறது. [மேலே 15,16 குற்றமும் தண்டனையும்]. கருட புராணத்தில் என்னென்ன குற்றங்களுக்கு என்னென்ன தண்டனை என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலே கொடுக்கப்பட்ட இன்றைய நிகழ்வுகள் இதை ஒட்டியே அமைக்கப்பட்டிருக்கிறது. தாமிஸிர நரகம்: [1,2], அநித்தாமிஸ்ர நரகம்: [3,4], ரௌரவ நரகம்: [5,6], கும்பிபாகம்: [7,8], காலகுத்திரம்: [9,10], அந்தகூபம்: [11,12], அக்னிகுண்டம்: [13,14], கிருமிபோஜனம்: [15,16].

இந்த உலகிலும் தண்டனைகள் நிறைவேற்றப்படலாம், அல்லது வேறு பாதாள உலகிலும் நிறைவேற்றப்படலாம். வேறு உலகில் அந்தந்த தண்டனைகளை அனுபவிப்பதற்க்கு ஏற்றார்போல உடல்கள் கொடுக்கப்படும். இவற்றிலிருந்து ஒன்று மட்டும் திண்ணம். தப்பு செய்பவர்கள் தப்பிக்க முடியாது, தண்டனைகளை அனுபவித்தே ஆக வேண்டும். பாவ மன்னிப்பு கிடையாது.

Please rate this

எதிரிகளின் கோட்டைக்குள் புகுந்து, எதிரிகள் சூழ்ந்து நின்று அலற, சிறு பிள்ளையார் திருவருளால் வெற்றி கொண்டார் 4.5/5 (2)

எதிரிகளின் கோட்டைக்குள் புகுந்து, எதிரிகள் சூழ்ந்து நின்று அலற, சிறு பிள்ளையார் திருவருளால் வெற்றி கொண்டார்.

நீங்கள் அமர்நாத் யாத்திரை சென்று கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று சாலையில் தோன்றிய தீவிரவாதிகள் உங்கள் வாகனத்தை வழிமறித்து உங்களையும் உங்களோடு வந்த ஒரு பத்து பேரையும்,  அவர்கள் தாங்கள் கொண்டு வந்த ஒரு வாகனத்தில் அழைத்துச் செல்கிறார்கள். எங்கோ மலையில் ஏறி இறங்கி காடுகளைத் தாண்டி ஏதோ ஒரு பெரிய குகை போன்ற இடத்தில் சுற்றிலும் தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் காவல் இருக்க, உங்களை உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். மிகப் பெரிய அறையில் சுற்றிலும் எங்கும் தீவிரவாதிகள் சூழ்ந்து இருக்க, உங்கள் அனைவரையும் அங்கே, கைகளைக் கட்டி அறையின் ஒரு பகுதியில் நிற்க வைக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு எதிராக கோஷம் இடுகிறார்கள். உங்களை அடிக்க வேண்டும் என்று ஒருவன் கத்த, இன்னொருவன் வெட்டுங்கள் என்று கத்த, இன்னும் ஒருவன் ஆயுதத்தை எடுத்து உங்களை நோக்கி இவர்களைக் கொல்லுங்கள் என்று உங்களை நோக்கிப் பாய்ந்து ஓடி வருகிறான். உங்களுக்கு எப்படி இருக்கும் ?

ஓடி வந்தவனை இருவர் பிடித்துக் கொள்கிறார்கள். சிறிது நேரத்தில் அறையில் முழு அமைதி. இன்னொரு கதவு திறக்கப்பட, அதிலிருந்து கோரமாக ஒருவன் வருகிறான். அவனைப் பின்தொடர்ந்து இன்னும் நாலைந்து கோரமானவர்கள் வருகிறார்கள். அநேகமாக, அவன் தான் இந்த கூட்டத்தின் தலைவனாக இருக்க வேண்டும். அவன் வந்தவுடன் அறையின் நடுவில் இருக்கும் பெரிய இருக்கையில் அமர, அவனைப் போற்றும் வகையில் அனைவரும் ஒன்று போல கோஷமிடுகிறார்கள். அந்த சத்தமே மரண ஓலமாக நமக்குக் கேட்கிறது. அந்த தலைவன் உங்களைப் பார்த்து கோபமாக ஏதேதோ சொல்கிறான். அவன் பேசும் மொழி உங்களுக்குப் புரியவில்லை. ஆனால், உங்களை திட்டுகிறான், கோபமாக கொக்கறிக்கிறான் என்று மட்டும் புரிகிறது. அடுத்து என்ன செய்வார்களோ தெரியவில்லை. இன்று இந்த குகையில் இருந்து நீங்கள் உயிருடன் திரும்பிச் செல்ல வாய்ப்பே இல்லை. மரணத்தின் விளிம்பில் நீங்கள் நிற்கிறீர்கள். உங்களை எப்படிக் கொல்வார்கள் என்றே தெரியவில்லை. மனது உடல் அனைத்தும் நடுங்குகிறது. இறைவா என்று மனம் இறைவனை வேண்டுகிறது. உங்களுக்கு ஏற்படும் உணர்வுகளை அப்படியே பதிவு செய்து கொள்ளுங்கள்.

இது ஒரு கற்பனையான சித்திரம் என்றாலும், இவ்வாறு நிகழக்கூடிய வாய்ப்புகள் இன்று உள்ளது. இதை விட கொடூரமான நிகழ்வுகள் எல்லாம் இன்றைய உலகில் நிகழ்ந்து வருவதை நாம் நம் கண்கூடாகவே செய்திகளில் காண்கிறோம். அமர்நாத் யாத்திரை சென்று இவ்வாறு மாட்டிக் கொள்ளாமல், நீங்களே, இந்த தீவிரவாதிகளை நல்வழியில் திருத்தும் ஒரு நல்ல உயரிய எண்ணம் பொருட்டு, உங்கள் உயிரையும் துச்சம் என நினைந்து நீங்களே தீவிரவாதிகளின் கூடாரத்தைத் தேடிச் செல்வீர்களா ? அவ்வளவு தைரியமும் வலிமையும் உங்களுக்கு இருக்கிறதா ?

நிற்க.

இந்த கற்பனையான நிகழ்வுக்கும் இனி நாம் பார்க்கப் போகும் வரலாற்று நிகழ்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு நிகழ்வானது பிறருக்கு நடக்கும் போது, அது நமக்கெல்லாம் படிக்கக்கூடிய கதையாகவும், அதே நிகழ்வு நமக்கே நடக்கும் போது அந்த உணர்வுகளின் ஊடே நாமே நீந்திச் செல்லும் போது ஏற்படும் உணர்வுகளும் விளைவுகளையும் நாமே அனுபவிப்பது வேறு விதமாக இருக்கும். உணர்வுப்பூர்வமாக நாம் வரலாற்றைப் பார்க்கும் போது தான் அதன் உண்மை நமக்கு நன்றாகப் புரியும். அந்த உணர்வுகளை எடுத்துக் காட்டவே மேலே கற்பனையான ஒரு நிகழ்வை உங்கள் சிந்தனையை தட்டி எழுப்ப, இன்றைய உலகியலில் நடப்பது போன்ற நிகழ்வை எடுத்துக் காட்டியுள்ளேன். மற்ற படி மேலேயுள்ள நிகழ்வுக்கும் நம் வரலாறுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

வளம் மிகுந்திருந்த நம் செல்வங்களைக் கவர்வதற்க்கு வேறு இடங்களில் இருந்த படையெடுத்து வந்தவர்கள் தங்கள் மொழி பண்பாடு சமயம் ஆகியவற்றை நம் மீது திணித்தனர். அவ்வாறு செய்யத் துணிந்தவர்கள் முதலில் நாட்டின் அரசனை அணுகி அவனுக்கு தங்கள் போதனைகளை போதித்து அவனை தமது சமயத்திற்க்கு மாற்றுவர். உலகிலேயே மிக உயரிய பண்பான, வந்தார் யாவரையும் இன் முகத்துடன் வரவேற்று, விருந்தோம்பி, அவர்களை வாழ வைக்கும் உயரிய பண்பை நாம் பெற்றிருந்ததால், அனைவரும் நம் ஊருக்குள் எளிதாக பிரவேசம் செய்தனர். மன்னரைச் சந்தித்தனர், தங்கள் சமயம் மாற்றினர். இவ்வாறு பாண்டிய நாடு சமணர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சிவ வழிபாடு குன்றியது. சிவாலயங்கள் வழிபாடு இன்றி இருளாகக் கிடந்தன.

மன்னன் சமண குருமார்களின் பேச்சைக் கேட்டு யாவும் செய்வார். ஆனால், அவனது மனைவியோ, சோழ நாட்டு இளவரசி. அவளும் அமைச்சர் ஒருவரும் தான் இன்னும் சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள். சமண குருமார்களின் வழிகாட்டுதல் படி, கண்டுமுட்டு கேட்டுமுட்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. திருநீறு பூசியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இத்தகைய சூழலில் தான், அரசியின் விண்ணப்பம் கேட்டு, சைவ சிறுவர் ஒருவர் தன் அடியார் கூட்டத்தோடு மதுரை வந்தார். சிறுவர் என்றால், சாதாரண சிறுவர் அல்ல. மூன்று வயது குழந்தையாக இருக்கும் போதே, உமையவளே நேரில் வந்து தந்த ஞானப்பாலை உண்டு சிவஞானம் பெற்றவர். சமணர்களின் கோட்டையான மதுரைக்கு வந்தார். சமணர்களால் அவர் தங்கியிருந்த மடம் தீ வைத்து சூறையாடப்படுகிறது. அவரது தெய்வ வாக்கால், மன்னருக்கு வெப்பு நோய் ஏற்படுகிறது. அந்நோயை சமணர்களால் தீர்க்க இயலவில்லை. அரசியின் யோசனைப் படி, அந்த சிறுவர் இந்த வெப்பு நோயைத் தீர்க்க அரண்மனை வருகிறார்.

சுற்றிலும் சமணர்கள். அவர்கள் தங்கள் சமய கொள்கைகளை உரக்கச் சொல்கின்றனர். இந்த சிறுவருக்கு எதிராக கூச்சலிடுகின்றனர். இவருக்கு துணையாக இங்கு இருப்பவர் அரசியாரும் ஒரே ஒரு அமைச்சர் மட்டும் தான். மற்று யாவரும் இவரது வருகையை விரும்பாதவர்கள். இவரை எப்படியாவது இங்கிருந்து அகற்றிவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இந்த சூழலை தெய்வச் சேக்கிழார் அவர்கள் பெரியபுராணத்தில் விரித்துரைப்பதைக் காண்போம்.

பாண்டிய மன்னன் சமணனாக இருப்பினும், தன் மனைவியை சைவராக இருந்து தன் சமய கடைமைகளை ஆற்ற அனுமதி தந்த பெரியோன். சிறு பிள்ளை செம்பொன் நிறத்தில் ஒளி வீசும் மணிப் பீடத்தில் எழுந்து அருளினார். பிள்ளையார், அரசியாருடைய அன்பிற்க்குரியவர். வேற்று சமயத்தவர் ஒருவர் சமணர்களின் கோட்டையான தலைநகர் திருஆலவாய் மதுரை மாநகரிலேயே நுழைந்து, அதுவும் மன்னனிம் அரண்மனைக்குள்ளேயே வந்து ஒளிவீசும் பீடத்தில் அமர்ந்திருந்தால், யாருக்குத் தான் பொறாமை வராது? அத்தனை பொறாமையிலே, இந்த காட்சியைக் கண்டு மனம் பொறுக்க முடியாமல், அச்சம் கொண்டு, அந்த அச்சத்தை மறைத்து துள்ளி எழுவது போல வந்து தங்கள் கண்கள் சிவக்க பலவாறு கூறினார்கள்.

காலை எழும் சூரியன் அழகிய கதிர்களோடு மிகவும் ஒளி பொருந்தி இருக்கும். அத்தகைய சூரியனின் ஒளியை கரு முகில்கள் மறைத்து விட முடியுமா ? அவ்வாறு சூரியனை மறைக்க முயலும் கருமுகில் போல பிள்ளையாரைச் சூழ்ந்து மறைக்க முயன்றனர் அமணர்கள். தங்கள் புனித நூலான ஆருகத நூலில் இருக்கும் வசனங்களைப் பிள்ளையார் முன் எடுத்துக் கூறி தங்களை தலைகளை அசைத்துக் குரைத்தார்கள்.

மொத்தமாகத் திரண்டு எழுந்து தன்னை நோக்கிக் குரைத்த சமணர்களை மிகவும் பொறுமையுடன் கேட்ட பிள்ளையார், உங்கள் நூல் கூறும் பொருள்களின் முடிவை உள்ளபடியே கூறுங்கள் என்று சொன்னார். உடனே, பலரும் எழுந்து துள்ளிக் குதித்துக் கொண்டு பிள்ளையாரைச் சுற்றி நின்று கொண்டு தங்கள் நூலின் வசனங்களை ஒவ்வொருவரும் ஒரே நேரத்தில் அலறிக் கதறினர். சிறு பிள்ளையை கருத்த மேனியுடைய கொடிய சமணர்கள் சூழ்ந்து கொண்டு கத்துவதை எந்த தாய் தான் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாள் ? தாயுள்ளம் கொண்டு மங்கையர்க்கு அரசியார், அதைக் கண்டு மனம் பொறுக்க முடியாமல், உடனே எழுந்து மன்னரை நோக்கி, மன்னா, இனிய அருள் பெற்ற இந்த பிள்ளையாரோ சிறுவர். ஆனால், சமணர்களாகிய இவர்கள் எண்ணற்றவர்கள் சூழ்ந்து கொண்டுள்ளனர். முதலில் பிள்ளையார் உங்கள் வெப்பு நோயின் மயக்கம் நீங்குமாறு அருள் செய்வார். பின்னர், இந்த அமணர்கள் வாது செய்ய வல்லவராக இருந்தால், பின்னர் வாது செய்யட்டும் என்று கூறினார். பிள்ளையாராகிய திருஞானசம்பந்தப் பெருமான், பாண்டிய மன்னன் கூன்பாண்டியன் (திருவருள் பெற்று ஆட்கொள்ளப்பட்ட பின்னர் நின்றசீர் நெடுமாற நாயனார்), மங்கையர்க்கரசியார் மற்றும் அமைச்சர் குலச்சிறை நாயனார் ஆகிய நால்வரும் நம் அறுபத்து மூவர்களுள் உள்ளவர்கள் என்பது நமக்குத் தெரிந்த விடயம்.

எத்தகைய காலத்திலும், நம் சமய உண்மைகளை நன்கு அறிந்து குற்றமறக் கற்றும், பழங்குருக்களிடம் உபதேசம் பெற்றும், குருவருளோடு திருவருள் பெற்றும், அந்த உண்மைகளைத் தைரியமாக எவரிடத்திலும் எங்கும் எந்த சூழலிலும் எடுத்துக் கூறும் வல்லமை மற்றும் இறையருள் பெற்றோர் வேண்டும். உலகமயமாக்கல் காரணமாக, உலகம் எங்கும் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட அஞ்ஞான மதங்கள் இன்று நம்மைச் சூழ்ந்துள்ள வேளையில், ஒளி பொருந்திய சூரியனாக திருவருள் பெற்றோரை நமக்கு இறைவன் அருள வேண்டும், அவர்களை நம் காலத்தில் நாமும் காண வேண்டும் என்பதே அன்புடையோர்களின் எண்ணமாக இருக்கிறது.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

தமிழ் மொழி இன்னும் இரண்டு தலைமுறைகளில் சாகும். ஆங்கில கலப்பின் அசுரப் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழ். 5/5 (2)

தமிழ் மொழி இன்னும் இரண்டு தலைமுறைகளில் சாகும். ஆங்கில கலப்பின் அசுரப் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழ்

இது நீங்கள் படிக்கும் இன்னும் ஒரு பதிவு அன்று. தமிழர்கள் ஆழ்ந்து சிந்தித்து மீண்டும் அலட்சியம் செய்து தூக்கத்திற்க்குப் போகாமல் உடனடியாக செயல்பட வேண்டிய தருணம் இது. இது ஒரு அபாய எச்சரிக்கை மணி.

இந்த சுய பரிசோதனையை இன்றே செய்து பாருங்கள். நீங்கள் ஒரு 5 நிமிடங்கள் பேசி அல்லது பேசுவதை உங்கள் கைபேசியில் ஒலிப்பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் பேசுவதில் எத்தனை ஆங்கில வார்த்தைகள் எத்தனை தமிழ் வார்த்தைகள் இருக்கிறது என்று எண்ணிப்பாருங்கள். 30-40 சதவிகிதத்திற்ககு மேல் தமிழ் வருகிறதா என்று பாருங்கள். மீண்டும் ஒரு முறை ஆங்கிலம் கலக்காமல் பேச முயற்சி செய்து பாருங்கள். இன்னும் 10 சதவிகிதம் மட்டுமே முன்னேறும். பல வார்த்தைகளுக்குத் தமிழில் என்ன வார்த்தை என்றே தெரியாமல் திணறுவீர்கள்.

நாம் தமிழர், நான் திராவிடன், தமிழ் தொன்மையான மொழி, தமிழனா இருந்தா ஷேர் பண்ணு என்றெல்லாம் வீர வசனம் பேசும் நாம் வெட்கித் தலை குனிய வேண்டிய விடயம் இது. கடந்த பல பத்தாண்டுகளில், எத்தனை அரசியல் கட்சிகள் தமிழை வைத்து அரசியல் செய்து விட்டன ? தமிழை வைத்து சம்பாதித்து விட்டன ? அவையெல்லாம் நம் தாய் மொழி தமிழை வளர்க்க ஏதாவது ஒரு சிறு துரும்பாவது முயற்சி செய்தனவா ? ஆங்கில கலப்பை தடுத்து நிறுத்த ஏதாவது முயற்சி செய்தனவா ?

அடுத்த தலைமுறை அல்லது உங்கள் குழந்தைகளின் பேச்சை இதே பரிசோதனைக்கு உட்படுத்துங்கள். அதன் முடிவு இன்னும் அபாயகரமாக இருக்கும். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க என்ன சிரத்தை எடுத்தீர்கள் ? உங்களின் அடுத்த தலைமுறைக்கு எத்தனை தமிழ் போதிக்கப்படுகிறது. தமிழைத் துறந்து பிற முக்கிய பாடங்கள் படிக்க வேண்டும் என்று மருத்துவர், பொறியாளர் என்று படிக்க வைத்தவர்கள் எல்லாம் இன்று மாதம் பத்தாயிரம் சம்பளத்திற்க்கு வேலை செய்யும் நிலை. பொறியாளர்களின் நிலையோ இன்னும் மோசம்.

இன்னொரு பக்கம் தமிழில் பேசுவதை இழிவாகத் தானே கருதுவது. உலகிலேயே யாருக்குமே இல்லாத வியாதி இது. உலகில் இருக்கும் அனைவரும் தங்கள் மொழியில் பேசுவதை மிகவும் பெருமையாக நினைக்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் மட்டும் இதற்குப் புறம்பாக இருக்கிறது. நம் தாழ்வு மனப்பான்மையை நன்றாகத் தூண்டி விட்டு, அதை பயன்படுத்திய பல காலம் அந்நிய ஆட்சி நடைபெற்றது. பல நூறு ஆண்டுகளாக நம்மை சீரழித்த அந்நிய ஆட்சியின் தாழ்வு மனப்பான்மையிலிருந்து நாம் இன்னும் மீளவே இல்லை. முக்கியமாக நம் இளைய தலைமுறையினருக்கு, வெளிநாடு படங்கள், கதை புத்தகங்கள் சிறந்தவை என்றும் நம் நாட்டு பொருட்கள் உப்பில்லாதவை என்று தவறான கண்ணோட்டம் புகுத்தப்படுகிறது. வியாபார நோக்கத்திற்க்காக நம் ஆட்களே இதற்குத் துணை போகிறார்கள். ஆகவே, இளைஞர்கள், தவறான பாதையிலேயே வளர்ந்து நம் சமுதாயத்தைச் சீரழிக்கின்றனர். வயது வந்து முதிர்வு வந்த பின்னர், தமிழில் பேச முயன்றாலும் முடியாத இழிவான நிலை. கேவலம்.

உலகிலேயே உயர்ந்த நூல்கள் இருப்பது தமிழில் தான். நான்கு வேதங்கள் இருந்தது தமிழில் தான். எண்ணற்ற நுண்ணிய அறிவுப் புதையல்கள் இருப்பது தமிழில் தான். இயல் இசை நாடகம் என்று பிரிவுகளில் தமிழ் வளர்ந்தது இங்கே தான். சங்கம் வைத்து தமிழ் வளர்ந்தது உலகிலேயே இங்கு தான். எத்தனை எத்தனை அரிய நூல்கள் ? இத்தனை நூல்கள் இருந்தும், நம் இளையவர்கள் சேக்ஸ்பியர் நாவல் பற்றி பெருமையாக பேசுவது எத்தனை இழிவான நிலை ? கொடுமை. தமிழின் வளர்ச்சிக்கு எல்லாக் காலங்களிலும் ஆட்சி செய்யும் மன்னர்கள் துணை நின்றார்கள். ஆனால், சனநாயக ஆட்சியிலோ, தங்கள் அரியணையைத் தக்க வைப்பதிலேயே மன்னர்கள் காலம் போக்குகிறார்கள். அப்படி நல்ல நிலையில் இருந்தாலும், அலட்சியமாக இதைப் பற்றி எதுவும் செய்வதில்லை.

தெய்வம் பேசிய தமிழ், தெய்வத்தமிழ் என்றெல்லாம் பெருமை பேசுகிறோம். அப்படி தெய்வம் தமிழில் என்ன பேசியது என்று என்றைக்காவது கேட்டதுண்டா ? அலட்சியமே நம்மை அழிக்கும் முதல் எதிரி.

ஆங்கில கலப்பை நீக்கிப் பேச நாம் என்ன முயற்சி செய்யப் போகிறோம் ? நம் மன்னர்களாகிய அமைச்சர்கள் என்ன முயற்சி செய்யப்போகிறார்கள் ? பேசுவதில் பலனில்லை. அவற்றை நடைமுறைப்படுத்தி மேம்படுத்தி சாதித்துக் காட்ட வேண்டும்.

ஒவ்வொருவரும் ஆங்கிலக் கலப்பு நீக்கி பேச முயற்சி செய்ய வேண்டும். பல ஆங்கில வார்தைதகளுக்குத் தமிழ் வார்த்தைகள் தேட வேண்டும். அவற்றைக் குறித்து வைத்துக் கொண்டு பயன்படுத்த வேண்டும். பழக பழக சில மாதங்களில் ஆங்கிலம் நீக்கி கட்டாயமாக நாம் பேச இயலும். சித்தரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பது பழமொழி. நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டிலும், அலுவலகத்திலும், நட்பு வட்டங்களிலும், உறவு வட்டங்களிலும் ஆங்கிலம் கலவாத தமிழ் பேச முயற்சி செய்யுங்கள். உங்கள் அடுத்த தலைமுறைக்கு மறவாமல் நல்ல தமிழ் பேச எழுத பயிற்சி கொடுங்கள். நீங்கள் வீட்டில் அவர்களோடு நல்ல தமிழில் பேசினாலே, அது அவர்களுக்குச் சிறந்த பயிற்சி. அதை விட வேறு பயிற்சி தேவையில்லை.

இதோ அபாய எச்சரிக்கை மணி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Please rate this

திருமுறை மற்றும் சைவ விழிப்புணர்வு வீதிஉலா சென்னை வேளச்சேரியில் No ratings yet.

திருமுறை மற்றும் சைவ விழிப்புணர்வு வீதிஉலா சென்னை வேளச்சேரியில்

இறைவனால் நமக்கு அருளப்பட்ட ஞான ரத்தினமாகிய திருமுறை மற்றும் சைவ சமயத்தை உலகெங்கும் மக்களின் நன்மைக்காக எடுத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவது நாட்டில் அறத்தை நிலை நாட்டி மாமழை பெய்து மக்களை இன்பமாக வாழச் செய்யும் வழியாகும். அவ்வழியே, சென்னை வேளச்சேரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் (TNHB) அமைந்துள்ள அண்ணாமலையார் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் வளாகத்திலும் அதை ஒட்டியுள்ள விநாயகர் ஆலத்தில் குடமுழுக்கு 48 நாள் நிறைவு விழாவிலும் ஆனி 1 முழுமதி நாளன்று, சைவ சமயம் மற்றும் திருமுறை விழிப்புணர்வு வீதிஉலா நடத்தப்பெற்றது.

கயிலாய வாத்தியம் முழங்க திருமுறை வீதிஉலாவும், சைவ சமயம் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கைகளும் அந்த கோவிலைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் அறிவோம் சைவ சமயம் என்று நூலும் அந்த கோவிலுக்கு வருபவர்களுக்கு கொடுக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் இருந்து சில காட்சிகள்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம், பள்ளிக்கரணை, சென்னை.

 

Please rate this

சண்டிகேசுவரர் நாடகமும் சைவ சமய விழிப்புணர்வு வில்லுப்பாட்டும் No ratings yet.

சண்டிகேசுவரர் நாடகமும் சைவ சமய விழிப்புணர்வு வில்லுப்பாட்டும்

கோடை விடுமுறையை நல்ல முறையில் பயன்படுத்த வந்த குழந்தைகள், தீந்தமிழ் மற்றும் தெய்வீக திருமுறைகளைக் கற்றதுடன், சண்டிகேசுவரர் மேடை நாடகமும், சைவ சமய விழிப்புணர்வு வில்லுப்பாட்டும் குறுகிய காலத்தில் பயிற்சி செய்து நிறைவு விழா அன்று நிகழ்த்தினர்.

சண்டிகேசுவரர் நாயனார் மேடை நாடகம்

இந்த நாடகத்தின் காட்சி வசனம், நம் வலைதளத்தின் பதிவிறக்கம் பகுதியில் உள்ளது.

வில்லுப்பாட்டில் சைவ சமய விழிப்புணர்வு எவ்வாறு கொண்டு வரலாம் என்ற கேள்விக்கு விடையாக உருவாகியது இந்த சைவ சமய விழிப்புணர்வு வில்லுப்பாட்டு. குழந்தைகளின் அருமையான முயற்சி பாராட்டத்தக்கது.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம், பள்ளிக்கரணை, சென்னை.

Please rate this

கோடை சிறப்பு தமிழ் வகுப்பு நிறைவு விழா மற்றும் 7 ஆம் ஆண்டு துவக்க விழா No ratings yet.

கோடை சிறப்பு தமிழ் வகுப்பு நிறைவு விழா மற்றும் 7 ஆம் ஆண்டு துவக்க விழா

சென்ற மே 26 ஆம் தேதி, திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம் நடத்திய சிறுவர்களுக்கான கோடை விடுமுறை சிறப்பு வகுப்பு நிறைவு விழா மற்றும் திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தின் 7 ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக பள்ளிக்கரணை MTK மகாலில் நடைபெற்றது.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தை சேர்ந்த அனைத்து அடியார்களும் மிகுந்த ஆர்வத்தோடும் ஊக்கத்தோடும் மிகவும் பரபரப்பாக நிகழ்ச்சிக்கு தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சி முதலில் அம்மையப்பர் வழிபாட்டுடன் துவங்கியது.

சிவதிரு கோதண்டராமன் ஐயா அவர்கள் விழாவிற்கு வருகை தந்திருந்த சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீசுவரர் மற்றும், தேவர்கள், பூதகணங்கள் என்று அனைவரையும் வரவேற்றும், கோடை விடுமுறை வகுப்பு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள், பட்டம் பெறும் சாதனையாளர்கள் என்று அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தார்கள்.

பின்னர், கோடை விடுமுறை சிறப்பு தமிழ் வகுப்பு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. சண்டிகேசுவரர் நாடகமும், சைவ சமய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வில்லுப்பாட்டும் நடைபெற்றது.

மேலே, சிவபிரான் சண்டிகேசுவரருக்கு கொன்றை மாலை அணிவித்து தொண்டர்களின் தலைவன் என்றும் சண்டிகேசுவர பட்டமும் அருளும் காட்சி.

பின்னர் சிறப்பு சொற்பொழிவாக, மயிலாடுதுறை சிவதிரு தீபன்ராஜ் அவர்கள் ஆளாவது எப்படியோ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சிவதிரு சரவணன் ஐயா, தொண்டை மண்டல அடியார்கள் பற்றி சிறு உரை நிகழ்த்தினார்கள்.

பின்னர், திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தின் செயல்பாடுகளை விளக்கி கூறினார் சிவதிரு மீனாகுமார் அவர்கள். பின்னர், தென் சென்னை பகுதியிலும் மற்ற பிற பகுதிகளிலும் தன்னலமற்ற சிறப்பாக சிவபணி செய்த பல ஆயிரக்கணக்கானவர்களில் 28 பேரை தேர்ந்தெடுத்து சிறப்பு பட்டமளிப்பு வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது. அவர்கள் மேன் மேலும் சிறந்த சிவப்பணியாற்ற பெருமான் திருவடிக்கு விண்ணப்பம் வைக்கப்பட்டது.

பின்னர் கோடை சிறப்பு தமிழ் வகுப்பில் கலந்து கொண்ட அத்தனை குழந்தைகளுக்கும் பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்பட்டது. பின்னர் இரவு உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

பஞ்சபுராணம் மற்றும் வாழ்த்து பாடலோடு விழா இனிதே நிறைவுற்றது.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம், பள்ளிக்கரணை, சென்னை.

Please rate this

ஆளாவது எப்படியோ (திருக்காளத்தி அப்பனுக்கு) சிவதீபன்ராஜ் மயிலாடுதுறை No ratings yet.

ஆளாவது எப்படியோ (திருக்காளத்தி அப்பனுக்கு)

சிவதீபன்ராஜ் மயிலாடுதுறை

எண் குணங்களை உடைய சிவபெருமானுக்கு உயிர்களாகிய நாம் எப்படி ஆளாவது ? அடிமையாவது ? அவனுக்கு என்ன பணி செய்வது ?

திருநீறு அணிந்தால் போதுமா ?

உருத்திராக்கம் அணிந்தால் போதுமா ?

பஞ்சாக்கர மந்திரம் சொன்னால் போதுமா ?

கோவில் சென்று வழிபட்டால் போதுமா ?

இவையெல்லாம் செய்து கொண்டு, பொய் பேசுதல், உயிர்க்கொலை செய்தல்,  ஒழுக்கமற்ற வாழ்வு வாழ்தல் போன்ற செயல்களில் ஈடுபடலாமா ?

என்ன செய்தால் சிவபிரான் திருவடிகளை நாம் அடைய முடியும் ?

ஆளாவது எப்படியோ ?

மயிலாடுதுறை சிவதீபன்ராஜ் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தின் 7 ஆம் ஆண்டு துவக்கவிழா மற்றும் கோடை சிறப்பு தமிழ் பயிற்சியின் நிறைவு விழா ஆகியவற்றின் போது.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

பள்ளிக்கரணை, சென்னை.

Please rate this

அறிவோம் சைவ சமயம் – புத்தகம் pdf 5/5 (4)

அறிவோம் சைவ சமயம் – புத்தகம் pdf

நம்முடைய குழந்தைப் பருவத்தில் நம் பெற்றோர்கள் நமக்கு எவ்வளவு தூரம் நம் சமயத்தை நமக்குக் காட்டுகின்றனரோ, அத்தனை தூரத்திலிருந்து நம் ஆன்மீக பயணமானது துவங்குகிறது. அவ்வகையிலே, நாம் நம் வாழ்வில் பயணித்த தூரத்தையும் அனுபவத்தையும் நம் குழந்தைகளுக்குக் காட்டி வளர்ப்பது மிகவும் இன்றியமையாத ஒன்று.  அவ்வகையிலே, சைவ சமயம் பற்றிய அடிப்படை நுட்பம் அனைவரும் கட்டாயம் அறிய வேண்டும் என்ற வகையிலே அந்த அடிப்படை நுட்பத்தை அனைவருக்கும் சென்றடையும் வண்ணம் சிறு சிறு துளிகளாக சேர்க்கும் முயற்சியில் இந்த அறிவோம் சைவ சமயம் என்ற புத்தகமும் ஒரு அங்கமாக சேர்த்துள்ளோம்.

நாம் யார், நம் இறைவன் யார், நம் கடமைகள் என்ன என்பதை அறியாமலேயே நம் சமுதாயத்தில் பெரும்பாலானோர் கோவிலுக்கு சென்று தங்களுக்கு வேண்டியவற்றை இறைவனிடம் விண்ணப்பித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் சைவத்தின் ஞான ஒளி பெற்று நம் பிறப்பு இறப்பில்லாத சிவபிரானை என்னென்றும் ஏத்தும் வண்ணம் ஆகும் முயற்சியில் இந்த புத்தகமும் ஓர் அங்கமாகத் திகழ எண்ணம் கொண்டு இங்கு அதன் அச்சிடக்கூடிய PDF வடிவம் பகிரப்படுகிறது. இது அனைவருக்கும் பயன் பெறும் வகையில் அமையும் என்று நம்புகிறோம். இது நம் வலைதளத்தினஅ பதிவிறக்கம் பகுதியிலும் சுட்டப்பட்டுள்ளது.

அறிவோம் சைவ சமயம்  –  PDF

https://drive.google.com/open?id=1IRzrkHEyYMoXsOutU_MSoGLr82LmCw4g

குழந்தைகளுக்கான சிறுவர் நாடம் – சண்டிகேசுவரர் நாடகத்தின் வசனத்தினையும் இங்கே பதிவேற்றியுள்ளோம்.

சண்டிகேசுவரர் சிறுவர் நாடகம் – PDF

https://drive.google.com/open?id=10nddS3thvI81X7za-rUYBbyTDkq6i1fu

உலகின் வீதிகள் தோறும் சைவ பாட சாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

கோடை விடுமுறைல தமிழ் திருமுறை சொல்லிக்கொடுங்க No ratings yet.

கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு தமிழ் திருமுறை சொல்லிக் கொடுங்க

உலகின் ஆன்மீக ஒளியாக, பல்லாயிரம் ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது நம் பாரத பூமி. இந்த பூமியில் தடுக்கி விழுந்தால் ஞானப் புதையலைப் பெறலாம். ஒவ்வொரு கோவிலும் ஞானப்புதையல். ஒவ்வொரு இல்லமும் ஞானப் புதையல். ஒவ்வொரு மலையும், நதியும், காற்றும் ஆகாயமும் ஞானப் புதையலாக நமக்கு பாடம் சொல்லித் தரும் குருவாக அமைந்துள்ளது. அத்தகைய புண்ணிய பூமியில் நாம் பிறந்து வாழ்ந்து கொண்டிருப்பது எத்தனை பெரிய பாக்கியம்?

கடந்த பல நூற்றாண்டுகளால் நாம் இழக்கப் பெற்ற ஞானத்தையும், இறை உணர்வையும் தற்போது மீட்டு பேரின்பமாக இவ்வுலகில் வாழும் முறையை அறிந்து கொண்டு, நம் தலைவனாகிய ஈசனை உணர்ந்து தொழுது ஏத்தி வணங்கி வாழ வேண்டும். தனி மனித ஒழுக்கம், குடும்ப ஒழுக்கும், பொது ஒழுக்கம் என்று எங்கும் ஒழுக்கம் நிறைந்த பூமியை நாம்  மீண்டும் படைத்திட வேண்டும். ஒழுக்கம் இன்பமான வாழ்விற்கு மிகவும் உறுதுணையாக நிற்பது. ஒழுக்கம் இல்லாத வாழ்வும், ஒழுக்கமில்லாத எந்த அமைப்பும், வெளியிலிருந்து யாரும் கெடுக்காமலேயே கெட்டுப் போகும்.

தனிமனித சுதந்திரத்திற்கும் ஒழுக்கத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. தனி மனித சுதந்திரம் முழுக்க முழுக்க இருக்கும் ஒருவனே, தான் இன்பமாக வாழும் பொருட்டும், தன் குடும்பம் இன்பமாக வாழும் பொருட்டும், தன் தெரு, ஊர், நாட்டு மக்களும் இன்பமாக வாழும் பொருட்டும் தனக்குத் தானே சில விதிகளை விரும்பி கடைப்பிடிப்பதே ஒழுக்கமாகும். இந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க சிறிது சிரமம் தேவைப்பட்டாலும், அதனால் வரக்கூடிய நன்மைகள் பலப்பல. அந்த ஒழுக்கம் இல்லாவிட்டால், தனி மனிதனின் வாழ்வும், ஊரும், நாடும் கெட்டுப்போகும் என்பது வரலாற்றில் பல்லாயிரம் முறை நாம் கண்ட உண்மையாகும்.  இதை வலியுறுத்தவே,  தெய்வப்புலவர் வள்ளுவர் பெருமானும்,

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

என்றார். அத்தகைய இன்றியமையாத வாழ்வின் இருதயமாக இருக்கக்கூடிய ஒழுக்கத்தையும், வாழ்வில் நன்றாக இன்பமாக வாழும் முறையையும் ஏனோ இன்றைய கல்வி முறை புறக்கணித்துவிட்டு விஞ்ஞானம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து வருகிறது. இந்த நிலையிலிருந்து விலகி, நம் கல்வி, இன்பமாக வாழவும், எத்தகைய சூழலை கையாளவும், புதிய புதிய கருவிகள் கண்டுபிடிப்பதையும், விஞ்ஞானத்தோடு சேர்த்து மெய்ஞானத்தையும் புகட்ட வேண்டும். அன்று தான் அதற்கு அடுத்த தலைமுறைகள் இன்பமாக இனிமையாக வாழ இயலும்.

அதுவரை, அந்த பொறுப்பு பெற்றோர்களின் கைகளில் தஞ்சம் புகுந்துள்ளது. ஒவ்வொரு பெற்றோரும், தன் பிள்ளைக்கு இனிமையாக வாழும் வழிகளையும், நாம் யார், நம் மொழி என்ன, நம் சமயம் என்ன, நம் வரலாறு என்ன, நம் புராணங்கள் என்ன, நம் குருமார்களும் நமக்கு வழிகாட்டிகளும் யார் என்ற இன்றியமையாத செய்திகளையும் ஊட்டும் பொறுப்பு உடையவர்களாக இருக்கின்றனர்.

அவ்வகையிலே, கோடை விடுமுறையில், குழந்தைகளுக்கு இனிய விளையாட்டுகளோடு சேர்த்து, இந்த முக்கியமான கடமையை நிறைவேற்றுவது சிறப்பானதாகும். அதற்கு ஏற்றவாறு, அந்தந்த ஊரிலிருக்கும் சிறு அமைப்புகளும், சிவனடியார், முருகன் அடியார் திருக்கூட்டங்களும், அடுக்கக கூட்டமைப்புகளும் சேர்ந்து சிறப்பு வகுப்புகளை நடத்தலாம்.

தமிழ் மொழியின் அடிப்படை, இலக்கணம், ஆத்திசூடி, திருக்குறள் போன்ற அற நூல்கள், பன்னிரு திருமுறை, பதினெட்டு புராணங்கள், நாயன்மார்கள் வரலாறு, பக்திப் பாடல்கள், விளையாட்டு, நம் பழங்கால இசைக்கருவிகளை இயக்குவது, விடுகதைகள் என்று பல்சுவையோடு சேர்த்து அவர்களுக்கு நம் சமயம் மற்றும் தமிழ் மொழியின் அடிப்படைகளை ஊட்டினால், அவை அவர்களிடம் ஆழமாக பதிந்துவிடும். நீங்களும் இத்தகைய வகுப்புகளை உங்கள் ஊரில் நடத்தலாமே ?

 

பள்ளிக்கரணையில் இத்தகைய வகுப்பு வரும் ஏப்ரல் 15 லிருந்து மே 25 வரை நடைபெறும்.

திருச்சிற்றம்பலம்.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்,

பள்ளிக்கரணை, சென்னை.

Please rate this

தமிழ் ஞானப்பரவல் – தமிழ் வேதம் திருமுறைகளை இல்லங்களுக்கு கொடுப்போம் No ratings yet.

தமிழ் ஞானப்பரவல் 

தமிழ் வேதமாம் பன்னிரு திருமுறைகளை இல்லங்கள் தோறும் ஓதுவதற்கு ஊக்குவிக்கும் வண்ணமும், சைவ நெறிமுறைகளை அழுந்தி கடைப்பிடிக்கவும், திருமுறை தொகுப்பு புத்தகங்கள், நாயன்மார்கள் வரலாறு போன்ற புத்தகங்களை, குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து கொடுக்கும் ஒரு சிறு முயற்சி.

அவ்வகையிலே, விளம்பி ஆண்டு மாசி மாத முழுநிலவு நன்நாளிலே, சென்னையில் ஒரு கிரிவலம்  அரசன்கழனி அருள்மிகு பெரியநாயகி உடனுறை பசுபதீசுவரர் ஆலயத்தில் ஔடதசித்தர் மலையை மலைவலம் (கிரிவலம்) வந்த அன்பர்களுக்கு குலுக்கல் முறையில் கரு முதல் திரு வரை திருமுறை தொகுப்பு புத்தகம் பரிசளிக்கப்பட்டது.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

இந்த நிகழ்விலிருந்து சில காட்சிகள்

 

Please rate this

பீடுடைய மார்கழி போற்றி – மாணவர்களுக்கான திருமுறை ஒப்புவித்தல் போட்டி 5/5 (1)

பீடுடைய மார்கழி போற்றி – மாணவர்களுக்கான திருமுறை ஒப்புவித்தல் போட்டி

திருச்சிற்றம்பலம்.

தமிழ் வேதமாம் பன்னிரு திருமுறைகளை நம் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கிலும் மார்கழி மாதத்தில் அனைவரும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி மற்றும் சிவபுராணம் ஆகிய பதிகங்களை முழுமையாக படித்து மனனமாக சொல்ல வேண்டும் என்ற நோக்கிலும் மாணவர்களுக்காக இந்த மூன்று பதிகங்களையும் படித்து ஒப்புவிக்கும் போட்டி கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.

மிகவும் உன்னதமான மார்கழி மாதத்தை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து, இறைவனை அறியாமல் உலகியலில் உழன்று கொண்டிருக்கும் மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்து எழுப்புவதே திருப்பள்ளியெழுச்சியாகும். அத்தகைய பெருமைமிகு மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடி சிவாலயங்களில் இறைவனை வழிபாடு செய்வது பல்லாயிரமாண்டு மரபு. அந்த திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியோடு சேர்த்து சிவபுராணமும் குழந்தைகள் இளவயதிலேயே கற்க வேண்டும் என்று நோக்கம் கொண்டு, *பீடுடைய மார்கழி போற்றி* என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான பதிகம் ஒப்புவித்தல் போட்டி, பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் திருக்கோவிலில் 26-01-2019 அன்று மாலை 5 மணிக்கு திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டது. இதில் 5 வயது குழந்தைகள் முதல் பதினோராம் வகுப்பு மாணவர் வரை பலர் பங்கு பெற்று பரிசு பெற்றனர். இந்த போட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளிக்கரணை மாணவர்களும் பங்கு கொண்டு, கலைநிகழ்ச்சிகளும் நடத்தி சிறப்பித்தனர். நம் இயற்கையோடு இயைந்த பண்டைய கால சிறப்பான வாழ்க்கை முறையை நாமும் கடைப்பிடித்தால் நோயின்றி நலமாக நீண்ட ஆயுளோடு வாழலாம் என்பது திண்ணம்.

இது போன்ற நிகழ்ச்சிகளை அனைத்து சிவனடியார்களும் தங்களது சிவாலயங்களிலும் மடங்களிலும் நடத்தி நம் குழந்தைகளுக்கு பன்னிரு திருமுறையையும் அதன் பெருமைகளையும் நிலைநிறுத்துவது மிக மிக அவசரமான அவசியமானதாகும். ஆகவே, இது போன்ற போட்டிகளும், நிகழ்ச்சிகளும் தொடர்ந்து இடைவிடாது அடிக்கடி நடத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த நிகழ்ச்சியிலிருந்து சில காட்சிகள்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

108 நாட்கள் தொடர் திருவாசகம் முற்றோதல் திருக்கழுக்குன்றம் No ratings yet.

108 நாட்கள் தொடர் திருவாசகம் முற்றோதல் திருக்கழுக்குன்றம்

108 நாட்கள் தொடர் திருவாசகம் முற்றோதல் என்பது என் வாழ்விலேயே அடியேன் சிந்தித்துக் கூட பார்த்திராத ஒரு மாபெரும் நிகழ்வாகும். தன்னிறைவற்ற விஞ்ஞான அறிவும், மேற்கத்திய மோகமும் நம் தேசத்தை மெல்ல மெல்ல கடந்த அறுபது எழுபது ஆண்டுகளில்பற்றிக் கொள்ள, நம் பல்லாயிரம் ஆண்டுகளின் திரட்சியான மெய்ஞானமும், அந்த ஞானம் வழிகாட்டிய நம் வாழ்வு முறையும், சமயமும், சாத்திரங்களும், மாபெரும் ஒளி பொருந்திய சூரியனை மேகங்கள் சற்றே மறைப்பது போல மறைத்துவிட்டன. அந்த நிழலை சாதகமாக பயன்படுத்தியும், நம் பாரத தேச மக்களின் அறியாமையையும் பயன்படுத்திக் கொண்டும், அந்நிய பரசமயங்கள் தங்களின் சிறகுகளை வேகமாக பரப்பி வருகின்றன. இறைவன் திருவருளால், நம் குருமார்கள் நமக்கு அருளிச் சென்ற நம் சமய ஞானத்தையும், இறைவனை அடையும் வழிகளையும் நாம் வேகமாக நம் மக்களுக்கும் உலக மக்களுக்கும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக பணியாற்றி பரவும் சூழலில் இருக்கின்றோம்.

இத்தகு சூழலில், நம் பன்னிரு திருமுறைகளில் ஒன்றான திருவாசகம் திருமுறைகளுக்கே உரிய ஆழ்ந்த ஞானம், மெய்யுணர்வு, எளிமையாக பாடும் தன்மை என்று பல சிறப்புகளுடன் கூடியதை, நம் மக்களுக்கு பரவச் செய்வது என்பது மிகப்பெரிய திருவருள் கூடிய செயலாகும்.  அதுவும் எளிய தொடர்பு வசதியில்லாத நம் கிராமங்கள் அத்தனையும் சிந்தித்து பாருங்கள். அத்தகு மேம்பட்ட திருப்பணியில் முக்கிய பெரும் பங்களிப்பு செய்தவர் நம் திருக்கழுக்குன்றம் சிவதாமோதரன் ஐயா என்றால், அது மிகையாகாது. அவர்கள் முற்றோதல் செய்தலைத் தொடர்ந்து, அவர்களது திருக்கழுக்குன்ற இல்லத்தில் தொடர்ந்து 108 நாட்கள் திருவாசகம் முற்றோதல் நிகழச் செய்யும் நிகழ்வு தற்போது நிறைவு பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறது. ஒரு பெரும் சைவ மடம், மடாதிபதிகள் பல்வேறு துணையோடு செய்யும் செயற்கரிய செயலை ஐயா நம் சமய மேம்பாட்டிற்காக செய்கிறார்கள் என்றால், அது சிவபிரானின் சித்தமே ஆகும்.

அந்த 108 நாட்கள் திருவாசகம் முற்றோதலில் ஒரு நாளாக, சென்னை பள்ளிக்கரணை அடியார்கள் இணைந்து 97 ஆவது நாளில் ஐயாவின் திருக்கழுக்குன்றம் சிவசிவ இல்லத்தில் ஓதினர். திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டத்தினர் கைலாய வாத்திய இசையோடு மிகவும் சிறப்பாக முற்றோதல் இறைவன் திருவருளால் நிகழ்த்தப்பட்டது.

இந்த நிகழ்வில் கோமல் கா. சேகர் ஐயாவும் இணைந்தது மிகவும் சிறப்பானது.

இந்த முற்றோதல் நிகழ்வு முழுமையடைந்து அதன் குறிக்கோளை அடையும் என்பது பிறப்பு இறப்பற்ற பெருங்கருணையாளின் திருவருள்.

திருச்சிற்றம்பலம்.

இந்த நிகழ்வு பற்றி கோமல் கா சேகர் ஐயாவின் பதிவு:

ஓம்
சிவ சிவ:
=====
மீண்டும் திருவாசக உலா !
=====. =====
19-12-18 திருக் கழுக் குன்றம் ஐயா இல்லத்தில் பள்ளிக் கரணை முற்றோதல் குழுவினரால் திரு வாசகம் ஓதப்பட்டது !
ஐயா அவர்கள் சுமார் 15- திருப் பதிகங்களை இறையாற்றல் வெளிப்படும் வண்ணம் உணர்ச்சி பொங்கப் பாடி , எல்லோரையும் மறந்தும் அயல் நினைவிற்கு இடமின்றி ஈர்த்து மகிழ்வித்தார் !
குழு அன்பர்கள் கிட்டத்தட்ட திருவாசகத்தையே மனப் பாடம் செய்திருந்தது அவர்கள் இசைத்து ஓதும் முறையில் உணர முடிந்தது!
குழுவில் உள்ள மகளிர்கள் சிற்ப்பாக ஆடிப் பாடியும் மகிழ்வித்தனர்.
108- நாள் முற்றோதல் 01-01-19 அன்று நிறைவெய்துகிறது !
திருவாசகத்தை மேலும் பட்டி தொட்டியெல்லாம் எடுத்துச் சென்று அனைத்து இன் மக்களையெல்லாம்
சிவத்துக்கே ஆட்படுத்திட சிவ. தாமோதரன் ஐயா அவர்கள் ,எதிர் நிற்கும் தொடர் 10-ஆண்டுகளுக்குச் ஆற்ற வேண்டியப் பணிகள் குறித்து விவாதித்தோம்.
இனி ஆங்காங்கே முற்றோதல் செய்ய விழைவோர் ஐயா அவர்களைத் தொடர்பு கொள்க !
படங்கள் :~~ 19-12-18 முற்றோதல் நிகழ்வின் போது சிவ தாமோதரன் ஐயா அவர்களுடன் ,சிவ பழனி இராஜம்மாள் அம்மா மற்றும் கோமல் கா சேகர்.
திருச்சிற்றம்பலம்.

அந்த நிகழ்விலிருந்து சில காட்சிகள்.

Please rate this

திருமுறை வீதிஉலா மற்றும் உருத்திராக்க வழிபாடு No ratings yet.

திருமுறை வீதிஉலா மற்றும் உருத்திராக்க வழிபாடு

சென்னை, மேடவாக்கம் அருகில் உள்ள ஊர் பெரும்பாக்கம். அங்கே, சைவத்தின் மேன்மைகளை எடுத்து இயம்பும் பொருட்டும், ஆதியும் அந்தமும் இல்லாத சைவ சமயத்தினை அனைவரும் தெரிந்து, வாழ்வில் கடைப்பிடித்து போற்றி உய்வடையும் பொருட்டும் பெரும்பாக்கம் இந்திரா நகரில் குடி கொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் அவர்களின் திருவடிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டது. இது கார்த்திகை மாதம் 9 ஆம் நாள், நவம்பர் 25 ஞாயிறன்று நடைபெற்றது.

கயிலாய வாத்தியங்கள் முழங்க, சுவாமிக்கு அபிடேகம் செய்யப்பட்டது. பின்னர் பன்னிரு திருமுறை ஓதப்பட்டது. பன்னிரு திருமுறை நூல்களை சென்னியில் வைத்து வீதிஉலாவாக அடியார்கள் புடை சூழ, வாத்தியங்கள் முழங்க எடுத்து வரப்பட்டது.  அடியார்களுக்கு காலை அன்னம்பாலிப்பு செய்யப்பட்டது. அதிலிருந்து சில காட்சிகள் கீழே.

 

Please rate this

30 ஆண்டுகளுக்குப் பின் பள்ளிக்கரணையில் கார்த்திகை தீபம் ஏற்றல் No ratings yet.

30 ஆண்டுகளுக்குப் பின்னர் பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் கோவிலில் கார்த்திகை தீப விழா

இறைவன் ஒளியாக இருப்பதை நாம் தீபமாக ஏற்றி உணர்கிறோம். அடிமுடி தேடிய வரலாற்றில், பிறப்பு இறப்பு, ஆதி அந்தம் இல்லாத சிவபெருமான், சோதி உருவாக நெடும் பிளம்பாக எல்லையில்லா வண்ணமாக திரு அண்ணாமலையில் தோன்றினான்.  அந்த நாள் கார்த்திகை முழுமதி நாள். இந்த நிகழ்வை குறிக்கும் வண்ணம் இன்றும் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுகிறது. தீப ஒளியாக இறைவன் எழுந்தருளி பக்தகோடிகள் அனைவருக்கும் அருள் புரிகிறான்.

இதே நேரத்தில் உலகில் எல்லா இடங்களிலும், கோவில்களிலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இது தொன்று தொட்டு வரும் ஒரு பழக்கமாகும். அவ்வாறாக, சென்னை பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் கோவிலிலும் அதன் எதிரில் உள்ள குளத்திலும் தீப வரிசைகள் பல்லாண்டு காலமாக ஏற்றப்பட்டு வந்தது.

இடையில் நுழைந்த மேற்கத்திய பண்பாட்டு தாக்கத்தினால், இந்த பழக்கம் பள்ளிக்கரணையில் நின்று போனது. சென்ற ஆண்டு இதை மீட்டெடுக்க திட்டமிட்டாலும், இந்த ஆண்டு தான் இது நிகழ வேண்டும் என எம்பெருமான் திருவருள் கூட்டியது. பள்ளிக்கரணை ஆதிபுரீசுவரர் கோவிலின் தொண்டர்கள், பக்தர்கள், திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம் ஆகியோர் இணைந்து இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான அகல் விளக்குகளை மாலை 4 மணிக்கு ஆரம்பித்து 6 மணிக்கு விளக்கேற்றினர்.

கோவிலின் மதிற்சுவற்றிலும், குளத்தின் நான்கு திசைகளிலும் உள்ள படிக்கரையிலும், சாலையை ஒட்டியுள்ள குளக்கரையில் முழுவதுமாக விளக்குகள் அடுக்கப்பட்டு ஒளியேற்றப் பட்டன.  மீண்டும் இந்த புண்ணிய பூமி பிறந்துவிட்டது போன்ற ஒரு எல்லையில்லாத இனம் புரியாத இன்ப உணர்வு அத்தனை பக்தர்களுக்கும் ஏற்பட்டது.

இனி வரும் காலங்களில், இந்த தீபமேற்றும் விழா எவ்வித தடையின்றி நடைபெற பேரருளாளன் சிவபிரானின் திருவடிக்கு விண்ணப்பம் வைக்கப்பட்டது.

அதிலிருந்து சில காட்சிகள் இங்கே:

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

தமிழ் அன்னையைக் காப்போம் – கோமல் கா சேகர் No ratings yet.

தமிழ் அன்னையைக் காப்போம். கோமல் கா சேகர்:
ஓம்
சிவ சிவ :


தமிழ் அன்னையைக் காப்போம் !


அன்பர்கள் இந்தப் பதிவினை முழுவதும்
படிக்க வேண்டுகிறேன்.
சிவமே படைத்து மதுரையில் சங்கத் தலைவராகவும் அமர்ந்து புலவர் குழாத்துக்குப் போதித்தப் பெருமை உடையது நம் தாய் மொழி !
நுணுகி ஆய்ந்தால் இறைவனாரைத் தவிர எவரும் இந்தச் சீர் மிகு மந்திர ஆற்றல் உடைய மொழியைப் படைத்திருக்க முடியாது என்றக் கருத்தே எஞ்சும் ! தமிழன் என்ற நம் பண்பாட்டையும் , நாகரீக வாழ்வையும் காக்க ஆதாரம் நம் தாய் நமக்கு ஊட்டி வளர்த்த நம் தமிழன்னையே !
இப்படியே விட்டால் 20 ஆண்டுகளில் 50 சதவீதம் வரை பேச்சு வழக்கில் ஆங்கிலச் சொற்களின் கலப்பு மொழியாகி நம் அழிவுக்கு ஏதுவாகி விடும் ! இது சிவத் துரோகமாகிவிடும் !
தமிழையே அறியாத நம் வழிமுறையினருக்கு எப்படி நம் திருமுறைகளையும் சங்க காலம் தொடங்கி நம் பெருமைகளைப் பறை சாற்றும் நூல்களையும் கற்பிக்க முடியும் ? நம் சிவ மொழிக்கும், சைவத்துக்கும் ஏதாவது செய்தேன் என்ற மன நிறைவு அடைய விழைவோர் ,இதனைப் படி எடுத்து ,தம் கருத்துக்ளையும் தனித் தாளில் பதிவு செய்து முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன் !
தனி நபராக நான் மட்டும் முயன்றால் பயன் கிடைக்காது என்பதை கருத்தில் கொள்க ! பங்காற்றுவோர் சிவத்தின் அருளுக்கு ஆளாவர் !

ஓம்

சிவ சிவ :


தமிழக முதல்வர் அவர்களுக்குத் தமிழ் மொழியைக் காக்க வேண்டும் என எழுதியத் திறந்த மடல்.


அனுப்புபவர் :

கோமல் கா. சேகர்.

103 , பெருமாள் கோயில் வீதி ,கோமல் அஞ்சல். ~609805 ,

நாகப்பட்டினம் மாவட்டம்./9791232555.

பெறுநர்:

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் , தமிழ்நாடு அரசு ,கோட்டை , சென்னை.

நாள்:18-11-2018

~~~~~~~~~~

ஐயா ,

பொருள் : தமிழ் மொழி – ஆங்கில மொழியால் 35 சதம் வரைக் கலப்படம் ஆகியுள்ள இழி நிலை – உடன் மீட்டெடுக்க வேண்டிய நிலை – கருத்துரு சமர்ப்பித்தல்- தொடர்பாக .

பார்வை : தமிழக முதல்வருக்கு என்னால் சமர்ப்பிக்கப்பட்ட 27-01-2010– நாளிட்ட அறிக்கை.

பார்வையில் கண்ட எனது கடிதத்தில் தமிழ் மொழியினை , 35 சத வீதம் வரை ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசும் அளவுக்கு மக்கள் தள்ளப் பட்டு விட்ட அவல நிலையைச் சுட்டி , இந்த அவல நிலையிலிருந்து , தமிழை மீட்டெடுக்க ,அரசுத் தரப்பிலிருந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒரு விரிவான அறிக்கை சமர்ப்பித்து இருந்தேன்.

ஆனால் எந்த விதப் பயனுள்ள நடவடிக்கைகளும் அரசால் எடுக்கப் படவில்லை !

இந்த நிலைக்கு எவர் காரணம் என்பதையெல்லாம் ஆய்வு செய்வதற்கான நேரம் இதுவல்ல !

என்ன காரணம் என்பதை மட்டும் ஆய்ந்து , குறைகளைக் களைந்து தனித் தமிழை மீண்டும் நிலை நிறுத்துவதே தமிழர்களாகிய நம் கடமையாகும் .

தமிழை மீட்டெடுத்துத் தூய்மை செய்யும் அதிகாரம் முழுதும் இறைவன் திருவருளால் ,

தங்கள் கைகளில் இன்று குவிந்திருக்கிறது !

அதனால் அரசுக்கு தனி நிதிச் சுமையின்றி பல நற் பயன் விளைவிக்கும் சட்டங்களை இயற்ற எனது இந்த விரிவான அறிக்கையை தங்கள் கவனத்துக்குச் சமர்ப்பிக்கிறேன்.

இயற்ற வேண்டிய சட்டங்கள் !

01) தமிழ்நாடு தொலைக் காட்சி தமிழ் பயன் பாட்டுச் சட்டம் .

இன்று தொலைக் காட்சிகள் கிட்டத்தட்ட 90 சத வீத மக்களைச் சென்றடைகிறன.

அனைத்து வகை நிகழ்ச்சிகள் தயாரிப்பாளர்களும்,

35 சதம் வரை ஆங்கில மொழியைக் கலந்தே நிகழ்ச்சிகளைத் தயாரித்து அளிக்கிறார்கள் என்பதை தமிழுலகம் அறியும்.

இதனால் கிராமப் புற மக்கள் வரை ,தாம் பேசுவதில் உள்ளப் பல சொற்கள் ஆங்கிலமா என்று கூட அறியாமல் கலப்பு மொழியில் பேசும் இழி நிலை உருவாகி விட்டது.

இன்று ஆண் பெண் இரு பாலருக்கும் ,

ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசினால்தான் சமூகத்தில் மரியாதை என்ற ஒரு தவறான எண்ணம் ஆழமாகப் பதிந்துள்ளதும் இதன் விளைவே ஆகும்.

ஆகவே தனித் தமிழைப் பயன் படுத்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஏதுவாக உரிய சட்டத்தினை உருவாக்கி நடைமுறைப் படுத்த வேண்டும்.

இதனால் மக்கள் தொலைக் காட்சியைப் பார்க்க மாட்டோம் என்று நிறுத்தி விடப் போவதில்லை !

எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை !

செய்தி ஒலியை எழுத்து வடிவில் ,தொடராகக் கீழே எழுதும் போது நிறைய எழுத்துப் பிழைகளும் ,

இலக்கணப் பிழைகளும் மலிந்துள்ளன.

செய்திகளைப் படிப்போரும் ஒருமை ,பன்மை முதலான இலக்கணப் பிழைகளைகளையும் செய்கிறார்கள்.

இதனைத் தவிர்க்க , தமிழை முதன்மைப் பாடமாகப் பயின்றோரையே ,செய்தித் தயாரிப்பாளராகவும் ,படிப்போராகவும் ஒவ்வொரு தொலைக் காட்சியிலும் நியமனம் செய்ய வகை செய்ய வேண்டும். தனித் தமிழில் இயக்கப் படும் மக்கள் தொலைக் காட்சியைக் கருத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

02) தமிழ்நாடு திரைப் படத்துறை தமிழ் பயன் பாட்டுச் சட்டம் ‌.

கிட்டத்தட்ட 1970 வரை

தமிழ்த் திரைப் படங்கள் தூயத் தமிழ் சொற் பதங்களைப் பயன் படுத்தியே தயாரிக்கப் பட்டன.

இதனால் தமிழ் நாட்டில் ஆங்காங்கே வழங்கி வந்த கொச்சைத் தமிழ் பேச்சு வழக்கம் பெருமளவு நீங்கி ,பேச்சு வழக்கில் தமிழகம் முழுதும் சம நிலை ஏற்பட்டது. இது தூயத் தமிழுக்கு ஏற்றம் தந்து பேருதவியாகவும் அமைந்தது !

இன்று பெருமளவு ஆங்கிலக் கலப்பும் ,கொச்சைத் தமிழ் உரையாடல்களுமே திரைப் படத்தில் துறையினரால் வலிந்துப் புகுத்தப்பட்டு ,இம் முறையானது பயன்பாட்டுக்கு வந்து ,தமிழ் சீரழிக்கப் பட்டு வருகிறது.

ஆகவே இந்த இழி நிலையை அறவே போக்க உரிய சட்டம் இயற்றப் பட வேண்டும்

முன்னாள் முதல்வர்கள் மாண்புமிகு ,திரு . எம்‌ ஜி.ஆர் , செல்வி. ஜெயலலிதா ,மற்றும்சிவாஜி , ஜெமினி ,எஸ் எஸ் இராஜேந்திரன் ,

திருமதி கண்ணாம்பாள்

திருமதி விஜயகுமாரி , திருமதி பத்மினி,சாவித்திரி

போன்றோர் பேசியத் தூயத் தமிழ் வசனங்கள் இன்றும் மக்களால் விரும்பப் படுகின்றன என்பதையும் அறிவீர்கள் !

தூய தமிழை மட்டும் பயன்படுத்தி திரைப் படங்கள் எடுத்தால் ,திரைப் படமே பார்க்க மாட்டேன் என எவரும் தவிர்க்கவும் போவதில்லை!

ஆகவே தக்கவாறு ஆய்வு செய்து தூய்மையான தமிழ் உரையாடல்களைப் பயன் படுத்தியே ,திரைப் படங்கள் எடுக்க ஏதுவாகக் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.

03) நாளிதழ் ,வார ,மாத இதழ்கள் தமிழ் பயன்பாட்டுச் சட்டம்.

இன்று

நாளிதழ்களிலும் , வார ,மாத இதழ்களிலும் ,

விளம்பரங்களிலும் , மிகவும் அதிக அளவு ஆங்கில மொழிக் கலப்பு இருப்பதையும் ,

இலக்கணப் பிழைகள் மலிந்துள்ளதையும் ,கருத்தில் கொண்டு,தூய தமிழில் அவை வெளியிடப் பட வகை செய்திட உரிய சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

06) தமிழ் மொழிப் பட்ட வகுப்புப் படித்து , இன்று ஆயிரக் கணக்கானவர்கள் , அரசு மற்றும் தனியார் பணிகளின்றி உள்ளனர்.

தமிழக அரசுப் பணிகளான இள நிலை உதவியாளர் , உதவியாளர் பணியிடங்களுக்கு இவர்கள் தேர்வு செய்யப் பட ஏதுவாக உடனடியாக 50 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்க வேண்டும் !

எவ்விதத் தகுதியும் நோக்காமல் ,இப் பதவிகள் இவர்கள் எய்தியுள்ளத் தகுதிக்குக் குறைவான தகுதித் தேவை உடையனவாக இருப்பதால் முதுமை அடிப்படையில் உடன் நியமன ஆணைகள் வழங்க வேண்டும்.

07) பல அச்சகங்களில் அச்சிடப்படும் சிறு அறிவிப்புகள் , விளம்பரங்கள்

,பத்திரிகைகளில் எண்ணற்றப் பிழைகள் மலிந்துள்ளன !

அரசுத் துறை ,தனியார் துறை சார்ந்த வெளியீடுகளிலும் பிழைகள் மலிந்துள்ளன ! தனியார் வர்த்தக நிறுவன விளம்பரப் பலகைகளிலும் பிழைகள் மலிந்துள்ளன.

வட்ட அளவில் தமிழாசிரியர் குழுமம் அமைத்து உரிய கட்டணம் பெற்று பிழை நீக்கித்தான் வெளியீடுகள் செய்யப் பட வேண்டும் என்று கட்டுப் படுத்தலாம் !

இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டே ஊதியம் வழங்கலாம்.

அரசாணை , அறிவிப்பு இதர வெளியீடுகளில் பிழைகள் தவிர்க்க வட்டாட்சியர் ,

கோட்டாட்சியர் முதலான அலுவலகங்களுக்கு ஒவ்வொரு தமிழ்ப் புலவரை நியமனம் செய்யலாம் .

08) இன்று தனித் தமிழ் இளங்கலை ,முது கலைப் பாடத்திட்டங்கள் முழுமையான தமிழ் வல்லுனாராக்கும் வகையில் இல்லை !

வேலை வாய்ப்பின்மையைக் கருதி ,அதிக மதிப்பெண்கள் பெறும் நினைவாற்றல் உள்ள மாணவர்கள் ,வேறு உயர் கல்விப் பட்டங்களைப் பெற முனைவதால் ,

குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களே தமிழ் இளங்கலை முதுகலை வகுப்புகளில் சேர்ந்து படிக்கிறார்கள் !

வேலை வாய்ப்பின்மையே முதன்மைக் காரணம்.

1100 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் நினைவாற்றல் உள்ள மாணவர்கள் தமிழ் படிக்க முன் வருவதில்லை .

மேல் நிலைக் கல்வி முடிந்த உடனேயே பேராசிரியர் ,மேல் நிலைப் பள்ளி ஆசிரியர் ,உயர் நிலைப் பள்ளிப் பணிகளுக்கு

மதிப்பெண் அடிப்படையில் , இவர்கள் படித்து வெளி வரும்போது ஏற்பட உள்ள பணியிடங்கள் கணக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்து, ஒருங்கிணைந்த எட்டாண்டு தமிழ்க் கல்வி பாடத் திட்டம் அமைத்து ,முழுப்

புலவராக்கி முனைவர் பட்டத்துடன் வெளிவரும்படி பயிற்றுவிக்க , முயற்சி மேற்கொண்டால் , மீண்டும்

நுண்மாண் நுழைபுலம் மிக்கப் புலவர்கள் தமிழகத்துக்குச் சொத்தாகக்

கிடைப்பார்கள்.

வேலை உறுதி இருந்தால் 95 சத வீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுக்கும் ஆற்றல் மிக்க மாணவர்கள் விரும்பிக் தமிழ் படிக்க முன் வருவர் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு குழு அமைத்து இந்த இனம் ஆய்வு செய்யப் பட வேண்டும்.

09) இன்றைய நிலையில் இரண்டு தலைமுறை மாணவர்கள் , தமிழ் மொழியைப் பிழையின்றி எழுதவோ ,

படிக்கவோ ,தனித்

தமிழில் பேசவோ இயலா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் !

முற்றிலும் முதல் வகுப்பிலிருந்து 12- ஆம் வகுப்பு வரையாது , கட்டாயத் தமிழ் வழி பயின்று முறையே இந்தச் சீர்கேட்டினை அகற்ற வல்லதாகும்.

இன்று ஆங்கில வழிப் பயிற்றுப் பள்ளிகளை மக்கள் நாடும் ஒரே காரணம் ,மேல் நிலைப் பள்ளிக் கல்வியை நிறைவு செய்யும் போது தம் பிள்ளைகள் தங்கு தடையின்றி ஆங்கிலத்தில் பேசவும் ,எழுதவும் வல்லவனாக வேண்டும் என்பது ஒன்றே அன்றி வேறு காரணம் எதுவும் இல்லை.

உயர் நிலைத் தொழிற் கல்வி பயின்ற மாணவர்களில் தங்கு தடையின்றி ஆங்கிலத்தைப் பேசும் மாணவர்களே பணிகளுக்கு விரும்பித் தனியார் நிறுவனங்களால் தேர்வு செய்யப் படுவதே , இதன் அடிப்படை .

பள்ளி இறுதி வகுப்பு நிறைவு செய்யும் 12 ஆண்டு காலத்துக்குள் மாணவர்களை ஒரு மொழியில் நன்கு பேசவும் ,எழுதவும் தயார் செய்ய முடியாது என்பது ஏற்புடையதன்று !

ஆங்கிலப் பாடத் திட்டத்தை மாற்றி அமைத்துப் பேச்சுப் பயிற்சிக்கு தேவையான அளவு கால ஒதுக்கீடு செய்து பயிற்சி கொடுத்தால் இந்தக் குறைபாடு தீர்ந்துவிடும் !

மக்கள் தனியார் பள்ளிகளை நாடும் தேவையும் குறையும் .

இந்த கருத்துருவை ஆழ்ந்து ஆய்வு செய்யின் தமிழும் ஏற்றம் பெறும் ‌; ஆங்கிலத் தேவையும் மக்களுக்கு நிறைவேறும் !

அரசன் இறைவனால் நியமிக்கப் படுகிறான் ; முன்னைத் தவமின்றி ஒருவர் உயர் பதவியை எய்த முடியாது!

வரலாற்றிலேயே இல்லா அளவுக்கு ,இற்றை நாளில் நம் உயிரினும் மேலானத் தாய் மொழி கீழ்படுத்தப் பட்டுள்ளது.

இப்போதே முயன்றாலும் , இந்தச் சீர்குலைவில் இருந்து மீண்டும் தமிழ் தன் இயல்பு நிலையை அடைய முப்பது ஆண்டுகளாவது ஆகும்.

ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இறைவனாரால் குவித்து வைக்கப் பட்டுள்ளது.

இந

்தத் திட்டங்களைச் செயல் படுத்துவதால் எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை !

மாறாக மக்களுக்குப் பெரும் பயன்களே விளையும் .

இறைவனாரால் சங்கத் தலைமை தாங்கி வளர்த்தெடுக்கப் பட்டது நம் தமிழ் மொழி !

இதனை மீட்டெடுக்கும் செயல் திட்டங்களைத் தாங்கள் தக்க ஆணைகளிட்டுச் செயலாக்கத்துக்குக் கொண்டு வந்தால் ,2000 ஆண்டு கால தமிழக வரலாற்றில் தங்கள் பெயர் பொன்

எழுத்துக்களால் பொறிக்கப் பெறும்.

“தமிழ்த் தாயை மீட்டெடுத்தத் தலைவன்” என்ற அழியாப் புகழுக்கு ஆளாவீர்கள்.

தங்கள் ஆட்சியும் புகழுக்குரியதாகும்‌ .

ஆகவே தமிழ் மற்றும் தமிழர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு ஒரு வரலாற்றில் போற்றத்தக்க நல்ல முடிவை எடுத்து செயலாக்கம் செய்திடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள ,

( கோமல் கா சேகர்/ 18.11. 2018)

இணைப்பு:

தமிழக அரசுக்கு அனுப்பிய எனது 27-01-2010 நாளிட்டக் கடித நகல் :

நகல்கள் : —

01)மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள்.

02) மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர்./03)பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.

04)கல்வித் துறைச் செயலர் ,சென்னை. 05)இயக்குநர் ,தமிழ் வளர்ச்சித்துறை சென்னை,

06) துணை வேந்தர் தமிழ்ப் பல்கலைக்கழகம்.

தஞ்சாவூர்

07) தமிழ்த் துறைத் தலைவர்கள் ,

அனைத்துப் பல் கலைக் கழகங்கள்.

Please rate this

திருமுறை அறிவோம் திருமுறைகளின் பெருமை துண்டறிக்கை 4.6/5 (5)

திருமுறை அறிவோம். வாழ்வில் திருப்பத்தைக் காண்போம்.

கோவிலுக்கு வருபவர்களுக்கும், வீடு வீடாக சென்று திருமுறையின் பெருமைகளை துண்டறிக்கையாக கொடுப்பதற்கும் ஒரு பக்க அறிக்கை இங்கே உள்ளது. இதை பதிவிறக்கம் செய்து, பத்தோ, ஐம்பதோ, நூறோ, ஆயிரமோ, லட்சமோ, உங்கள் வசதிக்கேற்ப அச்சிட்டு அனைவருக்கும் கொடுக்கலாம். திருச்சிற்றம்பலம்.

திருமுறை அறிவோம் – ஒரு பக்க துண்டறிக்கை பதிவிறக்கம் செய்ய https://drive.google.com/open?id=1IsGc106rkSFMYekel1trMGpshA5jzU7r

திருமுறை அறிவோம். வாழ்வில் திருப்பத்தைக் காண்போம்.

        கலியுகத்தில் நமக்கு ஊழ்வினையால் ஏற்படும் துன்பங்களுக்கும், வாழ்வில் நாம் சந்திக்கும் அனைத்து துன்பங்களுக்கும், பிறவி என்னும் மிகப்பெரிய பிணிக்கும், மருந்தாக அமைந்து நம்மைக் காத்து அருள்வது பன்னிரு திருமுறைகள் எனப்படும் சிவ ஆகமங்களாகும். மிகவும் பெருமைமிக்கது, அளப்பரியது, ஆற்றல்மிக்கது. வேத ஆகமங்கள் மற்றும் சைவ சித்தாந்தத்தின் பிழிந்த சாறாக, நமக்கு இன்பம் தரும் நமது தமிழ் மொழியில், அருளாளர்கள் வழியாக இறைவனால் நமக்கு அருளப்பட்டது, பன்னிரு திருமுறை என்னும் தமிழ் வேதம். நம்முடைய துன்பங்கள் அனைத்திற்க்கும் மூல காரணமாக விளங்குவது நம் அறியாமை. அந்த அறியாமையிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு திருமுறை வாக்குகள் பெரிதும் உதவுகின்றன. வினை வயப்பட்டுத் துன்புறும் நாம் திருந்தி உய்யும் பொருட்டு, இறைவன் அருளாளர்களை இப்பூமிக்கு அனுப்பி அவர்கள் வாயிலாக நமக்கு இந்த திருமுறைகளை அருளிச் செய்துள்ளான். திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மிகுந்த மந்திர ஆற்றல் உடையவை. திருமுறைகளை நாம் பாராயணம் செய்து ஓதுவித்தால், அதில் உள்ள மந்திர ஆற்றல், நம் உயிரில் கலந்து நமது அறியாமையைப் போக்கும். யாராலும் மாற்றியமைக்க முடியாத நம் விதியை, இறைவனின் கருணையினால் மட்டுமே மாற்றியமைக்க முடியும். விதியை மதியால் வெல்வது என்பது திருமுறைகளை ஓதுவித்து, இறைவன் அருள்பெற்று, நம் விதியை மாற்றுவதேயாகும்.

       பன்னிரு திருமுறைகளால் நம் ஆன்மீக பூமியில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் சில: பாண்டிய மன்னன் வெப்பு நோய் தீர்ந்து, கூன் நிமிர்ந்தது. வேதங்களால் பூட்டப்பட்ட திருக்கதவு திறந்து, பின் தாளிட்டது. பாலை நிலம் நெய்தல் ஆனது. தேவார ஏடுகள் தீயில் கருகாமல் பச்சையாக இருந்தது, வைகை ஆற்று வெள்ளத்தில் எதிரே நீந்தியது. ஆண் பனை பெண் பனையாயிற்று. எலும்பு பெண்ணாகியது. விடத்தினால் இறந்த செட்டி உயிர் பெற்றார். ஆற்றில் போட்டது குளத்தில் கிடைத்தது. சுண்ணாம்பு காளவாயில் 7 நாட்கள் உயிரோடு இருந்தது. மதயானையை வணங்கச் செய்தது. கல்லில் கட்டி கடலில் வீசியவர் தெப்பமாக மிதந்து கரை சேர்ந்தது. நரி குதிரையாகியது. முதலை விழுங்கிய பிள்ளை 3 ஆண்டுகள் கழித்து மீண்டது. பிறவி ஊமை பேசியது. சிவபெருமானே தம் கைப்பட எழுதியது நூலானது. இன்னும் பல எண்ணற்ற அற்புதங்களை செய்துள்ளது பன்னிரு திருமுறை. திருமுறையே சைவநெறிக் கருவூலம், செந்தமிழ் வேதம்.

       பன்னிரு திருமுறைகள், 27 ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டது. திருஞானசம்பந்தரால் பாடிய திருக்கடைக்காப்பு 1,2,3 ஆம் திருமுறை. திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் 4,5,6 ஆம் திருமுறை. சுந்தரர் பாடிய திருப்பாட்டு 7 ஆம் திருமுறை. மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், திருக்கோவையார் 8 ஆம் திருமுறை. 9 ஆசிரியர்கள் பாடிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு 9 ஆம் திருமுறை. திருமூலர் அருளிய திருமந்திரம் 10 ஆம் திருமுறை. காரைக்கால் அம்மையார் முதலிய 11 ஆசிரியர்கள் அருளிய பிரபந்தம் 11 ஆம் திருமுறை. திருத்தொண்டர் 63 நாயன்மார்கள் வரலாறு பாடும் சேக்கிழார் அருளிய பெரியபுராணம் 12 ஆம் திருமுறையாகும். மொத்தம் 18,326 பாடல்களைக் கொண்டது பன்னிரு திருமுறை.

       பிறப்பு இறப்பு, ஆதி அந்தம் இல்லாத சிவபெருமான் ஒருவரே முழுமுதற்கடவுள். பன்னிரு திருமுறை சிவபெருமானின் மந்திர வடிவமாகும். திருமுறை சிவாலயங்களில் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பெற்று சிவபெருமானாகவே வழிபடப் பெற்று வருவது. பன்னிரு திருமுறைகளை ஓதினாலும், ஓதுவதைக் கேட்டாலும், அத்தனை தீய சக்திகளும் அவ்விடத்திலிருந்து விலகி நல்ல மந்திர சக்தியால் அந்த இடம் சூழ்ந்து நல்லதே நடக்கும். ஆகையால் திருமுறை அறிவோம். தினமும் திருமுறை ஓதுவோம். திருச்சிற்றம்பலம்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

சைவ சமய சாத்திர நூல்கள்

Please rate this

திருநீற்று இயல் – திருநீறு பற்றிய அனைத்து முக்கிய தகவல்கள். திருநீறு நிலத்தில் சிந்திவிட்டால் என்ன செய்ய வேண்டும்? 5/5 (1)

திருநீற்று இயல் – திருநீற்றின் மகிமை

திருநீற்றின் பெருமை வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், திருமுறைகள் என்று எங்கும் குறிப்பிடப்படுகிறது. அவையெல்லாம் பல ஆண்டுகள் பேசிக் கொண்டே இருக்கலாம். அவற்றிலிருந்து சில பெருமைகளையாவது நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

சிவ தொண்டு செய்ய விரும்புபவர்கள் இந்த திருநீற்றின் பெருமை சொல்லும் இரண்டு பக்க கோப்பினை அச்சிட்டு, அவர்கள் பொருளாதார வசதிக்கு ஏற்ப 50, 1000, ஒரு லட்சம் என்று பிரதிகள் அச்சிட்டு கோவிலுக்கு வருபவர்களுக்கும், உங்கள் தெருவில் மற்றும் அடுக்ககத்தில் இருக்கும் அன்பர்களுக்கும் வழங்கலாம்.

https://drive.google.com/open?id=1EiYg8mskN0Q8BFsiwudRl31iUfSkvSlD

பொதுவான பதிப்பு:

https://drive.google.com/open?id=1jwymrjxhpx6Ez580zpeWVpB63o4co41E

திருநீற்றின் சில பெருமைகளை எடுத்துரைக்கும் சொற்பொழிவு:

சிவமயம்

திருநீற்று இயல்

சைவ சமயத்தோர் உடம்பில் அணிய வேண்டிய அடையாளம் யாது?

        திருநீறு

திருநீறாவது யாது?

        பசுவின் சாணத்தை நெருப்பில் சுடுதலால் உண்டாகிய திருநீறு.

எந்த நிறத் திருநீறு பூசத்தக்கது?

        வெள்ளை நிறத் திருநீறு.

திருநீற்றினை எதில் வைத்துக் கொண்டு அணிய வேண்டும்?

        பட்டுப் பையிலோ, சம்புடத்திலோ வைத்துக் கொண்டு அணிய வேண்டும்.

திருநீற்றினை எத்திக்கு முகமாக இருந்து அணிதல் வேண்டும்?

        வடக்கு முகமாகவே, கிழக்கு முகமாகவே இருந்து அணியலாம்.

திருநீற்றினை எப்படி அணிய வேண்டும்?

        நிலத்தில் சிந்தாத வண்ணம் அண்ணாந்து ‘சிவசிவ / நமசிவாய / சிவாயநமஎன்று சொல்லி, வலக்கையின் நடு மூன்று விரலினாலும் நெற்றியில் அணிதல் வேண்டும்.

திருநீறு நிலத்தில் சிந்திவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

    சிந்திய திருநீற்றினை உடனே எடுத்து விட்டு, மேலும் அந்த இடத்தில் துடைத்தெடுக்க வேண்டும்.

திருநீற்றினை நடந்து கொண்டோ, படுத்துக்கொண்டோ பூசலாமா?

        கூடாது.

திருநீற்றினைக் கட்டாயமாக அணிய வேண்டிய நேரங்கள் யாவை?

  தூங்கப் போகும் போதும், தூங்கி எழுந்த போதும், பல் துளக்கிய உடனும், குளித்த உடனும், உணவு உண்ணும் முன்னும், உண்ட பின்னும், சூரியன் தோன்றி மறையும் போதும் திருநீறு அணிய வேண்டும்.

ஆசாரியார், சிவனடியார் திருநீறு தந்தால் எப்படி வாங்குதல் வேண்டும்?

        விழுந்து வணங்கி எழுந்து கும்பிட்டு இரண்டு கைகளையும் நீட்டி வாங்குதல் வேண்டும்.

கடவுள் முன்னும், குரு முன்னும், அடியார் முன்னும் எப்படி நின்று திருநீறு அணிய வேண்டும்?

        முகத்தை திருப்பி நின்று அணிய வேண்டும்.

திருநீறு அணிதல் எத்தனை வகைப்படும்?

        இரண்டு வகைப்படும், அவை : 1. நீர் கலவாது பொடியாக (உத்தூளனம்) அணிதல், 2. நீர் கலந்து முக்குறியாக ( திரி புண்டரம் ) அணிதல். (ஹோமம் செய்த நீற்றினை நெய்யில் குழைத்து அணிதல் ரக்ஷை எனப் பெயர் பெறும்.)

திரிபுண்டரமாகத் தரிப்பதன் அறிகுறி யென்ன?

        ஆணவம், கன்மம், மாயை யென்னும் மூன்று மலங்களையும் நீக்குமென்கிற குறிப்புத்தோன்றத் தரிப்பதாம்.

முக்குறியாக அணியத்தக்க இடங்கள் யாவை?

   தலை, நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறு இடங்களாம்.

முக்குறியாக அணியும் போது நெற்றியில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

        இரண்டு கடைப் புருவ எல்லை வரை அணிய வேண்டும். அதற்குக் கூடாமலும் குறையாமலும் அணிய வேண்டும்.

மார்பிலும், புயங்களிலும் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

        அவ்வாறங்குல நீளம் அணிய வேண்டும்.

மற்றைய இடங்களில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

        ஒவ்வோர் அங்குல நீளம் அணிய வேண்டும்.

முக்குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?

        ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டலாகாது.

சைவ சமயத்துக்கு விபூதி ருத்திராக்ஷம் முக்கியமானதற்குக் காரணமென்ன?

        பரமசிவனுடைய திருமேனியிலும் திருநேத்திரத்திலும் உண்டானமையால் முக்கியமாயின.

அவைக ளுண்டான வகை எப்படி?

        பரமசிவனுடைய அக்கினிபோன்ற திருமேனிமேல் இயல்பாகப் பூத்ததுவே அனாதியான விபூதி. பின்பு தேவர் முதலிய சராசரங்களையெல்லாம் இறுதிக்காலத்தில் நீறாக்கித் தம்முடைய திருமேனியில் தரித்தருளினாரே அது ஆதி விபூதி. நெருப்பின்மேல் நீறுபூத்திருப்பதை இப்போதும் திருஷ்டாந்தமாகக் காணலாம்.

அதனை அணிவதனால் பயன் என்ன?

        மாபாதகங்களெல்லாம் நீங்குமென்றும் அப்படிக்கொண்ட விபூதியை பசுவின் சாணத்தினால் விளைக்க வேண்டுமென்றும் அப்படி விளைப்பதில் கற்பம், அநுகற்பம், உபகற்பமென மூன்று விதியுண்டென்றும் அவற்றுள் ஒரு விதிப்படி விளைவித்துத் தரித்துகொள்ள வேண்டுமென்றும் ஆகமங்கள் சொல்லுகின்றன.

கற்பவிதி யாவ தெப்படிக்கொத்தது?

        நோயற்ற நல்லபசுக்களைப் பரிசுத்தமுள்ள தொழுவத்திற் சேர்த்து அவைகளிடுகிற சாணத்தைப் பூமியில் விழவிடாமல் தாமரையிலையில் சத்தியோசாத மந்திரத்தால் எடுத்துக் கொண்டு மேலுள்ள வழுவை நீக்கிவிட்டு, வாமதேவத்தாற் பஞ்சகவ்வியம் விட்டு, அகோரத்தால் பிசைந்து, தற்புருடத்தால் உருண்டையாக்கி சிவ மந்திர ஓமத்தால் உண்டான சிவாக்கினியில் சிவபெருமான் திருவடிகளை நினைந்து இட்டுப் பக்குவமாக வெந்த பிற்பாடு எடுத்துப் புதுப்பானையிலிட்டு வேண்டியமட்டில் விபூதிக் கோவிலில் வைத்துக் கொண்டு பூமியில் சிந்தாமல் தரித்துக்கொண்டால் செனன மரணதுக்கம் நீங்கி மோக்ஷமடையலாம். இவ்வாறு விளைவிப்பதுதான் கற்பவிதி. சாணத்தை யேந்தும்போதும் அக்கினியி விடும் போதும் வெந்தபின்பு எடுக்கும்போதும் புதுப்பானையில் வைக்கும்போதும் மந்திரஞ் சொல்லவேண்டும்.

அனுகற்பவிதி எப்படி விளைவிப்பது?

        காட்டிலுலர்ந்த பசுவின் சாணத்தை யுதிர்த்துக்கோசலம் விட்டுப் பிசைந்து சிவாக்கினியி லிட்டுப் பக்குவப்படுத்துவதாம்.

உபகற்ப விபூதியாவது யாது?

        இயல்பாக வெந்த காட்டுச்சாம்பல் சிவாலய மடைப்பள்ளிச் சாம்பல் இவைகளையெடுத்துக் கோசலம்விட்டுப் பிசைந்து உண்டாக்கி சிவாக்கினியிலிட்டுப் பக்குவப்படுத்தி முன்போல் எடுத்து வைத்துக்கொண்டு தரித்துக்கொள்ளுவதாம்.

விபூதிக்கோவில் எதனாலமைக்கப்பட்டது?

    வஸ்திரம், புலித்தோல், மான்தோல் இவைகளால் அமைக்கவேண்டும். இவையேயன்றி வேறுமுண்டு.

எல்லாச் செந்துக்களிலும் பசு சிரேஷ்டமான தென்னை?

        புண்ணியநதி, தீர்த்தங்கள், முனிவர்கள், மேலானதேவர்கள், வாசமாகும்படியான அங்கங்களுடன் உற்பவமானதினாலும் தெய்வலோகத்திலிருக்கின்ற காமதேனுவின் குலமானதாலும் சிரேஷ்டமானது. அன்றி, பசு மலநீக்கத்துக்குக் சூரணமான திருநீற்றினுக்கு முதற்காரணமான கோமயத்தை விளைவித்தலாலுமென வுணர்க.

திருநீற்றின் பெருமை சொல்லும் திருஞானசம்பந்தர் பதிகம் யாது ?

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருல வாயான் திருநீறே.

இந்த பாடல் மிகவும் மந்திர ஆற்றல் வாய்ந்தது. சிவபெருமான் மீது மிகுந்த அன்பு செலுத்தி, இந்த பதிகத்தை ஓதி, நெற்றி நிறைய திருநீறு இட்டால், எல்லா நோய்களும் உடனே குணமாகும். திருநீறு எல்லா செல்வங்களையும் விட மிகப் பெரிய செல்வமாதலால், பணம் பொருள் வந்து குவியும். எல்லா கவலைகளும் நீக்கிப் போகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.  திருச்சிற்றம்பலம்.

 

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

Please rate this

யார் சைவர்கள் ? – சிவசித்ரா அம்மையார் 5/5 (1)

யார் சைவர்கள் ?

சிவசித்ரா அம்மையார், இசைஞானியார் திருக்கூட்டம்.

யார் சைவர்கள் ?

சைவர்கள் அல்லாதவர்கள் யாவர் ?

சைவத்திற்கு வெளியே ஏதாவது பொருட்கள் உண்டா ?

அத்தனைக்கும் கதாநாயகன் யார் ?

உலகின் வீதிகள் தோறும் சைவபாடசாலைகள் அமைப்போம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

நெஞ்சுவிடுதூது – சிவசித்ரா, இசைஞானியார் திருக்கூட்டம் No ratings yet.

நெஞ்சுவிடுதூது – சிவசித்ரா அம்மையார், இசைஞானியார் திருக்கூட்டம்

நெஞ்சுவிடுதூது – பாகம் 1

நெஞ்சுவிடுதூது – பாகம் 2

நெஞ்சுவிடுதூது – பாகம் 3

நெஞ்சுவிடுதூது – பாகம் 4

நெஞ்சுவிடுதூது – பாகம் 5

நெஞ்சுவிடுதூது – பாகம் 6

நெஞ்சுவிடுதூது – பாகம் 7

 

உலகின் வீதிகள் தோறும் சைவபாடசாலைகள் அமைப்போம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

முப்புரிநூல் – (பூணூல்) ஞான விளக்கம் 5/5 (1)

முப்புரிநூல் – (பூணூல்) ஞான விளக்கம்

ௐௐௐௐௐௐௐௐௐ
சிவ சிவ !
********************
முப்புரி நூல் ( பூணூல் )ஞான விளக்கம் !
**************
பூணூல் அணிவது சிவாச்சாரியார்கள் & பிராமணர்களுக்கு மட்டுமே உரியதா ஐயா !
~ எல்லா இனத்தவருக்கும் பொதுவான , நம் இறைவனாரே அணிந்து இருக்கும் போது ஏன் இந்த மயக்கம் ?

முக நூலில் பல அன்பர்கள் வினா தொடுத்திருக்கிறார்
களே !
~ ஆம் ! ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டியது நம் கடமை !
~ விளக்கம் செய்யுங்கள் ஐயா !
~ முப்புரி நூல் அந்தணர் , சத்திரியர் , வைசியர் ,சூத்திரர் என்ற நான்கு குலத்தவருக்குமே உரியது ! அது எல்லோருக்கும் தனி உரிமை !
~ சூத்திரர் என்பது இழிவான குலமா ஐயா ?
~ இவ்வளவு கற்றும் உனக்கு ஏன் இந்த ஐயப்பாடு ?
~ இல்லை , என ஓரளவு அறிவேன் ! ஐயா !
ஆயினும் தெளிய உணர்வதற்கும் , பிறர் அறிந்து தெளிந்து உணர்வதற்கும் , உணர்த்துங்கள் ஐயா !
~ இப் பெரும் பிரிவுகள் ,அவரவர் செய் தொழிலால் அமைந்தவை அல்லால் , சாதி குல ஏற்ற தாழ்வால் அல்ல !
~ விளக்கம் வேண்டும் ஐயா !
~ சிவாச்சாரியார்களும் ,அந்தணர்களும் எவர் உழைப்பால் உண்டு உடுத்து ,உறைந்து சுகித்து வாழ்கிறார்கள் ?
~ உணர்ந்தேன் ஐயா !
பிற குலத்தவர்கள் தான் தம் உடல் உழைப்பாலும் , அரிய செயல்களாலும் அவர்களைத் தாங்குகிறார்கள் !
~சிவாச்சாரியார்களுக்கு விதிக்கப் பட்டக் கடமைகள் என்ன ?
~ அகத் தூய்மை புறத் தூய்மைகளுடன் வாழ்ந்து ,வேத ,
ஆகமங்களை ஐயம் திரிபு அற ,அவர்கள் ஆச்சாரியார்களிடம் கற்று , சமய ,விசேட , நிர்வாண தீட்சைகள் ஏற்று ,நித்திய அக்னி வளர்த்து , சுவார்த்த பூசை எனப் படும் தனக்கு உரிய பூசைகள் இயற்றி , பின் ஆச்சாரிய அபிடேகம் செய்யப் பட்ட பிறகே , சிவாலயத்தில் கருவறையில் புகுந்து ,இறைவனை பூசை செய்யத் தகுதி உடையோராவர் !
~ சிவ சிவ !
~ அது மட்டுமல்ல ! ஒரு கன்னியை திருமணம் செய்த பிறகே பூசை செய்ய தகுதி பெறுவர் !
உடல் ஊனங்களும் ,தொடர் நோய் உடையோரும் , நல் ஒழுக்கங்கள் இல்லாதோரும் பூசிக்கத் தகுதி உடையோரல்ல !
~ திருமணம் இதர சுப ,அசுப காரியங்களும் இவர்கள் செய்யலாமா ?
~அவை அந்தணர்களுக்கு
*உள்ளேயே , சில உட்பிரிவினர்களுக்கே உரியவை !
~ சிவாச்சாரியார்கள் குலம் ,இறைவனாரின் ஐந்து முகங்களில் தோன்றிய முனிவர்கள் வழி வந்த மரபினர் என்பது சிவாகம முடிவு !
சிவத்தை மட்டுமே இறைவனாகக் கொண்ட கொள்கையால் அந்தணரினும் மேம்பட்டப் பெருமைகள் உடையோர் !
~ அவர்கள் இல்லற வருவாய்க்கு அரசு , தனியார் பணிகளுக்குச் செல்கிறார்களே ! ஐயா ?
~வகுக்கப் பட்ட நியதிகளை மீறுதல் ,சிவாச்சாரியார் என்ற குலப் பெருமைக்கு உகந்ததல்ல !
உடன் தகுதி இழப்பு ஏற்பட்டு விடும் !
~ போதும் ஐயா !*
அந்தணர்களின் குலப் பெருமைகளை அறிய அவா ஐயா !
அந்தணர்கள் வேதங்களில் வகுக்கப்பட்ட அறநெறிகளை வழுவாது கடைபிடித்துஏனைய குலத்தவருக்கெல்லாம் உதாரணமாக ,ஒரு தவ வாழ்க்கையை வாழக் கடமைப் பட்டோர் !
இவர்களுக்கு வகுக்கப் பட்ட வாழ்வியல் கடமைகள் என்ன ?
இறைவனார் அருளிச் செய்த நான்கு வேதங்களையும் ,ஐயம் திரிபு அறக் கற்க வேண்டும் !
அன்றாடம் முத்தீ வளர்த்து , சிவ பூசை இயற்றக் கடவர் !
~ வேதத்தின் ஞான பாத்த்தை ஆராய்ந்து வழிவழியாக வரும் வம்சத்தாருக்கு கற்பிக்கக் கடமை உடையோர் !
அவர்களில் சிலர் ஆச்சாரியர்களாக அவ் வினத்தவர்களுக்கு உரிய சுப , அசுப கடமைகளையும் , கரும காண்ட விதிப்படி ஆற்றுதற்கு உரியோர் ஆவர் !
ஞான பாதத்தை உணர்த்த ,அக் குலத்தவரில் தக்க ஆச்சாரியார்கள் இல்லா நிலை ஏற்படும் போது , பிற மூன்று குலத்தில் தோன்றிய வேத விற்பன்னர்களிடம் பயில அனுமதி உண்டு !

~ உதாரணம் வேண்டும் ஐயா ?
~ வேத வியாசர் யார் ?
~ பராசர முனிவர் வழி , சத்தியவதி என்ற
மீனவ குலப் பெண்ணுக்குப் பிறந்தவர் என்பது வரலாறு !
~ மகா பாரதத்தை அருளியவர் யார் ?
~ வியாச மா முனிவர்! பராசர முனிவருக்கும் , சத்திய வதிக்கும் பிறந்தவர் !
இராமாயணத்தை யாத்த வான்மீகி முனிவர் யார் ?
~ சூத்திர குலத்தவர் என்பர் !
~18 புராணங்களையும் அருளிய சூத முனிவர் யார் ?
வியாச முனிவரின் சீடர் ! அவர் எக் குலத்தவர் ?
பிராமணருக்கும் , பிராமணல்லாருக்கும் பிறந்தவர் என்பதாலேயே , சூத முனிவர் எனப் படுவார் !
~ அவர் எவருக்கு 18 புராணங்களையும் போதித்தார் ?
~ நௌமி சாரண்ய பிராமண குலத்தவர் உள்ளிட்ட , முனிவர்கள் அவரை எதிர் கொண்டு ,வணங்கி வரவேற்று ,உபசரித்து ,உயர்ந்த ஆசனத்தில் இருத்தி ,தாங்கள் கீழே அமர்ந்து 18 புராணங்களையும் விரும்பி மீண்டும் மீண்டும் கேட்க ,அவர் , தன் ஆச்சாரியார் வியாசர் , தனக்கு உணர்த்தியவாறு எடுத்து உரைத்தது வரலாறு !
இப்படியாகப் பல வரலாறுகள் உள்ளன ! விரிப்பின் பெருகும் !
~ இறைவனார் சாதி குலப் ஏற்ற இரக்க சிந்தனைகளை , திருமுறை சாத்திரங்களிலும் , திருமுறை , சாத்திர குரு சீடர் உறவு முறையிலும் வைத்து , எல்லா இனத்தவரும் சம நிலையினரே என உணர்த்தியதை உய்த்து உணர்க !
~ பிராமணர்கள் வேறு தொழில் செய்யக் கூடாதா ? ஐயா !
செய்யக் கூடாது !
அவ்வாறு பிற குலத்தவருக்கு வகுக்கப்பட்டத் தொழில்களைச் செய்யின் , நெறிகள் கெடும் ; உலகிற்கே கேடு சூழும் !
இன்றைய நிலை முற்றிலும் மாற்றம் அடைந்திருக்கிறதே ?ஐயா !
அதனால்தான் பஞ்ச பூதங்கள் தம் செயல்களில் வழுவுவதால் வாழ்வியல் கேடுகள் சூழ்ந்து விட்டன !*இதற்கு யாரைக் குறை கூறுவது ஐயா ?
அரசு ,சமுதாயம் இரண்டுமே
குற்றவாளிகள் !
என்ன செய்தால் தீரும் ?
~ எல்லையைத் தாண்டி விட்டது !
இருப்பினும் ஓரளவு முன்னோர் வகுத்த நெறிக்குத் திரும்ப முயலலாம் !
முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் !
~ சொல்லுங்கள் ஐயா !
~வேதாகம , தேவாரப் பாட சாலைகள் ஆங்காங்கே தொடங்க வேண்டும் !
சிவாச் சாரியார்களையும்*,
அந்தணர்களையும் ,
அனைத்து ஊர்களிலும் வீடுகள் கட்டிக் கொடுத்துக் குடி அமர்த்த வேண்டும் !
யோக நிலையில் நின்று ,ஞான காரியங்களை நிறைவேற்ற வேண்டிய அவர்களுக்கு இல்லத் தேவைகளைப் பற்றிய எந்த சிந்தையும் இல்லா அளவுக்கு ,தேவையான செல்வ வளங்களை அளித்துக் கண்ணின் மணிபோல் காக்க வேண்டும் !
பயன் என்ன விளையும் !
வானம் சுரக்கும் !
பஞ்ச பூதங்களுக்கான அதி தேவர்களும் , வேதங்களும் , திருமுறைகளும்* *சிவாலய பூசைகளும்,
விழாக்களும் போற்றுதல் செய்யப் படுவது கண்டு ,மகிந்து ஆசி வழங்குவர் !
மக்கள் பூமியிலேயே
துன்பமிலா வாழ்வு வாழ்ந்து நற்கதி அடைவர் !
~முன் உதாரணம் ஐயா ?
~சிவாலயத் திருப் பணிகளுக்காக கோவை வசந்த குமார் ஐயா அவர்களுடன் பட்டி தொட்டிகளெல்லாம் 12 ~ஆண்டுகள் அலைந்தவன் நான் !
~அதில் நாங்கள் உணர்ந்தது சோழர்கள் ஆலயங்களை எடுத்து ஆகம விதிகளின்படி
முறைமயாகப் பராமரித்ததும், இறைவனாரே நாட்டை அவர்கள் மேலோங்கி நின்று ,சுவர்க்க போகங்களை மக்களுக்கும் ,அருளிய தூய வரலாற்று நிலைதான் !
இது நடக்கக் கூடிய காரியமா ?
~ ஏன் முடியாது ?
அரசு அற நிலையங்களின் நிர்வாகத்தை பொது மக்களிடையே விட்டு , கண்காணிப்பாளர் என்ற முறையில் காத்தால் போதும் !
அரசு நிதி உதவியே ,மேற் கண்டவாறு மீண்ட சுவர்க்கம் காண்பதற்குத் தேவையில்லை ! ஆனால் சிவாச்சாரியார்களும் ,அந்தணர்களும் ,வேத ,உப நிடத ,சிவாகம சாத்திரங்களின் பிழிவே ,சைவத் திருமுறைகளும் , சாத்திரங்களும் என அறிந்தும் , அவற்றைப் போற்றிக் கொண்டாடததும் , இன்றைய நாளில் அருட் செல்வத்தை அவர்கள் இழந்ததற்குக் காரணம் என்பதை உணர்ந்து , இறைவனிடம் மன்னித்தருள வேண்டி இறைஞ்ச வேண்டும் !
அவைகளை உய்த்து உணர்ந்து , கற்று இறைவனாரைப் போற்றி பயன் பெற வேண்டும் !

ஐயா ! அந்தப் பூணூல் ?
~என்ன ஐயம் ? சாதி ஏற்ற தாழ்வுகளை இறைவனாரே உடைத்து எறிந்த வரலாறுகளைச் சொல்லியும் திருந்த மாட்டாயா ?
ஆதாரங்கள் கேட்பார்களே ஐயா ?*
* அதுவும் சரிதான் !*
*சிறுத் தொண்ட நாயனார் என்ன குலத்தவர் ?*
*~மாமாத்திரர் குலத்தவர் !*
*சூத்திர குலத்தவர் ; மருத்துவத் தொழிலினர் என்பது சிவக் கவி மணி ஐயா அவர்கள் முடிவு ;*
*வன்னிய குலத்தவர் என்பது தவத்திரு ஊரன் அடிகளார் முடிவு !*
*~ *இவர் முப்புரி நூல்*
*அணிந்திருந்த *வரலாறு* *சேக்கிழார் பெருமானால் குறிக்கப் பட்டுள்ளது !*
*சிறுத் தொண்டர் வரலாறு / பாடல் எண் 23 ~ ” முந் நூல் சேர் பொன் மார்பில் சிறுத் தொண்டர் ” ~*
*மகிழ்ச்சி ஐயா !*
*ஆனாலும் ஆகமச் சான்று காட்டினால் ,எல்லா குலத்தவருமான அடியார்களும் , மேலும் , தெளிந்து , முப்புரி நூல் அணிவோம் ஐயா !*
*~ சரி ! மறை ஞான சம்பந்தர் என்ற ஆகம விற்பன்னர் , சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் !*
*சிவாகமக் கருத்துக்களைத் தொகுத்து 727 குறட்பாக்களாக அருளியுள்ளார் !*
*இதனைப் பதிப்பித்து உரையும் கண்டவர் , எல்லையில்லாப் பெருமைக்குரிய , யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் ஐயா அவர்கள் !*
*நூல் பெயர் ~சைவ சமய நெறி ~ உட் தலைப்பு ~ஆசாரியார் இலக்கணம் ~ பாடல் எண் -49 -ல் அந்தணர் ஏழு நூல் தரிக்கக் கடவர் என உணர்த்துகிறார் !*
*பாடல் எண் ~50 =*
*~ மன்னர்க்கு மூன்று அருகமாம் வசியருக்கு இரண்டாம் அன்னியருக்கே ஏகம்* *அருகம் ~ ; அருகம் = பூணூல் /*
*மன்னர்கள் மூன்று , வைசியர்கள் இரண்டும் ஏனைய சூத்திர குலத்தவர் முதலானோர்க்கு ஒரு பூணூலும் தரிக்கக் கடவர் என ஆகம விதியை உணர்த்துகிறார் !*
*சூத்திரர்கள் தரித்தற்குரிய காலம்* *வரையறை செய்தல் .: ~*
*~பாடல் எண் : ~52 -*
*~ தர்ப்பணத்தில் அர்ச்சனையில் ஆகுதியிலும் தரிக்க / விற் பயிலும் சூத்திரர் இந் நூல் ~*
*தர்ப்பண காலத்திலும்* ,
*அர்ச்சனை செய்யும் போதும் , அக்னி காரிய காலத்திலும் இப் பூணூலைத் தரிக்கக் கடவர் !*
*ஆகவே இவர்கள் பூசை செய்வதற்கும் , வேள்வி செய்வதற்கும் உரியர் என அறிக !*
*சூத்திரர்களுள் எக் காலத்திலும் ,பூணூல் தரிக்க உரிமை உடையோர் : ~~*
*~பாடல் எண் 53 ~*
*~இவருள் நைட்டிகன் எப்போதும் தரிக்க /* *அவனியிலும் ஆசை அறுத்தால் ~*
*சூத்திரருள் நைட்டிக பிரமாச்சாரியானவன்* , *மண்ணாசை* ,
*பொன்னாசை* ,
*பெண்ணாசை , ஆகிய மூவகை* *ஆசைகளையும் நீக்கி*
*இருப்பானாகில் எக் காலத்தும் தரிக்கக் கடவன்*.
*ஆக ,ஆகமங்களில் விதிக்கப் பட்டவாறு நால் வகை வருணத்தாரும் , முப்புரி நூல் தரித்தற்கு உரியர் என சிவ பெருமான் வகுத்த ,ஆகம நூல் அனுமதித்துள்ளது காண்க !*
*53 -ஆம் பாடலில் வகுத்த விதி , ஏனைய குலத்தவருக்கும் விலக்கு அன்று என ஊகித்து அறிக !*
*சிறுத் தொண்டர் இல்லறத்தவர் !*
*அவர் முப்புரி நூலணிந்தவர் !*
*ஆகவே , நம் பெருமான் அணியும் முப்புரி நூல் அடியார்களாகிய நாம் எக் குலத்தவராயினும் அணிய உரிமை உடையோம் எனத் தெளிக !*
*ஐயா !*
*குல ஏற்ற தாழ்வு இல்லை எனத் தெளிந்தோம் !* *ஆயினும் மேலும் சில உதாரணங்கள் வேண்டும் !*
*சாதி குல ,ஏற்ற தாழ்வு பார்க்கின்றவர்களுக்கு , சிவத்தின் முன் நிற்கத் தகுதி இல்லை என உணர்த்துவதே பெரிய புராணம் !*
*01 ~ மானக்கஞ்சாறர் புராணம் பாடல் எண் 01 ~ ” நம்பு வாய்மையில் நீடு சூத்திர நற் குலம் செய் தவத்தினால் இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான்குடிப் பதி மாறனார் ! ~'”*
*02 ~ ஈழக் குலச் சான்றார் ஏனாதி நாயனார் ~பாடல் – 02 ~*
*~03 ~மூர்த்தி நாயனார் / ” அப் பொன் பதி வாழ் வணிக குலத்து ஆன்ற தொன்மைச் / செப்பத் தகு சீர்க் குடி செய் தவம் செய்ய வந்தார் ” ~பாடல் 08 ~*
*~04 ~ திரு நாவுக் கரசு நாயனார் ~*
” *அனைத்து வித / நலத்தின் கண் வழுவாத நடை முறையில் குடி நாப் பண் / விலக்கில் மனை* *ஒழுக்கத்தின் மேதக்க நிலை வேளாண் / குலத்தின் கண் வரும் பெருமைக் குறுக்கையர் தம் குடி விளங்கும் ~* *பாடல் 15* ~*
*~05 ~ ” மலர் புகழ் மா மாத்திரர் தம் குலம் பெருக வந்துள்ளார் ” ~ சிறுத் தொண்ட நாயனார் புராணம் . பாடல் ~02 ~*
*06 ~ ” தொன்மை நீடிய சூத்திரத் தொல் குலம் / நன்மை சான்ற நலம் பெறத் தோன்றினார் ~ வாயிலார் நாயனார் புராணம் பாடல் 10~*
*இவை போதுமா ?*
*அந்தணராகிய *அப்பூதி *அடிகள் ,வேளாண் *குடியினரான* ,
*நாவுக்கரசர் பெருமான் திருவடியில் வீழ்ந்து* *வணங்கியதும் ,ஆதி சைவர் ஆகிய நம்பி ஆரூரர் , ஏயர் கோனார் திருவடியில் வீழ்ந்து வணங்கியமையும் நினைவில் கொள்க !*
*ஆக , சைவர்களுக்குள் குல ஏற்ற தாழ்ச்சியே இல்லை என்பது பெருமானே வகுத்த விதி என்பதையும் , முப்புரி நூல் எக்குல சைவருக்கும் உரியது எனவும் அறிக !*
*அடியார்கள் , திரு நீறு உருத்திராக்கத்துடன் முப்புரி நூலும் அணியாகக் கொள்க !*
~கோமல் கா சேகர் / 9791232555 /110817

Please rate this

சிவ காப்பு – சமய சின்னங்களை அணிவீர் No ratings yet.

சிவ காப்பு !

ௐௐௐ
சிவ சிவ :
========
சிவக் காப்பு !
============


சைவக் குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகள் கூட முழு நீறு அணிவதில்லை என்பது வியப்பளிக்கக் கூடியதாக உள்ளது .!


எழுத்து வடிவிலோ ,உரையாகச் சொன்னாலோ ,அணிந்து நற் பயன் கொள்ளார் என்பதாலேயே , உலகோருக்கு அது தோன்றாத் துணையாக நின்று காக்கும் சிவக் காப்பு என்பதை உணர்த்தும் முனைப்புடனும் , கருணையுடனும் , நம் ஞானாசிரியர் திருஞான சம்பந்தர் ஆலவாயான் திரு நீற்றைப் பாண்டியன் மீது தடவி ,அவர் வெப்பு நோயைத் தீர்த்ததும் , புறச் சமயத்தாரை வெற்றி கொண்டதும் அவர் நிகழ்திக் காட்டிய வரலாறு !


வேயுறு தோளி பங்கன் என எடுத்துப் படைத்த பத்தாவது பாடலில் ,அத் திருப் பதிகக் கட்டமைப்புக்கு மாறாகப் ,பத்தாவது பாடலில் தொடர்பின்றி ,(திருப் பதிகத்தை ஊன்றிக் கவனிக்கவும் )
“” புத்தரோடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே ” எனப் பின் நடக்கப் போகும் வரலாற்று நிகழ்வை , முக்காலம் உணர்ந்தவர் என்ற நிலையில் பதிவு செய்திருப்பதை ஊன்றி கவனித்தால் இந்த உண்மை விளங்கும். 


திரு மறைக்காட்டில் அருளிய இந்த மெய்த் திரு வாக்கு , பின் மதுரையில் வரலாற்று நிகழ்வானதை அன்பர்கள் சிந்திக்க வேண்டும் .
~ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞான சம்பந்தன் தேற்றித் தென்னன் உடலுற்ற தீப் பிணியாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே ” என பாண்டியனின் வெப்பு நோயை உலகோர் காண , நிறைவு செய்கிறார் . 


தென்னன் = பாண்டியன் ; தேற்றி = தெளிவித்து / பாண்டியனைத் தெளிவித்தது மட்டுமல்லாது உலகோரையும் தெளிவித்து என்பது பொருள் !
இதைவிட ஒரு ஞானாசிரியர் என்னதான் செய்ய இயலும் ?
முதலில் தன் குடும்பத்தின் நலனை நாடின் பெற்றோர்கள் அணிய வேண்டும் !


குழந்தைப் பருவம் தொடங்கி , பிள்ளைகளைப் பழக்கி வளர்த்தெடுக்க வேண்டும் !


கலவியுடன் ஆன்மீக உணர்வையும் தேச பக்தியையும் , ஊட்டி வளர்த்தால் தான் ,நல்ல மகனாக , நல்லொழுக்கம் உள்ளவனாக வளர்ந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நற் பயன் விளைவித்துத் தானும் துன்பமிலா வாழ்வு வாழ்வான் என்பதைச் சிந்தித்து செயல்பட வேண்டியது பெற்றோர்களது கடமை !


மிருக உடலில் புகப் பெய்த உயிரை உலகியல் கல்வி மட்டும் கற்ற மிருகமாக மட்டும் வளர்த்தெடுத்தல் தகுமா ?
சிந்தித்துத் தெளிந்துணர்வீர் !


அக மாற்றம் முதலில் பெற்றோருக்கு வேண்டும் !


~கோமல் கா சேகர் /9791232555/070618

Please rate this

வலிய வந்து ஆட்கொண்ட வள்ளல் No ratings yet.

வலிய வந்து ஆட்கொண்ட வள்ளல்

– ௐௐௐௐௐ-
– சிவ சிவ :
========
‘” வலிய வந்து ஆட்கொண்ட வள்ளல் ” –
===== ===== =====
மாதொரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும் / வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனாருக்கு / ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார் பால் / தீதகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார் . ( தடுத் – 03 )
அவதாரம் செய்தார் என்றக் குறிப்பு : ~
01 ) திருஞானசம்பந்தர் 02 )திரு நாவுக்கரசர்
03 ) வன் தொண்டர்
04) விறன் மிண்டர்
05)மானக்கஞ்சாறர்
06 )ஏயர் கோன் கலிக்காமர்.
07)கலிய நாயனார்.
+ 01)பரவையார். 02 ) சங்கிலியார் 03 )சீராளத் தேவர்.
×××× ×××× ××××
ஆரூரர் அறிமுகம்.
===== =====
காட்சி ~01 =
இடம் : ~கயிலை வரை .
உபமன்னிய முனிவர் தன் சீடர்களுடன் வீற்றிருக்கிறார் !
யார் இந்த உப மன்னிய முனிவர் ?
×××××××××
~பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான் / மாலுக்குச் சக்கரம் அன்று அருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள் / ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப் / பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே ~எனத் திருப் பல்லாண்டில்(09) சேந்தனாரால் குறிப்பிடப்பட்டவர்.
==============
திருமலைச் சிறப்பு :~
÷÷÷÷÷÷÷÷÷÷
– திருச் சிற்றம்பலம்
××××××××××
~ பொன்னின் வெண் திரு நீறு புனைந்தெனப் / பன்னு நீள் பனி மால் வரைப் பாலது / தன்னை யார்க்கும் அறிவரியான் என்றும் / மன்னி வாழ் கயிலைத் திரு மாமலை ~ (01)
~ அண்ணல் வீற்றிருக்கப் பெற்றதாதலின் / நண்ணும் மூன்றுலகும் நான் மறைகளும் / எண்ணில் மா தவம் செய்ய வந்தெய்திய / புண்ணியம் திரண்டுள்ளது போல்வது – ( 02 )
~ நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளி / இலகு தண் தளிராக எழுந்ததோர் / உலகம் என்னும் ஒளி மணி வல்லி மேல் / மலரும் வெண்மலர் போல்வது அம் மால் வரை ~ ( 03 )
×××××××××
அன்னதன் திருத் தாழ்வரையின் இடத்து / இன்ன தன்மையன் என்று அறியாச் சிவன் / தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான் / உன்னருஞ் சீர் உபமன்னிய முனி ~ (13- )
இவர் பெருமைகள் :
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
யாதவன் துவரைக்கு இறை ஆகிய /மாதவன் முடிமேல் அடி வைத்தவன் / பூத நாதன் பொருவருந் தொண்டினுக்கு / ஆதி அந்தம் இலாமை அடைந்தவன் ~(14 )
+++++++++++
அத்தர் தந்த அருட்பால் கடல் உண்டு /சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன் / பத்தராய முனிவர் பல் ஆயிரர் / சுத்த யோகிகள் சூழ இருந்துழி ~ (15)
×××××××××××
~ அங்கண் ஓரொலி ஆயிர ஞாயிறு /பொங்கு பேரொளி போன்று முன் தோன்றிடத் / துங்க மாதவர் சூழ்ந்திருந்தார் எலாம் / ” இங்கிது என் கொல் அதிசயம் ?” ,என்றலும் .~ (16)
===========
அந்தி வான்மதி சூடிய அண்ணல் தாள் / சிந்தியா உணர்ந்து அம்முனி ” தென் திசை /வந்த நாவலர் கோன் புகழ் வன்தொண்டன் / எந்தையார் அருளால் அணைவான் ” என ~ (17 ) ×××××××××
~ கைகள் கூப்பித் தொழுது எழுந்து அத்திசை / மெய்யில் ஆனந்த வாரி விரவிடச் / செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி / ஐயம் நீங்க வினவுவோர் அந்தணர் ~ (18 )
~~~~~~~~~~~~~
“”சம்புவின் அடித் தாமரைப் போதலால் / எம்பிரான் இறைஞ்சாய் இஃது என் ? “எனத் /
“”தம்பிரானைத் தன் உள்ளம் தழீஇயவன் / நம்பி ஆரூரன் நாம் தொழும் தன்மையான் “” ~ (19 )
×××××××××××
~என்று கூற இறைஞ்சி இயம்புவார் : / ” வென்ற பேரொளியார் செய் விழுத்தவம் / நன்று கேட்க விரும்பும் நசையினோம் / இன்று எமக்கு உரை செய்தருள் ” ,என்றலும் – ( 20 )
~ உள்ள வண்ணம் முனிவன் உரை செய்வான் / ” வெள்ள நீர்ச்சடை மெய்ப் பொருளாகிய / வள்ளல் சாத்தும் மது மலர் மாலையும் / அள்ளும் நீறும் எடுத்து அணைவானுளன் “- (21)
××××××××××××
– அன்னவன் பெயர் ஆலால சுந்தரன் / முன்னம் ஆங்கு ஒருநாள் முதல்வன் தனக்கு / இன்னவாம் என நாள் மலர் கொய்திடத் / துன்னினான் நந்தனவனச் சூழலில் ~(22)
~அங்கு முன்னரே ஆளுடை நாயகி / கொங்கு சேர் குழற்கா மலர் கொய்திடத் / திங்கள் வாள் முகச் சேடியர் எய்தினார் / பொங்குகின்ற கவினுடைப் பூவைமார் “‘ – (23)
~ ” அந்தமில் சீர் அனிந்திதை ஆய்குழல் / கந்த மாலைக் கமலினி என்பவர் /கொந்து கொண்ட திருமலர் கொய்வுழி / வந்து வானவர் ஈசர் அருள் என ~ ” (24 )
~ ” மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத் / தீதிலாத் திருத் தொண்டத் தொகை தரப் / போதுவார் அவர் மேல் மனம் போக்கிடக் / காதல் மாதரும் காட்சியில் கண்ணினார் ~ (25 ) ~
( அவரவர் மலர் பறித்துக் கொண்டு தம் இடம் ஏகினர் )
~ ” ஆதி மூர்த்தி அவன் திறம் நோக்கியே/” மாதர் மேல் மனம் வைத்தனை ; தென் புவி/ மீது தோன்றி அம் மெல்லியலாருடன் / காதல் இன்பம் கலந்து அணைவாய் ” என – (27 )
~ ” கைகள் அஞ்சலிக் கூப்பிக் கலங்கினான் / ” செய்ய சேவடி நீங்கும் சிறுமையேன் / மையல் மானுடமாய் மயங்கும் வழி / ஐயனே தடுத்து ஆண்டு அருள் செய் ” என ”
( இறைவனார் அதற்கு இசைய ,முனிவர் வன் தொண்டர் அம் மகளிருடன் புவியில் பிறந்து இயற்றிய செயல்களை அவர்களுக்கு விரித்துரைத்தார் )
யோகியர் : ~ ” பந்த மானுடப் பாற்படு தென் திசை / இந்த வான் திசை எட்டினும் மேற்பட / வந்த புண்ணியம் யாது ? ”
முனிவர் : ~01 ) திரு ஆரூர் ( இதயக் கமலம் )
02 ) காஞ்சி ( அம்பிகை இறைவனைத் தவத்தால் எய்தியது )
03 ) ஐயாறு ( நந்தி தேவர் தவம் செய்து அருள் எய்தியது )
04 ) தோணிபுரம்
××××××××××××××
~ தேசம் எல்லாம் விளக்கிய தென் திசை / ஈசர் தோணிபுரத்துடன் எங்ஙணும் / பூசனைக்குப் பொருந்தும் இடம் பல / பேசில் அத் திசை ஒவ்வா பிற திசை ~ ( 36 )
~மற்று இதற்குப் பதிகம் வன் தொண்டர் தாம் / புற்றிடத்து எம் புராணர் அருளினால் / சொற்ற மெய்த் திருத் தொண்டத் தொகை எனப்/ பெற்ற நல் பதிகம் தொழப் பெற்றதால் ~ (38)
~ அந்த மெய்ப் பதிகத்து அடியார்களை / நந்தம் நாதனாம் நம்பியாண்டார் நம்பி /புந்தி ஆரப் புகன்ற வகையினால் / வந்தவாறு வழாமல் இயம்புவாம் ~
~ திரு சிற்றம்பலம்.
ௐௐௐௐௐ
~ தடுத்தாட் கொண்ட புராணம் ~
=== ==== ===
~ திரு முனைப் பாடி நாடு ~
~ வாய்மை குன்றாத் திரு மறையவர்கள் நீடும் திரு நாவலூர் ~
~ மாதொரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும்/ வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனாருக்கு / ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார் பால் / தீதகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார். ( 03)
சடையனார் / இசை ஞானியார் : ” ~ “~தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும் நம்பி ஆரூரர் என்றே நாமமும் சாற்றி ” ~ ( 04 )
***************
~ நரசிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு மகன்மை கொண்டார் ~(05)
**********
வைதிக முறையிலும் வைகி , அருமறை முந்நூல் சாத்தி , அளவில் தொல் கலைகள் ஆய்ந்து ,சீர் மணப் பருவம் சார்ந்தார் . (06)
=============
புத்தூர் சடங்கவி மறையோன் மகளை , வேண்டி பெரியோர்களை அனுப்புதல் / அவர் மகிழ்ந்து உடன் படல் /
மண ஓலை இடல் / பெண் வீட்டில் திரு மணம் / அலங்கரித்தல் / திரு மண முதல் நாள் சுந்தரருக்குக் காப்பு நாண் இடல் ~ / மணக் கோலம் செய்வித்தல் ~
××××× ××××× ×××××
~ மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க / நன்னகர் விழவு கொள்ள நம்பி ஆரூரர் நாதன் / தன்னடி மனத்துள் கொண்டு தகுந் திரு நீறு சாத்திப் / பொன்னணி மணியார் யோகப் புரவி மேல் கொண்டு போந்தார் ~ (19 ) ××××××××××××××
~ ” அருங்கடி மணம் வந்தெய்த அன்று தொட்டு என்றும் அன்பில் / வருங் குல மறையோர் புத்தூர் மணம் வந்தப் புத்தூராமால் “” ~(23)
+++++++++++
( இறைவனார் வேதியர் வடிவில் வருதல் )
~ மொய்த்து வளர் பேரழகு மூத்த வடிவேயோ / அத்தகைய மூப்பு எனும் அதன் படிவமேயோ / மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதலேயோ / இத்தகைய வேடம் என ஐயமுற எய்தி ~ (32 )
×××××××
( சபை முன் நின்று ) ~
இறை : ~ ” இந்த மொழி கேண்மின் யாவர்களும் ” (33)
ஆரூரரும் மறையோர்களும் : ~
“” நன்று உமது நல் வரவு நங்கள் தவம் “” ~~
“” நின்றது இவண் நீர் மொழிமின் நீர் மொழிவது “‘- (34)
~ இறை : ~ ( ஆரூரரை நோக்கி ) ~ ” என்னிடையும் நின்னிடையும் நின்ற இசைவால் யான் / முன்னுடையதோர் பெரு வழக்கினை முடித்தே / நின்னுடைய வேள்வியினை நீ முயல்தி “” ( 35 )
ஆரூரர் : ~ ” “உற்றதோர் வழக்கு எனிடை நீ உடையது உண்டேல் / மற்றது முடித்தலது யான் வதுவை செய்யேன் ; / முற்ற இது சொல்லுக “” (36)
இறை : ~ ” ஆவது இது கேண்மின் மறையோர் என் அடியான் இந் / நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது “”
சபையோர் ஏனையோர் : ~ ” இவன் என நினைந்தான் கொல் ” ( என்று சென்றார் ,வெகுண்டார் ,சிரித்தார் ; )
ஆரூரர் : ~ ” நன்றால் மறையோன் மொழி ‘” எனச் சிரித்தார் .
~ நக்கான் முகம் நோக்கி நடுங்கி ,நுடங்கி யார்க்கும்/ மிக்கான் மிசை உத்தரியத் துகில் தாங்கி மேற் சென்று : ~
இறை : ~ “அக்காலம் உன் தந்தைதன் தந்தை ஆள் ஓலை ஈதால் / இக் காரியத்தை நீ இன்று சிரித்தது என் ஏட ” ( 39)
ஆரூரர் :~ ( சிரிப்பு நீங்கி ) ‘” ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமை ஆதல் / பேச இன்று உன்னைக் கேட்டோம் ; பித்தனோ மறையோன் “” – ( 40)
இறை : ~ “” பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக நீ இன்று / எத்தனை தீங்கு சொன்னால் யாது மற்று அவற்றால் நாணேன் / அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று / வித்தகம் பேச வேண்டா பணி செய்ய வேண்டும் “” ~ (41 )
ஆரூரர் : ~ ” ஓலை காட்டுக ”
இறை : ~ ” நீ ஓலை காணற் பாலையோ ? அவை முன் காட்டப் பணி செயற் பாலை ‘”
( நாவல் ஆரூரர் விரைந்து சென்று ஓலையைப் பறிக்க முயலுதல் ; பந்தரின் கீழ் இறைவன் ஓடவும் பின் தொடர்ந்து ஓடி ஓலையைப் பற்றிப் பறித்தார் ஆரூரர் ;
“ஆரூரர் : ~ ” ஆளாய் அந்தணர் செய்தல் என்ன முறை ‘” , ( என்று கூறி ஓலையைக் கிழித்திட்டார் ; இறை முறையிட்டார் .(45 )
இறை : ~
“” முறையோ “” ?
அவையோர் : ~ ” இந்தப் பெருமுறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்குகின்ற திரு மறை முனிவரே ! நீர் எங்குளீர் செப்பும் ?
====+++ ====
இறை :~ இங்குளேன் ; இருப்பும் சேயதன்று ; இந்த வெண்ணெய் நல்லூர் ; அது நிற்க ; அறத்தாறின்றி / வன் திறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி / நின்றிவன் கிழித்துத் தானே நிரப்பினான் அடிமை “” ~ (47)
ஆரூரர் : ~ ” பழைய மன்றாடி போலும் ! ” , “” வெண்ணெய் நல்லூராயேல் உன் / பிழை நெறி வழக்கை ஆங்கே பேச நீ போதாய் ” – (48)-
இறை : ~ “” வெண்ணெய் நல்லூரிலே நீ / போதினும் நன்று ; மற்றப் புனித நான் மறையோர் முன்னர் / ஆதியில் மூல ஓலை காட்டி நீ அடிமையாதல் சாதிப்பன் “”
( என்று தண்டு முன் தாங்கிச் சென்றான் )- (49)
( காந்தம் ஈர்ப்பது போல ஈர்க்கப்பட ஆரூரரும் , அவர் பின் விரைந்து சென்றார் ; ஏனையோரும் “இது என்னாம் ” ,என வியந்து வெண்ணை நல்லூர் அவையை அடைந்தனர் )
×××××× ××××××
திரு வெண்ணெய் நல்லூர் பேரவை ÷
+++++++++++++
இறை : ~ “” சொல்லும் நாவலூர் ஆரூரன்தான் / காதல் என் அடியான் என்னக் காட்டிய ஓலை கீறி / மூதறிவீர் முன் போந்தான் இது மற்று என் முறைப்பாடு “” (51)
அவையோர் : ~ “மறையவர் அடிமையாதல் / இந்த மாநிலத்தில் இல்லை ; என் சொன்னாய் ஐயர் ? ”
இறை : ~ ” வந்தவாறு இசைவே அன்றோ வழக்கு ; இவன் கிழித்த ஓலை / தந்தை தன் தந்தை நேர்ந்தது “” -(52)
அவையோர் : ~ ( ஆரூரரிடம் )
” இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்று / விசையினால் வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றியாமோ ? , தசையெலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினைச் சாரச் சொன்னான் ; / அசைவில் ஆரூரர் எண்ணம் என் ? -(53)
ஆரூரர் : ~ ” 🎂அனைத்து நூல் உணர்ந்தீர் ! ஆதி சைவன் என்று அறிவீர் !என்னைத் / தனக்கு வேறடிமை என்று இவ் வந்தணன் சாதித்தானேல் /மனத்தினால்
உணர்தற்கு எட்டா மாயை !என் சொல்லுகேன் யான் ? எனக்கு இது தெளிய ஒண்ணாது “”- (54)
அவையோர் : ~( இறையை நோக்கி )
“” இவ் வுலகின் கண் நீ இன்று இவரை உன் அடிமை என்ற / வெவ்வுரை எம் முன்பு ஏற்ற வேண்டும் “‘- (55)
& “” ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள் / காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் “”
இறை : ~ “” முன்னே மூட்சியில் கிழித்த ஓலை படி ஓலை ; மூல ஓலை / மாட்சியில் காட்ட வைத்தேன் “” – (56)
அவையோர் : ~ “வல்லையேல் காட்டு இங்கு “”
இறை :~ ” மறையவன் வலி செய்யாமல் சொல்ல நீர் வல்லீராகில்↑+±+ காட்டுவேன். “” அவையோர் : ~ “”நாங்கள் தீங்குற ஒட்டோம். “” (57)
( ஆரூரர் தொழுது ஓலையை தொழுது வாங்கி சபையோர் முன் படிக்கிறார் )-(58)
~ ” அருமறை நாவல் ஆதி சைவன் ஆரூரன் செய்கை / பெரு முனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கு யானும் என்பால் / வரு முறை மரபுளோரும் வழித் தொண்டு செய்தற்கு ஓலை / இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து ” ~ (59)
( அவையோர் சாட்சியமிட்டோர் எழுத்தை நோக்கி அவை சரி என ஏற்றனர் )
அவையோர் : ~ (ஆரூரரிடம் ) “ஐயா மற்று உங்கள் பேரனார் தம் / தேசுடை எழுத்தேயாகில் தெளியப் பார்த்து அறிமின் ”
இறை : ~ “இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான் ; / தந்தை தன் தந்தை தான் வேறு எழுது கை சாத்துண்டாகில் / இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி / வந்தது மொழிமின் “” ~ (61)
( அவையோர் காப்பிலிருந்து ஒரு ஓலை அழைத்துடன் ஒப்பு நோக்கி )
அவையோர் : ~ (ஆரூரர் முன் ) ” இரணடும் ஒத்திருந்தது என்னே ! இனிச் செயல் இல்லை ” -(62)
‘” நான்மறை முனிவனார்க்கு நம்பி ஆரூரர் தோற்றீர் !/ பான்மையின் ஏவல் செய்தல் கடன் ”
ஆரூரர் : ~ “” விதி முறை இதுவேயாகில் / யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ ? ” -(63)
அவையோர் : ~ ( இறையை நோக்கி )
“‘ அருமுனி ! நீ முன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள் / பெருமை சேர் பதியே ஆகப் பேசியது உமக்கு இவ்வூரில் / வருமுறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக “(64)
இறை : ~ “என்னை ஒருவரும் அறியீராகில் போதும் ”
( பெருமறையவர் குழாமும் , நம்பியும் பின்னே செல்லத் / திருவருட் துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார். (66)
ஆரூரர் : ~ ” இலங்கு நூல் மார்பர் எங்கள் / நம்பர் தம் கோயில் புக்கது என் கொலோ ” -(66)
(அம்பிகையுடன் விடைமேல் தோன்றுதல் )
இறைவனார் : ~
” முன்பு நீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப் / பின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது / துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத் தொடர்ந்து வந்து / நன் புல மறையோர் முன்னர் நாம் தடுத்தாண்டோம் ” (67)
~ ஆரூரர் : ~ “மன்றுளீர் செயலோ வந்து வலிய ஆட் கொண்டது ” ~ (68)
இறைவனார் : ~
~ ” மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம் / பெற்றனை ; நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க / அற்சனை பாட்டே ஆகும் :; ஆதலால் மண் மேல் நம்மைச் / சொற்றமிழ் பாடுக ” ~(70)
ஆரூரர் : ~ ‘” வேதியனாகி என்னை வழக்கினால் வெல்ல வந்த / ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்யக் கொண்ட / கோதிலா அமுதே இன்றுன் குணப் பெருங் கடலை நாயேன் / யாதினை அறிந்து என் சொல்லிப் பாடுகேன் ? ” ~(72)
இறைவனார் : ~ ” முன்பெனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே / என் பெயர் பித்தன் என்றே பாடுவாய் “” ~ (73)
~ கொத்தாரா மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால் / மெய்த் தாயினும் இனியானை அவ் வியன் நாவலூர் பெருமான் / ” பித்தா பிறைசூடி ” ,எனப் பெரிதாந் திருப் பதிகம் / இத் தாரணி முதலாம் உலகெல்லாம் உய்ய எடுத்தார் ~ (74)
***** *****
07-01-01 / இந்தளம் ~
~ பித்தா பிறை சூடீ பெருமானே அருளாளா / எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை / வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட் டுறையுள் / அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே ~
***** ***** *****
~ நாயேன் பல நாளும் நினைப்பின்றி மனத்துன்னை /
பேயாய்த் திரிந்தெய்த்தேன் பெறலாகா அருள் பெற்றேன் / வேயார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் / ஆயா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே ~ (02) ××××× ×××××
~ ஊனாய் உயிரானாய் உடலானாய் உலகானாய் / வானாய் நிலனானாய் கடலானாய் மலையானாய் / தேனார் பெண்ணைத் தென்பால்
வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள் / ஆனாய் உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே ~(07)
××××× ×××××
இறைவனார் : ~ ” இன்னும் பல்லாறு உலகினில் நம் புகழ் பாடு “”-(76)
==========
~ அயலோர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும் / செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும் / உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில் / பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள் ~ (77)
××××× ××××× ×××××
பிற அகச் சான்றுகள் .
÷÷÷÷÷÷÷÷÷÷
~ கற்பகத்தினைக் கனக மால் வரையைக் காம கோபனைக் கண்ணுதலானைச் / சொற்பதப் பொருள் இருளறுத்தருளும் தூய சோதியை வெண்ணெய் நல்லூரில் / அற்புதப் பழ ஆவணங் காட்டி அடியனா என்னை ஆளது கொண்ட/ நற் பதத்தை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே ~
07- 68-06 / தக்கேசி ~
~ ××××× ×××××
~ அன்று வந்து எனை அகலிடத்தவர் முன் ஆளதாக என்று ஆவணங் காட்டி / நின்று வெண்ணெய் நல்லூர் மிசை ஒளித்த நித்திலத் திரள் தொத்தினை முத்திக்கு /ஒன்றினான் தனை உம்பர் பிரானை உயரும் வல் அரணம் கெடச் சீறும் / குன்ற வில்லியை மெல்லியயலுடனே கோலக்காவினில் கண்டு கொண்டேனே .
– 07-62-05/ தக்கேசி
×××××× ××××××
~ “வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்ட “” – 07-17-08
++++-++++
“” ஆவணம் செய்து ஆளுங் கொண்ட வரை ” – 07-05-10 ( ஓணகாந்தன் தளி )
=============
“” நேசத்தினால் என்னை ஆளுங் கொண்டார் “” -07-19-02( திரு நின்றியூர் )
÷÷÷÷÷ ÷÷÷÷÷
“” ஒட்டி ஆட் கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப் போதனை “”
~07-59-10( திருவாரூர் )
~~~~~ ~~~~~ ~~~~
” மண்ணின் மேல் மயங்கிக் கிடப்பேனை வலிய வந்து எனை ஆண்டு கொண்டானே “”
~ 07- 70-02( திருவா வடுதுறை )
×××××××××××××××
திரு நாவலூர் திருத்தலம் ஏகுதல் / வழி படல் ~ அகச் சான்றுகள் உடைய பாடல்கள் ! /நட்டராகம் .
===== ===== =====
~ கோவலன் நான்முகன் வானவர் கோனும் குற்றேவல் செய்ய / மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர் ஓர் அம்பினால் / ஏவலனார் வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்ட / நாவலனார்க்கிடமாவது நந்திரு நாவலூரே “”-(07-17-01)
==========
~ தன்மையினால் அடியேனைத் தாம் ஆட் கொண்ட நாட் சபை முன் /வன்மைகள் பேசிட வன் தொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார் / புன்மைகள் பேசவும் பொன்னைத் தந்து என்னை போகம் புணர்த்த / நன்மையினார்க் கிடமாவது நந் திரு நாவலூரே ~07- 17-02
××××××××××
” வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்டு / நஞ்சம் கொண்டார்க்கிட மாவது
நந் திரு நாவலூரே ” ~ 07-17-04 –
============
“” ஓர் ஆவணத்தால் / எம்பிரானார் வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்ட /நம் பிரானார்க்கிடமாவது நந் திரு நாவலூரே “”
~07-17-03 ~××××××× ×××××× ×××××
திருத் துறையூர் ஏகி தவ நெறி வேண்டுதல் ~
~ சிவன் உறையும் திருத் துறையூர் சென்றணைந்து ” தீ வினையால் / அவ நெறியில் செல்லாமே தடுத்தாண்டாய் அடியேற்குத் / தவ நெறி தந்தருள் ” ,என்று தம்பிரான் முன் நின்று / பவ நெறிக்கு விலக்காகும் திருப் பதிகம் பாடினார் . ~(79)
××××× ××××××
07-13 / தக்க ராகம் ~
~ மலையார் அருவித் திரள் மா மணியுந்திக் / குலையாரக் கொணர்தெற்றி யோர் பெண்ணை வடபால் / கலையார் அல்குல் கன்னியராடும் துறையூர் / தலைவா உனை வேண்டிக் கொள்வேன் தவ நெறியே ~01
+++++
~ செய்யார் கமலம் மலர் நாவலூர் மன்னன் / கையால் தொழுதேத்தப்படும் துறையூர் மேல் / பொய்யாத் தமிழ் ஊரன் உரைத்தன வல்லார் / மெய்யே பெறுவார்கள் தவநெறிதானே ~ 11-
————————–

~ புலன் ஒன்றும்படி தவத்தில் புரிந்த நெறி கொடுத்தருளப் பெற்றார் ~(80)
தில்லையில் நிருத்தனார் திருக் கூத்துத் தொழுவதற்கு எண்ணினார் ~
பெண்ணை நதியைக் கடந்து ,மாலையில் திருவதிகைப் புறத் தணைந்தார் .(82)-
~ உடைய அரசு உலகேத்தும் உழவாரப் படையாளி / விடையவர்க்குக் கைத் தொண்டு விரும்பு பெரும் பதியை மிதித்து /அடையுமதற் கஞ்சுவன் ” ,எனறந் நகரில் புகுதாதே /மடை வளர் தம் புறம்பணையில் சித்தவட மடம் புகுந்தார் (83)
அங்கு அடியவர்களுடன், வீரட்டானத்து இறைவர் தாள் விருப்புடன் நினைந்து , இரவில் பள்ளி கொண்டார் ~ (84)
*************
~ அது கண்டு வீரட்டத்து
அமர்ந்தருளும் அங்கணரும் /முது வடிவின் மறையவராய் முன்பொருவர் அறியாமே/ பொது மடத்தின் உட் புகுந்து பூந்தாரான் திரு முடிமேல் / பதும மலர்த் தாள் வைத்துப் பள்ளி கொள்வார் போல் பயின்றார் ~ (85)
ஆரூரர் :~ ((உணர்ந்து கண்டு ) ” அரு மறையோய் உன் அடி என் சென்னியில் வைத்தனை ”
இறை : ~ “” திசை அறியா வகை செய்தது என்னுடைய மூப்புக் காண் ”
~ஆரூரர் அப்பால் சென்று துயிலல் ~(86)
அங்கும் அவர் திரு முடிமேல் மீண்டும் இறைவனார் தாள் நீட்டினார் ~
ஆரூரர் : ~ ( வெகுண்டு ) ” இங்கு என்னைப் பல காலும் மிதித்தனை நீ யார் ? ”
இறை : ~ “அறிந்திலையோ ”
(- என மறைந்தார் )(87)
~ ×××××× ××××××
~ ” செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் ” எனத் தெளிந்து / தம்மானை அறியாத சாதியார் உளரே ” ,என்று / அம்மானைத் திரு வதிகை வீரட்டானத்து அமர்ந்த / கைம்மாவின் உரியானைக் கழல் பணிந்து பாடினார் .(88)
×××××××××××
07/38 ~ கொல்லிக் கௌவாணம் ~
~ தம்மானை யறியாத சாதியா ருளரே சடை மேற்கொள் பிறையானை விடை மேற்கொள் விகிர்தன் / கைம்மாவின் உரியானைக் கரிகாட்டில் ஆடல் உடையானை விடையானைக் கறை கொண்ட கண்டத் தெம்மான்றன் அடி கொண்டென் முடிமேல் வைத்திடுமென்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் / எம்மானை எறி கெடில வட வீரட்டானத் துறைவானை இறை போதும் இகழ்வன் போல் யானே (01)
**************
தென் திசையில் கங்கை எனும் திருக் கெடில நதியில் திளைத்தாடி திரு மாணிக்குழி அடைந்தார்.
திருமாணிக்குழி இறைவனாரை வழிபட்டு , திருத்தினை நகரை அடைந்து பணிந்தவருக்கு வரந் தருவானைப் போற்றி வணங்கி வண் தமிழ் பாடினார் !
×××××× ×××××××
~ பிணி கொளாக்கை பிறப் பிறப் பென்னும் இதனை நீக்கி ஈசன் திருவடி இணக்காள் / துணிய வேண்டிடிற் சொல்லுவன் கேள் நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர் வாழ் மதில் மூன்று / அணி கொள் வெஞ்சிலையாலுகச் சீறும் ஐயன் வையகம் பரவி நின்றேத்துந் / திணியும் வார் பொழில் திருத் தினை நகருட் சிவக் கொழுந்தினைச் சென்றடை மனனே -( 02)
××××× ××××× ×××××
*** தில்லை மருங்கணைதல் *****
“‘ தன் மருங்கு தொழுவார் தம் மும்மை / மா மலங்கள் அற வீடு அருள் தில்லை மல்லல் அம் பதியின் எல்லை வணங்கி . – (92)
=====
“” பன் மலர்ப் புனித நந்தன வனங்கள் பணிந்து சென்றனன் மணங் கமழ் தாரான். ” -(94)
“” மிகு சேண் செல ஓங்கும் தட மருங்கு வளர் மஞ்சிவர் இஞ்சித் தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார் (95)
“” தில்லை ஊர் விளங்கு திரு வாயில்கள் நான்கின் உத்தரத் திசை வாயில் முன் எய்தி . ( 97)
×××××××
அன்பின் வந்து எதிர் கொண்ட சீர் அடியார் அவர்களோ நம்பி ஆரூரர் தாமோ / முன் பிறைஞ்சினர் யாவர் என்றறியா முறைமையால் எதிர் வணங்கி மகிழ்ந்து /”
~ திரு வீதி புகுந்தார்.( 98) ~
+++++++++++
~எண்ணில் பேருலகு அனைத்திலும் உள்ள எல்லையில் அழகு சொல்லிய எல்லாம் / மண்ணில் இப் பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தனவாகிப் / புண்ணியப் புனித அன்பர்கள் முன்பு புகழ்ந்து பாடல் புரி பொற்பில் விளங்கும் /
அண்ணல் ஆடு திருவம்பலம் சூழ்ந்த அம் பொன் வீதியினை நம்பி வணங்கி (102)
÷÷÷÷÷÷÷÷÷÷
~ பெரு மதில் சிறந்த செம்பொன் மாளிகை மின் பிறங்கு பேரம்பலம் மேரு / வருமுறை வலங் கொண்டு இறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார் / அருமறை முதலில் நடுவினில் கடையில் அன்பர்தம் சிந்தையில் அலர்ந்த / திரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் திரு அணுக்கன் திரு வாயில் . (104)
=====+++ =====
~ வையகம் பொலிய மறைச் சிலம்பார்ப்ப மன்றுளே மாலயன் தேட / ஐயர் தாம் வெளியே ஆடுகின்றாரை அஞ்சலி மலர்த்தி முன் குவித்த / கைகளோ திளைத்தக் கண்களோ அந்தக் கரணமோ கலந்த அன்புந்தச் / செய்தவப் பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான் திருக் களிற்றுப்படி மருங்கு . (105) ~
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
~ ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள , அளப்பரும் கரணங்கள் நான்கும் / சிந்தையே ஆகக் , குணமொரு மூன்றும் திருந்து சாத்துவிகமேயாக , / இந்து வாழ் சடையானாடும் ஆனந்த எல்லையில் தனிப் பெருங் கூத்தின் / வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார் .- (106)
××××××××××××
~ ” தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் திரு நடங் கும்பிடப் பெற்று / மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம் “” ,என்று / கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரியக் கைம் மலர் உச்சி மேல் குவித்துப் / பண்ணினால் நீடி அறிவரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார் . -( 107 )
+++++++++++++
இறைவனார் :~ ( வான் வாக்கு ) ” தரளம் எறி புனல் மறி திரைப் பொன்னி / மடுத்த நீள் வண்ணப் பண்ணை ஆரூரில் வருக நம்பால் “”- (108)
÷÷÷÷÷÷÷÷
இறைவனாரிடம் விடை கொண்டு , அம்பலத்தை வலங் கொண்டு வணங்கி ,எழு நிலை கோபுரம் கடந்தார்.
நின்று கோபுரத்தை நிலமுறப் பணிந்து நெடுந் திரு வீதியை வணங்கி , அப் பதியின் தென் திசை வாயிலை வணங்கிப் பின் கொள்ளிடத் திரு நதியைக் கடந்தார் . ( 110 )
– திருச் சிற்றம்பலம் –
-ௐௐௐௐௐௐௐௐ-
கோமல் / 220618

Please rate this

குற்றம் ஒன்றும் செய்ததில்லை – சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலை மீண்ட நாள் No ratings yet.

குற்றம் ஒன்றும் செய்ததில்லை – சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலை மீண்ட நாள்

ௐௐௐௐௐ
சிவ சிவ :


~ குற்றம் ஒன்றும் செய்ததில்ல.! ~


சுந்தர மூர்த்தி சுவாமிகள்கள் திருக் கயிலை மீண்ட நாள் / சிறப்புப் பதிவு
======+======
~ விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன் விரும்பி ஆட்பட்டேன் / குற்றம் ஒன்றுஞ் செய்த தில்லை கொத்தை யாக்கினீர் / எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் / மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே ~
~ 07-95-02 / திருவாரூர் / செந்துருத்தி ~
××××× ×××××
திருத் தரும புர ஆதீன உரையும் குறிப்புகளும். ~~
உரை : ~ அடிகளே ,நீர் என்னைப் பிறருக்கு விற்கவும் உரிமையுடையீர் ; ஏனெனில் ,யான் ஒற்றிக் கலம் அல்லேன் ; உம்மை விரும்பி உமக்கு என்றும் ஆளாதற்றன்மையுட் பட்டேன் ; பின்னர் யான் குற்றம் ஒன்றும் செய்ததில்லை ; இவ்வாறாகவும் என்னை நீர் குருடனாக்கி விட்டீர் ; எதன் பொருட்டு என் கண்ணைப் பறித்துக் கொண்டீர் ? அதனால் நீர்தாம் பழியுட்பட்டீர் ; எனக்குப் பழியொன்றில்லை ; பன் முறை வேண்டியபின் ஒரு கண்ணைத் தந்தீர் ; மற்றொரு கண்ணைத் தர உடன்படாவிடின் , நீரே இனிது வாழ்ந்து போமின் !
~குறிப்புரை ; நம்பி ஆரூரர் செய்தது குற்றமாகாமை ,
“” பிழையுளன பொறுத்திடுவீர் என்றடியேன் பிழைத்தக்கால் ” (07-89-01)என்ற விடத்து விளக்கப்பட்டது .
அதனானே இங்கு ,””குற்றம் ஒன்றும் செய்ததில்லை “” என்று அருளினார்.
” நீரே பழிப் பட்டீர் ” என்றதன் காரணமும் ,
அவ்விடத்தே , ” பழியதனைப் பாராதே ” என்றதன் விளக்கத்துட் காண்க .

ஐயா !
சுந்தர மூர்த்தி சுவாமிகள் எவ்வளவோ பாடி இருக்கும் போது , மேலும் இன்று வெள்ளானை மீது சிவலோகும் ஏகும் போது ,இந்தப் பாடலை சிறப்பாக எடுத்தக் காரணம் அறிய விரும்புகிறேன் !
இப் பாடல் எழுந்த சூழல் அறிவாயா ?
வலக் கண் அருளும் படி ஆரூர் பெருமானிடம் மனம் நொந்து வேண்டி பாடி அருளியது ஐயா !
ஆம் !
இந்தப் பாடலில் , தான் “” குற்றம் ஒன்றும் செய்ததில்லை “” என இறைவன் முன் உறுதியாகச் சாற்றுவதும் , அவ்வாறு இருக்க , “எற்றுக்கு அடிகேள் என் கண் கொண்டீர் “” என வினவியதன் மூலம்
நமக்கு சிவ ஞானத்தின் எல்லையே உணர்த்தப் படுகிறது என அறிக !
புரிய வில்லை ஐயா ! பொழிப்புரை , குறிப்புரைகளிலும் விளக்கம் இல்லையே ;-நீங்கள் என்ன இல்லாததை விளக்கப் போகிறீர்கள் ?
இதை உரையளவில் புரிய வைப்பதைவிட , உரையாடல் மூலம் விளக்கலாம் என எண்ணுகிறேன்.
திருவருள் ; விளக்குங்கள் ஐயா !
****** ******
காட்சி :
சுவாமிகள் இறைவனாருக்கு , வலக் கண்ணின்றி அவர் படும் மனக் குமுறலையும் , அல்லல்களையும் ,
ஆரூரருக்கு உணர்த்துமாறு அகத் துறை உணர்வுடன் பறவைகளை நோக்கி விளித்து உருகிப் பாடி , பூங்கோயிலை அணைகிறார் ; ( ஒற்றைக் கண் இல்லாது எப்படி பரவையார் முன் தோன்ற முடியும் ;? அவர் வினவினால் என்ன விளக்கம் அளிக்க இயலும் ?) பூங்கோயிலார் முன் வீழ்ந்து , எழுந்து , கை தொழுது முன் நின்றே விம்முகிறார் ; “”ஆழ்ந்த துயர்க் கடலிடை நின்று அடியேனை எடுத்தருளித் தாழ்ந்த கருத்தினை நிரப்பிக் கண் தாரும்””எனத் தாழ்கிறார் .
தியாகேசர் : ~ சுந்தரா ! வா ! என்ன பறவைகள் வழியெல்லாம் தூது விடுகிறாய் ! ஒரே துன்பப் புலம்பலாக இருக்கிறதே ?
ஆரூரன் : ~ “மீளா அடிமை ”
தியா : ~ ” ஆம் ! மீளா அடிமைதான் ; அதற்கென்ன ?
ஆரூரர் : ~ “”உமக்கே ஆளாய் “”
தியா : ~ ஆமாம் ! எனக்கு மட்டுமேதான் ஆள் !
ஆரூரர் : ~ ” பிறரை வேண்டாதே ” !
தியா : ~ ” எனக்கு ஆட்பட்ட பின்னும் , மதியிலாதவன் தான் பிறரை வேண்டுவான் ! ; அவன் கனவிலும் என்னை உணர முடியாது ” உனக்கென்ன ?
ஆரூரர் : ~ ” தெரியவில்லையா என் முக வாட்டம் ; உணர வில்லையா என் நெஞ்சகத்தே எழும் கனலை ?
உனக்கு அடிமைப் பட்ட நான் இது வரை எடுத்துரைத்த அல்லல்கள் எல்லாம் தங்கள் செவியில் ஏறவில்லையா ?
தியா : ~ ” என்ன எதிர்பார்கிறாய் ”
ஆரூரர் : ~ ” இவ்வளவு எடுத்துச் சொல்லியும் ,ஏதும் அருளாது இருப்பின் நீரே நன்றாக வாழ்வீராக !
தியா :~ ” சரி ! உன் விருப்பம் !
மேலே சொல் !
ஆரூரர் : ~ ( என்னை ) ” விற்றுக் கொள்வீர் ; ஒற்றி அல்லேன் !
தியா : ~ ஆம் ! நீ என் மீளா அடிமைதான் !
ஆரூரர் : ~
“” விரும்பி ஆட்பட்டேன்””
தியா : ~ ” நிறுத்து !
“”நான் உன்னை ஈர்த்து ஆட் கொண்டதால் அல்லவா விரும்பினாய் “”
ஆரூரர் : ~ ” ஆமாம் சாமி ! தானே வந்து என் உளம் புகுந்து அடியேற்கு அருள் செய்தீர்கள் ; உண்மைதான் ! அருள் பெற்ற நான் ,வேறு சிந்தை இன்றி உங்களையே விரும்பி ஆட் பட்டேன் ! ”
தியா : ~ ” சரி மேலே சொல் ”
ஆரூரர் : ~
” குற்றம் ஒன்றும் செய்ததில்லை ; கொத்தை ஆக்கினீர்”
தியா : ~ என்ன ! குற்றம் ஒன்றும் செய்ததில்லையா ?
ஆரூரர் : ~ ” “ஆமாம் ; செய்ததில்லை ! – எற்றுக்கடிகேள் என் கண் கொண்டீர் ; நீரே பழி பட்டீர் ! “”
தியா : ~;” நன்றாக இருக்கிறதே ! இதுதான் திருவாரூர் நியாயமா ? ”
” சங்கிலியைப் பிரிய மாட்டேன் என மகிழ மரத்திலிருந்த என் முன் , அவளுடன் வந்து சத்தியம் செய்தவன் நீ !
சூளுறவு செய்ததை மீறி ,அவளை வஞ்சித்து , ஏமாற்றி , திரு வொற்றியூர் எல்லையைத் தாண்டியதும் நீ “”
ஆரூரர் : ~ ‘”அடியாருக்கு சத்தியம் செய்து , நம்பும் படி வாக்குக் கொடுத்து மீறினால் கண் இரண்டும் போகும் என்ற ஞானத்தை உலகுக்கு உணர்த்த நான் தான் உங்களுக்குக் கிடைத்தேனா ?
தியா : ~ ;” “பிழையுளனப் பொறுத்திடுவீர் என்று அடியேன் பிழைத்தக்கால் பழியதனைப் பாராமல் படலம் என் கண் மறைப்பித்தாய் “” என்று உன் பிழையை வெண்பாக்கத்தில் என் முன்பு ஒப்புக் கொண்டாய் அல்லவா ? ”
ஆரூரர் : ~”” ஆம் ஐயனே ! ”
தியா : ~ ” உன் கண்கள் போனதற்கு என் அடியாளிடம் ,என் முன் சூளுறவு செய்து ஏமாற்றிய தண்டனையிலிருந்து தப்ப முடியாத பாவமே காரணமாக இருக்க ,நான்தான் உன் கண்களை மறைத்ததாகப் பழி சுமத்துகிறாயே இது தகுமா ? “”
ஆரூரர் : ” அடியேன் பிழை செய்தேன் என ஒப்புக் கொண்டது தவறுதான் தலைவ !”‘
தியா ;~ ” மீண்டும் பொய்யா ? ”
ஆரூரர் : ~ “” அது என் செய்கை என நான் நினைத்தது தான் பொய் ஈசனே !”
தியா : ~ “” எங்கே விளக்கு ! உண்மையாயின் உறுதிப் படுத்து ! ”
ஆரூரர் : ~ “கயிலையில் நான் தங்கள் அடிமையாகத்தானே இருந்தேன் ? ”
தியா : ~ ” மலர் மாலை சாத்துவதும் , அள்ளும் நீறு ஏந்துவதும் உன் தொழில் ! ”
ஆரூரர் : ~ ” திருமண போக ஆசை உள்ள பெண்ணோ ஆணோ கயிலை புக முடியுமா ? சிவமே ! “”
தியா : ~ “கயிலையின் எல்லையைக் கூட எட்ட முடியாது “‘
ஆரூரர் : ~ ” ஆக எனக்கும் , கமலினி ,
அநிந்திதைக்கும் அந்த ஆசை இல்லைதானே ! ”
தியா : ~ ” ஆமாம் ; இல்லை தான் ! ‘”
ஆரூரர் : ~ ” ” “”நந்தவனச் சூழலில் நாங்கள் ,
பார்வையால் கவரப் பட்டு மயங்கியது எங்கள் செயல் அல்லதானே ! ”
தியா : ~ ” ஆம் ! அதற்கென்ன இப்போது ? ”
ஆரூரர் : ~ ” “உங்களுக்கு எண்ணில் கோடி உயிர்கள் மீது அளவற்ற இரக்கம் !
அவர்கள் எளிதில் தங்களைப் பற்றி உய்ய ,திருத் தொண்டத் தொகையைக் கொடுக்க வேண்டும் ;
அதற்கு ஒரு திரு விளையாடல் “‘
தியா : ~ ” என்ன சொல்ல வருகிறாய் ? விரிவாகச் சொல் ! ”
ஆரூரர் : ~ “”கயிலையில் அந்தப் பெண்கள் மீது எனக்கு மையல் ஏற்படுத்தியவர் நீரே !
பூமியில் பிறக்கச் செய்ததும் நீரே !
ஆரூரில் பரவையாரையும் என்னையும் எதிரெதிரே சந்திக்கச் செய்ததும் நீரே ”
‘”ஒருவரை ஒருவர் விரும்பச் செய்ததும் நீரே ! அடியார்கள் மூலம் மணம் செய்வித்ததும் நீரே !
திருவொற்றியூர் வரச் செய்ததும் நீரே !
அஞ்செழுத்து மனம் தொடுக்க , அலர் தொடுத்த அடியார்கள் தொண்டினை பார்த்து நான் அக மகிழும் போது ,நிலவு போல் சங்கிலியை தோன்றி மறையச் செய்ததும் நீரே !
உன்னிடம் இருந்து எனது நீங்கா சிந்தையின் இடை புகுந்து ,மலர் தொடுத்து என் உள்ளத் தொடை அவிழ்த்த அவளை , அது இடையீடின்றி உன்னை நினைப்பதற்கு இடையூறு எனினும் , அதையும் மீறி என் மனத்தை அலைத்து உன்னிடம் அவளை வேண்டி அருளுமாறு வினவும் அடங்கா வேட்கையை ஏற்படுத்தியதும் நீரே !””
தியா : ~ “”மேலும் தொடர்க !””
ஆரூரர் : ~ ” அது போதாதென்று சங்கிலியை விட்டுப் பிரியேன் என சூளுறவு செய்ய வைத்தத் திரு
விளையாடலுக்கு ஒப்புண்டா ? ”
” சங்கிலியோடு உன் முன் சத்தியம் செய்ய வரும் போது ஆலயத்தில் இருக்காதீர் ; போய் மகிழ்க் கீழ் இரும் என்று சொன்ன என்னை , அப்படிச் செய்வதாக ஒப்புக் கொண்டு ,
விளையாட்டு பொம்மை போல ஆட்டிச் சுழலவிட்டு , செயவதறியாமல் என்னை விழிக்க வைத்து மகிழ்க் கீழேயே சத்தியம் செய்ய வைத்தீரே !””
தியா : ~” ஆம் ! இதெல்லாம் எமக்கு சாதாரண விளையாட்டுகள் ; உயிர்களுக்கு விளையும் பயன் கருதி !”‘
ஆரூரர் : ~ “அத்தோடு விடாது அவளுடன் அடியார்கள் மூலம் திருமணம் செய்து வைத்ததும் நீரே ! ”
“ஆரூர் வசந்த விழாவை நினைப்பித்து என்னை ஏங்க வைத்ததும் நீரே ! ” “உன் மீது எனக்குள்ள ஆரா வேட்கையை மேன் மேலும் பெருக்கி மிக வைத்ததும் நீரே ! ”
” சத்தியத்தை மீறி ஒற்றியூர் எல்லையைத் தாண்ட வைத்ததும் நீரே ! ”
“இரு கண் பார்வையையும் மறைப்பித்ததும் நீரே ? “”
தியா : ~ “” ஆமாம் ! அதற்கென்ன இப்போது ? ”
ஆரூரர் ; ~ “அதற்கெனானவா ?””அவன் அன்றி அணுவும் அசையாது ” என்பது ஆன்றோர் வாக்கு !
“உயிருக்கென்று எச் செயலும் இல்லை ; எல்லாம் ஈசன் செயல் என்பதே ஞானம் ! ‘
தியா : ~ ” எனக்கே ஞான போதனையா ? ”
ஆரூரர் : ~ ” “மன்னியுங்கள் ஐயா !
ஆனால் அது தானே உயர் சிவ ஞானம் ”
நீ ஆட்டி வைத்தாய் ; நான் ஆடினேன் !
” நான் செய்த புண்ணியமோ பாவமோ எல்லாம் உன் செயலே ! ”
“என்னைக்
கருவியாக வைத்து உன் திருவுளப் படி செயலை எல்லாம் செய்து விட்டு , எதற்காக ஐயா என் கண்ணை மறைப்பித்தீர் ? “”
“” உலகியல் மனிதர் அறியாராயினும் ஞானிகள் உம் மீது பழியாக எண்ணாரோ ? “”
தியா : ~ ” “”உண்மைதான் சுந்தரா ! கயிலை தொடங்கி ,இதுவரை உன் இச்சைப்படி நீ செய்த செயல் ஏதுமில்லை ; எல்லாம் என் செயல் தான் ! எல்லா உயிர்களையும் ஆட்டிப் பக்குவப் படுத்தும் என் திரு விளையாடல்களுக்கு நீ என் கருவி ; அவ்வளவே ! ”
“” சங்கிலியை சத்தியத்தை மீறிப் பிரிகிறோமே என அதை உன் செயலாக எண்ணிப் பாவம் பழிகளை உன் மேல் ஏற்றிக் கொண்டாய் ; கண் பார்வை போயிற்று !
“” இப்போது எனதன்றி எவருக்கும் எச்செயலும் இல்லை என்று உயர் சிவ ஞானத்தை உணர்ந்தாய் ; அதனால் நீ குற்றம் ஒன்றும் செய்ததில்லை என ஞானமாக உரைத்தாய் ! குற்றம் அகன்றது ! ”
“இனி வலக் கண் பார்வையையும் அடைவாய் ! ”
” உலோகோரை செயல்களில் ஈடு படுத்தி , பக்குவம் அடையும் வரை இன்ப துன்பங்களில் உழலச் செய்து நானே கடைந்து செம்மைப் படுத்துகிறேன் என்று அறியாமல் , அவனவனும் , தானே எதையும் செய்வதாகக் கருதி புண்ணிய பாவங்களுக்குத் தாமே மூலமாக/ கர்த்தாவாகத் தம்மை எண்ணும் வரை பிறவிக் கடலில் தத்தளிக்கவே வேண்டும் ! “”
××××××××××××××
” ~ இவ்வளவு சிவ ஞான விளக்கங்கள் இந்தப் பாடலில் பொதிந்துள்ளன என எண்ணும் போது அச்சமாக இருக்கிறது ஐயா ! ”
” என்னவென்று ? சொல் ! ”
” ஏதோ கொஞ்சம் படித்துவிட்டு , தாம் திருமுறைகளைக் கரைத்துக் குடித்துவிட்டோம் என , மேலோட்டமான பொருள் கூட அறியாமல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போவோரைப் பார்த்து ! “‘
இவ்வளவு நேரம் இந்த ஞான வரலாற்றைக் கேட்டும் ,எல்லாம் இறைவனார் செயல் என அறியாமல் மீண்டும் பிதற்றத் தொடங்கி விட்டாயே ! “”
“””மன்னியுங்கள் ஐயா !
அந்த உயர் ஞானம் கேட்கும் போது புரிகிறது ; ஆனால் மனத்தில் நிலைப் படுத்த முடிய வில்லையே ஐயா ! “‘
உரிய பக்குவம் வரும் வரை ஆட்டி அலைக் கழிக்கப் படுவாய் ! பின் தெளிந்த நிலையில் இந்த உயர் ஞானம் நிலை பெறும் !””
” எல்லாம் அவன் செயல் !”
– திருச் சிற்றம்பலம் –
கோமல் கா சேகர் / 9791232555/200718

Please rate this

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருஅவதாரக் குறிப்பு No ratings yet.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருஅவதாரக் குறிப்பு

ௐௐௐ
சிவ சிவ :


சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருஅவதாரக் குறிப்பு


( சுந்தர மூர்த்தி சுவாமிகள் திரு அவதாரம் தொடங்கி ,
இறைவனால் தடுத்தாட் கொள்ளப் பட்ட வரலாற்றினை
உள்ளடக்கி , தில்லையை கண்டு களித்து ,வணங்கிப் போந்தது வரை / இரண்டு மணி நேரம் தொடர் விளக்கமளிக்க நான் வைத்துள்ளக் குறிப்பு / அன்பர்கள் பயின்று மகிழ்க / ஆடி சுவாதி 21-07-18 சிறப்பு வெளியீடு / கோமல் கா சேகர் 9791232555 )

========

‘” வலிய வந்து ஆட்கொண்ட வள்ளல் ” –

===== ===== =====

மாதொரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும் / வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனாருக்கு / ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார் பால் / தீதகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார் . ( தடுத் – 03 )

அவதாரம் செய்தார் என்றக் குறிப்பு : ~

01 ) திருஞானசம்பந்தர் 02 )திரு நாவுக்கரசர்

03 ) வன் தொண்டர்

04) விறன் மிண்டர்

05)மானக்கஞ்சாறர்

06 )ஏயர் கோன் கலிக்காமர்.

07)கலிய நாயனார்.

+ 01)பரவையார். 02 ) சங்கிலியார் 03 )சீராளத் தேவர்.

×××× ×××× ××××

ஆரூரர் அறிமுகம்.

===== =====

காட்சி ~01 =

இடம் : ~கயிலை வரை .

உபமன்னிய முனிவர் தன் சீடர்களுடன் வீற்றிருக்கிறார் !

யார் இந்த உப மன்னிய முனிவர் ?

×××××××××

~பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான் / மாலுக்குச் சக்கரம் அன்று அருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள் / ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப் / பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே ~எனத் திருப் பல்லாண்டில்(09) சேந்தனாரால் குறிப்பிடப்பட்டவர்.

==============

திருமலைச் சிறப்பு :~

÷÷÷÷÷÷÷÷÷÷

– திருச் சிற்றம்பலம்

××××××××××

~ பொன்னின் வெண் திரு நீறு புனைந்தெனப் / பன்னு நீள் பனி மால் வரைப் பாலது / தன்னை யார்க்கும் அறிவரியான் என்றும் / மன்னி வாழ் கயிலைத் திரு மாமலை ~ (01)

~ அண்ணல் வீற்றிருக்கப் பெற்றதாதலின் / நண்ணும் மூன்றுலகும் நான் மறைகளும் / எண்ணில் மா தவம் செய்ய வந்தெய்திய / புண்ணியம் திரண்டுள்ளது போல்வது – ( 02 )

~ நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளி / இலகு தண் தளிராக எழுந்ததோர் / உலகம் என்னும் ஒளி மணி வல்லி மேல் / மலரும் வெண்மலர் போல்வது அம் மால் வரை ~ ( 03 )

×××××××××

அன்னதன் திருத் தாழ்வரையின் இடத்து / இன்ன தன்மையன் என்று அறியாச் சிவன் / தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான் / உன்னருஞ் சீர் உபமன்னிய முனி ~ (13- )

இவர் பெருமைகள் :

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

யாதவன் துவரைக்கு இறை ஆகிய /மாதவன் முடிமேல் அடி வைத்தவன் / பூத நாதன் பொருவருந் தொண்டினுக்கு / ஆதி அந்தம் இலாமை அடைந்தவன் ~(14 )

+++++++++++

அத்தர் தந்த அருட்பால் கடல் உண்டு /சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன் / பத்தராய முனிவர் பல் ஆயிரர் / சுத்த யோகிகள் சூழ இருந்துழி ~ (15)

×××××××××××

~ அங்கண் ஓரொலி ஆயிர ஞாயிறு /பொங்கு பேரொளி போன்று முன் தோன்றிடத் / துங்க மாதவர் சூழ்ந்திருந்தார் எலாம் / ” இங்கிது என் கொல் அதிசயம் ?” ,என்றலும் .~ (16)

===========

அந்தி வான்மதி சூடிய அண்ணல் தாள் / சிந்தியா உணர்ந்து அம்முனி ” தென் திசை /வந்த நாவலர் கோன் புகழ் வன்தொண்டன் / எந்தையார் அருளால் அணைவான் ” என ~ (17 ) ×××××××××

~ கைகள் கூப்பித் தொழுது எழுந்து அத்திசை / மெய்யில் ஆனந்த வாரி விரவிடச் / செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி / ஐயம் நீங்க வினவுவோர் அந்தணர் ~ (18 )

~~~~~~~~~~~~~

“”சம்புவின் அடித் தாமரைப் போதலால் / எம்பிரான் இறைஞ்சாய் இஃது என் ? “எனத் /

“”தம்பிரானைத் தன் உள்ளம் தழீஇயவன் / நம்பி ஆரூரன் நாம் தொழும் தன்மையான் “” ~ (19 )

×××××××××××

~என்று கூற இறைஞ்சி இயம்புவார் : / ” வென்ற பேரொளியார் செய் விழுத்தவம் / நன்று கேட்க விரும்பும் நசையினோம் / இன்று எமக்கு உரை செய்தருள் ” ,என்றலும் – ( 20 )

~ உள்ள வண்ணம் முனிவன் உரை செய்வான் / ” வெள்ள நீர்ச்சடை மெய்ப் பொருளாகிய / வள்ளல் சாத்தும் மது மலர் மாலையும் / அள்ளும் நீறும் எடுத்து அணைவானுளன் “- (21)

××××××××××××

– அன்னவன் பெயர் ஆலால சுந்தரன் / முன்னம் ஆங்கு ஒருநாள் முதல்வன் தனக்கு / இன்னவாம் என நாள் மலர் கொய்திடத் / துன்னினான் நந்தனவனச் சூழலில் ~(22)

~அங்கு முன்னரே ஆளுடை நாயகி / கொங்கு சேர் குழற்கா மலர் கொய்திடத் / திங்கள் வாள் முகச் சேடியர் எய்தினார் / பொங்குகின்ற கவினுடைப் பூவைமார் “‘ – (23)

~ ” அந்தமில் சீர் அனிந்திதை ஆய்குழல் / கந்த மாலைக் கமலினி என்பவர் /கொந்து கொண்ட திருமலர் கொய்வுழி / வந்து வானவர் ஈசர் அருள் என ~ ” (24 )

~ ” மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத் / தீதிலாத் திருத் தொண்டத் தொகை தரப் / போதுவார் அவர் மேல் மனம் போக்கிடக் / காதல் மாதரும் காட்சியில் கண்ணினார் ~ (25 ) ~

( அவரவர் மலர் பறித்துக் கொண்டு தம் இடம் ஏகினர் )

~ ” ஆதி மூர்த்தி அவன் திறம் நோக்கியே/” மாதர் மேல் மனம் வைத்தனை ; தென் புவி/ மீது தோன்றி அம் மெல்லியலாருடன் / காதல் இன்பம் கலந்து அணைவாய் ” என – (27 )

~ ” கைகள் அஞ்சலிக் கூப்பிக் கலங்கினான் / ” செய்ய சேவடி நீங்கும் சிறுமையேன் / மையல் மானுடமாய் மயங்கும் வழி / ஐயனே தடுத்து ஆண்டு அருள் செய் ” என ”

( இறைவனார் அதற்கு இசைய ,முனிவர் வன் தொண்டர் அம் மகளிருடன் புவியில் பிறந்து இயற்றிய செயல்களை அவர்களுக்கு விரித்துரைத்தார் )

யோகியர் : ~ ” பந்த மானுடப் பாற்படு தென் திசை / இந்த வான் திசை எட்டினும் மேற்பட / வந்த புண்ணியம் யாது ? ”

முனிவர் : ~01 ) திரு ஆரூர் ( இதயக் கமலம் )

02 ) காஞ்சி ( அம்பிகை இறைவனைத் தவத்தால் எய்தியது )

03 ) ஐயாறு ( நந்தி தேவர் தவம் செய்து அருள் எய்தியது )

04 ) தோணிபுரம்

××××××××××××××

~ தேசம் எல்லாம் விளக்கிய தென் திசை / ஈசர் தோணிபுரத்துடன் எங்ஙணும் / பூசனைக்குப் பொருந்தும் இடம் பல / பேசில் அத் திசை ஒவ்வா பிற திசை ~ ( 36 )

~மற்று இதற்குப் பதிகம் வன் தொண்டர் தாம் / புற்றிடத்து எம் புராணர் அருளினால் / சொற்ற மெய்த் திருத் தொண்டத் தொகை எனப்/ பெற்ற நல் பதிகம் தொழப் பெற்றதால் ~ (38)

~ அந்த மெய்ப் பதிகத்து அடியார்களை / நந்தம் நாதனாம் நம்பியாண்டார் நம்பி /புந்தி ஆரப் புகன்ற வகையினால் / வந்தவாறு வழாமல் இயம்புவாம் ~

~ திரு சிற்றம்பலம்.

ௐௐௐௐௐ

~ தடுத்தாட் கொண்ட புராணம் ~

=== ==== ===

~ திரு முனைப் பாடி நாடு ~

~ வாய்மை குன்றாத் திரு மறையவர்கள் நீடும் திரு நாவலூர் ~

~ மாதொரு பாகனார்க்கு வழி வழி அடிமை செய்யும்/ வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனாருக்கு / ஏதமில் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார் பால் / தீதகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார். ( 03)

சடையனார் / இசை ஞானியார் : ” ~ “~தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும் நம்பி ஆரூரர் என்றே நாமமும் சாற்றி ” ~ ( 04 )

***************

~ நரசிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு மகன்மை கொண்டார் ~(05)

**********

வைதிக முறையிலும் வைகி , அருமறை முந்நூல் சாத்தி , அளவில் தொல் கலைகள் ஆய்ந்து ,சீர் மணப் பருவம் சார்ந்தார் . (06)

=============

புத்தூர் சடங்கவி மறையோன் மகளை , வேண்டி பெரியோர்களை அனுப்புதல் / அவர் மகிழ்ந்து உடன் படல் /

மண ஓலை இடல் / பெண் வீட்டில் திரு மணம் / அலங்கரித்தல் / திரு மண முதல் நாள் சுந்தரருக்குக் காப்பு நாண் இடல் ~ / மணக் கோலம் செய்வித்தல் ~

××××× ××××× ×××××

~ மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க / நன்னகர் விழவு கொள்ள நம்பி ஆரூரர் நாதன் / தன்னடி மனத்துள் கொண்டு தகுந் திரு நீறு சாத்திப் / பொன்னணி மணியார் யோகப் புரவி மேல் கொண்டு போந்தார் ~ (19 ) ××××××××××××××

~ ” அருங்கடி மணம் வந்தெய்த அன்று தொட்டு என்றும் அன்பில் / வருங் குல மறையோர் புத்தூர் மணம் வந்தப் புத்தூராமால் “” ~(23)

+++++++++++

( இறைவனார் வேதியர் வடிவில் வருதல் )

~ மொய்த்து வளர் பேரழகு மூத்த வடிவேயோ / அத்தகைய மூப்பு எனும் அதன் படிவமேயோ / மெய்த்த நெறி வைதிகம் விளைந்த முதலேயோ / இத்தகைய வேடம் என ஐயமுற எய்தி ~ (32 )

×××××××

( சபை முன் நின்று ) ~

இறை : ~ ” இந்த மொழி கேண்மின் யாவர்களும் ” (33)

ஆரூரரும் மறையோர்களும் : ~

“” நன்று உமது நல் வரவு நங்கள் தவம் “” ~~

“” நின்றது இவண் நீர் மொழிமின் நீர் மொழிவது “‘- (34)

~ இறை : ~ ( ஆரூரரை நோக்கி ) ~ ” என்னிடையும் நின்னிடையும் நின்ற இசைவால் யான் / முன்னுடையதோர் பெரு வழக்கினை முடித்தே / நின்னுடைய வேள்வியினை நீ முயல்தி “” ( 35 )

ஆரூரர் : ~ ” “உற்றதோர் வழக்கு எனிடை நீ உடையது உண்டேல் / மற்றது முடித்தலது யான் வதுவை செய்யேன் ; / முற்ற இது சொல்லுக “” (36)

இறை : ~ ” ஆவது இது கேண்மின் மறையோர் என் அடியான் இந் / நாவல் நகர் ஊரன் இது நான் மொழிவது “”

சபையோர் ஏனையோர் : ~ ” இவன் என நினைந்தான் கொல் ” ( என்று சென்றார் ,வெகுண்டார் ,சிரித்தார் ; )

ஆரூரர் : ~ ” நன்றால் மறையோன் மொழி ‘” எனச் சிரித்தார் .

~ நக்கான் முகம் நோக்கி நடுங்கி ,நுடங்கி யார்க்கும்/ மிக்கான் மிசை உத்தரியத் துகில் தாங்கி மேற் சென்று : ~

இறை : ~ “அக்காலம் உன் தந்தைதன் தந்தை ஆள் ஓலை ஈதால் / இக் காரியத்தை நீ இன்று சிரித்தது என் ஏட ” ( 39)

ஆரூரர் :~ ( சிரிப்பு நீங்கி ) ‘” ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமை ஆதல் / பேச இன்று உன்னைக் கேட்டோம் ; பித்தனோ மறையோன் “” – ( 40)

இறை : ~ “” பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக நீ இன்று / எத்தனை தீங்கு சொன்னால் யாது மற்று அவற்றால் நாணேன் / அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று / வித்தகம் பேச வேண்டா பணி செய்ய வேண்டும் “” ~ (41 )

ஆரூரர் : ~ ” ஓலை காட்டுக ”

இறை : ~ ” நீ ஓலை காணற் பாலையோ ? அவை முன் காட்டப் பணி செயற் பாலை ‘”

( நாவல் ஆரூரர் விரைந்து சென்று ஓலையைப் பறிக்க முயலுதல் ; பந்தரின் கீழ் இறைவன் ஓடவும் பின் தொடர்ந்து ஓடி ஓலையைப் பற்றிப் பறித்தார் ஆரூரர் ;

“ஆரூரர் : ~ ” ஆளாய் அந்தணர் செய்தல் என்ன முறை ‘” , ( என்று கூறி ஓலையைக் கிழித்திட்டார் ; இறை முறையிட்டார் .(45 )

இறை : ~

“” முறையோ “” ?

அவையோர் : ~ ” இந்தப் பெருமுறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்குகின்ற திரு மறை முனிவரே ! நீர் எங்குளீர் செப்பும் ?

====+++ ====

இறை :~ இங்குளேன் ; இருப்பும் சேயதன்று ; இந்த வெண்ணெய் நல்லூர் ; அது நிற்க ; அறத்தாறின்றி / வன் திறல் செய்து என் கையில் ஆவணம் வலிய வாங்கி / நின்றிவன் கிழித்துத் தானே நிரப்பினான் அடிமை “” ~ (47)

ஆரூரர் : ~ ” பழைய மன்றாடி போலும் ! ” , “” வெண்ணெய் நல்லூராயேல் உன் / பிழை நெறி வழக்கை ஆங்கே பேச நீ போதாய் ” – (48)-

இறை : ~ “” வெண்ணெய் நல்லூரிலே நீ / போதினும் நன்று ; மற்றப் புனித நான் மறையோர் முன்னர் / ஆதியில் மூல ஓலை காட்டி நீ அடிமையாதல் சாதிப்பன் “”

( என்று தண்டு முன் தாங்கிச் சென்றான் )- (49)

( காந்தம் ஈர்ப்பது போல ஈர்க்கப்பட ஆரூரரும் , அவர் பின் விரைந்து சென்றார் ; ஏனையோரும் “இது என்னாம் ” ,என வியந்து வெண்ணை நல்லூர் அவையை அடைந்தனர் )

×××××× ××××××

திரு வெண்ணெய் நல்லூர் பேரவை ÷

+++++++++++++

இறை : ~ “” சொல்லும் நாவலூர் ஆரூரன்தான் / காதல் என் அடியான் என்னக் காட்டிய ஓலை கீறி / மூதறிவீர் முன் போந்தான் இது மற்று என் முறைப்பாடு “” (51)

அவையோர் : ~ “மறையவர் அடிமையாதல் / இந்த மாநிலத்தில் இல்லை ; என் சொன்னாய் ஐயர் ? ”

இறை : ~ ” வந்தவாறு இசைவே அன்றோ வழக்கு ; இவன் கிழித்த ஓலை / தந்தை தன் தந்தை நேர்ந்தது “” -(52)

அவையோர் : ~ ( ஆரூரரிடம் )

” இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில் இன்று / விசையினால் வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றியாமோ ? , தசையெலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினைச் சாரச் சொன்னான் ; / அசைவில் ஆரூரர் எண்ணம் என் ? -(53)

ஆரூரர் : ~ ” 🎂அனைத்து நூல் உணர்ந்தீர் ! ஆதி சைவன் என்று அறிவீர் !என்னைத் / தனக்கு வேறடிமை என்று இவ் வந்தணன் சாதித்தானேல் /மனத்தினால்

உணர்தற்கு எட்டா மாயை !என் சொல்லுகேன் யான் ? எனக்கு இது தெளிய ஒண்ணாது “”- (54)

அவையோர் : ~( இறையை நோக்கி )

“” இவ் வுலகின் கண் நீ இன்று இவரை உன் அடிமை என்ற / வெவ்வுரை எம் முன்பு ஏற்ற வேண்டும் “‘- (55)

& “” ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள் / காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் “”

இறை : ~ “” முன்னே மூட்சியில் கிழித்த ஓலை படி ஓலை ; மூல ஓலை / மாட்சியில் காட்ட வைத்தேன் “” – (56)

அவையோர் : ~ “வல்லையேல் காட்டு இங்கு “”

இறை :~ ” மறையவன் வலி செய்யாமல் சொல்ல நீர் வல்லீராகில்↑+±+ காட்டுவேன். “” அவையோர் : ~ “”நாங்கள் தீங்குற ஒட்டோம். “” (57)

( ஆரூரர் தொழுது ஓலையை தொழுது வாங்கி சபையோர் முன் படிக்கிறார் )-(58)

~ ” அருமறை நாவல் ஆதி சைவன் ஆரூரன் செய்கை / பெரு முனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கு யானும் என்பால் / வரு முறை மரபுளோரும் வழித் தொண்டு செய்தற்கு ஓலை / இருமையால் எழுதி நேர்ந்தேன் இதற்கு இவை என் எழுத்து ” ~ (59)

( அவையோர் சாட்சியமிட்டோர் எழுத்தை நோக்கி அவை சரி என ஏற்றனர் )

அவையோர் : ~ (ஆரூரரிடம் ) “ஐயா மற்று உங்கள் பேரனார் தம் / தேசுடை எழுத்தேயாகில் தெளியப் பார்த்து அறிமின் ”

இறை : ~ “இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான் ; / தந்தை தன் தந்தை தான் வேறு எழுது கை சாத்துண்டாகில் / இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி / வந்தது மொழிமின் “” ~ (61)

( அவையோர் காப்பிலிருந்து ஒரு ஓலை அழைத்துடன் ஒப்பு நோக்கி )

அவையோர் : ~ (ஆரூரர் முன் ) ” இரணடும் ஒத்திருந்தது என்னே ! இனிச் செயல் இல்லை ” -(62)

‘” நான்மறை முனிவனார்க்கு நம்பி ஆரூரர் தோற்றீர் !/ பான்மையின் ஏவல் செய்தல் கடன் ”

ஆரூரர் : ~ “” விதி முறை இதுவேயாகில் / யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ ? ” -(63)

அவையோர் : ~ ( இறையை நோக்கி )

“‘ அருமுனி ! நீ முன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள் / பெருமை சேர் பதியே ஆகப் பேசியது உமக்கு இவ்வூரில் / வருமுறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக “(64)

இறை : ~ “என்னை ஒருவரும் அறியீராகில் போதும் ”

( பெருமறையவர் குழாமும் , நம்பியும் பின்னே செல்லத் / திருவருட் துறையே புக்கார் கண்டிலர் திகைத்து நின்றார். (66)

ஆரூரர் : ~ ” இலங்கு நூல் மார்பர் எங்கள் / நம்பர் தம் கோயில் புக்கது என் கொலோ ” -(66)

(அம்பிகையுடன் விடைமேல் தோன்றுதல் )

இறைவனார் : ~

” முன்பு நீ நமக்குத் தொண்டன் முன்னிய வேட்கை கூரப் / பின்பு நம் ஏவலாலே பிறந்தனை மண்ணின் மீது / துன்புறு வாழ்க்கை நின்னைத் தொடர்வறத் தொடர்ந்து வந்து / நன் புல மறையோர் முன்னர் நாம் தடுத்தாண்டோம் ” (67)

~ ஆரூரர் : ~ “மன்றுளீர் செயலோ வந்து வலிய ஆட் கொண்டது ” ~ (68)

இறைவனார் : ~

~ ” மற்று நீ வன்மை பேசி வன் தொண்டன் என்னும் நாமம் / பெற்றனை ; நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க / அற்சனை பாட்டே ஆகும் :; ஆதலால் மண் மேல் நம்மைச் / சொற்றமிழ் பாடுக ” ~(70)

ஆரூரர் : ~ ‘” வேதியனாகி என்னை வழக்கினால் வெல்ல வந்த / ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்யக் கொண்ட / கோதிலா அமுதே இன்றுன் குணப் பெருங் கடலை நாயேன் / யாதினை அறிந்து என் சொல்லிப் பாடுகேன் ? ” ~(72)

இறைவனார் : ~ ” முன்பெனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே / என் பெயர் பித்தன் என்றே பாடுவாய் “” ~ (73)

~ கொத்தாரா மலர்க் குழலாள் ஒரு கூறாய் அடியவர் பால் / மெய்த் தாயினும் இனியானை அவ் வியன் நாவலூர் பெருமான் / ” பித்தா பிறைசூடி ” ,எனப் பெரிதாந் திருப் பதிகம் / இத் தாரணி முதலாம் உலகெல்லாம் உய்ய எடுத்தார் ~ (74)

***** *****

07-01-01 / இந்தளம் ~

~ பித்தா பிறை சூடீ பெருமானே அருளாளா / எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை / வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட் டுறையுள் / அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே ~

***** ***** *****

~ நாயேன் பல நாளும் நினைப்பின்றி மனத்துன்னை /

பேயாய்த் திரிந்தெய்த்தேன் பெறலாகா அருள் பெற்றேன் / வேயார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் / ஆயா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே ~ (02) ××××× ×××××

~ ஊனாய் உயிரானாய் உடலானாய் உலகானாய் / வானாய் நிலனானாய் கடலானாய் மலையானாய் / தேனார் பெண்ணைத் தென்பால்

வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள் / ஆனாய் உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே ~(07)

××××× ×××××

இறைவனார் : ~ ” இன்னும் பல்லாறு உலகினில் நம் புகழ் பாடு “”-(76)

==========

~ அயலோர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும் / செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும் / உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில் / பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள் ~ (77)

××××× ××××× ×××××

பிற அகச் சான்றுகள் .

÷÷÷÷÷÷÷÷÷÷

~ கற்பகத்தினைக் கனக மால் வரையைக் காம கோபனைக் கண்ணுதலானைச் / சொற்பதப் பொருள் இருளறுத்தருளும் தூய சோதியை வெண்ணெய் நல்லூரில் / அற்புதப் பழ ஆவணங் காட்டி அடியனா என்னை ஆளது கொண்ட/ நற் பதத்தை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே ~

07- 68-06 / தக்கேசி ~

~ ××××× ×××××

~ அன்று வந்து எனை அகலிடத்தவர் முன் ஆளதாக என்று ஆவணங் காட்டி / நின்று வெண்ணெய் நல்லூர் மிசை ஒளித்த நித்திலத் திரள் தொத்தினை முத்திக்கு /ஒன்றினான் தனை உம்பர் பிரானை உயரும் வல் அரணம் கெடச் சீறும் / குன்ற வில்லியை மெல்லியயலுடனே கோலக்காவினில் கண்டு கொண்டேனே .

– 07-62-05/ தக்கேசி

×××××× ××××××

~ “வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்ட “” – 07-17-08

++++-++++

“” ஆவணம் செய்து ஆளுங் கொண்ட வரை ” – 07-05-10 ( ஓணகாந்தன் தளி )

=============

“” நேசத்தினால் என்னை ஆளுங் கொண்டார் “” -07-19-02( திரு நின்றியூர் )

÷÷÷÷÷ ÷÷÷÷÷

“” ஒட்டி ஆட் கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப் போதனை “”

~07-59-10( திருவாரூர் )

~~~~~ ~~~~~ ~~~~

” மண்ணின் மேல் மயங்கிக் கிடப்பேனை வலிய வந்து எனை ஆண்டு கொண்டானே “”

~ 07- 70-02( திருவா வடுதுறை )

×××××××××××××××

திரு நாவலூர் திருத்தலம் ஏகுதல் / வழி படல் ~ அகச் சான்றுகள் உடைய பாடல்கள் ! /நட்டராகம் .

===== ===== =====

~ கோவலன் நான்முகன் வானவர் கோனும் குற்றேவல் செய்ய / மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர் ஓர் அம்பினால் / ஏவலனார் வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்ட / நாவலனார்க்கிடமாவது நந்திரு நாவலூரே “”-(07-17-01)

==========

~ தன்மையினால் அடியேனைத் தாம் ஆட் கொண்ட நாட் சபை முன் /வன்மைகள் பேசிட வன் தொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார் / புன்மைகள் பேசவும் பொன்னைத் தந்து என்னை போகம் புணர்த்த / நன்மையினார்க் கிடமாவது நந் திரு நாவலூரே ~07- 17-02

××××××××××

” வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்டு / நஞ்சம் கொண்டார்க்கிட மாவது

நந் திரு நாவலூரே ” ~ 07-17-04 –

============

“” ஓர் ஆவணத்தால் / எம்பிரானார் வெண்ணெய் நல்லூரில் வைத்து எனை ஆளுங் கொண்ட /நம் பிரானார்க்கிடமாவது நந் திரு நாவலூரே “”

~07-17-03 ~××××××× ×××××× ×××××

திருத் துறையூர் ஏகி தவ நெறி வேண்டுதல் ~

~ சிவன் உறையும் திருத் துறையூர் சென்றணைந்து ” தீ வினையால் / அவ நெறியில் செல்லாமே தடுத்தாண்டாய் அடியேற்குத் / தவ நெறி தந்தருள் ” ,என்று தம்பிரான் முன் நின்று / பவ நெறிக்கு விலக்காகும் திருப் பதிகம் பாடினார் . ~(79)

××××× ××××××

07-13 / தக்க ராகம் ~

~ மலையார் அருவித் திரள் மா மணியுந்திக் / குலையாரக் கொணர்தெற்றி யோர் பெண்ணை வடபால் / கலையார் அல்குல் கன்னியராடும் துறையூர் / தலைவா உனை வேண்டிக் கொள்வேன் தவ நெறியே ~01

+++++

~ செய்யார் கமலம் மலர் நாவலூர் மன்னன் / கையால் தொழுதேத்தப்படும் துறையூர் மேல் / பொய்யாத் தமிழ் ஊரன் உரைத்தன வல்லார் / மெய்யே பெறுவார்கள் தவநெறிதானே ~ 11-

————————–

~ புலன் ஒன்றும்படி தவத்தில் புரிந்த நெறி கொடுத்தருளப் பெற்றார் ~(80)

தில்லையில் நிருத்தனார் திருக் கூத்துத் தொழுவதற்கு எண்ணினார் ~

பெண்ணை நதியைக் கடந்து ,மாலையில் திருவதிகைப் புறத் தணைந்தார் .(82)-

~ உடைய அரசு உலகேத்தும் உழவாரப் படையாளி / விடையவர்க்குக் கைத் தொண்டு விரும்பு பெரும் பதியை மிதித்து /அடையுமதற் கஞ்சுவன் ” ,எனறந் நகரில் புகுதாதே /மடை வளர் தம் புறம்பணையில் சித்தவட மடம் புகுந்தார் (83)

அங்கு அடியவர்களுடன், வீரட்டானத்து இறைவர் தாள் விருப்புடன் நினைந்து , இரவில் பள்ளி கொண்டார் ~ (84)

*************

~ அது கண்டு வீரட்டத்து

அமர்ந்தருளும் அங்கணரும் /முது வடிவின் மறையவராய் முன்பொருவர் அறியாமே/ பொது மடத்தின் உட் புகுந்து பூந்தாரான் திரு முடிமேல் / பதும மலர்த் தாள் வைத்துப் பள்ளி கொள்வார் போல் பயின்றார் ~ (85)

ஆரூரர் :~ ((உணர்ந்து கண்டு ) ” அரு மறையோய் உன் அடி என் சென்னியில் வைத்தனை ”

இறை : ~ “” திசை அறியா வகை செய்தது என்னுடைய மூப்புக் காண் ”

~ஆரூரர் அப்பால் சென்று துயிலல் ~(86)

அங்கும் அவர் திரு முடிமேல் மீண்டும் இறைவனார் தாள் நீட்டினார் ~

ஆரூரர் : ~ ( வெகுண்டு ) ” இங்கு என்னைப் பல காலும் மிதித்தனை நீ யார் ? ”

இறை : ~ “அறிந்திலையோ ”

(- என மறைந்தார் )(87)

~ ×××××× ××××××

~ ” செம்மாந்து இங்கு யான் அறியாது என் செய்தேன் ” எனத் தெளிந்து / தம்மானை அறியாத சாதியார் உளரே ” ,என்று / அம்மானைத் திரு வதிகை வீரட்டானத்து அமர்ந்த / கைம்மாவின் உரியானைக் கழல் பணிந்து பாடினார் .(88)

×××××××××××

07/38 ~ கொல்லிக் கௌவாணம் ~

~ தம்மானை யறியாத சாதியா ருளரே சடை மேற்கொள் பிறையானை விடை மேற்கொள் விகிர்தன் / கைம்மாவின் உரியானைக் கரிகாட்டில் ஆடல் உடையானை விடையானைக் கறை கொண்ட கண்டத் தெம்மான்றன் அடி கொண்டென் முடிமேல் வைத்திடுமென்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் / எம்மானை எறி கெடில வட வீரட்டானத் துறைவானை இறை போதும் இகழ்வன் போல் யானே (01)

**************

தென் திசையில் கங்கை எனும் திருக் கெடில நதியில் திளைத்தாடி திரு மாணிக்குழி அடைந்தார்.

திருமாணிக்குழி இறைவனாரை வழிபட்டு , திருத்தினை நகரை அடைந்து பணிந்தவருக்கு வரந் தருவானைப் போற்றி வணங்கி வண் தமிழ் பாடினார் !

×××××× ×××××××

~ பிணி கொளாக்கை பிறப் பிறப் பென்னும் இதனை நீக்கி ஈசன் திருவடி இணக்காள் / துணிய வேண்டிடிற் சொல்லுவன் கேள் நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர் வாழ் மதில் மூன்று / அணி கொள் வெஞ்சிலையாலுகச் சீறும் ஐயன் வையகம் பரவி நின்றேத்துந் / திணியும் வார் பொழில் திருத் தினை நகருட் சிவக் கொழுந்தினைச் சென்றடை மனனே -( 02)

××××× ××××× ×××××

*** தில்லை மருங்கணைதல் *****

“‘ தன் மருங்கு தொழுவார் தம் மும்மை / மா மலங்கள் அற வீடு அருள் தில்லை மல்லல் அம் பதியின் எல்லை வணங்கி . – (92)

=====

“” பன் மலர்ப் புனித நந்தன வனங்கள் பணிந்து சென்றனன் மணங் கமழ் தாரான். ” -(94)

“” மிகு சேண் செல ஓங்கும் தட மருங்கு வளர் மஞ்சிவர் இஞ்சித் தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார் (95)

“” தில்லை ஊர் விளங்கு திரு வாயில்கள் நான்கின் உத்தரத் திசை வாயில் முன் எய்தி . ( 97)

×××××××

அன்பின் வந்து எதிர் கொண்ட சீர் அடியார் அவர்களோ நம்பி ஆரூரர் தாமோ / முன் பிறைஞ்சினர் யாவர் என்றறியா முறைமையால் எதிர் வணங்கி மகிழ்ந்து /”

~ திரு வீதி புகுந்தார்.( 98) ~

+++++++++++

~எண்ணில் பேருலகு அனைத்திலும் உள்ள எல்லையில் அழகு சொல்லிய எல்லாம் / மண்ணில் இப் பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தனவாகிப் / புண்ணியப் புனித அன்பர்கள் முன்பு புகழ்ந்து பாடல் புரி பொற்பில் விளங்கும் /

அண்ணல் ஆடு திருவம்பலம் சூழ்ந்த அம் பொன் வீதியினை நம்பி வணங்கி (102)

÷÷÷÷÷÷÷÷÷÷

~ பெரு மதில் சிறந்த செம்பொன் மாளிகை மின் பிறங்கு பேரம்பலம் மேரு / வருமுறை வலங் கொண்டு இறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார் / அருமறை முதலில் நடுவினில் கடையில் அன்பர்தம் சிந்தையில் அலர்ந்த / திரு வளர் ஒளி சூழ் திருச்சிற்றம்பலம் முன் திரு அணுக்கன் திரு வாயில் . (104)

=====+++ =====

~ வையகம் பொலிய மறைச் சிலம்பார்ப்ப மன்றுளே மாலயன் தேட / ஐயர் தாம் வெளியே ஆடுகின்றாரை அஞ்சலி மலர்த்தி முன் குவித்த / கைகளோ திளைத்தக் கண்களோ அந்தக் கரணமோ கலந்த அன்புந்தச் / செய்தவப் பெரியோன் சென்று தாழ்ந்து எழுந்தான் திருக் களிற்றுப்படி மருங்கு . (105) ~

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

~ ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள , அளப்பரும் கரணங்கள் நான்கும் / சிந்தையே ஆகக் , குணமொரு மூன்றும் திருந்து சாத்துவிகமேயாக , / இந்து வாழ் சடையானாடும் ஆனந்த எல்லையில் தனிப் பெருங் கூத்தின் / வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார் .- (106)

××××××××××××

~ ” தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் திரு நடங் கும்பிடப் பெற்று / மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம் “” ,என்று / கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரியக் கைம் மலர் உச்சி மேல் குவித்துப் / பண்ணினால் நீடி அறிவரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார் . -( 107 )

+++++++++++++

இறைவனார் :~ ( வான் வாக்கு ) ” தரளம் எறி புனல் மறி திரைப் பொன்னி / மடுத்த நீள் வண்ணப் பண்ணை ஆரூரில் வருக நம்பால் “”- (108)

÷÷÷÷÷÷÷÷

இறைவனாரிடம் விடை கொண்டு , அம்பலத்தை வலங் கொண்டு வணங்கி ,எழு நிலை கோபுரம் கடந்தார்.

நின்று கோபுரத்தை நிலமுறப் பணிந்து நெடுந் திரு வீதியை வணங்கி , அப் பதியின் தென் திசை வாயிலை வணங்கிப் பின் கொள்ளிடத் திரு நதியைக் கடந்தார் . ( 110 )

– திருச் சிற்றம்பலம் –

-ௐௐௐௐௐௐௐௐ-

கோமல் / 220618

Please rate this

உயிரின் நீள் பயணம் 4/5 (1)

உயிரின் நீள் பயணம்

ௐௐௐ
சிவ சிவ :


உயிரின் நீள் பயணம்


ஒவ்வொரு உயிரையும் , புல் பூண்டு ,விலங்குகள் எனப் பல்வேறு உடல்களில் புகுத்தி ,பல பிறவிகளை அளித்து ,மனிதப் பிறவியை அளிக்கப் பக்குவம் பெற்ற நிலையில் மனிதப் பிறவியை அளிக்கிறார் சிவனார் !


தொடர்ந்து மெல்ல மெல்லப் பக்குவப் படுத்தப் பல மனிதப் பிறவிகளையும் அளித்து ,அந்தந்த உயிர்களில் ஒன்றாய் ,உடனாய் ,
வேறாய் நின்று செயலாக்கம் செய்து வருகிறார்.
இந்தப் பிறவிகளில் உயிர்கள் ஈட்டும் நல் வினை தீ வினைகள் அவற்றின் தனித் தனி கணக்குகளில் ஏற்றப் படுகின்றன .
இந்த செயற் பாட்டின் தொடர்ச்சியாக , ஒரு உயிருக்கு மீண்டும் பிறப்பளிக்கும் முன் அது தன்னை நோக்கி எந்த அளவுக்குப் பயணப் பட்டிருக்கிறது என்றக் கணக்கீட்டின் அடிப்படையில் , மேலும் இன்பத் துன்பங்களில் உழலச் செய்து ,தன்னை நோக்கி வரச் செய்யும் கருணையோடு , அதற்கு ஆயுட் காலத்தை நிர்ணயம் செய்து ,அந்த ஆயுட் காலத்துக்குள் அது பண்பட வேண்டிய அளவுக்கு ,அந்த உயிர் ஈட்டியுள்ளப் புண்ணிய பாவங்களுக்கானக் கணக்கிலிருந்து ,
தேவையான அளவு மட்டும் நல் வினை தீ வினைகளை ஏற்றி , அந்த உயிரின் பக்குவ நிலைக்கு ஒத்த வினைகளுடைய இல்லத்தில் பிறக்கச் செய்கிறார். 


இது சொந்தம் எனும் உறவு முறை நூலினாலே அருட் சோதியான இறைவன் செய்யும் பின்னல் வேலையாகும்.
அதனாலேயே ஒரு சாதகப் படி ஒரு குடும்பத்தில் உள்ள ஏனையோர் விதிகளோடு தொடர்பு படுத்தி உயிர் வினைகளை ஊட்டி ஆட்டி வைக்கப் படுகிறது !


பல பிறவிகளில் உழலும் உயிர் உலகியல் நிலையாமையை உணர்ந்து ,சிவம் மட்டுமே இறை எனத் தெளிந்து ,அவரை நோக்கி உறுதியாகப் பயணிக்கத் தொடங்கி விட்டால் இப் பிறவியில் அதைப் பக்குவப் படுத்தி ஈர்க்க ஏற்றி அனுப் பட்ட தீ வினைகள் பயன் விளைவிக்காது அகலும்.
இதுவே உயிரின் பயண முறை . 


ஆராய்ச்சிகள் ஒரு புறமிருக்கட்டும் .


முழு நீறணிக ; அஞ்செழுத்து ஓதுக ; ஆலய வழிபாடுகள் செய்க ; அடியார் திருக் கூடடங்களோடு இணைக ! ஆலயம் தொடர்புடையத் திருத் தொண்டுகள் செய்க ; பூசைகள் இயற்றுக !
ஞான நூல்களை ஓதுக ; கற்க ; விளக்கம் செய்யும் பெரியோர் சொல் கேட்க ; சிந்திக்க; தெளிக !
திருவுருவத்தை மனத்தில் கொணர்க ; திருவடியை மனத்தால் சிக்கென உரிமையுடன் பற்றுக !
சிவனார் கை கொடுத்துத் தூக்கி அணைத்துக் கொள்வார் !
சைவத் திருமுறைகள் ,சாத்திர புராணங்களைக் கற்ற அளவு நான் தெளிந்த நிலை இதுவே !


ஒருவரே இறை !
அவர் சிவ பரம் பொருளே !


-திருச் சிற்றம்பலம் –
~கோமல் கா சேகர் /9791232555/020818

Please rate this

மணலூர்பேட்டை காக்கனேசுவரர் திருக்கோவில் திருப்பணி No ratings yet.

மணலூர்பேட்டை காக்கனேசுவரர் திருக்கோவில் திருப்பணிக்கு உதவுங்கள்

சிவாயநம…. ஆருரா தியாகேசா…

தங்களிடம் நம் அப்பன் திருப்பணிக்காக கையேந்தி நிற்கின்றோம் உதவி செய்யுங்கள்….

ஈசனுக்காக கையேந்தி நிற்கின்றோம் உதவி செய்யுங்கள்

எந்தை காக்கனேஸ்வரர் திருவருளால் இன்று அம்பாள் சன்னதியின் மேல் தளம் மூடப்பட்டது…. உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி….
மேலும் பெருமானின் ஆலய விமானப்பணிகளும் மஹா மண்டப திருப்பணி … 32 கால் கொண்ட கருங்கல் வசந்த மண்டப திருப்பணி மட்டுமே மீதம் உள்ளது .

ஆனால் திருப்பணி தொடர்ந்து நடத்திட போதுமான அளவு வசதி இல்லாத காரணத்தால் திருப்பணி தடைபட்டு விடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம் ..

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேல் திருப்பணி செய்து கொண்டு இருக்கிறோம்.. ஆனாலும் இன்னும் 50 சதவிகிதம் கூட நிறைவடைய வில்லை…

உதவும் உள்ளம் கொண்டவர்கள் ஏதேனும் ஒரு திருப்பணி முன்னின்று நடத்தி தரலாம் அல்லது ஒரு மூட்டை சிமென்ட்…. ஒரு செங்கல் … ஒரு நாள் கூலி என எப்படி வேண்டுமானாலும் உதவலாம்… உதவி செய்யுங்கள் தங்களின் காலில் விழுந்து கேட்கிறேன்.. உதவி செய்யுங்கள் உலகினை ஆளும் ஈசன் அமர நிழல் இல்லாமல் வெளியில் இருக்கிறார்… நம் அப்பன் ஆலயம் இல்லாமல் இருக்கிறார்….

பல ஆயிரம் காலத்திற்கு முன் முனிவர்களாலும் சித்தர்களாலும் ரிஷிகளாலும் மன்னர்களாலும் நம் முன்னோர்களாலும் பூஜித்து வழிபாடு செய்யப்பட்ட ஆலயம்… காலத்தின் கோலத்தால் சிதலமடைந்தது.. அந்த சிதலமடைந்த ஆலயத்தை திருப்பணி செய்து மீட்டெடுத்து மீண்டும் ஆலயம் வழிபாட்டிற்கு கொண்டுவருவதற்கு உதவி செய்யுங்கள்….

தங்களிடம் நம் அப்பன் திருப்பணிக்காக கை ஏந்தி நிற்கின்றோம்🙏🙏 உதவி செய்யுங்கள்….

ஈசனுக்காக கையேந்தி நிற்கின்றோம் உதவி செய்யுங்கள் ..

தொடர்புக்கு

சிவ.எழில்
9080432395

விக்னேஸ்வரன்
9940037776
மணலுர்பேட்டை…

🙏மேன்மைக் கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்🙏 சிவாயநம திருச்சிற்றம்பலம்….

Please rate this

சமுதாய தொண்டு ஒருவர் செய்ய வேண்டுமா ? No ratings yet.

இறைவனை மட்டும் வழிபட்டால் போதாதா ? ஒருவர் சமுதாய தொண்டும் செய்ய வேண்டுமா ?

ஒவ்வொரு உயிரும், தானே ‘தான் யார்’ என்று உணரவும், இறைவனை உணர்ந்து வழிபடவும் விழைந்தால், அந்த உண்மையினை உணர பல காலம், பிறவிகளாகும். அதற்காகக் தான் இறைவன், குருவாக உபதேசம் செய்கிறான், இன்னொருவர் மூலமாக நமக்கு தன்னை உணர்த்துகிறான், அருளாளர்களை நமக்கு அனுப்பி வைக்கிறான். அருளாளர்கள் நமக்கு வாழ்வின் வழிகாட்டியாக இருந்து நமக்கு முன்னோடிகளாக இருக்கிறார்கள். இவையனைத்தும் இறையனார் அருளினால் ஆனது. அப்படியானால், இந்த சமுதாயமே நமக்கு இறைவனைக் காட்டுகிறது. இந்த சமுதாயமே பல கோவில்களைக் கட்டிக் கொடுத்துள்ளது. இன்று நாம் அதன் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்.

சற்றே சிந்தித்துப் பாருங்கள். மயிலாப்பூரில் இருக்கும் கபாலீசுவரர் கோவிலை எத்தனை கைகள் இணைந்து உருவாக்கியிருக்கும் ? எந்தக் காலத்தில் இவை உழைத்து உருவாக்கியது ? இன்று நாம் அந்த கோவிலில் அமர்ந்து அதன் இறையனுபவத்தை உட்கிரகித்து உய்வடைகிறோம். அந்த தூண்களை செதுக்கிய கைகள் இப்போது நமக்கு முன்னர் வந்தால், அந்த கைகளை நாம் கும்பிட மாட்டோமா ? அந்த கோவில்களை கட்டிக் கொடுத்தவர்களின் திருவடியை வணங்க மாட்டோமா ? என்றோ எவரோ செய்த சமுதாய தொண்டினால் நாம் இன்று சிவானுபவத்தை அனுபவிக்கிறோம். உலகில் இருக்கும் ஒவ்வொரு கோவிலையும் சற்றே சிந்தித்துப் பாருங்கள். எத்தனை கைகள், எத்தனை கால்கள், எத்தனை மூளை எப்படி வேலை செய்து நமக்காக உருவாக்கிக் கொடுத்துச் சென்றுள்ளது ? நாம் பதிலுக்குக் கைமாறாக என்ன செய்யப் போகிறோம் ?

யான் பெற்ற இன்பமே போதும் என்று கருதி, மிக சுயநலவாதியாக திருமூலர் பெருமான் அன்று சிவானந்தத்தை அவர் மட்டுமே அனுபவித்துச் சென்றிருக்கலாம். ஆனால், அவர் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று தன்னுடைய சிவ அனுபவங்களையும், சிவாகமத்தையும் நமக்கு மெனக்கிட்டு செய்யுள்களாக, மந்திரமாக உருவாக்கிக் கொடுத்து சென்றுள்ளார். அவர் சுயநலவாதியாக அன்று இருந்திருந்தால், இத்தனை காலம் எத்தனை உயிர்கள் அதே சிவத்தை உணர்ந்து சிவானந்தத்தை அனுபவித்திருக்க முடியும் ?

நாம் ஒவ்வொருவரும் இறைவனை உணர்ந்து நம் உயிரை மேம்படுத்த வேண்டும். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்த இறைவனையும், கோவில்களையும் மற்றும் பலவாறு நன்மைகள் நமக்குப் புரிந்த இந்த சமுதாயத்திற்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம் ?

தன்னமில்லாமல் இந்த சமுதாயத்திற்கு தொண்டு செய்ய நாம் ஒவ்வொருவரும் கடமைப் பட்டிருக்கிறோம். வாழ்வில் சில காலமாவது நாம் அனைவரும் சமுதாயம் மேம்பட நாம் எதையும் எதிர்பார்க்காமல் தொண்டு செய்ய வேண்டும். இது நம்மை இறைவனுக்கு மிக அருகில் நம்மைக் கொண்டு சேர்க்கும் வல்லமை பெற்றது.

சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய வழிகளில் நாம் பயணித்தாலும், நம் சக உயிர்களுக்கு அதே வழியில் பயணிக்க ஊக்குவிப்பது, உதவி செய்வதும், நம் கடமையாகும். ஒவ்வொரு உயிரின் உள்ளும் சிவம் குடி கொண்டிருக்கிறது. நம் உணர்வுகளையும் எண்ணங்களையும் அது எப்போதும் அறிந்து கொண்டே இருக்கிறது. ஆகேவ, தன்னலமற்ற சமய தொண்டினை நம் சமுதாயத்திற்கு நாம் முழு மனத்தோடு செய்ய வேண்டும். நிச்சயம் திருவருள் கைகூடும். திருநாவுக்கரசு பெருமானின் உழவாரப்பணியை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

திருச்சிற்றம்பலம்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

Jpeg
Jpeg

Jpeg

Please rate this

புங்கம்பாடி மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் No ratings yet.

புங்கம்பாடி மீனாட்சி சொக்கநாதர் ஆலயம்

அன்புடையீர் வணக்கம்,

நம் தமிழ் கலாச்சாரம், பண்பாட்டு சின்னங்களை போற்றி பாதுகாக்க வேண்டிய கடமை தமிழனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு. நமது முன்னோர்களின் கைவண்ணங்கள் நமது மண்ணிலே தெரிந்தும், தெரியாமலும் புதைந்து , சிதைந்து கிடக்கின்றன, அப்படி சிதைந்து கிடக்ககூடிய ஆலயம்தான் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் புங்கம்பாடி கிராமம். குடகனாற்றின் கீழ் கரையில் அமர்ந்துள்ள கம்பீரமான கோட்டை சுவருடன் காணப்படும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம். இவ்வாலயம் கிபி. 1702 ஆம் வருடம் கடைசியாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது  என்று அங்குள்ள கல்வேட்டின் மூலம் அறியப்படுகிறது. இப்பகுதி மக்கள் இதை கோட்டை என்றே அழைக்கிறார்கள்.

1000 வருடம் பழமையான சிவாலயம் கேட்பாரற்று சிதைந்து சுற்று சுவர்கள் இடிந்து,பாழடைந்து கிடக்கிறது. பூசைகளும் நடைபெறுவதும் இல்லை.

தற்பொழுது கிராமத்தினரால் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பிரதோஷம்,தேய்பிறை அஷ்டமி மற்றும் முக்கிய நாட்களில் பூஜை நடைபெறுகிறது. 

ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அதிகாரி திரு. இராமச்சந்திரன் ஐயா அவர்கள் தலைமையில் கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆராய்ச்சி நடைபெற்றது .ஆய்வு முழுவதும் நிறைவு பெற்றதும் புங்கம்பாடி கிராமம் மற்றும் மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்தின் முழு வரலாறு கிடைக்கப்பெறும்

கரூரில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் 13 கி.மீ., தூரத்தில் ஆறு ரோடு பிரிவிற்கு சென்று, அங்கிருந்து 14 கி.மீ., சென்றால் புங்கம்பாடி கோயிலை அடையலாம். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கரூரில் இருந்து ஆத்துமேடு செல்லும் நகர பேருந்து செல்கின்றது.
அல்லது

அரவக்குறிச்சியிலிருந்து பாளையம் செல்லும் சாலையில் 7 கிமீ தொலைவில் உள்ளது.

https://www.facebook.com/karurphotographer/posts/1028360567176671

இக் கோவில் பற்றி மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள:
சுகுமார்பூமாலை,
புங்கம்பாடி கிராமம்  
9962222962
திருச்சிற்றம்பலம்.

Please rate this

அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலையை கிரிவலம் வாருங்கள் No ratings yet.

அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலையை சுற்றி கிரிவலம் வாருங்கள் !!!

அச்சிறுபாக்கம் – அச்சுமுறிப்பாக்கம் – சிவபெருமானின் எட்டு வீரட்ட செயல்களில் முப்புர அசுரர்களை அழிக்க இரதத்தில் செல்லும் போது, விநாயகர் அந்த இரதத்தின் அச்சினை முறித்த இடம் ஆதலால், இது அச்சுமுறிப்பாக்கம் என்று பெயர் பெற்றது என்பது வரலாறு.

சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி நம் தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்கள் யாரும், அவ்வழியில் அச்சிறுப்பாக்கத்தில் வரும் நம் வஜ்ரகிரி மலையை கண்ணால் காணாமல் செல்ல முடியாது. இந்த மலை அச்சிறுப்பாக்கத்தில் மேல்மருவத்தூரை அடுத்து அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில் ௧௫௰௰ (1500) ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சிவாலயம் உள்ளது. இங்கு உறையும் பெருமான் மரகதாம்பிகை உடனுறை பசுபதீசுவரர் என்று அன்போடு காலம் காலமாக அழைக்கப்பட்டு வருபவர்.  அச்சிறுபாக்கத்தில் அமையப் பெற்றுள்ள பாடல் பெற்ற தலமான ஆட்சீசுவரர் கோவிலுக்கு உட்பட்டது தான் மலை உச்சியில் உள்ள பசுபதீசுவரர் கோவிலும் என்கிறார்கள். மலையின் உச்சியில் உள்ள கோவிலை அடைய இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று செங்குத்தான படிக்கட்டு. இன்னொன்று மலையின் பின்புறம் வாகனங்களில் வருவதற்கான பாதை.

இந்த மலையை சுற்றி பல்லாண்டு காலமாக மலைவலம் (கிரிவலம்) நடைபெற்று வருகிறது. சிறிதே தடைபட்ட இந்த மலைவலம், பிறப்பு இறப்பு அற்ற எல்லையில்லாத ஆற்றல் பொருந்திய உலகின் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானின் திருவருளினாலும் அவர் விருப்பத்தினாலும் இப்போது மீண்டும் துவங்கியுள்ளது.  மொத்தம் ௧௪ (14 km) கி.மீ. தூரம் உள்ள இந்த மலையைச் சுற்றி வரும் பாதையில் முழுநிலவு (பௌர்ணமி) அன்று கிரிவலம் வரப்படுகிறது.

மலைவலம் துவங்கும் இடம்:  அச்சிறுபாக்கம் பசுபதீசுவரர் கோவில் மலையடிவாரம்.

எல்லையற்ற கருணையும், ஆற்றலையும் கொண்டு, இந்த பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, ஒடுக்கி, அருள் புரிந்து வரும் சிவபெருமான் உயிர்களுக்குத் தேவையான அனைத்தையும் இந்த உலகில் படைத்து அருளி காத்து வருகிறான். அவ்வாறாக, சிவபெருமானே, மலையின் வடிவில் அமைந்து அருள் பாலிப்பதாக நம் சாத்திரங்கள் கூறுகின்றன. ஒரு நாட்டின் அரசனுக்கு நாம் செய்யும் பணிகள் தான் எத்தனை எத்தனை ? அவனை வரவேற்று உபசரிக்கும் விதம் தான் எத்தனை எத்தனை ? இந்த ௨௨௪ (224) புவனங்களில் ஆயிரக்கணக்கான கோள்களையும் பரவெளியையும் படைத்து அருள் புரிந்து வரும் நம் ராஜாதி ராஜனான சிவபெருமானை நாம் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் ? எப்படி வணங்க வேண்டும் ? அவனை எப்படிக் கொண்டாட வேண்டும் ?

இந்த மலையிலும் அரிய வகை மூலிகைகளும் மரங்களும் உள்ளன. சித்தர்களும் ஞானிகளும் வாழ்ந்திருந்த பூமியாக விளங்கியது இது. பெருமை மிக்க இந்த மலையில் மேவி அருள்பாலிக்கும் பசுபதீசுவரரை வணங்கியும் இந்த மலையை சிவபிரானாகவே எண்ணி மலைவலம் வருவதும் நாம் மிக்க புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும். திருவண்ணாமலைக்கு இணையாக இந்த மலையும் திகழ்வதால், திருவண்ணாமலை கிரிவலம் செய்யும் அதே புண்ணியமும், சிறப்பும், அருளும் இந்த மலையை வலம் வருவதால் கிடைக்கப்பெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்கள், திருவண்ணாலை செல்வதோடு இந்த வஜ்ரகிரி மலையையும் கிரிவலம் வருவது மிகவும் சிறப்பைத் தரும். இந்த மலையை சீர் செய்யவும், வழிபாடுகள் சிறப்பாக அமையவும் பல உதவிகள் தேவைப்படுகிறது. இந்து உதவி அமைப்பினர் பல சிறப்பான முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் அனைத்து இந்து அமைப்புகளும் கூட்டாக ஒன்று சேர்ந்து நம் பாரம்பரிய சொத்தான இந்த மலையை சீரமைத்து, கோவில்களையும் வழிபாடுகளையும் சிறப்பாக நடத்த இணைந்து செயல்பட வேண்டும்.  திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் அன்பர்கள் வஜ்ரகிரி மலைக்கும் கிரிவலம் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

இணையற்ற ஒப்பற்ற பெருமானின் திருவருள் மீண்டும் நம் பூமியில் பட்டு ஆன்மீக ஒளிப்பெருக்கு ஏற்பட வேண்டும்.

திருச்சிற்றம்பலம்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

Please rate this

சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு திருவாவடுதுறை ஆதீனம் 4.2/5 (5)

சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு திருவாவடுதுறை ஆதீனம்

12 ஆம் தொகுப்பு வகுப்பு   2018 – 2019

திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதின 24 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்களின் அருளாணையின் வண்ணம் ஆதினத்தின் சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பின் 12 ஆவது தொகுப்பு 2018 சனவரியில் தொடங்கப் பெற உள்ளது. இரண்டு ஆண்டுத் தொகுப்பான இந்தப் பயிற்சி வகுப்பு தமிழ்நாட்டில் சுமார் 85 ஊர்களிலும், ஆந்திர மாநிலம் ஐதராபாத்திலும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலும், மலேசியா, இலங்கை, இங்கிலாந்து ஆகிய அயல் நாடுகளிலும் நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சியில் ஏன் சேர வேண்டும் ? இந்த வகுப்பு நமக்கு என்ன நன்மை தரும் ? இந்தப் பயிற்சியில் யார் சேரலாம் ? பயிற்சி காலம், பயிற்சி கட்டணம், தேர்வு மற்றும் சான்றிதழ் பற்றிய மேலும் பல செய்திகளுக்கு இணைக்கப்பட்டுள்ள அறிக்கையைப் படிக்கவும்.

அனைத்து மையங்களின் அமைப்பாளரும் அவர்களின் தொடர்பு எண்ணும் இணைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு அருகில் இருக்கும் ஊர்களில் உள்ள மையங்களுக்கு சென்று இன்றே உங்கள் பெயரைப் பதிவிடுங்கள்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

திருச்சிற்றம்பலம்.

வகுப்பு நடைபெறும் அனைத்து மையங்களின் அமைப்பாளரும் அவர்களின் தொடர்பு எண்ணும்.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

காரைக்கால் அம்மையார் திருப்பதிகம் -திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் 2 No ratings yet.

காரைக்கால் அம்மையார் திருப்பதிகம்

திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் 2

சிவதீபன் -📱9585756797

குறிப்பு: திருவாலங்காட்டில் “அண்டமுற நிமிர்ந்தாடும் அப்பனது திருநடம் கண்டபோது அம்மை பாடிய பதிகங்களுள் இது இரண்டாவதாம்”

சுடுகாட்டின் காட்சியமைப்புகளையும் பேய்களின் இயல்புகளையும் விரிவாக பதிவு செய்யும் இப்பாடல்கள் மிகுந்த சுவை மிகுந்தவைகளாம்

இறைவனது ஆடல்கோலம் பற்றி விரிவாகப் பேசும் இப்பாடல்களின் நிறைவில் “காடுமலிந்த கனல்வாய் எயிற்று காரைக்கால் பேய்” என்று தம்மை குறித்து கொள்வது அம்மையாருக்கே உரிய தனிப்பெரும் சிறப்பாம்

இப்பதிகத்தின் நிறைவான இரண்டு பாடல்கள் இவை

பாடல்
பண் : இந்தளம்

குண்டை வயிற்றுக் குறிய சிறிய நெடிய பிறங்கற்பேய்
இண்டு படர்ந்த இருள்சூழ் மயானத் தெரிவாய் எயிற்றுப்பேய்
கொண்டு குழவி தடவி வெருட்டிக் கொள்ளென்று இசைபாட மிண்டி மிளிர்ந்த சடைகள் தாழ விமலன் ஆடுமே

சூடும் மதியம் சடைமேல் உடையார் சுழல்வார் திருநட்டம்
ஆடும் அரவம் அரையில்  ஆர்த்த அடிகள் அருளாலே
காடு மலிந்த கனல்வாய் எயிற்றுக் காரைக் காற்பேய்தன்
பாடல் பத்தும் பாடியாடப் பாவம் நாசமே
பொருள்

வயிறு பெருத்ததும் சிறிய உருவம் உடையவையும் பெரியதுமான பேய்கள் கரிய இருட்டில் மிகநெருக்கமாக வாயில் தீயை உடைய கோலத்தில் சின்னஞ்சிறிய குழந்தை பேய்களுக்கு விளையாட்டு காட்டியபடி “கொள்” என்ற ஒலியெழுப்பியபடி ஆடும் மயானத்தில் சடைகள் பொன்போல மிளிர்ந்திட விமலன் ஆடுகிறார்

சடைமேல் மதிசூடி சுழன்று சுழன்று திருநட்டம் செய்பவரும் ஆடுகின்ற அரவத்தை இடுப்பில் கட்டியவருமான இறைவரது அருளினால் காட்டில் வாழ்கின்ற கனல்போன்ற பற்களை உடைய காரைக்கால் பேயாகிய நான் சொன்ன இப்பாடல்களை பாடியாடுபவர்களது பாவம் நாசமாகும்

தவறாமல் கேட்டின்புறுங்கள்🙏🏻🙂

 

Please rate this

காரைக்கால் அம்மையார் திருப்பதிகம் – திருவாலங்காட்டு மூத்தபதிகம் – 1 No ratings yet.

காரைக்கால் அம்மையார் திருப்பதிகம்

திருவாலங்காட்டு மூத்தபதிகம் – 1
[11/2-1/10,11 – 02/06/18]

சிவதீபன் – 📱9585756797

குறிப்பு: “பதிகம்” என்ற சொல்லுக்கு பத்து பாடல்கள் அடங்கிய தெகுப்பு என்று பெயர்.

தேவார மூவரும் இப்பதிக நடையை அதிகம் கையாண்டிருந்தாலும் இதற்கு முன்னோடியாக தமிழ் பாடியவர் “காரைக்கால் அம்மையாரேயாவார்”
இதுபற்றியே இப்பதிகம் “திருவாலங்காட்டு மூத்தத்திருப்பதிகம்” எனப்பட்டது, இது திருவாலங்காட்டில் அருளிச்செய்யப்பெற்றது

திருக்கயிலையை தலையால் கடந்தேறிய அம்மை சிவதரிசனம் செய்து “ஆடும்போது அடியின் கீழிருக்கும் வரம் வேண்டினர்”

அப்பொழுது ஆடல்காட்சி காண்பதற்கு “திருவாலங்காடு வரப்பணித்த இறைவர் பேய்களும் விலங்குகளும் திரியும் ஈமப்புறங்காட்டில் நடனம் ஆடிக்காட்டினார்”

அவ்வாடல் காட்சிகளை பதிவு செய்வதே இப்பாடல்களாம்

பதிகத்தின் கடைக்காப்பு பாடலில் தம்மை “காரைக்கால் பேய்” என்று அம்மையார் குறித்து கொள்ளும் பாங்கு நம் நெஞ்சம் நிறையும் அற்புதக்குறிப்பாம்

பாடல்
பண்: நட்டபாடை

புந்தி கலங்கி, மதிமயங்கி
இறந்தவ ரைப்புறங் காட்டில் இட்டுச்
சந்தியில் வைத்துக் கடமை செய்து
தக்கவர் இட்டசெந் தீவி ளக்கா
முந்தி அமரர் முழவி னோசை
திசைகது வச்சிலம் பார்க்க ஆர்க்க,
அந்தியின் மாநடம் ஆடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

ஒப்பினை யில்லவன் பேய்கள் கூடி,
ஒன்றினை ஒன்றடித் தொக்க லித்து,
பப்பினை யிட்டுப் பகண்டை பாட,
பாடிருந் தந்நரி யாழ மைப்ப,
அப்பனை அணிதிரு ஆலங் காட்டெம்
அடிகளைச் செடிதலைக் காரைக் காற்பேய்
செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார்
சிவகதி சேர்ந்தின்பம் எய்து வாரே

பொருள்

இறைவனை பற்றி நினைவு இல்லாமல் வாழ்ந்து புந்தி கெட்டு மதி மயங்கி இறந்து போனவருக்காக சாலைகள் சந்திக்கும் இடங்களில் சடங்குகள் செய்தபின் கொண்டுபோய் எரிக்க தக்க இடமான ஈமப்புறங்காட்டில் ஆடுகின்ற அப்பனது இடம் திருவாலங்காடு ஆகும்

பெரும் பேய்கள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்வதும் பகண்டை இடுவதும் நரிகள் ஊளையிடுவதுமான காட்டில் ஆடுகின்ற ஆலங்காட்டு ஐயனை காரைக்கால் பேயாகிய யான் சொன்ன பத்து பாடல்களையும் பாடிவழிபடுபவர் சிவகதி பெறுவர்

தவறாமல் கேட்டின்புறுங்கள் கிடைத்தற்கரிய பாடல்கள்🙏🏻🙂

 

Please rate this

சம்பந்தர் தேவாரம் – திருக்கோளிலி திருப்பதிகம் No ratings yet.

சம்பந்தர் தேவாரம்

திருக்கோளிலி திருப்பதிகம்
[1/62/4 – 23/06/18]

சிவதீபன்  – 📱9585756797

குறிப்பு: “திருக்குவளை என்று தற்காலத்தே அழைக்கப்பெறும் இத்தலம் நவகோள்கள் வழிபட்டமையால் திருக்கோளிலி எனப்பட்டது”

திருவாரூருக்கு அருகில் இருக்கும் இவ்வூருக்கு நாகையில் இருந்தும் திருவாரூரில் இருந்தும் பேருந்து வசதிகள் உண்டு

சப்தவிடங்க தலங்களுல் ஒன்றான இத்தலத்தில்தான் சுந்தரமூர்த்தி சுவாமிகள் நெல்பெற்ற அற்புதம் நிகழ்ந்தது

“சிவபூசையின் மகத்துவத்தை உணர்த்தும் சண்டேச நாயனாரது வரலாற்றை பிள்ளைப் பெருமானார் இத்தலத்து பதிகத்தில் குறித்து பாடியிருக்கிறார்”

“நாளாய போகாமே” என்று துவங்கும் அற்புதமான இத்தல பதிகத்தின் நான்காம் பாடல் இது

பண் : பழந்தக்கராகம்

பாடல்

வந்தமண லால்இலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டும்
சிந்தைசெய்வோன் தன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத்
தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீசன் என்றருளிக்
கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே.

பொருள்

மண்ணியாறு கொண்டுவந்த மணலால் அவ்வாற்றின் கரையில் இலிங்கம் அமைத்து மேய்ச்சலுக்குக் கொண்டு வந்த பசுவின் பாலை அபிடேகித்து வழிபட்ட விசாரசருமனது செயலைக் கண்டு அச்சிவபூசையைச் சிதைக்க முற்பட்ட அவன் தந்தையின் காலை அவன் தடிய, அதனைக் கண்டு அவ்விசாரசருமனுக்குச் சண்டீசப் பதவி அருளித் தான் உண்ட கலத்தொடு சூடிய மலர் மாலைகளைச் சூடிக்கொள்ளும் சிறப்பை அளித்தவன், திருக்கோளிலியில் விளங்கும் எமது பெருமான் ஆவான்

அற்புதமான இசை தவறாமல் கேட்டின்புறுங்கள்🙏🏻🙂

 

Please rate this

சேக்கிழார் பெரியபுராணம் 5/5 (1)

சேக்கிழார் பெரியபுராணம்

திருநகரச்சிறப்பு
[12/பாயிரம்/130 – 27/05/18]

சிவதீபன்
9585756797

குறிப்பு: “புராணங்கள் அத்தனைக்கும் மணிமகுடமாக விளங்குவது சேக்கிழார் பெருமான் அருளிச்செய்த பெரியபுராணமாம்”

அதில் திருநகரச்சிறப்பில் வைத்துப் போற்றப்பெரும் தலம் “திருவாரூர்” திருநகரமாம்

“பவனி வீதிவிடங்கனாக இறைவன் இருந்தாடி அருள்புரியும் தலம் திருவாரூர் திருநகரமாகும்”

“அரியகாட்சியராம் நம் தியாகேசப் பெருமான் தற்காலத்தில் ஆண்டுக்கு ஒருமுறையே வெளிவந்து ஆழித்தேர் ஏறி வீதியுலாப் போகிறார்” அதற்குரிய நாளும் இன்றாம்

இந்நாளில் முன்பு திருவாரூர் நகரத்தில் பசுவின் மனக்கேதம் தீரும் பொருட்டு மகனை தேர்காலில் இட்ட மனுவேந்தருக்கும் உயிர்நீத்த அமைச்சருக்கும் பசுக்கன்றுக்கும் அரசன்மகனுக்கும் பசுவிற்கும் அருள்புரியும் பொருட்டு “வீதிவிடங்கர் எழுந்தருளிய காட்சியை சேக்கிழார் பெருமான் காட்டும் பாடல்” இன்றுநம் சிந்தனைக்கு

பாடல்

தண்ணளி வெண்குடை வேந்தன் செயல்கண்டு தரியாது மண்ணவர் கண்மழை பொழிந்தார் வானவர் பூமழை சொரிந்தார் அண்ணல் அவன் கண்ணெதிரே  அணிவீதி மழவிடை மேல் விண்ணவர்கள் தொழநின்றான்  வீதிவிடங்கப் பெருமான்

பொருள்

உயிர்கள் மாட்டு வைத்த கருணையாகிய வெண்கொற்றக் கொடையினை உடைய கண்டு, ஆற்றாதவர்களாய் நிலவுலகில் உள்ள மனிதர்கள் கண்ணீரைப் பொழிந்தார்கள். வியந்த தேவர்கள் பூமழையைச் சொரிந்தார்கள். அந் நிலையில் அறத்தின் மேம்பட்ட அவ்வரசனின் கண்ணெதிரே அழகிய திருவீதியின்கண், இளைய மழவிடையின்மீது விண்ணவர்களும் தொழுமாறு தியாகேசர் காட்சி கொடுத்தருளினார்.

“விண்ணவர்கள் தொழநின்றான் வீதிவிடங்கப் பெருமான்” என்னும் இடத்தில் ஓதுவார் காட்டும் உருக்கம் இன்று ஆழித்தேரில் ஏறி விண்ணவரும் மண்ணவரும் தொழ வீதிவலம் வரும் பெருமானை கண்முன்னே நிறுத்தும் கேட்டின்புறுங்கள்🙏🏻🙂

 

Please rate this

திருப்பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா No ratings yet.

திருப்பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா

கோயில் திருப்பதிகம்
[9/இசை/19/6 – 28/05/18]

சிவதீபன்
9585756797

குறிப்பு: சோழ வளநாட்டில் காவிரியின் தென்கரையில் திருவையாற்றுக்கு அருகிலுள்ளது, திருப்பூந்துருத்தி என்னும் பாடல்பெற்ற சிவத்தலம்.

இத்தலத்தில் “அந்தணர் குலத்தில் தோன்றியவர், நம்பிகாடநம்பி நம்பி என்னும் பெயர், அந்தணர் குலத்தில் தோன்றியவர்கள் தங்கள் பெயருடன் அமைத்துக்கொள்ளும் சிறப்புப் பெயர். காடவர் என்ற சொல் இவர் பெயருடன் இணைந் திருத்தலை நோக்கி இவர் பல்லவர் மரபில் தோன்றியவர் என்பர்.

இவர்தம் திருவிசைப்பாப் பதிகங்களை நோக்கும்போது இவர், மூவர் பாடிய தேவாரப் பாடல்களை இடைவிடாது ஓதி இன்புறுபவர் என்பதும், கண்ணப்பர், கணம்புல்லர், சேரமான்பெருமாள் முதலிய நாயன்மார் களைப் போற்றுவதில் விருப்புடையவர் என்பதும் நன்கு புலனாகும்.

இவர் திருவாரூர் சிதம்பரம் என்ற இரண்டு தலங்களுக்கும் திருவிசைப்பாத் திருப்பதிகங்கள் அருளிச்செய்துள்ளார். திருவாரூர்த் திருப்பதிகத்துள் இரண்டு பாடல்களே உள்ளன.

கோயில் திருப் பதிகத்தைத் தேவாரத் திருப்பதிகங்களில் காணப்பெறாத சாளரபாணி என்ற ஒரு பண்ணில் இவர் பாடியுள்ளார்.

பாடல்
பண்: சாளரபாணி

அகலோக மெல்லாம் அடியவர்கள்
தற்சூழப்
புகலோகம் உண்டென்று புகுமிடம்நீ
தேடாதே
புவலோக நெறிபடைத்த புண்ணியங்கள்
நண்ணியசீர்ச்
சிவலோக மாவதுவும் தில்லைச் சிற்றம்பலமே.

பொருள்

நீ புகுவதற்கு வேறு உலகம் உண்டு என்று நீ கருதாதபடி, மேல் உலகங்களை அடைவதற்கு உரிய நெறியானே எய்திய புண்ணியங்களால், இந்நிலவுலகம் முழுதிலுமுள்ள அடியவர் கள் உன்னைச் சூழ்ந்து நிற்க, அதனால் பொருந்திய சிறப்பினையுடைய சிவலோகமாகவே தில்லைத் திருப்பதியின் சிற்றம்பலம் அமைந்துவிட்டது.

தவறாமல் கேட்டின்புறுங்கள்🙏🏻🙂

சிவதீபன்
📱9585756797

Please rate this

கருவூர்தேவர் திருவிசைப்பா 4.67/5 (3)

கருவூர்தேவர் திருவிசைப்பா

திருமுகத்தலை திருப்பதிகம்

சிவதீபன்
📱9595756797
குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் திருத்தருப்பூண்டியிலிருந்து நாகப்பட்டினத்திற்குச் செல்லும் பெருவழியில்,

திருத்தருப்பூண்டியில் இருந்து சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள கொக்காலடி இறங்கி வடக்கே மானாச்சேரி செல்லும் மணல்வழியில் ஒரு கி.மீ தொலைவில் உள்ள பன்னத்தெரு என்னும் ஊரே இம்முகத்தலை என்னும் ஊர்.

இவ்வூர்க்குரிய திருவிசைப்பாவில் மூன்று இடங்களில் “பன்னகாபரணர்” என இறைவர் அழைக்கப்படுகின்றார்.

ஆதலின் இதுவே முகத்தலை என்பர் சைவ அன்பர் திருவாளர் தி.கு. நாராயணசாமி நாயுடு அவர்கள். இத்தலம் மதுரை ஆதீன அருளாட்சியில்
விளங்குவது.

இத்தலம்தான் முகத்தலை என்பது முடிந்த முடிபன்று அது ஆய்வுக்குரியது என்பாரும் உளர்,

ஆனால் இங்குள்ள சுவாமி தலையும் முகமும் காட்டும் வண்ணத்தில் இருப்பதாலேயே இது “முகத்தலை” எனப்பட்டது என்பாரும் உளர்

பண்: பஞ்சமம்

பாடல்

புவன நாயகனே அகவுயிர்க்கு அமுதே
பூரணா ஆரணம் பொழியும்
பவளவாய் மணியே பணிசெய்வார்க் கிரங்கும்
பசுபதீ பன்னகா பரணா
அவனி ஞாயிறு போன்று அருள்புரிந்து அடியேன்
அகத்திலும் முகத்தலை மூதூர்த்
தவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்
தனியனேன் தனிமை நீங்குதற்கே.

பொருள்

எல்லா உலகங்களுக்கும் தலைவனே! உன்னை அடைந்த முத்தான்மாக்களுக்கு அமுதம் போன்ற இனியனே! எல்லாப் பண்பு நலன்களாலும் நிறைந்தவனே! வேதத்தை ஓதிக்கொண்டிருக்கும் பவளம் போன்ற சிவந்த வாயினை உடைய மாணிக்கமே! உன்தொண்டுகளைச் செய்யும் அடியவர்பால் இரக்கம் காட்டிஅருளும் உயிர்களுக்குத் தலைவனே! பாம்புகளை அணிகளாக உடையவனே! இவ்வுலகிலே சூரியனைப் போன்று ஞானஒளி பரப்பி அருள்புரிந்து, தன்னுணர்வில்லாத அடியேனுடைய துணைஇல்லாத நிலை நீங்குதற்கு அடியேன் உள்ளத்திலும் திருமுகத்தலை என்ற திருப்பதியில் உள்ள வெண்மையான ஒளியை உடைய மணிகள் பதிக்கப்பட்ட அழகிய கோயிலிலும் விரும்பி உறைகின்றவனே! உன் திருவருள்வாழ்க.

தவறாமல் கேட்டின்புறுங்கள்🙏🏻🙂

 

Please rate this

தினமும் ஒரு தேவார வைப்புத் தல தரிசனம் No ratings yet.

தினமும் ஒரு தேவார வைப்புத் தல தரிசனம்

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
கோவை.கு.கருப்பசாமி
______________
தினமும் ஒரு தேவார வைப்புத் தல தரிசனம்:
(நேரில் சென்று தரிசிக்க வேண்டும் என்பதற்காக……….)
______________
தேவாரம் தனிப்பாடல் அல்லாத வைப்புத் தல தொடர்எண்: (2)

தேவாரம் பாடலுக்குள் அமைந்த வைப்புத் தலம்:

வைப்புத் தல அருமைகள் பெருமைகள்:

அகத்தீஸ்வரர் திருக்கோயில், அகத்தீச்சரம்:

இறைவன்: அகத்தீஸ்வரர்.

இறைவி: அறம்வளர்த்தநாயகி, அமுதவல்லி.

தல விருட்சம்: அகத்தி.

தல தீர்த்தம்: அகத்திய தீர்த்தம்.

வழிபட்டோர்: அகத்தியரும், அவர் துணைவியார் லோபா முத்திரையும்.

தேவார பதிகம் உரைத்தவர்:
அப்பர்.

ஆறாம் திருமுறையில், எழுபத்தொன்றாம் பதிகத்தில், எட்டாவது பாடல்.

இருப்பிடம்:
கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோவில் செல்லும் தேசீய நெடுஞ்சாலையில் சென்று, கொட்டாரம் என்னுமிடத்தை அடைந்து, அங்கிருந்து அகத்தீஸ்வரம் செல்லும் சாலையில் ஒரு கி.மி. சென்றால் வழியில் வடுகன்பற்று என்ற இடம் வரும்.

இங்கிருந்து அருகாமையிலுள்ள அகத்தீஸ்வரம் அகத்தீஸ்வரர் கோவிலை அடையலாம்.

கன்னியாகுமரியிலிருந்து சுமார் ஆறு கி.மீ. தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து சுமார் பதினைந்து கி.மீ. தொலைவிலும் இருக்கிறது.

✉ஆலய அஞ்சல் முகவரி:
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,
வடுகன்பற்று,
அகத்தீஸ்வரம் அஞ்சல்,
கன்னியாகுமரி மாவட்டம்,
PIN – 622 101

ஆலயப் பூஜை காலம்:
தினமும் காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் ஆலயம் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகளேச்சுரம், கோடீச்சுரம், திண்டீச்சுரம், குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

இத்தலத்தின் இப்பதிகப் பாடலில் ஈச்சுரம் என வரும் தலங்களை வகுத்து அப்பர் அருளிச் செய்துள்ளார்.

இத்தலம் வெள்ளிமலை, மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் முள்ளிமலை ஆகிய மூன்று மலைகளால் சூழப்பெற்று உள்ளது.

அத்திரி முனிவர் வழிபட்டதால் இறைவனுக்கு அத்திரீசுவரர் என்ற பெயரும் உண்டு.

அம்பாள் பரமகல்யாணி என்று பெயருடன் காட்சி தருகிறாள்.

தீர்த்தம் அத்திரி தீர்த்தம் மற்றும் கடனா நதி.

சிவலிங்கத்தின் பின்பகுதியில் தலைமுடி இருப்பதைப் போன்ற தோற்றம் உள்ளது.

பின்புறக் கருவறைச் சுவரில் உள்ள சிறிய சாளரம் வழியே இதை தரிசிக்கலாம்.

பிருகு, அத்திரி முனிவர்கள் இத்தல இறைவனை வழிபட்டு காட்சி கண்டுள்ளனர்.

அத்திரி முனிவரால் உண்டாக்கப்பட்ட கங்கை இன்றும் சிவசைல மலையில் ஆயிரத்து ஐநூறு அடி உயரத்தில் அத்திரி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த தீர்த்தத்தின் அருகில் முருகருக்கு ஒரு கோவில் இருககிறது.

அத்திரி முனிவரால் உண்டாக்கப்பட்ட கங்கை கருணையாற்றுடன் கலந்து சிவசைலம் கோவிலுக்கு வடக்குப் பக்கம் ஓடி திருப்படைமருதூர் தாமிரபரணி நதியுடன் கலந்து பாய்ந்தோடுகிறது.

தல அருமை:
அகத்தியர் வழிபட்டத் தலமாதலால், இது ‘அகத்தீச்சுரம்’ எனப்பட்டது.

கோயில் உள்ள இடம் வடுகன் பற்று ஆகும்.

அகத்தியர், தம்முடைய மனைவி லோபாமுத்திரையுடன் வழிபட்ட தலம்.

இக்கோயில் பாண்டிய மன்னன் ஜயச்சந்திர ஸ்ரீ வல்லபன் என்பவனால் கட்டப்பட்டவையாகும்.

சிறப்புகள்:
இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத் தலமாகும்.

கோயில் கருங்கல்லினால் திருப்பணி செய்யப்பட்டிருக்கிறது.

அழகிய மணவாளப் பெருமாள் சந்நிதி தனியாகவும் உள்ளது.

சோழர்கள் காலத்தில் இக்கோயில் சிறப்புற்று விளங்கியதை இங்குள்ள கல்வெட்டுக்களால் அறியலாம்.

குறிப்பு:
அகத்தீச்சுரம் என்ற பெயரில் பல தலங்கள் உள்ளன.

திண்டிவனம் – பாண்டிச்சேரி சாலையில் உள்ள கிளியனூரில் உள்ள சிவாலயம் அகத்தீஸ்வரம் என்ற பெயருடைன் உள்ளது.

அகத்தியர் தன் மனைவி லோகமுத்திரையுடன் இத்தல இறைவனை வழிபட்டுள்ளார்.

அகத்தியர் வழிபட்டதால் இத்தலம் அகத்தீச்சரம் என்று பெயர் பெற்றது.

அகத்தியருக்கும், லோபமுத்திரைக்கும் இத்தல இறைவன் தலவிருட்சமான அத்தி மரத்தின் கீழ் திருமணக் கோலம் காட்டி அருளியுள்ளார்.

அழகிய மணவாளப் பெருமாள் சந்நிதியும் தனியாகவுள்ளது.

இந்தக் கோவிலில் உள்ள கல்வெட்டில் குமரி மங்கலத்துக்குத் திரு அகத்தீஸ்வரமுடைய மாதேவன்” என வரும் தொடரால் குமரிமங்கலம் என்பது ஊரின் பெயராகவும், அகத்தீஸ்வரம் என்பது ஆலயத்தின் பெயராகும்.

குலோத்துங்க சோழன் அகத்தீச்சுரமுடைய ஈசனார்க்கு வழங்கிய நிவந்தம் இந்தக் கல்வெட்டு சாசனத்தில் இருக்கின்றது.

ஆலயத்தின் பெயரே இன்றைய நாளில் ஊர்ப் பெயராயிற்று என்பதும் தெளிவாகிறது.

நாடகம் ஆடிடம் நந்திகேச்சுரம் மாகாளேச்சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன் கான கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம் குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறுங்கால் ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம் அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அந்தண் கானல் ஈடுதிரை இராமேச்சுரம் என்று என்று ஏத்தி இறைவன் உறை சுரம்பலவும் இயம்புவோமே.

கூத்தப் பெருமானது இடமாகிய நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகேச்சுரம், நாகளேச்சுரம், நன்மை பொருந்திய கோடீச்சரம், கொண்டீச்சரம், திண்டீச்சரம், குக்குடேச்சுரம், அக்கீச்சரம் என்றுமிவற்றைக் கூறுமிடத்து உடன்வரும் ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அழகிய குளிர்ந்த கடற் கரையில் முத்து பவளம் முதலியவற்றைக் கொணர்ந்து போடும் திரைகள் சூழ்ந்த இராமேச்சுரம் என்றெல்லாம் இறைவன் தங்குகின்ற ஈச்சுரம் பலவற்றையும் கூறி அவனைப் புகழ்வோமாக!

திருச்சிற்றம்பலம்.

தேவாரம் வைப்புதலங்களின் நாளைய பதிவு, அயவந்தீஸ்வரர் திருக்கோயில், அசோகந்தி.

____________
அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.
____________
இராஜபதி கைலாசநாதர் திருக்கோயில் திருக்கோபுர உயர்வதற்க்கு உபயம் அனுப்பி விட்டீர்களா?

நீங்கள் அளிக்கும் உபயம், உங்கள் கர்ம வினைகளை ஒழிக்கும். புண்ணியம் சேமிப்பாகும்.

இப்புண்ணியம் எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு தனமாக அமையும்.

மனம் நினைக்க மகேசன் அருளாவான்!
உபயம் ஒன்றளிக்க, உமாவும் அபயமாவாள்!

இராஜபதியில் கைலாசநாதர் திருக்கோயிலில் திருக்கோபுரம் அமைவதற்கு கடந்த இரு வாரங்களாக அடியார்களிடம் பதிவுடன் சென்று யாசகம் கேட்கிறேன்.

சிலர் உபயம் அளித்திருக்கிறார்கள். சிலர் அனுப்புவதாய் கூறியிருக்கிறார்கள்.

அனுப்பாதவர்கள் கூடிய விரைவில் அனுப்பி ஈசனின் புண்ணியத்தை தனமாக்கிக் கொள்ளுங்கள்.

இப்போது, இராஜகோபுரத்திற்கு இரண்டாவது நிலைகைளைத் தாங்கி நிற்கும் சூழ்நிலை நடந்து கொண்டிருக்கிறது.

இத்துடன் இராஜபதி ஆலய காணொலியும், வாசிக்கும் பத்திரிக்கையும் இணைத்தனுப்பி உள்ளோம்.

படித்து, உபயம் அளியுங்கள்.
அடியார்களே!, பக்தர்களே, பொதுஜனங்களே! ஆலய கோபுர வளர்ச்சிக்கு அவசியம் உபயம் அளியுங்கள்!

பணம் அனுப்ப வேண்டிய முகவரி.

கைலாஷ் டிரஸ்ட்
இந்தியன் வங்கி.
*கோவில்பட்டி கிளை
A/Ç no: 934827371
IFSC code: IDIBOOOKO51
Branch code no: 256

_____________
திருக்கோபுரம் அமைய உபயம் அளியுங்கள்!
திரும்ப பிறப்பில்லா நிலையெதுங்கள்!!

Please rate this

திருவாதவூரர் திருக்கோவையார் No ratings yet.

திருவாதவூரர் திருக்கோவையார்

இயற்கை புணர்ச்சி – தெய்வத்தை மகிழ்தல்
[8/கோவை/1/6 – 16/05/18]

குறிப்பு: “திருக்கோவையார்” என்பது அகத்துறை செய்திகளின் மூலம் தில்லை கூத்தபிரான் புகழ்பாடும் திருமுறை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை

இதனில் தலைவன் தலைவி செவிலி தோழி நற்றாய் உள்ளிட்டோரது பேச்சுகளுக்கு இடையே தில்லையில் திருக்கூத்தாடும் ஆடவல்லார் புகழ்பேசப்படும்

மேலோட்டமாகப் பார்த்தால் நேரடியாக அகத்துறை செய்திகள் மட்டும்தான் இதனில் பேசப்படுகிறது என்பதுபோல தோன்றும் என்றாலும் நுணுகிப் பார்ப்போர்க்கு மட்டுமே திருக்கோவையார் ஒரு சைவசித்தாந்த பெட்டகம் என்பது விளங்கும்

கோவையாரின் முதல் அதிகாரமான “இயற்கை புணர்ச்சி” என்பது தலைவனும் தலைவியும் இயற்கையாக முதல்முறை சந்திக்கும் பொழுது ஒருவரைப்பற்றி ஒருவர் சிந்திப்பது பேசுவது முதலான செய்கைகளை கொண்டிருப்பதாம்

இதனில் “தெய்வத்தை மகிழ்தல்” என்பது இத்தகு அழகிய தலைவியை தந்தமைக்கு தலைவனும் வீரமிக்க தலைவனை தந்தமைக்கு தலைவியும் தெய்வத்திற்கு நன்றி கூறுதலேயாம்

அத்தெய்வத்தை “கூடல்தெய்வமாக” கொள்ளுதலும் இங்கு மரபு என்றாலும் அவர்கள் போற்றும் தெய்வம் தில்லை கூத்தபிரானேயாவர்🙏🏻

தற்காலத்திலும் கூட கணவன் மனைவியரோ அல்லது காதலன் காதலியரோ “இவர்/இவள் எனக்கு கிடைப்பதற்கு தெய்வத்துக்குதான் நன்றி சொல்லனும்” என்று கூறுவது வழக்கம் இதுவே “தெய்வத்தை வியத்தலாம்”

பாடல்

வளைபயில் கீழ்கடல் நின்றிட மேல்கடல் வான்நுகத்தின்
துளைவழி நேர்கழி கோத்தெனத்
தில்லைத் தொல்லோன் கயிலைக் கிளைவயின் நீக்கியிக் கெண்டையங்
கண்ணியைக் கொண்டுதந்த
விளைவை அல்லால்வியவேன் நயவேன் தெய்வம் மிக்கனவே.

பொருள்

தலைவன் கூறுகிறான்:

கீழ்கடலில் எறியப்பட்ட ஒரு வளைத்தடியானது அலைகளால் எற்றுண்டு மேல்கடலில் மிதக்கும் ஒரு நுகத்தடியில் உள்ள துளையில் போய் செருகிக்கொள்வது எப்படி இறைவனது சித்தமாக நடக்கிறதோ அதே போல “கயிலையில் இருந்து வந்து தில்லை என்னும் பழமையான பதியில் நடனமிடும் தில்லை கூத்தபிரான் எனக்கு அளித்த இவளை தெய்வத்தின் அருள் என்று வியப்பேன் நயப்பேன்”

பின்குறிப்பு: சைவ சித்தாந்த விளக்கப் பாடங்களில் ஆசிரியர்கள் பரசமய நிராகரண விளக்கம் கொடுக்கும் பொழுது

உலகாயுதர்கள் வினைக்கொள்கையை ஏற்க மறுப்பதற்கு மேலே தலைவன் கூறிய “கீழ்கடல் மேல்கடல் நுகத்தடி” உதாரணம் கூறி விளக்கப்படும்

உலகத்தில் அவரவர் வினைவசம் நடக்கும் அனைத்தையும் தானாகவே இயற்கையாக நடக்கிறது என்பது உலகாயுதர்களின் நம்பிக்கை

ஆனால் ஒரு வளைத்தடியும் அதனை கோர்த்து வீச ஏதுவான நுகத்தடியையும் நாம் பிரித்து வளைத்தடியை வங்கக்கடலிலும் நுகத்தடியை அரேபியக்கடலிலும் வீசிவிடுகிறோம் என்று வைத்து கொள்வோம்

அவையிரண்டும் இனி சேருவதற்கு எந்த வாய்ப்பு இல்லை, ஆனாலும் அலையின் வேகத்தில் எற்றுண்ட இரண்டு தடிகளும் மிதந்துவந்து ஒரிடத்தில் சந்தித்து இணைந்து தக்க வகையில் பொருத்தி கொள்கிறது என்றால் இதனை தானாக நடந்ததாக எப்படி கொள்ள முடியும்?? அது இறைவனின் அருளால் அன்றி தானாக நடக்க வாய்ப்பே இல்லை என்பது உலகாயுதருக்கு சொல்லப்படும் மறுப்பு ஆகும்

இந்த செய்தியை எடுத்தாளும் தலைவன், தலைவியும் அவனும் இணைந்தது கீழ்கடலில் எறியப்பட்ட வளைத்தடியும் மேல்கடலில் எறிப்பட்ட நுகத்தடியும் இணைந்தது போல தில்லைகூத்தன் திருவருளால் நிகழ்ந்த ஒன்று என்று உணர்ந்து தெய்வத்திற்கு நன்றி கூறுகிறார்.

Please rate this

சமயகுரவர் துதி சைவ சமயத்தை மீட்டெடுத்த நால்வர் துதி 5/5 (3)

சமயகுரவர் துதி

சந்தான குரவர்களில் ஒருவரான உமாபதி சிவாச்சாரியார் இயற்றிய சமய குரவர் துதி. இது நால்வர் துதி என்றும் அழைக்கப்படும்.

சைவ சமயம் மற்றும் தமிழ் மொழியின் தொன்மையைப் பறை சாற்றும் எண்ணற்ற சான்றுகள் குமரிக் கண்டத்தில் இன்றும் இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது. முதல் தமிழ் சங்கம், மற்றும் இரண்டாம் தமிழ் சங்கம் நடைபெற்றது குமரிக் கண்டத்தில். மூன்றாம் தமிழ் சங்கம் நடைபெற்றது இன்றைய திருஆலவாய் (மதுரை) இல். சங்க காலம் சைவ சமயத்தின் பொற்காலம். சங்க காலத்திற்குப் பிறகு களப்பிரர்கள் ஆட்சி நடைபெற்றது. இது  2 முதல் 5 ஆம் நூற்றாண்டு காலமாகும். இந்த சமயத்தில் சைவம் மருவி, சிவ வழிபாடு குன்றியது. இது இருண்ட காலம் எனப்படும்.

அப்போதிருந்த மன்னர்கள் சமண சமயம் பௌத்த சமயம் ஆகியவற்றைத் தழுவியதால், மக்களும் அவர்களை பின்தொடர்ந்தனர். சமணர்களின் துறவறம் மக்களைக் கவர்ந்தது. சிவ ஆலயங்கள் வழிபாடுகள் இல்லாமல் குன்றியது. சமணர்கள் திருநீறு அணிபவர்களைக் கேவலமாக நடத்தினர். திருநீறு அணிந்த பூச்சாண்டிகளைப் பார்த்தாலே சிறைவாசம். இதற்கு கண்டுமுட்டு என்று பெயர்.  திருநீற்றை அணிந்தவரைப் பார்த்தேன் என்று ஒருவர் கூறியதை கேட்டவருக்கும் சிறை. இது கேட்டுமுட்டு என்று பெயர். இவ்வளவு கொடூரமான சமயத்தில், சைவ சமயத்தை மீட்டெடுக்க சிவபெருமானார் பெருங்கருணை கொண்டு அருளாளர்களை இங்கு அனுப்பி அருளிச் செய்தான். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் மற்றும் பல நாயன்மார்கள் தோன்றி சைவ சமயத்தை மீட்டெடுத்து சிவ வழிபாட்டை இடையூறின்றி நடத்தினர். இவர்கள் நம் சமயத்தை மீட்டெடுத்ததால் இவர்களை சமயகுரவர் என்கிறோம்.

இந்த சமயகுரவர்களை துதித்து பின்னாளில் வந்த சந்தான குரவர்களில் ஒருவரான உமாபதி சிவம் எழுதிய பாடலை பண்ணிசை பாவலர் திரு தண்டபாணி அவர்களின் குரலில் கேட்டு மகிழுங்கள்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம்.

Please rate this

திருநாவுக்கரசர் தேவார துளிகள் – கோயில் திருக்குறுந்தொகை 5/5 (1)

திருநாவுக்கரசர் தேவார துளிகள் – கோயில் திருக்குறுந்தொகை

பதிவாசிரியர்: சிவதீபன்.
 
திருநாகைக்காரோணம் திருவிருத்தம்
 
குறிப்பு: நாகராசன் வழிபட்டமையால் “நாகை” என்றும் புண்டரீக முனிவரின் காயத்தை தம்மேல் ஆரோகணித்த பெருமான் உறைவதால் காயாரோகணம் என்றும் அழைக்கபபெற்று “நாகைக்காரோணம் எனப்படுகிறது
 
பரதவர்களும் வியாபாரிகளும் நிறைந்து வாழ்ந்த நெய்தல் நகரமாம் இது “பட்டினம்” ஆதலின் “நாகைப்பட்டினம்” என்று தற்காலத்தே வழங்கப்பெறுகிறது, “காரோணம்” என்ற பெயரில் ஆலயம் அழைக்கப்பெறுகிறது
 
“விரிதிரை சூழ் கடல்நாகை அதிபத்த நாயனார் வாழ்ந்திருந்த பதியாம்” இதற்கு மூவர் தேவாரப்பாடல்களும் உண்டு
 
சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லற வாழ்வியலுக்கு தேவையான பொருட்கள் யாவையும் இத்தலத்தில் இறைவனிடம் வேண்டிப்பெறுகிறார்
 
ஒன்பது பாடல்களால் நிறைவடைந்துள்ள அப்பரடிகளது விருத்த செய்யுள்கள் இவை
 
பாடல்
 
வடிவுடை மாமலை மங்கை பங்கா கங்கை வார்சடையாய்
கடிகமழ்சோலை சுலவு கடனாகைக் காரோணனே
பிடிமதவாரணம் பேணுந் துரகநிற்கப் பெரிய இடிகுரல் வெள்ளெருது ஏறும் இதென்னைகொல் எம்மிறையே.
 
கருந்தடங் கண்ணியுந் தானுங் கடனாகைக் காரோணத்தான்
இருந்த திருமலை யென்றிறைஞ் சாதன்று எடுக்கலுற்றான்
பெருந்தலை பத்து மிருபது தோளும் பிதிர்ந்தலற
இருந்தரு ளிச்செய்த தேமற்றுச் செய்திலன் எம்மிறையே.
 
பொருள்
 
அழகிய பார்வதி பாகனே ! நீண்ட சடையில் கங்கையைத் தரித்தவனே ! நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த , கடலையடுத்த நாகைக் காரோணனே ! எம்தலைவனே ! பெண்யானை , மதமுடைய ஆண்யானை , விரும்பும் குதிரை இவைகள் இருப்பவும் பெரிய , இடிபோன்ற குரலையுடைய வெள்ளிய காளையை நீ இவர் வதன் காரணம் என்ன ?
 
கரிய நீண்ட கண்களை உடைய பார்வதியும் தானுமாகக் கடல் நாகைக் காரோணத்தான் உகந்தருளியிருக்கும் திருமலை என்று அதனை வழிபடக் கருதாது , அன்று , அதனைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய தலைகள் பத்தும் தோள்கள் இருபதும் சிதற அதனால் அவன் உரக்கக் கதறக் கயிலை மலையில் இருந்தவாறே அவனுக்கு வாள் முதலியவற்றை நாகைக் காரோணத்தார் அருளிச் செய்தாரே அல்லாமல் அவன் உயிருக்கு இறுதியைச் செய்யவில்லை .
 
 
கோயில் திருக்குறுந்தொகை
 
குறிப்பு: அப்பர் பெருமான் பாடியருளிய திருப்பதிகங்களில் “குறுந்தொகை” என்ற செய்யுளமைப்பில் அமைந்துள்ள பதிகங்கள் யாவும் ஐந்தாம் திருமுறையாக தொகுக்கப் பெற்றுள்ளது
 
அற்புதமான அறக்கருத்துக்களை எளிமையாக எடுத்தோதும் இத்திருமுறையில் சரியாக நூறு திருப்பதிகங்கள் உள்ளன
 
வேண்டினவெல்லாம் வழங்கு தில்லை மூதூரின் எல்லை பணிந்த எழுந்து மேனிலை மாடம் கைதொழுத அப்பர்பெருமான் கனகப்பொது எதிர் கண்ணுற்று கூடிய மகிழ்ச்சி பொங்க கும்பிட்டு இருந்த காலத்தில் “அருட்பெரு மகிழ்ச்சி பொங்க அன்னம்பாலிக்கும் என்னும் திருக்குறுந்தொகைகள் பாடி திருவுழவாரம் செய்து பெருகுபேர் இன்பம் உற்றனர்
 
அன்னம் – சோறு – முத்தி, முத்திவழங்கும் தில்லை சிற்றம்பலம் என்பது நுதலிய பொருள் என்றாலும், “மண்ணுயிர்கள் யாவும் பசிநோயில் வாடாது நாளும் படியளக்கும் தில்லை சிற்றம்பலம்” என்றும் பொருள் கொள்வர் சான்றோர் இதனைக்காட்டவே “தென்பால் உகந்தாடும் தில்லை சிற்றம்பலத்து தெற்கு கோபுரத்தில் அன்னக்கொடியாம் காவிக்கொடி எப்போதும் பட்டொளி வீசிப்பறக்கிறது”
 
மகேசுர பூசையின் போது சீரடியார் பெருமக்கள் பாடிப்பரவும் பைந்தமிழ் மாலையும் இதுவேயாம்
 
பாடல்
 
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.
 
அரும்பற் றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
சுரும்பற் றப்படத் தூவித் தொழுமினோ
கரும்பற் றச்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பெரும்பற் றப்புலி யூரெம் பிரானையே.
 
அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர்
எரிச்சுற் றக்கிடந் தாரென் றயலவர்
சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம்
திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே.
 
பொருள்
 
பேரின்பவீடு நல்கும் தில்லைத் திருச்சிற்றம்பலம் பொன்னுலக வாழ்வையும் தரும் . இத்தகைய திருச்சிற்றம்பலத்தை , மேலும் இந்நிலவுலகில் என் அன்பு பெருகும் வகையில் கண்டு , பரமுத்திப் பேரின்ப நிலையை எளிதின் எய்துதற்கு இந்த நல்ல மனிதப் பிறவியை இன்னு
 
அரும்புகள் நீக்கமுற ஆராய்ந்த போதுகளைக் கொண்டு வண்டுகள் நீக்கமுறத்தூவி , கரும்பாகிய வில்லை ஏந்திய கருவேளை எரித்தவனாகிய பெரும்பற்றப்புலியூர் எம்பிரானை நீர் தொழுமின்
 
அரித்தல் மிக்க இருவினையால் தாக்குண்டு எரிசூழ ( இடுகாட்டில் ) கிடந்தார் என்று அயலோர் சிரிப்புற்றுப் பலபல பேசுதலை அடையுமுன்னரே நீவிர்போய்த் திருச்சிற்றம்பலத்தை அடைந்து உய்மின்
 
 
கோயில் திருக்குறுந்தொகை
 
குறிப்பு: திருவேட்களம், திரக்கழிப்பாலை விரும்பித் தொழுத கலைவாய்மை காவலராம் “அப்பர் தம்பிரானார்” நீடு திருப்புியூரை நினைந்து வழிகொண்டு விரைந்தனர்
 
“நினைப்பவர் மனம் கோயில் கொள்ளும் அம்பலத்து நிருத்தனாரை திணைத்தனை போதும் மறந்துய்வனோ!?” என்று மனக்கோயில் வழிபாட்டை சிறப்பித்து பாடிய பதிகம் இது
 
பாடல்
 
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்தனைப் பொழுதும் மறந்துய்வனோ.
 
தீர்த்தனைச் சிவனைச் சிவலோகனை
மூர்த்தியை முதலாய ஒருவனைப்
பார்த்தனுக்கருள் செய்த சிற்றம்பலக்
கூத்தனைக் கொடியேன் மறந்து உய்வனோ.
 
கட்டும் பாம்புங் கபாலங்கை மான்மறி
இட்டமாயிடு காட்டெரி யாடுவான்
சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனை
எட்டனைப் பொழுதும் மறந்துய்வனோ.
 
பொருள்
 
பனைபோன்ற கையையும் , மும்மதங்களையும் உடைய யானைத்தோலை உரித்துப் போர்த்தவன் ; தன்னை நினைப்பவர் மனத்தைக் கோயிலாக் கொண்டவன் ; வேடம் அனைத்துமாம் அம்பலக்கூத்தன் . இத்தகைய சிற்றம்பலக் கூத்தனைத் தினையளவுப் பொழுதும் மறந்து வாழ்வேனோ !
 
அநாதியே பாசங்களின் நீங்கி நின்று தன்னை அடைந்தார்க்கு அவற்றை நீக்கியருளும் தூயனை , பேரின்ப வடிவினனை , சிவலோக நாயகனை , ஞான உருவினனை , உலகத்தோற்றத்தின் முன் அதற்கு மூலமாய் முன்னின்ற ஒருவனை , அருச்சுனனுக்கு வேடனாய்த்தோன்றியும் , பாசுபதமீந்தும் அருள்செய்த சிற்றம்பலத்துக் கூத்தப்பிரானைக் கொடியேனாகிய யான் மறந்து வாழ்வேனோ ? மறவேன்
 
தன்னைச் சுற்றிக் கட்டிக்கொண்டிருக்கும் பாம்பையும் , கையின்கண் பிரமகபாலத்தையும் மான்கன்றையும் உடையவனும் , சர்வசங்கார நிலையில் விரும்பி எரிவீசி ஆடுவோனும் ஆய சிட்டர்கள் வாழும் தில்லைச் சிற்றம்பலத்துக் கூத்தனை எள்ளளவுப் பொழுதேனும் மறந்து வாழ்வேனோ ?
 
 
திருநெல்வாயில் அரத்துறை திருக்குறுந்தொகை
 
குறிப்பு: பெண்ணாகடத்திற்குத் தென்மேற்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ளது. விருத்தாசலத்திலிருந்து தொழுதூர் செல்லும் பேருந்துகளில் ஏறிக் கொடிகளம் என்னும் இடத்தில் இறங்கித் தெற்கே 1 கி.மீ. தூரம் சென்றால் இத்தலத்தை அடையலாம். இது நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று. அரத்துறை என்பது ஆலயத்தின் பெயர், நெல்வாயில் என்பது ஊர்பெயராம்
 
திருஞானசம்பந்தப் பெருந்தகையார்க்கு முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச்சின்னம் இவைகளை அருளிய தலம் மூவர் பாடலும் பெற்றதாம்
 
 சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருக்குறள் கருத்துக்களையும், அடிகளையும் இவ்வூர் ஏழாம் திருப்பாடலில் எடுத்து ஆளுகின்றார். இத்தலத்துக்குத் திருஞான சம்பந்தப் பெருமான் பதிகம் ஒன்று, அப்பரடிகள் பதிகம் ஒன்று, நம்பியார் பதிகம் ஒன்று ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன.
 
இது அப்பர்பெருமான் பாடிய குறுந்தொகையாம்
 
பாடல்
 
கடவுளைக் கடலுள்ளெழு நஞ்சுண்ட
உடலுளானை ஒப்பார் இலாதவெம்
அடலுளானை அரத்துறை மேவிய
சுடருளானைக் கண்டீர்நாந் தொழுவதே.
 
கலையொப்பானைக் கற்றார்க்கோர் அமுதினை
மலையொப்பானை மணிமுடி ஊன்றிய
அலையொப்பானை அரத்துறை மேவிய
நிலை ஒப்பானைக் கண்டீர்நாந் தொழுவதே.
 
பொருள்
 
நாம் தொழுவது கடவுளும், பாற்கடலுள் எழுந்த நஞ்சு உண்டு தரித்த, அருட்டிருமேனியுடையவனும், ஒப்புமை சொல்லத் தக்கார் இல்லாத ஆற்றல் உள்ளவனும், அரத்துறைத் தலத்தை விரும்பிய ஒளியானவனும் ஆகிய பெருமானையே.
 
நாம் தொழுவது கலையும், கற்றார்க்கமுதும், மலையும் போல்வானும், மலையெடுக்கலுற்ற இராவணனை மணிமுடியின்கண் ஊன்றி அலைக்கலுற்றானும், அரத்துறை மேவிநிலை பெற்றிருப்பானுமாகிய பெருமானையே.
 
 
திருப்பாசூர் குறுந்தொகை
 
குறிப்பு: பாசு என்றால் மூங்கில், மூங்கில் காடுகள் நிறைந்து இருந்தமையால் பாசூர் எனப்பட்டது, தொண்டைநாட்டு நலங்களுள் ஒன்றான இது திருவள்ளூரில் இருந்து திருவாலங்காடு செல்லும் வழியில் கடம்பத்தூர் அருகே 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது
 
இத்தல இறைவர் மூங்கில் காட்டிலிருந்து முளைத்த சுயம்பு மூர்த்தி, தீண்டாதிருமேனியர், அம்பிகையால் வழிபாடு செய்யப்பெற்றவர்
 
இத்தலத்தை பிள்ளை பெருமானாரும் அப்பர் பெருமானாரும் பாடிப்பரவியுள்ளனர், ஆனைக்காவில் வழிபட்ட சிலந்தி யானை பற்றிய செய்திகள் இவ்வூர் தாண்டகத்தில் வருவது எண்ணி மகிழத்தக்கது
 
இங்கு அப்பர் பெருமான் பாடிய குறுந்தொகையில் இருந்து ஒரு அழகிய பாடல் இது
 
பாடல்
 
வேதம் ஓதிவந்து இல்புகுந்தார் அவர்
காதில் வெண்குழை வைத்த கபாலியார்
நீதி ஒன்றறியார் நிறை கொண்டனர்
பாதி வெண்பிறைப் பாசூர் அடிகளே.
 
பொருள்
 
பாதி வெண்பிறை அணிந்த திருப்பாசூர்த் தலத்து இறைவர், வேதங்களை ஓதிவந்து இல்லத்துட் புகுந்தார் ; காதில் வெண்குழை வைத்த கபாலியார் ; நீதியொன்றறியாது என்னுடைய கற்பினைக் கொண்டார்.
 
சற்குருநாத ஓதுவார் குரலில் கேட்டின்புறுங்கள்
 
 
திருவானைக்கா குறுந்தொகை0
 
குறிப்பு: “அப்பர் சுவாமிகள், மண்ணுயிர்கள் உய்யும் பொருட்டு சிவஞானபோதத்தை தேவாரத்தமிழாக விரித்தனர்”
 
அப்படி வேதம் தமிழாக விரிக்கையில் “மெய்யறிவு சிவமே” என்று உணராமல் உலகியலில் ஈடுபட்டுவரும் மக்களை கடுமையாக சாடி அழைத்து உபதேசம் செய்தல் அப்பரடிகளின் பண்பு
 
அவ்வகையில் உலகியலில் கண்ணெதிரே தோன்றுபவை நிகழ்பவை மட்டுமே உண்மை என்று கருதி, வினைக்கொள்கையையும் கடவுளையும் மறுத்து பொய்யறிவு பேசும் “நாத்திகக் கூட்டத்திற்கு சரியான உதாரணம் தந்து இடித்துரைக்கிறார்” சுவாமிகள் இப்பாடலில்
 
பாடல்
 
நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
தடையொன்று இன்றியே தன்னடைந்தார்க்கு எலாம் அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே.
 
பொருள்
 
உலகியலையே மெய்யென்று கருதும் பொய்யாகிய நாத்திகம் பேசாமல், படைகள் போல் வருகின்ற ஐந்து பெரும் பூதங்களால் வரும் தடைகள் ஒன்றும் இன்றித் தன்னை யடைந்த அன்பர் களுக்கெல்லாம் அடையும் பொருளாக நிற்பவன் ஆனைக் காவின் அண்ணலே ஆவன்.
 
மயிலை ஓதுவார் பாடுகிறார் கேட்டின்புறுங்கள்
 
 
 
திருக்கோழம்பம் திருக்குறுந்தொகை
 
குறிப்பு: மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ள மங்கைநல்லூர் என்னும் ஊரில் இருந்து மேற்கே செல்லும் “கோமல் ரோடு” என்னும் சாலையில் 15கிமீ சென்றால் எஸ்புதூர் என்ற ஊர் வரும் அங்கிருந்து “திருக்கொழம்பியூர்” என்று கேட்டால் 1கிமீ தொலைவில் கிராமத்திற்குள் இருக்கும் கோயிலை அடையலாம்
 
திருவாவடுதுறை தலத்தில் இருந்தும் எளிதாக இத்தலத்தை அடையலாம், இங்கிருந்து தெற்கே 4 கிமீ செல்லவேண்டும், மயிலாடுதுறையில் இருந்து தனிவாகனம் அமைத்து கொண்டு செல்வது உத்தமம்
 
அம்பிகை பசுஉருவில் வழிபட்ட தலம் இது, பசுவின் குளம்படிபட்டு இறைத்திருமேனி வெளிப்பட்டமையால் *கோழம்பம்* எனப்பட்டதாம்
 
திருமால், அயன் உள்ளிட்டோருடன் சந்தன் என்ற வித்யாதரன் குயிலுருவில் வழிபட்ட தலமாகும்
 
அப்பரடிகளும் பிள்ளைப் பெருமானாரும்  பதிகம்பாடியுள்ளனர்
 
பாடல்
 
கயிலை நன்மலை ஆளுங் கபாலியை
மயிலி யல்மலை மாதின் மணாளனைக்
குயில் பயில்பொழிற் கோழம்பம் மேயவென்
உயிரினை நினைந்து உள்ளம் உருகுமே
 
பொருள்
 
திருக்கயிலாயத் திருமலையினை ஆள்கின்ற கபாலியும், மயிலியலை உடைய மலைமங்கையின் மணவாளனும் ஆகிய, குயில் பயில்கின்ற பொழில்கள் உடைய கோழம்பத்தைப் பொருந்திய என் உயிர்போல்வானாகிய இறைவனை நினைந்து உள்ளம் உருகுகின்றது.
 
கேட்டின்புறுங்கள்
 
திருநீலக்குடி திருக்குறுந்தொகை
 
குறிப்பு: தென்னலக்குடி என்று தற்காலத்தே அழைக்கப்பெறும் இத்தலம், மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் உள்ள “ஆடுதுறை” என்னும் இடத்தில் இருந்து தெற்கே 3கிமீ தொலைவில் அமைந்துள்ளது
 
வசிட்டர், காமதேனு, தேவமாதர், மார்க்கண்டேயர் உள்ளிட்டோர் வழிபட்ட பதியாம் இதற்கு *தேவி தீர்த்தம், பாரத்வாஜ தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம்,பிரம தீர்த்தம், க்ஷீரகுண்டம்* என்னும் ஐந்து தீர்த்தங்கள் உள்ளன
 
இத்தலத்தில் உள்ள பலாமரம் காய்க்கும் வேளையில் சுவாமிக்கு பலாச்சுளைகள் நிவேதனம் ஆகும், இது தீராநோய்களை தீர்க்கும் மருந்தாம், ஒருவேளை பலாப்பழத்தை சுவாமிக்கு நிவேதனம் செய்யாமல் வெளியில் எடுத்து வந்துவிட்டால் பழம் எந்தநிலையில் இருந்தாலும் உள்ளே வண்டரித்து உண்ணத்தகாத ஒன்றாகிவிடும் அதிசயம் இன்றும் நிகழ்கிறது
 
இத்தல இறைவர் சுயம்பு வடிவில் எழுந்தருளியுள்ள அதிசய மூர்த்தியாவார், திலதைலம் என்னும் நல்லெண்ணெய் கொண்டு அபிசேகித்தால் எத்தனை குடம் தைலமாயினும் இலிங்க பாணத்தால் உறிஞ்சப்பட்டு விடுவது எங்கும் காணாத அதிசயமாம்
 
இத்தலத்து பதிகத்தில் நீலக்குடி அரனார் நாமம் நவிற்றுவோர் பெறும் பயன்கள் யாவை என்று விளக்கும் அப்பரடிகள், “அமணர்கள் தம்மை கல்லினோடு பூட்டி கடலில் இட்டபோது உதவியது நீலக்குடியரன் நாமம் என்று பதிவு செய்யும் பாடல் இது
 
பாடல்
 
கல்லி னோடெனைப் பூட்டி யமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக் குடியரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந் தேனன்றே.
 
பொருள்
 
கல்லினோடு என்னைச் சேர்த்துக்கட்டி அமண் ஒழுக்கமுடையவர்கள் விரைந்து கடல் நீரிற் புக – நூக்கிவிட , என் வாக்கினால் நெல்வளம் உடைய நீண்ட வயல் சூழ்ந்த நீலக்குடி அரனுடைய நல்ல நாமத்தைச் சொல்லி நன்றே உய்ந்தேன் .
 
தவறாமல் கேட்டின்புறுங்கள்
 
 
சிவதீபன்
📱9585756797
 

Please rate this

சைவத்தின் மேல் சமயம் வேறு இல்லை 4.8/5 (5)

சைவத்தின் மேல் சமயம் வேறு இல்லை

சைவ எல்லப்ப நாவலர் அருளிய சைவ சமயத்தின் பெருமையை எடுத்துரைக்கும் பாடல் இது. தேவாரம் நம் உயிர். திருவாசகம் நம் உயிர்.  சைவ சமயத்தின் கருப்பொருளை இனிய பாடல்களாகக் கொண்டிருக்கும் பன்னிரு திருமுறைகளை ஓத, அது இனி வரும் நம் வாழ்வை இனிமையாக வழி நடத்திச் சென்று, ஆணவத்தை அறுத்து, இன்பமே உருவாகிய பிறப்பு இறப்பு அற்ற சிவபிரானின் திருவடிகளை நம்மை அடையச் செய்யும் என்பது திண்ணம்.

கோவை சகோதரர்கள் அவர்களின் வெண்கலக் குரலில்.

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் திருக்கூட்டம்.

Please rate this

விழி கிடைக்குமா அபயக்கரம் கிடைக்குமா ? 5/5 (1)

விழி கிடைக்குமா அபயக்கரம் கிடைக்குமா ?

இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்கள் யாவும் உயிர்கள் என்றும், அவை தம்மைப் பிணித்துள்ள ஆணவ மலத்தை உதறிவிட்டு, எப்போதும் பேரின்பம் தந்து கொண்டிருக்கும் இறைவனை அடைய வேண்டும் என்று வேண்டி, சரியை, கிரியை, யோகம் மற்றும் ஞானம் ஆகிய படிநிலையில் இறைவனை வழிபடுகின்றன. அவ்வாறு வழிபடும் போது, தக்க முதிர்வு நிலையில், இறைவனே ஞான குருவாக வந்து ஞான உபதேசம் அருளி முக்தியாகிய பேரின்பத்தை வழங்குவன். அவ்வாறு சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய படிநிலைகளில் விளங்கும் ஒருவர், தன் தலைவனாகிய சிவபிரானின் கருணை மிகு கடைக்கண் பார்வைக்காக ஏங்கும் போது, தன் உள்ளம் உருகி பாடுகிறார். இந்த பாடலைக் கேட்டால் உருகாதவர் யாருளர் ?

 

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி பாடல் விளக்கம் 5/5 (2)

மாணிக்கவாசகரின் திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் விளக்கம்

சேரும் பொருளின் தன்மையைப் பெறுவது உயிர்களின் குணமாகும். ஆணவ மலத்தின் பிடியில் சிக்குண்டு கிடக்கும் உயிர்கள், அறிவின் மயக்கத்தால் இறைவனை மறந்து மாறிக் கொண்டே இருக்கும் சடப்பொருளின் மீது இலயித்துக் கிடக்கும். அவ்வாறு கிடக்கும் உயிர்களைத் தட்டி எழுப்பி, அவத்தை விட்டு சிவத்தைப் பிடிப்பதற்காக பாடும் பாடல் திருப்பள்ளியெழுச்சி.

இந்த பதிகத்தின் விளக்கங்களை அளிக்கிறார், சிவதீபன் அவர்கள்.

முதல் பாடல்

இரண்டாவது பாடல்

மூன்றாவது பாடல்

நான்காவது பாடல்

ஐந்தாவது பாடல்

ஆறாவது பாடல்

ஏழாவது பாடல்

எட்டாவது பாடல்

ஒன்பதாம் பாடல்

பத்தாம் பாடல்

அனைத்து பாடல்களையும் பார்க்க

உலகின் இல்லங்கள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

 

Please rate this

திருமுறை என்னும் தேன் – துளி 1 4.67/5 (3)

திருமுறை என்னும் தேன் – துளி 1 

பதிவு ஆசிரியர்: சிவதீபன்

திருமூலர் திருமந்திரம்

பத்தாம் திருமுறை – தூல பஞ்சாக்கரம்

குறிப்பு: அப்பரடிகள் இறைவனை கனியினும் இனியன் என்பார், இங்கு திருமூலர் இறைவனது நாமத்தின் சுவை கனி போன்றது என்று பாடுகிறார்

இறை இன்பம் என்பது ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அனுபவித்து தெரிந்து கொள்ளத்தான் முடியும் என்பதனை விளக்கும் மந்திரம் இது

பாடல்

ஒன்று கண்டீர் உலகுக்கொரு தெய்வமும்
ஒன்று கண் டீர் உலகுக்குயிராவது
நன்றுகண்டீர் இனி நமச்சிவாயப்பழம்
தின்றுகண்டேற்கு இது தித்தித்தவாறே .

பொருள்

அனைத்துலகங்களுக்கும் முதற்பொருளாய் நிற்கும் கடவுட் பொருள் ஒன்றே. அனைத்து உயிர்கட்கும் உயிராய் உள்ளதும் அதுவே. அதனை உணர்த்தும் `நமச்சிவாய` என்னும் ஐந்தெழுத்து மறைமொழியே ஞானத்தைத் தரும் மறைமொழியாம். அம்மறைமொழியாகிய பழத்தை நான் தின்றே பார்த்தேன். அது தித்தித்த முறையை உலகில் எந்தத் தித்திப்போடு நான் உங்கட்கு உவமித்து உணர்த்துவேன்.?

சற்குருநார் குரலில் கேட்டின்புறுங்கள்🙏🏻😊

ஒன்று கண்டீர்


தில்லை வாழ்அந்தணர்கள்

(சிவதீபன்)

எனக்கும் நம் “அன்பு” அன்பு தம்பிக்கும் நண்பர் சிவக்குமார் அவர்களுக்கும் *தில்லைகூத்த பிரான் மீது எத்தனை ஈடுபாடோ அதே போலவே பெருமானுக்கு ஸ்ரீகாரியம் செய்யும் “தில்லைவாழ் அந்தணர்கள்” மீதும் ஈடுபாடு உண்டு*


இந்த படத்தில் நீங்கள் பார்க்கும் காட்சி கடந்த திருவாதிரை விழாவில் தேரோட்டத்தின் போது வடக்கு வீதியில் நாங்கள் கண்ட காட்சி!!

*கூட்டத்தின் இடையில் சைக்கிளை தீட்சிதர் ஒருவர் செலுத்த, பின்னால் கேரியரில் அவரது இல்லத்தரசி அமர்ந்திருந்தார்* மற்றவர்களுக்கு எப்படியோ எங்களை பொறுத்த வரை அது *சாட்சாத் நடராஜ பெருமானும் சிவகாமசுந்தரியும் சைக்கிள் ரைடு செய்ததை போல இருந்தது*

காட்சியை கண்டதும் நாங்கள் *இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டோம்* இன்றைக்கு அது அன்பின் கரம் வழியே கூத்தனருளால் ஓவியமாக வெளிப்பட்டுள்ளது

நாங்கள் தில்லைக்கு சென்றால் நிருத்த தரிசனம் ஆனதும் எங்கள் கவனம் தீட்சிதர்கள் என்னென்ன செய்கிறார்கள், எப்படி பேசுகிறார்கள் என்றெல்லாம் கவனிப்பதுதான் வேலை!!

*கூத்தனை தொட்டு தடவி பூசிப்பவர்களாயிற்றே!! “பேற்றினார் பெருமைக்கு எல்லை ஆயினார்” என்று பெரியபுராணமே பாடுகினன்ற வாழும் நாயன்மார்களான இவர்கள் மீது எங்களுக்கு இருக்கும் ஆர்வம் ஆச்சர்யப் படத்தக்கது அன்று*

“வழி!! வழி!!” என்று அதிகாரக்குரல் எடுத்து அவர்கள் வருங்காட்சியும், கூத்தபிரான் முன்பு குழந்தை போல உருகுங்காட்சியும், ஆச்சர்யமாக ஐந்தாம் நாள் தெருவடைச்சான் முன்பு அவர்கள் உலகை மறந்து ஆடிவருங் காட்சியும் சீரினால் வழிபாடுகளை ஒழியாமல் செய்யும் அர்ப்பணிப்பும் தமிழ் மொழிக்கும் திருமுறைகளுக்கும் தக்க வகையில் செய்யும் மரியாதைகளும் வெளியில் கண்டு வணங்கினால் எதிர்வணங்கும் பாங்கும் என இவர்களிடம் ஆச்சர்யப்பட ஏராளமான விஷயம் இருக்கிறது எங்களுக்கு

நாங்கள் *தீட்சிதர்களை பற்றி பேசி மகிழும் நேரங்களில் கண்டு பிடித்த விஷயம் ஒன்று உள்ளது!! அதுதான் “வயர்கூடை”, சபைக்கு அவர்கள் வரும்போது பெரும்பாலும் நைவேத்யங்கள் பூசைப்பொருட்களுடன் வருவார்கள், இப்படியெதுவும் இல்லாத தீட்சிதர் நிச்சயமாக ஒரு வயர்கூடயை வைத்திருப்பார்*

போகும்போது அதில் எதும் கொண்டு செல்வதையும் நாங்கள் கண்டிலோம் ஆயினும அவர்கள் கையில் வயர்கூடை வைத்திருப்பதை நாங்கள் பார்த்து இரசிப்போம் சிரிப்போம்

இந்த ஓவியத்தில் சைக்கிளில் அந்த வயர்கூடை மாட்டியிருப்பதை கண்டின்புறலாம்!!
மேலும் தீட்சிதர் வீட்டு பெண்களின் மங்கலகரமான அணியலங்காரங்கள் சாட்சாத் சிவகாமசுந்தரியை நினைவூட்டும், தமிழ் நாட்டில் பெண்களிடையை நிலவி வந்த மஞ்சள் பூசுதல் குஞ்சம் வைத்து சடை பின்னுதல் நெற்றி நிறைய குங்குமம் வைத்தல்  போன்ற வழக்கங்கள் எல்லாம் ஒருகாலத்தில் இருந்தது ஆனால் தற்போதும் இதனை தவறாமல் கடைபிடிக்கும் தெய்வீகமான பெண்களான இவர்கள் நிச்சயம் சந்தேகத்திற்கு இடமின்றி வணங்கத்தக்கவர்கள்,

அந்த குஞ்சம் வைத்த சடையினை இங்கு முன்னிட்டு காட்டியுள்ளார் அன்பு தம்பி

பின்னால் உள்ள நடராஜா பூக்கடை ஆலய கோபுரத்தின் வேலைபாடுகள் எல்லாம் அற்புதம்

தமிழக கோயில் கோபுரங்கள் அனைத்திலும் இல்லாத சிறப்பு தில்லை கோபுரங்கள் நான்கிலும் உண்டு கீழிருந்து எழும்பியுள்ள கோபுரத்தின் உச்சி கூடு ஓராள் இடைவெளிக்கு உள்வாங்கியது போல இருந்து அதற்கு மேல் குடை போல விரிந்திருக்கும்  இதனை படத்தில் அன்பு அழகாகக் காட்டியுள்ளார்

கண்டும் சிந்தித்தும் இன்புற இந்த ஓவியத்தில் ஏராளமான செய்திகள் பொதிந்துள்ளன.
ஏன்  கூத்தபிரானே பொதிந்துள்ளார் என்றாலும் மிகையில்லை

திருச்சிற்றம்பலம்.


கருவூர் திருவிசைப்பா

ஒன்பதாம் திருமுறை

குறிப்பு: ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள அதிகமான பதிகங்கள் கருவூர் தேவர் அருளியதாம்

பத்து திருவிசைப்பா பாடல்பெற்ற தலங்கள் இவர்தம் இசைப்பாக்களை பெற்றுள்ளன, *சித்தபுருசரான இவர் கயகல்பம் உண்டவராக தன்னை தம் பாடல்களில் குறிக்கிறார்*

தில்லை கோயில் மீது இவர் பாடிய பதிகத்தின் முதல் பாடல் இது

பண்: புறநீர்மை

பாடல்கள்

கணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக்கு அறையணற் கட்செவிப் பகுவாய் பணம்விரி துத்திப்பொறி கொள்வெள் எயிற்றுப்
பாம்பணி பரமர்தங் கோயில் மணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பின் மழைதவழ் வளரிளங் கமுகந்திணர் நிரை அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம்பலமே.

பொருள்

கூட்டமாக விரிந்த தலைகளையும் அத்தலைகளின் கண் சிவந்த இரத்தினங்களையும் பிளவுபட்ட நாக்குக்களையும் விடக்கறை பொருந்திய வாயினையும், கண்ணொடு பொருந்தி நிற்கும் காதினையும், பிளந்த வாய்களையும் படத்தின்கண் பொருந்திய புள்ளிகளையும், வெள்ளிய பற்களையும் உடைய பாம்புகளை அணி கலன்களாக அணிந்த மேம்பட்ட சிவபெருமானுடைய கோயில், நறுமணம் கமழும் ஒட்டுமாமரச் சோலைகளையும், தம் உச்சியில் மேகங்கள் தவழுமாறு உயர்ந்த பாக்கு மரங்களின் உச்சியில் வரிசை யாகத் தோன்றும் பூங்கொத்துக்களையும் உடைய பெரும்பற்றப் புலியூர் என்ற திருப்பதிக்கண் அமைந்த திருச்சிற்றம்பலமாகும்.

சற்குருநாதர் குரலில் தவறாமல் கேட்டின்புறுங்கள்🙏🏻😊

திருச்சிற்றம்பலம்.

Please rate this

16 ஆவது சிவபூசை மாநாடு தமிழகச் சைவநெறிக் கழகம் No ratings yet.

தமிழகச் சைவ நெறிக் கழகத்தின் 16 ஆவது ஆண்டு மாபெரும் சிவபூசை மாநாடு

இடம்: சென்னை பள்ளிக்கரணை, எஸ். எஸ். மகால் திருமண மண்டபம்.

நாள்: சனவரி 27 மற்றும் 28

தீக்கை பெற்ற சிவனடியார்கள் செய்யும் சிவபூசையைக் காணுங்கள்.

புதிய நூல்கள் வெளியீடு

சொற்பொழிவுகள்

28 ஞாயிறு காலை 7:00 மணிக்கு திருமுறைகள், சாத்திரங்கள் உடன், 108 அடியார்கள் சங்கநாதம் மற்றும் கயிலாய வாத்தியங்கள் முழங்க, கோலாட்டத்துடன் சிவனடியார்கள் புடைசூழ மாபெரும் சைவ எழுச்சி வீதி உலா நடைபெறும்.

தமிழகம் எங்குமிருந்து சிவனடியார்கள், சிவதொண்டர்கள், சிவநேசர்கள், ஆன்மீகப் பெரியோர்கள், சைவ பெருமக்கள் வருக தர இருக்கிறார்கள்.

அனைவரும் வருக வருக !!!

நிகழ்வுகள்:

அழைப்பிதழ்:

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

 

Please rate this

இறைவன் யார் ? நாம் யாரை வழிபட வேண்டும் ? 4.38/5 (8)

திருச்சிற்றம்பலம்.

 

இறைவன் யார் ? நாம் யாரை வழிபாடு செய்யவேண்டும் ?

சமூக ஊடகங்களில் திகழும் பல்வேறு குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டியும், உள்ளதை உள்ளவாறு தெளிவுபடுத்தவும் முயலும் பதிவு இது.

ஆளுடையபிள்ளை திருஞானசம்பந்தர் பாதமலரை என் சென்னியின் மேல் வைத்து வணங்குகிறேன்.

அறுபத்து மூன்று நாயன்மார்களின் பாதமலர்களை என் சென்னியின் மேல் வைத்து வணங்குகிறேன்.

மெய்கண்ட சாத்திரங்கள் கொடுத்தருளிய மெய்கண்டார் திருவடித் தாமரைகளை என் சென்னியின் மேல் வைத்து வணங்குகிறேன்.

நாம் யார், இறைவன் யார், நமக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பு என்ன, நாம் யாரை வணங்க வேண்டும் என்பதை தெளிவுற அறிவதற்கு முன்னர், சில வார்த்தைகளை தெளிவு பெற அறிந்து கொள்வது அவசியம்.

 

வணங்குதல் என்றால் என்ன ?

வணக்கம் என்ற சொல் தமிழில் பல பொருளைத் தரும் சொல்லாக விளங்குகிறது. பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்றார் போல் அது வேறு வேறு பொருளைத் தரும். இது வணங்குதல், தொழுதல், போற்றுதல், வாழ்த்துதல், வரவேற்றல், அன்பொழுகல், நன்றி உரைத்தல் என்று பல்வேறு பொருளைத் தருகிறது. ஒரு விருந்தினர் நம் வீட்டிற்கு வரும் போது, அவருக்கு வணக்கம் சொல்கிறோம். அது அவரை வரவேற்பதற்கு. இங்கு வணக்கம் வரவேற்பைக் குறிக்கிறது. ஒருவர் வீட்டில் விருந்து சாப்பிட்டு கிளம்பும் போது வணக்கம் சொல்கிறோம். அது நன்றியைத் தெரிவிக்கிறது. கோவிலில் கடவுளை வணங்குகிறோம். அது தொழுதலைக் குறிக்கிது. தெருவில் செல்லும் போது நண்பரைப் பார்க்கும் போது வணக்கம் சொல்கிறோம். அது வாழ்த்துதலைக் குறிக்கிறது. ஆகவே, வணங்குகிறோம் என்ற சொல் எந்த இடத்தில் எந்த அர்த்தம் கொடுக்கிறது என்பதை தெளிவாக உணர வேண்டும்.

 

வழிபாடு செய்தல் என்றால் என்ன ?

வழிபாடு என்பது இறைவனைத் தொழுவதாகும். இறைவனைப் பூசிப்பதாகும். இறைவனை எப்படித் தொழ வேண்டும் என்றும் திருக்கோவில் வழிபாடு எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் நம் ஆகமங்கங்கள் உரைக்கின்றன. இறைவனை வழிபடுவதற்குப் பல்வேறு நியம நியதிகள் வகுக்கப்பட்டுள்ளது. பல்வேறு குலத்தினர் பல்வேறு வகையான வழிபாடுகளைச் செய்து வருகிறார்கள். வழிபாடு இறைவனுக்கு மட்டுமே செய்யப்படுகிறது. செய்யப்பட வேண்டும்.

 

இறைவன் எத்தனை பேர் ? யாரெல்லாம் அவர்கள் ?

இறைவன் ஒருவனே என்று சைவ சமயம் தெளிவாக விளக்குகிறது. அவன் பாலுக்கு அப்பாற்பட்டவனாதலால், அவனைப் பரம்பொருள் எனக் காட்டப்படுகிறது. ஓர் உருவும், ஓர் நாமம் இல்லாத அந்த பரம்பொருளுக்கு நாம் பல்வேறு பெயர்களையும் உருவங்களையும் நாமே கொடுத்து வழிபடுகிறோம். பொதுவான அந்த பரம்பொருளை நாம் சிவபெருமான் என்ற பெயரைக் கொடுத்து நாம் மனதில் எண்ணுவதற்கு எளிதாக அதற்கு ஒரு இயல்பான உருவத்தையும் கொடுத்துக் கொண்டுள்ளோம். உருவமில்லாத அந்த பரம்பொருள் உயிர்களுக்கு உதவுவதற்கு வேண்டி, உயிர்களின் பக்குவ நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு உருவத்தைத் தானே எடுத்து தன்னை உயிர்களுக்கு அடையாளப்படுத்திக் காட்டுகிறது. பிறப்பு இறப்பு இல்லாத அந்த பரம்பொருள் எல்லையற்ற சக்தியைக் கொண்டது. அந்த சக்தியைக் கொண்டு தான் பல்வேறு செயல்களைச் செய்கிறது. நாம் எளிதாக புரிவதற்கு வேண்டி, அந்த சக்திக்கு மனித பெண் உருவம் கொடுத்து பார்வதி, மீனாட்சி, காமாட்சி என்றெல்லாம் பல்வேறு பெயர்கள் சூட்டி மகிழ்ந்து கொள்கிறோம். சில காரணங்களுக்காக சிவபெருமானிடமிருந்து வெளிப்பட்ட சக்தியை விநாயகர் என்றும், முருகப் பெருமான் என்றும், இவர்கள் சிவசக்திக்கு குழந்தைகள் போன்றும் கற்பனையான வடிவம் கொடுத்தும் வைத்துள்ளோம். இதனால், நாம் எளிதாக மனதில் இந்த உருவங்களைக் கொண்டு வழிபாடு செய்ய முடியும். ஆகவே, சிவபிரான், பராசக்தி, முருகன், விநாயகர் என்பது ஒரே பரம்பொருளைக் குறிக்கிறது. இந்த பரம்பொருளைத் தான் பதி என்று சைவ சிந்தாந்தம் குறிப்பிடுகிறது. இது அநாதியானது. அதாவது, பிறப்பு, இறப்பு, அழிவு என்று எதுவும் இல்லாதது.

 

நாமெல்லாம் யார் ?

அநாதியான இறைவனைப் போல, அநாதியாக இன்னும் இரண்டு பொருட்கள் உள்ளது. அது தான் எண்ணற்ற உருவமில்லாத உயிர்களும், தளை அல்லது பாசம் எனப்படும் அருவப் பொருளும் ஆகும். உயிர்களின் இயல்பு, அறிவு, இச்சை (விருப்பப்படுதல்), செயல் இந்த மூன்றும். உயிர்களுக்கு அறிவு உண்டு. அந்த அறிவு செயல்படாத வண்ணம், தளையாகிய ஆணவ மலம் மூடியிருக்கிறது. (ட்யூப் டேப்லட்டுக்குள் மருந்து இருப்பது போல்). உயிர்களின் அறிவை செயல்பட வைக்கவே, இறைவன் கருணை கொண்டு, அதற்கு தன்னுடைய மாயை என்ற சக்தியிலிருந்து இந்து உலகையும் பிரபஞ்சத்தையும் படைக்கிறான். (ஒரு நுண்ணிய விதைக்குள்ளிருந்து பெரிய ஆலமரம் முளைத்து வருவது போல், மாயை என்று அருவ நுண்பொருளில் இருந்து இந்த பிரபஞ்சம் விரிந்து வளர்ந்து வருகிறது.) நம்மை பிறப்பு இறப்புக்கு உட்படுத்தி நம் அறிவை விளங்கச் செய்து நம்மைப் பக்குவப்படுத்துகிறான் இறைவன். பக்குவப்பட்ட உயிர்களுக்கு வீடுபேறு (முக்தி) அளித்து தடையற்ற பேரின்பத்தை வழங்குகிறான். இந்த அறிவு விளங்க விளங்க, நாம் இறைவனை அடையாளங் கொண்டு அவனுக்கு நன்றி உரைத்து, அவனைப் போற்றி வழிபட வேண்டும்.

 

திருமால், பிரம்மன், இந்திரன், அக்னி இவர்கள் எல்லாம் யார் ?

படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களை இறைவன் செய்து, இந்த பிரபஞ்சத்தை இயக்கி, உயிர்களை பிறப்பு இறப்புக்கு உட்படுத்தி அறிவை விளங்க வைக்கிறான். இந்த தொழில்கள் அனைத்தையும் அவனே செய்ய வல்லவனாயினும், உயிர்களுக்கு அறிவு விளங்குதற் பொருட்டு மேன்மை பெற்ற உயிர்களுக்கு இந்த தொழிலைச் செய்யும் தகுதியை வழங்கி அவற்றை உய்வடையச் செய்கிறான். திருமால், பிரம்மன் போன்ற அனைத்தும் இறைவன் கொடுத்துள்ள பதவியாகும். மேன்மை பெற்ற உயிர்கள் குறிப்பிட்ட காலம் வரை இந்த பதவி வகிக்கும்.

 

நாம் யாரை வணங்க வேண்டும் ?  யாரை வழிபாடு செய்ய வேண்டும் ?

வணங்குதல் என்பது நாம் பயன்படுத்தும் இடத்தைப் பொறுத்து அதன் பொருள் மாறுபடும் என்பதை முன்னமே பார்த்தோம். வழிபாடு என்பது இறைவனைப் போற்றித் துதிப்பது. நாம் அனைவரும் வழிபாடு செய்ய வேண்டியது அந்த ஒரேயொரு பரம்பொருளை மட்டும் தான். வேறு எவருக்கும் வழிபாடு செய்யப்படும் தகுதி கிடையாது. யாரை வேண்டுமானாலும் வணங்கலாம். அதாவது மரியாதை நிமித்தமாக, வரவேற்கும் நிமித்தமாக, நன்றி சொல்லும் நிமித்தமாக, வாழ்த்தும் நிமித்தமாக என்று இத்தனை பொருளிலும் நாம் யாரையும் வணங்கலாம். ஆனால் தொழுதல் மற்றும் வழிபாடு இறைவனாகிய பரம்பொருள் ஒருவனுக்கு மட்டுமே. நம் தாய் தந்தையர், நம் குலதெய்வம், நம் ஊரைக் காக்கும் சாமி, நம் ஆசிரியர், குரு என்று எவரையும் வணங்கிக் கொள்ளலாம்.

 

இதில் இன்னுமொரு பக்குவ நிலை உள்ளது. இது மிகவும் அளப்பரியது, நுட்பமானது. உயிர்களாகிய நமக்கு சிற்றறிவு சொந்தமாக இருந்தாலும், இறைவனாகிய பரம்பொருளின் உதவியினாலேயே நமக்கு உடல் கொடுக்கப்பட்டு, அதற்கு இயக்கமும் கொடுக்கப்பட்டு, அதனால் வரும் அறிவையும் நமக்கு இறைவனே உணர்த்தி நம்மை இயக்குகிறான். அதாவது, அந்த பரம்பொருள், நம்மோடு ஒன்றாகவும், உடனாகவும் நம் உயிரில் கலந்து இருக்கிறான். நம் உயிரில் ஒட்டிக்கொண்டிருக்கும் உடலனாது இறைவன் நமக்கு அளித்த கொடை. அல்லது அருள். ஒரு பெண் அழகாக இருக்கிறாள் என்றால், அது அந்த உயிர் செய்த வினைகளின் காரணமாக, இறைவன் அந்த உயிருக்கு அளித்த அருள். இதனாலேயே இறந்து போன எலும்பிலிருந்து பூம்பாவையை எழுப்பிய திருஞானசம்பந்தருக்கு பூம்பாவை இறைவனின் அருளாகத் தோன்றினாள். ஆகையாலே, அவளை மணக்கவும் மறுத்தார். இறைவனாகிய பரம்பொருள் எங்கும் வியாபித்திருப்பதால், வைகை ஆற்றில் கிடந்த உருண்டைக் கற்கள் அனைத்தும் திருஞானசம்பந்தருக்கு சிவலிங்கத் திருமேனியாய்த் தோன்றியது. அவர் ஆற்றைக் கடக்காமலேயே நின்று பதிகம் பாடினார். மரத்தை மறைத்தது மாமத யானை, பரத்தின் மறைந்தது பார்முதல் பூதம் என்கிறார் திருமூலர்பிரான். அருவமான உயிர்களும், மூன்று மலங்களை உள்ளடக்கிய பாசமும் தவிர, மற்ற யாவும் சிவபிரானின் திருவருளால் உருவானது. அவை யாவும் சிவனின் திருவருள். அந்த ஞானிகளில் பக்குவ கண்களுக்கு அவை அனைத்தும் சிவபிரானின் அருளாகவும் சிவபிரானாகவுமே தோன்றும். அவர்கள் எங்கும் வியாபித்திருக்கும் சிவபிரானையே வணங்கித் தொழுவார்கள். சிவனடியார்களின் திருவேடத்தையே சிவனாக எண்ணி வணங்குவர்.

 

இனி வரும் நாட்களில் நாம் செய்ய வேண்டியது யாது ?

  1. இல்லறவாசிகள் இல்லற கடமைகள் அனைத்தும் சரியாக செய்ய வேண்டும்.
  2. தினமும் திருமுறை அறிந்துணர்ந்து ஓத வேண்டும்.
  3. திருமுறை மற்றும் சாத்திர நூற்களைக் கற்க வேண்டும்.
  4. சிவஞானத்தைத் தேட வேண்டும். தேடத் தேடஅது பிடிபடும். தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே என்பது திருமூலர் வாக்கு. சிவ சொற்பொழிவுகள் கேட்க வேண்டும். திருவிழாக்கள் பார்க்க வேண்டும்.
  5. சிவன் மீதும் சிவனடியார்கள் மீதும் மிகுந்த அன்பு கொள்ள வேண்டும். சிவனடியார்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு, அவர்கள் கூட்டத்திலேயே இருக்க வேண்டும்.
  6. திருக்கோவில்களை சிவனாகவே எண்ணி தினமும் வழிபட வேண்டும்.
  7. சிவனடியார்களின் திருவேடத்தையே சிவனாக எண்ணி வணங்க வேண்டும். நம்மால் இயன்ற தொண்டுகளை, சிவன் கோவிலுக்கும் சிவனடியார்களுக்கும் செய்ய வேண்டும்.
  8. நாம் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு வாழ்ந்து காட்டியவர்கள் நாயன்மார்கள். அவ்வாறு தமது வாழ்கையையே வழிபாடாக இறைவனுக்கு சமர்ப்பித்தவர்கள் நாயன்மார்கள். அவர்களின் வரலாற்றை படித்து அவர்களைப் போலவும் வாழ முயற்சி செய்ய வேண்டும். நம் சமயத்தைப் பாதுகாத்திட வேண்டும்.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

சிறுவர் சமய பாடம் புத்தகம் No ratings yet.

சிறுவர் சமயம் பாடம் புத்தகம்

செய்தி ஆசிரியர்: சிவதிரு சத்தியகுமார்.

கிட்டத்தட்ட 700-800 ஆண்டுகள் அந்நியர்களின் அடாவடித்தனமான போர் மற்றும் ஆளுமைப் பிடியிலிருந்து மீண்டு, நாம் தற்போது தான் 70 ஆண்டுகள் ஆகியுள்ளன. நம்மை நாமே யார் என்று தற்போது தான் உணர்ந்து வரும் தருணம் இது. நம் சமயங்கள் புத்துணர்ச்சி பெற்று ஓங்கி மீண்டும் மலரும் காலம். நாம் நம் சமயங்களை முழுவதுமாக உணர்வது ஒரு புறம் இருந்தாலும், நம் சமய புதையலை அடுத்த தலைமுறைக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே எடுத்துச் செல்ல வைப்பது நம் தலையாய கடமையிலும் முதல் கடமையாகும். ஆகவே, அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக, அவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டி அவர்களுக்குள் நம் சமயத்தை ஆழமாக விதைப்பது இன்றியமையாதது. அந்த வழியில், அவர்களுக்கான சமய பாடம் புத்தகம் (இலங்கை வெளியீடு) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் குழந்தைகளுக்குக் கொடுத்து, நீங்களும் கூடவே உட்கார்ந்து அவர்களோடு சேர்ந்து இன்பமாக படித்தும் ஆழ பதியுமாறு செய்யுங்கள்.

சிறுவர் சைவ பாடம் – புத்தகம்

ஒன்றாம் வகுப்பு

இரண்டாம் வகுப்பு

மூன்றாம் வகுப்பு

நான்காம் வகுப்பு

ஐந்தாம் வகுப்பு

ஆறாம் வகுப்பு

எட்டாம் வகுப்பு

ஒன்பதாம் வகுப்பு

பத்தாம் வகுப்பு

பதினோறாம் வகுப்பு

இந்த சிறுவர் பாட புத்தகங்கள் நம் வலைதளத்தின் பாடசாலை பகுதியில் சேமிக்கப் பட்டுள்ளது.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

Please rate this

சைவ முழக்கம் எவை ? உலகெங்கும் எடுத்துச் செல்லுங்கள் 5/5 (2)

சைவ முழக்கங்கள் எவை ?

உலகின் உயர்ந்த சமயமாம் சைவ சமயத்தை அனைவருக்கும் எடுத்துச் செல்வது நம் ஒவ்வொருவர் கடமையாகும். நம் எண்ணங்களே செயல்களாக உருவெடுக்கும். ஆகையால், தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களையே சிந்தித்து மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்வது மிக அவசியம்.

சிவம் என்றாலே பேரானந்தம். அந்த சிவனையே சிந்தித்து இருக்கும் போது நாமும் சிவத்தோடு ஒன்றி பேரானந்தம் காண்போம். அவ்வாறாக, நாம் காணும் இடமெல்லாம் சிவம் தெரிந்தால், நம்மை விட பாக்கியசாலி யார் உளர் ? சைவ முழக்கங்களையும், சைவ சிந்தனைகளையும் நாம் காணும் இடம் எங்கும் வியாபித்திருந்தால், நம் சிந்தனைகளை அது நெறிப்படுத்திக் கொண்டே இருக்கும் அல்லவா ?

நம் இல்லங்கள், பொது இடங்கள், கோவில்கள், கார், மோட்டார் வாகனங்களின் முன் பின் பக்கங்கள் என்று சைவ முழக்கங்களை நாம் எழுதி வைக்க, அது நம்மைத் தொடர்ந்து நெறிப்படுத்திக் கொண்டே இருக்கும். மேலும், நமக்கு மட்டுமின்றி காண்போர் யாவருக்கும் அது அதே சிந்தனை அனுபவத்தைத் தந்து பல்கிப் பெருகும். அவ்வாறாக எழுதி வைக்க சில வாசகங்கள் இங்கே. எழுதுங்கள், ஒட்டுங்கள், படியுங்கள், சிந்தியுங்கள், அனுபவியுங்கள், இன்பமாய் இருங்கள். திருச்சிற்றம்பலம்.

சிவனொடு ஒப்ப தெய்வம் தேடினும் இல்லை.

திருமுறை அறிவோம். வாழ்வில் திருப்பத்தைக் காண்போம்.

திருமுறையே வாழ்வியல் வெளிச்சம்.

திருமுறையே வாழ்வின் நெறிமுறை.

திருமுறையே சைவ நெறிக் கருவூலம்.

63 நாயன்மார்களே நமது வாழ்வின் வழிகாட்டி

நால்வர் நெறியே நமது கொள்கை.

இறைவன் ஒருவன் ஒருவனே. அவனே சிவபெருமான்.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியே சிவம்.

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே

அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்.

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.

அரன் நாமமே சூழ்க, வையகமும் துயர் தீர்கவே.

சிவசிவ என்றிட தீவினை மாளும்

நாதன் நாமம் நமசிவாயவே.

ஆளாவது எந்நாளோ திருக்காளத்தி அப்பனுக்கே

63 நாயன்மார்கள் மலரடிகள் போற்றி போற்றி

நால்வர் மலரடிகள் போற்றி போற்றி

சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீசுவரர் மலரடிகள் போற்றி போற்றி

திருக்கோவில் தூய்மை செய்வோம். அகக்கோவில் தூய்மை அடையும்.

சைவ சமயமே உலகின் சமயம்.

தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.

கங்காளன் பூசும் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வீரே.

மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்.

பன்னிரு திருமுறையே தமிழ் வேதம்.

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே.

பிறப்பு இறப்பு முதலும் முடிவும் இல்லாத சிவபெருமான் ஒருவனே இறைவன்.

சிவாயநம என்பாரை அபாயம் என்றும் நெருங்காது.

இறைவன் உயிர்களோடு ஒன்றாய் உடனாய் வேறாய் இருக்கிறான்.

மானுடப் பிறவி சிவபெருமானைத் தொழுவதற்கே.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் சிவபெருமான்

சிவாலயங்களை சேவிப்போம். செல்வம் வளரும் குறையாது.

அரகர நமப் பார்வதி பதையே 

    அரகர மகாதேவ நமக

தென்னாடுடைய சிவனே போற்றி!

    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

ஏகம்பத்துறை எந்தாய் போற்றி!     

    பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி!

பராய்த்துறை மேவிய பரனே போற்றி!

    சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி!

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!    

    சீரார் திருவையாறா போற்றி!

தென்தில்லை மன்றினுள் ஆடிபோற்றி!  

    இன்றெனக்கு ஆரமுது ஆனாய் போற்றி!

குவளைக் கண்ணி கூறன் காண்க!

    அவளுந் தானும் உடனே காண்க!

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

    கண்ணாரமுதக் கடலே போற்றி!

காவாய் கனகத் திரளே போற்றி

    கயிலை மலையானே போற்றி போற்றி!

சிவசிவ சிவசிவ சிவசிவ

படிப்போம் – தேவாரம் திருவாசகம் திருமந்திரம் திருக்குறள் திருமுறை

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் திருக்கூட்டம்.

Please rate this

சிவபெருமானைக் கொண்டாடுவது எப்படி ? 4.33/5 (3)

சிவபெருமானைக் கொண்டாடுவது எப்படி ?

சைவ சமயத்தின் அடிப்படை செய்திகளை யாவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், அதிலிருந்து சில செய்திகளை எடுத்துரைத்து அதை ஆழமாக படிக்க செய்வதற்காக சில காணொளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அனைவரும் கண்டு களித்து, உற்றார் உறவினர், நண்பர்கள் சுற்றத்தார் என அனைவருக்கும் பகிர்ந்து உரையாடுங்கள். திருச்சிற்றம்பலம்.

அளப்பரிய ஞான பெட்டகமாம் சைவ சமயத்தை யாவரும் அறிவோம்.

சிவபெருமானைக் கொண்டாடுவது எப்படி ?

சிவனைக் கொண்டாடுவோம்.  #2

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

அமைதியாகவும் இன்பமாகவும் வாழ்வது எப்படி ? அச்சிட்டு வழங்க துண்டறிக்கை 4.8/5 (5)

அமைதியாகவும் இன்பமாகவும் வாழ்வது எப்படி ? அனைவருக்கும் அச்சிட்டு வழங்க ஏதுவான ஒரு பக்க துண்டறிக்கை

இங்கு பதிவிறக்கம் செய்க => சைவ சமயம் அடிப்படை துண்டறிக்கை

அமைதியாகவும் இன்பமாகவும் வாழ்வது எப்படி ?

 இறைவன் ஒருவன் ஒருவனே என்று மிகத் தெளிவாக சைவ சமயம் எடுத்துரைக்கிறது. அந்த ஒருவனுக்கு நாம் சூட்டிய பெயர் மங்களம் பொருந்தும் சிவம். பிறப்பு, இறப்பு, ஆதி, அந்தம், விகாரம், ஆண், பெண் என்று ஏதும் இல்லாத இறைவன், சிவபெருமான் ஒருவன் ஒருவனே. மற்ற யாவரும் பிறப்பர், இறப்பர், விகாரமடைவர். அந்த சிவன் 8 குணங்களை உடையவர். யாரையும் சாராமல் தனித்து இயங்குதல், தூய உடம்பினனாதல், மலங்களின் (குற்றங்கள்) நீங்கி நிற்றல், தானே அறியும் அறிவைப் பெற்றிருத்தல், எல்லா இடமும், எல்லா காலமும் ஒருங்கே அறியும் பேரறிவுடைமை, எல்லையற்ற ஆற்றல், கருணை, இன்பம் ஆகிய 8 குணங்களும் உடையவன். தனக்கென்று எந்த தேவையும் இல்லாத சிவம், உயிர்கள் படும் துன்பத்தை அறிந்து தன் நிலையிலிருந்து கீழிறங்கி வந்து அருவம், அருவுருவம் (லிங்கம்), உருவம் ஆகிய உருவங்களை எடுத்து உயிர்களுக்காக அருள் புரிகிறான். சிவபிரானுடைய ஆற்றலாகிய சக்தியை நாம் பராசக்தியாக பெண் உருவம் கொடுத்து வழிபடுகிறோம். சிவபெருமானின் சக்தியை விநாயகர், முருகராகவும் உருவகித்து சிவகுடும்பமாக வழிபடுகிறோம். விநாயகர், முருகர், பராசக்தி இவர்கள் வேறு சிவபெருமான் வேறு அல்ல. அனைவரும் சிவபெருமானின் வடிவமே. ஆணவ மலம் என்பது அறிவை மறைக்கக்கூடிய கண்ணுக்குத் தெரியாத ஒரு அருவப் பொருள். இந்த ஆணவம் உயிர்களின் அறிவை மறைத்து, உயிர்களுக்கு அறியாமையைக் கொடுத்து உயிர்களைத் துன்புறச் செய்கிறது. உயிர்களின் அத்தனை துன்பங்களுக்கும் இந்த அறியாமை தான் காரணம். இதை நீக்கவே இறைவன், மாயை என்ற தன் சக்தியிலிருந்து இந்த உலகத்தை தோற்றுவித்து படைத்தல், காத்தல், ஒடுக்குதல் (அழித்தல்), மறைத்தல், அருளல் ஆகிய 5 தொழில்களைச் செய்கிறான். இதனால் உயிர்கள் அறிவு பெற்று, ஆணவ மலத்திடமிருந்து விலகி, இறைவனை உணர்ந்து முக்தி பெற்று பேரின்பம் அடைகின்றன. இறைவன்(பதி), உயிர்கள் (பசு), சடப்பொருட்களாகிய தளை (பாசம்), இந்த மூன்றும் அழிக்கமுடியாத என்றும் உள்ள நித்தியப் பொருட்கள். சிவனும் சைவ சமயமும் அநாதியானது. அதாவது, தோற்றமும் முடிவும் இல்லாதது. சிவவழிபாடு எக்காலத்தும் இருந்தது, இருக்கிறது, இருக்கும். சிவனை வழிபடும் அடியார்கள் எக்காலத்தும் இருப்பர். சிவவழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதை வேதங்களும் ஆகமங்களுமாக இறைவனே நமக்கு அருளியுள்ளான். ரிக், யசூர், சாமம், அதர்வணமாக, வடமொழி வேதங்கள் 4, தற்போது நம்மிடம் உள்ளது. அதற்கும் முன்னால், அறம், பொருள், இன்பம், வீடு என்று 4 தமிழ்மொழி வேதங்கள் நம்மிடம் இந்ததாக குறிப்புகள் உள்ளன. சிவ ஆகமங்கள் 28. வேத, சிவஆகமங்களில் உள்ள அதே கருத்தை நம் முன்னோர்கள் தமிழில் பன்னிரு திருமுறைகளில் பதிவிட்டுள்ளனர். தோத்திர நூல்களாகிய பன்னிரு திருமுறைகளிலும் வேத ஆகமங்களிலும் உள்ள கருத்துக்களைப் பின்னர் 14 சாத்திர நூல்களில் மெய்கண்ட சாத்திரமாக தொகுத்தனர். பன்னிரு திருமுறையும், 14 சாத்திரமும் நாம் யாவரும் தினமும் படித்து ஓதி வழிபடக்கூடிய நூல்களாகும். இந்த நூல்களையும் அருளி சைவ சமயத்தை மீட்டெடுத்த சமய குரவர்களாகிய (குருமார்கள்) திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோரும், சந்தான குரவர்களான மெய்கண்டார், அருநந்திசிவம், மறைஞானசம்பந்தர் மற்றும் உமாபதிசிவம் ஆகியோரும் நம் சமயத்திற்கு பங்களித்திருப்பது சிவபெருமானுடைய திருவருள். சைவநெறிப்படி வாழ்ந்து காட்டி 63 நாயன்மார்களும் நமக்கு வாழ்வின் முன்னோடிகளாக உள்ளனர். நாம் அனைவரும், 63 நாயன்மார்களின் வரலாற்றைப் படித்து, நம் குழந்தைகளுக்கும் அதை எடுத்துக்கூறி, திருமுறைகளை தினமும் ஓதி அந்த பிறப்பு இறப்பில்லாத சிவபெருமானைத் தினமும் விளக்கேற்றி வீட்டிலும், திருக்கோவில் வழிபாடு செய்தும் போற்றுவோம். யாவரும் இறைவனே காட்டிய இந்த நன்னெறியில் நிற்க, வான்மழை வளாது பெய்தலும், அனைத்து தீவினைகள் அகன்றும், எல்லா நன்மைகளும் பெற்று, நாமும், நாடும், மக்கள் அனைவரும் இன்பமாகவும் அமைதியாகவும் வாழ்வர்.

http://www.saivasamayam.in வலைதளத்தில் சைவ சமயம் பற்றிய அடிப்படை செய்திகளும், படங்களும், காணொளிகளும் யாவரும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு பகிரப் பட்டுள்ளது. அனைவரும் பயன்பெற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள், முகநூல், வாட்சப் குழுக்கள் ஆகியவற்றில் பகிர்ந்தும் நம் பாரத பூமியில் மீண்டும் ஆன்மீகம் தழைத்தோங்க பங்களிக்குமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

திருச்சிற்றம்பலம்.

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.

திருநந்திதேவர் திருக்கூட்டம், சென்னை.

இங்கு பதிவிறக்கம் செய்க =>  சைவ சமயம் அடிப்படை துண்டறிக்கை

Please rate this

சிறுவர்களின் சைவ நிகழ்வோடு நிறைவு பெற்றது கோடை விடுமுறை வகுப்பு 5/5 (2)

சிறுவர்களின் சைவ நிகழ்வோடு நிறைவு பெற்றது கோடை விடுமுறை தமிழ் சைவ வகுப்பு

கோடை விடுமுறையில் சிறிது நேரமாவது நம் பண்பாட்டையும் சமயத்தையும் அறியுமாறு கோடை விடுமுறை சைவத் தமிழ் வகுப்பு நடைபெற்றது சென்னை பள்ளிக்கரணை மற்றும் சித்தாலபாக்கத்தில். இந்த வகுப்புகளை எஸ். எஸ். பவுண்டேஷன் ட்ரஸ்ட், நமசிவாயா பிரார்த்தனை கோபுரம் மற்றும் திருநந்திதேவர் திருக்கூட்டம் இணைந்து நடத்தியது. இந்த ஆண்டின் கோடை கால வகுப்பு சிறுவர்களின் இனிய நிகழ்ச்சிகளோடு மே 28 ஞாயிறு அன்று நிறைவுற்றது.

சிறுவர்கள் மேடையில் போடும் வண்ணம் எழுதப்பட்ட மெய்ப்பொருள் நாயனார் நாடகத்தின் வசனம்.

https://drive.google.com/file/d/0B5oSXjiZfL5aRnlsQWRqQmxJeE0/view?usp=sharing

விழா மேடையமைப்பு

திருநந்திதேவர் திருக்கூட்டத்தின் கயிலாய வாத்திய இன்னிசையுடன் நிகழ்ச்சி துவங்கியது.

கடவுள் வாழ்த்து

இனிய கீர்த்தனை

பரதநாட்டியம்

சிறுதொண்டர் திருமுறைக் குழுவினரின் திருநாளைப்போவார் (நந்தனார்) நாடகத்தின் ஒரு காட்சி

63 நாயன்மார்களின் பெயர்களை உரைத்தலும் கண்ணப்ப நாயனார் மற்றும் பூசலார் நாயனார் ஆகியோரின் வரலாறு உரைத்தலும்

மெய்ப்பொருள் நாயனார் நாடகத்தின் ஒரு காட்சி

திருவாசகம் திருப்பொற்சுண்ணம் பாடலுக்கு கோலாட்டம் ஆடிய குழுவினர்

விடுமுறை வகுப்பில் பங்குபெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழும் பரிசுகளும் வழங்கல்

ஆசிரியர்களை வாழ்த்திய போது

மெய்ப்பொருள் நாயனார் நாடகத்தின் காட்சிகள்

இந்த நிகழ்வுகள் போல ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு கிராமங்களிலும் நடைபெற வேண்டும் என்று பிறப்பு இறப்பு அற்ற கருணைக் கடலாம் சிவபெருமானிடம் வேண்டிக் கொள்கிறோம். அதற்கு ஆவன செய்வீர்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

Please rate this

பன்னிரு திருமுறை சிவபெருமானின் திருவுருவம் 5/5 (3)

பன்னிரு திருமுறை சிவபிரானின் திருவுருவம்.

தனக்கென்று எந்த தேவையும் இல்லாத சிவபிரான், உயிர்கள் படும் துன்பத்தைக் கண்டு இரங்கி, தன் மேலான நிலையிலிருந்து கீழிறங்கி வந்து அருவம், உருவம், அருவுருவம் என்று பல்வேறு நிலைகளில் உயிர்களுக்கு அருள் புரிகிறான். வேண்டுபவர்க்கு வேண்டிய உருவில் வந்து அருளும் தன்மையன் நம் தலைவன். நாதத்திலிருந்து தோன்றும் ஒலியாக அந்த ஒலியே மந்திரமாகவும் வந்து அருளுவன். இறைவன் புக முடியாத இடம் உண்டோ ? இறைவன் எடுக்க முடியாத உருவம் உண்டோ ?
 
 
இறைவன் உயிர்களுக்கு அருளும் பொருட்டு மந்திர வடிவமாகவும் உள்ளான். பன்னிரு திருமுறையில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மந்திர ஆற்றல் உடையது. திருமுறைகள் மந்திரங்களே என்னும் உண்மையைத் திருமுறைகண்ட புராணத்தில்
 

    மந்திரங்கள் ஏழுகோடி ஆதலினால் மன்னுமவர்

    இந்தவகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்துப்

    பந்தமுறு மந்திரங்கள் பதினொன்றும் ஆதலினால்

    அந்தமுறை நான்கினொடு முறைபதினொன்று ஆக்கினார்

என்று உமாபதி சிவம் தெளிவுறுத்துகின்றார்.

திருக்கோவில்களில் உள்ள கற்படிமங்களிலும் செப்புப் படிமங்களிலும் மந்திர நியாசனத்தின் அடிப்படையிலேயே இறைவன் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளான்.

 
 
நியாசம் = வைப்பு,

பிரதிட்டை = நிலை பெறுத்துவித்தல்.

 
திருமுறைகளைப் படனம் செய்பவர்கள் வாக்கிலும் சிவபெருமான் மந்திர வடிவில் எழுந்தருளியுள்ளான். இவ்வுண்மைகளை,
 

    சொல்லிலும் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும்
    அல்லிலு(ம்) மாசற்ற ஆகாயம் தன்னிலும் ஆய்ந்து விட்டோர்
    இல்லிலும் அன்பரிடத்திலும் ஈசன் இருக்குமிடம்!
    கல்லிலும் செம்பிலு மோ இருப்பான் எங்கள் கண்ணுதலே
    

என்று ஒரு பழம்பாடல் எடுத்தியம்புகின்றது. ஆகவே, மந்திரமாகிய திருமுறைகளை தினமும் ஓதுவோம். நன்மையே என்றும் நம்மைச் சேரும். வாழ்கை இன்பமான வழியில் பயணிக்கும். திருவருள் கூடி நிற்கும்.
 
திருமுறையே சைவநெறிக் கருவூலம்
     தென்தமிழின் தேன்பா காகும்
திருமுறையே கயிலையின் கண் சிவபெருமான்
     செவிமடுத்த செந்தமிழ் வேதம்
திருமுறையே நடராசன் கரம் வருந்த
     எழுதியருள் தெய்வ நூலாம்
திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய்
     மலர்ந்தருளும் சிறப்பிற்றாமால்.
திருச்சிற்றம்பலம்.

Please rate this

சிவஞானபோதம் சிந்தனைகள் சில 4.75/5 (4)

சிவஞானபோதம் சிந்தனைகள் சில…

சிவஞானபோதம் இன்று நம் கைகளில் இருப்பது எப்படி ? சிவஆகமங்கள் எங்கிருந்து நமக்கு வந்தது ?
சைவ சமயம் அரிய பெரும் அளவிலா ஞானமுடைத்து என்பதை நாம் அறிவோம். காலச் சுழலில், இன்றைய நாளில் ஓர் எறும்பாய் உயிர்பெற்று அலைந்து கொண்டிருக்கும் நமக்கு அரிய பெரும் பரிசாக சிவஞானம் பற்றிய உண்மைகள் கிடைத்துள்ளது. இவற்றை நமக்கு அருளியது யார் ? எப்படி நமக்கு கிட்டியது ?

பிறப்பு இறப்பும் முதலும் முடிவும் இல்லாத பரமசிவனார் உயிர்கள் மீது பெரும் கருணை கொண்டு சிவஞானத்தை போதித்தார். சிவபெருமான் அருளிச்செய்த ஆகமங்கள் இருபத்தெட்டு உள்ளன. அவை, அறுபத்தாறுபேர் அப் பெருமானை வணங்கி அவரது மேன்முகமாகிய ஈசான முகத்தில் அரிய கருத்துக் களைக் கேட்டுணர்ந்தனவாம். சிவலோகத்தில் மேலான சதாசிவ மூர்த்தியாய் இருந்து ஆகமங்களைப் பிரணவர் முதலியோர்க்கு உணர்த்தியருளிய சிவபெருமான், நிலவுலகிற்கு ஏற்ப அவற்றை உணர்த்தியருளும் பொழுது சீகண்ட பரமசிவனாய் இருந்து உணர்த்த, தேவர்களால் வணங்கப்படுகின்ற நந்தி பெருமான் மெய்யுணர்வுடையராய் அவை இனிது விளங்கப்பெற்றார்.

திருநந்திதேவர் சிவாகமங்களின் உண்மையை சனற்குமார முனிவருக்கு உபதேசித்தார். அவர் அவற்றை சத்தியஞானதரிசினிகளுக்கும், அவர் தம் மாணவர் பரஞ்சோதி முனிவருக்கும் உபதேசித்தனர். திருநந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞானதரிசினிகள், பரஞ்சோதி முனிவர் ஆகிய நால்வரும் தேவ பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அகச்சந்தானக்குரவர் எனப்படுவர்.

பரஞ்சோதி முனிவர் அகத்தியரைக் காண வரும் போது 2 வயது குழந்தையாகிய மெய்கண்டாருக்கு திருவருளின் படி உபதேசித்தார். மெய்கண்டாரின் சீடரானவர் சகலஆகம பண்டிதரான அருணந்திசிவம். அவரின் சீடர் மறைஞான சம்பந்தர். அவரின் சீடர் உமாபதிசிவம். இவர்கள் நால்வரும் பூதபரம்பரையை சேர்ந்தவர்கள். இவர்கள் நால்வரும் புறச்சந்தானக்குரவர் எனப்படுவர். உமாபதிசிவத்தின் சீடர் அருள்நமச்சிவாயர். அவரது சீடர் சித்தர் சிவப்பிரகாசர். அவரது சீடர் நமச்சிவாய மூர்த்திகள். இவரே திருவாவடுதுறை ஆதீனத்தை நிறுவி, இன்றும் குருபரம்பரையாக சைவ சமயத்தை உய்வித்து வருகின்றனர். மறைஞான சம்பந்தரின் சீடரான மச்சுச்செட்டியார் என்பவரின் 8 ஆவது வழி சீடரான குருஞானசம்பந்தர் என்பவர் தருமபுரம் ஆதீனத்தை நிறுவினார். இவர்களும் சைவ சமயத்திற்கு தலைமுறை தலைமுறையாக அரும் பெரும் தொண்டாற்றி வருகின்றனர்.
அகச்சந்தான குரவர்களும் அவர்களின் சீடர்களும் நமக்கு அருளிச் செய்ததே 14 சாத்திர நூல்களாகும். கிடைத்தற்கரிய ஞான புதையல்களை நாம் அறிந்து படித்து பயன்பெறுவோம்.

சிவஞானபோதம் நூலின் நோக்கம்

வரும் சில மாதங்களில் உலகிலேயே தத்துவ துறையில் தலைசிறந்த அறிவு நூலாகிய, சைவ சித்தாந்தத்தின் கருத்துக்களை முழுமையாக நமக்கு உணர்த்தக்கூடிய சிவஞான போதம் என்னும் நூலில் இருந்து பல கருத்துக்களை சிந்திக்க இருக்கிறோம். சைவ சமயத்தில் 14 சாத்திர நூல்களுள்ளும் மெய்கண்டார் அருளிய சிவஞான போதம் தலையாய நூலாகும். இந்நூலை தொட்டு அறிவதற்கே மிகப் பெரும் புண்ணியம் செய்திருந்து சிவனருள் பெற்றிருக்க வேண்டும் என்பர் சான்றோர். அவ்வாறாயின் இந்நூலின் பெருமையை நம்மால் ஒருவாறு யூகிக்க இயலும். இந்நூல் அளவில் மிகவும் சிறியது. சொல் சுருக்கமும், பொருள் பெருக்கமும் உடையது.
இந்த நூலைச் செய்தவர் மெய்கண்டார். ஆசிரியர் மெய்கண்டார் இந்நூலின் பெயர் இது என்று எங்கும் சுட்டவில்லை. அவரது மாணவராகிய அருள்நந்தி சிவம் தம் ஆசிரியப்பிரானாகிய மெய்கண்டாரையும் அவரது நூலையும் தம் நூலிற் குறிப்பிடுகிறார்; ஆயின் நூற்பெயரைக் கிளந்து கூறாமல் மெய்கண்டான் நூல் என்றே கூறிச் செல்கிறார்.

அருள் நந்தி சிவனாரின் மாணவருக்கு மாணவராய் வந்த உமாபதி சிவனார் சிவப்பிரகாசம் என்னும் சார்பு நூலைச் செய்தார். அவரே அந்நூலின் பாயிரத்தில் தெரித்த குரு முதல்வர் உயர் சிவஞானபோதம் செப்பினர் என இந்நூற் பெயரை எடுத்தோதினார். சிவஞான போதம் என்பது காரணப் பெயர். அப்பெயரில் சிவம், ஞானம், போதம் என்னும் மூன்று சொற்கள் உள்ளன. ஞானம் என்பது அறிவு. அறிவு மூன்று வகையாய் நிகழும். அவை ஐயம், திரிபு, உண்மை என்பன. ஒரு பொருளை இதுவோ அதுவோ என இரட்டுற அறிதல் ஐயமாய் அறிதலாகும். ஒன்றை மற்றொன்றாக மாறி அறிதல் திரிபாய் அறிதலாகும். இவ்விரு குற்றமும் இன்றி ஒரு பொருளை உள்ளவாறு அறிதலே உண்மையாய் அறிதலாகும். உண்மையறிவே ஞானம் எனப்படும்.

உலகிற்கு முதலாகிய கடவுளை முதற்பொருள் என்றும் மெய்ப்பொருள் என்றும் கூறுதல் பொதுப்படக் கூறும் வழக்கமாகும். சிவம் என்னும் தனிப்பெயரால் கூறுதலே சிறப்பு வழக்கமாகும். சிவமாகிய அம்முதற் பொருளை உள்ளவாறு உணரும் அறிவு சிவஞானம் எனப்படும். சிவத்தை உணரும் ஞானம் எனச் சுருங்கச் சொல்லலாம். போதம் என்பது போதித்தல். போதித்தலாவது, ஐயம் திரிபுகளை நீக்கி மாணவர்க்குத் தெளிவுண்டாகுமாறு உணர்த்துதல். எனவே சிவத்தை உணரும் ஞானத்தைப் பக்குவமுடைய மாணவர்க்கு ஐயந்திரிபின்றி உணர்த்துதலைக் கருதி எழுந்தது இந்நூல் என்பது இனிது விளங்கும்.

அந்தமே ஆதி என ஏகாரம் சேர்த்துக் கூறுதல் ஆசிரியர் கருத்து. ஆயினும், அந்த ஏகாரத்தைத் தொகுத்து அந்தம் ஆதி என்றார்.

Please rate this

சைவ சமய திரைப்படம் குடும்பத்தோடு பாருங்கள் 5/5 (3)

சைவ சமயத்தின் வரலாற்றையும் செய்திகளையும் எடுத்துரைக்கும் எண்ணற்ற திரைப்படங்கள் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் வந்தன. அதைப் பார்த்து அனுபவிப்பது நாம் பெற்ற பேறு. உங்கள் குழந்தைகளோடு இணைந்து இந்த திரைப்படங்களைப் பாருங்கள். இங்கே அந்த படங்களின் பெயர்களும், YouTube இல் இந்த படங்களின் சுட்டிகளும் இங்கே வழங்கியுள்ளோம். சிடியோ, இணையமோ, பார்த்து இன்புறுங்கள்.

திருவருட்செல்வர்

திருவிளையாடல்

காரைக்கால் அம்மையார்

ஞானக்குழந்தை


பட்டினத்தார்


அகத்தியர்


நந்தனார்

https://www.youtube.com/watch?v=ON490YtajEo
இராஜராஜ சோழன்

https://www.youtube.com/watch?v=hUsp0cQlYhI
கந்தன் கருணை


ஔவையார்


அருணகிரிநாதர்

Please rate this

சைவ சமயம் அடிப்படை நுட்பம் பகுதி 3 காணொளி 4.83/5 (6)

எல்லையில்லாத பெருமை மிக்க சைவ சமயத்தின் அடிப்படை கருத்துக்களை எல்லா உயிர்களிடத்தும் எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு சைவ சமயம் அடிப்படை நுட்பம் காணொளி வரிசையில் சைவ சித்தாந்த அடிப்படையில் வெகு சில கருத்துக்களை பகுதி 3 ஆக வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்திடுங்கள்.

சைவ சமயம் அடிப்படை நுட்பம் பகுதி 3

சைவ சித்தாந்தம் ஒரு முழுமையான, உயர்ந்த, புவனங்கள் எங்கும் கிடைக்கப் பெறாத ஒரு மாபெரும் சமய புதையலாகும். இதுவே முடிந்த முடிபு ஆகும்.

இந்த காணொளியின் நோக்கம் சைவ சித்தாந்த கொள்கையை எடுத்துரைப்பது அன்று. மாறாக, அதில் உள்ள தத்துவங்களில் வெகு சிலவற்றை எடுத்துரைத்து சிந்திக்க வைப்பதாகும். சைவ சித்தாந்தம் கற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு எளிதாக புரியும் ஒரு கருவியாகவும், சை சித்தாந்தம் அறியாதவர்களுக்கு இதன் தத்துவங்களில் சிலவற்றை எடுத்துரைத்து, சிந்திக்கச் செய்து, அதை முழுமையாக கற்கும் ஆர்வத்தை ஊட்டும் கருவியாகவும் இக்காணொளி அமைக்கப்படுகிறது. சைவ சித்தாந்தம் கற்க விளைவோர் தக்க ஆசான் துணை கொண்டு முழுமையாக பயிலவும்.

இதில் குற்றம் / பிழை இருப்பின் இந்த முகவரியில் சுட்டவும்: shivathondu14@gmail.com

உலகின் வீதிகள் தோறும் சைவ பாடசாலைகள் அமைப்போம். திருச்சிற்றம்பலம்.

Please rate this

1.93 – திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) No ratings yet.

1.93 – திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) – thirumudukundRam (Vriddachalam)

பதிவு ஆசிரியர்: சிவதிரு வி. சுப்பிரமணியன் அவர்கள்

26) பதிகம் 1.93 – திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) thirumudukundRam (Vriddachalam):
சம்பந்தர் தேவாரம் – sambandar thevaram
1.93 – நின்று மலர்தூவி

Verses: 1.93 nindRu malar thUvi – verses: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHb2ZnNl90WUN6SkE/view?usp=sharing

Discussion audio : 01_093 01-11 nindRu malar thUvi – 2016-01-16 – mp3: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHaE9wNDlOellzaVk/view?usp=sharing

For English translation of this padhigam – by V. M. Subramanya Ayyar – at IFP site:
http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS1_093.HTM

திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) – விருத்தகிரீஸ்வரர் கோயில் – தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=493

================

(Verses in original Tamil version & word separated Tamil / Devanagari / Roman scripts) – print only those pages you need)

 

பதிகம் 1.93 – திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ( பண் : குறிஞ்சி )

 

Background:

சிதம்பரத்தைத் தரிசித்துத், திருஎருக்கத்தம்புலியூரை வணங்கிப் பதிகம் பாடித் திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலத்தைத் திருஞான சம்பந்தர் அடைந்தார் . திருமுதுகுன்றம் கோயிலை அடைந்து அங்கு வலம்வரும்போது பாடி அருளியது இப்பதிகம்.

——–

 

#2080 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 182

வான நாயகர் திருமுது குன்றினை வழிபட வலங்கொள்வார்

தூந றுந்தமிழ்ச் சொல்லிருக் குக்குறட் டுணைமலர் மொழிந்தேத்தி,

ஞான போனகர் நம்பர்தங் கோயிலை நண்ணியங் குள்புக்குத்

தேன லம்புதண் கொன்றையார் சேவடி திளைத்தவன் பொடுதாழ்ந்தார்.

————–

 

பதிகம் 1.93 – திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ( பண் : குறிஞ்சி )

 

பாடல் எண் : 1

நின்று மலர்தூவி

இன்று முதுகுன்றை

நன்று மேத்துவீர்க்

கென்று மின்பமே.

 

பாடல் எண் : 2

அத்தன் முதுகுன்றைப்

பத்தி யாகிநீர்

நித்த மேத்துவீர்க்

குய்த்தல் செல்வமே.

 

பாடல் எண் : 3

ஐயன் முதுகுன்றைப்

பொய்கள் கெடநின்று

கைகள் கூப்புவீர்

வைய முமதாமே.

 

பாடல் எண் : 4

ஈசன் முதுகுன்றை

நேச மாகிநீர்

வாச மலர்தூவப்

பாச வினைபோமே.

 

பாடல் எண் : 5

மணியார் முதுகுன்றைப்

பணிவா ரவர்கண்டீர்

பிணியா யினகெட்டுத்

தணிவா ருலகிலே.

 

பாடல் எண் : 6

மொய்யார் முதுகுன்றில்

ஐயா வெனவல்லார்

பொய்யா ரிரவோர்க்குச்

செய்யா ளணியாளே.

 

பாடல் எண் : 7

விடையான் முதுகுன்றை

இடையா தேத்துவார்

படையா யினசூழ

உடையா ருலகமே.

 

பாடல் எண் : 8

பத்துத் தலையோனைக்

கத்த விரலூன்றும்

அத்தன் முதுகுன்றை

மொய்த்துப் பணிமினே.

 

பாடல் எண் : 9

இருவ ரறியாத

ஒருவன் முதுகுன்றை

உருகி நினைவார்கள்

பெருகி நிகழ்வோரே.

 

பாடல் எண் : 10

தேர ரமணரும்

சேரும் வகையில்லான்

நேரில் முதுகுன்றை

நீர்நின் றுள்குமே.

 

பாடல் எண் : 11

நின்று முதுகுன்றை

நன்று சம்பந்தன்

ஒன்று முரைவல்லார்

என்று முயர்வோரே.

============================= ============================

 

 

Word separated version:

#2080 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 182

வான-நாயகர் திரு-முதுகுன்றினை வழிபட வலங்கொள்வார்,

தூ நறும் தமிழ்ச்சொல் இருக்குக்-குறள் துணை-மலர் மொழிந்து ஏத்தி,

ஞான-போனகர், நம்பர்-தம் கோயிலை நண்ணி, அங்கு உள்-புக்குத்,

தேன்-அலம்பு தண்-கொன்றையார் சேவடி திளைத்த அன்பொடு தாழ்ந்தார்.

————–

 

பதிகம் 1.93 – திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ( பண் : குறிஞ்சி )

 

பாடல் எண் : 1

நின்று மலர் தூவி

இன்று முதுகுன்றை

நன்றும் ஏத்துவீர்க்கு

என்றும் இன்பமே.

 

பாடல் எண் : 2

அத்தன் முதுகுன்றைப்

பத்தி ஆகி நீர்

நித்தம் ஏத்துவீர்க்கு

உய்த்தல் செல்வமே.

 

பாடல் எண் : 3

ஐயன் முதுகுன்றைப்

பொய்கள் கெட நின்று

கைகள் கூப்புவீர்;

வையம் உமது ஆமே.

 

பாடல் எண் : 4

ஈசன் முதுகுன்றை

நேசம் ஆகி நீர்

வாச-மலர் தூவப்,

பாச வினை போமே.

 

பாடல் எண் : 5

மணி ஆர் முதுகுன்றைப்

பணிவார்-அவர் கண்டீர்,

பிணி ஆயின கெட்டுத்,

தணிவார் உலகிலே.

 

பாடல் எண் : 6

மொய் ஆர் முதுகுன்றில்

“ஐயா” என வல்லார்,

பொய்யார் இரவோர்க்குச்,

செய்யாள் அணியாளே.

 

பாடல் எண் : 7

விடையான் முதுகுன்றை

இடையாது ஏத்துவார்

படை ஆயின சூழ

உடையார் உலகமே.

 

பாடல் எண் : 8

பத்துத் தலையோனைக்

கத்த விரல் ஊன்றும்

அத்தன் முதுகுன்றை

மொய்த்துப் பணிமினே.

 

பாடல் எண் : 9

இருவர் அறியாத

ஒருவன் முதுகுன்றை

உருகி நினைவார்கள்

பெருகி நிகழ்வோரே.

 

பாடல் எண் : 10

தேரர் அமணரும்

சேரும் வகை இல்லான்

நேர் இல் முதுகுன்றை

நீர் நின்று உள்குமே.

 

பாடல் எண் : 11

நின்று முதுகுன்றை

நன்று சம்பந்தன்

ஒன்றும் உரை வல்லார்

என்றும் உயர்வோரே.

 

Please rate this

1.23 – திருக்கோலக்கா – Thirukolakka No ratings yet.

1.23 – திருக்கோலக்கா – Thirukolakka

19) padhigam 1.23 – திருக்கோலக்கா
பதிவு ஆசிரியர்: சிவதிரு வி. சுப்பிரமணியன் அவர்கள்
1.23 – மடையில் வாளை பாய
Verses: 01_023 – madaiyil vALai – verses: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHZFEzTUlJc0tyQms/view?usp=sharing

Discussion audio – Part-1: 01_023 01-02 madaiyil vALai pAya – Part-1 – 2015-08-08 mp3: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHYVI0T3Z3bUJmOGc/view?usp=sharing

Discussion audio – Part-2: 01_023 03-11 madaiyil vALai pAya – Part-2 – 2015-08-15 mp3: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHZ3JIanZJVE9IV1U/view?usp=sharing
********
The discussion for padhigam 1.23 is available on YouTube:
All 2 parts: https://www.youtube.com/playlist?list=PLdpsipSnJkE_NkDD4IUU9L0lKFRS5bAQt

Part-1: https://youtu.be/RD0GtJfSFWA
Part-2: https://youtu.be/yc8Epm619qA
********
For English translation of this padhigam – by V. M. Subramanya Ayyar – at IFP site:
http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS1_023.HTM

திருக்கோலக்கா – திருத்தாளமுடையார் கோயில் – தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=509

==================== ===============

(Verses in original Tamil version & word separated Tamil / Devanagari / Roman scripts) – print only those pages you need

 

பதிகம் 1.23 – திருக்கோலக்கா ( பண் : தக்கராகம் )

 

Background:

திருஞானசம்பந்தர் சீகாழிக் கோயிலில் வீற்றிருக்கும் தமது காழித் தந்தையாரையும் ஞானப்பால் தந்த தாயாரையும் வணங்கிப், பக்கத்திலுள்ள திருக்கோலக்காவிற்கு வழிபடச் சென்றார் . அங்கே கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் நீலகண்டப் பெருமானை ‘மடையில் வாளை பாய’ என்னும் பதிகத்தைக் கைத்தாளம் இட்டுப் பாடி வணங்கினார். அதனைக் கண்ட இறைவன் கனிந்து, திருஐந்தெழுத்து எழுதிய செம்பொற்றாளத்தை அவருக்கு ஈந்தருளினார். வையம் எல்லாம் உய்ய வரும் மறைச்சிறுவர் கைத்தலத்தில் தாளங்கள் வந்தன. அவற்றைப் பிள்ளையார் கையேற்றுத் திருமுடிமேல் வைத்து ஏழிசையும் தழைத்தோங்க இன்னிசைப் பதிகம் பாடியருளினார் .

 

#2000 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 102

மெய்ந்நிறைந்த செம்பொருளாம் வேதத்தின் விழுப்பொருளை, வேணி மீது

பைந்நிறைந்த வரவுடனே பசுங்குழவித் திங்கள்பரித் தருளு வானை,

மைந்நிறைந்த மிடற்றானை, “மடையில்வா ளைகள்பாய” வென்னும் வாக்காற்

கைந்நிறைந்த வொத்தறுத்துக் கலைப்பதிகங் கவுணியர்கோன் பாடுங் காலை,

 

#2001 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 103

தாளம் பெறுதல்

 

கையதனா லொத்தறுத்துப் பாடுதலுங் கண்டருளிக் கருணை கூர்ந்த

செய்யசடை வானவர்த மஞ்செழுத்து மெழுதியநற் செம்பொற் றாளம்

ஐயரவர் திருவருளா லெடுத்தபா டலுக்கிசைந்த வளவா லொத்த

வையமெலா முய்யவரு மறைச்சிறுவர் கைத்தலத்து வந்த தன்றே.

 

#2002 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 104

காழிவரும் பெருந்தகையார் கையில்வருந் திருத்தாளக் கருவி கண்டு,

வாழியதந் திருமுடிமேற் கொண்டருளி, மனங்களிப்ப மதுர வாயில்

ஏழிசையுந் தழைத்தோங்க வின்னிசைவண் டமிழ்ப்பதிக மெய்தப் பாடித்

தாழுமணிக் குழையார்முன் றக்கதிருக் கடைக்காப்புச் சாத்தி நின்றார்.

————–

 

பதிகம் 1.23 – திருக்கோலக்கா ( பண் : தக்கராகம் )

 

பாடல் எண் : 1

மடையில் வாளை பாய மாதரார்

குடையும் பொய்கைக் கோலக் காவுளான்

சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீள்

உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ.

 

பாடல் எண் : 2

பெண்டான் பாக மாகப் பிறைச்சென்னி

கொண்டான் கோலக் காவு கோயிலாக்

கண்டான் பாதங் கையாற் கூப்பவே

உண்டா னஞ்சை யுலக முய்யவே.

 

பாடல் எண் : 3

பூணற் பொறிகொ ளரவம் புன்சடை

கோணற் பிறையன் குழகன் கோலக்கா

மாணப் பாடி மறைவல் லானையே

பேணப் பறையும் பிணிக ளானவே.

 

பாடல் எண் : 4

தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர்

மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான்

குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா

இழுக்கா வண்ண மேத்தி வாழ்மினே.

 

பாடல் எண் : 5

மயிலார் சாயன் மாதோர் பாகமா

எயிலார் சாய வெரித்த வெந்தைதன்

குயிலார் சோலைக் கோலக் காவையே

பயிலா நிற்கப் பறையும் பாவமே.

 

பாடல் எண் : 6

வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்

கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்

கொடிகொள் விழவார் கோலக் காவுளெம்

அடிகள் பாத மடைந்து வாழ்மினே.

 

பாடல் எண் : 7

நிழலார் சோலை நீல வண்டினங்

குழலார் பண்செய் கோலக் காவுளான்

கழலான் மொய்த்த பாதங் கைகளால்

தொழலார் பக்கல் துயர மில்லையே.

 

பாடல் எண் : 8

எறியார் கடல்சூ ழிலங்கைக் கோன்றனை

முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன்

குறியார் பண்செய் கோலக் காவையே

நெறியாற் றொழுவார் வினைகள் நீங்குமே.

 

பாடல் எண் : 9

நாற்ற மலர்மே லயனு நாகத்தில்

ஆற்ற லணைமே லவனுங் காண்கிலாக்

கூற்ற முதைத்த குழகன் கோலக்கா

ஏற்றான் பாத மேத்தி வாழ்மினே.

 

பாடல் எண் : 10

பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும்

உற்ற துவர்தோ யுருவி லாளருங்

குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்

பற்றிப் பரவப் பறையும் பாவமே.

 

பாடல் எண் : 11

நலங்கொள் காழி ஞானசம் பந்தன்

குலங்கொள் கோலக் காவு ளானையே

வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்

உலங்கொள் வினைபோ யோங்கி வாழ்வரே.

——————-

 

Here is a reference in Sundarar thEvAram regarding Siva giving thALam to Sambandar

 

சுந்தரர் தேவாரம் – 7.62.8

நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும்

.. ஞான சம்பந்த னுக்குல கவர்முன்

தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்கும்

.. தன்மை யாளனை என்மனக் கருத்தை

ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்

.. அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சும்

கோளி லிப்பெருங் கோயிலு ளானைக்

.. கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.

============================= ============================

 

 

Word separated version:

#2000 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 102

மெய்ந்-நிறைந்த செம்பொருள் ஆம் வேதத்தின் விழுப்பொருளை, வேணி மீது

பைந்-நிறைந்த அரவுடனே பசுங்குழவித் திங்கள் பரித்து-அருளுவானை,

மைந்-நிறைந்த மிடற்றானை, “மடையில் வாளைகள் பாய” என்னும் வாக்கால்

கைந்-நிறைந்த ஒத்து-அறுத்துக் கலைப்-பதிகம் கவுணியர்-கோன் பாடும் காலை,

 

#2001 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 103

தாளம் பெறுதல்

 

கை-அதனால் ஒத்து-அறுத்துப் பாடுதலும் கண்டு-அருளிக் கருணை கூர்ந்த

செய்ய-சடை வானவர்-தம் அஞ்செழுத்தும் எழுதிய நற்செம்பொற்றாளம்

ஐயர்-அவர் திரு-அருளால் எடுத்த பாடலுக்கு இசைந்த அளவால் ஒத்த

வையம்-எலாம் உய்ய வரும் மறைச்சிறுவர் கைத்தலத்து வந்தது அன்றே.

( நற்செம்பொற்றாளம் = நல் செம்பொன் தாளம் )

 

#2002 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 104

காழி வரும் பெருந்தகையார் கையில் வரும் திருத்தாளக் கருவி கண்டு,

வாழிய தம் திருமுடிமேல் கொண்டு-அருளி, மனம் களிப்ப, மதுர வாயில்

ஏழிசையும் தழைத்து-ஓங்க இன்னிசை வண்-தமிழ்ப்-பதிகம் எய்தப் பாடித்

தாழும் மணிக் குழையார் முன் தக்க திருக்-கடைக்காப்புச் சாத்தி நின்றார்.

————–

 

பதிகம் 1.23 – திருக்கோலக்கா ( பண் : தக்கராகம் )

 

பாடல் எண் : 1

மடையில் வாளை பாய, மாதரார்

குடையும் பொய்கைக் கோலக்கா உளான்,

சடையும் பிறையும் சாம்பல் பூச்சும், கீள்

உடையும் கொண்ட உருவம் என்-கொலோ.

 

பாடல் எண் : 2

பெண்-தான் பாகம் ஆகப், பிறைச் சென்னி

கொண்டான், கோலக்காவு கோயிலாக்

கண்டான், பாதம் கையால் கூப்பவே

உண்டான் நஞ்சை உலகம் உய்யவே.

 

பாடல் எண் : 3

பூண் நல் பொறிகொள் அரவம், புன்-சடை

கோணல் பிறையன், குழகன் கோலக்கா

மாணப் பாடி, மறை-வல்லானையே

பேணப், பறையும் பிணிகள் ஆனவே.

 

பாடல் எண் : 4

தழுக்-கொள் பாவம் தளர வேண்டுவீர்,

மழுக்-கொள் செல்வன், மறி சேர் அங்கையான்,

குழுக்-கொள் பூதப் படையான் கோலக்கா

இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே.

 

பாடல் எண் : 5

மயில் ஆர் சாயல் மாது ஓர் பாகமா,

எயிலார் சாய எரித்த எந்தைதன்

குயில் ஆர் சோலைக் கோலக்காவையே

பயிலா-நிற்கப் பறையும் பாவமே.

 

பாடல் எண் : 6

வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்,

கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்,

கொடிகொள் விழவு ஆர் கோலக்காவுள் எம்

அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே.

 

பாடல் எண் : 7

நிழல் ஆர் சோலை நீல வண்டினம்

குழல் ஆர் பண் செய் கோலக்கா உளான்

கழலால் மொய்த்த பாதம் கைகளால்

தொழலார் பக்கல் துயரம் இல்லையே.

 

பாடல் எண் : 8

எறி ஆர் கடல்-சூழ் இலங்கைக்-கோன்-தனை

முறி-ஆர் தடக்கை அடர்த்த மூர்த்தி-தன்

குறி-ஆர் பண்-செய் கோலக்காவையே

நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.

 

பாடல் எண் : 9

நாற்ற மலர்-மேல் அயனும் நாகத்தில்

ஆற்றல் அணை-மேல்-அவனும் காண்கிலாக்,

கூற்றம் உதைத்த குழகன், கோலக்கா

ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே.

 

பாடல் எண் : 10

பெற்ற மாசு பிறக்கும் சமணரும்

உற்ற துவர்-தோய் உருவிலாளரும்

குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்

பற்றிப் பரவப் பறையும் பாவமே.

 

பாடல் எண் : 11

நலங்கொள் காழி ஞான-சம்பந்தன்

குலங்கொள் கோலக்கா உளானையே

வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்

உலங்கொள் வினை போய் ஓங்கி வாழ்வரே.

——————-

 

Here is a reference in Sundarar thEvAram regarding Siva giving thALam to Sambandar

 

சுந்தரர் தேவாரம் – 7.62.8

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்

.. ஞான சம்பந்தனுக்கு உலகவர்-முன்

தாளம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும்

.. தன்மையாளனை, என் மனக்-கருத்தை,

ஆளும் பூதங்கள் பாட நின்று ஆடும்

.. அங்கணன்-தனை, எண்கணம் இறைஞ்சும்

கோளிலிப் பெருங்கோயில் உளானைக்,

.. கோலக்காவினில் கண்டு-கொண்டேனே.

 

Please rate this

1.74 – திருப்புறவம் ( சீகாழி ) No ratings yet.

1.74 – திருப்புறவம் ( சீகாழி ) – Sirkazhi

பதிவு ஆசிரியர்: சிவதிரு வி. சுப்பிரமணியன் அவர்கள்
18) padhigam 1.74 – திருப்புறவம் ( சீகாழி )

Verses: 01_074 – naRavam niRai vaNdu pdf: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHUHBqTHBVLVN5UHM/view?usp=sharing

Discussion audio – Part-1: 01_074 01-03 naRavam niRai vaNdu – Part-1 – 2015-07-04 mp3: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHLUk4WGF6bllqaWs/view?usp=sharing

Discussion audio – Part-2: 01_074 04-11 naRavam niRai vaNdu – Part-2 – 2015-07-18 : https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHU2lsMkEwWW13Ymc/view?usp=sharing

********
The discussion for padhigam 1.74 is available on YouTube:
All 2 parts: https://www.youtube.com/playlist?list=PLdpsipSnJkE8c9q0reo99-32qFC6-C4SM

Part-1: https://youtu.be/uzbEBw_8lrs
Part-2: https://youtu.be/XNq6lvLW48M
********

For English translation of this padhigam – 1.74 – naRavam niRai vaNdu – by V. M. Subramanya Ayyar – at IFP site: http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS1_074.HTM

சீகாழி (சீர்காழி) (புறவம்) – Sirkazhi temple – பிரம்மபுரீஸ்வரர் கோயில் தகவல்கள் – தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=495

==================== ===============

 

 

பதிகம் 1.74 – திருப்புறவம் ( சீகாழி ) ( பண் : தக்கேசி )

 

Background:

“நறவம் நிறை வண்டறை தார்” என்ற பதிகம் ஞானசம்பந்தர் தோடுடைய செவியன் பாடியபிறகு உடன் கோயிலினுட் சென்று உமாமகேசுரரைத் தரிசித்துப் பாடியது. இரண்டாம் பதிகம் “மடையில் வாளை” என்பதாகவே கற்றோரும் மற்றோரும் எண்ணி வருகின்றனர். இது பொருந்தாது என்பதைப் பின்வரும் சேக்கிழார் வாக்கால் தெளியலாம்.

`அண்ண லணைந்தமை கண்டு தொடர்ந்தெழும் அன்பாலே

மண்மிசை நின்ற மறைச்சிறு போதகம் அன்னாரும்

கண்வழி சென்ற கருத்து விடாது கலந்தேகப்

புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலி னுட்புக்கார்`

 

`பொங்கொளி மால்விடை மீது புகுந்தணி பொற்றோணி

தங்கி யிருந்த பெருந்திரு வாழ்வு தலைப்பட்டே

இங்கெனை யாளுடை யான்உமை யோடும் இருந்தான்என்று

அங்கெதிர் நின்று புகன்றனர் ஞானத் தமுதுண்டார்`

 

இப்பதிகத்துள் பாடல் தோறும் `இமையோர் ஏத்த உமையோ டிருந்தானே` என்பதால் இதுவே இரண்டாம் பதிகம் என்பதைச் சி.கே. சுப்பிரமணிய முதலியார் தம் பெரியபுராண உரைப்பேருரைக் குறிப்பில் அறிவித்துள்ளார். இஃது இத்துறையில் உள்ளார்க்கும் பெருவிருந்தாம்.

 

——–

 

#1986 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 88

பொங்கொளி மால்விடை மீது புகுந்தணி பொற்றோணி

தங்கியி ருந்தபெ ருந்திரு வாழ்வு தலைப்பட்டே

“யிங்கெனை யாளுடை யானுமை யோடு மிருந்தா”னென்

றங்கெதிர் நின்று புகன்றனர் ஞானத் தமுதுண்டார்.

————–

 

பதிகம் 1.74 – திருப்புறவம் ( சீகாழி ) ( பண் : தக்கேசி )

 

பாடல் எண் : 1

நறவ நிறைவண் டறைதார்க் கொன்றை நயந்து நயனத்தாற்

சுறவஞ் செறிவண் கொடியோ னுடலம் பொடியா விழிசெய்தான்

புறவ முறைவண் பதியா மதியார் புரமூன் றெரிசெய்த

இறைவன் அறவ னிமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.

 

பாடல் எண் : 2

உரவன் புலியி னுரிதோ லாடை யுடைமேற் படநாகம்

விரவி விரிபூங் கச்சா வசைத்த விகிர்த னுகிர்தன்னாற்

பொருவெங் களிறு பிளிற வுரித்துப் புறவம் பதியாக

இரவும் பகலு மிமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.

 

பாடல் எண் : 3

பந்த முடைய பூதம் பாடப் பாதஞ் சிலம்பார்க்கக்

கந்த மல்கு குழலி காணக் கரிகாட் டெரியாடி

அந்தண் கடல்சூழ்ந் தழகார் புறவம் பதியா வமர்வெய்தி

எந்தம் பெருமா னிமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.

 

பாடல் எண் : 4

நினைவார் நினைய வினியான் பனியார் மலர்தூய் நித்தலுங்

கனையார் விடையொன் றுடையான் கங்கை திங்கள் கமழ்கொன்றை

புனைவார் சடையின் முடியான் கடல்சூழ் புறவம் பதியாக

எனையா ளுடையா னிமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.

 

பாடல் எண் : 5

செங்க ணரவு நகுவெண் டலையு முகிழ்வெண் டிங்களுந்

தங்கு சடையன் விடைய னுடையன் சரிகோ வணவாடை

பொங்கு திரைவண் கடல்சூழ்ந் தழகார் புறவம் பதியாக

எங்கும் பரவி யிமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.

 

பாடல் எண் : 6

பின்னு சடைகள் தாழக் கேழ லெயிறு பிறழப்போய்

அன்ன நடையார் மனைக டோறு மழகார் பலிதேர்ந்து

புன்னை மடலின் பொழில்சூழ்ந் தழகார் புறவம் பதியாக

என்னை யுடையா னிமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.

 

பாடல் எண் : 7

உண்ணற் கரிய நஞ்சை யுண் டொருதோ ழந்தேவர்

விண்ணிற் பொலிய வமுத மளித்த விடைசேர் கொடியண்ணல்

பண்ணிற் சிறைவண் டறைபூஞ் சோலைப் புறவம் பதியாக

எண்ணிற் சிறந்த விமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.

 

பாடல் எண் : 8

விண்டா னதிர வியனார் கயிலை வேரோ டெடுத்தான்றன்

றிண்டோ ளுடலு முடியு நெரியச் சிறிதே யூன்றிய

புண்டா னொழிய வருள்செய் பெருமான் புறவம் பதியாக

எண்டோ ளுடையா னிமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.

 

பாடல் எண் : 9

நெடியா னீடா மரைமே லயனும் நேடிக் காண்கில்லாப்

படியா மேனி யுடையான் பவள வரைபோற் றிருமார்பிற்

பொடியார் கோல முடையான் கடல்சூழ் புறவம் பதியாக

இடியார் முழவா ரிமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.

 

பாடல் எண் : 10

ஆலும் மயிலின் பீலி யமண ரறிவில் சிறுதேரர்

கோலும் மொழிக ளொழியக் குழுவுந் தழலு மெழில்வானும்

போலும் வடிவு முடையான் கடல்சூழ் புறவம் பதியாக

ஏலும் வகையா லிமையோ ரேத்த வுமையோ டிருந்தானே.

 

பாடல் எண் : 11

பொன்னார் மாட நீடுஞ் செல்வப் புறவம் பதியாக

மின்னா ரிடையா ளுமையா ளோடு மிருந்த விமலனைத்

தன்னார் வஞ்செய் தமிழின் விரக னுரைத்த தமிழ்மாலை

பன்னாள் பாடி யாடப் பிரியார் பரலோ கந்தானே.

============================= ============================

 

 

Word separated version:

#1986 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 88

பொங்கு ஒளி மால்-விடை மீது புகுந்து அணி பொற்றோணி

தங்கியிருந்த பெரும்-திரு வாழ்வு தலைப்பட்டே

“இங்கு எனை ஆள் உடையான் உமையோடும் இருந்தான்” என்று

அங்கு எதிர் நின்று புகன்றனர் ஞானத்து அமுது உண்டார்.

————–

 

பதிகம் 1.74 – திருப்புறவம் ( சீகாழி ) ( பண் : தக்கேசி )

 

பாடல் எண் : 1

நறவம் நிறை வண்டு அறை தார்க்-கொன்றை நயந்து, நயனத்தால்

சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழி-செய்தான்,

புறவம் உறை வண் பதியா, மதியார் புரம் மூன்று எரி-செய்த

இறைவன், அறவன், இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

 

பாடல் எண் : 2

உரவன் புலியின் உரி-தோல் ஆடை உடைமேல் பட-நாகம்

விரவி விரி-பூங்-கச்சா அசைத்த விகிர்தன் உகிர்-தன்னால்

பொரு-வெங்-களிறு பிளிற உரித்துப், புறவம் பதியாக,

இரவும் பகலும் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

 

பாடல் எண் : 3

பந்தம் உடைய பூதம் பாடப், பாதம் சிலம்பு ஆர்க்கக்,

கந்தம் மல்கு குழலி காணக், கரிகாட்டு எரி-ஆடி

அந்தண் கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியா அமர்வு எய்தி

எந்தம் பெருமான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

 

பாடல் எண் : 4

நினைவார் நினைய இனியான், பனி-ஆர் மலர் தூய் நித்தலும்;

கனை-ஆர் விடை ஒன்று உடையான்; கங்கை திங்கள் கமழ்-கொன்றை

புனை வார்-சடையின் முடியான்; கடல் சூழ் புறவம் பதியாக

எனை ஆள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

 

பாடல் எண் : 5

செங்கண் அரவும், நகு-வெண்-தலையும், முகிழ்-வெண்-திங்களும்

தங்கு சடையன்; விடையன்; உடையன் சரி-கோவண-ஆடை;

பொங்கு-திரை வண்-கடல் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியாக,

எங்கும் பரவி இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

 

பாடல் எண் : 6

பின்னு சடைகள் தாழக், கேழல் எயிறு பிறழப், போய்

அன்ன நடையார் மனைகள் தோறும் அழகு ஆர் பலி-தேர்ந்து,

புன்னை மடலின் பொழில் சூழ்ந்து அழகு ஆர் புறவம் பதியாக,

என்னை உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

 

பாடல் எண் : 7

உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு, ஒரு தோழம் தேவர்

விண்ணில் பொலிய அமுதம் அளித்த, விடை-சேர்-கொடி அண்ணல்;

பண்ணில் சிறை-வண்டு அறை பூஞ்சோலைப் புறவம் பதியாக,

எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

 

பாடல் எண் : 8

விண்-தான் அதிர வியன் ஆர் கயிலை வேரோடு எடுத்தான்-தன்

திண்-தோள் உடலும் முடியும் நெரியச் சிறிதே ஊன்றிய

புண்-தான் ஒழிய அருள்-செய் பெருமான், புறவம் பதியாக,

எண்-தோள் உடையான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

 

பாடல் எண் : 9

நெடியான் நீள்-தாமரைமேல் அயனும் நேடிக் காண்கில்லாப்

படியா மேனி உடையான்; பவள வரை-போல் திரு-மார்பில்

பொடி-ஆர் கோலம் உடையான்; கடல் சூழ் புறவம் பதியாக,

இடி-ஆர் முழவு ஆர், இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

 

பாடல் எண் : 10

ஆலும் மயிலின் பீலி அமணர், அறிவு-இல் சிறு-தேரர்

கோலும் மொழிகள் ஒழியக், குழுவும் தழலும் எழில்-வானும்

போலும் வடிவும் உடையான்; கடல் சூழ் புறவம் பதியாக,

ஏலும் வகையால் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே.

 

பாடல் எண் : 11

பொன்-ஆர் மாடம் நீடும் செல்வப் புறவம் பதியாக

மின்-ஆர் இடையாள் உமையாளோடும் இருந்த விமலனைத்

தன்-ஆர்வம்-செய் தமிழின் விரகந் உரைத்த தமிழ்-மாலை

பன்-நாள் பாடி ஆடப் பிரியார் பரலோகம்-தானே.

 

Please rate this

1.80 – கோயில் (சிதம்பரம்) No ratings yet.

1.80 – கோயில் (சிதம்பரம்) – Chidambaram
பதிவு ஆசிரியர்: சிவதிரு வி. சுப்பிரமணியன் அவர்கள்

23) padhigam 1.80 – கோயில் (சிதம்பரம்) – Chidambaram
1.80 – கற்றாங்கு எரி ஓம்பி
Verses: 01_080 – katRAngu eri Ombi – verses: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHazFZUU95cWl0dkE/view?usp=sharing

Discussion audio – Part-1: 01_080 01-03 katRAngu eri Ombi – Part-1 – 2015-11-21 – mp3: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHMGRJOHJUb2s2TEE/view?usp=sharing

Discussion audio – Part-2: 01_080 04-11 katRAngu eri Ombi – Part-2 – 2015-12-05 – mp3: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHZDE4cmlVdEZDOXc/view?usp=sharing

For English translation of this padhigam – by V. M. Subramanya Ayyar – at IFP site: http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS1_080.HTM

Padhigam audio – 1.80 – கற்றாங்கு எரி ஓம்பி ( katRAngu eri Ombi): – as sung by Thiruththani Swaminathan Odhuvar: http://www.shaivam.org/gallery/audio/tis-tns-thillai-thiruppathikangal.htm

(The direct link is: கற்றாங்கெரி (Katrangeri): http://www.shaivam.org/gallery/audio/thiruthani-swaminathan/thillai-thiruppathikangal/tis-tns-thillai-01-katrangeri-yombi.mp3 )

V. Subramanian

==================== ===============

 

பதிகம் 1.80 – கோயில் (தில்லை / சிதம்பரம்) ( பண் : குறிஞ்சி )

சீகாழியினின்றும் புகலிவேந்தர் , அடியார்களும் , திருநீல கண்ட யாழ்ப்பாணரும் சிவபாத இருதயரும் உடன்வரத் தில்லை செல்லத் திருவுளங்கொண்டார்கள் . அவர்கள் அனைவரும் கொள்ளிடத்தைக் கடந்தார்கள் . தில்லையின் தெற்குவீதி அணுகினார்கள் . தில்லைவாழ் அந்தணர்கள் சிரபுரப் பிள்ளையாரை எதிர்கொண்டு அழைக்க , நகரை அலங்கரித்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்ப்புறத்தே வந்து , அழைத்துச் சென்றனர் . பிள்ளையார் திருவீதியைத் தொழுதனர் . எழுநிலைக் கோபுரத்தையும் வணங்கினர் . திருமுன்றில் திருமாளிகையையும் வலம்வந்து வணங்கிக்கொண்டு உட்புகுந்து திருவணுக்கன் திருவாயிலை அடைந்தார்கள் . சிந்தையில் ஆர்வம் பெருகிற்று . கண்கள் ஆனந்த பாஷ்பம் பொழிந்தன . செங்கை சிரம் மீது ஏறிக் குவிந்தது . இவ்வாறு உருகிய அன்பினராய் உட்புகுந்தார் . இறைவன் தமக்களித்த சிவஞானமே ஆன திருஅம்பலத்தையும் , அந்த ஞானத்தால் விளைந்த ஆனந்தமாகிய கூத்தப் பெருமானையும் கண்ணாரக் கண்டு கும்பிட்டார் . ஆனந்தக் கூத்தருக்கு உரிமையான தனிச் சிறப்பினையுடைய தில்லைவாழ் அந்தணரை முன் வைத்து, “கற்றாங் கெரி யோம்பி” என்னும் இப்பதிகத்தை ஏழிசையும் ஓங்க எடுத்தார் . திருக்கடைக்காப்பும் முடித்து , ஊனையும் உயிரையும் உருக்கும் ஒப்பற்ற கூத்தை வெட்டவெளியிற் கண்டு திளைத்துச் , சிவானந்தப் பேறமுதுண்ட பிள்ளையார் ஆனந்தமேலீட்டால் அழுதார் ..

 

“கோயில்” (சிதம்பரம்) – தலச்சிறப்பு :

http://www.tamilvu.org/stream/culgal/html/cg100/cg102/html/cg102t0551.htm

சோழ நாட்டு (வடகரை)த் தலம்.

‘கோயில்’ என்று பொதுவாக வழங்கினாலே சைவத்தில் சிதம்பரம் நடராசப் பெருமான் கோயிலைத்தான் குறிக்கும். ஊர்ப்பெயர் தில்லை. கோயிலின் பெயர் சிதம்பரம். இன்று ஊர்ப்பெயர் வழக்கில் மறைந்து, கோயிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகிறது.

 

இக்கோயிலுள் 1. சிற்றம்பலம் 2. பொன்னம்பலம் 3. பேரம்பலம் 4. நிருத்தசபை 5. இராசசபை என ஐந்து பெருமன்றங்கள் உள்ளன.

 

சிற்றம்பலம்: நடராசப் பெருமான் திருநடம்புரிந்தருளும் இடம்.

பொன்னம்பலம் (கனகசபை): நடராசப்பெருமான் அபிஷேகம் கொண்டருளும் இடம். சிற்றம்பலத்திற்கு முன்னால் உள்ள பகுதி.

பேரம்பலம் : இது தேவசபை எனப்படும். …. இங்குத்தான் பஞ்சமூர்த்திகளும் எழுந்தருளியுள்ளனர்.

நிருத்த சபை : நடராசப் பெருமானின் கொடிமரத்துக்கு (துவஜஸ்தம்பத்திற்கு)த் தென்பால் உள்ளது. ஊர்த்துவ தாண்டவம் செய்தருளிய இடம் இதுவே.

இராச சபை : இஃது ஆயிரக்கால் மண்டபமாகும்.

——–

 

தில்லை – தில்லைமரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் தில்லைவனம் என்ற யெர் பெற்றது.

சிதம்பரம் = சித் + அம்பரம் = (அறிவு – வெட்டவெளி) = ஞானாகாசம்.

பெரும் பற்றப் புலியூர் – புலிக்கால் முனிவர் (வியாக்கிர பாதர்) பூசித்தமையால் இது புலியூர் எனப்பெற்றது. மாமுனிவர்களுக்குப் பெரிய பற்றுக்கோடாய் உள்ளதாதலின் – பெரும்பற்றப்புலியூர் என்பர்.

இவைகளன்றி, வியாக்கிரபுரம், புண்டரீகபுரம், பூலோக கைலாசம் என்னும் வேறு பெயர்களும் உண்டு.

———-

 

#2060 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 162

ஊழி முதல்வர்க் குரிமைத் தொழிற்சிறப்பால்

வாழிதிருத் தில்லைவா ழந்தணரை முன்வைத்தே,

யேழிசையு மோங்க வெடுத்தா ரெமையாளுங்

காழியர்தங் காவலனார் “கற்றாங் கெரியோம்பி”

————–

 

பதிகம் 1.80 – கோயில் (தில்லை / சிதம்பரம்) ( பண் : குறிஞ்சி )

 

பாடல் எண் : 1

கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே

செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய

முற்றா வெண்டிங்கண் முதல்வன் பாதமே

பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.

 

பாடல் எண் : 2

பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ்

சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய

பிறப்பில் பெருமானைப் பின்றாழ் சடையானை

மறப்பி லார்கண்டீர் மைய றீர்வாரே.

 

பாடல் எண் : 3

மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக்

கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுட்

பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச்

செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே.

 

பாடல் எண் : 4

நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்

பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச்

சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய

இறைவன் கழலேத்து மின்ப மின்பமே.

 

பாடல் எண் : 5

செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச்

செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற

செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய

செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே.

 

பாடல் எண் : 6

வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந்

திருமாந் தில்லையுட் சிற்றம் பலமேய

கருமா னுரியாடைக் கறைசேர் கண்டத்தெம்

பெருமான் கழலல்லாற் பேணா துள்ளமே.

 

பாடல் எண் : 7

அலையார் புனல்சூடி யாகத் தொருபாகம்

மலையான் மகளோடு மகிழ்ந்தா னுலகேத்தச்

சிலையா லெயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத்

தலையால் வணங்குவார் தலையா னார்களே.

 

பாடல் எண் : 8

கூர்வா ளரக்கன்றன் வலியைக் குறைவித்துச்

சீரா லேமல்கு சிற்றம் பலமேய

நீரார் சடையானை நித்த லேத்துவார்

தீரா நோயெல்லாந் தீர்த றிண்ணமே.

 

பாடல் எண் : 9

கோணா கணையானுங் குளிர்தா மரையானுங்

காணார் கழலேத்தக் கனலா யோங்கினான்

சேணார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேத்த

மாணா நோயெல்லாம் வாளா மாயுமே.

 

பாடல் எண் : 10

பட்டைத் துவராடைப் படிமங் கொண்டாடும்

முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே

சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய

நட்டப் பெருமானை நாளுந் தொழுவோமே.

 

பாடல் எண் : 11

ஞாலத் துயர்காழி ஞான சம்பந்தன்

சீலத் தார்கொள்கைச் சிற்றம் பலமேய

சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை

கோலத் தாற்பாட வல்லார் நல்லாரே.

============================= ============================

 

 

Word separated version:

#2060 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 162

ஊழி முதல்வர்க்கு உரிமைத்-தொழில் சிறப்பால்,

வாழி, திருத்-தில்லை-வாழ்-அந்தணரை முன் வைத்தே,

ஏழிசையும் ஓங்க எடுத்தார், எமை ஆளும்

காழியர்-தம் காவலனார், “கற்றாங்கு எரி ஓம்பி”.

————–

 

பதிகம் 1.80 – கோயில் (தில்லை / சிதம்பரம்) ( பண் : குறிஞ்சி )

 

பாடல் எண் : 1

கற்று ஆங்கு எரி ஓம்பிக், கலியை வாராமே

செற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய,

முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே

பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.

 

பாடல் எண் : 2

பறப்பைப் படுத்து எங்கும் பசு வேட்டு, எரி ஓம்பும்

சிறப்பர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய,

பிறப்பு இல் பெருமானைப், பின் தாழ் சடையானை

மறப்பு இலார் கண்டீர் மையல் தீர்வாரே.

 

பாடல் எண் : 3

மை ஆர் ஒண்-கண்ணார் மாட நெடு-வீதிக்

கையால் பந்து ஓச்சும், கழி-சூழ் தில்லையுள்

பொய்யா-மறை பாடல் புரிந்தான், உலகு ஏத்தச்

செய்யான் உறை கோயில் சிற்றம்பலம் தானே.

 

பாடல் எண் : 4

நிறை-வெண்-கொடி-மாடம் நெற்றி நேர் தீண்டப்

பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம் தில்லைச்

சிறை-வண்டு அறை ஓவாச் சிற்றம்பலம் மேய

இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே.

 

பாடல் எண் : 5

செல்வ நெடு மாடம் சென்று சேண் ஓங்கிச்

செல்வ மதி தோயச் செல்வம் உயர்கின்ற

செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய

செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே.

 

பாடல் எண் : 6

வரு-மாந்-தளிர்-மேனி மாது ஓர் பாகம் ஆம்

திரு-மாந்-தில்லையுள் சிற்றம்பலம் மேய

கருமான் உரி ஆடைக், கறை-சேர் கண்டத்து எம்

பெருமான் கழல் அல்லால் பேணாது உள்ளமே.

 

பாடல் எண் : 7

அலை ஆர் புனல் சூடி, ஆகத்து ஒரு பாகம்

மலையான் மகளோடு மகிழ்ந்தான், உலகு ஏத்தச்

சிலையால் எயில் எய்தான் சிற்றம்பலம் தன்னைத்

தலையால் வணங்குவார் தலை ஆனார்களே.

 

பாடல் எண் : 8

கூர்-வாள்-அரக்கன்தன் வலியைக் குறைவித்துச்

சீராலே மல்கு சிற்றம்பலம் மேய

நீர்-ஆர்-சடையானை நித்தல் ஏத்துவார்

தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே.

 

பாடல் எண் : 9

கோள்-நாகணையானும் குளிர்-தாமரையானும்

காணார் கழல் ஏத்தக் கனலாய் ஓங்கினான்,

சேணார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் ஏத்த,

மாணா நோய் எல்லாம் வாளா மாயுமே.

 

பாடல் எண் : 10

பட்டைத் துவர்-ஆடைப் படிமம் கொண்டாடும்

முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே,

சிட்டர் வாழ்-தில்லைச் சிற்றம்பலம் மேய

நட்டப் பெருமானை நாளும் தொழுவோமே.

 

பாடல் எண் : 11

ஞாலத்து உயர்-காழி ஞான சம்பந்தன்

சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் மேய

சூலப் படையானைச் சொன்ன தமிழ்-மாலை

கோலத்தால் பாட வல்லார் நல்லாரே.

================== ==========================

 

Please rate this

பன்னிரு திருமுறை 1.12 திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) No ratings yet.

1.12 – திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) – thirumudukundRam (Vriddachalam)

பதிவு ஆசிரியர் சிவதிரு வி. சுப்ரமணியன் அவர்கள்.

25) பதிகம் 1.12 – திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) thirumudukundRam (Vriddachalam):
சம்பந்தர் தேவாரம் – sambandar thevaram
1.12 – மத்தாவரை நிறுவிக்கடல்

Verses: 01_012 – maththAvarai niRuvikkadal – verses: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHaWNDY0dzeFVrYTg/view?usp=sharing

Discussion audio – Part-1: 01_012 01-03 maththAvarai niRuvikkadal – Part-1 – 2015-12-19 – mp3: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHX24tcjZqSGxDSjg/view?usp=sharing

Discussion audio – Part-2: 01_012 04-11 maththAvarai niRuvikkadal – Part-2 – 2016-01-09 – mp3: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHYVBaZmNweVR6bzg/view?usp=sharing

For English translation of this padhigam – by V. M. Subramanya Ayyar – at IFP site:
http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS1_012.HTM

திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) – விருத்தகிரீஸ்வரர் கோயில் – தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=493

V. Subramanian
========================

(Verses in original Tamil version & word separated Tamil / Devanagari / Roman scripts) – print only those pages you need)

சம்பந்தர் தேவாரம் – Sambandar thevAram –

பதிகம் 1.12 – திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ( பண் : நட்டபாடை )

 

Background:

சிதம்பரத்தைத் தரிசித்து, அருகுள்ள மற்ற தலங்களையும் தரிசித்துப், பின் மீண்டும் சிதம்பரத்தைத் தரிசித்தார் திருஞானசம்பந்தர்.

திருநீலகண்ட யாழ்ப்பாணர், “அடியேன் பதி முதலியவற்றையும் வணங்கிப் போதல்வேண்டும்” என்று விண்ணப்பிக்கப், பிள்ளையார் அங்ஙனமே தந்தையார், பரிசனங்கள், பாணர், மதங்கசூளாமணியார் இவர்களுடன் நிவாநதியின் கரைவழியே, மேற்றிசையிற்போய்த் திருஎருக்கத்தம்புலியூரை அடைந்தார்.

திருஎருக்கத்தம்புலியூரை வணங்கிப் பதிகம்பாடிப் புறப்பட்ட ஆளுடைய பிள்ளையார் இடையிலுள்ள தலங்கள் பலவற்றையும் வணங்கித் துதித்துத் திருமுதுகுன்றம் என்னும் விருத்தாசலத்தை அடைந்தார் . போகின்ற வழியிலேயே முதுகுன்ற நாதருடைய அருட்செயல்களும் , ஆட்கொள்ளுந் திறனும் , இயற்கை வளமும் , நதியின் செலவும் மனத்தைக் கவர அவற்றை அமைத்து “மத்தாவரை நிறுவி” என்னும் பதிகத்தைத் தொடங்கி, “முத்தாறு வந்தடி சூழ்தரு முதுகுன்றடைவோம்” என அருளிச் செய்கின்றார்.

திருமுதுகுன்றம் செல்லும்போது வழியில் அருளியது இப்பதிகம்.

 

திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) – தலச்சிறப்பு :

http://www.tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=72&pno=176

நடுநாட்டுத் தலம்.

திருமுதுகுன்றம் – தமிழ்ப்பெயர். விருத்தாசலம் என்பது சமஸ்கிருதப் பெயர். தற்போது வழக்கில் விருத்தாசலம் என்றே வழங்கப்படுகிறது.

 

பிரமனும் அகத்தியரும் வழிபட்ட பெருமையுடைய பதி. சுந்தரர் இத்தலத்தில் பரவையருக்காகப் பெருமானை வேண்டிப் பொன்பெற்று அப்பொன்னை இங்குள்ள மணிமுத்தாற்றில் இட்டுத் திருவாரூர்க் கமலாலயத்தில் எடுத்துக்கொண்டார் என்பது வரலாறு.

 

இத்தலத்தின் பெயரில் ‘குன்றம்’ என்ற சொல் இருப்பினும், காண்பதற்கு மலை ஏதுமில்லை. குன்று பூமியினடியில் அழுந்தியிருப்பதாகத் தலவரலாறு கூறுகிறது. இதற்கேற்ப இப்பகுதியில் பூமிக்கடியில் பாறைகளே உள்ளன. எல்லாமலைகளும் தோன்றுவதற்கு முன்னரே இம்மலை தோன்றி மறைந்தமையால் இதற்குப் பழமலை – முதுகுன்றம் என்று பெயர் வந்தது. (விருத்தம் – பழமை, அசலம் – மலை).

 

மிகப்பெரிய கோயில்.

——–

 

#2078 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 180

அங்கு நின்றெழுந் தருளிமற் றவருட னம்பொன்மா மலைவல்லி

பங்கர் தாமினி துறையுநற் பதிபல பரிவொடும் பணிந்தேத்தித்,

துங்க வண்டமிழ்த் தொடைமலர் பாடிப்போய்த் தொல்லைவெங் குருவேந்தர்

செங்க ணேற்றவர் திருமுது குன்றினைத் தொழுதுசென் றணைகின்றார்,

 

#2079 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 181

“மொய்கொள் மாமணி கொழித்துமுத் தாறுசூழ் முதுகுன்றை யடைவோ”மென்

றெய்து சொன்மலர் மாலைவண் பதிகத்தை யிசையொடும் புனைந்தேத்திச்

செய்த வத்திரு முனிவருந் தேவருந் திசையெலா நெருங்கப்புக்

கையர் சேவடி பணியுமப் பொருப்பினி லாதர வுடன்சென்றார்.

————–

 

பதிகம் 1.12 – திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ( பண் : நட்டபாடை )

(“தானாதன தானாதன தானாதன தான” – என்ற சந்தம்.

சீர்கள் 1, 2, 3 – “தானாதன” என்பது “தனனாதன” என்றும்,

சீர் 4 – “தான” என்பது “தனன” என்றும் வரலாம்)

 

பாடல் எண் : 1

மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விட முண்ட

தொத்தார்தரு மணிநீண்முடிச் சுடர்வண்ணன திடமாம்

கொத்தார்மலர் குளிர்சந்தகி லொளிர்குங்குமங் கொண்டு

முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே.

 

பாடல் எண் : 2

தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்

இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம் *

மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகி ரெரிகண்

முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே.

(* “இனிதாவுறை யிடமாம்” என்றிருக்கவேண்டுமோ?)

 

பாடல் எண் : 3

விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொண்

தளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம்

களையார்தரு கதிராயிரம் உடையவ்வவ னோடு

முளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே.

 

பாடல் எண் : 4

சுரர்மாதவர் தொகுகின்னர ரவரோதொலை வில்லா

நரரானபன் முனிவர்தொழ விருந்தானிட நலமார்

அரசார்வர வணிபொற்கல னவைகொண்டுபன் னாளும்

முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே.

 

பாடல் எண் : 5

அறையார்கழ லந்தன்றனை அயின்மூவிலை யழகார்

கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில்

மறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு

முறையான்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.

 

பாடல் எண் : 6

ஏவார்சிலை யெயினன்னுரு வாகியெழில் விசயற்

கோவாதவின் னருள்செய்தவெம் மொருவற்கிட முலகில்

சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார்

மூவாதபன் முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.

 

பாடல் எண் : 7

தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை முடியர்

மழமால்விடை மிகவேறிய மறையோனுறை கோயில்

விழவோடொலி மிகுமங்கையர் தகுமாடக சாலை

முழவோடிசை நடமுன்செயு முதுகுன்றடை வோமே.

 

பாடல் எண் : 8

செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன்

கதுவாய்கள்பத் தலறீயிடக் கண்டானுறை கோயில்

மதுவாயசெங் காந்தண்மலர் நிறையக்குறை வில்லா

முதுவேய்கண்முத் துதிரும்பொழின் முதுகுன்றடை வோமே.

 

பாடல் எண் : 9

இயலாடிய பிரமன்னரி யிருவர்க்கறி வரிய

செயலாடிய தீயாருரு வாகியெழு செல்வன்

புயலாடுவண் பொழில்சூழ்புனற் படப்பைத்தடத் தருகே

முயலோடவெண் கயல்பாய்தரு முதுகுன்றடை வோமே.

 

பாடல் எண் : 10

அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான்

மருகன்வரு மிடபக்கொடி யுடையானிட மலரார்

கருகுகுழன் மடவார்கடி குறிஞ்சியது பாடி

முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே.

 

பாடல் எண் : 11

முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர்ப்

புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்த

நிகரில்லன தமிழ்மாலைக ளிசையோடிவை பத்தும்

பகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே.

============================= ============================

 

 

Word separated version:

#2078 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 180

அங்குநின்று எழுந்தருளி மற்று அவருடன் அம்பொன்-மா-மலைவல்லி

பங்கர் தாம் இனிது உறையும் நற்பதி பல பரிவொடும் பணிந்து ஏத்தித்,

துங்க வண்-தமிழ்த்-தொடை-மலர் பாடிப் போய்த் தொல்லை வெங்குரு வேந்தர்

செங்கண் ஏற்றவர் திரு-முதுகுன்றினைத் தொழுது சென்று அணைகின்றார்,

 

#2079 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 181

“மொய்கொள் மாமணி கொழித்து முத்தாறு சூழ் முதுகுன்றை அடைவோம்” என்று

எய்து சொல்-மலர்-மாலை வண்-பதிகத்தை இசையொடும் புனைந்து ஏத்திச்

செய்தவத் திரு முனிவரும் தேவரும் திசை-எலாம் நெருங்கப் புக்கு

ஐயர் சேவடி பணியும் அப்-பொருப்பினில் ஆதரவுடன் சென்றார்.

————–

 

பதிகம் 1.12 – திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) ( பண் : நட்டபாடை )

(“தானாதன தானாதன தானாதன தான” – என்ற சந்தம்.

Seers 1, 2 & 3 – “தானாதன” & “தனனாதன” are interchangeable,

Seer 4 – “தான” & “தனன” are interchangeable)

 

(To illustrate the chandam, the first song is shown in both ‘seer split’ and ‘word separated’ forms.)

பாடல் எண் : 1

மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விட முண்ட

தொத்தார்தரு மணிநீள்முடிச் சுடர்வண்ணன திடமாம்

கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டு

முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே.

**********

 

பாடல் எண் : 1

மத்தா-வரை நிறுவிக்,-கடல் கடைந்தவ்-விடம் உண்ட

தொத்து-ஆர்தரு மணி-நீள்-முடிச் சுடர்-வண்ணனது இடம்-ஆம்

கொத்து-ஆர்-மலர் குளிர்-சந்து-அகில் ஒளிர்-குங்குமம் கொண்டு

முத்தாறு-வந்து அடி-வீழ்தரு முதுகுன்று- அடைவோமே.

 

பாடல் எண் : 2

தழை-ஆர்- வடவிய வீதனில் தவமே-புரி சைவன்

இழை-ஆர்-இடை மடவாளொடும் இனிதா-உறைவு இடம்-ஆம் *

மழை-வானிடை முழவவ்-எழில் வளைவாள்-உகிர் எரி-கண்

முழை-வாளரி குமிறும்-உயர் முதுகுன்று- அடைவோமே.

(* “இனிதா உறை இடமாம்” என்றிருக்கவேண்டுமோ?)

 

பாடல் எண் : 3

விளையாதது-ஒர் பரிசில்-வரு பசு-பாச-வேதனை ஒண்

தளை-ஆயின தவிரவ்-அருள் தலைவன்னது சார்பு-ஆம்

களை-ஆர்தரு கதிர்-ஆயிரம் உடையவ்-அவனோடு

முளை-மா-மதி தவழும்-உயர் முதுகுன்று- அடைவோமே.

 

பாடல் எண் : 4

சுரர்-மாதவர் தொகு-கின்னரர் அவரோ- தொலைவில்லா

நரர்-ஆன-பன் முனிவர்-தொழ இருந்தான்-இடம் நலம்-ஆர்

அரசார்-வர அணி-பொற்கலன் அவை-கொண்டு-பன் நாளும்

முரசு-ஆர்வரு மண-மொய்ம்பு-உடை முதுகுன்று- அடைவோமே.

 

பாடல் எண் : 5

அறை-ஆர்-கழல் அந்தன்-தனை அயில்-மூவிலை அழகு-ஆர்

கறை-ஆர்-நெடு வேலின்-மிசை ஏற்றான்-இடம் கருதில்

மறை-ஆயின பல-சொல்லி-ஒண் மலர்-சாந்து-அவை கொண்டு

முறையால்-மிகு முனிவர்-தொழு முதுகுன்று- அடைவோமே.

 

பாடல் எண் : 6

ஏ-ஆர்-சிலை எயினன்-உரு ஆகி-எழில் விசயற்கு

ஓவாத- இன்னருள்-செய்த-எம் ஒருவற்கு-இடம் உலகில்

சாவாதவர் பிறவாதவர் தவமே-மிக உடையார்

மூவாத-பன் முனிவர்-தொழு முதுகுன்று- அடைவோமே.

 

பாடல் எண் : 7

தழல்-சேர்தரு திரு-மேனியர் சசி-சேர்-சடை முடியர்

மழ-மால்-விடை மிக-ஏறிய மறையோன்-உறை கோயில்

விழவோடு-ஒலி மிகு-மங்கையர் தகும்-ஆடக சாலை

முழவோடு-இசை நடம்-முன்-செயும் முதுகுன்று- அடைவோமே.

 

பாடல் எண் : 8

செதுவாய்மைகள் கருதிவ்-வரை எடுத்த-திறல் அரக்கன்

கது-வாய்கள்-பத்து அலறீயிடக் கண்டான்-உறை கோயில்

மதுவாய-செங் காந்தள்-மலர் நிறையக்-குறைவு இல்லா

முது-வேய்கள்-முத்து உதிரும்-பொழில் முதுகுன்று- அடைவோமே.

 

பாடல் எண் : 9

இயல்-ஆடிய பிரமன்-அரி இருவர்க்கு-அறிவு அரிய

செயல்-ஆடிய தீ-ஆர்-உரு ஆகி-எழு செல்வன்

புயல்-ஆடு-வண் பொழில்-சூழ்-புனல் படப்பைத்-தடத்து அருகே

முயல்-ஓட-வெண் கயல்-பாய்தரு முதுகுன்று- அடைவோமே.

 

பாடல் எண் : 10

அருகர்-ஒடு புத்தர்-அவர் அறியா-அரன் மலையான்

மருகன்-வரும் இடபக்-கொடி உடையான்-இடம் மலர்-ஆர்

கருகு-குழல் மடவார்-கடி குறிஞ்சி-அது பாடி

முருகன்னது பெருமை-பகர் முதுகுன்று- அடைவோமே.

 

பாடல் எண் : 11

முகில்-சேர்தரு முதுகுன்று- உடையானைம்-மிகு தொல்-சீர்ப்

புகலிந்நகர் மறை-ஞான- சம்பந்தன்-உரை செய்த

நிகர்-இல்லன தமிழ்-மாலைகள் இசையோடு-இவை பத்தும்

பகரும்- அடியவர்கட்கு-இடர் பாவம்- அடையாவே.

================== ==========================

 

Please rate this

புண்ணிய சிவபூமியாய் திகழும் தென்சென்னை 3.75/5 (4)


தென்சென்னை – ஒரு புண்ணிய சிவபூமி

உலகின் மிகப் பெரிய ஞானிகள் எண்ணற்றவர் வாழ்ந்து செழித்தது நம் பாரத பூமி. ஞானத்தின் விளைநிலமாகவும் மனித வாழ்கை இனிதாக அமைவதற்குத் தேவையான ஒழுக்க நெறிகளையும் வகுத்து கோடி கோடி கோடி உயிர்களை இன்பமாக வாழ வைத்தும், வைத்துக் கொண்டிருப்பதுமாகியது நம் புண்ணிய பாதர பூமி. இந்த பூமியில் விளைந்த ஞான முத்துக்ளும் கோவில்களும் உலகெங்கும் பரவி நின்றது என்று வரலாறு தெரிவிக்கிறது.  அத்தகைய புண்ணிய பாரத பூமியில் தமிழ்நாட்டின் தொண்டை மண்டலமும் சிவஞானம் விளைந்த பூமியாக திகழ்கிறது. தற்போதைய சென்னையின் தெற்கு பகுதியாகிய தென்சென்னை சித்தர்களின் இருப்பிடமாகவும், புண்ணிய சிவபூமியாகவும்  தொன்று தொட்டு நீண்ட நெடுங்காலமாகத் திகழ்ந்து வருகிறது. பெரும்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள சித்தர் மலையில் இன்றும் சித்தர்கள் வந்து செல்வதாக நம்பப்படுகிறது. சித்தர்களின் இருப்பிடமாக இருந்தமையாலேயே அருகிலுள்ள ஊர் சித்தார்பாக்கம் என்று பின்னாளில் அழைக்கப்பட்டு இன்று சித்தாலபாக்கமாக மருவி நிற்கிறது. சித்தர்கள் பக்கம் பக்கமாக இருந்தமையால் சித்தர் பக்கம் என்ற ஊர் இன்று சிட்லபாக்கமாக மருவி நிற்கிறது. இந்த சித்தர்களும் ஞானிகளும் சிவபூசை செய்ய பெரிய சோலையாகிய நந்தவனத்திற்குச் சென்று பூக்கள் பறித்து வந்ததால், இந்த ஊர் சோலையூர் என்று அழைக்கப்பெற்று, இன்று சேலையூராக மருவி நிற்கிறது. கபில முனிவர் பூசித்த தேணுபுரீஸ்வரர் அருகிலுள்ள மாடம்பாக்கத்தில் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார். இதனருகிலேயே 18 சித்தர்களுக்கும் சித்தர் கோவில் உள்ளது. மாமுனி அகத்தியர் வழிபட்ட சிவலிங்கமாகிய அங்கம்மாள் உடனுறை அகத்தீஸ்வரர் சித்தாலபாக்கத்தில் இருந்து அருள்புரிகிறார். தென்சென்னை முழுவதும் எண்ணற்ற சிவாலயங்கள் உள்ளன. இந்த மலையைச் சுற்றியுள்ள கோவில்களின் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முழுமதி மலைவலம்

இந்த சித்தர் மலையைச் சுற்றி ஒவ்வொரு முழுமதி (பௌர்ணமி) தோறும் மலைவலம் (கிரிவலம்) சில ஆண்டுகளாக பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த பகுதியில் இருக்கும் அனைவரும், மேலும் சென்னையில் உள்ளோரும், சென்னையைச் சுற்றியுள்ளோரும் தவறாமல் இந்த கோவில்களைச் சென்று தரிசனஞ்செய்து, நிறைமதி தோறும் மலைவலம் வந்தும் பிறப்பு இறப்பு அற்றவனாகிய மாபெரும் கருணைக்கடலாம் சிவபெருமானின் பேரருளைப் பெற்று துன்பங்கள் நீங்கி இன்பமாக வாழ்வீர்காள். தென்சென்னையாகிய இந்த புண்ணிய பூமியில் மீண்டும் ஆன்மீக அதிர்வுகள் எழுந்தருளட்டும். அனைத்து மக்களின் ஒற்றுமை சிறந்து ஓங்கட்டும். வறுமை, பஞ்சம் அனைத்தும் நீங்கி செல்வச்செழிப்போடு திகழட்டும்.

சித்தர்மலை மலைவல பாதையில் உள்ள கோவில்கள்

1. கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில், அரசன்கழனி
2. வரசக்தி விநாயகர் கோவில், இந்திராநகர், பெரும்பாக்கம்.
3. அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வைத்தீஸ்வரர் திருக்கோவில், நூக்கம்பாளையம்
4. பெரியபாளையத்தம்மன் கோவில், போலினேனி

சித்தர்மலை அருகில் உள்ள சில சிவன் கோவில்கள்

1. அங்கம்மாள் உடனுறை அகத்தீஸ்வரர் – அகத்தியர் வழிபட்ட தலம் – சித்தாலபாக்கம். – சித்தாலபாக்கம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ளது.

2. ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை ஒட்டீஸ்வரர் திருக்கோவில், ஒட்டியம்பாக்கம்

3. தேனுகாம்பாள் உடனுறை தேனுபுரீஸ்வரர், மாடம்பாக்கம். கபில முனிவர் பசுவாக சிவபெருமானை வழிபட்ட தலம். அருணகிரிநாதர் திருப்புகழில் பாடல்பெற்ற தலம்.

4. ஸ்ரீ சாந்தநாயகி உடனுறை ஆதிபுரீசுவரர் திருக்கோவில், பள்ளிக்கரணை – பதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்கள் வழிபட்ட தலம்.

5. கற்பகாம்பாள் உடனுறை கற்பகேஸ்வரர் திருக்கோவில் (கங்கையம்மன் கோவில்), காரப்பாக்கம்.

6. சுவாமிநாத சுவாமி திருக்கோவில், கந்தாஸ்ரமம், கிழக்கு தாம்பரம்.

7. சந்திரசூடேசுவரர் திருக்கோவில், கோவிலஞ்சேரி

8. கைலாசநாதர் திருக்கோவில், அகரம்தென்

9. ஸ்ரீ முருகநாதேஸ்வரர் திருக்கோவில், மாம்பாக்கம்

10. சக்திபுரீஸ்வரர் கோவில், பொன்மார்-நாவலூர் சாலை

11. ஸ்ரீ ஆனந்தவல்லி உடனுறை பொழிச்சலீசுவரர் திருக்கோவில், அகரம்தென்

12. திருநீலகண்டேஸ்வரர் திருக்கோவில், கீழ்க்கட்டளை

13. ஆழிகண்டேஸ்வரர் திருக்கோவில், ஒக்கியம் துரைப்பாக்கம்.

14. திருநீலகண்டேஸ்வரர் திருக்கோவில், நீலாங்கரை

15. வேதபுரீஸ்வரர் கோவில், பெருங்குடி

16. மரகதஈஸ்வரர் திருக்கோவில், சுண்ணாம்புகுளத்தூர்.

17. அமிர்தகடேஸ்வரர், அக்னீஸ்வரர், அகத்தீஸ்வரர் – மூன்று கோவில்கள், வேங்கடமங்கலம்.

18. நாவலூர் சிவாலயம், நாவலூர், OMR

சென்னையில் உள்ள சிவாலயங்களை கூகுள் வரைபடத்தில் குறிக்கப் பெற்ற சுட்டி.

சிவாலயம் செல்லுங்கள். திருமுறை ஓதுங்கள். சங்கநாதம் முழங்கிடுங்கள். எல்லாத் துன்பங்களும் விலகி இனிமையான வாழ்வு பெற்று சிவகதி பெறுவோம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

திருமுறை 1.1 பிரமபுரம் தோடுடைய செவியன் 4/5 (1)

பன்னிரு திருமுறை
பதிவு ஆசிரியர்: சிவதிரு வி. சுப்பிரமணியன் அவர்கள்
1.1 – பிரமபுரம் – தோடுடைய செவியன் – Sirkazhi

padhigam 1.1 – திருப்பிரமபுரம் ( சீகாழி )

1.1 தோடுடைய செவியன் Verses: 1.1 – thOdudaiya seviyan – pdf : https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHOE90a3pXNkktSHc/view?usp=sharing

Discussion audio – Part-1: 01_001 01 thOdudaiya seviyan – Part-1 – 2015-05-30 mp3 : https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHVkNkMFluMjJNYTA/view?usp=sharing
Discussion audio – Part-2: 01_001 02-06 thOdudaiya seviyan – Part-2 – 2015-06-06 mp3: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHTG5aMUpqMjk3cFE/view?usp=sharing
Discussion audio – Part-3: 01_001 07-11 thOdudaiya seviyan – Part-3 – 2015-06-20: https://drive.google.com/file/d/0B4FPwk-XxqAHWmQ2NWFfNDQ5OVU/view?usp=sharing

********
The discussion is available on YouTube:
All 3 parts: https://www.youtube.com/playlist?list=PLdpsipSnJkE_9VE7jolvpFw1_7DdFwfNo
********

தோடுடைய செவியன்” பதிகம் – (திருத்தணி சுவாமிநாதன் ஓதுவார்) – thOdudaiya seviyan padhigam – sung by Thiruththani Swaminathan Odhuvar: http://www.shaivam.org/gallery/audio/tis-tns-nalamiku-padhikangal.htm (The direct link is: http://www.shaivam.org/gallery/audio/thiruthani-swaminathan/nalamiku-padhikangal/tis-tns-np-01-thodudaiya-seviyan.mp3 )

You can find the audio of the first and last song of this padhigam – தோடுடைய செவியன் (Thodudaiya seviyan) – sung by Pondicherry Sambandam gurukkal:
http://www.shaivam.org/gallery/audio/tis-smbnd-grkl-sam-devaram.htm (direct link: http://www.shaivam.org/gallery/audio/sambanda-gurukkal/tis-sg-smbdr-dvrm-01-thodudaiya-seviyan.mp3 )

If you need English translation for this padhigam – 1.1 – thOdudaiya seviyan
– by V. M. Subramanya Ayyar – at IFP site: by V. M. Subramanya Ayyar – at IFP site:
http://www.ifpindia.org/digitaldb/site/digital_tevaram/U_TEV/VMS1_001.HTM

சீகாழி (சீர்காழி) (பிரமபுரம்) – Sirkazhi – piramapuram temple – பிரம்மபுரீஸ்வரர் கோயில் தகவல்கள் – தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=495

V. Subramanian
==================== ===============

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி – ( உமாபதி சிவம் )

பெறுவது நிச்சயம் அஞ்சல்நெஞ் சேபிர மாபுரத்து
மறுவறு பொற்கழல் ஞானசம் பந்தனை வாழ்த்துதலால்,
வெறியுறு கொன்றை மறியுறு செங்கை விடையெடுத்த
பொறியுறு பொற்கொடி யெம்பெரு மானமர் பொன்னுலகே. – (ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி)

பதிகம் 1.1 – திருப்பிரமபுரம் ( சீகாழி ) ( பண் : நட்டபாடை )

பதிக வரலாறு:

சோழ நாட்டிலே, சீகாழியிலே, தவம்பெருகும் கவுணிய குலத்தில், சிவதீட்சை பெற்ற வேதியர்குல திலகராகிய சிவபாத இருதயருக்கும் பகவதியம்மையாருக்கும் வேதநெறி தழைத் தோங்க, மிகுசைவத் துறைவிளங்க, சித்திரைமாதத்துத் திருவாதிரைத் திருநாளிலே திருமகனார் ஒருவர் தோன்றினார். இவருக்கு மூன்றாமாண்டு நடக்கும்பொழுது ஒருநாள் சிவபாத இருதயர் சீகாழிக் கோயிலுள் இருக்கும் பிரமதீர்த்தத்தில் நீராடச் சென்றார். குழந்தையும் அழுது கொண்டே உடன் சென்றது. சிவபாத இருதயர் உடன் வந்த சிறுவரைக் குளக்கரையில் உட்கார வைத்து, நீருள்மூழ்கி `அகமர்ஷணம்` என்னும் திருமந்திரத்தைச் செபித்துக் கொண்டிருந்தார். அங்ஙனம் அவர் மூழ்கியதும் உடல் தந்தையைக் காணாது சிறிதும் தனித்திரார் என்ற வியாசத்தால் (வியாஜம் – Pretext, pretence;) முழுமுதல்தந்தையாகிய சிவபெருமானது திருவடிகளை முறைப்படி வழிபட்ட பண்டையுணர்வு மூண்டெழ, பிள்ளையார் திருத்தோணிச்சிகரம் பார்த்து, `அம்மே! அப்பா!` என அழுதார். இவ்வொலி திருத்தோணி மலையில் வீற்றிருக்கும் அம்மையப்பர் திருச்செவியில் சென்று சேர்ந்தது. முன்னிலைமைத் திருத்தொண்டு முன்னி, அவர்க்கருள் புரிவதற்காகப் பெருமான் பொருவிடைமேல் அம்மையுடன் எழுந்தருளினார். எவ்வுலகும் தொழநின்ற மலைக்கொடியைப் பார்த்து, `துணைமுலைகள் பொழிகின்ற பாலடிசில் பொன்வள்ளத்து ஊட்டுக` என ஆணை தந்தார். அப்படியே அம்மையாரும் கறந்தருளி, எண்ணரிய சிவஞானத்தின்னமுதம் குழைத்து `உண்அடிசில்` என ஊட்டினார்; கண்ணீரைத் துடைத்தார்; அழுகையை அகற்றினார். உயிர்த் தந்தையும் தாயுமாகிய இவர்களே திருமேனி தாங்கி வெளிப்பட்டுவந்து இங்ஙனம் அருளப் பெற்றமையால் இவர் ஆளுடைய பிள்ளையார் எனவும் தேவர் முதலானோர்க்கும் அறிய முடியாத சிவஞானம் சம்பந்திக்கப் பெற்றமையால் திருஞானசம்பந்தர் எனவும் அழைக்கப் பெறுவாராயினார். செப முடித்து நீராடிக் கரையேறிய சிவபாத இருதயர் கடை வாய் வழிந்து கிடக்கின்ற பாலைக் கண்டு “நீ யார் தந்த பாலை உண்டாய்? எச்சில் மயங்கிட உனக்கு இது இட்டாரைக் காட்டு` என்று சிறுகோல் கொண்டு ஓச்சி உரப்பினார். குழந்தை யாகிய பிள்ளையார் கண்களில் ஆனந்தக் கண்ணீர் துளிக்க வலக் கையைச் சிரத்தின் மேலுயர்த்தி, வானிடமெல்லாம் பரவி நிற்கும் ஒளியோடு விடையின்மீது பண்ணிறைந்த அருமறைகள் பணிந் தேத்த, பரமகருணையின் வடிவாகிய பராசக்தியோடு நின்ற அருள் வண்ணப் பெருமானைச் சுட்டிக் காட்டினார். உளம் நிறைந்து வழிந்த உயர் ஞானத்திருமொழியால் இத்திருப் பதிகத்தைப் பாடியருளினார்.

#1970 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 72
சீர்மறையோர் சிவபாத விருதயருஞ் சிறுபொழுதில்
நீர்மருவித் தாஞ்செய்யு நியமங்கண் முடித்தேறிப்
பேருணர்விற் பொலிகின்ற பிள்ளையார் தமைநோக்கி
“யாரளித்த பாலடிசி லுண்டதுநீ?” யெனவெகுளா,

#1971 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 73
“எச்சின்மயங் கிடவுனக்கீ திட்டாரைக் காட்”டென்று
கைச்சிறிய தொருமாறு கொண்டோச்சக், காலெடுத்தே
யச்சிறிய பெருந்தகையா ரானந்தக் கண்டுளிபெய்
துச்சியினி லெடுத்தருளு மொருதிருக்கை விரற்சுட்டி,
(உச்சியினில் —- பாடபேதம் – உச்சியின்மேல்?)

#1972 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 74
விண்ணிறைந்த பெருகொளியால் விளங்குமழ விடைமேலே
பண்ணிறைந்த வருமறைகள் பணிந்தேத்தப் பாவையுடன்
எண்ணிறைந்த கருணையினா னின்றாரை யெதிர்காட்டி
யுண்ணிறைந்து பொழிந்தெழுந்த வுயர்ஞானத் திருமொழியால்,

#1973 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 75
எல்லையிலா மறைமுதன்மெய் யுடனெடுத்த வெழுதுமறை
மல்லனெடுந் தமிழாலிம் மாநிலத்தோர்க் குரைசிறப்பப்
பல்லுயிருங் களிகூரத் தம்பாடல் பரமர்பாற்
செல்லுமுறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து,

#1974 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 76
செம்மைபெற வெடுத்ததிருத் “தோடுடைய செவிய”னெனும்
மெய்ம்மைமொழித் திருப்பதிகம் பிரமபுர மேவினார்
தம்மையடை யாளங்க ளுடன்சாற்றித் தாதையார்க்
“கெம்மையிது செய்தபிரா னிவனன்றே” யெனவிசைத்தார்.
————–

பதிகம் 1.1 – திருப்பிரமபுரம் ( சீகாழி ) ( பண் : நட்டபாடை )

பாடல் எண் : 1
தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 2
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவைபூண்டு
வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்
பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 3
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதிசூடி
ஏர்பரந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிதுவென்னப்
பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 4
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர்கள்வன்
மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 5
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 6
மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்தி
இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 7
சடைமுயங்குபுன லன்அனலன்னெரி வீசிச்சதிர்வெய்த
உடைமுயங்குமர வோடுழிதந்தென துள்ளங்கவர்கள்வன்
கடன்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிறகன்னம்
பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 8
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன்
துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம்
பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 9
தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்
வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 10
புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறிநில்லா
ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பாடல் எண் : 11
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேய
பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன்றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளிதாமே.
——————-

1.1 Padhigam songs 8, 9, 10, 11 – explanation in periyapurANam:

#1975 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 77
மண்ணுலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையிற்
கண்ணுதலான் பெருங்கருணை கைக்கொள்ளு மெனக்காட்ட
எண்ணமிலா வல்லரக்க னெடுத்துமுறிந் திசைபாட
வண்ணலவற் கருள்புரிந்த வாக்கப்பா டருள்செய்தார்.

#1976 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 78
தொழுவார்க்கே யருளுவது சிவபெருமா னெனத்தொழார்
வழுவான மனத்தாலே மாலாய மாலயனும்
இழிவாகுங் கருவிலங்கும் பறவையுமா யெய்தாமை
விழுவார்க ளஞ்செழுத்துந் துதித்துய்ந்த படிவிரித்தார்.

#1977 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 79
வேதகா ரணராய வெண்பிறைசேர் செய்யசடை
நாதர்நெறி யறிந்துய்யார் தம்மிலே, நலங்கொள்ளும்
போதமிலாச் சமண்கையர் புத்தர்வழி பழியாக்கும்
ஏதமே யெனமொழிந்தா ரெங்கள்பிரான் சம்பந்தர்.
(நாதன்நெறி — பாடபேதம் – நாதர்நெறி?)

#1978 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 80
திருப்பதிக நிறைவித்துத் திருக்கடைக்காப் புச்சாத்தி
யிருக்குமொழிப் பிள்ளையா ரெதிர்தொழுது நின்றருள,
வருட்கருணைத் திருவாள னாரருள்கண் டமரரெலாம்
பெருக்கவிசும் பினிலார்த்துப் பிரசமலர் மழைபொழிந்தார்.
============================= ============================

பதம் பிரித்த பின்:

பூழியர்-கோன் வெப்பு ஒழித்த புகலியர்-கோன் கழல் போற்றி;
ஆழிமிசைக் கல்-மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி;
வாழி திரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி;
ஊழி-மலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி – ( உமாபதி சிவம் )

பெறுவது நிச்சயம், அஞ்சல் நெஞ்சே; பிரமா-புரத்து
மறு அறு பொற்கழல் ஞானசம்பந்தனை வாழ்த்துதலால்,
வெறி உறு கொன்றை, மறி உறு செங்கை, விடை எடுத்த
பொறி உறு பொற்கொடி எம்பெருமான் அமர் பொன்-உலகே. – (ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி)

————

#1970 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 72
சீர்மறையோர் சிவ-பாத இருதயரும் சிறு-பொழுதில்
நீர் மருவித் தாம் செய்யும் நியமங்கள் முடித்து ஏறிப்,
பேர்-உணர்வில் பொலிகின்ற பிள்ளையார்-தமை நோக்கி
“யார் அளித்த பால்-அடிசில் உண்டது நீ?” என வெகுளா,

#1971 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 73
“எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரைக் காட்டு” என்று
கைச் சிறியது ஒரு மாறு கொண்டு ஓச்சக், கால் எடுத்தே
அச்சிறிய பெருந்தகையார் ஆனந்தக் கண்-துளி பெய்து
உச்சியினில் எடுத்தருளும் ஒரு திருக்-கைவிரல் சுட்டி,
(உச்சியினில் —- பாடபேதம் – உச்சியின்மேல்?)

#1972 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 74
விண் நிறைந்த பெருகு-ஒளியால் விளங்கு மழ-விடைமேலே,
பண் நிறைந்த அருமறைகள் பணிந்து ஏத்தப், பாவையுடன்
எண் நிறைந்த கருணையினால் நின்றாரை எதிர் காட்டி,
உள் நிறைந்து பொழிந்து எழுந்த உயர்-ஞானத் திரு-மொழியால்,

#1973 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 75
எல்லை இலா மறை-முதல்-மெய்யுடன் எடுத்த, எழுது-மறை
மல்லல் நெடும் தமிழால், இம்-மாநிலத்தோர்க்கு உரை சிறப்பப்,
பல்-உயிரும் களி-கூரத், தம் பாடல் பரமர்பால்
செல்லும் முறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து,
[செல்லுமுரை (செல்லும் உரை) —- பாடபேதம் – செல்லுமுறை (செல்லும் முறை) ]

#1974 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 76
செம்மை பெற எடுத்த திருத் “தோடுடைய செவியன்” எனும்
மெய்ம்மை-மொழித் திருப்பதிகம் பிரம-புரம் மேவினார்
தம்மை அடையாளங்களுடன் சாற்றித், தாதையார்க்கு
“எம்மை இது செய்த பிரான் இவன் அன்றே” என இசைத்தார்.

பதிகம் 1.1 – திருப்பிரமபுரம் ( சீகாழி ) ( பண் : நட்டபாடை )

பாடல் எண் : 1
தோடு உடைய செவியன், விடையேறி, ஓர் தூ-வெண்-மதிசூடிக்
காடு உடைய சுடலைப்-பொடி-பூசி, என் உள்ளம் கவர்-கள்வன்,
ஏடு உடைய மலரான் முனை-நாள் பணிந்து ஏத்த அருள்-செய்த
பீடு உடைய பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 2
முற்றல் ஆமை, இள நாகமோடு, ஏன முளைக்-கொம்பு அவை பூண்டு
வற்றல் ஓடு கலனாப் பலி-தேர்ந்து எனது உள்ளம் கவர்-கள்வன்,
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்தப்,
பெற்றம் ஊர்ந்த பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 3
நீர் பரந்த நிமிர்-புன்-சடைமேல் ஓர் நிலா-வெண்-மதி சூடி,
ஏர் பரந்த இன-வெள்-வளை சோர என் உள்ளம் கவர்-கள்வன்,
ஊர் பரந்த உலகில் முதல் ஆகிய ஓர் ஊர் இது என்னப்
பேர் பரந்த பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 4
விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி, விளங்கு தலை-ஓட்டில்
உண் மகிழ்ந்து பலி தேரிய வந்து எனது உள்ளம் கவர்-கள்வன்,
மண் மகிழ்ந்த அரவம் மலர்க்-கொன்றை மலிந்த வரை-மார்பில்
பெண் மகிழ்ந்த பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 5
ஒருமை பெண்மை உடையன், சடையன், விடை ஊரும் இவன் என்ன
அருமையாக உரை செய்ய அமர்ந்து எனது உள்ளம் கவர்-கள்வன்,
கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்தது ஒர் காலம் இது என்னப்
பெருமை பெற்ற பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 6
மறை கலந்த ஒலி பாடலோடு ஆடலர் ஆகி, மழு ஏந்தி,
இறை கலந்த இன-வெள்-வளை சோர என் உள்ளம் கவர்-கள்வன்,
கறை கலந்த கடி-ஆர்-பொழில் நீடு-உயர்-சோலைக் கதிர் சிந்து-அப்
பிறை கலந்த பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 7
சடை முயங்கு புனலன், அனலன், எரி வீசிச் சதிர்வு எய்த
உடை முயங்கும் அரவோடு உழி-தந்து எனது உள்ளம் கவர்-கள்வன்
கடல் முயங்கு கழி-சூழ் குளிர்-கானல்-அம், பொன்னஞ்-சிறகு அன்னம்
பெடை முயங்கு பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 8
வியர் இலங்கு வரை உந்திய தோள்களை வீரம் விளைவித்த
உயர் இலங்கை அரையன் வலி செற்றெனது உள்ளம் கவர்-கள்வன்
துயர் இலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும்பொழுது எல்லாம்
பெயர் இலங்கு பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 9
தாள்-நுதல் செய்து இறை காணிய மாலொடு தண்-தாமரையானும்
நீணுதல் செய்து ஒழியந் நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர்-கள்வன்
வாள்-நுதல் செய் மகளீர் முதலாகிய வையத்தவர் ஏத்தப்
பேணுதல்-செய் பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 10
புத்தரோடு பொறி-இல் சமணும் புறம் கூற நெறி நில்லா
ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர்-கள்வன்
மத்த-யானை மறுக(வ்) உரி போர்த்தது ஓர் மாயம் இது என்னப்
பித்தர் போலும் பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

பாடல் எண் : 11
அரு-நெறிய மறை வல்ல முனி அகன் பொய்கை அலர் மேய
பெரு-நெறிய பிரமா-புரம் மேவிய பெம்மான் இவன்-தன்னை
ஒரு நெறிய மனம் வைத்து உணர் ஞானசம்பந்தன் உரைசெய்த
திரு-நெறிய தமிழ் வல்லவர் தொல்-வினை தீர்தல் எளிது ஆமே.

——————-

1.1 Padhigam songs 8, 9, 10, 11 – explanation in periyapurANam:

#1975 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 77
மண்-உலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்து அடையில்,
கண்-நுதலான் பெரும் கருணை கைக்கொள்ளும் எனக் காட்ட,
எண்ணம் இலா வல்-அரக்கன் எடுத்து முறிந்து இசை-பாட,
அண்ணல் அவற்கு அருள்-புரிந்த ஆக்கப்பாடு அருள்-செய்தார்.

#1976 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 78
தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத் தொழார்
வழு-ஆன மனத்தாலே மால்-ஆய மால் அயனும்
இழிவு ஆகும் கரு-விலங்கும் பறவையும் ஆய் எய்தாமை
விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்து உய்ந்தபடி விரித்தார்.

#1977 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 79
வேத-காரணர் ஆய வெண்-பிறை-சேர் செய்ய-சடை
நாதர்-நெறி அறிந்து உய்யார் தம்மிலே, நலங்கொள்ளும்
போதம் இலாச் சமண்-கையர் புத்தர்-வழி பழி ஆக்கும்
ஏதமே என மொழிந்தார் எங்கள் பிரான் சம்பந்தர்.
(நாதன்நெறி — பாடபேதம் – நாதர்நெறி?)

#1978 – பெரிய புராணம் – திருஞானசம்பந்தர் புராணம் – 80
திருப்-பதிகம் நிறைவித்துத் திருக்-கடைக்காப்புச் சாத்தி
இருக்கு-மொழிப் பிள்ளையார் எதிர்-தொழுது நின்று-அருள,
அருட்கருணைத் திருவாளன் ஆர்-அருள் கண்டு அமரர் எலாம்
பெருக்க விசும்பினில் ஆர்த்துப் பிரச-மலர்-மழை பொழிந்தார்.

Please rate this

சிவாலயம் தரிசனம் செய்யும் முறை 4/5 (2)

சிவாலய தரிசன முறை

முதலும் முடிவும் இல்லாத சிவபெருமானார் புறத்தே திருக்கோவில்களில் இருக்கும் சிவலிங்கம் முதலிய திருமேனிகளிலும், தமது மெய்யடியாருடைய திருவேடத்தை ஆதாரமாகக் கொண்டும் சிவவழிபாடு செய்பவர் வழிபாட்டை ஏற்றுக்கொண்டும் அருளுவார். நித்தமும் சிவாலயம் சென்று வழிபடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுதல் வாழ்வில் பேரின்பத்தைத் தரும். அத்தகைய சிவாலயத்தை தரிசனம் செய்யும் முறையாவது யாது ?

1.  திருக்கோவில் திருக்குள தீர்த்தத்தில் நீராடி, உலர்ந்த சுத்தமான ஆடை தரித்து, விபூதி தரித்து செல்ல வேண்டும். சுவாமி அபிஷேக தீர்தத்ங்கள் கோவில் குளத்தை அடைந்து அதில் உடலுக்கு நன்மை தரும் நுண்ணுயிர்கள் வளர்ந்து நம் உடலுக்கு நல்ல ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தரும். இதனால் திருக்கோவில் குளத்தில் நீராடல் வேண்டும்.
2. ஒரு பாத்திரத்திலே, தேங்காய், பழம், பாக்கு வெற்றிலை, மலர்கள் வைத்து இடுப்புக்கு மேலே உயர்த்தி ஏந்தி செல்ல வேண்டும். பொருள் இல்லாதவர் சிவாலயத்தை பெருக்கி வணங்க வேண்டும்.
3. கோபுரத்தை இரு கைகளாலும் சிரசில் வைத்து வணங்கி, பலிபீடத்தை அடைய வேண்டும்.

4. பலிபீடத்தில் அனைத்து கெட்ட எண்ணங்களையும் பலியிட்டு மனத்தை சுத்தமாக வைத்தல் வேண்டும். ஆடவர் அட்டாங்க வணக்கமும், பெண்கள் பஞ்சாங்க வணக்கமும் செய்யவேண்டும். அட்டாங்க வணக்கம்: தலை, கையிரண்டு, செவியிரண்டு, மோவாய், பயங்களிரண்டுமாகிய எட்டு உறுப்புகளும் நிலத்தில் தோயும்படி வணங்குதல். பஞ்சாங்க வணக்கம்: தலை, கையிரண்டு, முழந்தாளிரண்டு என்னும் ஐந்து உறுப்புகளும் நிலத்தில் தோயும் படி வணங்குதல். திரயாங்க வணக்கம்: சிரசில் இரு கைகளையும் குவித்தல். வணக்கம் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பன்னிரண்டு தரமாயினும் செய்ய வேண்டும். ஒரு தரம் இரு தரம் பண்ணுதல் குற்றம். நமஸ்காரம் செய்யும் போது மேற்கேயாயினும், தெற்கேயாயினும் கால் நீட்டல் வேண்டும்.
5. நமஸ்காரம் செய்துவிட்டு, சிவபெருமானை சிந்தையில் வைத்து பஞ்சாட்சர செபம் செய்து கொண்டே, இரு கைகளை இருதயத்தில் வைத்துக் கொண்டு, பூமியைப் பார்த்து கால்களை அடிமேல் அடி வைத்து வலம் வர வேண்டும். (வலம் – பிரதஷிணம்). 3, 5, 7, 9, 15 அல்லது 21 முறை வலம் வரல் வேண்டும். வலம் வரும் போது, பலிபீடத்தையும், இடபத்தையும் சேர்த்து வலம் வர வேண்டும்.
6. வலம் முடித்து, துவாரபாலகரையும், திருநந்திதேவரையும் வணங்கி, “பகவானே, உம்முடைய திருவடிகளை அடைந்த அடையேன் உள்ளே புகுந்து சிவபெருமானைத் தரிசித்து பயன்பெறும்பொருட்டு அனுமதி செய்தருளும்” என்று வணங்கி உள்ளே செல்ல வேண்டும்.
7. விநாயகர் சந்நிதி அடைந்து, கைகூப்பி தியானித்து, முட்டியாக பிடித்த இரு கைகளினால், நெற்றியிலே மும்முறை குட்டி, வலக்காதை இடக்கையாலும், இடக்காதை வலக்கையாலும் பிடித்து மும்முறை தாழ்ந்தெழுந்து தோத்திரம் செய்ய வேண்டும்.
8. இரு கைகளையும் சிரசிலே குவித்து சிவபெருமான் சந்நிதி அடைந்து, அவரை தரிசித்து, மனதிலே தியானித்து, மனங்கசிந்துருக உரோமம் சிலிர்ப்ப ஆனந்த அருவி சொரிய, பண்ணோடு தோத்திரங்களை சொல்லக் கடவர். உத்தமோத்தமமாகிய தோத்திரங்கள் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய புராணம் என்னும் ஐந்துமாம்.
9. பூசகர் கொண்டு வில்வத்தினாலே அருச்சனை செய்து, சுத்திசெய்யப்பட்ட பழம் முதலியவற்றை நிவேதித்து கர்ப்பூராராத்திரிகம், பணிமாறப்பண்ணி, பூசகருக்கு இயன்ற தஷிணை கொடுக்க கடவர்.
10. பின்பு, சபாபதி, தஷிணாமூர்த்தி, சந்திரசேகரர், சுப்பிரமணியர் ஆகியோரையும், சமயகுரவர் நால்வரையும் தரிசித்து வணங்கி துதிக்கக்கடவர்.
11. பார்வதி தேவியாருடைய சந்நிதி அடைந்து , சிரசிலும், இருதயத்திலும் அஞ்சலி செய்து அருச்சனை செய்து, தோத்திரங்களை சொல்லக்கடவர்.
12. பின்பு, விபூதி பிரசாதம் வாங்கி தரித்துக் கொண்டு, சண்டேசுவரர் சன்னதியை அடைந்து தோத்திரம் செய்து, சிவதரிசன பலத்தை தரும் பொருட்டு பிரார்த்திக்க கடவர்.
13. பின்னர், நந்திதேவரை அடைந்து வணங்கி துதித்து, பலிபீடத்துக்கு இப்பால் மும்முறை நமஸ்கரித்து சிவபெருமானை தியானித்து, பஞ்சாட்சரத்தில் இயன்ற உருச் செபித்து எழுந்து வீட்டுக்குப் போகக்கடவர். .

ஆலயம் தொழுவது சாலவும் நன்று -ஔவையார்.

திருச்சிற்றம்பலம்.

Please rate this

சைவ வணிகர்கள் இன்று செய்ய வேண்டியது யாது ? 5/5 (3)

சைவ வணிகர்கள் இன்று செய்ய வேண்டியது யாது ?

1. உங்கள் கடைகளிலும் அலுவலகங்களிலும் திருநீறும் குங்குமமும் எப்போதும் ஒரு பெரிய சம்புடத்தில் கல்லா பெட்டி அருகேயோ, வரவேற்பறை மேசை மீதோ (Reception Table) வைத்திருங்கள். 7, 5 நட்சத்திர ஓட்டல்களிலேயே வைத்திருக்கிறார்கள். நீறு பூசும் வாடிக்கையாளர்களை நீறு எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். இன்று பல்வேறு ஓட்டல்களில் இந்த முறை ஏற்கனவே உள்ளது. இது போல் உங்கள் அலுவலகங்களிலும் வைத்துவிடுங்கள். வைக்க முயற்சி மேற்கொள்ளுங்கள். நீங்கள் அமர்ந்து தொழில் செய்யும் மேசையிலும் திருநீறும் குங்குமும் வைத்துக் கொள்ளுங்கள். பலரை அவ்வப்போது அணிய அன்போடு கூறுங்கள்.

2. உங்கள் கடைகளின் பெயரைக் கட்டாயமாக தமிழில் மிகப் பெரியதாகவும், ஆங்கிலத்தை தவிர்க்க முடியாவிட்டால், ஆங்கிலத்தில் சிறியதாகவும் எழுதி வையுங்கள்.

3. கடைகளுக்குப் பெயர் சூட்டும் போது, நம் பாரம்பரிய பெயர்களைத் தேர்ந்தெடுத்து பெயர் சூட்டுங்கள். திருநாவுக்கரசு, மங்கையற்கரசி, திலகவதியார், மணிவாசகர் போன்று 63 நாயன்மார்கள் பெயர்களை எங்கும் எதற்கும் பயன்படுத்துங்கள். என் hard disk பெயர் முதல் பாஸ்வேர்டுகள் வரை நாயன்மார் பெயர்களைப் பயன்படுத்துகிறேன்.
சைவ வணிகர்கள் செய்ய வேண்டியது

4. உங்கள் நிறுவனம் வெளியிடும் பொருட்களில் (products) தெய்வத் தமிழில் பெயரை எழுதியும், திருக்குறள் அல்லது சைவ வாசகங்கள் பொறித்தும் வெளியிடுங்கள். வெளியிட முயற்சி மேற்கொள்ளுங்கள். இன்று இல்லாவிடில் இன்னொரு நாள் அது கட்டாயம் நிறைவேறும்.

5. சைவ சமய அடிப்படை புத்தகங்கள், பஞ்சபுராண பாடல்கள் அடங்கிய சிறு சிறு புத்தகங்களை உங்கள் கடைகளில் வைத்திருந்து வாடிக்கையாளர்களுக்குக் கொடுங்கள். ஒரு மாதத்திற்கு 100 புத்தகம் இலவசமாக கொடுக்கலாம். நிறைய பொருட்கள் வாங்குபவர்களுக்கு இந்த புத்தகத்தை இலவசமாக கொடுக்கலாம்.

6. கடைகளில் நால்வர் படமும், சைவ வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளும் ஆங்காங்கே ஒட்டி வையுங்கள். கருப்பு பலகை ஒன்று வாங்கி, அதில் தினமும் திருக்குறளும், திருமந்திரம் போன்ற செய்யுள்களும் எழுதி வைக்கலாம். வரும் நாட்கள் வாரங்களில் உங்கள் ஊரில் நடைபெற உள்ள ஆன்மீக நிகழ்வுகள் பற்றிய செய்திகளையும் தவறாமல் எழுதி வையுங்கள். இதைப் பற்றி வாடிக்கையாளர்களிடமும் பேசுங்கள். நீங்கள் பேசுவதை நான்கு பேர் கவனித்து அவர்களுக்கும் போய்ச் சேரும்.

7. கணிணி, கைபேசி போன்ற பொருட்களின் கடைகளில் பணி புரிபவர்கள், கைபேசியை முழுவதுமாக தமிழில் எப்படி பயன்படுத்துவது (Choosing operating language as TAMIL) என்பதை வரும் வாசகர்கள் அனைவரிடமும் விளக்கிக் கூறுங்கள். சைவ சம்பந்த இணைய முகவரிகள், செயலிகள் (app) போன்றவற்றையும் அறிமுகம் செய்து வையுங்கள். வரும் காலங்களில் தமிழும் சைவமும் வாழ, சந்தைக்கு புதிதாக வரும் அனைத்து பொருட்களிலும் தமிழும் சைவமும் இடம்பெற வேண்டும். இது மிகவும் முக்கியமானது. இதற்கான ஒவ்வொரு முயற்சியையும் நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். தூங்கியது போதும். தயங்கியதும் போதும். கேள்வி கேளுங்கள். கேட்டு வாங்குங்கள். தமிழையும் சைவத்திற்கும் உயர்ந்த இடத்தை அளியுங்கள். கேட்காவிட்டால் கிடைக்கவே கிடைக்காது.

8. இன்னும் பல வழிமுறைகளை உங்கள் கடை / அலுவலக அமைப்பிற்கு ஏற்ப, உங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நீங்களே சிந்தித்து, திட்டமிட்டு நடைமுறைப்படுத்துங்கள். அடியவர்களின் குறைகளைப் போக்க சிவபெருமான் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதால், உங்களுக்கு அவரின் திருவருள் எப்போதும் கண்டிப்பாக உண்டு.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

திருமுறை ஓதுவோம். திருமுறை ஓதுவிப்போம்.

Please rate this

மாகேசுரர்கள் யார் ? மாகேசுர பூசை என்றால் என்ன ? 4.75/5 (4)

சிவமயம்

மாகேசுர பூசை என்றால் என்ன ?

மாகேசுர பூசை – பெயர் விளக்கம்
ஈஸ்வரன் என்றால் உடையவன் என்று பொருள். முடிவில்லாத மகா அண்டத்தை உடையவனை மகேஸ்வரன் என்கிறோம். மகேஸ்வரனுக்கு செய்யும் பூசை மகேஸ்வர பூசை. ஆதியும் அந்தமும் அற்ற அந்த மகேஸ்வரனோ, அவனுடைய தொண்டர்களின் உள்ளத்துள் ஒடுக்கம் என்கிறார் ஔவையார். இந்த தொண்டர்கள் மாகேசுரர் எனப்படுவர். அத்தகைய பெருமை உடைய மாகேசுரர்களுக்கு செய்யும் பூசை மாகேசுர பூசை.

மாகேசுர பூசையின் பெருமை
புண்ணியங்களுள் சிறந்தது சிவபுண்ணியமாகும். அந்த சிவபுண்ணியத்துள்ளும் சிவபூசை மிகவும் சிறந்ததாகும். அந்த சிவபூசையிலும் சிறந்தது மாகேசுர பூசை.
மாகேசுர பூசை எப்படி செய்யப்படுகிறது ?
மாகேசுர பூசையாவது, மாகேசுரர்களை விதிப்படி பூசித்து அவர்களுக்கு அன்னம் ஊட்டுதலாகும். மாகேசுரர்களை தூரத்தே கண்டவுன், அவர்களது சாதி, குலத்தை ஆராயாமல், ஏழை செல்வந்தர் என்றும் பாராமல், திருநீறும், கண்டமணியும் அணிந்திருக்கும் அந்த அடியவர்களை, மனிதர் என்றும் எண்ணாமல், சிவபெருமானே வந்திருப்பதாக எண்ணி உபசரிக்க வேண்டும். சிவவேடமே சிவனாக கொள்ளவேண்டும். சிவனின் மீது இருக்கும் அன்பினாலும், அவன் அடியவர்களின் மீது இருக்கும் அன்பினாலும், தம் இருப்பிடத்தை விட்டு எழுந்து, அகமகிழ்வோடும் முகமலர்ச்சியோடும், தம் கைகளைக் குவித்து அவர்களை எதிர்கொள்ள வேண்டும். அவர்கள் அருகில் சென்றபின், அவர்களின் திருவடிகளில் விழுந்து வணங்கி, இனிமையான சொற்களைப் பேசி வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அவர்களை வசதியான இடத்தில் அமரச் செய்து, பூசை செய்ய உகந்த கரகநீரைக் கொண்டு அவர்களின் திருவடிகளை விளக்க வேண்டும். அந்த நீரை தீர்த்தமாக எண்ணி, நம் தலையில் தெளித்து, உள்ளும் பருக வேண்டும். பின்னர், மெல்லிய சுத்தமான ஆடையினால் அவர்களின் திருவடிகளை ஒற்றி உலர்த்த வேண்டும். பின்னர் அவர்களை பூசை செய்வதற்கு உகந்த மலர்களால் பூசித்து, தூபதீபம் காட்டி, பூமியில் விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். கைப்பு, புளிப்பு, தித்திப்பு, துவர்ப்பு, கார்ப்பு, மற்றும் உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவையை உடைய உணவை, உண்ணப்படுவது, தின்னப்படுவது, நக்கப்படுவது, பருகப்படுவது என நால்வகைப்படும் உணவுகளை, அவரவர் வசதிப்படி அமுது செய்விக்க வேண்டும். நான் மனித பிறவி பெற்ற பயனை இன்றல்லவோ பெற்றேன் என்று அவர்களிடம் மனமகிழ்வோடு கூற வேண்டும்.  சிவதருமோத்தரம், “புலையரே யெனினுமீசன் பொலன்கழ லடியிற் புந்தி நிலையரே லவர்க்குப் பூசை நிகழ்த்துத தாளி னேச மிலரெனி லியற்றும் பூசைப் பலந்தரு வாரே யாரே.” அவர்கள் விடைபெற்று போகும் போது, அவர்களோடு கூடவே பதினான்கு அடி சென்று வழியேற்றிவிட வேண்டும்.

இத்தனை பெரும் சிறப்பு பெற்றது மாகேசுர பூசை. இந்த மாகேசுர பூசையை தினம் தோறும் தவறாது, சைவ ஆகம விதிப்படி, உண்மையான உள்ள அன்போடு செய்து சிறப்புப் பெற்றவர் இளையான்குடிமாற நாயனார். தினமும் மாகேசுர பூசை செய்ததினாலே, தன்னுடைய எல்லையில்லாத பெருஞ்செல்வம் குறைந்து வறுமையில் வாடிய போதும், இவர்புண்ணியம் செய்த நமக்கு கடவுள் இவ்வளவு இடர் செய்கிறாரேஎன்று சிவனை  சிறிதும் நோகாமல் தொடர்ந்து மாகேசுர பூசை செய்து வரலானார். இவர்களின் மேலான தவத்தை உலகறிய செய்யவே, பரமசிவனார் இவர்கட்கு வறுமை அருளினார். பின்னர் இவர்கட்கு பேரின்ப வாழ்வைக் கொடுத்தருளிய பெருங்கருணையாளன் சிவபெருமான்.

உருத்திராக்கங்களை பல்வேறு அபிசேடங்கள் செய்து அதை இறைவனுக்கு ஆவாகனம் செய்யும் போது, சிவபெருமானே அதை ஏற்றுக்கொண்டு தன் அருளை வழங்குகிறார்.

அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே.

மாகேசுர பூசையின் பெருமை

Please rate this

உழவாரப்பணியின் மகிமை 5/5 (3)

சிவமயம்

உழவாரத் திருப்பணியின் மகிமை அறிவோம். உழவாரம் செய்வோம்.

ஓர் ஊரில், வட்டிக்கு பணம் கொடுத்தும், அநியாய வட்டி வசூலித்தும், வட்டி தராதவர்களை அவமானப்படுத்தியும் ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான். இதனால், அவன் பலரின் சாபத்திற்கு ஆளானான். கோவிலுக்கு அவன் அடிக்கடி சென்று வந்தாலும், அவனுக்கு அவன் செல்வத்தின் காரணமாக மதிப்பும் மரியாதையும் கிடைத்தது.  இந்நிலையில் கர்ப்பமுற்றிருந்த அவன் மனைவிக்கு குழந்தை பிறக்கும் தருணம் வந்தது. மனைவிக்குப் பிரசவ வலி வந்த செய்தியைக் கேட்டு, கடையிலிருந்து வீடு நோக்கி சென்றான். செல்லும் வழியில் சிவாலயம் ஒன்று குடமுழுக்கிற்காக திருப்பணி நடந்து கொண்டிருந்தது. சிலர் கோவிலை பெருக்கி சுத்தம் செய்தனர். சிலர் தோரணம் கட்டினர். சிலர் விளக்குகள் அமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏணியில் நின்றபடி மதில் சுவற்றுக்கு ஒருவர் வெள்ளையடித்துக் கொண்டிருந்தார். அவரது சுண்ணாம்பு மட்டை கீழே விழுந்து விட, அவ்வழியாக சென்ற செல்வந்தரைப் பார்த்து, ஐயா தர்மப்பிரபு தயவு கூர்ந்து அந்த மட்டையை எடுத்துக் கொடுங்களேன் என்று கேட்க, தர்மப்பிரபு என்ற வார்த்தையில் மயங்கியவன், மட்டையை எடுத்து ஏணியில் சிறிது படிகள் ஏறி அந்த மட்டையை கொடுத்துவிட்டு சென்றான்.

இவன் செய்த பாவங்களின் பலனாக, இவன் குழந்தை பிறக்கும் தருவாயில் இறந்து போய், இவனுக்கு குலம் தழைக்காது போவதே விதியாக இருந்தது. எம தூதர்கள் இவன் இல்லம் அடைந்து பாசக்கயிற்றை வீச தயாரானார்கள். திடீரென்று சிவலோகத்திலிருந்து இரு பூதகணங்கள் தோன்றி, எமதூதர்களை தடுத்தனர். குடமுழுக்கிற்காக தயாராகும் சிவாலயத்தில், அடியவர் ஒருவருக்கு இவர் சிறு உதவி செய்த காரணத்தால், அந்த புண்ணியத்தில் லட்சத்தில் ஒரு பங்கு இவருக்கு சேர்ந்துவிட்டது. ஆகவே, இவரது குழந்தையின் உயிரை கவரக்கூடாது என்பது ஈசனின் ஆணை என்றனர். மேலும் சுகப்பிரசவத்திற்கு வேண்டியவற்றை செய்ய எம்பெருமான் கட்டளையிட்டுள்ளார். ஆகவே திரும்பி செல்லுங்கள் என்று எமதூதர்களை திருப்பி அனுப்பி விட்டனர் சிவகணங்கள். தன் குழந்தைக்கு நிகழவிருந்த ஆபத்தையும், தன் உதவியினால் அது விலகியதையும் ஜோதிடர் மூலம் அறிந்து கொண்ட செல்வந்தன் திருந்தி கோவில்களுக்கு திருப்பணிகள் செய்து வரலானான். கோவிலை சுண்ணம் அடித்து கொண்டிருந்தவர்களுக்கு மட்டையை எடுத்து கொடுத்ததற்கே இவன் இப்பலனை அடைந்தால், அவன் ஆலயத்தில் உழவாரப்பணி செய்பவர்களுக்கு எத்தகைய புண்ணியம் கிடைக்கும் என்பதை பாருங்கள். ஆனால், நாம் இந்த உழவாரத் திருப்பணியை, கிடைக்க போகும் புண்ணியத்திற்காக அல்ல, அவன் மீது வைத்திருக்கும் எல்லையற்ற அன்பினால் செய்ய வேண்டும்.

கருணையே உருவான இறைவன் இவ்வுடம்பு, நல்ல மனம், புத்தி, சித்தி, அகங்காரம், உலகம், கணவன், மனைவி, மக்கள், பெற்றோர், வீடு, வாசல், பொன், பொருள் என்று நாம் கேட்காமலேயே நமக்கு அருளியிருக்கிறார். இதற்காக நாம் அவரிடத்தில் மிகுந்த அன்பு கொண்டு தொண்டு புரியவேண்டும். இறைவனை உணர்ந்து, அவரோடு உறவை ஏற்படுத்தி, பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளாக, சைவ சமயம் சீலம், நோன்பு, செறிவு, அறிவு (சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்று நான்கு வழிகளை குறிப்பிடுகிறது. நம் தாய் தந்தை சகோதரர்களிடம் அன்பு செலுத்துவதைப் போல, இறைவனிடமும் ஆழ்ந்த அன்பு செலுத்தவேண்டும். அந்த அன்பை நாம் மேற்கூறிய வழிகளில் வெளிப்படுத்தலாம். இதில் மிகவும் எளிதானது சீலம் என்ற இறைத் தொண்டு புரிவதே. இறைவன் உறையும் வீடாகிய திருக்கோவில்களில் நீரும், பூவும், பாமாலையும் சாற்றி வழிபடுதல், கோவில்களை தூய்மை செய்தல், அலங்கரித்தல், கோலமிடுதல், விளக்கேற்றுதல், பூச்செடிகள் நட்டு வளர்த்தல், மலர் பறித்தல், திருமுறைகளை ஓதுதல், எழுதுதல், மாலை கட்டுதல், நீர் சுமந்து கொடுத்தல், பூந்தோட்டம் அமைத்தல், குளம் அமைத்து கொடுத்தல், சந்தனம் அரைத்தல், கோவில் திருவுருவங்களை துலக்குதல், ஊதுபத்தி ஏற்றுதல், திருப்பணிகளுக்கு நிதியுதவி செய்தல், பல்லக்கு சுமத்தல், வடம் பிடித்தல், தீவட்டி ஏந்துதல், பழமையான கோவில்களை புதுப்பித்தல், பூசை பொருட்கள் வாங்கித் தருதல், பூசை செலவுகளை ஏற்றல், அன்னதானம் வழங்குதல், பரிமாற உதவிடல், திருநீறு அணிதல், கண்டமணி (உருத்திராக்கம்) அணிதல், சிவநாமம் சொல்லல், பிறரையும் இத்தொண்டு செய்ய ஊக்குவித்தல் போன்று எண்ணற்ற தொண்டுகளை புரிந்து வரலாம். ஏதாவது ஒரு குறிப்பிட்ட தொண்டை தொடர்ந்து வழுவாமல் செய்து வருவது சிறப்பு. இன்றைய தினங்களில் மாதம் ஒரு முறை அல்லது இருமுறை ஏதாவது ஒரு சிவாயத்திற்கு சென்று உழவாரப் பணி மேற்கொள்ளலாம். 200 அல்லது 300 பேர் கொண்ட பெரிய குழுவாக இணைந்து செய்தால் எத்தகைய பணியினையும் விரைந்து செய்ய இயலும். பழைய கோவில்களை ஆகம விதிப்படி புதுப்பித்தலுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். 63 நாயன்மார்கள் யாவரும் இது போன்ற தொண்டுகளை வழுவாமல் பற்றி செய்து வந்தவர்களே. நாயன்மார்களின் வரலாற்றை அறிந்து யாவருக்கும் உரைப்பதும் ஒரு தொண்டு. உழவாரப்பணி என்றாலே நம் நினைவுக்கு வருவது உழவாரப் படை ஏந்திய திருநாவுக்கரசர் பெருமான். சமண சமயத்தால் பூசையின்றி இருந்த சிவாயலங்களுக்கு உழவாரப் பணி செய்தார். இவருக்கு உழவாரப் பணி செய்ய வேண்டுகோள் விடுத்து முன்னோடியாக இருந்தவர் இவர் சகோதரி திலகவதியார். இவர்கள் வரலாற்றை அறிவோம்.

உழவாரத் திருப்பணியின் மகிமைகள்

இறைவனுக்கு செய்யும் தொண்டினால் வரும் மனநிறைவு பேரின்பம். இந்த பேரின்பத்தை அனுபவித்தவரிடம் கேட்டு பாருங்கள். இந்த தொண்டு இறைவனோடு உங்களைப் பிணைக்கும் மிக வலுவான பாலமாக அமையும். இந்த தொண்டிற்கு ஈடு இணை இவ்வுலகில் ஏதுமில்லை. பலனை எதிர்பாராமல், உள்ளன்போடு செய்யும் தொண்டினை ஏற்கும் இறைவன், உங்களை ஒரு குறையும் வராமல், நல்வழியில் நடத்தி செல்வார். என் கடன் பணி செய்து கிடப்பதே.

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும், யாவருக்கும் அச்சிட்டு வழங்கக்கூடிய ஒரு பக்க அளவிலான உழவாரப் பணியின் மகிமை பேசும் இந்த கட்டுரையை நீங்களும் பதிவிறக்கம் செய்து, 100, 1000 என அச்சிட்டு வழங்கலாம். இந்த கட்டுரையை நம் வலைதளத்தின் பதிவிறக்கம் பகுதியிலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.

உழவாரத் திருப்பணியின் மகிமைகள்
Jpeg

Please rate this

மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் 5/5 (5)

சிவமயம்
திருச்சிற்றம்பலம்
மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம்

பன்னிரு திருமுறையில் சிவபுராணம்

தமிழின் தொடக்க கால இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள், பதினெட்டு மேல்தொகை, பதினெட்டு கீழ்த்தொகை என தொகுக்கப் பெற்றன. அவை சமுதாயம் பற்றியும் அறம் பற்றியும் கூறும் நூல்கள். பக்தி இலக்கியம் அகநிலை இலக்கியம். பன்னிரு திருமுறையே தமிழ் வேதம். பன்னிரு திருமுறையில் முதல் மூன்று திருஞானசம்பந்தர் அருளியது. 4, 5, 6 அப்பர் என்ற திருநாவுக்கரசர் அருளியது. சுந்தரர் அருளிய தேவாரம் 7 ம் திருமுறையாகும். எட்டாவது மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம். ஒன்பதாவது திருவிசைப்பா. திருமந்திரம் பத்தாவது திருமுறை. 40 பிரபந்தங்கள் பதினோராம் திருமுறை. திருத்தொண்டர் புராணம் என்ற பெரியபுராணம் 12வது திருமுறை. 8 வது திருமுறையான மாணிக்கவாசக பெருமான் அருளிய திருவாசகத்தில் முதல் பகுதி 95 வரிகள் கொண்ட சிவபுராணம். சிவபுராணம் திருப்பெருந்துறையில் மாணிக்கவாசக பெருமான் அருளியது. இறைவன் அந்தணர் வேடத்தில் வந்து மாணிக்கவாசகர் பாட, இறைவனே தன் கரம் வருந்த எழுதிய நூல் திருவாசகம். அத்தகைய எல்லையில்லா பெருமை உடையவர் மாணிக்கவாசகர் சுவாமிகள்.

பொங்கிவழிகிறது சிவன் அருள்

ஓம் நமசிவாய. இடைவிடாது சூரியனை சுழன்று கொண்டிருக்கும் இந்த பூமி, இறைவனின் அருள் பெற்றது. அவன் அருளினாலே நீரும் நிலமும் உருவாகி  பல்வேறு உயிரினங்களுக்கும் இடம் கொடுத்து வாழவைத்து வருகிறது. படைத்தவனைப் பற்றிய நெடிய சிந்தனை பெற்று, அவனை அறிய பல்வேறு முயற்சி செய்து, அவனை உணர்ந்து, அவனைப் போற்றி, அவனை சரணடைந்து, அவன் அருள் பெற்று, அவன் திருவடி சேர்ந்தவர் பலர். அவனை அறிந்தவர் பலர். அவனை உணர்ந்தவர் பலர். அவன் திருவடி சேர்ந்தவர் பலர் பலர். அவனின் அருள்பெற்று இப்புவியிலேயே மிகச்சிறந்த அறிவுள்ளவர்களாக திகழ்ந்தவர்கள் இப்பாரத பூமியில் வாழ்ந்தவர்கள். இன்று உலகில் பலநாட்டினர் தம்மைத் தாமே தலை சிறந்த அறிவாளிகள் என்று கூறுபவர்கள் உள்ளார்கள். ஆனால், அவர்களில் பாரதமக்கள் பெற்றிருந்த அறிவில் சிறு பகுதியையேனும் எட்டிப்பிடித்தவர் எவரும் இலர், இன்று வரை. இறை தேடலிலே நுண்ணிய ஆராய்ச்சி செய்து பல நுணுக்கங்களை உணர்ந்திருந்தவர் நம் முன்னோர்கள். இதில் இறைவனை அறியும் நுட்பம் முதல், நோய் வரும் முன்னர் தடுத்திடும் செய்முறை வரை, நாம் அன்றாடம் செய்யும் வேலைகளிலும், உணவுகளிலும் சேர்த்து ஒரு முதிர்வுடைய நாகரிகத்தை உருவாக்கியவர்கள். நம் நாகரிகத்தில் ஒவ்வொரு செயலுக்கும் சொல்லுக்கும் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளன. அவை யாவும் ஆராய்ந்து அறிந்து, உணர்ந்து பயன்பெற்று, பிறர்க்கும் உணர்த்துவது நம் கடமையாகும்.

நம் நாகரிகத்திற்கும் இறைநம்பிக்கைக்கும் எப்போதும் சோதனைகள் வந்து, பின் மறைந்த வண்ணமே இருந்தன. மேலை நாட்டினர் நம்மவர் துணைகொண்டே, நம் நாகரித்தை உருக்குலைத்து, அவர்கள் பின்னே நம்மை அலையவிடும் அவலத்தை இன்று நாம் காண்கிறோம். இந்த மாயா சக்தியிலிருந்து நாம் விடுபட்டு மீண்டும் அதே அறிவு முதிர்வுநிலையை எட்டவும், நம் நாடும் உலகமும் எல்லா துறைகளிலும் உயர்வடையவும் பிறப்பு இறப்பு அற்ற சிவபெருமானின் திருவருள் இன்று பொங்கிவழிகிறது. அதை உணர்ந்து அவன் நாமத்தை ஓதி அவனை சரணடைவோம். ஓம் நமசிவாய.

பொருளுணர்ந்து சொல்வோம்

புரிந்து கற்காத கல்வியினால் எந்தவித பலனும் இல்லை. கற்பதின் நோக்கமே உலக இயல்புகளை புரிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் நம் வாழ்வை உயர்த்திக் கொள்வதே. ஆங்கில வழி பாடதிட்டத்தினாலும், வணிக நோக்கில் வழிநடத்தப்படும் பள்ளிகளினாலும் இன்று பெரும்பாலானோர் புரியாமலேயே கல்வி கற்று பின்னர் பற்பல இன்னலுக்கு ஆளாகின்றனர். இனியாவது, முடிந்த அளவு நாம் கற்பதை என்ன என்று தெளிவுற அறிந்து கற்போம். அறிந்து கற்றதை நம்மை சுற்றியுள்ள பிறர்க்கும் சொல்லிடுவோம். சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் என்று மாணிக்கவாசகரே 92 வது வரியாக தம் சிவபுராணத்திலேயே கூறுகிறார். மாணிக்கவாசகரின் சிவபுராணத்தை புரிந்துகொண்டு, சிவனின் அருளை அனுபவிப்பதே, இந்த எழுத்தின் ஒரே நோக்கமாகும். ஆகையினால், முதலில் நீங்களே இந்த செய்யுளை வாசித்து புரிந்து கொள்ள முயலுங்கள். சிவபுராணத்தை பிழையின்றி வாசிக்கக் கற்றுப் பின்னர் சொல் பதம் பிரித்து, நமக்கு எட்டும் பொருளை முயற்சித்து உணர்ந்து, அதன் பின்னர் ஒரு குருவின் வழியே அதன் பொருளை விரிவாக உணர்ந்து கொண்டால், அது பசு மரத்து ஆணி போல் மனதில் பதிந்து விடும். திருவருள் நம் உள்ளத்தில் இறங்கி சிவபெருமான் ஆட்கொள்வார்.  ஆகவே, நீங்களாகவே புரிந்து கொள்ள முயற்சி செய்வதே முதல் படி. அதற்கு உதவி புரிவதே இந்த கட்டுரையின் நோக்கமும்.

சில முக்கிய தத்துவங்கள்

பாடலைப் புரிந்து கொள்ளும் முன், சில தத்துவங்களை உணர்ந்திருப்பது அவசியம். அவ்வாறு அறிந்திருந்தால் தான் அதன் பொருளை முழுமையாக உணர்ந்தறிய முடியும்.

பிறவி

இந்த புவனத்தில் மூன்று பொருட்கள் உள்ளது. அவை என்றும் அநாதியானது. அதாவது என்றும் இருப்பது. அவை மூன்றும் அழிவற்றது. அவை உயிர்களாகிய நாம்(ஆன்மாக்கள்), இறைவன் மற்றும் பஞ்சபூதங்களை உள்ளடக்கிய அறிவற்ற தளை. இந்த தளை அல்லது பாசத்தில் ஆணவம், கன்மம், மாயை என்பவை அடங்கும். இந்த மூன்றையும் பதி, பசு, பாசம் என்றும் கூறுவர். இறைவன் ஆன்மாக்களைப் படைக்கவில்லை. ஆன்மாக்கள் எண்ணற்றவை. இறைவன் கருணையினால் உயிர்களுக்கு உடல் கொடுக்கப்பட்டு இயக்கம் பெறுகிறது. ஒரு பிறவியில் வாழ்ந்து, உடல் அழிந்து, விடுபட்டு மீண்டும் வேறொரு உடலில் புகுந்து வாழ்ந்து கொண்டே இருக்கும் தன்மையுடையது. இதுவே பிறவிச்சுழல். இந்த சுழலில் இருந்து தப்பிக்க இறைவனின் கருணையினால் அவனது திருவடியை அடைந்த பின்னரே அமைதியுற்று பேரின்பத்தை அனுபவிக்கும். அதுவரை சுழன்று கொண்டே இருக்கும். பிறவி அல்லலுற்றது. பிறவி துன்பகரமானது. ஒருவன் மீண்டும் மீண்டும் பிறவாது இறைவன் அடி சேர முயல வேண்டும். அதற்கு அவன் இறைவனை நாடி அவன் அருள் பெற வேண்டும். சிவ புண்ணியம் செய்ய வேண்டும். அந்த இறைவனே நம் பிறப்பறுக்க உதவுகிறான். ஆகவே, தன் வாழ்நாளில் ஒருவன் தன் உடலினால் சிவ தொண்டுகள் செய்து, தூய்மை நெறியாக நின்று வாழ்ந்து இறைவனை நாடி அவன் திருவருள் பெற்று மீண்டும் பிறவாத வரம் பெற்று அவனின் திருவடி சேர்வதையே நோக்கமாக கொள்ள வேண்டும். இதையே வள்ளுவரும்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்.

என்கிறார்.

வினைகள் தொடரும்.

ஒருவன் ஒரு பிறவியில் செய்யும் வினையின் (நல்ல வினைகளும், கெட்ட வினைகளும்) பலன்கள் ஒவ்வொரு பிறவியாக அவனைத் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இந்த வினைகள் யாவும் ஓய்ந்து பிறவாமை என்ற வரம் வேண்டுமானால், அது இறைவனாலே மட்டுமே நமக்கு அருள முடியும்.

நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம்

இந்த உலகை உள்ளடக்கிய புவனங்கள் அனைத்தும், அடிப்படையில் ஐந்து வகை பொருள்களினால் ஆனது. மண்ணும் அதில் மறைந்திருக்கும் தாதுப்பொருட்களும் ஏராளம். இது திடப் பொருளாகும். உயிரினங்களின் உடலாகிய எழும்பு சதை நரம்புகளும் இந்த திடப்பொருளினால் ஆனது. நீரின்றி அமையாது உலகு என்றார் ஔவை பிராட்டி. திரவ நிலை கொண்ட பொருட்களும் இந்த அண்டத்தில் பங்குபெறும் மிக முக்கியமான கூறு.தட்பவெட்பம் எனப்படும் சூடு. வெப்பம் இல்லாத நிலையை குளிர்ச்சி என்கிறோம். இந்த வெப்பம் எங்கும் நிறைந்திருக்கிறது. காண முடியாத முக்கியமான அம்சம் இந்த காற்று. இதை உணர முடியும் ஆனால், பார்க்க முடியாது. உயிரினங்களின் வாழ்க்கைக்கு முக்கிய காரணி. எங்கும் பரவியிருக்கும் வெற்றிடம் அல்லது ஆகாயம் அல்லது பரவெளி. இதன் முதலும் முடிவும் மனிதனால் இன்னும் அறியமுடியாத ஒன்று. இந்த ஐந்து மூல கூறுகளும் ஒன்றோடொன்று இணைந்து கலவையாக இந்த பேரண்டத்தை இயக்கி வருகிறது. இவை யாவும் தங்கள் நிலைப்பாட்டில் சரியாக இருந்தால் தான் இந்த உலகம் உய்யும். இந்த உலகம் உய்தால் தான் இறைவனை அறிந்து அவனை சரணடைய முடியும். அந்த இறைவனை அடைய உதவும் கருவிகளில் மிக முக்கியமானது மூன்று. உருத்திராட்சம், திருநீறு மற்றும் ஐந்தெழுத்து மந்திரம். இந்த பஞ்சாக்கரம் அல்லது ஐந்தெழுத்து மந்திரம் மந்திரங்களுக்கு எல்லாம் தலையாயது. நமசிவாய என்ற இந்த மந்திரம் அளப்பரிய ஆற்றல் கொண்டு நம்மை இறைவனோடு சேர்விக்கும் சக்தி கொண்டது.  ந இறைவனின் மறைப்பாற்றலைக் குறிக்கும். ம என்ற எழுத்து ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களையும் குறிக்கும். மலம் என்பது தேவையற்ற பொருள். சி என்ற எழுத்து சிவபெருமானாகிய இறைவனைக் குறிக்கும். வா அல்லது வ என்ற எழுத்து சக்தியாகிய திருவருளைக் குறிக்கும். ய என்ற எழுத்து உயிர்களாகிய ஆன்மாக்களைக் குறிக்கும். நமசிவாய என்பது தூல பஞ்சாக்கரம் எனப்படும். இதை ஓத ஓத, இறைவனின் மறைப்பு சக்தியால் மூன்று மலங்களும் நீங்கி, ஆன்மா உய்வு பெறும். உலக இன்பங்கள் கிடைக்கும். சிவாயநம என்பது சூக்கும பஞ்சாக்கரம். இதை ஓதினால், முக்தி பேறு கிட்டும். சிவயசிவ, சிவசிவ, சி, ஆகியனவும் பஞ்சாக்கரமாகும்.

சொல்லும் பொருளும்

தாள் – திருவடி
கோகழி – திருவாவடுதுறை
குருமணிதன் – குருவாகிய மாணிக்கம்
ஆகமம் – வேதம்
ஏகன் – ஒருவன்
பிஞ்ஞகன் – நீண்ட சடையுடையவன். சிவபிரானைக் குறிக்கும் சொல்.
கழல் – பாதம், திருவடி
சேயோன் – சேய்மையில் (தூரத்தில்) இருப்பவன்
கோன் – அரசன்
சீரார் பெருந்துறை – திருப்பெருந்துறை
தேசன் – ஒளிமயமானவன், பெரியோன்
கண்ணுதலான் – நெற்றிக் கண்ணை உடையவன் (சிவபெருமான்)
நுதல் – நெற்றி
மிக்காய் – கொண்டுள்ள(வன்)
நேயம் – அன்பு
நிமலன் – அழுக்கற்றவன், குற்றமற்றவன்
சீர் – செல்வம், நன்மை, அழகு, பெருமை, புகழ், இயல்பு….
விருகம் – மிருகம்
வீடுபேறு – மறுபிறவி இல்லாத மோட்ச நிலை.
விடை – காளை சிவனின் வாகனம் நந்தி
விடைப்பாகன் – காளை வாகனமுடைய சிவன்
இயமானன் – யாகம் செய்விப்பவன்
பெம்மான் – சிவன்
கன்னல் – கரும்பு
தேற்றனே – தெளிவானவனே
குரம்பை – உடல்

செய்யுளும் பொருளும்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள்வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில், நீங்காதான் தாள்வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகமம் ஆகிநின்று, அண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன், இறைவன் அடிவாழ்க

நமச்சிவாய வாழ்க – இறைவனின் தத்துவமான நமசிவாய என்றும் வாழ்வதாக.
நாதன் தாள் வாழ்க – ஒலித்தத்தவத்தின் வடிவாய் திகழும் சிவபெருமானின் திருவடி வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் – திருவாவடுதுறை ஆண்டருளும் குருவாகிய மாணிக்கம்
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் – வேதங்களாகவே நின்று அருளுபவன்
ஏகன் அநேகன் – தானே ஒருவனாகவும், பலருமாகவும் காட்சிதருபவன்

வேகம் கெடுத்தாண்ட, வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன், பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்தன், பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும், கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்கும், சீரோன் கழல்வெல்க

வேகம் கெடுத்தாண்ட – அலைபாயும் தன்மை கொண்ட மனத்தின் வேகத்தை அடக்கி ஆட்கொண்ட
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் – பிறப்பை அழிக்கும் சிவனின் திருவடி வெல்க
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் – சிவனை அறியாதவர்க்கு தூரத்தில் இருப்பவன்
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் – கைகளை குவித்து வணங்குபவரின் உள்ளத்தில்
மகிழ்ந்து இருக்கும் அரசனின் திருவடி வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் – தலைதாழ்ந்து வணங்குபவரை உயர்ந்த நிலைக்கு
ஓங்கச் செய்யும் பெருங்குணம் கொண்டவன் திருவடி வெல்க

ஈசன் அடிபோற்றி, எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி, சிவன் சேவடிபோற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும், மன்னன் அடிபோற்றி
சீரார் பெருந்துறை, நம் தேவன் அடிபோற்றி

எந்தை அடி – எமக்கு தந்தையாக விளங்கும் சிவனின் அடி போற்றி.
தேசன் அடி – ஒளிமயமானவனின் திருவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் – அன்பே உருவானவன், அழுக்கற்றவன் (நிமலன்) திருவடி போற்றி.
சீரார் பெருந்துறை நம் தேவன் – திருப்பெருந்துறையில் இருந்து அருள்தரும் நம்முடைய தேவன்
அடி போற்றி.

ஆராத இன்பம், அருளும் மலைபோற்றி
சிவன் அவன் என்சிந்தையுள், நின்ற அதனால்
அவன் அருளாலே, அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை
முந்தை வினை முழுதும், ஓய உரைப்பன்யான்

ஆராத இன்பம் – அளவில்லாத இன்பம் அருளும் மலை போன்றவனே போற்றி
முந்தை வினை முழுதும் ஓய – முன்னால் செய்த அனைத்து நல்ல கெட்ட வினைகளின் பலன்கள் அழியும் வண்ணம் சிவாய நம என்று உன் நாமத்தை நான் உரைப்பேன்.

கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்இறைஞ்சி
விண்நிறைந்து மண்நிறைந்து, மிக்காய், விளங்கொளியாய்
எண்ணிறந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன், புகழுமாறு ஒன்றறியேன்

கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி – நெற்றிக் கண்ணை உடைய சிவன் தன் கருணையை காட்டியதால் இங்கு வந்து
எண்ணுதற்கு எட்டா எழிலாற் – எண்ணத்தில் கற்பனை செய்து பார்க்க இயலாத பேரழகை கொண்டவனுடைய
கழல்இறைஞ்சி – சிவனின் திருவடி வணங்கி
விண்நிறைந்து மண்நிறைந்து மிக்காய் – வானம் பூமி என்று எங்கும் பரந்து நிற்கும்
விளங்கொளியாய் – ஒளியாய் விளங்குபவனே
எண்ணிறந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர் – எண்ணிப்பார்த்து அளவிடும் எல்லை இல்லாதவனே நின் பெரிய இயல்புகொண்ட
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் – பொல்லாத வினைகள் புரிந்து உளன்று கொண்டிருக்கும் நான் புகழ் அடைவது எப்படி என்று அறியாமல் இருக்கிறேன்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்அசுரர் ஆகி, முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற, இத்தாவர சங்கமந்துள்

விருகம் – மிருகம்.
புல், பூடு, புழு, மரம், மிருகம், பறவை, பாம்பு, கல், மனிதன், பேய், கணங்கள், அசுரர், முனிவர், தேவர், தாவரம் – இத்தனை வித பிறப்புகள் உள்ளன.

எல்லாப் பிறப்பும், பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள், கண்டுஇன்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள், ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா, விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி, ஆழ்ந்தகன்ற நுண்ணியனே

கண்டுஇன்று வீடுற்றேன் – உன் திருவடிகளை இன்று நான் கண்டு பிறவாத வீடுபேற்றை அடைந்தேன்.
மெய்யா விமலா, விடைப்பாகா வேதங்கள் – உண்மையானவனே, வெற்றியுடையவனே, காளை வாகனத்தவனே,
ஆழ்ந்தகன்ற நுண்ணியனே – அளவிட முடியாத ஆழமாகவும், அகலமாகவும், நுண்ணிய சிறிய பொருளாகவும் இருப்பவனே

வெய்யாய் தணியாய், இயமானனாம் விமலா
பொய்யாயின எல்லாம், போயகல வந்தருளி
மெய்ஞ்ஞானம் ஆகி, மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன், இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை, அகல்விக்கும் நல்லறிவே

வெய்யாய் – வெப்பமாய்; தணியாய் – குளுமையாய்
இயமானனாம் விமலா – யாகம் செய்விக்கும் தூய்மையானவனே
பொய்யான மாயைகள் எல்லாம் என்னிருந்து தூர போய் அகல, வந்து அருளி, மெய்ஞானம் ஆகி ஒளிர்கின்ற உண்மைச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் – எந்த ஞானமும் இல்லாதவனாக இருக்கிறேன்
அஞ்ஞானம் என்ற இருளைப் போக்கும் நல்ல அறிவாகவும் இருக்கும் சிவனே

ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய், அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய, நின்ற மறையோனே

தோற்றம், முதலும் இறுதியும் உள்ள அளவு இல்லாதவனே,
போக்குவாய் – மாயையை போக்குவாய்
என்னை புகுவிப்பாய் நின்தொழும்பின் – உன்னைத் தொழும் அடியார்கள் கூட்டத்தில் என்னை புகவைப்பாய்
நாற்றத்தின் நேரியாய் – நறுமணத்தின் நுண்மையிலும் இருப்பவனே
சேயாய் நணியானே – நம்பாதவர்க்கு தூரத்தில் இருப்பவனே, நம்பிய அடியவர்க்கு பக்கத்தில் இருப்பவனே.
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே – சொல்லும் மனமும் கடந்து வேதபொருளாய் நிற்பவனே

கறந்தபால் கன்னலொடு, நெய் கலந்தாற்போலச்
சிறந்தடியார் சிந்தனையுள், தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும், எங்கள் பெருமானே

கன்னல் – கரும்பு.

நிறங்கள் ஓர் ஐந்துடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான், வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய, மாய இருளை
அறம்பாவம் என்னும், அருங்கயிற்றால் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும், புழுஅழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது, வாயில் குடிலை
மலங்கப் புலனைந்தும், வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால், விமலா உனக்குக்

விண்ணோர்கள் ஏத்த – தேவர்கள் துதிக்க
மறைந்திருந்தாய் எம்பெருமான் – தேவர்கள் உன்னை துத்திபோதும் அவர்களுக்கு காட்சி தராமல் நீ உன்னையே மறைத்து நின்றாயே
மறைந்திட முடிய இருளை…. – கடுமையான வினைகளில் சிக்கியிருக்கும் என் உடலினுள், அறியாமை, ஆணவம் போன்ற மாய இருளை மூடி மறைத்தும், அறம் பாவம் என்ற விதிகளால் கட்டியும், அதை வெளிப்புற அழுக்கு நிறைந்த தோலினால் மூடி, அந்த உடலுக்கு மலத்தை வெளியேற்றும் ஒன்பது துளைகளையும் வைத்து, அதிலிருக்கும் ஐந்து புலன்களும் உன்னை அறியவிடாமல், என்னை ஏமாற்றும் செயலை தொடர்ந்து செய்ய, இறுகிய விலங்கு போன்ற மனத்தினால் மட்டுமே என்னால் இதை வென்று உன்னை அறிந்து சரணடைய முடியும்.

கலந்தஅன்பு ஆகிக், கசிந்துள் உருகும்
நலந்தான் இலாத, சிறியேற்கு நல்கிநிலந்தன்மேல் வந்தருளி, நீள்கழல்கள் காட்டி
நாயிற் கடையாய்க், கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த, தயாவான தத்துவனே

அன்பினால் உன் நினைவினில் கலந்து, உன்னையே எண்ணி உள்ளத்தினால் உருகும், இந்த நோய் தாக்கக்கூடிய உடலையுடைய இந்த சிறியேனுக்காக, நாயை போன்று உன்னை காண காத்திருக்கும் எங்களுக்கு, இந்த நிலமாகிய பூமியில் வந்தருளி, உன் திருவடிகளை எனக்கு காட்டி அருள்புரிபவனே. இவ்வுலகிலேயே தாயின் அன்பு தான் மிகப்பெரியது. அந்த தாயினும் மிகுதியான அன்பை உடைய தத்துவமானவனே

மாசற்ற சோதி, மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார், அமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப், பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து, நெஞ்சில் வஞ்சங்கெடப்

மாசற்ற – குற்றமில்லாத.
பாசமாகிய பற்றினை அறுத்து அருள் புரியும் அறிவில் சிறந்தவனே.
உன் அருளினால் என் நெஞ்சில் இருக்கும் வஞ்சனைகளை ஒழிகின்றன.

பேராது நின்ற, பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே, அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து, ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும், இல்லானே உள்ளானே

பேராது நின்ற – என் உள்ளம் அகலாது நின்ற
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே – முயற்சியற்றவரின் உள்ளத்தில் வெளிவராமல் மறைந்திருக்கும் ஒளியானவனே

அன்பருக்கு அன்பனே, யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனேதுன்இருளே, தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெஞ் ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின்

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே – முதலும், முடிவும், இடையிலுமாகி இருப்பவனே.
கூர்மையான மெய்ஞானத்தினால் உன்னை உணர்வபரின் கருத்தில் நிற்பவனே.

நோக்கரிய நோக்கே, நுணுக்கரிய நுண்உணர்வே
போக்கும் வரவும், புணர்வும்இலாப் புண்ணியனே
காக்கும் எம்காவலனே, காண்பரிய பேர்ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே, அத்தா மிக்காய்நின்ற
தோற்றச் சுடர்ஒளியாய்ச், சொல்லாத நுண்உணர்வாய்

நோக்கரிய நோக்கே, நுணுக்கரிய நுண்உணர்வே – கூர்மையாக ஆராய்ந்து அறியும் அறிவே, நுணுக்கமான பொருளையும் உணர வல்ல நுட்பமான உணர்வே
போக்கும் வரவும், புணர்வும் இலாப் – செல்வதும், வருவதும், கலப்பதும் இல்லாத.
அத்தா மிக்காய்நின்ற – அப்பா, மிகுதியாக நின்ற
ஒளிவீசும் சுடரான இருப்பவனே, சொல்லப்படாத நுட்பமான உணர்வாகவும் இருப்பவனே

மாற்றமாம் வையகத்தின், வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என்சிந்தனையுள்
ஊற்றான உண்ணார், அமுதே உடையானே
வேற்று விகார, விடக்குடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா, அரனேயோ என்றென்று

மாறிக்கொண்டே இருக்கும் உலகில், வெவ்வேறு விதங்களில் மெய்யறிவாக வருபவனே.
தேற்றனே – தெளிவானவனே
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே – உண்பதற்கு அரியதும் விரும்பத்தக்கதும் ஆன அமுத ஊற்றே
வேற்று விகார விடக்குடம்பின் உள்கிடப்ப – பல்வேறு விகாரங்களை உடைய இந்த உடம்பின் உள்ளே கிடந்து
ஆற்றேன் எம் ஐயா, அரனேயோ என்றென்று – இயலவில்லை தலைவா, அரனே ஓ என்று என்று
போற்றிப் புகழ்ந்திருந்து, பொய்கெட்டு மெய்யானார்

மீட்டிங்கு வந்து, வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக், கட்டழிக்க வல்லானே
நள்இருளில் நட்டம், பயின்றாடும் நாதனே
தில்லையுள் கூத்தனே, தென்பாண்டி நாட்டானே

உம்மைப் போற்றிப் புகழ்ந்து, தம்முடைய பொய்கள் கெட்டு உண்மையான அடியவரானார்.
அவரை மீட்டு இந்த உலகுக்கே மீண்டும் கொண்டுவந்து பிறவியில் சிக்க வைக்காது
குரம்பை – உடல். மாயையால் ஆன இந்த உடலின் மீண்டும் மீண்டும் பிறக்கும் அடித்தள தன்மையை அழிக்க வல்லவனே.

அல்லல் பிறவி, அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச், சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின், பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின், உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

சொல்லற்கு அரியானை – சொல்வதற்கே அரிய சிவபெருமானை.

திருச்சிற்றம்பலம்.
நமசிவாய. சிவசிவ சிவசிவ.

மதிப்பிற்குரிய சூலமங்கலம் சகோதரிகள் இசைத்த இந்த சிவபுராணத்தை கேட்பதற்கு கண்டிப்பாக புண்ணியம் செய்திருக்க வேண்டும். சிவசிவ.

Please rate this

நான் சைவ சமயத்திற்கு புதியவர். சைவ சமயம் பற்றி சொல்லுங்கள் ? 5/5 (3)

நான் சைவ சமயத்திற்க்குப் புதியவர். நான் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடுவதோடு சரி. நம் சமயம் பற்றியும் கடவுள் பற்றியும் தெளிவாக சொல்லுங்கள்.

திருச்சிற்றம்பலம்.

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.      
 

—- குறள் 67, மக்கட்பேறு.

என்பது தெய்வப்புலவர் வாக்கு. ஒரு தந்தை தன்னுடைய மகனுக்கு இவ்வுலகில் கொடுக்கக்கூடிய மிகப் பெரிய பரிசு யாதெனில், அவனை கற்றவர்கள் இருக்கும் அவையில் முதல்வனாக இருக்க யாது செய்ய வேண்டுமோ, அதைச் செய்து கொடுப்பதே ஆகும். தந்தை மகனுக்கு பெரிய செல்வத்தைச் சம்பாதித்துக் கொடுத்தாலும் அது கரைந்து போக வாய்ப்புள்ளது. ஆனால், இருப்பதிலேயே கடினமானதும் பெருமையுடையதும் கற்றவர் அவையில் முதல்வனாக இருப்பதே. நம் முன்னோர்கள் நம் தந்தை. இன்று இப்பூமியில் உலவித் திரியும் நமக்கு நம் தந்தையாகிய முன்னோர்கள் தங்கள் கடமையை மிகச் சரியாகச் செய்துவிட்டுச் சென்றுள்ளனர். இந்த உலகில் தோன்றிய அத்தனை மனித பண்பாடுகளிலும் மிகவும் பெருமையுடையதும் தலையாயதும் ஆவது  நம் தமிழ்ப் பண்பாடு. இவ்வுலகையும், பிரபஞ்சத்தையும், இயற்கையையும், அதை உடைய இறைவனையும் பல ஆண்டுகள் காலம் தொடர்ந்து ஆய்ந்து அவனைப் பிடிக்கும் வழிகளைக் கண்டுபிடித்து அவனருள் பெற்று நாமும் நம் வருங்கால சந்ததிகளும் தொடர்ந்து இன்பமாக வாழத் தேவையான அறிவு/ஞானம் அனைத்தையும் தீட்டி நமக்குப் பெரிய புதையலாக கொடுத்து விட்டுத் தான் சென்றுள்ளார்கள். இந்த புதையலை நாம் அறியாது, பிறர் தூண்டுதலில் நம்மை நாமே இகழ்ந்து மேலை நாகரிகத்தில் மயங்கி நம் ஞான வைரங்களையும் இரத்தினங்களையும் சிதைத்துக் கொண்டிருக்கிறோம். இது முற்றிலும் உண்மை.

உலகமயமாக்கத்தில் பல்வேறு பண்பாடுகள் கலந்துவிட்ட நிலையில், இறைவனைப் பற்றி அறியாமல், பலர் திக்குத் தெரியாமல் அற்ப இன்பத்தில் அழுந்தி தம் பிறவியை வீணடித்து வருகின்றனர். அடிப்படையாக நாம் இன்பமாக வாழும் வழியை நாம் பல ஆயிரம் ஆண்டு ஆராய்ச்சியில் நன்கு கற்றிருந்தோம். அதை நம் முன்னோர்கள் நமக்குக் கொடுத்துவிட்டுத் தான் சென்றுள்ளார்கள். நம் முன்னோர்கள் நமக்குக் கொடுத்த அறிவு ஞானத்தை அறிந்து பின்பற்றி இன்பமாக வாழ முயற்சிப்பதே நம்மை நல்வழியில் சேர்க்கும்.

அப்படி நம் முன்னோர்கள் நமக்கு என்ன கொடுத்துவிட்டார்கள் என்ற கேள்வி இப்போது உங்களுக்கு எழும்.  இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய ஆராய்ச்சியும், அதன் பல்வேறு பகுப்புகளும், அதன் தன்மைகளும், அதைக் கட்டிக்காக்கும் ஒருவனைப் பற்றியும், அதனால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் வாழ்வின் குறிக்கோளை நாம் அறியவும், இனி, இப்பிறவியில் நாம்  யாது செய்ய வேண்டும் என்பதை உணர்த்தவும், அதனால் நாம் இன்பமாக வாழவும் வழி செய்து கொடுக்கும் ஞானமே நமக்கு அருளிச் சென்றுள்ளார்கள்.  ஓரிரவில் அவற்றைப் படித்துவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக படித்து, கேட்டு, உணர்ந்து. உய்வடைவதே சாத்தியமானது. அதற்கு நாம் என்ன தெரிய வேண்டும் ?
முதலில், இந்த பிரபஞ்சம் எப்படி அமைந்துள்ளது என்பதை அறிய வேண்டும். பசு, பதி, பாசம் என்ற மூன்று பொருளைத் தெரிய வேண்டும். அவற்றின் தன்மை அறிய வேண்டும். பதியாகிய இறைவன் யார் என்று அறிய வேண்டும். அவன் தன்மைகள் என்ன என்பதைத் தெரிய வேண்டும். நம் அறியாமைக்குக் காரணம் என்ன என்பதை அறிய வேண்டும். இறைவனுடைய செயல்கள் என்ன, நாம் யார், நம் தன்மை என்ன, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர வேண்டும். இவை மிகவும் அடிப்படையானவை. அந்த இறைவனை நமக்கு அடையாளம் காட்டிச் சென்ற நம் குருமார்கள் யாவர் ? அவர்கள் வரலாறு என்ன ? அவர்கள் சந்தித்த பிரச்சனைகள் என்ன ? அவர்கள் நமக்குக் காட்டிய வழிகள் என்ன என்பதை அறிய வேண்டும். அவர்கள் நமக்கு இறைவனை அறிய கொடுத்துள்ள கருவிகளாகிய நூல்கள் யாவை ? நம்மிடம் தற்போது இருக்கும் நூல்கள் எவை ?  எந்த நூல்களை நாம் கற்க வேண்டும் என்பதை அறிய வேண்டும். சைவ சமயத்தின் தொன்மையையும் வரலாற்றையும் அறிய வேண்டும். நம் கோவில்களில் உள்ள சூட்சுமங்கள் என்ன ? திருக்கோவில் வழிபாடு பற்றி ஒவ்வொரு குறிப்புகளையும் புரிந்து கொள்ள வேண்டும். பாடல் பெற்ற தலங்கள் எவை ? அவற்றைச் சென்று வழிபடல் வேண்டும்.  இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்தித்து செய்ய வேண்டும். இவையே நாம் சைவ சமய அடிப்படையாகத் தெரிந்து கொள்ள வேண்டியவை.

இன்றைய தினங்களில்,  கண்டும், கேட்டும் அறிவது மிகவும் எளிதாக உள்ளது. மற்றும் மிகவும் அதிவேகமாக கற்கவும் முடிகிறது. உதாரணமாக, சொற்பொழிவுகள் கேட்டல், யூடியூப் காணொளிகள் பார்த்தல், ஞானகுருவிடம் உரையாடல், முறையான ஆதீன வகுப்புகள் என்று பல்வேறு வழிகளில் மிகவும் விரைவாகப் பயிலும் வசதிகள் உள்ளன. அவை அனைத்தையும் பயன்படுத்திக் கொண்டு விரைவாக கற்கலாம்.

இனி, இந்த சைவ சமய அடிப்படைகளும் மேலும் முன்னேறி அறிய சில சுட்டிகளும் கொடுக்கிறேன்.

விரைவான சுருக்கம்:        

சைவ சமய அடிப்படை நுட்பம் – http://www.saivasamayam.in/adippadai.html

காணொளி:

சைவ சமயம் அடிப்படை நுட்பம் பகுதி 1 –


சைவ சமயம் அடிப்படை நுட்பம் பகுதி 2 –  

சைவ சமயம் அடிப்படை நுட்பம் பகுதி 3 –

படம் பார்த்து கற்றல்:

சைவ சமய படக் காட்சி தொகுப்பு –  http://www.saivasamayam.in/சிவபெருமானின்-மகிமைகள்

புத்தகம்/இணையம் வாசிக்க:

சைவ சமயம் –  http://noolaham.net/project/18/1746/1746.pdf

சைவ சமயம் அறிமுகம் – http://noolaham.net/project/136/13535/13535.pdf

வினா விடை மூலம் கற்றல்  –  http://www.shaivam.org/siddhanta/shp_vinavidai.htm

பன்னிரு திருமுறைகள் படிக்க –  http://www.shaivam.org/siddhanta/thiru.html

பன்னிரு திருமுறைகள் பொழிப்புரையோடு –  http://www.thevaaram.org
       
63 நாயன்மார்கள் வரலாறு –   http://www.shaivam.org/baktas/nayanmar-tamil.htm

சைவ சித்தாந்தம் மிக எளிய விளக்கத்துடன்  http://temple.dinamalar.com/special.php?cat=581

சிவவழிபாடு புத்தகங்கள்   http://www.ssivf.com/ssivf_cms.php?page=203

மின் புத்தக தொகுப்பு   http://senthilvayal.com/e-books/

மிகப் பழைய அரிய நூல்கள்   http://www.noolaham.org

சிவபூசை செய்வது எப்படி http://chellathangatrust.org/SivaPoojai.html

உயிரைப் பறிக்க வந்த எமதூதர்கள், தடுத்த சிவகணங்கள்   http://rightmantra.com/?p=5102

நம் உயிர் உய்வு பெற உழவார்பணி   http://www.shaivam.org/uzhavaram/uzavara_pani.htm

மணிவாசகர் அருட்பணி மன்றம் பதிவுகள்  http://manivasagar.in/index.php

சைவ சமயம் வினாடி வினா  http://www.aruljyothi.com/2016/08/online-quiz-on-saiva-samayam.html

கேட்டு அறிய

பெரிய புராண சொற்பொழிவு –  https://drive.google.com/open?id=0B5oSXjiZfL5aNFJBU0ZDal9NNFE

சொற்பொழிவுகளும் திருமுறை பண் இசையும் – Shaivam.org Audio Gallery – http://www.shaivam.org/gallery/audio/audio.htm

24 மணி நேர ரேடியோ – Shaivam.org internet radio –  http://www.shaivam.org/radio/radio.htm

திருவாசகம் mp3  http://palaniappachettiar.com/?p=121

திருமுறைகளை பண்ணோடு இசைக்க இலவச பயிற்சி  http://www.shaivam.org/gallery/audio/tis_sat_cls.htm

அடுத்து செய்ய வேண்டியன:

        1. திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் ஆகிய ஆதீனங்களால் திருமுறை வகுப்புகள், சைவ சித்தாந்த வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் நேரடியாகக் கலந்து கொண்டு பன்னிரு திருமுறைகளையும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் குற்றமற கற்க வேண்டும்.

        2. சைவ நிகழ்வுகள், சொற்பொழிவுகள், கும்பாபிஷேகம், சிவபூசைகள், சைவ மாநாடுகள் என்று பல்வேறு சைவ நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் கலந்து கொள்ள, மேலும் பல சிவனடியார்கள் தொடர்பும் கிட்டும்.

        3. 276 பாடல் பெற்ற தலங்களை அதன் வரலாறு அறிந்துப் பின்னர் சென்று வழிபடலாம்.

        4. உழவாரப் பணிகளில் கலந்து கொள்ளுங்கள். ஏதாவது ஒரு சிவ தொண்டை ஏற்று வழுவாமல் செய்து வாருங்கள்.

இறைவனின் திருவருள் இன்றி அவனை வணங்குதலும் கூட கைகூடாது. இறைவனின் திருவிளையாடல் மிகவும் ஆனந்தமானது. அற்புதமானது. அதனை அறிய நாம் பல பிறவிகளில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இந்த மனித உடல் எதற்கு ? இந்த மானுட பிறவி நமக்கு எதற்கு ?  நாம் யார் ? நம் தலைவன் யார் ? என்பதை குற்றமற அறிந்து நம் பயணத்தைத் தொடங்குவோம்.

ஓம் நமசிவாய.

சைவ சமயத்தின் பெருமைகள்
திருச்சிற்றம்பலம்.

Please rate this

சைவ சமயம் அடிப்படை நுட்பம் 4.9/5 (10)

சைவ சமயம் – அடிப்படை நுட்பம்

1. அடிப்படை நுட்பம்       2. சைவநெறி நூல்கள்

3. சைவ சின்னங்கள்       4. சமயக் குரவர்கள்

5. சைவர்கள் அறிய வேண்டிய பிற செய்திகள்

1. அடிப்படை நுட்பம்

இறைவன் ஒருவனே. தொன்மையான நம் சைவ சமயத்தில் இது மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அந்த இறைவன், மங்கலமானவர், மலங்கள் (குற்றங்கள்) அற்றவர், ஆகையால், செம்மையான பொருளான அவருக்கு நாம் சிவன் என்று பெயர் சூட்டியுள்ளோம். அவர் என்றும் உள்ளவர். அவர் எல்லையற்ற சக்தியாகிய ஆற்றலை உடையவர். அவருடைய சக்தியை ஒரு பெண்ணாக உருவகித்து நாம் சக்தி என்கிறோம். சக்தி என்பது சிவத்திற்குள்ளேயே அடங்கி இருப்பது. இதுவே மாதொருபாகன் திருவுருவ விளக்கம். இறைவன் பிறப்பு, இறப்பு, பந்தம், பாசம், அன்பு, உறவு, நீளம், அகலம், காலம், மொழி என்று எவற்றையும் கடந்தவர். பந்தமும் பாசமும் அற்றவருக்கு குடும்பமும், குழந்தைகளும் ஏது ? அறத்தை நிலைநாட்டும் பொருட்டு, அவரிடமிருந்து தோன்றிய சக்திகளை நாம் அவர் குழந்தைகளாக பாவித்து, விநாயகர், பைரவர், வீரபத்திரர், முருகர் என்று பெயரிட்டு, நமக்கு புரியும் குடும்ப முறையில் பாவித்து வணங்குகிறோம்.

நம் தலைவனாகிய சிவபெருமான் ஐந்து தொழில்களை மேற்கொள்கிறார். முறையே, ஆக்கல், காத்தல், ஒடுக்குதல்(அழித்தல்), மறைத்தல், அருளல். இந்த ஐந்து தொழில்களையும் பல்வேறு கரணங்களை பயன்படுத்தி செய்கிறார். ஆக்கலுக்கு பிரம்மனையும், காத்தலுக்கு விஷ்ணுவையும், ஒடுக்குதலுக்கு உருத்திரனையும், மறைத்தல், அருளலை (சக்தி) தானே முன்னின்றும் செய்கிறார். சிவபெருமானைத் தவிர மற்ற யாவும் அவருக்குக் கருவிகளே.

நாம் வாழும் இந்த அண்டத்தைத் தீர ஆராய்ந்து பார்த்தால், மூன்று பொருட்கள் இருப்பது புரியும். இறைவன், நம் போன்ற உயிர்கள், மற்றும் அண்டப் பொருட்களை உள்ளடக்கிய பாசம். நம் போன்ற உயிர்கள் பிறந்து, இறந்து மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் தன்மையுடையது. இதுவே பிறவிச் சுழல் எனப்படும். இந்தத் துன்பச் சுழலில் இருந்து விடுபட்டு முக்தியடைய வேண்டுமானால், அவை அந்த சிவபெருமானை வணங்குவதால் மட்டுமே கைகூடும். அதுவே முக்தி. ஆனால், உயிர்களை சிவபெருமானோடு அண்ட விடாமல் தடுப்பது, இந்த உலகில் உள்ள சடப்பொருட்களாகிய பாசம். சில உதாரணங்கள்: ஆணவம், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை. சைவ சித்தாந்தத்தம், இறைவனை பதி என்றும், உயிர்களை பசு(ஆன்மா) என்றும், மற்ற பந்த பாசத்தை, பாசம் என்றும் கூறுகிறது. இதுவே முப்பொருள் உண்மையாகும். திருமந்திரத்தில் வரும் இந்த செய்யுளைக் கவனியுங்கள்:

பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி
பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம்
பதி அணுகில் பசு பாசம் நில்லாவே. – திருமந்திரம்

இறைவன் அனாதியாய் இருப்பவர். அவரைப் போலவே, உயிர்களும், பாசமும் அனாதியாய் இருப்பவை. உயிர்களையும், பாசத்தையும் சிவபெருமான் படைக்கவில்லை. சிவபெருமான் என்று உண்டோ, அன்றிலிருந்தே, இந்த உயிர்களும், பாசமும் உள்ளவை. பிறவிச் சுழலில் உழலும் உயிர்கட்கு, சிவபெருமான் ஒருவரே முக்தி அளிக்கும் வல்லமை பெற்றவர். வேறு எவருக்கும் அந்த வல்லமை கிடையாது. ஆகவே, உயிர்களாகிய நாம், நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த உடலாகிய கருவியைக் கொண்டு சிவபெருமானைத் தொழுது அவர் திருவடி சேர வேண்டும். பல பிறவிகளில் சிவ புண்ணியம் செய்தால் மட்டுமே, சிவபெருமானை உணர்ந்து அவரைத் தேடித் தொழுது, அவரின் அருள் பெற்று திருவடிப் பேறு கிட்டும். மற்றவர்கள் சிவ புண்ணியங்கள் செய்யும் வரை பிறவிச் சுழலில் உழன்று கொண்டே இருப்பர். சிவபெருமானின் ஐந்து தொழில்களை செய்ய உதவி கரணமாக இருக்கும் மற்றபிற தேவர்களையும், பிரம்மன், விஷ்ணு, போன்ற தேவர்களை வணங்கினாலும், முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை வணங்கினால் மட்டுமே திருவருளும் முக்தியும் கிட்டும். ஆகவே, சிறுதெய்வ வழிபாட்டில் நம் பொன்னான காலத்தை வீணடிக்காமல், முழுமுதற் கடவுளாகிய பிறப்பும் இறப்பும் ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமானை வணங்குங்கள் என்று நம் சமயாச்சாரியார்கள் அறுதியிட்டுக் கூறுகிறார்கள். ஓம் நமசிவாய.

சிவபெருமான், நம் மீது பெருங்கருணை கொண்டு அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளில் தன்னை உயிர்களுக்கு உணர்த்தி அருள் புரிகிறார். கண்களால் காண முடியாத பொருளாக, உணர மட்டுமே முடியும் நிலையில் அருவமாகவும் (சிதம்பரம்), நீண்ட சடை கொண்டு, பிறை, கங்கையைத் தலையில் தரித்து பல்வேறு மூர்த்தங்களாய் நாம் கண்களால் கண்டு மகிழ்ந்து வணங்கும் உருவமாகவும், சிவலிங்கமாக சதாசிவ மூர்த்தியாக அருவுருவ நிலையில் தன்னை உணர்த்தி உயிர்களுக்கு அருள் புரிகிறார்.

உயிர்கள் தங்களோடு இணைந்தே இருக்கும் மலத்தை நீக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்கு, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று நான்கு படிமுறைகள் உள்ளன. உயிர்களாகிய ஆன்மாக்கள், இறைவனது உருவத் திருமேனிகளைத் தமக்கு புறத்தே வணங்கிச் சிவாலயத்திற்கும் சிவனடியார்களுக்கும் திருத்தொண்டு செய்தல் சரியை வழிபாடு ஆகும். சிவாலயத்தில் திருவலகிடுதல், திருநந்தவனம் அமைத்தல், சிவனடியார்களுக்குரிய பணிகளைச் செய்தல் ஆகியன சரியையாகும். இறைவனது அருவுருவத் திருமேனியை (சதாசிவனை – சிவலிங்கத்தை) அகத்தும் புறத்தும் பூசித்தல் கிரியை வழிபாடு ஆகும். சிவபெருமானை அகத்தே பூசித்தல் யோக வழிபாடாகும். அது மனத்தை விடயங்களின் வழியே போகாவண்ணம் நிறுத்திச் சிவத்தை தியானித்து, பின்பு தியானிப்போனாகிய தானும் தியானமும் தோன்றாமல், தியானப் பொருளாகிய சிவன் ஒன்று மாத்திரமே விளங்கப்பெற்று சமாதி நிலை அடைதலாகும். பதி பசு பாசம் என்னும் முப்பொருள் உண்மையை அறிவிக்கும் ஞான நூல்களைக் கேட்டு சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடுதல் ஞானத்தில் ஞான வழிபாடு எனப்படும். இந்த நான்கு வழிகளும் சிவபெருமானை எளிதாக அடைய நமக்கு வழிகாட்டுபவை.

2. சைவநெறி நூல்கள்

வேதங்களும், சிவாகமங்களும், புராணங்களும் சைவத்தின் தொன்மையைப் பறைசாற்றுவன. வேதங்கள் நான்கு: ரிக், யசூர், சாமம், அதர்வனம். வேதங்கள் உலகிற்கு பொதுவான அறங்களைச் சொல்வது. இது அருநெறிய மறை எனப்படும். சைவத்திற்கு சிறப்பு சேர்ப்பது சிவ ஆகமங்கள். இவை மொத்தம் 28. சிவ ஆகமம் சத்திநிபாதத்திற்குரிய நுட்பத்தைச் சொல்வது. இது பெருநெறி எனப்படும். இவை வடமொழியில் உள்ளன. இவற்றின் கருத்துக்களையும் சைவ சித்தாந்தத்தையும் தமிழில் பல்வேறு நூல்கள் தாங்கியுள்ளன. தமிழின் தோத்திர நூல்களாக பன்னிரு திருமுறைகளும், சாத்திர நூல்களாக 14 நூல்களும் உள்ளன. திருக்கோவில்களிலும், வீட்டிலும் திருமுறை பதிகங்களை தினமும் ஓத வேண்டும். இவை நமக்கு நன்மையை பெருக்கி, அல்லவற்றை விலகச் செய்யும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். திருமுறையே வாழ்வின் நெறிமுறை. திருமுறை அறிவோம். குழந்தைகளுக்கு திருமுறை பாடல்களும், சைவ சமய நெறியை அறிவிப்பதும் பெற்றோர்களின் மிக முக்கியமான கடமை. நம் நூல்கள் யாவும் காலத்தை வென்றவை. எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும் இன்றும், என்றும் ஒரு சிறு எழுத்து பிறழாமல் உண்மை உரைப்பவை. உலகில் வேறு எதற்கும் இந்த அருள் கிடையாது. இது இறைவனின் அருளால் மட்டும் கூடும்.

3. சைவ சின்னங்கள்

திருநீறும், உருத்திராக்கமும், பஞ்சாக்கர மந்திரமும் (நமசிவாய, சிவாயநம, சிவசிவ மந்திரம்) முக்கியமான சைவ சமய சின்னமாகும். தீமைகளினின்றும் நம்மை பாதுகாத்து இறைவனின் பெரும் கருணையை நினைவூட்டும் சின்னங்கள் இவை. குற்றமற்ற பசுவின் சாணத்தை நெருப்பினாலே சுடுவதனால் உண்டாகும் நீறே தூய திருநீறாகும். வெண்மை நிறத் திருநீறே அணியத்தக்கது. சமய தீட்சை பெற்றோர் மாத்திரமே திருநீற்றை நீரில் கரைத்து திரிபுண்டரமாக அணியும் தகுதியுடையோர். மற்றோர் நீரில் கலவாது பொடியாக அணிதல் வேண்டும். திருநீற்றை மூன்று கோடுகளாக, இரண்டு கடைப்புருவ எல்லை வரை அணிய வேண்டும். ஒவ்வொரு கோட்டிற்கும் இடையே ஒவ்வொரு அங்குல இடைவெளி வேண்டும். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களை நீக்கும் என்ற குறிப்பு தோன்ற தரிப்பதே, மூன்று கோடுகளினால் திருநீறு அணிவதாகும். தலை, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் 16 இடங்களில் அணியலாம். திருநீற்றை வடக்கு முகமாகவோ, கிழக்கு முகமாகவோ தரித்தல் வேண்டும். தரிக்கும் போது, சிவபெருமானை சிந்தையில் வைத்து திருநீறு நிலத்தில் சிந்தாத வண்ணம் நெற்றியை மேலே தூக்கி “சிவசிவ”, “நமசிவாய” என்ற பஞ்சாக்கர மந்திரத்தை ஓதி அணிய வேண்டும். தூங்கி எழுந்த உடனும், தூங்குவதற்கு முன்னும், நீராடியவுடனும், பூசைக்கு முன்னும் பின்னும், உணவுக்கு முன்னும் பின்னும், கடமைகளைச் செய்யும் போதும், சிறப்பு நிகழ்ச்சிகளின் போதும் கட்டாயமாகத் திருநீறு அணிய வேண்டும். திருநீற்றை பட்டுப் பையிலோ, சம்புடத்திலோ மட்டும் வைக்க வேண்டும். குரு, சிவனடியார் திருநீறு கொடுத்தால், அவர்களை வணங்கி, அடக்கத்துடன் இரு கைகளையும் நீட்டி வாங்கிக் கொள்ள வேண்டும். திருநீற்றுக்கு மேலே குங்குமமேனும், சந்தனமேனும் அணியலாகாது. திருநீற்றுக்குக் கீழே, புருவ மத்தியில் குங்குமம் தரிக்கலாம். திருநீற்றை ஊதுவதோ, கோவில் தூண்களிலோ, வேறு இடங்களில் கொட்டுவதோ, கீழே சிந்துவதோ, கூடவே கூடாது.

உருத்திராக்கம் என்பது உருத்திரனது கண் எனப் பொருள்படும். திரிபுரத்து அசுரர்களாலே தமக்கு ஏற்பட்ட துன்பங்களை தேவர்கள் சிவபெருமானிடம் எடுத்துரைத்த போது, சிவபிரானது மூன்று கண்களில் இருந்தும் சிந்திய மணியே உருத்திராக்கமாகும். பத்தினிப் பெண்களுக்கு திருமாங்கல்யம் எத்தனை முக்கியமோ, அது போல சைவர்களுக்கு உருத்திராக்கம் அணிவது மிக முக்கியம். முறையாக உருத்திராக்கம் அணிந்து இறைவனிடம் அன்பு பூண்டார்க்கு உடல் நலமும், செல்வ வளமும், நெடு வாழ்வும், இன்ப வாழ்வும் இப்பிறப்பில் பெருகும். மறு உலகில் இறைவன் திருவடியினை எய்தி மாறா இன்பம் துய்த்து மகிழ்வர். உருத்திராக்கத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்து இருக்கலாம். தூங்கும் போதும், உண்ணும் போதும் எப்போதும் அணிந்திருக்கலாம். குழந்தைகள் முதல் பெண்கள், பெரியவர்கள் வரை, ஒரே ஒரு மணியாக, சிவப்பு கயிற்றில் கட்டி, கழுத்தில் தெரியும் படியாக எப்போதும் அணிந்திருக்க வேண்டும். கழற்றவே கூடாது. பெண்கள் எல்லா நேரங்களிலும் அணிந்திருக்கலாம். நீத்தார் கடன், பெண்கள் தீட்டு, கணவன்-மனைவி தாம்பத்ய நேரங்களிலும் கண்டிப்பாக அணியலாம். சிறுவர் சிறுமியர் அணியும் போது அவர்களின் படிப்புத்திறன் மேலோங்கும். பெண்கள் அணிந்திருக்கும் போது, தீர்க்க சுமங்கலியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியும், இல்லத்தில் லட்சுமி கடாச்சமும் நிறைந்திருக்கும். ஆகையால், எல்லோரும் கண்டிப்பாக உருத்திராக்கம் அணிய வேண்டும். உருத்திராக்கம் அணிந்தால் தான் உடலும் உள்ளமும் தூய்மை அடையும். மருந்துக்குப் பத்தியம் எவ்வளவு அவசியமோ அது போல, உருத்திராக்கம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் ஆகியவற்றைப் படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு பன்றி மாமிசத்தை எப்போதும் சாப்பிடக்கூடாது.) உருத்திராக்க மாலையாக அணியும் போது, சந்தியாவந்தனம், சிவபூசை, செபம், தேவார திருவாசக பாராயணம், புராண படனம், சிவாலய தரிசனம் போன்ற நேரங்களில் மட்டும் தரிக்க வேண்டும். இது இல்வாழ்வில் இருப்பவர்களுக்கு பொருந்தும்.

சைவர்கள், நமசிவாய, சிவசிவ, சிவாயநம ஆகிய பஞ்சாக்கர மந்திரத்தை எப்போதும் உச்சரிக்க வேண்டும்.

4. சமய குரவர்கள், சந்தான குரவர்கள்

7 ஆம் நூற்றாண்டில் சமண பௌத்த சமயங்கள் அரசர்களின் துணையோடு பரவிய போது, சைவ சமயத்தை இறைவன் திருவருளால் நிலை நிறுத்தியவர்களில் நால்வருக்கு முக்கிய பங்குண்டு. தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மற்றும் திருவாசகம், திருக்கோவையார் பாடிய மாணிக்கவாசகர் நால்வர்களே சமயக் குரவர் (குரு) எனப்படுவர். 3 வயதிலே சிவபெருமானின் திருவருளால் உமையம்மையின் திருமுலைப்பாலை உண்டு சிவஞானம் பெற்று பல அற்புதங்கள் செய்து 16 வயது வரை வாழ்ந்து சைவத்தை நிலைநாட்டியவர் திருஞானசம்பந்தர். சமண சமயத்தில் உழன்று, இறைவன் திருவருளால் சைவ சமயம் தழுவி, தேவாரம் பாடி 81 வயது வரை வாழ்ந்து முக்தியடைந்தவர் திருநாவுக்கரசர். இறைவனின் திருவுருவமே சுந்தரராக அவதரிக்கப் பெற்று 18 வயது வரை வாழ்ந்து பல்வேறு செயற்கரிய அற்புதங்களை செய்தவர் சுந்தரர். பாண்டிய நாட்டிலே சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்டு திருவாசகம், திருக்கோவையார் பாடி தேனமுதத்தைத் தந்து 32 வயது வாழ்ந்தவர் மாணிக்கவாசகர். பின்னர் வந்த சந்தான குரவர்களான மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார் ஆகியவர்கள் நமக்கு சைவ சாத்திர நூல்களை அருளிய குருமார்கள். 63 நாயன்மார்களும் செயற்கரிய சிவதொண்டு புரிந்து நமக்கு வழிகாட்டியாக இருக்கும் குருமார்கள். இவர்களின் வரலாற்றை முழுவதுமாக படித்து, கேட்டு அறிந்து நம குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுப்பது நம் தலையாய கடமையாகும்.

5. சைவர்கள் அறிய வேண்டிய பிற செய்திகள்

சைவத்தின் சிவஞானம் கடலை விட ஆழமானது. பின்வரும் கேள்விகளுக்கு பதிலைத் தேடுங்கள். வாழ்வு நல்திசையில் செல்லும். திருக்கோவிலின் கருவறை ஏன் இருட்டாக உள்ளது? சண்டிகேசுவரர் யார் ? அவர் முன் கை தட்டலாமா ? சிவனை எத்தனை முறை வலம் வரவேண்டும் ? கோவிலில் செய்யக்கூடியது எது, செய்யக்கூடாதவை எவை? சமய சந்தான குரவர்களின் வாழ்கை வரலாறு என்ன? பாடல் பெற்ற தலங்கள் 274, அவற்றின் தலவராறும் எவை? சிவபெருமானின் அட்டவீரட்ட செயல்களும் தலங்களும் எவை? உழவாரப்பணி ஏன் அனைவரும் செய்ய வேண்டும்? 63 நாயன்மார்கள் செய்த சிவ தொண்டுகள் எவை? மலபரிபாகம் என்றால் என்ன? தெய்வச் சேக்கிழார் பிறந்த ஊர் எது? அசபா நடனம் என்றால் என்ன? மாடக் கோவில் என்றால் என்ன? பஞ்சமம், புறநீர்மை என்றால் என்ன? வீரபத்திரர் யார்? பஞ்சகவ்யம், கேட்டுமுட்டு என்றால் என்ன? தீக்ஷை யார் பெறலாம்? குளத்து நீரை ஊற்றி விளக்கு எரித்த நாயன்மார் யார் ? திருமால் தவமிருந்து, சிவபெருமானிடம் சக்கராயுதம் பெற்ற திருத்தலம் எது ?

உங்கள் ஆன்மீக சைவ பயணத்தை இன்றே துவங்குங்கள். வாழ்வில் எல்லையில்லாத பேரின்பம் பெற்றிடுங்கள்.

சைவ சமயம் அடிப்படை நுட்பம்

திருச்சிற்றம்பலம்.

Please rate this

திருக்கயிலாய வாத்தியம் சிவ வாத்தியம் பஞ்ச வாத்தியம் 4.89/5 (9)

திருக்கயிலாய வாத்தியம் – சிவ வாத்தியம் – பஞ்ச வாத்தியம்

தனி ஒரு மனிதரால், எக்காலத்திலும் தோற்றுவிக்கப் படாமல், இறைவன் திருவருளால் தொன்று தொட்டு வரும் ஒரே சமயம் சைவ சமயம் ஆகும். சைவ சமயம் மட்டுமே அநாதியானது. சைவ சமயத்தைத் தழுவியோ, எதிர்த்தோ, பகுதியாகக் கொண்டோ, உலகில் பல சமயங்கள் தோன்றி அழிந்துள்ளன. உலகின் அனைத்து சமய தத்துவங்களும் சைவத்திற்குள் அடக்கம். எனவே,, சைவ சமயமே சமயம். அத்தகைய சைவ சமயம் உலகெங்கும் பரவி இருந்தது. தமிழே இசை. இசையே சிவம் என்பர். பண்டைய காலங்களில் இசை நம் அன்றாட வாழ்வோடு மிக்க பிணைந்திருந்தது. அத்தகைய இசையில் இணையில்லாதது கயிலாய வாத்தியம் என அழைக்கப்படும் சிவ வாத்தியம். இது எல்லையற்ற பரம்பொருளாகிய முழுமுதற் கடவுள் சிவபெருமானுக்காக மட்டுமே சிவனடியார்களால் இசைக்கப் பெறுவது. அனைத்து சிவன் கோவில்களிலும் தொன்று தொட்டு இசைக்கப்பட்டு வருகிறது. இன்றும் ஈசன் திருவருளால் இந்த இசை பெருகி வருகிறது.
திருஉடல், பிரம்மதாளம், திருச்சின்னம், எக்காளம், தாரை, நெடுந்தாரை, சங்கு, கொம்பு, கொக்கரை ஆகிய பண்டைய இசைக் கருவிகளைக் கொண்டு வாசிக்கும் வாத்தியம் கயிலாய வாத்தியமாகும். இதை பஞ்ச வாத்தியம் என்றும் கூறுவர். இதில், திருஉடல் என்பது மேளம் போன்ற வடிவில் இருக்கும். இருபுறமும் தோலினால் ஆன கருவி. பிரம்மதாளம் என்பது பொற்றாளம் போல், பெரிய வடிவில் இருக்கும். திருச்சின்னம், எக்காளம், தாரை, நெடுந்தாரை, கொம்பு, கொக்கரை ஆகியவை குழல் வாத்தியங்கள். இந்த குழல் கருவிகள் எம்.எஸ்.ஸ்டீல் என்ற உலோகத்தில் தயாரிக்கப்படுகின்றன. மற்ற கருவிகளை விட மிகவும் பழமையானது கொக்கரை. இவற்றில் சங்கு குறிப்பிடத்தக்கது, சங்கநாதம் மங்களகரமானது. தமிழகத்தில் அதை பற்றி, வேறு பார்வை எப்படியோ ஏற்பட்டு விட்டது. திருஞானசம்பந்தர் செல்லும் இடங்களில் எல்லாம், சங்கநாதம் முழங்கியதாக, பெரியபுராணத்தில் குறிப்பு உள்ளது.

கயிலாய வாத்தியத்திற்கு தனி பாடாந்தர இசை கிடையாது. சந்தத்தின் அடிப்படையில் மட்டும் வாசிக்கப்படுகிறது. யாவரும் எளிதில் கற்று கொள்ள முடியும். ஆனால், இசைப்பது கடினம். ஆர்வம் இருந்தால் மட்டுமே இசைக்க முடியும். கயிலாய வாத்தியம் முழுக்க முழுக்க தாளத்தின் அடிப்படையிலேயே இசைக்கப் படுகிறது. கயிலாய வாத்தியங்களிலிருந்து வரும் இசை நம்மை பரவசப்படுத்தும். நம் உள்ளத்தில் இருக்கும் நுணுக்கமான உணர்வுகளைத் தூண்டி, நம் இறை சிந்தனையை ஒருமிக்க உதவும். இது பிறப்பு இறப்பு இல்லாத ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமானின் பெருமைகளையும் தன்மைகளையும் இசையின் மூலமாகவே நமக்கு உணர்த்தும். இந்த இசையைக் கேட்டு, நம் கண்களை மூடிக் கொண்டு சிவசிவ அரகர சிவசிவ அரகர என்று கூறிக் கொண்டே இருந்தால் நம் மனது மிக வேகமாக ஒருமைப்படும். இசைக்கப்படும் ஒலியின் அதிர்வுகளே, சிவனின் பாதங்களில் நாம் அடிபணியும் அனுபவத்தைத் தருகின்றன. பித்தளை மற்றும் வெண்கலத்தால் ஆன இக்கருவிகளின் பெயர் ‘திருக்கயிலாய இசைக்கருவிகள்’ என்றும், இக்கருவிகள் ஒவ்வொன்றும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை வாய்ந்தவை.

கொக்கரை, எக்காளம், தவண்டை, கொடு கொட்டி, நகரா என பட்டியல் நீண்டுகொண்டே செல்லும் இந்த இசைக்கருவிகள் ஒவ்வொன்றும் சிவாலயங்களிலே ஒருகாலத்தில் சிவ நாதமாக ஒலித்துக் கொண்டிருந்தவை. யாழ், உயிர்த்தூம்பு, குறும்பரந்தூம்பு போன்று காலத்தால் மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட, இன்னும் சொல்லப்போனால் திட்டமிட்டே ஒதுக்கப்பட்ட நம் தமிழ் மண்ணின் பாரம்பரிய இசைக்கருவிகள்தான் இவை.

துத்தங் கைக்கிள்ளை விளரிதாரம் உழைஇளி
ஓசைபண் கெழுமப்பாடிச் சச்சரி கொக்கரை தக்கையோடு
தகுணிதம் துந்துபி தாளம்வீணை மத்தளங் கரடிகை வன்கைமென்றோல் தமருகங் குடமுழா மொந்தை வாசித் தத்தனை விரவினோ டாடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே

– என காரைக்கால் அம்மையார் 11-ம் திருமுறையில் இக்கருவிகள் பற்றிப் பாடியுள்ளார். 70-க்கும் மேற்பட்ட இந்த இசைக்கருவிகளின் பயன்பாடு சோழர்களின் காலத்துக்குப் பிறகு, படிப்படியாக குறைய ஆரம்பித்தன. அதற்குப் பிறகு வந்த மன்னர்களும் பெரிய அளவில் இக்கருவிகளை ஆதரிக்காமல் விட்டுவிட, பின்னர் வெளிநாட்டு இசைக்கருவிகளின் மோகத்தால் முற்றிலுமாக அழியும் நிலைக்குச் சென்றுவிட்டது. தற்போது இந்த வகையில் 30-க்கும் குறைவான இசைக்கருவிகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. எழும்பூர் அருங்காட்சியகத்திலும் திருக்கயிலாய இசைக்கருவிகள் இடம் பெற்றிருக்கின்றன.

இக்கருவிகளின்பால் ஈர்க்கப்பட்டு, இது பற்றி ஆராய்ந்து முழுமையாகத் தெரிந்து கொண்ட புதுச்சேரியைச் சேர்ந்த சிவதிரு இராமலிங்கம் ஐயா என்பவர், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதன் பலனாக, இன்று தமிழ்நாட்டில் பரவலாக 30-க்கும் மேற்பட்ட சிவ தலங்களில் திருக்கயிலாய இசைக் கருவிகளை இசைக்கும் குழுக்கள் உருவாக்கப்பட்டு, இசைக் கருவிகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஆங்காங்கே சிவாலயங்கள், திருமுறை ஊர்வலங்கள், குடமுழுக்கு திருவிழாக்கள், திருவாசகம் முற்றோதுதல் என சிவனைச் சார்ந்த அத்தனை விழாக்களிலும் இக்குழுக்களின் திருக்கயிலாய இசைக்கருவிகள் முழங்கி, சிவனடியார்களைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன.  சிவாலயங்கள் இல்லாமல் வேறு எங்கேனும் இந்த இசைக் கருவிகளை இசைக்க நேரிடும்போது, சிவபெருமானின் திருவுருவத்தை வைத்து வழி பட்ட பிறகே இசைக்கத் தொடங்குகிறார்கள். இது முழுக்க முழுக்க பிறப்பில்லாத சிவபெருமானுக்காக இசைக்கப் படுவது தெளிவு.

மேலும், பாழடைந்து கிடக்கும் கோயில்களில் திருக்கயிலாய இசைக்கருவிகளை இசைத்தால், விரைவிலேயே அங்கு குடமுழுக்கு நடைபெறும் என்பது தொன்றுதொட்டு நிலவி வரும் நம்பிக்கை. இக்கருவிகளை இசைக்கும் அடியார்கள், இதை இசைக்கும்போது, தங்கள் உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்வு கிடைப்பதோடு மட்டுமல்லாமல், தம் சொந்த வேலைகளில் உற்சாகமாக இயங்குவதற்கான ஆற்றலும் கிடைக்கிறது என்கிறார்கள். இக்கருவிகளை இசைக்கும் சிவனடியார்களின் மனதில் இருக்கும் ஒரே எண்ணம், இந்தத் திருக்கயிலாய இசை உலகம் முழுவதிலும் ஒலிக்க வேண்டும், சாம கான பிரியனான அந்த ஆதி சிவனுக்கே உரிய இசைக் கருவிகளின் அடையாளத்தை இவ்வுலகம் உணர வேண்டும் என்பதுதான்.

இந்த தெய்வீக இசையை செவிமடுக்கும் தருணத்தில் நம்மையும் சிவ கணத்தில் ஒருவராகவே உணரச்செய்யும் இந்த மகத்துவமான திருக்கயிலாய இசைக் கருவிகளில் சிலவற்றைக் குறித்து அறிவோம்.

கொம்புத்தாரை: விலங்குகளின் கொம்பு களைக் கொண்டு அக்காலத்தில் தயாரிக்கப்பட்ட இக்கருவியானது நாட்டுப்புற இசையிலும் கோயில் விழாக்களிலும் பயன்படுத்தப்பட்டது.

கொக்கரை:  மாட்டின் கொம்பையும் இரும்புக் குழலையும் கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கும் இந்த இசைக் கருவி, கோயில் விழாக்களில் பயன்படுத்தப்பட்டது.

சேமக்கலம்: வெண்கலத்தாலான இக்கருவி, கோயில் விழாக்களில் இசைக்கப்பட்டது. திருமாலின் அடியவர்களாகிய தாசர்களைப் போற்றி ஆண்கள் மட்டுமே ஆடும் தாதராட்டம் என்ற நடனத்திலும் இக்கருவி இசைக்கப்பட்டது.

சங்கு: இன்றைக்கும் புழக்கத்தில் இருக்கும் இந்த இசைக்கருவி மகா விஷ்ணுவின் சின்னமாகத் திகழ்கிறது.  பழங்காலம் முதலே கோவில் வழிபாடுகளில் இசைக்கப்பட்ட மிக முக்கிய இசைக்கருவி இது.

நகரா: கோயில்களின் நுழைவாயில்களிலேயே மிகப்பெரியதாக இடம்பெற்றிருந்த இந்த இசைக்கருவி, கோயில் விழாக்கள், சிறப்பு ஆராதனை களில் இசைக்கப்பட்டது.
உடுக்கை: கிராமிய இசைக்கருவி வகையைச் சேர்ந்தது. மரத்தால் செய்யப்பட்ட இரு பக்கங்களும் விரிந்து இடை சிறுத்துப் பருத்திருப்பதால், இதை ‘இடைசுருங்கு பறை’ என்றும், ‘துடி’ என்றும் அழைத்தனர்.

பிரம்மதாளம்: பலதரப்பட்ட இசைக்கருவிகள் வாசிக்கப்படுகையில், அந்த இசையின் கால அளவுகளைச் சீர்படுத்தும் கருவியாக தாளம் செயல்படும். கைகளுக்கு அடக்கமாக வட்ட வடிவில், உலோகத்தினாலான இரு பாகங்களைக் கொண்டது இது. அவ்விரண்டையும் சேர்த்துத் தாளம் இசைப்பர். இது ஒரு கஞ்ச வகை இசைக்கருவியாகும்.

தப்பு: தமிழ் இசையில் நெடுங்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் முக்கிய இசைக் கருவி. இதற்குப் பறை என்ற பெயரும் உண்டு. அரிப்பறை, மென்பறை, இன்னிசைப்பறை,  தீட்டைப்பறை, மன்றோல் சிறுபறை, தொண்டகப் பறை, தொண்டகச் சிறு பறை,  பொருநர்பறை, ஆடுகளப்பறை எனப் பல பெயர்களில் சங்க இலக்கியங்களில் பறை குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இவை போக நெடுந்தாரை, கர்ணா, தமருகம், குழித்தாளம், உறுமி, கொடுகொட்டி எனத் தமிழர்களின் பாரம்பரியத்தில் பயணித்து வந்த இந்த இசைக்கருவிகளை தற்காலப் பண்பாடு, கலாசார முன்னேற்றம் என்ற மாயை களில் சிக்கி, அலட்சியம் செய்வதை விடுவோம்; இந்தப் பாரம்பர்ய இசையோடு இணைந்து பயணிப்பதே உண்மையான தமிழர் பண்பாடும் கலாசாரமும் என்பதை உணர்வோம்

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

Please rate this

சமயக் கல்வியின் இன்றியமையாமை No ratings yet.

இன்று, ஒரு வானஊர்தியை எடுத்துக் கொண்டு உலகை சுற்றி வந்தால்….

மலேசியாவில் பத்துகுகை முருகன் கோவில் உள்ளது. சிங்கப்பூரில் கல்லாங் சிவன் கோவில் உள்ளது. பிரான்ஸில் சிவன் கோவில்கள் இருக்கிறது, ஆஸ்திரேலியாவில் இருக்கிறது, அமெரிக்காவில் இருக்கிறது, இங்கிலாந்தில் இருக்கிறது, உலகம் முழுவதும் நம் சைவ கோவில்கள் இருக்கின்றன இன்று. கோவில்கள் இல்லாத நாடே இல்லை எனலாம் என்னும் அளவிற்கு நம் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இது எவ்வாறு சாத்தியமாயிற்று ? இவற்றில் பெரும்பான்மையான கோவில்கள் இலங்கைத் தமிழர்களால் உருவாக்கப்பட்டது. இவ்வுலகில் முதன்முதலில் இறைவனைப் பற்றிய சிந்தனை செய்து, அவனருளாளே அவனைத் துதித்து, அவனை அறிந்து, இந்த உலகம் முழுவதும் மக்களுக்கு அறிய வைத்தது சைவ சமயமே. சைவ சமயம் பன்நெடுங்காலம் உலகம் முழுவதும் இருந்தது. இதற்கு சான்றுகளே இன்று பல்வேறு நாடுகளின் பூமிக்கடியில் இருந்து சிவலிங்கமும் சிவன் கோவிலும் வெளிவருவதே நம் கண் முன்னர் நிற்கும் வாழும் சான்றுகள். பின்னர் பல அரசியல் காரணமாக சில பகுதிகளில் வெவ்வேறு மதங்கள் நிறுவப்பட்டன. ஆனால், கடந்த சில நூறாண்டுகளில், மீண்டும் சைவ கோவில்கள் உலகெங்கும் புதுமையாக நிறுவப்பட்டு வருவதையே நாம் பார்க்கிறோம்.
இலங்கையில் இனப்பிரச்சனை காரணமாக உலகெங்கும் புலம்பெயர்ந்த தமிழர்களால் இது சாத்தியமாயிற்று.

இலங்கைத் தமிழர்கள் நம் சைவ சமயத்தில் மிகவும் பிடிப்பாக அழுத்தமாக இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் இருக்கும் 7 அரை கோடி தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் என்ன வித்தியாசம் ? சமயக்கல்வி ஒன்றே பெரும் வித்தியாசம். இந்த சமயக்கல்வியே இலங்கைத் தமிழர்களை நம் சமயமும் மொழியும் கலாசாரமும் உலகெங்கும் பரவ உதவி செய்தது என்றால் அது மிகையில்லை. இலங்கையில் பௌத்த அரசு இருப்பினும் தமிழர்களுக்கு தமிழ் சமய பாடங்களே நடத்தப்படுகிறது. தமிழ்ப் பாடசாலைகளில் சைவப்பாடம் கற்பிக்கப்படுகிறது. சமயகல்வி பெற்ற எவரையும் மதம் மாற்ற இயலாது. நம் சமயத்தின் அடிப்படை தத்துவங்களை அறிந்தவர் எவரும் மதம் மாற மாட்டார்கள்.

கல்வியின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வலியுறுத்துவதை பாருங்கள்.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்

அதிகாரம்: கல்வி, குறள் 393.

கல்வி கற்காதவர் கண்ணில்லாத குருடர் என்றே சாடுகிறார் வள்ளுவர். கல்வி ஒருவருக்கு அவ்வளவு அவசியமானது. அந்த கல்வியின் அவசியத்தை நீங்கள் உணர வேண்டுமாயின், ஒரு நாள் இந்த பரிசோதனை செய்து பாருங்கள். உங்கள் கண்களை நல்ல துணியைக் கொண்டு இறுக கட்டிக் கொண்டு ஒரே ஒரு நாள் முழுவதும் வாழ்ந்து பாருங்கள். நிஜமாகவே முயற்சி செய்து பாருங்கள். அப்போது தான் உங்கள் கண்களின் அருமை உங்களுக்குத் தெரியும். கல்வி இல்லாதவனுடைய வாழ்வும் குருடனின் வாழ்கை போலவே இருக்கும்.

சமயக்கல்வியின் பெருமை

அப்போ சமயக்கல்வி ? நம் ஆன்மா கடைத்தேற, இறைவன் திருவருள் பெற, இப்பிறப்பில் இன்பமும், மறுபிறப்பு இல்லாமல் இறைவன் திருவடி இன்பம் அனுபவிக்கவும் கண்போல நமக்கு வழிகாட்டுவது சமயக்கல்வியே. எப்பிறப்பிறப்பிற்கும் நமக்கு எப்போதும் இன்பம் தருவிக்கும் வழியையும், பிறப்பு சுழலில் இருந்து விடுபட்டு பூரண இன்மான இறைவன் திருவடி நீழலை எய்தவும் வழிகாட்டுவது சமயகல்வியே.

கல்வி இல்லாதவன் கண் இல்லாதவன்.
சமயகல்வி இல்லாதவன் உயிரே இல்லாதவன்.

“சமயகல்வி இல்லாதவன் தன் பிறப்பின் உண்மையையும் நோக்கத்தையும் அறியாதவனாகிறான்”

Please rate this

சிவன் கழுத்தில் பாம்பு ஏன் வந்தது ? இறைவன் திருவுருவ விளக்கம் சில 4/5 (2)

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாலூட்டி வளர்த்தாலும் பாம்பு தீண்டத்தான் செய்யும் என்பார்கள். பாம்புகளை செல்ல பிராணியாக யாரும் வளர்ப்பதில்லை. பாம்புகள் வலையில் உள்ள எலிகளை பிடித்து உண்பதால் விவசாயிகளின் நண்பன் என்பார்கள். இத்தகைய குணங்களை கொண்ட பாம்பு ஏன் சிவனின் கழுத்தில் வந்தது. இந்த கேள்விக்கான விடை தேடினேன். இந்த கேள்விக்கு பதில் கொடுத்ததோடு சிவன் தன் உருவம் முழுவதிற்குமான விளக்கத்தை எனக்கு அளித்து என் மனதினுள் புகுந்து விட்டான். ஓம் நமசிவாய. சிவன் திருவடி வாழ்க.

சிவன் திருஉருவ தத்துவங்கள்

இறைவனுக்கு உருவம் இருக்கிறதா ? இல்லையா ? இதை பற்றிய சிந்தனைகளும் ஆய்வுகளும் பல்லாயிரம் செய்துவிட்டனர். அந்த இறைவனே அதை நமக்கும் உணர்த்திவிட்டான். முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானுடைய வடிவம் மூன்று. அருவம், அருவுருவம், உருவம் என்னும் மூன்றுமாம். அருவத் திருமேனியையுடைய பொழுது சிவன் எனவும், அருவுருவத் திருமேனியையுடைய பொழுது சதாசிவன் எனவும், உருவத் திருமேனியையுடைய பொழுது மகேசுவரன் எனவும் பெயர் பெறுவர்.

மகேசுவரன் 25 வடிவங்களில் அருள்புரிகிறான். மேலும், சரபேஸ்வரர், பைரவர், திரிபாதமூர்த்தி என்று பல்வேறு மூர்த்திகளாகவும் ஆகிறான்.

சுந்தரர் திருமழபாடியில் பாடியருளிய தேவாரப் பாடல் வரி ஒன்றைக் காண்போம்.

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

இனி சிவனின் உருவமாக நாம் பொதுவாக காணும் உருவத்தை காண்போம். பத்மாசனம். அந்த சிவனே பத்மாசன நிலையில் அமர்ந்திருப்பாத காண்கிறோம். அவனின் ஒளி மிகுந்த கண்கள் முக்கால் பாகம் மூடிய நிலையில். இரு புருவங்களுக்கும் நடுவில் நெற்றிக்கண். நெற்றியில் திருநீற்றினால் மூன்று கோடுகள். செம்மை நிற சடைமுடியான். அவன் தலையில் கங்கை ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறாள். பிறையை தலையில் சூடிய பெருமானாய் இருக்கிறான். சிவனுக்கு பிடித்த கொன்றை மலரை தலையில் அணிந்திருக்கிறான். உடல் முழுவதும் திருநீற்று கோடுகள். கைகளிலும் கழுத்திலும் உருத்திராட்ச மாலை. கழுத்தில் பாம்பு. உடுக்கையும் சூலாயுதத்தையும் வைத்திருக்கிறான். கைகளில் மானும் மழுவும் வைத்துள்ளான். விடையாகிய காளை மாட்டை வாகனமாக வைத்துள்ளான். புலித்தோலை இடையில் அணிந்துள்ளான். கைலாய மலையை வீடாக வைத்துள்ளான். நடனத்தை உருவாக்கியவனாய் நடராசனாய் இருக்கிறான். இப் பிரபஞ்ச அதிர்வுகள் யாவையும் கடந்த சலனமில்லாத முகபாவனையோடு நமக்கு காட்சி தருகிறான். இன்னும் இன்னும் நமக்கு புலப்படாத எவ்வளவோ தத்துவங்களை அடக்கியவனாய் நமக்கு வேண்டும் வரங்களை அள்ளித்தந்து அருள் புரிகிறான்.

நெற்றிக்கண்
நமது இரண்டு கண்களுக்கும், மூக்கின் மேல் சுழி முனைக்கும், புருவங்களின் இடைநடுவே, சிறு ஊசித்துவாரத்தில் பத்தில் ஒரு பாக அளவில் மிக நுட்பமாக இருக்கும் துவாரத்திற்கு “நெற்றிக்கண்” என்று பெயர். இதை மிக இலேசாக சவ்வு மூடிக்கொண்டிருக்கிறது.

குண்டலினி சக்தியை மேலே எழுப்பி தலையின் நடு உச்சி பகுதிக்கு கொண்டு வரும் போது அளப்பரிய ஞானம் தோன்றும். அப்போது நெற்றிக் கண்ணும் திறக்கும். நெற்றிக் கண்ணினால் பல விடயங்களை உணர முடியும். நெற்றிக் கண் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். நெற்றிக்கண் ஞானத்தின் உச்சத்தை குறிக்கும்.

திருஞானசம்பந்தர் தேவாரம். ஓம் நமசிவாய.

Please rate this